Thursday, February 22, 2018

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' - வ.ந.கிரிதரன் -

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்'

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' நேற்றுதான் என் கையில் கிடைத்தது. இந்த நாவலைப் பற்றி வெளிவந்த விமர்சனக் குறிப்புகள் காரணமாக இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. அதற்கு வடிகாலாகப் புத்தகம் இங்குள்ள புத்தகக் கடையொன்றில் நேற்றுத்தான் கிடைத்தது. இந்த நூலினை வாசிக்க வேண்டுமென்று நான் நினைத்ததற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

1. தமிழ் மக்கள் எதிர்நோக்கிய, முள்ளிவாய்க்காலில் முடிந்த யுத்தக் காலகட்டத்தில் , எவ்விதமான சிரமங்களை அவர்கள் எதிர்நோக்கினார்கள். வெளிவரும் காணொளிகள் அழிவுகளைத்தாம் காட்டும். ஆனால் அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த மக்களின் அன்றாடச் செயற்பாடுகளை, அழிவுகளை அவர்கள் எதிர்நோக்கியது எவ்வாறு போன்றவற்றை அக்காணொளிகள் காட்டுவதில்லை. இதனை அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த ஒருவரின் நாட்குறிப்புகள் அல்லது பதிவுகள்தாம் புலப்படுத்தும். இதுவுமொரு காரணம் இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற என் ஆவலுக்கு.

2. தமிழ்க்கவி விடுதலைப் புலிகள் அமைப்பிலும் இணைந்து இயங்கிய ஒருவர். அதனால் அவரது பதிவுகள் இயக்கம் சார்ந்ததாக இருக்குமா அல்லது நடுநிலையுடன் இருக்குமா என்பது பற்றி அறிய எனக்கிருந்த ஆர்வம் இன்னுமொரு காரணம்.

இதுபோன்ற மேலும் சில காரணங்களைக் குறிப்பிடலாம். ஆனால் மேலுள்ள காரணங்கள்தாம் முக்கியமானவை.

இந்த நாவலைப் பொறுத்தவரையில் ஏனைய முக்கியமான நாவல்களைப் போல் பாத்திரப்படைப்பு, கதைப்பின்னல், உரையாடல், கூறும்பொருள், மொழி என்பவற்றின் அடிப்படையில் அணுக முடியாது. இதன் முக்கியத்துவம் நடந்து முடிந்த பேரழிவினை ஆவணப்படுத்தும் பதிவுகள் என்ற வகையில்தானிருக்கின்றது. யூதச்சிறுமி ஆன் ஃபிராங்கின் புகழ்பெற்ற 'தினக்குறிப்புகள்' எவ்விதம் ஆவணச்சிறப்பு மிக்கவையாக இருக்கின்றனவோ (அத்தினக்குறிப்புகள் அச்சிறுமியின் பதின்ம வயது உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இலக்கியச்சிறப்பும் மிக்கவை) அதுபோல்தான் தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' நாவலும் ஆவணச்சிறப்பு மிக்கதாகவிருக்கின்றது. அதன் காரணமாகவே ஈழத்தமிழர் இலக்கியத்தில் முக்கியமானதொரு படைப்பாகத் தன்னை நிலைநிறுத்துக்கொள்கின்றது.
இந்த நாவலில் யுத்தக்காலகட்டத்தில் மக்களின் இடம்பெயர்வுகளை, கூவிவரும் எறிகணைகளிலிருந்து தப்புவதற்காக அவர்கள் படும் சிரமங்களை, அன்றாட வாழ்வியற் பிரச்சினைகளை, இயக்கத்தவரின் செயற்பாடுகளை, இயக்கத்தைக் காரணமாக வைத்துச் சிலர் அடையும் ஆதாயங்களை .. இவற்றையெல்லாம் தமிழ்க்கவி இயலுமானவரையில் பதிவு செய்திருக்கின்றார். இயக்கத்தின் செயற்பாடுகளைப் பாராட்ட வேண்டிய இடங்களில் பாராட்டியும், கண்டிக்க வேண்டிய இடங்களில் கண்டித்துமுள்ளார். இறுதிக்கட்டம் வரையில் புலிகள் போராடிக்கொண்டிருந்ததை பதிவு செய்யும் 'ஊழிக்காலம்', இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் செல்ல முயன்றவர்கள் மீது புலிகள் துப்பாக்கிக்ப் பிரயோகம் செய்ததையும் விபரிக்கின்றது. இதற்குப் படகில் தப்பிச்சென்ற பாலகுமாரின் மனைவியும், மகளும் கூட விதிவிலக்கானவர்களல்லர். பாலகுமாரின் மகளும் இவ்விதமானதொரு சூழலில் , துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயங்களுக்குள்ளாகவதாக 'ஊழிக்காலம்' விபரிக்கின்றது. இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்ததால் , விடுதலைப்புலிகள் பற்றிய இவரது விமர்சனங்கள் பற்றி மாற்றுக்கருத்தினர் நிச்சயம் தத்தமது பார்வையில் விமர்சனங்களை வைக்கத்தான் செய்வார்கள்.

