Saturday, May 18, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (6) - அத்தியாயம் ஆறு: எதிர்காலத்திட்டங்கள் பற்றிய உரையாடலொன்று.



ஒரு சில  மாதங்கள் ஓடி  மறைந்தன. இதற்கிடையில் பானுமதியும் மாதவனும் நெருங்கிய நண்பர்களாகி விட்டிருந்தனர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் அருகிலிருந்த  பூங்காவுக்குச் சென்று உரையாடுவதும், குரோசரி ஷொப்பிங் செய்வதற்காக இரு வாரத்துக்கொருமுறை செல்வதும், நூலகங்கள்செல்வதும்,  அவரவர் இருப்பிடங்களில் சந்தித்துக்கொள்வதும், இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடுவதுமெனப் பொழுதுகள் கழிந்துகொண்டிருந்தன.  இவ்விதமானதொரு நாளில் அன்று அவள் அவனது அப்பார்ட்மென்ட்டிற்கு வேலை முடிந்ததும் வந்திருந்தாள். சிறிது களைப்பாகவிருந்தாள்.

"ஏன்ன பானுமதி, களைப்பாகவிருக்கிறீர்கள்? ' என்றான் மாதவன்.

"இன்று நாள் முழுவதும் ஒரே பிஸி. மீட்டிங், செர்வர் அப் கிரேடிங்  என்று சரியான வேலை.  அதுதான். வேறொன்றுமில்லை. " என்றாள் பானுமதி பதிலுக்கு. அத்துடன் அவள் ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவனை நோக்கிக் கேட்டாள்: "இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது. மாது, உனக்கு லினக்ஸ் செர்வர் பற்றி நல்லாத்தெரியும்தானே. "

Friday, May 17, 2024

முள்ளிவாய்க்கால் கஞ்சி!


இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரும் மனித அழிவைத் தந்த யுத்தம் முடிவுக்கு வந்த தினம் மே 18. யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் இதுவரை இந்த யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் ஆறவில்லை. யுத்தத்துக்குப் பிரதான காரனமாக அமைந்த இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிட்டவில்லை.  யுத்தக்குற்றங்களுக்குக் காரணமானவர்களின் மீதான சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காணாமல்போனவர்களுக்கான நீதி இன்னும் கிட்டவில்லை.  இன்றும் மக்களின் காணிகள் முற்றாக விடுபடாத நிலைதான் காணப்படுகின்றது. இவற்றுக்கான தீர்வு இனங்களுக்கான நல்லிணக்கத்துக்கு மிகவும் அடிப்படை.

அண்மையில் தமிழ்த் தேடியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் 'போர் முடிவடைந்து எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் 15 வருடங்கள் ஆகின்றன. ஆனால் போருக்கு வழிசமைத்த பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. நல்லிணக்கமும் பிறக்கவில்லை. தாம் இன்னும் வலியுடனேயே வாழ்கின்றனர் என்ற தகவலையும், தமக்கு அரசியல் தீர்வு அவசியம் என்ற செய்தியையுமே இந்த கஞ்சி சிரட்டை ஊடாக தமிழ் மக்கள் வழங்குகின்றனர்.' என்று கூறியிருந்தார். உண்மைதான். இலங்கையில் நிரந்தரமான சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்பட வேண்டுமானால் நிரந்தர அரசியல் தீர்வும், நல்லிணக்கச் செயற்பாடுகளும் அவசியம்.

Wednesday, May 15, 2024

"சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார்" - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்கிருஷ்ணா


'சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார். சொந்தப் புத்தியை கொண்டே சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார்.' என்று பாடுபவர் பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.எம்கிருஷ்ணா.
 
