Thursday, February 22, 2018

என்னைக் கவர்ந்த ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்'. - வ.ந.கிரிதரன் -

எனது மாணவப் பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களிலொருவர் ஜெகசிற்பியன். அவரது சரித்திரக் கதைகளில் 'நந்திவர்மன் காதலி', 'பத்தினிக்கோட்டம்' ஆகியவை எனக்கு அக்காலகட்டத்தில் பிடித்த நாவல்கள். சமூக நாவல்களைப் பொறுத்தவரையில் கல்கியில் தொடராக வெளிவந்த 'கிளிஞ்சல் கோபுரம்', 'ஜீவகீதம்' ஆகியவை மிகவும் பிடித்திருந்தன. நா.பார்த்தசாரதி, அகிலன் போன்ற வெகுசனப் படைப்புகளை வழங்கிய பலரின் படைப்புகளை அக்காலகட்டத்தில் பிடித்திருந்தாலும், தற்போது வாசிக்கும்போது அன்று என்னைக் கவர்ந்ததைப்போல் இன்று பெரிதாகக் கவர்வதில்லை. ஆனால் ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்' நாவலை அண்மையில் வாசித்தபொழுது அன்று என்னைக் கவர்ந்ததுபோல் இன்றும் என்னைக் கவர்ந்திருந்தது எனக்கே ஆச்சரியத்தைத் தந்தது. இதற்குக் காரணமென்னவாகவிருக்குமெனச் சிறிது சிந்தித்துப் பார்த்தேன். ஜெகசிற்பியனின் படைப்புகள் இன்றும் என்னைக் கவர்வதற்கு முக்கிய காரணங்களாக அவரது நாட்டுப்பற்று மிக்க, சமுதாயப் பிரக்ஞை மிக்க எழுத்து , பாத்திரப்படைப்பு, படைப்பினூடு அவர் தெரிவிக்கும் கருத்துகள் மற்றும் வர்ணனைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாமென்று நினைக்கின்றேன்.

 அவரது 'ஜீவகீதம்' நாவல் இந்திய மொழிகள் பலவற்றில் 'தேசிய புத்தக அறக்கட்டளை' யினால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவரது சமூக நாவல்களில் மிகவும் புகழ்பெற்ற நாவலாக இதனைக் கூறலாம். இந்நாவல் கூறும் கதைதான் என்ன?

பர்மாவுக்கு உழைப்புக்காகத் தந்தையுடன் தன் சிறுவயதில் புலம் பெயர்ந்த சபேசன் பர்மாவிலிருந்து அகதியாகத் துரத்தப்பட்டு மீண்டும் தாயகமான தமிழகத்துக்குத் திரும்புகின்றான். அவ்விதம் திரும்புகையில் அவனை முதல் கப்பலில் அனுப்பிவிட்டு அடுத்த கப்பலில் தந்தை வருவதாக ஏற்பாடு. சென்னைக்கு இவ்விதம் அகதியாக வரும் சபேசன் தனது சொந்த ஊரில் காத்திருக்கும் தாயாரைச் சந்திப்பதற்கு முன்பாகத் தந்தை அடுத்த கப்பலில் வரும் வரையில் சென்னையில் தங்கியிருக்க முடிவு செய்கின்றான். அங்கு நச்சி என்கின்ற நச்சினார்க்கினியனைச் சந்திக்கின்றான். நச்சி என்னும் இந்தப் பாத்திரம் தமிழ் இலக்கிய உலகில் இதுவரை யாரும் சந்தித்திராத வித்தியாசமான பாத்திரமென்று நான் நினைக்கின்றேன். சென்னைப் பேச்சுத்தமிழில் அசத்தும் இவனுக்கும், கணவனை இழந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணொருத்தியான லூசிக்குமிடையிலான காதல், , அதற்காக அவள் முன் தான் ஒரு உதவி இயக்குநர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர் என அவனெடுக்கும் பல்வேறு அவதாரங்கள் நாவலின் சுவையினைக் கூட்டுபவை. இவனது பிறப்பும் வித்தியாசமானது. இவனது தாயான கன்னியம்மாள் ஆங்கிலோ இந்தியக் குடும்பமொன்றின் பணிப்பெண்ணாக வேலை பார்க்கின்றாள். உலக மகா யுத்தக் காலகட்டம் அது. அக்காலகட்டத்தில் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் கறுப்பின இராணுவச் சிப்பாய் ஒருவனுக்கும், கன்னியம்மாளுக்கும் ஏற்பட்ட தொடர்பில் பிறந்தவன்தான் நச்சி.  அவனது தோற்றமும  ஈர் இனக்கலப்பின் விளைவினை வெளிப்படுத்தும் தன்மையானது.

