Sunday, June 30, 2019

அஞ்சலி: எழுத்தாளர் திருமலை ஷகி மறைவு.


எழுத்தாளர் திருமலை எம்.ஏ.ஷகியின் மரணச்செய்தியை முகநூல் வாயிலாக அறிந்தேன். கொடுநோயில் வாடி உதிர்ந்திருக்கின்றார். அண்மையில்தான் என் நட்பு வட்டத்தில் இணைந்திருந்ததால் அதிகம் இவரது கவிதைகளை வாசிக்கவில்லை. ஆனால் இவர் பங்கு பற்றும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை அவ்வப்போது பார்த்திருக்கின்றேன். பலரும் இவரது கவிதைகளை இவரது மறைவையொட்டி முகநூலில் பகிர்ந்துள்ளார்கள். இருப்பின் நிலையாமை பற்றி பல கவிதைகளை எழுதியிருப்பதை அறிய முடிகின்றது. கவிதைகளுக்கான இவரது செறிவான மொழி இவரது கவித்திறனை வெளிப்படுத்துகின்றது. இவரது இளவயது மறைவு துயர் தருவது. மின்னலைப்போல் ஒளி வீசி மறைந்திட்ட இலக்கிய ஆளுமைகள் வரிசையில் திருமலை ஷகியும் இணைந்துவிட்டார். இவர் தன் எழுத்துகளூடு இனியும் கலை, இலக்கியப் பரப்பில் நிலைத்து நிற்பார். இவரது இழப்பால் துயருறும் அனைவர்தம் துயரிலும் பங்குகொள்கின்றேன்.

அவர் நினைவாக அவரது கவிதையொன்று:

அஞ்சலி: முத்தையா சகாதேவன்


முத்தையா சகாதேவன் ஓர் அப்பாவி. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த இவர் , கடந்த 15 வருட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அண்மையில் விடுதலையைக் காணாமலே சிறையில் மரணமானார். நாட்டின் அரசில் அமைப்பானது எவ்விதம் தனி ஒரு மனிதனின் வாழ்வை ஆட்டிப் படைக்கின்றது; சீர்குலைக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் மரணம் இது. தனி மனிதரின் இருப்பானது இவ்விதமான அரசியல் அமைப்பொன்றினால் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் புனைவுகள் பல வெளியாகியுள்ளன. அவற்றில் காப்காவின் 'விசாரண' நாவலும் முக்கியமானது. முத்தையா சகாதேவனின் நிலையும் அத்தகையதுதான். சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணைகளேதுமற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான இவரது மரணம் தேவையற்றதொன்று. இவரைப்போன்ற பல முத்தையாக்கள் இலங்கைச் சிறைகளில் வாடுகின்றார்கள்.
அரசியல் கைதி எழுத்தாளர் சிவ. ஆரூரனின் 'யாழிசை'!


அண்மையில் பதுளையைச் சேர்ந்த முத்தையா சடகோபன் என்னும் அப்பாவி, அரசியல் கைதி, எவ்விதக் குற்றங்களும் செய்யாத நிலையில், பதினான்கு வருடங்கள் சிறை வாசம் அனுபவித்து சிறையில் மரணமடைந்தது யாவரும் அறிந்ததே. இவரது மரணம் இதுவரை விடுதலையாகாமல் சிறைகளில் ஆண்டுக்கணக்காக வாடும் அரசியல் கைதிகள் விடயத்தை மீண்டும் அனைவரின் கவனத்துக்கும் கொண்டுவந்துள்ளது. இலங்கையின் அனைத்துப்பகுதி அரசியல்வாதிகளும், மானுட உரிமை அமைப்புகளும் ஓன்றிணைந்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த வேண்டிய தருணமிது.
அண்மையில் என்னுடன் முகநூலில் நட்பராக இணைந்ததன் பின்னரே இன்னுமோர் அரசியல் கைதியைப்பற்றி அறிந்துகொண்டேன். இவர் மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி, இவர் ஓர் எழுத்தாளர். சிறையிலிருந்தபடியே இவர் எழுதிய 'யாழிசை' என்னும் நாவலுக்கு இலங்கை அரசின் தேசிய சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது. இவர் மொறட்டுவைப்பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி. இவர்தான் எழுத்தாளர் சிவ. ஆரூரன். இவர் இன்னும் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரைப்பற்றி , இவரது நாவலான 'யாழிசை' நாவல் பற்றி அறிய வேண்டுபவை பல உள்ளன. இவரது நாவலான 'யாழிசை' பற்றி எழுத்தாளரான மருத்துவர் எம்.கே.முருனானந்தன் எழுதிய முகநூற் பதிவு கீழே:
************************************************************************************************************
அரசியற் கூண்டுப் பறவை சிவ ஆருரன் அவர்களின் நாவல். ‘யாழிசை’ ; போர் தின்ற வாழ்வின் ஒரு முகம்.  - எம்.கே.முருனானந்தன் -

