Saturday, August 2, 2025
வ.ந.கிரிதரனின் நூல் அணிந்துரைகள்!
அவ்வப்போது நூல்களுக்கு நான் எழுதிய அணிந்துரைகள் இவை.
1. காத்யானா அமரசிங்ஹவின் 'தரணி' (பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடு) நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு எழுதிய அணிந்துரை.
2. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' நூலுக்கு எழுதிய அணிந்துரை.
3. 'போர்க்காலம் - தோழிகளின் உரையாடல்' என்னும் தலைப்பில் தமிழினி ஜெயக்குமாரனின் நூலுக்கு எழுதிய அணிந்துரை. சிவகாமி பதிப்பக வெளியீடு.
4. தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எழுத்தாளர் பொன் குலேந்திரனின் 'காலம்' (அறிவியற் சிறுகதைகள்) தொகுப்புக்காக எழுதிய அணிந்துரை.
5. நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் சங்கத்தமிழ் இலக்கியக் கட்டுரைத்தொகுப்பு நூலுக்கு எழுதிய அணிந்துரை. 'விஜே பப்ளிகேஷன்ஸ்' வெளியீடு.
6. எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராஜாவின் 'தராசு முனைகள்' நூலுக்கு எழுதிய அணிந்துரை.
7. மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் 'வேர் மறந்த தளிர்கள்' (பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியானது) நாவலுக்கு எழுதிய அணிந்துரை.
1. காத்யானா அமரசிங்ஹவின் 'தரணி'!
அண்மையில் நான் வாசித்த புனைகதை 'தரணி'. இதுவொரு சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. சிங்கள இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்ஹ. புனைகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பன்முகத்திறமை மிக்கவர் இவர். அத்துடன் ஊடகத்துறையிலும் தீவிரமாகச் செயற்படும் சமூக, அரசியற் செயற்பாட்டாளர். இலங்கையின் சமகால சமூக, அரசியற் பிரச்சினைகளில் மிகுந்த தெளிவு மிக்கவர். அவற்றை இன, மத, மொழி ரீதியாக அணுகாமல், மானுடப்பிரச்சினைகளாக அணுகுமொருவர். இதனை இவர் எழுதி அண்மையில் வெளிவந்த 'தரணி' நாவலிலும் காணலாம். இந்நாவல் இலங்கையில் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு பதிவுக்காக - கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது எட்டுக் கட்டுரைகள் - வ.ந.கிரிதரன் -
கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகள்:
1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன்
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன்.
3. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. கணையாழி டிசம்பர் 2000: 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. கணையாழி மே 2012: ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்-
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7. கணையாழி செப்டம்பர் 2017: கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயிஓன் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -
9. கணையாழி மார்ச் 2020: விநாயக முருகனின் 'ராஜிவ்காந்தி சாலை'
10. கணையாழி ஏப்ரில் 2020: 'பிரமிளின் "காலவெளி": கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
11. கணையாழி மே 2020: 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற் காதல் பற்றி..'
12. கணையாழி ஜனவரி 2022: பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!
* கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு நூலில் எனது ' அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்' & 'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் ' ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகளில் எட்டுக் கட்டுரைகள் கீழே:
1. பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!
2. தமிழ்நதியின் 'பார்த்தீனியம்'
3. நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! -
4. வானியற்பியற் கட்டுரை : அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்
5. ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்!
7. பிரமிளின் 'காலவெளி': 'கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
8. பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி...
1. பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!