தேவகாந்தனின் கந்தில் பாவை பற்றிச்சில கருத்துகள். - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் தேவகாந்தனின் 'கந்தில்பாவை'யை இன்று வாசித்தேன். இது நாவல் மீதான முதற் கட்ட வாசிப்பு. ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைகளை உள்ளடக்கிய நாவல் இது. வெவ்வேறு காலகட்டங்களை உள்ளடக்கிய நான்கு பகுதிகள். ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு அத்தியாயமாக்கி நூலை வகுத்திருக்கின்றார் தேவகாந்தன். பொதுவாக பகுதி 1, பகுதி 2, பகுதி 3 மற்றும் பகுதி 4 என்று பகுதிகளாகப் பிரித்திருப்பார்கள். அப்பகுதிகள் மேலும் அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு பகுதிகள் அத்தியாயங்களாகியிருக்கின்றன. தேவகாந்தன் இவ்விதம் நூலினை வகுத்ததற்கு ஏதாவது காரணம் இருக்குமோ அல்லது தற்செயலாக நடந்த நாவலின் பிரிப்பா என்பதை நாவலாசிரியரே அறிவார்.

இந்த நாவல் ஒரு குடும்பத்தின் பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கையை விபரிக்கும் வகையில் பின்னப்பட்டிருப்பதால்,  ஒவ்வொரு 'அத்தியாய'மும் (அல்லது 'பகுதியும்') பல்வேறு காலகட்டத்து ஆளுமைகளின் வாழ்வினை விபரிப்பதால், நாவல் கூறும் பொருளையும், பாத்திரப்படைப்புகளையும் , கதைப்பின்னலையும் தெளிவாக அறிவதற்கு, நாவல் மீதான முழுமையான வாசிப்பு அவசியமானது. அத்தியாயங்களில் ஒன்றைத்தவற விட்டாலும் நாவலின் முழுப்பரிமாணத்தையும் அடைவதில் சிரமம் ஏற்படும் சாத்தியமுள்ளது.

இந்த நாவலின் கூறு பொருள், பாத்திரப்படைப்பு, நான்கு தலைமுறைகளையும் உள்ளடக்கிய கதைப்பின்னல் (Plot) ஆகியவை நன்கு அமைந்திருக்கின்றன. அவை எழுத்தாளர் தேவகாந்தனின் எழுத்துச்சிறப்பினை வெளிப்படுத்துகின்றன. மேலும் இந்த நாவல் பல்வேறு காலகட்ட வாழ்வியல் அனுபவங்களை உள்ளடக்கியதால் பன்முகப் பரிமாணங்களைக்கொண்டதொரு நாவலாக உருவாகியிருக்கின்றது.

இந்த நாவலை வாசிக்க முன் . முன்னுரையில் நாவலாசிரியர் கூறும் பின்வரும் கூற்றினைச் சிறிது கவனியுங்கள்:

சரத்சந்திரரின் தேவதாஸ் பற்றி... வ.ந.கிரிதரன் -

அண்மையில் மறைந்த எழுத்தாளரும், பிரபல மொழிபெயர்ப்பாளருமான சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில்  வெளியான வங்க நாவல்கள் அல்லது படைப்புகள் எதனையாவது எங்கு கண்டாலும் எடுத்து வாசிக்கத்தவறுவதேயில்லை. அவரது மொழிபெயர்ப்பில் வெளியான வங்க நாவலான 'நீல கண்டப்பறவையைத்தேடி ' வாசித்ததிலிருந்து ஆரம்பித்த என் விருப்பங்களில் இதுவுமொன்று. மொழிபெயர்ப்பு என்பதே தெரியாத வகையில் அற்புதமாக விளங்குபவை இவரது மொழிபெயர்ப்புகள். அதுவே இவரது மொழிபெயர்ப்பின் சிறப்பும் கூட.