எமது வாழ்வானது போர் தின்ற வாழ்வு. சிலரது வாழ்வு முற்று முழுதாக விழுங்கப்பட்டு காணாமலே போய்விட்டது. வேறு சிலரது கொத்தி குதறிச் சிதைக்கப்பட்டு அழிக்க முடியாத வடுக்களோடு நகர்கிறது. அந்த வாழ்வின் இழப்புகளால் மனம் சோர்ந்து அழுது புலம்பி முன்னகர முடியாது அழுந்தி மாய்பவர்கள் பலர். அவற்றைச் சவால்களாக கொண்டு அதி தீவிர முயற்சிகளுடாக மற்றவர்களுக்கு நாம் சளைத்தலர்கள் அல்ல என துணிச்சலோடு வாழ்ந்து காட்டுபவர்கள் சிலர். இந்த நாவல் அதற்கு ஒரு சான்று.

Wednesday, June 5, 2019

எழுத்தாளர் காத்யானா அமரசிங்கவின் யாழ் நூலகம் பற்றிய பத்தி பற்றி...

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நாளான மே 31 பற்றி முகநூலுட்படப் பல்வேறு ஊடகங்களில் அது பற்றிய பதிவுகள் பலவற்றைப்பார்த்தோம். இன, மத , மொழி வேறுபாடின்றிப் பல்லின மக்களும் நூலக எரிப்புக்காக மனம் வருந்துகின்றார்கள். சிங்கள எழுத்தாளர் காத்யானா அமரசிங்க அவர்களும் அவர்களிலொருவர். இலங்கைத் தமிழ் மக்களின் உணர்வுகளைப்புரிந்துகொண்ட சிங்கள மக்களில், எழுத்தாளர்களிலொருவர். அண்மையில் வெளியான அவரது நாவலும் கூட அவரது வடக்குப் பயணத்தின்போது அவர் கேட்டு, அறிந்த , அனுபவங்களை மையமாக வைத்து எழுதப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் இன்று புதன் கிழமை வெளியான (ஜூன் 5, 2019) 'ரச' பத்திரிகையின் புதன் கிழமைக்கான பதிப்பில் 'எரியும் இதயம்' என்னும் தலைப்பில் யாழ் நூலக எரிப்பு பற்றி எழுதியுள்ளார். இக்கட்டுரை ஏரிக்கரை நிறுவனம் வெளியிடும் இப்பத்திரிகையின் புதன் கிழமைக்கான பதிப்பில் வாரம் தோறும் அவர் எழுதும் பத்திக்கான இவ்வாரக் கட்டுரையாகும்.

இக்கட்டுரையில் அவர் நூலகம் எரியுண்டதன் பின் ஊடகங்களில் வெளியான நூலகர் ரூபாவதி நடராஜா அவர்கள் நூலகப் பணியாளர்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் பற்றிக் குறிப்பிடுகையில் 'நூலகர் ரூபாவதி நடராஜாவின் வெறுமையான பார்வை என் இதயத்தை வேதனையால் எரிக்கின்றது' என்று குறிப்பிட்டுள்ளார். இப்பந்தியில் நூலக எரிப்பு பற்றிய எனது கருத்துகளையும் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையில் வெளியான எனது கருத்துகளில் நூலகம் எவ்வாறு என் மாணவப்பருவத்தில் உதவியது என்பது பற்றியும், அங்கு நான் வாசித்த பல் துறை நூல்கள், மொழிபெயர்ப்புகள் பற்றியும் குறிப்பிட்டதுடன் 'நூலகங்களே எனது ஆலயங்கள்' என்ற எனது கருத்தினையும் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்பட இயக்குநர் 'புதியவன் ராசையா'வுடனோர் அந்திப் பொழுது!

