Monday, October 23, 2023
(பதிவுகள்.காம்) மராட்டிய எழுத்தாளர் சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி"யின் அடையாளங்களைத் தேடி... - புதியமாதவி, மும்பை -
மராட்டிய எழுத்தாளர் சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி" பற்றி , பதிவுகள் இணைய இதழில் 2008இல் வெளியான கட்டுரை. 'பதிவுகளில் அன்று' பகுதியில் ஆவணப்படுத்தும் பொருட்டு மீள்பிரசுரமாகின்றது.
நான் சபிக்கிறேன்
உன்னை
உன் எழுத்துக்களை
உன் கலாச்சாரத்தை
உன் வேஷத்தை.. ( நாம்தேவ் தசள் - கோல்ப்பிதா கவிதைகளிருந்து)
மராட்டிய மாநிலத்தில் ஒரு புதிய அலை இதுவரை எழுதப்பட்டிருந்த இலக்கியத்தின் பக்கங்களைப் புரட்டி, இதுவரை நிறுவப்பட்டிருந்த சமூகத்தின் அடையாளங்களை வீசி எறிந்து ஒரு கோட்டோவியத்தை வரைந்தது. 1960களில் ஏற்பட்ட சிறுபத்திரிகைகளின் வளர்ச்சி, மும்பையில் தொழில்மயம், அந்தத் தொழில்மயத்தில் எழுந்த புதிய தொழிலாளர் வர்க்கம், தொழிற்சங்கங்கள், அதுசார்ந்த மார்க்சிய சிந்தனைகள் இந்தப் பின்புலத்தில் 1972ல் தலித் பைந்தர் அமைப்பு .. என்று தொடர் அலையாக எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். அந்தக் குரலைப் பதிவு செய்திருக்கும் தலித் இலக்கியங்கள். அதிலும் குறிப்பாக 1980களில் தலித் எழுத்தாளர்களின் 'தன் வரலாற்று" பாணியிலான தலித் வரலாறு மார்க்சிய சிந்தனைகளையும் சேர்த்தே புரட்டிப் போட்டது.
தலித் எழுதாளர் தயாப்வாரின் "பலுட்டா " -சமூக உரிமை (1978) லஷ்மண் மானேயின் " யுபரா"- அந்நியன் (1980) லஷ்மண் கெய்க்க்வாட்டின் "யுசல்ய -அற்பத்திருடன் (1987) பெண் தலித் எழுத்தாளர் பேபி காம்ப்ளேயின் 'ஜின் அமுச்" (இப்படியாக எங்கள் வாழ்க்கை) இவை அனைத்தும் தலித் தன் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடத்தக்கன. இக்காலக்கட்டத்தில் வெளிவந்த சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி" வெளிவந்தவுடன் மிகவும் பேசப்பட்ட ஒரு பதிவு. அக்கர்மஷி என்றால் ஜாதிபிரஷ்டம் செய்யப்பட்டவன் - THE OUTCASTE என்று பொருள். ஜாதிகளால் விலக்கிவைக்கப்பட்டவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
டொராண்டோ'வில் ஜெயமோகன்! - வ.ந.கிரிதரன் -
21.10.2023 அன்று 'தமிழ் இலக்கியத் தோட்ட'த்தின் ஏற்பாட்டில் மார்க்கம் மாநகரசபைக் கூடத்தில் நடைபெற்ற எழுத்தாளர் ஜெயமோகனின் உரையினைக் கேட்பதற்காக எழுத்தாளர் தேவகாந்தன் மற்றும் கடல்புத்திரனுடன் சென்றிருந்தேன். நிகழ்வில் கலை, இலக்கிய மற்றும் அரசியல் ஆளுமைகளைக் காண முடிந்தது. குறிப்பாக எழுத்தாளர் மொன்ரியால் மைக்கல், எழுத்தாளர் 'காலம்' செல்வம், எழுத்தாளர் க.நவம், 'அசை' சிவதாசன், எழுத்தாளர் ஊடகவியலாளருமான கனடா மூர்த்தி, எழுத்தாளர் டி.செ. தமிழன், எழுத்தாளர் குரு அரவிந்தன், எழுத்தாளர் அ.முத்துலிங்கம், எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், 'விளம்பரம்' மகேந்திரன், 'தமிழர் தகவல்' திருச்செல்வம், எழுத்தாளர் மனுவல் ஜேசுதாசன், 'உதயன்' லோகேந்திரலிங்கம் என்று பலரைக் காண முடிந்தது.