இவரைப்போல் இன்னுமொருவர் ஞாபகமும் கூட வருகிறது. எழுபதுகளில் என் மாணவப்பருவத்தில் கா.ஶ்ரீ.ஶ்ரீ.யின் மொழிபெயர்ப்பில் வெளியான பிரபல மராட்டிய நாவலாசிரியரான காண்டேகரின் படைப்புகளை ஒரு வித வெறியுடன் தேடிப்பிடித்து வாசித்திருக்கின்றேன். காண்டேகரின் நாவல்களில் வரும் 'வாழ்க்கையென்றால் புயல்' போன்ற வசனங்களை விரும்பி வாசித்த அப்பருவத்து நினைவுகள் இப்பொழுதும் அவ்வப்போது தோன்றுவதுண்டு.

அண்மையில் டொராண்டோவிலுள்ள பொதுசன நூலகத்தின் ஸ்கார்பரோ கிளையொன்றில் சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான தேவதாஸ் நாவலின் பிரதியொன்றைக்கண்டபோது , அம்மொழிபெயர்ப்பு சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான காரணத்தினால் எடுத்து வாசிக்க விரும்பி இரவல் பெற்று வந்தேன். , 'நல்லநிலம்' பதிப்பக வெளியீடாக வெளீவந்த பிரதி இது.  தேவதாஸ் நாவலை எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளருமான த.நா.குமாரசாமியும் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார். ஆனால் அந்த மொழிபெயர்ப்பினை நானின்னும் வாசிக்கவில்லை.

ஏற்கனவே திரைப்படம் மூலம் எல்லாருக்கும் நன்கு அறிமுகமான கதை. வாசிப்பதில் அப்படியென்ன பெரிதாக இருக்கப்போகின்றது என்றொரு எண்ணமும் கூட எழுந்தாலும். மொழிபெயர்ப்பாளரின் மேலிருந்த விருப்பு காரணமாக எடுத்து வந்து வாசித்தேன்.