இன்று மாலை (ஜூன் 4, 2019) ஸ்கார்பரோவில் மார்க்கம் & மக்னிகல் பகுதியில் 2901 மார்க்கம் றோட் என்னும் முகவரியில் அமைந்துள்ள , நட்பான பணியாளர்களைக் கொண்ட 'தோசா ராமா' உணவகத்தில் நண்பர் எல்லாளனுடன் ('ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' நூலாசிரியர்) திரைப்பட இயக்குநர் புதியவன் ராசையாவைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தனது திரைப்படங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவரான புதியவன் ராசையா அவர்கள் தற்போது அவரது திரைப்படமான 'ஒற்றைப் பனைமரம்' திரைப்படத்தினைக் கனடாவில் திரையிடுவதற்காகத் தற்சமயம் கனடாவுக்கு வருகை தந்துள்ளார். ஏற்கனவே இவர் 'மாற்று' (2001), 'கனவுகள் நிஜமானால்' (2003), 'மண்' (2005) & 'யாவும் வசப்ப்டும்' (2015) ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை RSSS என்னும் தமிழக நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்.  படத்துக்கு இசையமைத்துள்ளவர் அண்டாவக் காணோம், காஞ்சனா, சதுரங்க வேட்டை 2 போன்ற பல படங்களில் பணியாற்றிய அஷ்வமித்ரா. படத்தின் ஒளிப்பதிவாளர் இலங்கையைச் சேர்ந்த மகிந்த அபேசிங்க. இவர் சர்வதேச விருது பெற ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தைத் தொகுத்திருப்பவர் சுரேஷ் அர்ஸ். இத்திரைப்படத்தின் முக்கிய பாத்திரங்களில் புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன் மற்றும் தனுவன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 37 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் தேர்வாகி, இசை, ஒளிப்பதிவு , சிறந்த நடிப்பு போன்றவற்றுக்காக விருதுகளைப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Sunday, June 2, 2019

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஏழு (51 - 56)

51. தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவல் வெளியீட்டு நிகழ்வு குறித்து...

தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நூல் வெளியீடு சென்றிருந்தேன், கனடாத்தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தரப்பினரையும் காண முடிந்தது. நிகழ்வுக்குத் தலைமை தாங்கவென்று யாருமில்லை. இதற்கொரு காரணத்தைத்தனது ஏற்புரை/நன்றியுரையில் தமிழ்நதி தெரிவித்தார். அதாவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகளை ஆண்கள் ஆக்கிரமித்திருப்பார்கள். அதற்குப் பதிலாகவே தனது நூல் வெளியீடு எந்தவிதத்தலைமையுமற்று நடை[பெற்றதாக என்று. தலைமையில்லாத நிகழ்வினைச் சிறப்பாக்குவதற்காகத் தன்னுடன் இணைந்த தனது சிறு வயதுத்தோழியர்களிலொருவரான அன்பு-அன்பு நன்கு செயற்பட்டதாகக்குறிப்பிட்டார். ஏன் பெண் ஆளுமையொருவரின் தலைமையில் நிகழ்வினை நடாத்தியிருக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்படுவதைத்தவிர்க்க முடியவில்லை. வழக்கமாக ஆண்களின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறுவதால், பெண்களுக்குரிய இடம் கிடைக்கவில்லையென்று கருதும் தமிழ்நதி பெண்களின் தலைமையில் நிகழ்வினை நடத்த வந்த வாய்ப்பினைத் தவற விட்டுவிட்டாரே?

நிகழ்வு நடைபெற்ற மத்திய ஸ்கார்பரோ சமூக நிலையம் கலை, இலக்கிய ஆர்வலர்களால் நிரம்பி வழிந்தது.  எழுத்தாளர்களான அ.யேசுராசா, கவிஞர் கந்தவனம், கற்சுறா, ரதன், மா.சித்திவிநாயகம், வல்வை சகாறா, கவிஞர் அவ்வை, எஸ்.கே.விக்கினேஸ்வரன், கவிஞர் அ.கந்தசாமி, குரு அரவிந்தன் தம்பதியினர், முனைவர் பார்வதி கந்தசாமி, டானியல் ஜீவா, தீவகம் வே.ராஜலிங்கம், ந.முரளிதரன், தேவகாந்தன், பிரதிதீபா தில்லைநாதன் சகோதரிகள்,..,.. என்று பலரைக் காண முடிந்தது.

நிகழ்வில் ஜான் மாஸ்ட்டர், பொன்னையா விவேகானந்தன், முனைவர் அ.ராமசாமி, முனைவர் இ.பாலசுந்தரம், அருண்மொழிவர்மன், தமிழ்நதியின் தோழி அன்பு, தமிழ்நதி ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியினை எழுத்தாளர் கந்தசாமி கங்காதரன் தொகுத்து வழங்கினார்.

