Sunday, February 18, 2018

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக் குறிப்புகள் 6: 'குறைவில் நிறையச் (Less is more) சாதித்த கட்டடக்கலைஞர் லட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies Van der Rohe)

- லட்விக் மீஸ் வான் டெர் ரோ -

ஜேர்மனியில் பிறந்து 1938இல் அமெரிக்கா குடிபுகுந்து அமெரிக்காவில் நவீனத்துவக் கட்டடக்கலையின் முக்கிய கட்டடக்கலைஞராக விளங்கியவர் 'லட்விக் மீஸ் வான் டெர் ரோ' (Ludwig Mies Van der Rohe).  இவர் தனது கட்டடக்கலைத் தொழிலை ஜேர்மனியில் ஆரம்பிப்பதற்கு முன்னர் அமெரிக்கக் கட்டடக்கலைஞரான பீட்டர் பெஹ்ரென்ஸுடன் (Behrens) பணி பழகுநராகச் சேர்ந்து தன் கட்டடக்கலைத் தொழிலினை ஆரம்பித்தவர்.

கனடியர்களுக்குக் குறிப்பாகட்த் தொரோண்டோ வாசிகளுக்கு மீஸ் வான் டெர் ரோ என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது நகரின் வர்த்தக மையத்தில் உயர்ந்து நிற்கும் TD  centre  (1964)
தான். இதுபோல் அமெரிக்க வாசிகளுக்கு, குறிப்பாக நியுயார்க் வாசிகளுக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது அவரது சீகிரம் கட்டடடம்தான் (Seagram Building 1958). இவ்விரு கட்டடங்களைப் பார்த்ததுமே இவரின் தனித்தன்மை உடனே புலப்படும்.
இவர் உருக்குச் சட்டங்கள் (Steel Frames), கண்ணாடி (Glass)  போன்ற புதிய கட்டடப்பொருட்களைப் பாவிப்பதில் முன்னோடிகளிலொருவராக விளங்கினார். அதில் மிகுந்த தெளிவுடனிருந்ததுடன் தனது பாணியினை 'ட்தஓலும், எலும்பும்' (Skin and Bones) என்றும் அழைத்தார். தேவையற்ற கட்டட அலங்காரங்களை இவர் தவிர்த்ததுடன் , கட்டடங்களின் உள்வெளியினை (interior space)  முழுமையாக, தேவைக்கேற்ப  திரைச்சுவர்கள் (curtain walls) மூலம் பிரித்துப் பாவிக்கும் வகையில் தனது கட்டட வடிவமைப்புகளை உருவாக்கினார்.

1929இல் பார்சலோனா கண்காட்சியிலிருந்த ஜேர்மன் விளையாட்டரங்கில் பச்சைக்கண்ணாடிகளைக் கொண்டு வடிவியல் ஒழுங்கில்  பச்சைக் கண்ணாடி, பளிங்குக் கல் (marble), 'குரோம்' தூண்கள் (chrome columns), ஒனிக்ஸ் எனப்படும் ஒருவகை இரத்தினக் கல்,  இத்தாலி நாட்டில் காணப்படும் travertine என்னும் ஒருவகைக் கிறிஸ்டல் அல்லது படிகக் கல் ஆகியவற்றைப் பாவித்து அமைக்கப்பட்ட தளங்கள் (planes) ஆகியவற்றைப் பாவித்திருக்கின்றார் இவர்.


இவரது புகழ்மிக்க கட்டடமான 'சீகிரம்' கட்டடம் எளிமையானதும், பொதுவாகத் தேவையற்ற (superfluous)  மிதமிஞ்சிய அலங்காரங்களால் மறைக்கப்பட்டிருக்கும் நிலை  தவிர்க்கப்பட்டு கட்டுமான உறுப்புகள் (structural elements)  வெளியில் தெரியும் வகையில் அமைந்த வானுயரக் கட்டடங்கள் உருவாவதற்குரிய புதிய சகாப்தமொன்றினைக் கட்டடக்கலை வரலாற்றில் உருவாக்கி வைத்ததெனலாம்.