என்னை தனது எழுத்துகளால் ஆட்கொண்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். தனது குறுகிய வாழ்வில் அவரால் எவ்விதம் இவ்விதம் சிந்திக்க முடிந்தது? செயற்பட முடிந்தது? எழுத முடிந்தது ? என்று நான் அடிக்கடி வியந்துகொள்வதுண்டு. தனது குறுகிய வாழ்வில் கவிதை, கட்டுரை, புனைகதை என்று அவர் ஆற்றிய இலக்கியப் பங்களிப்பு போற்றுதற்குரியது. அந்நியராதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டின் விடுதலைக்காக, வாழ்ந்த மண்ணில் நிலவிய தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மூட நம்பிக்கைகள் போன்ற சமூகச் சீரழிவுகளுகெதிராக, சுற்றியிருக்கும் இயற்கைக்காக, வாழும் சக உயிர்களுக்காக அவரது எழுத்துகள் குரலெழுப்பின. பல்வகைப்பட்ட மானுடரின் உணர்வுகளையும் அவரது கவிதைகள் வெளிப்படுத்தின. தான் வாழ்ந்த காலத்தை மீறிய அவரது சிந்தனையை , அவற்றில் காணப்படும் தெளிவினை அவரது எழுத்துகள் வெளிப்படுத்தின. அத்துடன் சிந்திப்பதுடன் நின்று விடாமல் அதற்கேற்ப நிஜ வாழ்விலும் செயற்பட்டவரும் கூட. இவ்விதமாகப் பல்வேறு விடயங்களைப்பற்றிச் சிந்தித்த அவரது சிந்தனை மானுட இருப்பு பற்றியும் சிந்தித்தது. இருப்பு பற்றிய சிந்தனைகள் கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்புமொன்று. அக்கேள்விகளெல்லாம் அவருக்கும் ஏற்பட்டன. அக்கேள்விகளுக்கான விடைகளையும் அவர் தர்க்கரீதியாகச் சிந்தித்தார். அச்சிந்தனைப்போராட்டங்களை வெளிப்படுத்தும் அவரது முக்கியமான கவிதையாக 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்னும் கவிதையைக் குறிப்பிடலாம்.
தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சாியானதொரு தீர்வில்லை. ‘இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள், இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை ‘ என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் ‘கருத்து முதல்வாதிகள் ‘. இவர்கள் ‘சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது ‘ என்றும், ‘இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு ‘ என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல ‘இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே ‘ என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் ‘பொருள் முதல்வாதம் ‘ எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் ‘பொருள்முதல்வாதிகள் ‘ எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி ‘ஆன்மா நிலையானது, அழிவற்றது ‘ என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே ‘. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் ‘அப்படி எதுவுமில்லை ‘ என்கின்றார்கள். ‘இவ்வியற்கையில் ஏற்பட்ட பாிணாம மாற்றங்களே உயிாினங்கள் உருவாகக் காரணம் ‘ என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். பாரதியாரையும் இந்தத்தத்துவக் குழப்பம் விட்டு வைக்கவில்லையென்பதைத்தான் மேற்படி 'உலகத்தை வினவுதல்' கவிதை வெளிப்படுத்துகின்றது.
Wednesday, July 30, 2025
தொடர்கதை : நவீன விக்கிரமாதித்தன் (பாகம் இரண்டு) - வ.ந.கிரிதரன்
[பதிவுகள் இணைய இதழில் ஆரம்பித்திருக்கும் புதிய நாவலின் முதல் அத்தியாயம். ஏற்கனவே வெளியாகி , நூலுருப்பெற்ற 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலின் இரண்டாம் பகுதி.]
அத்தியாயம் ஒன்று - தழுவல் பற்றிய தர்க்கமொன்று!
இருண்டிருக்கின்றது. வீட்டின் முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு மேலே விரிந்து கிடக்கும் விண்ணைப் பார்த்தவாறிருக்கின்றேன். இத்தனை வருடங்களில் எத்தனை தடவைகள் இவ்விதம் பார்த்திருப்பேன். ஒரு முறையேனும் அலுக்காத, சலிப்படைய வைக்காத ஒன்றென்று இருக்குமென்றால் , என்னைப்பொறுத்தவரையில் அது இதுதான். இவ்விதம் விரிந்து கிடக்கும் பேரண்டத்தை பார்த்தபடி, சிந்தனையில் ஆழ்ந்தபடி , மெய்ம்மறந்து இருப்பதைப்போல் வேறோர் இன்பம் எதுவும் இல்லையென்பேன். வழக்கம்போல் சிந்தனை நதி பெருவெள்ளமாகச் சீறிப்பாய்கின்றது. எதற்காக? எதற்காக? எதற்காக? அர்த்தமென்ன? ஏன்? ஏன்? ஏன்? இதற்கு, இந்த வினாவுக்கு ஒருபோதுமே விடை கிடைக்கப்போவதில்லை. விடை கிடைக்காத வினா என்பது தெரிந்துதானிருக்கின்றது. இருந்தாலும் வினாக்கள் எழாமல் இருப்பதில்லை. சிந்தித்தலென்னும் செயல் இருக்கும் வரையில் , அதற்கு ஒருபோதுமே முடிவில்லை.