'காவியத்துக்கு ஒரு மஹாகவி!' - வ.ந.கிரிதரன் -


காவியத்துக்கு ஒரு மஹாகவி' என்று அழைக்கப்படக்காரணமாக இருந்த காவியம் மஹாகவியின் 'கண்மணியாள் காதை' காவியம். அவலச்சுவை மிக்க காவியம். தீண்டாமைக்கொடுமையினை விபரிக்கும் குறுங்காவியமிது. கவிஞர் 'சடங்கு' என்று 'விவேகி'யில் எழுதிய தனது குறுங்காவியத்தின்  நாயகனான செல்லையாவை வைத்து , லடீஸ் வீரமணிக்காக வில்லுப்பாட்டாக , இன்னுமொரு கோணத்தில் எழுதிய துயர காவியம் 'கண்மணியாள் காதை' . குறுங்காவியமானாலும் அதில்வரும் பாத்திரங்களான கண்மணியாளையும், செல்லையனையும் படித்தவர்களால் மறக்கவே முடியாது. அவ்வளவிற்குப் பாத்திரப்படைப்பு நன்கு அமைந்திருந்த காவியமது. இக்காவியம் முதலில் அன்னை வெளியீட்டகம் (யாழ்ப்பாணம்) என்னும் பதிப்பகத்தால் நவம்பர் 1968இல் நூலாக வெளிவந்தது. மேலும் 'கண்மணியாள் காதை' தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் லடீஸ் வீரமணி குழுவினரால் வில்லுப்பாட்டாக மேடையேறியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அது பற்றி 'ஈழநாடு' பத்திரிகையின் வாரமலரில் வெளிவந்த 'தேனி'யின் விமர்சனம்  'காவியத்துக்கு ஒரு மஹாகவி; வில்லுப்பாட்டுக்கு ஒரு வீரமணி' என்ற தலைப்புடன் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்படி 'கண்மணியாள் காதை'யும் எனக்கு மிகவும் பிடித்த காவியங்களிலொன்று. அதில்வரும் 'கண்மணி', 'செல்லையன்' ஆகியோர் மறக்க முடியாதவர்கள். ஒரு விதத்தில் வாசிக்கும்போது அதன் பெயரும், பாடு பொருளும், காவியத்தில் வரும் சில கவிதை வரிகளும் சிலப்பதிகாரத்தை நினைவுக்குக் கொண்டுவரும் குறுங்காவியமது. காவியத்தை இரு கூறுகளாகக் கவிஞர் பிரித்திருப்பார். முதலாம் கூறு: வெண்ணிலவு காவியத்தின் இன்பமான பக்கத்தை விபரித்தால், இரண்டாம் கூறான 'காரிருள்' காவியத்தின் துன்பகரமான பக்கத்தை விபரிக்கும்.  அக்காவியத்தில் என்னை மிகவும் கவர்ந்த வரிகளாகக் கீழுள்ளவற்றைக் குறிப்பிடலாம்:

"யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு
யாசகன் மன்ன னிடம் இருந்தோர்
பாழைப் பரிசு பெற் றான்!" எனக் கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு -
பாழைப் பரிசு பெற் றாலும், அப் பாலையைப்
பச்சைப் படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத னால், இன்று
வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்!

"ஆழக் கடலுள் அமிழ்ந்தன வே எங்கள்
அன்றைப் பெரும்புகழ்; ஆதலினால்,
வீழத் தொடங்கி முடிந்தன வாம் பல
விந்தை!" என்றோர் கதை வந்ததுண்டு -
வீழத் தொடங்கிய விந்தை முழுவதும்
மீட்டுக் கொடுத்த பெருமையிலே
'ஈழத் தமிழகம்' என்று நிலம் தனில்
இன்று நிமிர்ந்தது யாழ்ப்பாணம்!

"ஆறு நடந்து திரிந்த வயல்கள்
அடைந்து கதிர்கள் விளைந்திட, வான்
ஏறி உயர்ந்த மலை ஏதும் இல்லையே!"
என்ற ஒரு கதை சொல்வதுண்டு -
"ஏறி உய்ர்ந்த மலை இல்லை ஆயினும்
என்ன? இருந்தன தோள்கள்!" என்றே
கூறி, உழைத்த பின் ஆறிக், கலைகளில்
ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்!


---
ஆழ நீர் கொண்டு வாழ இளைஞர்
அகழ்கின் றார் தம் நிலத்தினைத் தானே!


--

காவிய நாயகியான கண்மணியாள் பற்றி வரும் வரிகள்:

பெண் ணிருக்கும் அழகை யெல்லாம்
பேணி வைத்த பொற் குடமாம்.
விண்ணவர்க்கும் எட்டாது
விளைந்திருக்கும் நிலத் தமுதாம்.

கண் ணிமிர்த்தி அவள் பார்த்தால்,
கண்டவர்கள் மறப்ப தில்லை.
மண் மிதித்தம் மயில் நடந்தால்,
மண் கூடச் சிலிர்ப்ப துண்டு.

திங்கள் அவள் முகமளவு.
செழுங் கூந்தல் மழை யளவு.
தங்கம் அவள் நிறமளவு.
தயிர் அவளின் மொழியளவு.

கொங்கை இரு செம்பளவு.
கொடி இடையோர் பிடியளவு.
பொங்கும் அவள் அங்கம் ஒரு
பொல்லாத பாம்பளவு!