Tuesday, September 19, 2023
(பதிவுகள்.காம்) அமெரிக்கா - ஞானம் இலம்பேர்ட் -
எனது 'அமெரிக்கா' (1996) சிறுகதைத்தொகுப்பு பற்றி 'டொரோண்டோ, கனடாவில் ஒர் இலக்கியக் கலந்துரையாடல் , தேடகம் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்ணூறுகளில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு 'அமெரிக்கா' பற்றி உரையாற்றிய நாடகவியலாளரும் , கலை, இலக்கியத்திறனாய்வாளருமான ஞானம் இலம்பேட்டின் உரையின் முக்கிய பகுதிகள் இவை. பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரை. பகிர்ந்துகொள்கின்றேன்.
சமூக நிகழ்வுகளை ஒரு தளத்தில் வைத்து அந்த நிகழ்வுகளுக்கு ஓர் உருவம் கொடுப்பதிலும், அவற்றைப் பல்லின ஆக்கங்கள் செய்வதிலும் எமக்குப் பெரும் பங்குண்டு. அந்த நிகழ்வுகளுக்குக் கொடுத்த உருவம்தான் இந்த அமெரிக்கா என்ற இச்சிறு நூலாகும். இதிலுள்ள ஏழு சிறுகதைகளையும், குறுநாவலையும் படிக்கிறபொழுது Georgi Plekhanov இன் ஒரு கூற்று ஞாபகத்துக்கு வருகின்றது. அவர் சொல்கிறார்:
"மனிதன் தன்னைச் சுற்றியுள்ள யதார்த்தத்தின் செல்வாக்கில் அனுபவித்துள்ள உண்ர்ச்சிகளையும், எண்ணங்களையும் தனக்குள் மீண்டும் எழச்செய்து அவற்றைத் திட்டவட்டமாக உருவங்களில் வெளியிடும்போது கலை பிறக்கிறது"
Thursday, August 31, 2023
(பதிவுகள்.காம்) எழுத்தாளர் நா. சோமகாந்தனின் (ஈழத்துச் சோமு) அறியப்படாத நாவல் 'களனி நதி தீரத்திலே' - வ.ந.கிரிதரன் -
கதைச்சுருக்கம்: கதை சொல்லியும் அவன் நண்பன் நடராஜனும் பால்ய காலத்திலிருந்து நண்பர்கள். இருவரும் எஸ்.எஸ்.சி சித்தியடைந்து கொழும்பில் வேலை கிடைத்துச் செல்கின்றார்கள். ஒன்றாகத் தங்கியிருக்கின்றார்கள். இருவரும் களனி கங்கை நதிக்கரையில் றோசலின் என்னும் அழகியொருத்தியைச் சந்திக்கின்றார்கள். அதன் பின் ஒரு நாள் வேலைக்குச் செல்லும் நண்பர்கள் வழக்கமாகச் செல்லும் ட்ரொலி வருவதற்கு நேரமெடுக்கவே 'ராக்சி' பிடித்துச் செல்லத்தீர்மானிக்கிறார்கள். றோசலின் அன்று புதிய வேலை கிடைத்துச் செல்வதற்காக 'ட்ரொலி'யை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள். அவளுக்கும் நேரமாகிவிடவே இவர்களிடம் தனக்கும் 'ராக்சி'யில் இடம் தர முடியுமா என்று கேட்கின்றாள். இவர்களும் சம்மதித்து அவளுக்கு உதவுகின்றார்கள். அன்று முதல் மூவரும் நண்பர்களாகின்றார்கள்.
அவர்களுக்கிடையில் நட்பு வளர்கிறது. அவள் இருவருடனும் சகஜமாகப் பழகி வருகின்றாள். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் அவள் பேச்சு, செயல்களை வைத்து அவள் மீது காதல் கொள்கின்றார்கள். ஒரு சமயம் கதை சொல்லி உடல் நலம் கெட்டு ஊருக்குச் சென்று திரும்புகையில் நண்பன் நடராஜன் றோசி மேல் காதல் கொண்டிருப்பதை அறிந்து அவன் மேல் ஆத்திரமடைகின்றான். றோசியும் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதி அவள் மீதும் கோபமடைகின்றான்.