கோடி,கோடிக் கணக்கில் கொட்டிக் கிடக்கும் , என்ணற்ற சுடர்களில் மனது மூழ்கிப்போய்க் கிடக்கின்றது. அத்தனையும் சுடர்களா? அவற்றில் கோடிக்கணக்கில் சுடர்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டங்களும் இருக்கலாம். இருக்கும். ஆயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான, பில்லியன் கணக்கான ஒளியாண்டுத் தொலைவுகள் பிரமிக்க வைக்கின்றன. ஏன்! எதற்காக? ஏன்?
இவ்விதமான சமயங்களில் எனக்குத் துணையாக ,மனோரஞ்சிதமும் வந்து விடுவாள். வந்தாள். வந்தவள் என்னுடன் நெருக்கியபடி, அருகில் தோளணைத்தாள். விண்ணைப்பார்த்தாள். விண்ணில் கொட்டிக்கிடக்கும் நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்தாள். அப்பொழுது அவள் 'ஷாம்பு' போட்டு, முழுகி வந்திருந்தாள். ஷாம்பு மணம் நாசியில் மெல்ல நுழைந்தது. என் கன்னத்தை ஒரு முறை செல்லமாகத் தட்டினாள். அவளை ஒரு கணம் உற்று நோக்கினேன். இவள் மட்டும் துணையாக இல்லையென்றால்.. அவளற்ற இருப்பை ஒரு கணம் மனம் எண்ணிப்பார்த்தது. என் எண்ண ஓட்டத்தை அவள் புரிந்து கொண்டாள் என்பதை உணர்ந்தேன். சில விடயங்களை உள்ளுணர்வு மூலம் உணர முடிகின்றது. உள்ளுணர்வு மூலம் இவ்விதம் உணர முடிவதற்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்க முடியுமென்று இன்னுமொரு கிளை பிரித்துச் சிந்தனை நதி ஓடியது.
Tuesday, July 29, 2025
நடிகரும், எழுத்தாளரும், பேச்சாளருமான தமிழ் அரசியல்வாதி 'சொல்லின் செல்வர்' செ.இராசதுரை! - வ.ந.கிரிதரன் -
இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியமானதோர் ஆளுமை மட்டக்களப்பு மாநகர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக , முப்பத்து மூன்று வருடங்களிருந்த 'சொல்லின் செல்வர்' என்றழைக்கப்படும் செல்லையா இராசதுரை அவர்கள். அவரது தொண்ணூற்றியெட்டாவது பிறந்தநாள் (ஜூலை 26) அண்மையில் கொண்டாடப்பட்டது. அதனையொட்டிப் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் மனத்தைத் தொடும் முகநூற் பதிவொன்றினை அண்மையிலிட்டிருந்தார்.அதற்கான இணைப்பு
செ.இராசதுரை அவர்கள் வசீகரத்தோற்றம் மிக்கவர். நான் தமிழரசுக் கட்சி பற்றி அறிந்தபோது என்னைக் கவர்ந்த தமிழ் அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர். அப்பாவுக்கு அவர் மேல் மிகுந்த மதிப்பு இருந்தது. தமிழகத்தில் திமுக அரசியல்வாதிகள் போல், இலங்கையில் சிறப்பான மொழியில் உரையாற்றுவதில் முதலிடத்தில் இருப்பவர் இராசதுரை அவர்கள் என்பார்.
யுத்தத்தின் கோர விளைவுகளை வெளிப்படுத்தும் 'இரு பெண்கள்' (Two Women).