 
ஓரு படைப்பைப்பற்றி ஒருவருக்குப் பல்வேறு காரணங்களுக்காக விமர்சனங்கள் இருக்கும், பெரியாரின் அன்றைய காலகட்டடத்தில் அவர் சமூக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, ஆரியரின் ஆதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். போராடியவர். அவருக்குத் தமிழ்க் காப்பியங்கள் மீது ஆரியரின் தாக்கம் அவற்றில் இருக்கும் காரணத்துகாக எதிர்ப்பு இருந்தால் அவற்றை அவர் தர்க்கரீதியாக எடுத்துரைத்திருந்தால் அவை அவரது கருத்துரிமை. அவற்றைத் தர்க்கரீதியாக எதிர்கொள்ள வேண்டும். உணர்ச்சியின் அடிப்படையில் குரல் எழுப்புவதால் அர்த்தமில்லை. கம்பரைப்பற்றி, தொல்காப்பியரைப் பற்றியெல்லாம் அவருக்கு விமர்சனங்கள் இருந்தால் அவற்றைத் தர்க்கரீதியாக எதிர்கொள்ள வேண்டும். அண்ணா கம்பரசம் எழுதியவர். அக்காலகட்டப் பின்னணியில் வைத்து அவர்கள் அன்று தெரிவித்த கருத்துகள் ஆராயப்பட வேண்டும்.

வாழ்த்துகள்: வாசுகி கணேசானந்தனின் (V. V. Ganeshananthan) Brotherless Night (சகோதரனற்ற இரவு) நாவலுக்கு 2023ற்குரிய புனைவுக்கான Carol Shields Prize இலக்கிய விருது $150,000


வாசுகி கணேசானந்தனின் (ஆங்கில இலக்கிய உலகில் V. V. Ganeshananthan என்றறியப்பட்டவர்)  Brotherless Night (சகோதரனற்ற இரவு)  நாவலுக்குப் புனைவுக்கான , 2023ஆம் ஆண்டுக்குரிய,   $150,000 (US) மதிப்புள்ள  Carol Shields Prize என்னும்  இலக்கிய விருது கிடைத்துள்ளது. வாழ்த்துகள்.  

இவர் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்.   ஏற்கனவே  Love Marriage  என்னும் நாவலையும் எழுதியுள்ளார். இரு நாவல்களுமே இலங்கையில் நிலவிய போர்ச்சூழலை மையமாகக் கொண்டவை.  இதுவரை நான் வாசிக்கவில்லை. இணையத்தில் இவை பற்றிக் கிடைக்கும் குறிப்புகள் அடிப்படையில் இவ்விதம் கூறுகின்றேன்.

Monday, May 13, 2024

புகலிட இலக்கியமும் - வ.ந.கிரிதரனின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்களும் - ஈழக்கவி -


- எழுத்தாளரும், திறனாய்வாளருமான ஈழக்கவி  ஜீவநதி பதிப்பகம் வெளியிட்ட எனது சிறுகதைத்தொகுதியான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' பற்றி நல்லதொரு திறனாய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். பதிவுகள் இணைய இதழில் வெளியான அக்கட்டுரையை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். - வ.ந.கி -