றோசி காரணமாக நண்பர்களுக்கிடையில் மோதல் முற்றி கதை சொல்லி நண்பன் நடராஜனைத் தாக்கவே , நடராஜனும் ஆத்திரமடைந்து அவனைவிட்டு விலகி, றோசியின் வீட்டுக்கே சென்று விடுகின்றான். உண்மையில் அதுவரை றோசி அவர்களுடன் சாதாரணமாகவே பழகி வந்திருக்கின்றாள். நடராஜன் அவளிருப்பிடத்துக் சென்ற பின்பே அவனது தன்மீதான தீவிர காதலை உணர்ந்து அவனைக் காதலிக்கத்தொடங்குகின்றாள்.
பின்னர் கதை சொல்லி ஊரிலிருக்கும் அவனுக்குத் தெரிந்த பெண்ணான கமலா
என்பவளை மண முடிக்கின்றான். இதற்கிடையில் நாடு தழுவி நடைபெற்ற தொழிலாளர்
வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு பேசுகையில் முற்போக்குவாதியான
கதைசொல்லிக் காடையர்களால் தாக்கப்படும் சந்தர்ப்பமுமேற்படுகின்றது., ஆனால்
இறுதியில் அத்தொழிலாளர் வேலை நிறுத்தமும் எவ்விதப் பயனுமறறு முடிவுக்கு
வந்து, தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவதுடன் முடிவுக்கு
வருகின்றது.
நாவலின் இறுதி துயர் மிக்கது. நாட்டின் அரசியல் சூழலால் வெடிக்கும்
வன்முறையில் நடராஜன் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டு விடுகின்றான்.
றோசியும் பலரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு, தாதியாகி கர்த்தரிடம்
சரணடைகின்றாள். கதை சொல்லியின் குழந்தைப்பேறுக்கும் அவளே தாதியாக உதவியும்
செய்கின்றாள். அவளது வீடு காடையர்களால் எரிக்கபப்டுகையில் அதற்குள்
சிக்கி அவளது தந்தையும் எரிந்து போகின்றார். நாட்டில் நடந்த
இனக்கலவரம்தானது. ஆனால் கதாசிரியர் அதனை மறைமுகமாகவே எடுத்துரைப்பார்.
'வடக்கில் மின்னல், தெற்கில் முழக்கம். எந்நேரமும் மழை கொட்டத்தயாராகக்
கருமேகங்கள் நாடு பூராவும் கவிந்திருந்தன.' எத்தனையோ லட்சம் ஜனங்களின்
அமைதிக்கு உலை வைப்பது போல, இலங்கை வானில் கவிந்திருந்த கரு மேகங்கள்
ஒன்றுடன் ஒன்று மோதி ஆக்ரோசமாக முட்டி அகங்காரமாக மோதி பலத்த மழையாகக்
கொட்டத் துவங்கிவிட்டன. பயங்கரப் பிரவாகம். எத்தனை உயிர்கள், உடமைகள் அதில்
அடித்துச் செல்லப்பட்டனவோ?" போன்ற சொற்றொடர்களால் நாட்டுச் சூழல்
விபரிக்கப்படுகின்றது.
நாவலில் கதை சொல்லியின் பெயர் எங்கும்
கூறப்படவில்லை. ஆனால் முற்போக்குச் சிந்தனை மிக்க எழுத்தாளன் என்னும்
அவனது ஆளுமை நண்பர்களுக்கிடையிலான உரையாடல், சம்பவங்கள் மூலம்
விபரிக்கப்படுகின்றது. நாவலின் நடை வாசகர்களைக்கவரும் எளிமையான , ஆனால்
சுவையான நடை.
இன்னுமொரு விடயம் - நாவலில் வரும் றோசி பேர்கர்
இனப்பெண்ணா அல்லது சிங்களக் கிறிஸ்தவப் பெண்ணா என்பது தெளிவாக்கப்படவில்லை.
