Thursday, February 22, 2018

கவிஞர் புவியரசின் மொழிபெயர்ப்பில் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்..... வ.ந.கிரிதரன் -

'கரமசோவ் சகோதரர்கள்' தஸ்தயேவ்ஸ்கியின் மிகச்சிறந்த நாவல் மட்டுமல்ல. உலக இலக்கியத்தின் சிறந்த நாவலாகவும் கருதப்படுவது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பினை 'நியூ செஞ்சுரி புக்ஸ்' பதிப்பகமும் (கவிஞர் புவியரசு மொழிபெயர்ப்பிலும்) , காலச்சுவடு பதிப்பகமும் (நேரடியாக ருஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து 'கரமஸாவ் சகோதரர்கள் என்னும் தலைப்பில்) வெளியிட்டுள்ளன.

நம்மவர்கள் பலர் அவ்வப்போது ஏன் அவரைப்போல் அல்லது இவரைப்போல் எழுத முடியவில்லையே என்று கண்ணீர் வடிப்பதுண்டு. அவர்கள் முதலில் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை வாசிக்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்விதம் வாசித்தால் அவர்கள் ஏன் அவர்கள் குறிப்பிடும் படைப்பாளிகளால் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளைப்போன்ற படைப்புகளை வழங்க முடியவில்லை என்பது புரிந்து நிச்சயம் கண்ணீர் விடுவார்கள்.

மானுட வாழ்வின் இருப்பை, இருப்பின சவால்களை, இருப்பின் இன்பதுன்பங்களை, இருப்பின் நன்மைக்கும் தீமைக்குமிடையிலான மோதல்களை, இருப்பின் நோக்கம் பற்றிய தேடலை தஸ்தயேவ்ஸ்கி எழுதியதுபோல் வேறு யாருமே இதுவரையில் எழுதவில்லை என்பது இதுவரையிலான என் வாசிப்பின் அடிப்படையில் எழுந்த கருத்து. தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளின் ஒவ்வொரு பக்கத்தையும் ஒதுக்கித்தள்ள முடியாது. அது அவரது எழுத்தின், சிந்தனையின் சிறப்பு.

வக்கிரமான உணர்வுகளும், காமமும் மிகுந்த ஒரு பணக்காரத்தந்தை, அவரது மூன்று வகைக்குணவியல்புகளுள்ள மூன்று புத்திரர்கள், அவருக்கும் பிச்சைக்காரியொருத்திக்குமிடையில் முறை தவறிப்பிறந்ததாகக் கருதப்படும் இன்னுமொரு புத்திரன், அவரது வேலைக்காரன், மூன்று புத்திரர்கள் வாழ்விலும் புகுந்துவிட்ட பெண்மணிகள், அந்தப்பெண்மணியிலொருத்திக்கும் மூத்த புத்திரனுக்கும், தந்தைக்குமிடையிலுமான காதல், காம உணர்வுகள், மேலுமிரு சகோதரர்களுக்குமிடையில் வரும் இன்னுமொரு பெண்மணி , ஒரு துறவி என வரும் முக்கியமான பாத்திரங்களை உள்ளடக்கிப் பின்னப்பட்டிருக்கும் மகாநாவல் கரமசோவ் சகோதரர்கள்.


நாவலின் பின்பகுதியில் வரும் தந்தையின் மரணமும் , சந்தர்ப்பசூழ்நிலைகளால் மூத்தமகன் குற்றஞ்சாட்டப்படுவதும், உண்மையில் அக்கொலையின் சூத்திரதாரியான முறைதவறிப்பிறந்த புத்திரன் தற்கொலை செய்வதும், இருந்தும் நீதிமன்றத்தால் மூத்தவன் தண்டிக்கப்படுவதும், அது பற்றி நிகழும் நீதிமன்ற வாதிப்பிரதிவாதங்களும் வாசித்து அனுபவித்து மகிழ வேண்டியவை.

இந்நாவலின் பக்கங்களில் விரியும் மானுடத்தேடல் பற்றிய உரையாடல்கள், எண்ணங்கள், மானுடத்துயரத்திற்கான தீர்வு பற்றிய சிந்தனைகள் (மதமா அல்லது சோசலிசம் போன்ற அரசியல் தீர்வுகளா என்பவை பற்றிய), மானுடத்தின் உணர்வுரீதியிலான இயல்புகள் (நன்மை, தீமை, காதல், காமம் என்பவற்றால் சதா மோதல்களுக்குள்ளாகிக்கொண்டிருக்கும் உணர்வுகள் பற்றிய) பற்றிய தேடல் மிக்க எண்ணங்கள் என விரியுமிந்த நாவலை வாசிப்பதே ஓர் அனுபவம்.

தஸ்தயேவ்ஸ்கியைப்பற்றிக்குறிப்பிடும்போது அவரைப்போல் மனிதரைப்பற்றி இவ்வளவு விரிவாக எழுதியவர் யாருமிலர் என்று குறிப்பிடுவார்கள். அவரது குற்றமும், தண்டனையும், அசடன் மற்றும் கரமசோவ் சகோதரர்கள் ஆகிய நாவல்களைப்படிப்பவர்கள் அக்கூற்று எவ்வளவு தூரம் உண்மையென்பதைப்புரிந்து கொள்வார்கள்.

