அத்தியாயம் ஒன்று: அர்த்தமும், அர்த்தமின்மையும்!
சுதந்திரன் அவன் வசித்து வரும் தொடர்மாடிக் கட்டடத்தின் , அப்பார்ட்மென்டின் பல்கணியிலிருந்த சாய்வு நாற்காலியில் வந்தமர்ந்தபோது நன்கு இருண்டு விட்டிருந்தது. வானம் தெளிவாகவிருந்தது. நகரத்து ஒளி மாசிலிருந்து தப்பி நட்சத்திரக்கன்னியர்கள் சிலர் தொலைவிலிருந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தனர். தொலைவிலிருந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டிருக்கும் சுடர்க்கன்னியர்கள் வழக்கம்போல் அவனுக்கு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தினர். அவர்கள் ஓரிடத்திலிருந்து தன்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டுவதைப்போல் அவன் அப்போதெல்லாம் கருதிக்கொள்வான். அச்சிந்தனையே அவர்கள் மேல் அவனது ஈர்ப்பை மேலும் அதிகமாக்கியது. ஆனால் உண்மையில் அவர்கள் ஓரிடத்தில், ஒரே சமயத்திலிருந்து அவனை நோக்க்கவில்லையென்பதையும் உணர்ந்திருந்தான். காலத்தின் அடுக்குக்களின் வெவ்வேறு அடுக்குகளிலிருந்து அவர்கள் அவனை நோக்கிக் கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் அவர்கள் ஒவ்வொருவரையும் சுற்றி வெறுமை கலந்த விரி வெளி கவிந்திருந்தது. தனிமையின் வெறுமைக்குள் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதிலிருந்துகொண்டுதான் அவர்கள் உற்சாகம் மிக்கர்வகளாகக் கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள். அதனால் அவனுக்கு அவர்கள் மேலான மதிப்பும், நாட்டமும் அதிகரித்தது.
எவ்விதம் அவர்களால் தனிமைக்குள் இனிமை காண முடிகின்றது? ஒருவிதத்தில் தனக்கும் அவர்களுக்குமிடையில்தான் என்ன வேறுபாடு? தானும் ஒருவகையில் அவர்களைப்போன்றுதானே இருக்கின்றேன் என்றும் எண்ணிக்கொண்டான். தான் மட்டுமே அவன் வசிக்கும் இக்கோளில் உள்ளவர்கள் அனைவருமே இப்படித்தானே இருக்கின்றார்கள் என்றும் இவ்விதமான சமயங்களில் எண்ணிக்கொள்வான். அன்றும் எண்ணிக்கொண்டான்.
இரவுகளில் நட்சத்திர வானைப்பார்த்து மெய்ம்மறக்கும்
இயல்பு அவனுக்கு அவனது பால்யப் பருவத்திலிருந்தே அவனுக்கிருந்தது.
அதற்குக் காரணம் அவனது தந்தைதான். பூமத்தியரேகைக்கண்மையிலிருந்த
வெப்பமண்டலத் தீவொன்றில் பிறந்தவன் அவன். பகலும், இரவும் சமமாகப்
பிரிக்கப்பட்ட பிரதேசத்தில் ,இரவுகளில் அவன் தந்தை சாய்வு நாற்காலியில்
அண்ணாந்து சாய்ந்தபடி விரிந்து ,பரந்திருக்கும் இரவு
வானைப்பார்த்திருப்பார். அவரது சாறத்தொட்டிலுக்குள் படுத்திருந்தபடி அவனும்
அண்ணாந்து பார்த்தபடி , இரவு வானை, அங்கு கண்சிமிட்டும் நட்சத்திரக்
கன்னியரை இரசிப்பான்.
காலம் எவ்வளவு தூரம் விரைந்தோடி விட்டது?
பருவ மழை பொழியும் வெப்பமண்டலத்திலிருந்து , பருவப்பனி பொழியும் குளிர்
மண்ணுக்கு அவனது இருப்பு மாறி ஆண்டுகள் பல ஓடிவிட்டிருந்தன. போரும்,
சமூக,ம் அரசியல், பொருளியற் சூழலும் அவன் இருப்பை நிர்ணயித்ததன் விளைவு
அவனது புலம்பெயர்தலுக்கான முக்கிய காரணம்.
இந்த இட மாற்றம்
அவனைப்பெரிதும் பாதித்ததா? இல்லையென்றே கூற வேண்டும். அங்கிருந்தால்
எப்படியிருப்பானோ, எப்படிச் சிந்திப்பானோ அவ்விதமே இங்கும் அவன்
இருந்தான். சிந்திக்கின்றான். இருப்பை எதிர்கொள்கின்றான். உண்மையில்
நவீனத் தொழில் நுட்ப வசதிகள் இருப்பை மிகவும் எளிதாக்கியிருந்தன என்றும்
கூறலாம். ஒரு விதத்தில் இருப்பைப் பொருளியல்ரீதியில் கொண்டு நடத்தத் தொழில்
நுட்பம் மிகவும் உதவியிருக்கின்றதென்றே கூற வேண்டும். சமூக ஊடகங்கள்
அவனைப் பொருளியல்ரீதியில் தாங்கிப்பிடிக்கும் தூண்களாக மாறியிருந்தன
என்றும் கூறலாம். வீட்டிலிரிந்து சுய தொழில் முனைவனாக வேலையாற்றவும் தொழில்
நுட்பம் வழி சமைத்தது. இப்போது மேலதிகமாகப் பொருள் ஈட்டவும் வழி
காட்டியிருக்கின்றது. இது அவனது சுய சிந்தனைகளுக்கு , சுய விருப்புகளுக்கு
மேலும் உரமூட்டிச் சிறகடிக்க வைத்திருக்கின்றது.
