Monday, July 14, 2025

'அபிநய சரஸ்வதி' சரோஜாதேவி மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!


நடிகை சரோஜாதேவியின் மறைவுச் செய்தியினை இணையம் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல். கலைஞர்கள் அழிவதில்லை. அவர்கள்தம் கலைகளூடு நிலைத்து நிற்பார்கள். சரோஜாதேவியும் அவ்விதமே நிலைத்து நிற்பார்.


என் அபிமான நடிகையர்களில் ஒருவர் அவர். நான் நினைவு தெரிந்து முதல் பார்த்த திரைப்படம் எம்ஜிஆர், சரோஜாதேவி இணைந்து நடித்த திரைப்படமான 'எங்க வீட்டுப் பிள்ளை'. அதன் பிறகு அவர் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த சில திரைப்படங்களே வெளிவந்தன. அவற்றில் என்னைக் கவர்ந்தது அன்பே வா. எம்ஜிஆர் , சரோஜாதேவி காலம் மறைந்து , எம்ஜிஆர் , ஜெயலலிதா காலம் தமிழ்த் திரையுலகில் கோலோச்சத்தொடங்கி விட்டது. ஆனால் அதுதான் சரோஜாதேவியின் நடிப்புக்கு இடம் கொடுத்த பல திரைப்படங்கள் வெளியாகக் காரணமாக அமைந்தது. தாமரை நெஞ்சம், குலவிளக்கு, பணமா பாசமா ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

நானோ எம்ஜிஆரின் இரசிகன். எம்ஜிஆர் , சரோஜாதேவி இணைந்து நடித்த, 1958 - 1965 காலப்பகுதியில் வெளியான பல திரைப்படங்கள் மீள் வெளியீடுகளாக வெளியானபோது அவற்றைச் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பார்த்தேன். அக்காலகட்டத்து எம்ஜிஆர்,சரோஜாதேவி படப்பாடல்கள் பல டி.எம்.எஸ் , பி.சுசீலா இணைந்து பாடி மிகவும் புகழ் பெற்ற பாடல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் மறக்க முடியாத இன்னுமொரு விடயம் - 'எங்க வீட்டுப் பிள்ளை' திரையிடப்பட்டபோது அதற்காக இலங்கைக்கு எம்ஜிஆருடன் சரோஜாதேவியும் வந்திருந்தார். அவர்கள் சென்றவிடமெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வரவேற்றார்கள். பழைய பத்திரிகைகள், சஞ்சிகைகளைத்தேடிப் பார்த்தால் எத்தகைய வரவேற்பு என்பதை அறிந்துகொள்ளலாம்.

அவர் நினைவாக , எனக்கு பிடித்த அவர் நடிப்பில் உருவான திரைப்படப் பாடல்களில் சில:

Friday, July 11, 2025

மறக்க முடியாத எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி! - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர்  இந்திரா பார்த்தசாரதிக்குப் பிறந்த நாள் ஜூலை 10.  என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத எழுத்தாளுமைகளில் ஒருவர் இ.பா. தனது மனைவி இந்திராவின் பெயரையும் பாவித்து, இந்திரா பார்த்தசாரதி என்னும் பெயரில் எழுதுபவர். எழுத்தாளர் ரங்கராஜன் தன்  மனைவி சுஜாதா என்னும் பெயரில் தமிழ்  இலக்கிய உலகில் தடம் பதித்தது நினைவுக்கு வருகின்றது.  