செல்லையன் தனது வயலில் துலா மிதிக்கின்றான். கண்மணியாளோ நாற்று நடுகின்றாள். அவர்களுக்கிடையில் நிகழும் உரையாடலைக் கீழுள்ள  வரிகள் புலப்படுத்தும்.  செல்லையனுக்கும் , கண்மணியாளுக்குமிடையில் நிலவும் காதலை விபரிக்கும் வரிகள் இவை.

"நாற்றுப் பிடி எடுத்து
நாற்று நட்டு நான் இருக்க,
நாற்றுப் பிடி பிடியில்
நழுவுவது தான் எதற்கு?"

"சேற்றில் சதிர் மிதித்துச்
சின்ன இடை நீ வளைக்க,
நேற்றுச் சிரித்தபடி
நின்றவள் நி னைப்பெனக்கு!"

"நேற்றுச் சிரித்துவிட்டு
நின்றவள் நி னைப்பிருந்தால்,
காற்றிற் பறந்து விடும்
கதை விடுதல் தான் எதற்கு?"

"காற்றில் பறந்து வரும்
காவியத்தோ டாவி செல்ல,
ஏற்றத் துலா நடந்தே
இளைக்கும் உடல் இங்கெனக்கு!"

"ஏற்றத் துலாவினிலே
ஏறி நிற்கும் மன்னவர்க்குச்
சேற்றிற் கிடக்கும் ஒரு
சிறிய மலர் ஏன்? எதற்கு?"

"சேற்றிற் கிடைக்கும் அத்
திரு மலரோ இல்லை யென்றால்,
சோற்றைப் பிற கெதற்கு?
சொல்லடி இப் போதெனக்கு!"


மேற்படி காவியத்தின் முடிவு துயரகரமானது. செல்லையன் ஊர் இளைஞர்களுடன் கூடி, கலட்டியான தரையை உழைப்பால் பண்படுத்தி, அங்கு அவ்வூரின் தாழ்த்தப்பட்ட சமூகத்து மக்களைக் குடி அமர்த்துகின்றான். தந்தையின் எதிர்ப்பையும் மீறி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கண்மணியாள்மீது காதல் கொண்டு, அவளையே திருமணம் செய்து வாழ்க்கையைத் தொடங்குகின்றான். இவ்விதமாகக் காதலர்கள் தம் மணவாழ்வைத் தொடங்கும் சமயத்தில் நீண்டகாலமாகக் கண்மணியாளின் அழகில் ஆசை வைத்திருந்த சந்திக்கடை முதலாளி, அடியாட்களை அனுப்பி, செல்லையனைக் கொலை செய்து, கண்மணியாளைக் கவர்ந்து சென்று, தன் ஆசைக்கு இணங்க வைக்க முயல்கின்றான். அப்பொழுது அங்கிருந்து தப்பிச் செல்லும் கண்மணியாளின் நிலையைக் கவிஞர் இவ்விதம் விபரிப்பார்:

ஓடுகின்றாள், ஓடுகின்றாள்,
ஓர் இரண்டு நாய் குரைக்கப், பேய் துரத்த,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...
சேலையின் முன்றானை காற்றினிலே
செல்ல, இடை மின் நுடங்க,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...
பால் முகத்தின் மேல் வியர்வை
பாய, விழி நீர் பெருக,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...


இவ்விதம் ஓடுமவள் முத்துமாரியம்மன் ஆலயத்தை அடைகின்றாள்.  அவளுக்கேற்பட்ட அநீதிக்கெதிராகக் கவிஞர் மாரியம்மனிடம் நீதி கேட்கின்றார்.

மாரியம்மன் வாசல் வழி
வந்தாளே கண்மணியாள்.
ஊரின் ஒரு புறத்தே
உறங்கினையோ மாரியம்மா?
நல்லான் ஓர் நல்லவளை
நாடுவது நாத்திகமோ?
எல்லாரும் ஒத்த குலம்
என்று சொன்னால் ஏற்காதோ?