இருப்பு பற்றிய
தேடல் எப்போதும் அவன் இருப்பினோர் அம்சமாகத்தான் இருந்திருக்கின்றது.
இருந்து வருகின்றது. இருக்கும் வரையிலும் இருந்து வரும்.
அர்த்தத்துடன்
இங்கு வந்தோமா? அர்த்தமின்றி வந்தோமா? அர்த்தமின்றி வந்தோமென்றால்
அர்த்தமுண்டா ? இருப்புக்கு அர்த்தமுண்டா? இடை விடாமல் அவன் இருப்பில்
இன்றுவரை தொடர்ந்து வரும் வினா. இதற்கான விடைதான் என்ன? அர்த்தமுள்ள விடை
இதற்குண்டா? அல்லது இல்லையா? அர்த்தத்தடன் வந்தோமென்றால் ஏன் வந்தோம்?
அர்த்தம்தான் என்ன? அர்த்தமில்லையென்றால் எதற்கு வந்தோம்? எதற்கு இந்த
இருப்பு?
சிந்தனைகள் சுதந்திரனைத் துரத்துகின்றன. விடாமல்
துரத்துகின்றன. இருப்புக்கு ஒரு சாரமுண்டா? சாரம்தான் இருப்பை
நிர்ணயித்ததா? அல்லது இருப்புத்தான் சாரத்தின் அடித்தளமா? இருப்பற்று
சாரமில்லையா? ஏன்? ஏன்? ஏன்?
இந்தக்கேள்வி எழுந்தால் சிந்தனைக்கொரு
முடிவே இல்லை. விரிந்திருக்கும் காலவெளி நிரந்தரமானது அல்ல.
இயங்கிக்கொண்டிருப்பது. இடைவிடாது , ஓய்வேதுமற்று இயங்கிக்கொண்டிருப்பது.
ஒவ்வொரு கணமும் இடம் மாறிக்கொண்டிருப்பது. இதில் நிலைத்து நிற்பதென்று
எதுவுமேயில்லை இயக்கம் தவிர. மாறுதல்கள் தவிர. இதில் அவனது இருப்பு என்ன
அர்த்தம் இருக்க முடியும்?
இருப்பு தற்செயலானது. முக்கியத்துவம்
அற்றது. தற்செயலான ஒன்றினுள், முக்கியத்துவம் அற்ற ஒன்றினுள் இருக்கும்
இருப்புக்கு அர்த்தம் கண்டு இருப்பதில் ஏதும் அர்த்தமுண்டா? ஆனால்
அப்படியும் இருக்காவிட்டால் இருக்கும் வெறுமைக்குப் பதில், அப்படி அர்த்தம்
கண்டு இருப்பதால் உருவாகும் அர்த்தம் இருக்கும்வரை திருப்தியை,
இன்பத்தைத் தராதா? தரும் அல்லவா? சுதந்திரனின் சிந்தனைகள் இவ்விதமும்
இருப்பது அவன் இருப்பின் இயல்பு.
இவ்விதமாக இருப்பு பற்றிய
சிந்தனைகளில் மூழ்கிக் கிடந்தவன் இறுதியில் வழக்கம்போல் ஒரு முடிவுக்கு
வந்தான். இருப்புக் காரணம் அர்த்தம் அல்ல. அர்த்தத்துக் காரணம் இருப்பே.
சாரம் அற்ற இருப்புக்குச் சாரம் தருவது இருப்பே. இதுவே சரியானது என்று
தனக்குத்தானே ஒரு தடவை கூறிக்கொண்டான் சுதந்திரன். இவ்விதம் சுதந்திரன்
கூறிக்கொண்டாலும் அவனது இருப்பு பற்றிய விசாரம் இத்துடன் நிறைவுக்கு வந்து
விடுவதில்லை. அடுத்த நாளிரவும் மீண்டும் அவன் வந்து இந்தச் சாய்வு
நாற்காலியில் சாய்ந்து , இரவு வானை நோக்கும்போது முதலிலிருந்து ஆரம்பித்து
விடும். முடிவில் இவ்விதம் முடிந்தாலும் , அது அப்பொழுதுக்கான ஒரு முடிவே.
தற்காலிகமான தீர்வே. மீண்டும் மற்றோர் இரவில் மீண்டும் அவ்விசாரம்
தொடங்கும் வரையிலான தற்காலிகமானதொரு தீர்வே.
இவ்விதமாகச் சாய்வு
நாற்காலியில் சாய்ந்திருந்த சுதந்திரனை நித்திராதேவி பூரணமாக ஆட்கொண்டபோது,
அவன் நிலையைக் கண்டு தொலைவில் , கவிந்திருந்த வெறுமைக்குள்ளிருந்த,
காலத்தின் வெவ்வேறு அடுக்குகளில் வாசம் செய்து கொண்டிருந்த நட்சத்திரக்
கன்னியர்கள் கெக்கலி கொட்டிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
[தொடரும் ]
girinav@gmail.com
* டிஜிட்டல் ஓவியம் - கூகுள AI

No comments:
Post a Comment