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எனக்கு  முதலில் அறிமுகமானபோது நான் ஒருவித வெறியுடன் வாசிப்பில் மூழ்கிக்கிடந்த பால்ய  பருவத்தினன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் அப்போது எனக்கு வயது பதினொன்றுதான். பத்து வயதிலேயே கல்கியில், விகடனில், குமுதத்தில், கலைமகளில், தினமணிக்கதிரி தொடர்களாக வெளியான தொடர்கதைகளை, சிறுகதைகளை , தீவிரமாக, வாசிக்கத்தொடங்கி விட்டிருந்தேன்.வெகுசனச் சஞ்சிகைகளில் எழுதி என் கவனத்தை ஈர்த்த, தீவிர இலக்கிய எழுத்தாளுமையாளர்களாக ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி . கு,அழகிரிசாமி போன்றோர் இருந்தனர். இவர்களது எழுத்துகள்  பொதுவான வெகுசன எழுத்தாளர்களின் எழுத்துகளிலிருந்து வேறுபட்டவை. ஆனால் அது இவர்கள் மீதான என் ஈர்ப்புக்குத் தடையாக இருந்ததில்லை. என் வயதுக்கு மீறிய விடயங்களைப்பற்றியெல்லாம் இவர்கள்தம் படைப்புகள் இருந்தாலும், அனைவரையும் சென்றடையும் வகையில் , ஒரு வித எல்லை மீறாத எழுத்து நடையில்  இவர்கள் எழுதினார்கள்.

Thursday, July 10, 2025

அது ஒரு கனாக்காலம்!


இனி ஒருபோதுமே அக்காலம் திரும்பப் போவதில்லை. மானுடத் தொழில் நுட்ப வளர்ச்சி மானுட வாழ்க்கைக்குப் பல வசதிகளை உருவாக்கி விட்டது. புதிய பல பொழுது போக்குகளையும் உருவாக்கி விட்டது. இத்தொழில்நுட்பம் உருவாக்கிய வசதிகள் தொடர்ச்சியாக மானுடரைக்  கூட்டு வாழ்க்கையிலிருந்து, சமூக வாழ்க்கையிலிருந்து மேலும் மேலும் பிரித்துக்கொண்டே செல்கின்றன. ஆதியில் மானுடர் குழுக்களாக, தாய் வழிச் சமுதாயங்களாக வாழ்ந்தார்கள். குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தாலும், குழுக்களுக்கிடையில் ஒருவிதப் பொதுவுடமை நிலவியது.  சமூக வாழ்க்கை இருந்தது.

பின்னர் தொழில் நுட்ப வளர்ச்சி படிப்படியாக அம்மானுடரின் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே வந்தது. ஆற்றோர நாகரிகம், விவசாயம், பண்டமாற்றுப் பொருளாதாரம் ,தனியுடமை, ஒருதார மணமுறை, குடும்பம்  என அது மேலும் பரிணாமம் அடைந்து வந்தது. நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம், முதலாளித்துவ ஏகாதிபத்தியம் எனப் பிரிந்திருந்த உலகம் மேலும் மேலும் மாற்றங்களச் சந்தித்து வந்தது..

Wednesday, July 9, 2025

'காலம்' செல்வத்துடன் ஒரு சந்திப்பு!




{ஜூலை 7, 2025} நேற்று மாலை 'காலம்' செல்வத்துடன் சிறிது நேரம் , மிடில் ஃபீல்ட்டும் ஃபிஞ் வீதியும் சந்திக்குமிடத்தில் அமைந்திருக்கும் டிம் ஹோர்ட்டன் கோப்பிக் கடையில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது.
 
Worldcat, முகநூல், யு டியூப், இணையத்தளம், டொமைன், அவரிடம் விற்பனைக்காக இருக்கும் நூல்கள் என உரையாடல் பல விடயங்களைத் தொட்டுச் சென்றது.
 
உரையாடலின் முடிவில் எழுத்தாளர் தேவகாந்தன் பற்றி அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் மனத்தில் ஒலிக்கின்றன. 'தன் வாழ்க்கையையே எழுத்துக்காக அர்ப்பணித்தவர் தேவகாந்தன்' என்று உண்மையிலேயே ஆழ்மனத்திலிருந்து அவர் கூறிய வார்த்தைகளில் இருந்த உண்மை என் நெஞ்சைத் தொட்டது.