‘டயஸ்போர’ (Diaspora) என்பது ஒரு பயங்கரவாத/ தீவிரவாத அமைப்பு என்ற மாயை பெரும்பான்மை மக்களிடையே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்து அரசியல் நிலவரங்களும் இனவாத ஊடகங்களும் இந்த பிம்பத்தை உருவாக்கியுள்ளன. அண்மையில் சியத டிவி (Siyatha TV) இன் ‘டெலிவகிய’ (Telewakiya) நிகழ்ச்சியில் ஊடகவிலாளர் லால் மாவலகே (Lal Mawalage) இந்த மாயத்தை அல்லது பிம்பத்தை சுட்டிக் காட்டி, ‘டயஸ்போர’ என்பது புலம்பெயர் மக்களை குறிக்கின்ற ஒரு சொற்றொடர் என்றும் குறிப்பாக, ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சர்வதேசமெங்கும் வாழும் தமிழ் மக்களையும் சுட்டுகின்றது - போன்ற கருத்துக்களை நேர்மையாகவும் வரலாற்று ரீதியான கருத்தியல்களோடும் உலகலாவிய விவரணங்க ளோடும் மிகத்தெளிவாக முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. புலம் பெயர்ந்தவர்களைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான டயஸ்போரா என்பது யூதர்களில் புலம் பெயர்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகத்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. யூதர்கள்தான் பல காலமாகவே உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின் இஸ்லாமியர் வாழ்ந்த நாடுகளிலிருந்து சில பகுதிகள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டு அவர்களுக்கென ஒரு நாடு ஏற்படுத்தப்பட்டது, இதுவே உலகத்திற்கு சாபக்கேடாகிவிட்டது. உலகில் பல சமூகங்கள் புலம் பெயர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சான்றாக ஆப்பிரிக்க மக்கள் பலநாடுகளுக்குப் புலம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. உலகில் அதிகமாகப் புலம்பெயர்ந்தது ஈழத்தமிழர்கள்தான். அரசியல் அடாவடித்தனம் காரணமாக சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய நாடுகளில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஈழத்தமிழர்களுக்கு உருவானது. குடிபெயர் தலைக்குறிக்க மைக்ரேஷன் (Migation) டிஸ்ப்ளேஸ்மெண்ட் (Displacement) என்னும் இரு சொற்களும் ஆளப்படுகின்றன. மைக்ரேசன் என்பது ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்குப் பெயர்தல். டிஸ்ப்ளேஸ்மெண்ட் என்பது ஒரே நாட்டுக்குள் நிகழும் இடப்பெயர்ச்சி. இடப்பெயர்ச்சியைப் புலம்பெயர்த லாகக் காணக்கூடாது என்பது பன்னாட்டு வரையறை ஆகும்.

Saturday, May 11, 2024

காலத்தால் அழியாத கானம் - எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா?


மானுடரின் முதற் காதல் அனுபவமென்பது வளர்ச்சியின் ஒரு படிக்கட்டு.  பெரும்பாலும் நிறைவேறுவதில்லை. காரணம் முதிர்ச்சியடையாத மானுடப் பருவத்தில் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை மையமாக வைத்து உருவாகும் அனுபவம் அது. ஆனால் அதுவே அதன் சிறப்பம்சமும் கூட. அவ்வனுபவத்தில் உள்ளங்கள் உணர்வை மட்டுமே மையமாக வைத்துச் செயற்படுகின்றன.அதற்குப் பின் வளர்கையில் இலாப, நட்டங்களைச் சீர் தூக்கிப் பார்க்கும் பக்குவத்துக்கு அவை மாறி விடுகின்றன. இதுவே பெரும்பாலும் முதற் காதல் நிறைவேறாமல் போவதற்கு முக்கிய காரணம்.

காலத்தால் அழியாத கானம் - 'பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்'


சங்ககாலப்பாடலான 'குறுந்தொகை'யில் பதுமனார் என்னும் புலவர் ஒருவரின் பாடலொன்று பெண்ணொருத்தியின் காதல் உணர்வுகளை அழகாகப் படம் பிடிக்கும். ஓசைகள் யாவுமடங்கி ஊரே உறங்கும் நள்ளிரவில் அவள் மட்டும் உறங்காமல் விழித்திருக்கின்றாள். இதனை அழகாகப்படம் பிடிக்கும் குறுந்தொகைப்பாடல்:

"நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே"


நள் என்னும் சொல்லுக்குப் பல அர்த்தங்களை உரையாசிரியர்கள் வழங்கியிருக்கின்றார்கள். செறிவு, ஒலி, நடு என அர்த்தங்கள் பல. இங்கு நள் என்றது செறிவு மிக்க யாமம் என்பதற்கும் பொருந்தும், இரவின் நடுப்பகுதி என்பதற்கும் பொருந்தும்.  இங்கு தலைவனின் பிரிவைத் தாங்க மாட்டாதவளான தலைவி, உலகத்து மாந்தரெல்லாரும் தூங்குகையில், தலைவியின் தோழியுட்பட,  தூக்கமின்றித் தவிக்கின்றாள். அவள் தோழியை எழுப்பித் தன் நிலையை எடுத்துரைக்கின்றாள்.  'உலகமும் துஞ்சுகையில் தான் மட்டும் துஞ்சாமல் இருக்கின்றேன்' என்கின்றாள்.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...