ஏழை இருக்க நிலம்
ஈதலும் ஓர் ஏமாற்றோ?
வேள்வி மறுப்பதுவும்
வேண்டாத வெஞ் செயலோ?
பாழை விளைத்திடுதல்
பாதகமோ, பேசடியே!
கூடி உழைத்தல்
கொடுமை என்றோ கூறுகிறாய்?

ஏடி, முத்து மாரியம்மா,
எடுத்தொரு சொல் சொல்லடியோ!
'மெல்லியலார்' வாழ
விடாயோ பெருமாட்டி?
சொல்லடியே என் தாயே,
சுறுக்காகச் சொல்லடியோ!
புல் லிதழே பிய்ந்து
புயற் காற்றிற் போனது போல்-

ஓடுகின்றாள், ஓடுகின்றாள்,
ஓர் இரண்டு நாய் குரைக்கப், பேய் துரத்த,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...


ஓடும் கண்மணியாள் தனது கணவனின் கொலையுண்ட உடலைக் காண்கின்றாள்:

காதலனைக் கண்டு கொண் டாளே!
முலை
மீ த றைந்தாள்; நிலம் மீ து ருண்டாள்.
சிறு
மாது கண் செந் நீர் வழிந் தாளே!
ஒரு
சேதி, கீழ்ப் புற வானில் ஞாயிறு
நீதி காண எழுந்ததே!
இருள்
சாதி போலே போய் ஒ ழிந்ததே!
"ஒளி
வாழ்க!" என்றும், "இருள் வீழ்க!" என்றும்,
கிளை
மீது சேவல் கூவு கின்றதே!

இவ்விதமாகச் செல்லும் மெற்படி குறுங்காவியம் பின்வருமாறு முடியும்:

ஒத்துழைத்தால், ஒன்று பட்டால்,
உயர்வு பல காட்டி நின்றால்,
ஒத்தவர் தாம் யாரும் என்றே
ஒருத்தியின் மேல் அன்பு வைத்தால்,
பித்தரின் கைக் கோடரி போய்ப்
பிளந் தெறிய, நல்லவர்கள்
செத்திடத் தான் வேண்டுவதோ?
செக முடையோர், செப்புவிரே!

இலங்கையிலிருந்து வெளிவந்த தமிழ்க் காப்பியங்களில் மஹாகவியின் 'கண்மணியாள் காதை'க்குமோரிடமுண்டு. இக்காவியத்தை முழுமையாகப்படிக்க விரும்பினால் 'நூலகம்' இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு: http://noolaham.net/project/01/44/44.htm

நன்றி: பதிவுகள்.காம்

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' - வ.ந.கிரிதரன் -

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்'

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' நேற்றுதான் என் கையில் கிடைத்தது. இந்த நாவலைப் பற்றி வெளிவந்த விமர்சனக் குறிப்புகள் காரணமாக இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. அதற்கு வடிகாலாகப் புத்தகம் இங்குள்ள புத்தகக் கடையொன்றில் நேற்றுத்தான் கிடைத்தது. இந்த நூலினை வாசிக்க வேண்டுமென்று நான் நினைத்ததற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

1. தமிழ் மக்கள் எதிர்நோக்கிய, முள்ளிவாய்க்காலில் முடிந்த யுத்தக் காலகட்டத்தில் , எவ்விதமான சிரமங்களை அவர்கள் எதிர்நோக்கினார்கள். வெளிவரும் காணொளிகள் அழிவுகளைத்தாம் காட்டும். ஆனால் அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த மக்களின் அன்றாடச் செயற்பாடுகளை, அழிவுகளை அவர்கள் எதிர்நோக்கியது எவ்வாறு போன்றவற்றை அக்காணொளிகள் காட்டுவதில்லை. இதனை அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த ஒருவரின் நாட்குறிப்புகள் அல்லது பதிவுகள்தாம் புலப்படுத்தும். இதுவுமொரு காரணம் இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற என் ஆவலுக்கு.

