Monday, May 27, 2024

சுதந்திரன்: 'கண்டி இராச்சியத்தில் அரசோச்சியது தமிழ். பெளத்தத்தோடு இந்து மதத்துக்கும் சிறப்பான இடம் இருந்தது'


12.6.1960 சுதந்திரனில் தமிழின்பம் என்னும் புனைபெயரில் ஒருவர் 'கண்டி இராச்சியத்தில் அரசோச்சியது தமிழ்.  பெளத்தத்தோடு இந்து  மதத்துக்கும் சிறப்பான இடம் இருந்தது' என்னும் கட்டுரையொன்றினை எழுதியிருக்கின்றார்.

அதில் நாயக்க மன்னர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பையும் குறிப்பிட்டிருக்கின்றார்.

உதாரணத்துக்கு அக்கட்டுரையிலிருந்து கீழ்வரும் பகுதிகளைப் பகிர்ந்துகொள்கின்றேன். வாசித்துப் பாருங்கள்:

"இந்த நாயக்க மன்னர்கள் தமிழ் மொழிக்குப் பெரும் சேவை செய்துள்ளனர். ஆந்திர, சமஸ்கிருதப் பண்ண்டிதர்களுடன் தமிழ் வித்துவான்களும் சரிசமமான இடம் பெற்றிருந்தார்கள். இவர்களது தமிழ் சேவையிலான வேலைகளை இன்றும் தஞ்சையிலுள்ள சரஸ்வதி மகாலிலும், மதுரை திருமலை நாயக்கர் மகாலிலும் காணலாம். "

Sunday, May 26, 2024

காலத்தால் அழியாத கானம்: 'சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்'


'நல்லவன் வாழ்வான்' திரைப்படத்தின் மூலக்கதை நா.பாண்டுரங்கனுடையது. திரைக்கதை வசனம் எழுதியிருப்பவர் அறிஞர் அண்ணா. டி.ஆர்.பாப்பாவின் இசையில் ஒலிக்கும் இப்பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் வாலி. இதுதான் அவர் எம்ஜிஆரின் படத்துக்கு எழுதிய முதலாவது பாடலென்று அறிகின்றேன்.
 
கவிஞர் வாலி எம்ஜிஆருக்குப் பொருத்தமாக வரிகளை எழுதுவதில் வல்லவர். அதனால் எம்ஜிஆர் இதயத்தில் நல்லவராக இடம் பிடித்தவர். இப்பாடலில் வரும் பின்வரும் வரிகள் எவ்வளவு அழகாகக் காதல் வரிகளுக்குள் கட்சிப் பிரச்சாரத்தைச் செய்கின்றன;
 
"அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?
உள்ளத்தாமரை மலராதோ ?
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இருண்ட பொழுதும் புலராதோ ?"

Saturday, May 25, 2024

எழுத்தாளர் நந்தினி சேவியர் நினைவாக..


முகநூல் என்னைத் தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான ஆளுமைகளுடன் பிணைத்து வைத்தது. அவர்களில் ஒருவர் எழுத்தாளர் அமரர் நந்தினி சேவியர். மறக்க முடியாத இலக்கிய ஆளுமை.
 
என் முகநூல் பதிவுகளுக்கு அவர் இட்ட எதிர்வினைகளை, மெசஞ்சர் மூலம் பரிமாறிக்கொண்ட உரையாடல்களை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கின்றேன். அவர் இருந்திருந்தால் இன்று அவருக்கு வயது 75.
எனக்கு மிகவும் பிடித்த அவரது பண்பு: தான் ஏற்றுக்கொண்ட மார்க்சியக் கோட்பாடுகளூடு , சமூக, வர்க்க, அரசியல் விடுதலையினை நாடிய அவர் இறுதிவரை அவ்வழியே தளும்பாமல் வாழ்ந்து வந்தவர். அதில் அவர் மிகவும் தெளிவாகவிருந்தார்.

Friday, May 24, 2024

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ் இலக்கிய மன்றம்!


மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கம் தற்போது 'மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ் இலக்கிய மன்றம்' என்றழைக்கப்படுகின்றது.
இத்தமிழ் மன்றத்தின் இணைய இணைப்பு - https://tlauom.com
இத்தளத்தில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான நுட்பம், தமிழருவி இதழ்களின் கடந்த கால இதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

(மீள்பிரசுரம்) மோகத்தின் நிழல் - சுகுமாரன் -


'அம்மா வந்தாள்'  ஒன்றைத் தவிர தி. ஜானகிராமன் எழுதிய பிற நாவல்கள் எல்லாமும் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்தவை. 'ஆனந்த விகடன்' போன்ற வெகுஜன இதழ்களிலும் 'கணையாழி' போன்ற சிறு பத்திரிகை களிலுமே அவை தொடராக வெளியாகியிருக்கின்றன. பிற்காலத்தில் வெகு ஜனப் பிரபலமுள்ள எழுத்தாளர்கள் உருவாக்கிய தொடர் கதை இலக்கணம் எதற்கும் தி.ஜாவின் நாவல்கள் உட்படாதவை. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வாசக எதிர்பார்ப்புக்காக ஏற்படுத்திய திடீர் திருப்பங்களோ சுவாரசியச் சிக்கல்களோ இல்லாமல் எழுதப்பட்டவை.  எனவே தான் இந்த நாவல்களைத் தொடர்கதைகள் என்று சொல்லாமல், தொடர்கள் என்று குறிப்பிடுகிறேன்.

Saturday, May 18, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (6) - அத்தியாயம் ஆறு: எதிர்காலத்திட்டங்கள் பற்றிய உரையாடலொன்று.



ஒரு சில  மாதங்கள் ஓடி  மறைந்தன. இதற்கிடையில் பானுமதியும் மாதவனும் நெருங்கிய நண்பர்களாகி விட்டிருந்தனர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் அருகிலிருந்த  பூங்காவுக்குச் சென்று உரையாடுவதும், குரோசரி ஷொப்பிங் செய்வதற்காக இரு வாரத்துக்கொருமுறை செல்வதும், நூலகங்கள்செல்வதும்,  அவரவர் இருப்பிடங்களில் சந்தித்துக்கொள்வதும், இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடுவதுமெனப் பொழுதுகள் கழிந்துகொண்டிருந்தன.  இவ்விதமானதொரு நாளில் அன்று அவள் அவனது அப்பார்ட்மென்ட்டிற்கு வேலை முடிந்ததும் வந்திருந்தாள். சிறிது களைப்பாகவிருந்தாள்.

"ஏன்ன பானுமதி, களைப்பாகவிருக்கிறீர்கள்? ' என்றான் மாதவன்.

"இன்று நாள் முழுவதும் ஒரே பிஸி. மீட்டிங், செர்வர் அப் கிரேடிங்  என்று சரியான வேலை.  அதுதான். வேறொன்றுமில்லை. " என்றாள் பானுமதி பதிலுக்கு. அத்துடன் அவள் ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவனை நோக்கிக் கேட்டாள்: "இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது. மாது, உனக்கு லினக்ஸ் செர்வர் பற்றி நல்லாத்தெரியும்தானே. "

Friday, May 17, 2024

முள்ளிவாய்க்கால் கஞ்சி!


இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரும் மனித அழிவைத் தந்த யுத்தம் முடிவுக்கு வந்த தினம் மே 18. யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் இதுவரை இந்த யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் ஆறவில்லை. யுத்தத்துக்குப் பிரதான காரனமாக அமைந்த இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிட்டவில்லை.  யுத்தக்குற்றங்களுக்குக் காரணமானவர்களின் மீதான சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காணாமல்போனவர்களுக்கான நீதி இன்னும் கிட்டவில்லை.  இன்றும் மக்களின் காணிகள் முற்றாக விடுபடாத நிலைதான் காணப்படுகின்றது. இவற்றுக்கான தீர்வு இனங்களுக்கான நல்லிணக்கத்துக்கு மிகவும் அடிப்படை.

அண்மையில் தமிழ்த் தேடியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் 'போர் முடிவடைந்து எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் 15 வருடங்கள் ஆகின்றன. ஆனால் போருக்கு வழிசமைத்த பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. நல்லிணக்கமும் பிறக்கவில்லை. தாம் இன்னும் வலியுடனேயே வாழ்கின்றனர் என்ற தகவலையும், தமக்கு அரசியல் தீர்வு அவசியம் என்ற செய்தியையுமே இந்த கஞ்சி சிரட்டை ஊடாக தமிழ் மக்கள் வழங்குகின்றனர்.' என்று கூறியிருந்தார். உண்மைதான். இலங்கையில் நிரந்தரமான சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்பட வேண்டுமானால் நிரந்தர அரசியல் தீர்வும், நல்லிணக்கச் செயற்பாடுகளும் அவசியம்.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...