பொன்னையா விவேகானந்தன் நல்லதொரு பேச்சாளர். தமிழ்நதி கவிஞர் கலைவாணி ராஜகுமாரனாக அறியப்பட்ட காலகட்டத்திலிருந்து தான் அறிந்த கவிஞரின் கவிதைகளை உதாரணங்களாக்கித் தன் உரையினை ஆற்றித் தமிழ்நதி பற்றிய நல்லதோர் அறிமுகத்தை வழங்கினார். அவர் தனதுரையில் 'கவிஞர்கள் சிலரே மெட்டுக்குப் பாடல்களையும், நல்ல கவிதைகளையும் எழுத வல்லவர்கள். அவ்வகையான கவிஞர்கள் கவிஞர் சேரனும், கலைவாணி ராஜகுமாரனுமே' என்னும் கருத்துப்பட தன் கருத்துகளைத்தெரிவித்தார். அத்துடன் ஆரம்பத்தில் கலைவாணி ராஜகுமாரன் தேசியம் சார்ந்தவராக இருந்த காரணத்தால் ஏனைய இலக்கியவாதிகள் பலரால் புறக்கணிக்கப்பட்டதாகவும் குறைப்பட்டுக்கொண்டார்.

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஆறு : அறிவியற் கட்டுரைகள் (46 - 50)

46. ஆறுதலற்று விரையும் அண்டப் பொருட்கள்! பிரபஞ்ச வடிவம் பற்றிய புரிதல்கள்!

இரவு நேரங்களில் அண்ணாந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப் பாருங்கள். கோடிக் கணக்கில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, கிரகங்களை உபகிரகங்களைக் கவனியுங்கள். அதே சமயம் இன்னும் ஒன்றையும் மனதிலே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு செக்கனும் பிரமாண்டமானதொரு வேகத்தில் விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சமொன்றின் சிறியதொரு கோணத்தில் விரைந்து கொண்டிருக்கும் சிறியதொரு கோளொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதே அது. நெஞ்சினைப் பிரமிக்க வைத்து விடுகின்றதல்லவா! அப்படியானால் நம்மால் ஏனிந்த வேகத்தை உணர முடியவில்லை? மூடியதொரு புகையிரதத்தினுள் இருக்குமொருவருக்கு எவ்விதம் புகையிரதம் வேகமாகச் செல்வது தெரியாதோ அது போன்றதொரு நிலையில் தான் எம்முடைய நிலையும். பூமியைச் சுற்றிப் படர்ந்திருக்கும் வாயு மண்டலம்தான் எம்மை மூடிய புகையிரத்தைனைப் போல் இக்கோளினை வைத்திருக்கின்றது. அதனால் தான் எம்மால் எமது வேகத்தைக் கூட உணர முடியாமலிருக்கின்றது. இன்னும் ஒரு காரணம் - எம்மைச் சுற்றியுள்ள சுடர்களுக்கும், கிரகங்களுக்குமிடையிலான தொலைவு மிக மிக அதிகமானது. இத் தொலைவும் எமது வேகத்தினை உணரமுடியாதிருப்பதற்கு இன்னுமொரு காரணம். புகைவண்டியினுள் விரையும் ஒருவருக்கு அருகில் தெரியும் காட்சிகள் வேகமாகச் செல்வது போலும், மிகத் தொலைவிலுள்ள காட்சிகள் ஆறுதலாக அசைவது போலவும் தெரிவதற்கு அடிப்படைக் காரணம் தொலைவு தான்.

இவ்விதம் எல்லையற்றுப் பரந்து கிடக்கும் இப்பிரபஞ்சம் பற்றி அறிவதன மூலம் மனிதர்கள் தம் பிறப்பின் காரணத்தின் சூத்திரத்தை அறிவதற்கு முயன்று கொண்டிருக்கின்றார்கள். அரிஸ்டாட்டில், கலிலியோ, நியூட்டன் , ஐன்ஸ்டைனென்று பிரபஞ்சம் பற்றிய கோட்பாடுகள் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன.

இந்த வகையில்தான் 'அலெக்ஸாண்டர் பிரிட்மென்'னுடைய (Alexander Friedman) (1920) பிரபஞ்சம் பற்றிய கருத்துகளையும் பார்க்க வேண்டும். ஐன்ஸ்டைனின் கணித சூத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்த பிரிட்மான் பிரபஞ்சத்தின் உருவ அமைப்பு பற்றிய கோட்பாடுகளை விபரித்தார். அலெக்ஸாண்டர் பிரிட்மான் பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அளவு பற்றி ஆராய்ந்தார். இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளானது வெளியை வளைக்கும் தன்மை படைத்தது. எனவே இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அளவு பற்றி ஆராய்ந்த பிரிட்மான் 'இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் மொத்த அளவானது இப்பிரபஞ்சத்திற்கு ஒரு வடிவினை, உருவ அமைப்பினை உருவாக்கும் அளவுக்குப் போதுமானது' என எடுத்துக் காட்டினார்.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...