2. தமிழ்க்கவி விடுதலைப் புலிகள் அமைப்பிலும் இணைந்து இயங்கிய ஒருவர். அதனால் அவரது பதிவுகள் இயக்கம் சார்ந்ததாக இருக்குமா அல்லது நடுநிலையுடன் இருக்குமா என்பது பற்றி அறிய எனக்கிருந்த ஆர்வம் இன்னுமொரு காரணம்.

இதுபோன்ற மேலும் சில காரணங்களைக் குறிப்பிடலாம். ஆனால் மேலுள்ள காரணங்கள்தாம் முக்கியமானவை.

இந்த நாவலைப் பொறுத்தவரையில் ஏனைய முக்கியமான நாவல்களைப் போல் பாத்திரப்படைப்பு, கதைப்பின்னல், உரையாடல், கூறும்பொருள், மொழி என்பவற்றின் அடிப்படையில் அணுக முடியாது. இதன் முக்கியத்துவம் நடந்து முடிந்த பேரழிவினை ஆவணப்படுத்தும் பதிவுகள் என்ற வகையில்தானிருக்கின்றது. யூதச்சிறுமி ஆன் ஃபிராங்கின் புகழ்பெற்ற 'தினக்குறிப்புகள்' எவ்விதம் ஆவணச்சிறப்பு மிக்கவையாக இருக்கின்றனவோ (அத்தினக்குறிப்புகள் அச்சிறுமியின் பதின்ம வயது உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இலக்கியச்சிறப்பும் மிக்கவை) அதுபோல்தான் தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' நாவலும் ஆவணச்சிறப்பு மிக்கதாகவிருக்கின்றது. அதன் காரணமாகவே ஈழத்தமிழர் இலக்கியத்தில் முக்கியமானதொரு படைப்பாகத் தன்னை நிலைநிறுத்துக்கொள்கின்றது.

ஆய்வு: புகலிடத் தமிழ் நாவல் முயற்சிகள்! - வ.ந.கிரிதரன் -

மகுடம் கனடாச்சிறப்பிதழ்
- இன்று - மே 31, 2014 -'டொராண்டோ'வில் எழுத்தாளர் அகில், மருத்துவர் லம்போதரன் ஆதரவில் நடைபெற்ற மாதாந்த இலக்கிய நிகழ்வில் ஆற்றிய உரையின் முழுமையான வடிவம். நிகழ்வில் நேரப் பற்றாக்குறை காரணமாக கட்டுரை முழுவதையும் வாசிக்க முடியவில்லை.  இக்கட்டுரை இலங்கையிலிருந்து வெளிவரும் மகுடம் சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் (ஏப்ரில் - டிசம்பர் 2016)  முழுமையாகப் பிரசுரமாகியுள்ளது. அதன் மீள்பிரசுரமே இங்கு வெளியாகியுள்ள கட்டுரை. -  வ.ந.கி -

புலம் பெயர் தமிழ் இலக்கியமும், புகலிடத் தமிழ் இலக்கியமும், புகலிட நாவல்களும் பற்றி....

இன்று உலகெங்கும் தமிழர்கள் புலம் பெயர்ந்து பரந்து வாழ்கின்றார்கள். சங்க காலத்திலிருந்து காலத்துக்குக் காலம் தமிழர்கள் புலம் பெயர்வது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. 'திரை கடலோடித் திரவியம் தேடினார்கள் அற்றைத் தமிழர்கள். பொருளியல் காரணங்களுகாக அன்று தமிழ் மன்னர்கள் அயல் நாடுகளின் மீது படையெடுத்து தமது ஆட்சியினை விஸ்தரித்தார்கள். அதன் காரணமாகத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். அந்நியர் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு , நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது தமிழகத்திலிருந்து தமிழர்கள் பலர் இலங்கை, மலேசியா என்று பல்வேறு நாடுகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவ்விதமாகத் தொடர்ந்த தமிழ் மக்களின் புலம்பெயர்தலில் முக்கியமானதொரு நிகழ்வு கடந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஆரமபித்த ஈழத்தமிழரின் பல்வேறு திக்குகளையும் நோக்கிய புலம் பெயர்தல்.