Tuesday, July 8, 2025

பண்ணைத்துறையின் பெயருக்கான காரணம் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -


 


யாழ்ப்பாண இராச்சியத்தின் காலத்தில் முக்கிய துறைமுகங்களாக விளங்கியவை கொழும்புத்துறை , பண்ணைத்துறை ஆகிய துறைமுகங்கள். பண்ணைத்துறை என்பதற்கான பெயருக்கான காரணம் எதுவாக இருக்கும்? அண்மையில் வெளியான கட்டடக்கலைஞர் மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' நூல் பற்றிய விமர்சனத்தில் கலாநிதி சிவ தியாகராஜா அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

 ".... யாழ்ப்பாணக் கோட்டை இருக்கும் பண்ணை என்ற இடப்பெயர் அவ்விடத்தில் முற்காலத்திலிருந்த ஓர் உலகப்பண்ணையின் ( World Market ) பெயரின் எச்சமாகவே தோன்றுகின்றது."  

 

பண்ணை என்பது விவசாயம், பல்வகை மிருக வளர்ப்பு (கோழிப்பண்ணை, பாற் பண்ணை என)  ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளைக்  குறிக்கப்பயன்படும் சொல். ஆங்கிலத்தில் Farm என்பார்கள். கலாநிதி சிவ தியாகராஜா கூறுவது போல் இவ்விதமான ஒரு பகுதி துறைமுகங்களுக்கு அருகில் இருப்பதில்லை. துறைமுகங்களுக்கு அருகில் பெரும் வர்த்தகச் சந்தைகள் இருப்பதுதான் வழமை.  

Saturday, July 5, 2025

மேலும் பல புதிய ஆக்கங்களுடன் பதிவுகள் இணைய இதழ்!


2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்க்கொண்டு வெளியாகும் இணைய இதழ் பதிவுகள்.  பதிவுகள் இணைய இதழை https://www.geotamil.com ,  https://www.pathivukal.com ஆகிய இணையத்தள  முகவரிகளில் வாசிக்கலாம். படைப்புகளை , ஆக்கபூர்வமான கருத்துகளை ngiri2704@rogers.com அல்லது editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்புங்கள்.

Wednesday, July 2, 2025

நண்பர்களின் நால்வரின் ஒன்று கூடல்!

இடமிருந்து வலமாக: வரதீஸ்வரன், வித்தியானந்தன், பிறேமச்சந்திரா & நான்.



இன்று நான் நண்பர்கள் வரதீஸ்வரன், வித்தியானந்தன், பிறேமச்சந்திரா ஆகியோரை , வரதீஸ்வரன் வீட்டில் சந்தித்து , மாலைப்பொழுதை இனிதாகக் கழித்தேன். இவர்களில் வரதீஸ்வரன், வித்தியானந்தன் ஆகியோருடனான அறிமுகம்  மொறட்டுவைப்பல்கலைககழகத்தின் மாணவர் விடுதியில் ஆரம்பமானது. நான் அங்கு கற்கச்சென்றபோது முதல்வருடம் மாணவர் விடுதி B இல் தங்கிப் படிப்பை ஆரம்பித்தேன். அந்த விடுதியில் அவ்விதம் தம் படிப்பை ஆரம்பித்தவர்கள்தாம் நண்பர்கள் வரதீஸ்வரனும், வித்தியானந்தனும்.  வித்தியானந்தன் கடல்துறைப் (Marine) பொறியியல் துறையிலும், வித்தியானந்தன் மின்சாரப்பொறியியல் துறையிலும், பிறேமச்சந்திரா மூலகப் (Materials) பொறியியல் துறையிலும் படிப்பதற்காக வந்திருந்தவர்கள். நான் கட்டடக்கலை படிப்பதற்காகச் சென்றிருந்தவன். வித்தியானந்தன் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் 'நுட்பம்'  இதழாசிரியராக நான் இருந்தபோது மலர்க்குழுவில் ஓர் உறுப்பினராக இருந்தவர். 

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...