ஆனால் றோசியும் நடராஜனும் இரு வேறு இனத்தவர்கள் என்பது
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவே எழுத்தாளர் சோமகாந்தனின் முதல் நாவல். இந்நாவல் அவரது சொந்த அனுபவத்தில் புனையப்பட்டது என்று 'புதினம்' பத்திரிகைக்கான நேர்காணலில் அவரே கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாவல் தொடராக வெளியானபோது பத்திரிகை
ஆசிரியரும், வெளியீட்டாளருமான வரதர் இன்னுமொரு விளம்பர் உத்தியையும்
பாவித்திருந்தார். டேவிட் லீனின் (David Lean) இயக்கத்தில் 1957இல் வெளியாகி 7 ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற சிறந்த படம் The Bridge on the River Kwai.
இதன் காட்சிகள் இலங்கையிலும் எடுக்கப்பட்டிருந்தன. இதில் கொட்டாஞ்சேனையில்
நிறுவனமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த அழகான தோற்றமுள்ள லிண்டா என்னும்
பெண்ணும் நடித்திருந்தார். அவரை நாவலின் றோசி பாத்திரமாக்கி
புகைப்படப்பிடிப்பாளர் சிவம் என்பவரைக்கொண்டு புகைப்படங்கள் எடுத்து
வெளியிட்டிருந்தார்.
- நாவலாசிரியர் நா.சோமகாந்தன் (ஈழத்துச் சோமு) -
நாவல்: 'களனி நதி தீரத்திலே' - நா. சோமகாந்தன் (ஈழத்துச் சோமு)
அத்தியாயம் 1 - (20.8.1961)அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5 - றோசியும் றோசாவும்
அத்தியாயம் 6 - இரண்டு மலர்களும் ஒரு வண்டும்
அத்தியாயம் 7 - மோகவலை
அத்தியாயம் 8 - மண் கோட்டையா? மதிற் கோட்டையா?
அத்தியாயம் 9 - பாவ விமோசனம்
அத்தியாயம் 10 - கருமுகில்
அத்தியாயம் 11 - அஞ்சலி (29.10.1961)
Thursday, August 17, 2023
மறக்க முடியாத வீதி ஓவியரும், அவர் வரைந்த ஓவியமும்! - வ.ந.கிரிதரன் -
மறக்க முடியாத ஓவியமிது. எண்பதுகளின் ஆரம்பத்தில், நாட்டை விட்டுப் புகலிடம் நாடி புறப்பட்ட பொழுதில், சுமார் ஒரு வருடம் நியூ யோர்க் மாநகரத்தில் அகதிக்கோரிக்கையாளனாக அலைந்து திரிந்த காலகட்டத்தில் வீதி ஓவியன் ஒருவனால் வரையப்பட்ட ஓவியம்.
நியூ யோர்க் ஸ்டேட் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில், அமெரிக்கன் அவென்யுவில் நடைபாதையொன்றில் ஓவியர்கள் சிலர் சிலரை அவர்கள்முன் கதிரைகளில் இருத்தி வரைந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் வரைவதற்கு எவரும் கிடைக்காமல் ஓடு மீன் ஓட, உறு மீன் வருமளவும் வாடி நிற்கும் கொக்காகக் காத்துக்கொண்டிருந்தார். என்னக் கண்டதும் அவர் முகம் மீனைக் கண்ட கொக்காக மலர்ந்தது.
Tuesday, August 15, 2023
(பதிவுகள்.காம்) வ.ந. கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
- எழுத்தாளரும் , கலை, இலக்கிய விமர்சகருமான ரஞ்ஜனி சுப்ரமணியம் அவர்களின் வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' பற்றிய விரிவான பார்வையிது. பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது. -
இயற்கையின் பேரழகில் தன்னை இழக்கும் ஒரு கலைஞன் சமகாலத்தில் அறிவுஜீவியாக பேரண்ட இரகசியங்களோடு சார்பியல் பற்றியும் கவி படைக்கையில் நிஜமாகவே ஆச்சரியத்தில் உறையுமொரு வாசகியின் வியப்பு மிகுந்த ரசனைக் குறிப்பிது. நவீன இயற்பியலின் தந்தையான விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் நனவுலக மாணவனாக காலவெளி, மானுட இருப்பு, காலம் ,நேரம், பரிமாணம் என அறிவுணர்வின் தேடலுடன் அலையும் இக்கவி, காணும் இடமெங்கும் கண்ணம்மாவுடன் கதை பேசும் மகாகவியின் கனவுலக ரசிகருமாவார்.