இத்தாலிய நடிகையான சோபியா லோரென் ஹாலிவூட்டினையும் கலக்கிய சிறந்த நடிகைகளிலொருவர். சோபியா லோரேன் என்றதும் அவரது கவர்ச்சிகரமான உடல்வாகினைத்தான் பலரும் முதலில் நினைவுக்குக்கொண்டு வருவார்கள். சோபியா லோரேன் அழகான உடல்வாகுகொண்டவர் மட்டுமல்லர் அற்புதமான நடிகைகளிலுமொருவர். முதல் முதலாக ஆஸ்காரின் சிறந்த நடிகைக்கான விருது ஆங்கிலமொழியிலில்லாத ஒரு திரைப்பபடத்தில் நடித்த நடிகையொருவருக்காகக் கொடுக்கப்பட்டதென்றால், அவ்விருதினைப் பெற்ற நடிகை சோபியா லோரென்தான். புகழ்பெற்ற இத்தாலிய நாவலாசிரியர்களிலொருவரான அல்பேர்ட்டோ மொராவியோ (இவரது படைப்புகளில் பாலியல் சம்பவங்கள் சிறிது தூக்கலாகவிருக்கும். அதனால் சிலர் எஸ்.பொ.வை இவருடன் ஒப்பிடுவதுமுண்டு) எழுதிய நாவலான 'இரு பெண்கள்' (Two Women) என்னும் நாவலினை மையமாக வைத்து உருவான Two Women கறுப்பு/வெள்ளைத் திரைப்படம் 22 சர்வதேச விருதுகளைச் சோபியா லோரென்னுக்கு அள்ளிக்கொடுத்த திரைப்படம்.. போர் மக்கள் மேல் ஏற்படுத்திய விளைவுகளைப் பார்ப்பவர் நெஞ்சினை அதிரவைக்கும் வகையில் விபரிக்கும் திரைப்படமிது. 'விட்டோரியோ டி சிகா'வின் (Vittorio De Sica) இயக்கத்தில் வெளியான ( Vittorio De Sica புகழ்பெற்ற இத்தாலியத் திரைப்பட இயக்குநர். இவரது திரைப்படங்கள் நான்கு தடவைகள் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளன. புகழ்பெற்ற The Bicycle Thief திரைப்படத்தினை இயக்கியவர் இவர்தான்.) இத்திரைப்படத்தின் கதைச் சுருக்கமிதுதான்:
Monday, July 28, 2025
எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிப் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள சிறுகதை 'கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு!' (ஓவியம் - AI) - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிப் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள சிறுகதை 'கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு!' (ஓவியம் - AI)
கூறும் பொருள் , பாத்திரப் படைப்பு காரணமாக இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது. திட்டமிட்டு, கச்சிதமாகப் பின்னப்பட்ட கதை. இந்தியப் பெண்ணுக்கும், வெள்ளையின ஆணுக்கும் , ‘இன் விட்ரோ’ கருத்தரித்தல் (IVF) முறையில் பிறந்த பெண் குழந்தை கிளியோ. மரபு அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரிபவன் அக்கணவன். அவனது தந்தை தொல்லியல் அறிஞர்.
![]() |
| இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் - |
கதையின் சாரம் இதுதான்: கிளியோ ஒருவேளை எகிப்திய அழகி கிளியோபாட்ராவின் மரபணு மூலம் உருவாக்கப்பட்டவளோ? அக்கணவனின் தந்தை தொல்லியல் அறிஞர் என்பதால், அவரால் அந்த மரபணு சேகரிக்கப்பட்டிருந்ததோ? இவ்விதமான சந்தேகம் நியாயமானதுதான் என்பதை நிரூபிக்கும் வகையில், தகுந்த ஆதாரங்களுடன் கதை பின்னப்பட்டுள்ளது. கிளியோவும் சமுதாயப் பிரக்ஞை மிக்க பெண்ணாக உருவாகியிருக்கின்றாள். இயற்கையை அழிக்கும் அரசியல்வாதிகளைக் கடுமையாக எதிர்ப்பவள். அதன் காரணமாக அவள் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத்தான் வீட்டைத்துறந்து பறந்தாளோ என்னுன் கேள்வியுடன் கதை முடிகின்றது.
