[* டிஜிட்டல்'ஓவியத் தொழில் நுட்பம் - இரமணிதரன் கந்தையா.]
இன்று, செப்டம்பர் 11, மகாகவி பாரதியார் நினைவு தினம். கவிஞர்களில் என்னை ஈர்த்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் பாரதியார்.
குறுகிய அவர் வாழ்வில் அவர் சாதித்தவை பிரமிப்பினையூட்டுபவை. , தேசிய விடுதலையை, வர்ண விடுதலையை, வர்க்க விடுதலையை, மானுட விடுதலையைப் பாடிய கவிஞர் அவர். நாட்டு, உபகண்ட , சர்வதேச அரசியலை நன்கு அறிந்தவர் அவர். அதை அவரது எழுத்துகள் புலப்படுத்தும். அவை கூடவே அவரது பரந்த வாசிப்பையும், சிந்தனையின் ஆழத்தையும் வெளிப்படுத்தும்.
அவரது சொற்கள் எளிமையானவை. தெளிவானவை. அதே சமயம் ஆழமானவை. அத்துடன் தர்க்கச்சிறப்பையும், இருப்பு பற்றிய தேடலையும் கொண்டவை. அத்துடன் அவை தீர்க்க தரிசனம் மிக்கவை. தான் வாழ்ந்த காலத்தை மீறிச் சிந்தித்த , செயற்பட்ட எழுத்தாளர் அவர். அதனால்தான் அவரால் அக்காலகட்டத்தில் தான் வாழ்ந்த சூழலை மீறிப் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்க முடிந்தது. தீண்டாமைக்கெதிராகக் குரல் கொடுத்த முடிந்தது.
கவிதை, புனைகதை, மொழிபெயர்ப்பு, அரசியல் ஆய்வு, வசன கவிதை என அவரது இலக்கியப் பங்களிப்பு பரந்து பட்டது. அவரது நினைவு நாளான இன்று எனக்குப் பிடித்த அவர்தம் கவிதை வரிகளில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கின்றேன். அத்துடன் டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்பவியலாளரான எழுத்தாளர் இரமணிதரன் கந்தையா (Ramanitharan kandiah) அண்மையில் வரைந்த பாரதியாரின் ஓவியத்தையும் நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.






