Saturday, September 13, 2025

செப்டம்பர் 12 பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு தினம்.


என்ன குரல்! ஒரு தடவை கேட்டாலும் மறக்க முடியாத தனித்துவம் மிக்க குரல். மிகவும் சிரமமான நீண்ட வசனங்களை உள்ளடக்கிய பாடல்களையெல்லாம் மிகவும் இலகுவாகப் பாடிவிடுவார். 

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, வங்கமொழி எனப் பன்மொழிகளிலும், 10,000ற்கும் அதிகமான பாடல்களைக் குறுகிய காலத்தில் பாடிப் புகழ் பெற்ற பாடகி. 
'கருத்தம்மா' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் அவருக்கு இந்திய மத்திய அரசின் சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றுத்தந்த பாடல்.   கவிஞர் வைரமுத்துக்குச் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினையும்  பெற்றுத்தந்த பாடல்.  கூடவே சிறந்த குடும்பச்சித்திரத்துக்கான  தேசிய விருதினையும் கருத்தம்மா பெற்றுள்ளது. 'கருத்தம்மா'வின் இசை ஏ.ஆர்.ரகுமான். இயக்கம் -  பாரதிராஜா.

Friday, September 12, 2025

நினைவில் நிற்கும் யாழ் இந்து அதிபர் மு.கார்த்திகேசன் மாஸ்டர்!


யாழ் இந்துக் கல்லூரியின் அதிபராக திரு மு.கார்த்திகேசன் மாஸ்டர் சிறிது காலம் இருந்தது நான் யாழ் இந்துக் கல்லூரியில் படிப்பதற்காகச் சென்றிருந்த காலம். சிறுவனான எனக்கு அவருடன் உரையாடும் சந்த்ரப்பம் வாய்த்தது. சில நிமிடங்களே உரையாடியிருந்திருப்பேன். அப்போது அவர் யார் அப்பா என்று விசாரித்தார். கூறியதும் உடனேயே அப்பாவை , அப்பாவின் கல்வித் திறமையை வியந்து நினைவு கூர்ந்தார். து தான் அவருடன் படித்தவர் என்று கூறினார். இச்சில நிமிடங்கள் எனக்கு எப்போது அவரைப்பற்றி நினைத்தாலும் நினைவுக்கு வருவதுண்டு. அப்போது அவர் முகம் அவருக்கேயுரிய முறுவலுடன் காட்சியளித்ததும் நினைவுக்கு வருகின்றது.


நூற்றுக்கணக்கான மாணவர்களில் ஒருவனான என்னுடன் அவருக்குப் பேச வேண்டிய தேவை இல்லை. இருந்தாலும் யாழ் இந்து விறாந்தையில் எதற்காகவோ ஒடிக்கொண்டிருந்த , சிறுவனான என்னை இடை மறித்து உரையாடினார். அது அவரது ஆளுமையின் வெளிப்பாடு என்பதை இன்றுணர முடிகின்றது. அதனால்தான் அந்தச் சில நிமிடங்கள் இன்றும் என்னை அவரை நினைவு கூர வைக்கின்றது. வயது வேறுபாடின்றி மாணவர்களுடன் உரையாடும் அவரது அந்த ஆளுமை அவரது முக்கிய பண்புகளில் ஒன்று என்பதை உணர முடிகின்றது.

அப்போது அவரைப் பற்றிய முழுச் சித்திரத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. புரிந்துகொள்ளும் வயதுமில்லை. பின்னரே காலப்போக்கில் என் வயதின் வளர்ச்சியுடன் வாசிப்பும் வளர்ச்சியும் அதிகரித்தபோது அவரது மார்க்சியச் சிந்தனைகளையும், அது அவரை இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கிய, அரசியற் சூழலில் வைத்திருந்த இடத்தையும் அறிந்துகொள்ள முடிந்தது. வியக்க வைத்தது. இன்றுவரை வியந்து கொண்டிருக்கின்றேன். இலங்கைத்த்மிழ் இலக்கியத்தின் முற்போக்கு எழுத்தாளர்கள்தம் நனவிடை தோய்தல்கள் பலவற்றின் மூலம் 'கார்த்திகேசன் மாஸ்ட'ரின் ஆளுமையை இன்னும் விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது.