கதையில் ஆங்காங்கே சிந்திக்கத்தூண்டும் பகுதிகளும் கலந்திருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்று;
"அவர்கள் இருவரும் பல விடயங்களை அறியும் ஆவலுடன் பல நாடுகளுக்கு ஒன்றாகச் சென்று பயணித்தார்கள். கல்பனாவின் தாய்நாடான இந்தியாவுக்கு அடிக்கடி சென்றார்கள். கல்பனாவின் தாய் சொல்லிய இதிகாச புராண கதைகளையும் அதில் சொல்லப் பட்டிருக்கும் மாயா ஜாலக் கதைகளையும கேட்டு வளர்ந்தவள் கல்பனா.ஆனால் மார்க் தன் மனைவியுடன் இந்தியா சென்றபோது அக்கதைகளில் பெண்கள் நடத்தப்படும விதங்களையும் அத்துடன் இந்தியக் கடவுளர் பலர் போர் ஆயதங்களுடனிருப்பதையும் விமர்சித்தபோது ‘தமிழர் நாகரிகச் சரித்திரம் சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்டது. ஆனால் காலக்கிரமத்தில் சமயம் என்ற பெயரில் மனிதமற்ற முறையில் சாதி மத பேதங்கள் உண்டாக்கப் பட்டு இந்திய மக்கள் ஒருநாளும் ஒருத்தரை ஒருத்தர் சரிசமமாகப் பார்க்க முடியாத மாதிரி சமூக அமைப்பை மாற்றி அமைத்திருக்கிறது’ என்ற விளக்கத்தைச் சொன்னாள கல்பனா."
இக்கதையை இயக்குநர் சங்கர் வாசித்தால் , 'எந்திரன்' திரைப்படத்தைப் போல் 'கிளியோபாட்ரா' என்னும் பெயரில் , பிருமாண்டமான, தொழில் நுட்பங்கள் மிளிரும் திரைப்படமொன்றினைத் தயாரிக்ககூடும், அதற்கேற்பக் கச்சிதமாகப் பின்னப்பட்ட கதை.
சிறுகதை: கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
கிளியோளியோ அவளின் அறையில் இல்லை. அவள் வீட்டில் இருந்தால் ஜாஸ் இசை இருக்கும் என்பதால் அந்த இசையற்ற மௌனம் அசாதாரணமானது. கிளியோ ஜாஸ் இசையை நேசிக்கிறாள். ‘இது மனித குலத்தின் ஆன்மாவின் ஒலி’ என்கிறாள். அவளின் அறை காலியாக உள்ளது அவளுடைய பயணப் பை அங்கு இல்லை. அவளை இழந்த உணர்வு அவளின் வளர்ப்புத் தாயான ஸாராவுக்கு ஏற்படுகிறது.
Saturday, July 26, 2025
கல்பனாவின் 'யுகசந்தி'
'Veryrare Book' என்னும் முகநூலைத் தற்செயலாகப் பார்த்தேன். உண்மையிலேயே அரிய நூல்கள், வெகுசன இதழ்த்தொடர்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய பக்கமிது. இதற்கான இணைய இணைப்பு - https://www.facebook.com/veryrare.book
என் பால்ய பருவத்தில் , நான் வாசிக்கத்தொடங்கியிருந்த சமயம் , கலைமகள் இதழில் ஒரு தொடர்கதை வெளியானது. அதனை எழுதியவர் எழுத்தாளர் கல்பனா. அக்காலகட்டத்தில் கல்கியில் ஓவியர் கல்பனா என்பவர் ஓவியங்கள் தீட்டிக்கொண்டிருந்தார். ஆனால் இவர் கதைகள் எழுதுபவர். இவர் பெண்ணா அல்லது பெண்ணின் பெயரில் எழுதிய ஆணா? தெரியவில்லை. இவரைப்பற்றிய தகவல்களும் இணையுத்தில் கிடைக்கவில்லை.
ஆனால், இவரது 'யுகசந்தி' தொடர்கதை மட்டும் நினைவிலுள்ளது. அத்தொடரை நான் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால் முதலாவது அத்தியாயம் ஆற்றங்கரைக் காட்சியுடன் அல்லது வெள்ளப்பெருகுடன் ஆரம்பமானதாக நினைவிலுள்ளது. அத்தொடரைப் பின்னர் வாசிக்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன், ஆனால் வாசிக்கவில்லை.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு உற்ப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...




