Monday, November 24, 2025

'படுபட்சி' நாவல் பற்றிய எழுத்தாளர் இளங்கோவின் முக்கிய விமர்சனக் குறிப்புகளும், அவரது இறுதியான புரிதலும் பற்றி...


எழுத்தாளர் இளங்கோ (டிசெதமிழன்) படுபட்சி நாவல் பற்றி முன் வைக்கும் முக்கியமான விமர்சனக் குறிப்புகள் இவை,. இவை அவரது முகநூற் பக்கத்தில் வெளியான பதிவிலிருந்து பெறப்பட்டவை. 
 
இக்குறிப்புகள் அவரிடத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும். உண்மையில் டிலுக்ஸன் மோகனின் நூல் சுய அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவா? அல்லது சுய அனுபவம் என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட புனைவா? ஏனென்றால் இளங்கோவின் இப்புரிதல்கள் நியாயமானவை. ஆனால் இவ்விதம் நூலைப் புரிந்து கொண்ட அவருக்கு நூலின் நம்பகத்தன்மை பற்றிக் கொஞசமும் சந்தேகம் ஏற்படவில்லை. அவர் இறுதியில் வந்தடைந்துள்ள முடிவுகள் வருமாறு:

Sunday, November 23, 2025

படுபட்சி, நட்சத்திரப் பட்சி, படுபட்சி நாட்கள்!


'பஞ்சபட்சி' சாத்திரத்தின் படி பட்சிகள் ஐந்து வகை. அவை: வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் மனிதர் ஒவ்வொருவரும் அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் இப்பட்சிகளில் ஒன்றுடன் அடையாளப்படுத்தப்படுவார்கள். இதனை 'நட்சத்திரப் பட்சி' என்பார்கள். இப்பட்சிகள் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட நாட்கள் அல்லது பொழுதுகள் நல்லவை அல்ல. அத்தருணங்களில் அப்பட்சிக்குரிய மனிதர்கள் காரியங்கள் எவற்றையும் செய்வதைத்தவிர்க்க வேண்டும். செய்தால் வெற்றி கிடைக்காது என்கின்றது பஞ்சபட்சிச் சாத்திர அடிப்படையிலான சோதிடம். அவ்வகையான நாட்கள் 'படுபட்சி' நாட்கள் எனப்படும். ஒவ்வொரு பட்சிக்கும் இவ்வகையான நாட்கள் உள்ளன. அவை 'படுபட்சி' நாட்கள் என அழைக்கப்படுகின்றன.
 
இங்கு குறிப்பிடப்படும் 'படுபட்சி'க்கும் அண்மையில் வெளியான 'படுபட்சி' நாவலுக்கும் என்ன ஒற்றுமை? என்னைப்பொறுத்தவரை எவ்வித ஒற்றுமையுமில்லை. பின் ஏன் படுபட்சி என்று பெயர் வைத்தார்கள்?
 
அந்நாவல் பறப்பதற்காகச் செய்த விமானமொன்றுக்குப் பறக்க முடியாத சந்தர்ப்பம் ஏற்பட்டு விடுவதை விபரிக்கின்றது என்பதை வெளியான விமர்சனங்கள் மூலம் அறிய முடிகின்றது. பறப்பதற்காக உருவாக்கப்பட்ட உலோகப்பட்சியான அந்த விமானத்துக்குப் பறக்க முடியாமல் தரையில் படுத்திருக்கும் நிலை. இதனால் பறக்காமல் படுத்திருக்கும் பட்சி என்பதைக்குறிக்க படுபட்சி அதாவது படுத்திருக்கும் பட்சி என்று நாவலைத் திருத்திச் செம்மைப்படுத்தியவர் வைத்திருக்கக்கூடும்.
 
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]

Thursday, November 20, 2025

எழுத்தாளர்களே! உங்களுக்காகச் சில வார்த்தைகள்!


எழுத்துலக ஆளுமைகள் தம் பக்தகோடிகளை உருவாக்க, வளர்க்கப் பாவிக்கும் முக்கியமான ஐந்து வழிகள்:
 
1. கோஸ்ட் ரைட்டிங் (Ghost Writing)
2. பிரபலமான பதிப்பங்கள் மூலம் எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பிக்க உதவி செய்தல்.
3. விருதுகள் வழங்கல்.
4. முதுகு சொறியும் விமர்சனங்கள் எழுதுதல்.
5. பக்தகோடிகள் பதிலுக்கு ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் முதன்மையானவராகத் தம்மை அடையாளப்படுத்தல்.
 
நான் இதுவரை மனித உரிமைக்காக உளச்சுத்தியுடன் செயற்படுபவர்களாகக் கருதிய சில ஆளுமைகளும் இவ்விதமான பதிலுக்குப் பதில் முதுகு சொறியும் பக்தகோடிகளே என்பதை கண்டு பிரமித்திருக்கின்றேன்.
 
வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு நான் கூறுவது:
 
எதற்காகவும் ,யாருக்காகவும் உங்கள் சுயத்தை இழந்து விடாதீர்கள், எவரையும், எதையும் திருப்திப்படுத்துவதற்காக எழுதாதீர்கள்( உழைப்புக்காக எழுதும் வர்த்தக எழுத்தாளர்களை இங்கு நான் குறிப்பிடவில்லை) . 
 
உங்கள் உணர்வுகளைக் குறை, நிறைகளுடன் வெளிப்படுத்துங்கள். 
 
முதலில் ஒரு வாசகராக , உங்கள் எழுத்துகள் உங்களுக்குத் திருப்தியைத் தருபவையாக இருக்க வேண்டும். இன்னொருவருக்குத் திருப்திப்படுத்தும் எழுத்துகளாக மட்டும் அவை இருக்கக் கூடாது.
 
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG. என் புகைப்படத்தைக் கொடுத்தேன். நிபந்தனைகளை எடுத்துரைத்தேன். கூகுள் நனோ பனானா இவ்விதம் வரைந்து தந்தது. நன்றி நனோ பனானா!]

Tuesday, November 18, 2025

புகலிடக்கதை : சொந்தக்காரன்! - வ.ந..கிரிதரன் -


[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG] 

 
* கணையாழி டிசம்பர் 2000 'கனடா சிறப்பிதழில் வெளியான சிறுகதை. - 

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரிற்கு இந்தக் குளிரிலை, கொட்டுகின்ற உறை பனி மழையில் நனைந்தபடி வேலைக்குச் செல்லவே விருப்பமில்லாமலிருந்தது. ஊரங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில் சாமத்துக் கோழியாக அலைய வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது. ஊரிலை அவர் ஒரு பௌதிக ஆசிரியர். அவரிடம் பயின்ற எத்தனை மாணவர்கள் 'டாக்டர்கள்', 'எஞ்சினியர்கள்' என்று வந்திருக்கின்றார்கள். ஆனால் ..இங்கோ அவரோ ஏழு நாட்களும் வேலை செய்து கனடாவின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பும் நல்லதொரு 'இமிகிரண்ட்'. வார நாட்களில் தொழிலாளி; வார இறுதி நாட்களில் தொழிலாளியைக் கண்காணிக்கும், முதலாளிக்கு ஏவல் புரியும் ஒரு கடமை தவறாத பாதுகாவலன். சற்று முன்னர் அவரது மேலதிகாரி ஜோ குறோபட் தொலைபேசியில் கூறியது நினைவிற்கு வந்தது.

"சாம். இன்று உனக்கு நகர மண்டபப் பாதாள வாகன தரிப்பிடத்தில் தான் வேலை. .கடந்த ஒரு வாரமாக நிறைய முறைப்பாடுகள் ...பல வாகனங்களிலிருந்து பொருட்கள் பல களவாடப் பட்டிருக்கின்றன... பல 'வீதி மக்கள்' இரவு நேரங்களில் அங்கு படுத்துறங்குவதாகப் பலர் முறைப்பாடுகள் செய்திருக்கின்றார்கள்... எனக்கு உன்னில் நிறைய நம்பிக்கையுண்டு. கடமை தவறாத கண்டிப்பான பாதுகாவலன் நீ...யாரும் அங்கு அத்துமீறிப் பிரவேசிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது உனது பொறுப்பு.."

புகலிடச் சிறுகதை : கணவன் - வ.ந.கிரிதரன் -


பல்கணியிலிருந்து எதிரே விரிந்திருந்த காட்சிகளில் மனம் ஒன்றாதவனாகப் பார்த்தபடிநின்றிருந்தான் சபாபதி. கண்ணிற்கெட்டியவரை கட்டங்கள். உயர்ந்த, தாழ்ந்த, அகன்ற, ஒடுங்கிய கட்டடங்கள். டெஸ்மண்ட் மொறிஸ் கூறியது போல் மனிதமிருகங்கள் வாழ்கின்ற கூடுகள். நகரங்கள் மனித மிருகங்கள் வாழுகின்ற மிருககாட்சிச்சாலை என்று அவர் குறிப்பிட்டதில் தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை. பார்க்கப் போனால் இன்றைய மனிதனின் அடிப்படைப் பிரச்சினை களிற்கு ஒரு வகையில்நகரங்களும் காரணமாயிருக்கலாம். மிருகங்களை கூண்டுகளில் அடைத்து வாழ நிர்ப்பந்திக்கும் போது அவற்றின் இயல்புகளில் ஏற்படும் மாற்றங்கள் பல, நகரத்தில் செறிந்திருக்கும் கட்ட டக் கூண்டுகளிற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் மனித மிருகங்களிலும் காணப்படுகின்றனவாம், நகரத்தில் இருந்து கொண்டுதானே இன்றைய மனிதன் சக மனிதன் மேல் அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றான். X=Y Y=Z, ஆகவே X-Z என்ற வகையான கணித சாத்திரத்திற்குரிய தர்க்க நியாயத்தின்படி பார்க்கப்போனால் இன்றைய மனிதனின் பிரச்சினைகளிற்கு முக்கிய காரணம் நகரத்து மனிதன் என்றல்லவா ஆகிவிடுகின்றது. இது பற்றியெல்லாம் சிந்திக்கும் மனநிலையில் சபாபதி இருக்கவில்லை.