இக் கவிஞரை, 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் கவிதைத் தொகுதியூடாக முறையாக இனம் கண்ட வாசகர் எந்த விதத்திலும் வியப்படையத் தேவையில்லை. வ.ந.கிரிதரன் அவர்களின் இத்தேடல் உணர்வையும், ஏக்கத்தையும் பிரபஞ்சத்தின் மேல் கொண்ட பிரியத்தையும் அவரது படைப்புகளில் அடிக்கடி காணக் கூடியதாக இருக்கும்.
இக்கவிதைத் தொகுப்பினை வாசிப்பதற்கு முன் இயற்கை பற்றியும் நவீன இயற்பியல், சார்பியல், அண்டம், குவாண்டம், ஒளியாண்டு பற்றிய எளிய அறிதலையேனும் பெற்றுக் கொண்டால் இப்படைப்பினை வியந்து நோக்கலாம். பிரமிப்பை அடையலாம். இல்லாவிடில் 'நகரத்து மனிதனின் புலம்பலாகவே ' அமைய நேரிடலாம்.
மரபுக்கவிதையின் இலக்கணங்களோ அன்றி புதுக்கவிதையின் அழகுகளான படிமம், குறியீடு, தொன்மம் பற்றியோ கவிதைக்குள் உணரப்படும் மீமொழி பற்றியோ தெளிவான அறிவற்ற ஒரு வாசகியின் மழலைமொழி இதுவென முதலில் கூறிக்கொள்ள வேண்டும். எனினும் 'உளப்புயல்கள் வீசியடிக்கும் போது, அகக்கடலில் படகுகளாயிருந்து நினைவுச் சுழலுக்குள் சிக்கும்' ஒரு கவிஞனின் உணர்வுகளை மாற்றுக்குறையாமல் உள்வாங்கும் உளப்பாங்கு வாய்த்திருப்பதில் மகிழ்வும் கொள்கிறேன்.
Friday, August 11, 2023
சீர்காழி தாஜின் "தங்ஙள் அமீர்'! - வ.ந.கிரிதரன் -
அமரர் சீர்காழி தாஜ் என்னைப்பொறுத்தவரையில் மறக்க முடியாத ஓர் இலக்கிய ஆளுமை. அவர் இவ்வளவு விரைவாக எம்மை விட்டுப் போய் விடுவார் என்பதை நான் நினைத்தும் பார்த்ததில்லை. தொடர்ந்தும் எழுத்தில் பல உச்சங்களைத் தொடுவார் என்று நினைத்திருந்த வேளையில் அவர் மறைந்து விட்டார். 2019இல் அவர் மறைந்த போது அவர் மறைவதற்கு முதல் நாளும் முகநூலில் எழுதிக்கொண்டிருந்தார். மறுநாள் அவர் மறைவுச் செய்தியை அறிந்தபோது நம்புவதற்கே முடியாமலிருந்தது. அவரை நான் ஒருபோதும் சந்திக்கவேயில்லை. அது இன்னும் துயரைத்தந்தது.
மீண்டுமொரு தடவை சிந்தனைக்குருவி தன் சிறகுகளை அடிக்கின்றது. நண்பர் தாஜை முதன் முதலில் அறிந்த காலகட்டம் நினைவுக்கு வருகின்றது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது 'அமெரிக்கா (தொகுப்பு) மற்றும், மறும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூல்களைத் தமிழக நூல் நிலையக் கிளையொன்றில் கண்டு, வாசித்துவிட்டுத் தன் கருத்துகளை ஆக்கபூர்வமான முறையில் நீண்ட இரு கடிதங்களாக எழுதி அனுப்பியிருந்தார். பின்னர் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுகு ஆனையொன்றிருந்தது' நூலினைக் கனடாவில் வசிக்கும் தனது நண்பர் ஒருவர் மூலம் அனுப்பிருந்தார்.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு உற்ப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...