- 'சீகிரம்' கட்டடம் -
லட்விக்  மீஸ் வான் டெர் ரோ என்றதும் புகழ்பெற்ற இன்னுமொரு சொற்றொடரும் நினைவுக்கு வரும். அது குறைவே நிறைய என்னும் அர்த்தத்தைத்தரும் Less is more என்னும் சொற்றொடராகும். இச்சொற்றொடரைத்தாம் முதலில் தனது கட்டடக்கலைக் குருவான பீட்டர் பெஹ்ரென்ஸிடமிருந்து தான் கேட்டதாகக் கூறுமிவர் அவர் அதனைப்பாவித்த அர்த்தம் வேறு. தான் பாவித்த அர்த்தம் வேறென்றும் கூறுவார். தான் அவரிடம் பணி புரிந்த காலகட்டத்தில் ஒருமுறை தொழிற்சாலையொன்றின் முகப்புக்கான வடிவமைப்புகளாகப் பல வரைபடங்களைக் குருவான பீட்டர் பெஹ்ரென்ஸிடம் காட்டியபோது அவர் குறைவானதே அதிகம் என்னும் அர்த்தத்தில் அத்தொடரைப் பாவித்ததாக ஒருமுறை நினைவு கூர்ந்திருக்கின்றார். ஆனால் லட்விக்  மீஸ் வான் டெர் ரோ கட்டடமொன்றின் தேவையற்ற அலங்காரங்களை ஒதுக்கி, மிகவும் எளிமைப்படுத்தி, கண்ணாடி, உருக்கும் மற்றும் திரைச்சுவர்களைப் மற்றும் புதிய கட்டடப்பொருட்களைப் பாவித்து காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புதியதொரு கட்டடக்கலைப்பாணியின் அறிமுகப்படுத்தினார். பழைய பாணிக் கட்டடக்கலையிலிருந்து அதிகமாகப்பாவிக்கப்பட்ட மிதமிஞ்சிய தேவையற்ற அலங்காரங்களையெல்லாம் குறைத்து, மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட நவீன வானுயரக் கட்டடங்களை அமைத்ததைக் குறிப்பிடுதற்கே 'குறைவில் நிறைய'  (Less is more)  என்னும் சொற்றொடரினைப் பயன்படுத்தினார்.

இவர் பெயரைக்கூறும் பல வானுயரக் கட்டடங்கள் பல்வேறு நாடுகளிலுள்ளன. கட்டடங்கள் தவிர தளபாட வடிவமைப்பிலும் காத்திரமான பங்களிப்பினை நல்கியவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

- TD  centre  (1964) -
 இவ்விதமான புதியதொரு கட்டடக்கலைப்பாணியினைக் காலத்துக்கேற்ப அறிமுகப்படுத்திய லட்விக்  மீஸ் வான் டெர் ரோ நவீனக் கட்டடக்கலையின் மூலவர்களில் முக்கியமான ஒருவர் என்னும் கூற்று மிகையானதொரு கூற்றல்ல.

ngiri2704@rogers.com
          
முகநூல் எதிர்வினைகள்:
Luthuf Ameen  உங்களது கட்டடகலை தமிழ் பதிவுகள் மிகவும் உதவியாக உள்ளது எங்களை போன்ற கட்டடகலை மாணவர்களுக்கு. மிக்க நன்றி

Giritharan Navaratnam:  நன்றி நண்பரே.தமிழில் கட்டடக்கலை, நகர அமைப்பு போன்ற விடயங்கள் பற்றிய நூல்கள், கட்டுரைகள் குறைவு. அதனால்தான் ஆரம்பத்தில் சுருக்கமாகக் கட்டடக்கலைக் குறிப்புகள் என்னும் தலைப்பில் கட்டக்கலை பற்றிய பல்வேறு விடயங்கள் பற்றித் தமிழில் எழுத வேண்டுமென்று எண்ணினேன். உங்களைப்போன்றவர்களுக்கு இவை பயனளிப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது. கருத்துகளுக்கு நன்றி.

நன்றி: பதிவுகள்.காம்

No comments:

கனடாவில் வெளியான முதலாவது நாவல் , கவிதைத்தொகுப்புகள் பற்றி...

அண்மையில் 'டொராண்டோ'வில் ஊடறு மற்றும் தேடகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையகா நிகழ்வினை நெறிப்படுத்திய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் சமூகச் செய...

பிரபலமான பதிவுகள்