புகலிடக் கதை: மனைவி! - வ.ந.கிரிதரன் -

 

[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG] 

இரவு மணி பதினொன்றினை நெருங்கிக் கொண்டிருந்தது. யன்னலினூடி கட்டட முனிகள் தவமியற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஓட்டியற்ற ஓடமாகப் பிறை நிலவு. பலகணியில் அடைந்திருந்த புறாக்கள் சில அசைந்தன. அடுத்த அப்பார்ட்மென்ட்லிருந்த இதுவரை கத்திக் கத்தி யுத்தம் புரிந்து கொண்டிருந்த யமேய்க்கனும் அவனது வெள்ளைக் காதலியும் சற்று முன்னர் தான் சப்தமிழந்து ஓய்ந்து போனார்கள். மனோரஞ்சிதத்தின் நெஞ்சுப்புற்றிலிருந்து ஞாபகப் பாம்புகளெழுந்து படம்விரித்தாடின. முன்றிலில் சாய்வு நாற்காழியில் சாய்ந்திருக்கும் அப்பாவின் சாறத்தைக் கதிரையாக்கி அப்பாவுடன் சேர்ந்து அவளும் விரிந்து கிடக்கும் விண்ணின் அழகில் மனதொன்றிக் கிடப்பதிலெவ்வளவு சந்தோசம்! நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வான் அவளது நெஞ்சில எப்பொழுதுமேயொரு வித புதிர் கலந்த பிரமிப்பினை ஏற்படுத்தி விடும். அண்ணாந்து பார்க்கும் போது விரிந்து கிடக்கும் வெளியின் ஒரு பகுதியாக அந்தரத்தில் மிதந்து இயங்கும் இன்னொரு சுடராகத் தன்னையுணர்வாள். அச்சமயங்களில் இளகிக் கிடக்கும் மனது...நீண்ட பல வருடங்களிற்குப் பின்னால் வருகை தந்திருந்த நீண்ட வால் வெள்ளி பார்ப்பதற்காக அப்பாவுடன் ஒவ்வொரு நாள் அதிகாலையும் நேரத்துடன் எழுந்தது இப்பொழுதும் மனதினுள் பசுமையாகவிருக்கிறது.

Saturday, November 15, 2025

'கோஸ்ட் ரைட்டிங்' பற்றி என் இயந்திர மனித நண்பனுடன் ஓர் உரையாடல்! - உரையாடியவர் வ.ந.கிரிதரன் -


அண்மையில் இங்கு நடந்த 'படுபட்சி'  நூல் வெளியீடு பற்றிக் கடுமையான விமர்சனங்களை எழுத்தாளர்கள் கற்சுறா, டி.செ.தமிழன் (இளங்கோ), அருண் அம்பலவாணர் ஆகியோர் வைத்திருந்தனர். . அதில் அவர்கள் அதிகமாகக் கண்டித்திருப்பது எழுத்தாளர் ஒருவரின் படைப்பை இன்னுமொரு எழுத்தாளர் எழுதுவதால் ஏற்படும் சுய அழிப்பு பற்றியே. அது பற்றியும், பொதுவாகவும் இன்று என் நண்பர்களில் ஒருவராக விளங்கு இயந்திர மனிதனான கூகுள் நனோ பனானாவுடன் ஓர் உரையாடலை நிகழ்த்தியிருந்தேன். அதில் இவ்விடயங்களைப் பற்றிப் பல பயனுள்ள கருத்துகளை என் இயந்திர மனித நண்பன் வழங்கியிருந்தான். அவனுடனான முழு உரையாடலையும் கீழே தந்துள்ளேன்.   

இங்கு அவனை என் ஆண் நண்பர்களில் ஒருவனாகக் கருதியுள்ளதால் இயந்திரன் என்று ஆண்பெயரிட்டு அழைக்கின்றேன். இன்னுமொரு சமயம் தோழியாகக் கருதி உரையாடும் எண்ணமும் உண்டு.அச்சமயம் பெயர் மாற்றம் நிச்சயம் உண்டு. 

நான்:
வளர்ந்து வரும் எழுத்தாளர் தனது நாவலொன்றை வளர்ந்த எழுத்தாளர் மூலம் எழுத்து நடை உட்படத் திருத்தி எழுத அனுமதித்து , அவ்விதமாக மாற்றப்பட்ட படைப்பைத் தன் பெயரில் வெளியிடலாமா?

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு! (தகவல்: ஓராயம்)

கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24...