Wednesday, February 21, 2018

தேவன் (யாழ்ப்பாணம்)! - வ.ந.கிரிதரன்

[ யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தின் வருடாந்தக் கலைவிழாவான 'கலையரசி 2015' நிகழ்வினையொட்டி வெளியான 'கலையரசி' மலரில் வெளியான தேவன் (யாழ்ப்பாணம்) பற்றிய சுருக்கமான கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம். - வ.ந.கி]

ஈழத்துத்தமிழ் இலக்கிய வரலாற்றில் யாழ் இந்துக்கல்லூரியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர்கள் தொடக்கம் ஆசிரியர்கள் வரை பலர் ஈழத்துத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார்கள். இது பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். அந்த வகையில் யாழ் இந்துக்கல்லூரியின் ஆசிரியரான தேவன் - யாழ்ப்பாணம் அவர்களின் இலக்கியப்பங்களிப்பு பற்றிச் சுருக்கமாக ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

தேவன் - யாழ்ப்பாணம் மிகச் சிறந்த பேச்சாளர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்கு பேசும் ஆற்றல் வாய்த்தவர். இதனால் அன்றைய காலகட்டத்தில் யாழ்நகரில் நடைபெற்ற கலை, இலக்கிய நிகழ்வுகளில் , அந்நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கும் பிரதான தொகுப்பாளராக அப்பொழுது அவர் அனைவராலும் அழைக்கப்பட்டுக்கொண்டிருந்தார்.

இது தவிர தேவன் - யாழ்ப்பாணம் என்றால் உடனே ஞாபகம் வருவது அவரது புகழ்பெற்ற 'ஸ்கோடா' (Skoda) மோட்டார் வாகனமாகும். அதன் காரணமாக அன்றைய காலகட்டத்து மாணவர்களால் அவர் 'ஸ்கோடா' என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்பட்டதும் நினைவுக்கு வருகின்றது. அந்தக் கண்ணாடி அணிந்த முகமும், அந்த 'ஸ்கோடா' மோட்டார் வாகனமும் இப்பொழுதும் ஞாபகத்திலிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் 1924இல் பிறந்த இளையப்பா மகாதேவன் தன் புனைபெயராக தேவன் என்று வைத்துக் கொண்டார். தேவன் - யாழ்ப்பாணம் அவர்களின் முதலாவது நினைவு மலரில் தேரடியான் என்னும் பெயரில் தேவன் அவர்களின் தமையனாரான இளையப்பா தர்மலிங்கம் அவர்கள் கட்டுரையொன்று எழுதியிருக்கின்றார். அது  தேவன் அவர்களின் பெயருக்கான காரணங்கள் பற்றிய மேலதிகத் தகவல்களை வழங்குகின்றது. [இது பற்றிய தகவல்களை வழங்கிய என் முகநூல் நண்பர்களில் ஒருவராகிய திருமலை மூர்த்தி அவர்களுக்கு நன்றி.] தேவன் அவர்களது பெற்றோர் சேர். அ. மகாதேவா அவர்கள் மேல் மதிப்பு வைத்திருந்தார்கள். அதன் காரணமாக தேவன் அவர்களுக்கு மகாதேவா என்னும் பெயர் அவர் பிறப்பின்போது வைக்கப்பட்டது. அப்பெயர் அவரது பாட்டியால் சுருக்கி 'தேவு' என்று அழைக்கப்பட்டது. 'துப்பறியும் சாம்பு' புகழ்  'ஆனந்த விகடன் தேவன்' மேல் மதிப்பு வைத்திருந்த தேவன் , அவருக்கே கடிதம் எழுதி, அவரது ஆசியுடன் 'தேவன்' என்னும் பெயரினைப் பாவிக்கத்தொடங்கினார். தேவன் இந்தியாவிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்காக தேவன் - யாழ்ப்பாணம் என்று தன் புனைபெயரை வைத்துக்கொண்டார் தேவன் அவர்கள்.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...