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' என்னுமிந்த ஆவணப்பதிவில் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது மக்கள் இருப்பினை எதிர்நோக்கிய இயல்பு. பல்வேறு பட்ட எறிகணைகள் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களெல்லாம் சீறிப்பாய்கின்றன. பலரைப் பலிகொள்கின்றன. இலங்கை இராணுவத்தின் கைகளில் ஒவ்வொரு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமும் விழுந்தவுடன் , மக்கள் மீண்டும் , மீண்டும் இடம்பெயர்கின்றார்கள். யுத்தத்தின் இறுதிவரையில் மக்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றார்கள். அதே சமயம் தமிழீழ வைப்பகம் போன்ற அமைப்புகள் இயங்கிக்கொண்டுதானிருக்கின்றன. மக்கள் வைப்பகங்களில் வைத்திருந்த பணத்தை அவ்வப்போது எடுத்து , உணவுக்காக, பங்கர்கள் கட்ட உதவும் பொருட்களைக் காவி வருவதற்கான கூலி போன்றவற்றுக்காக என்றெல்லாம் செலவழிக்கின்றார்கள். விலை அதிகமாகக்கொடுத்துப் பொருட்களை வாங்குகின்றார்கள். வியாபாரிகளும் அதிக விலைக்கு விற்கின்றார்கள். சங்கக்கடை போன்ற அமைப்புகள் யுத்தநிலைக்கேற்ப சந்திக்குச் சந்தி இடம்மாறி தம் சேவைகளை வழங்கிக்கொண்டுதானிருக்கின்றன. குழந்தைகள் பங்கர்களுக்குள் சதுரங்கம், தாயத்து போன்ற விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருமுறை இடம் மாறும்போதும் , புதிய இடங்களில் பங்கர்கள், மலசலக்கூடங்கள் அமைத்துத் தம் வாழ்வினைத் தொடர்கின்றார்கள். இவ்விதமான அழிவுகளுக்கு மத்தியிலும், மக்கள் ஒழுங்கிழந்து , சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அழிவுகளை எதிர்நோக்கி, மீண்டும் நம்பிக்கையுடன் யுத்தத்தினை எதிர்கொள்கின்றார்கள்.

இவ்விதமான யுத்தச்சூழலில் மக்களின் அன்றாட இருப்பினை நன்கு பதிவு செய்துள்ளார் தமிழ்க்கவி. அது இந்நூலின் ஆவணச்சிறப்பினை அதிகரிக்கின்றது. பொதுவாக அமைப்பைச் சார்ந்தவர்களின் பதிவுகளில் தனிப்பட்ட மன உணர்வுகளைத்தான் , அதுவும் ஒருபக்கச்சார்பாகப் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' இயலுமானவரையில் யுத்தச்சூழலில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்வினைக் குறை, நிறைகளுடன் பதிவு செய்திருக்கின்றது.

நூலில் தமிழ்க்கவி நூல் நல்ல முறையில் வெளிவருவதற்குக் காரணமாக இளங்கோ (கனடா), 'ஆறா வடு' சயந்தன் ஆகியோர் இருந்ததாக நன்றி நவின்றிருப்பார். அதற்காக அவர்களையும் பாராட்டலாம் இவ்விதமானதொரு நூல் வெளிவரக் காரணமாகவிருந்ததற்காக.

07 August 2014
ngiri2704@rogers.com

No comments:

கனடாவில் வெளியான முதலாவது நாவல் , கவிதைத்தொகுப்புகள் பற்றி...

அண்மையில் 'டொராண்டோ'வில் ஊடறு மற்றும் தேடகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையகா நிகழ்வினை நெறிப்படுத்திய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் சமூகச் செய...

பிரபலமான பதிவுகள்