இந்நாவலை அதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கின்றேன். அதன் பின்னர் அண்மையில் கவிஞர் புவியரசுவின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த பிரதியை வாங்கி வைத்துவிட்டு ஒரு சில பக்கங்களை வாசித்துவிட்டு அவ்வளவு ஆர்வமின்றி வைத்திருந்தேன். மீண்டும் அண்மையில் மீண்டும் எடுத்து ஆறுதலாக வாசித்துப்பார்த்தேன். அப்பொழுதுதான் புரிந்துகொண்டேன் எவ்வளவு அற்புதமாக நாவலைத்தமிழில் கவிஞர் புவியரசு தந்திருக்கின்றார் என்பதை. இங்கு நான் நாவலை மூலத்துடன் ஒப்பிட்டு ஆராயவில்லை. தமிழ்ப்படைப்பின் மொழியின் சிறப்பை மையமாக வைத்துக்கூறுகின்றேன். கவிஞர் புவியரசு தமிழில் பாண்டித்தியம் பெற்றவராதலால், தேவையற்ற ஆங்கிலப்பிரயோகம் ஏதுமற்று, இலக்கணச்சிறப்பு மிக்க தமிழில் நாவலைத் தமிழில் வழங்கியிருக்கின்றார். அவரது தமிழில் நாவலை வாசிப்பதும் இன்பமே.


சு.ரா.வின் பார்வையில் தாஸ்தயேவ்ஸ்கியின் கனவு!

அண்மையில் சு.ரா.வின் தாஸ்தயேவ்ஸ்கி பற்றிய 'தாஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞன்' என்னும் கட்டுரையினை வாசித்தபொழுது என் கவனத்தை ஈர்த்த பகுதியினைக் கீழே பதிவு செய்கின்றேன்:

"பரிபூரணமான மனிதனை உருவாக்க வேண்டும் என்பது தாஸ்தயேவ்ஸ்கியின் பெரிய கனவாக இருந்தது.  பல்வேறு நாவல்களில் பல்வேறு கதாபாத்திரங்களைப் பரிபூரணத்தை நோக்கி நகர்த்த அவன் முயல்கிறான். ஆனால் தாஸ்தயேவ்ஸ்கி ஆசைகளால் ஆட்டுவிக்கப்படும் பக்தியுகக் காவியகர்த்தா அல்லன்.  அவன் ஒரு நாவலாசிரியன்; மற்றொரு விதத்தில் சொன்னால் யதார்த்த வாழ்க்கையைக் கண்டு சொல்ல வந்தவன். அதன் ஆழத்தையும் ஒளியையும் இருளையும் மனிதனின் பார்வை இன்று வரையிலும் படாத மூலைகளையும் பதிவு செய்ய வந்தவன். கரமசோவ் சகோதரர்களில் அலெக்சியையோ அல்லது 'மூடன்' என்ற நாவலின் இளவரசன் மிஷ்கின் என்ற கதாபாத்திரத்தையோ பரிபூரணத்தின் ஜீவ இயக்கமாக உருவாக்குவதில் அவன் வெற்றி பெறவில்லை. இந்தத்தோல்வி யதார்த்தத்தைப் பற்றிய அவனின் அறிவின் வெற்றியாகும்.  யதார்த்தத்தில் பரிபூரணம் என்பது இல்லாதவரையிலும்  படைப்பிலும் பரிபூரணம் என்பது சாத்தியமில்லை. உண்மையின் பாரத்தைச்சுமந்து செல்லும் கலைஞன் வாழ்வின் இயற்கை விதிகளுக்கு உட்பட்டே தொழில் புரிகிறான்."

சுராவின்,  ஒருவரின் படைப்புகளைப்பற்றிய இந்த அவதானிப்பு வாசிப்புக்கு இன்பமூட்டுவது; சிந்தனைக்கு வேலை தருவது. பரிபூரணமான மனிதரைக்காண முடியாது என்பதுபோல் பரிபூரணமான படைப்பாளியொருவரையும் காண முடியாது சு.ரா உட்பட. முரண்பாடுகள் எப்பொழுதும் கூடவே வருபவை. ஆனால் அவ்வகையான முரண்பாடுகளினூடு படைப்பாளியொருவரின் சிறப்பு என்பது அவரது ஆழ்ந்த வாசிப்பு, சிந்தனை, தர்க்கச்சிறப்பு மிக்க வாதங்கள் மற்றும் பாவிக்கப்படும் மொழி  ஆகியவற்றில்தான் தங்கியுள்ளது. சுராவும் அவ்வகையான படைப்பாளிகளிலொருவர் என்பதை வெளிப்படுத்தும் சான்றுகளிலொன்றுதான் மேலுள்ள அவரது தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் பற்றிய அவதானிப்பும்.

No comments:

கனடாவில் வெளியான முதலாவது நாவல் , கவிதைத்தொகுப்புகள் பற்றி...

அண்மையில் 'டொராண்டோ'வில் ஊடறு மற்றும் தேடகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையகா நிகழ்வினை நெறிப்படுத்திய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் சமூகச் செய...

பிரபலமான பதிவுகள்