Thursday, September 11, 2025

மக்கள் கவிஞன் பாரதி! போற்றுவோம்!


[
* டிஜிட்டல்'ஓவியத் தொழில் நுட்பம் - இரமணிதரன் கந்தையா.]

இன்று, செப்டம்பர் 11, மகாகவி பாரதியார் நினைவு தினம். கவிஞர்களில் என்னை ஈர்த்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் பாரதியார்.

குறுகிய அவர் வாழ்வில் அவர் சாதித்தவை பிரமிப்பினையூட்டுபவை. , தேசிய விடுதலையை, வர்ண விடுதலையை, வர்க்க விடுதலையை, மானுட விடுதலையைப் பாடிய கவிஞர் அவர். நாட்டு, உபகண்ட , சர்வதேச அரசியலை நன்கு அறிந்தவர் அவர். அதை அவரது எழுத்துகள் புலப்படுத்தும். அவை கூடவே அவரது பரந்த வாசிப்பையும், சிந்தனையின் ஆழத்தையும் வெளிப்படுத்தும்.

அவரது சொற்கள் எளிமையானவை. தெளிவானவை. அதே சமயம் ஆழமானவை. அத்துடன் தர்க்கச்சிறப்பையும், இருப்பு பற்றிய தேடலையும் கொண்டவை. அத்துடன் அவை தீர்க்க தரிசனம் மிக்கவை. தான் வாழ்ந்த காலத்தை மீறிச் சிந்தித்த , செயற்பட்ட எழுத்தாளர் அவர். அதனால்தான் அவரால் அக்காலகட்டத்தில் தான் வாழ்ந்த சூழலை மீறிப் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்க முடிந்தது. தீண்டாமைக்கெதிராகக் குரல் கொடுத்த முடிந்தது.

கவிதை, புனைகதை, மொழிபெயர்ப்பு, அரசியல் ஆய்வு, வசன கவிதை என அவரது இலக்கியப் பங்களிப்பு பரந்து பட்டது. அவரது நினைவு நாளான இன்று எனக்குப் பிடித்த அவர்தம் கவிதை வரிகளில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கின்றேன். அத்துடன் டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்பவியலாளரான எழுத்தாளர் இரமணிதரன் கந்தையா (Ramanitharan kandiah) அண்மையில் வரைந்த பாரதியாரின் ஓவியத்தையும் நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

Wednesday, September 10, 2025

டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு' எனக்கு மிகவும் பிடித்த அவரது நாவல்! (ஓவியம் - AI)

செப்டம்பர் 9 என் அபிமான எழுத்தாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான டால்ஸ்ட்டாயின் பிறந்த நாள். அவரது நாவல்கள் எல்லாமே சிறந்த படைப்புகள். உலக இலக்கியத்தில் முதல் தரப்பில் வைத்துப் போற்றப்படுபவை.  

இவரது படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்த படைப்பாகப் புத்துயிர்ப்பு (Resurrection)  நாவலைக்  கூறுவேன். அதற்கு முக்கிய காரணம் அது அறிமுகமானபொது எம் நாடிருந்த சூழல். எண்பதுகளின் ஆரம்பம். நாட்டில் தமிழ்  மக்களின் உரிமைப்போராட்டம் ஆயுதமயப்படத்தொடங்கியிருந்த காலகட்டம். இளைஞர்கள் மக்கள் பற்றி, தொழிலாளர், விவசாயிகள் பற்றி, மார்க்சியம் பற்றியெல்லாம் சிந்திக்கத்தொடங்கியிருந்த காலம்.  

டால்ஸ்டாய் மதவாதியாக இருந்தபோதும், தன் புனைகதைகளின் இறுதியில் மதரீதியிலான தீர்வினை எடுத்துரைத்தபோதும், அவரது கதைகளில் மானுடரின் வாழ்க்கை, வர்க்க வேறுபாடுகள் ஏற்படுத்தும் மானுடர் மீதான பாதிப்புகள், சமூக அநீதி கண்டு கொதிக்கும் மானுடச் சிந்தனைகள் இவையெல்லாம் நிறையவே இருக்கும். அவை என்னை மிகவும் கவர்ந்தவை. 

Monday, September 8, 2025

ஓட்டாவாக் (Ottawa) காட்சிகள் - வீதியில் ஜாஸ் பியானோ வாத்தியக் கலைஞர்!


இவ்வார இறுதியைக் கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் கழி(ளி)த்தேன். பாராளுமன்றம் அமைந்த பகுதியில் சுற்றித் திரிந்தபோது கண்ணைக் கவர்ந்த சிலை இது. கனடாவில் மட்டுமல்ல, உலகின் புகழ்பெற்ற பியானோ வாத்தியக்கலைஞர் ஒருவரின் சிலை அல்பேர்ட் வீதி - எல்ஜின் வீதியும் சந்தியில், தேசியக் கலை மையத்துக்கு வெளியில், அமைக்கப்பட்டிருந்த நேர்த்தி என்னைக் கவர்ந்தது. அவர் வேறு யாருமல்லர் மான்ரியாலில் குடியேறிய கரிபியன் குடியேற்றவாசிகளான தாய், தந்தையருக்கு மகனாகப் பிறந்த ஆஸ்கர் பீட்டர்சனே (Oscar Peterson) (1925–2007) அவ்வாத்தியக் கலைஞர். 
 
இவர் உலகப் புகழ்பெற்ற கனடிய ஜாஸ் பியானோ வாத்தியக் கலைஞராகக் கருதப்படுமிவர்.மிகவும் வேகமாகவும், துல்லியமாகவும் பியானோ வாசிப்பதில் வல்லவராகக் கருதப்படுகின்றார்.

ஓட்டாவாக் (Ottawa) காட்சிகள் - நீண்ட காலம் பதவி வகித்த கனடியப் பிரதமர்?



வில்லியம் லயன் மெகென்சி கிங் (William Lyon Mackenzie King) (1874–1950) நீண்ட காலம், 21 ஆண்டுகள் (1921–1926, 1926–1930, 1935–1948), கனடாவின் பிரதமராகப் பதவி வகித்தவர். இவரே முதியோர் பென்சன் (old-age security), வேலையிழந்தோருக்கான காப்பீடு (Unemployment Insurance) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவரும் ஆவார். இங்குள்ள சிலை இவருடையதுதான் .
ஓட்டாவா செனட் கட்டடத்துக்கு அருகாமையில், வெளியில் அமைந்துள்ள இவரது சிலையே இது. இதற்கு முன் நிற்பவர் வேறு யாருமல்லர். அடியேனே.

ஓட்டாவாக் (Ottawa) காட்சிகள் - படைவீரர்களின் நினைவுச்சின்னம் (1812 - 1815)


ஏழு வீரர்களைக்கொண்ட இந்நினைவுச் சின்னம் கனடா வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கது. அமெரிக்காவுக்கும் , பிரிட்டிஷ் பேரரசின் கீழிருந்த கனடாவுக்கும் இடையில் நடைபெற்ற போரை நினைவு கூரும்பொருட்டு அமைக்கப்பட்ட சிலை. Triumph Through Diversity (பல்லின மக்களினூடு கிடைத்த வெற்றி). என்னும் தலைப்பில் அமைக்கப்பட்ட சிலை. இந்த யுத்தம் 1812 தொடக்கம் 1815 வரையில் நடைபெற்றது. 
 
கனடியப் படையினர், பிரிட்டிஷ் படையினர், கனடாவின் பூர்விகக் குடிப்போராளிகள் (மேட்டிஸ், பூர்விக முதலாவது தேசப் (First Nations) போர்வீரர் , பிரெஞ்சுக் கனடியப் படைவீரர், ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த தன்னார்வப்போராளிகள், றோயல் கடற்படையினர் எனப் பலர் இணைந்து அமெரிகக ஆக்கிரமிப்புக்கெதிராகப் போராடினார்கள். இவ்வேழு பிரிவினரையும் நினைவுகூரும் வகையில் , கனடியச் செனட் கட்டடத்துக்கு அண்மையில் வடிவமைக்கப்பட்ட இந்நினைவுச் சின்னத்தில் காணப்படும் , ஏழு வகைப்பிரிவினரையும் நினைவு கூரும் வகையில் ஏழு வீரர்களில் உருவங்கள் இச்சிலையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...