Thursday, September 11, 2025

மக்கள் கவிஞன் பாரதி! போற்றுவோம்!


[
* டிஜிட்டல்'ஓவியத் தொழில் நுட்பம் - இரமணிதரன் கந்தையா.]

இன்று, செப்டம்பர் 11, மகாகவி பாரதியார் நினைவு தினம். கவிஞர்களில் என்னை ஈர்த்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் பாரதியார்.

குறுகிய அவர் வாழ்வில் அவர் சாதித்தவை பிரமிப்பினையூட்டுபவை. , தேசிய விடுதலையை, வர்ண விடுதலையை, வர்க்க விடுதலையை, மானுட விடுதலையைப் பாடிய கவிஞர் அவர். நாட்டு, உபகண்ட , சர்வதேச அரசியலை நன்கு அறிந்தவர் அவர். அதை அவரது எழுத்துகள் புலப்படுத்தும். அவை கூடவே அவரது பரந்த வாசிப்பையும், சிந்தனையின் ஆழத்தையும் வெளிப்படுத்தும்.

அவரது சொற்கள் எளிமையானவை. தெளிவானவை. அதே சமயம் ஆழமானவை. அத்துடன் தர்க்கச்சிறப்பையும், இருப்பு பற்றிய தேடலையும் கொண்டவை. அத்துடன் அவை தீர்க்க தரிசனம் மிக்கவை. தான் வாழ்ந்த காலத்தை மீறிச் சிந்தித்த , செயற்பட்ட எழுத்தாளர் அவர். அதனால்தான் அவரால் அக்காலகட்டத்தில் தான் வாழ்ந்த சூழலை மீறிப் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்க முடிந்தது. தீண்டாமைக்கெதிராகக் குரல் கொடுத்த முடிந்தது.

கவிதை, புனைகதை, மொழிபெயர்ப்பு, அரசியல் ஆய்வு, வசன கவிதை என அவரது இலக்கியப் பங்களிப்பு பரந்து பட்டது. அவரது நினைவு நாளான இன்று எனக்குப் பிடித்த அவர்தம் கவிதை வரிகளில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கின்றேன். அத்துடன் டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்பவியலாளரான எழுத்தாளர் இரமணிதரன் கந்தையா (Ramanitharan kandiah) அண்மையில் வரைந்த பாரதியாரின் ஓவியத்தையும் நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

Wednesday, September 10, 2025

டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு' எனக்கு மிகவும் பிடித்த அவரது நாவல்! (ஓவியம் - AI)

செப்டம்பர் 9 என் அபிமான எழுத்தாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான டால்ஸ்ட்டாயின் பிறந்த நாள். அவரது நாவல்கள் எல்லாமே சிறந்த படைப்புகள். உலக இலக்கியத்தில் முதல் தரப்பில் வைத்துப் போற்றப்படுபவை.  

இவரது படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்த படைப்பாகப் புத்துயிர்ப்பு (Resurrection)  நாவலைக்  கூறுவேன். அதற்கு முக்கிய காரணம் அது அறிமுகமானபொது எம் நாடிருந்த சூழல். எண்பதுகளின் ஆரம்பம். நாட்டில் தமிழ்  மக்களின் உரிமைப்போராட்டம் ஆயுதமயப்படத்தொடங்கியிருந்த காலகட்டம். இளைஞர்கள் மக்கள் பற்றி, தொழிலாளர், விவசாயிகள் பற்றி, மார்க்சியம் பற்றியெல்லாம் சிந்திக்கத்தொடங்கியிருந்த காலம்.  

டால்ஸ்டாய் மதவாதியாக இருந்தபோதும், தன் புனைகதைகளின் இறுதியில் மதரீதியிலான தீர்வினை எடுத்துரைத்தபோதும், அவரது கதைகளில் மானுடரின் வாழ்க்கை, வர்க்க வேறுபாடுகள் ஏற்படுத்தும் மானுடர் மீதான பாதிப்புகள், சமூக அநீதி கண்டு கொதிக்கும் மானுடச் சிந்தனைகள் இவையெல்லாம் நிறையவே இருக்கும். அவை என்னை மிகவும் கவர்ந்தவை. 

Monday, September 8, 2025

ஓட்டாவாக் (Ottawa) காட்சிகள் - வீதியில் ஜாஸ் பியானோ வாத்தியக் கலைஞர்!


இவ்வார இறுதியைக் கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் கழி(ளி)த்தேன். பாராளுமன்றம் அமைந்த பகுதியில் சுற்றித் திரிந்தபோது கண்ணைக் கவர்ந்த சிலை இது. கனடாவில் மட்டுமல்ல, உலகின் புகழ்பெற்ற பியானோ வாத்தியக்கலைஞர் ஒருவரின் சிலை அல்பேர்ட் வீதி - எல்ஜின் வீதியும் சந்தியில், தேசியக் கலை மையத்துக்கு வெளியில், அமைக்கப்பட்டிருந்த நேர்த்தி என்னைக் கவர்ந்தது. அவர் வேறு யாருமல்லர் மான்ரியாலில் குடியேறிய கரிபியன் குடியேற்றவாசிகளான தாய், தந்தையருக்கு மகனாகப் பிறந்த ஆஸ்கர் பீட்டர்சனே (Oscar Peterson) (1925–2007) அவ்வாத்தியக் கலைஞர். 
 
இவர் உலகப் புகழ்பெற்ற கனடிய ஜாஸ் பியானோ வாத்தியக் கலைஞராகக் கருதப்படுமிவர்.மிகவும் வேகமாகவும், துல்லியமாகவும் பியானோ வாசிப்பதில் வல்லவராகக் கருதப்படுகின்றார்.

ஓட்டாவாக் (Ottawa) காட்சிகள் - நீண்ட காலம் பதவி வகித்த கனடியப் பிரதமர்?



வில்லியம் லயன் மெகென்சி கிங் (William Lyon Mackenzie King) (1874–1950) நீண்ட காலம், 21 ஆண்டுகள் (1921–1926, 1926–1930, 1935–1948), கனடாவின் பிரதமராகப் பதவி வகித்தவர். இவரே முதியோர் பென்சன் (old-age security), வேலையிழந்தோருக்கான காப்பீடு (Unemployment Insurance) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவரும் ஆவார். இங்குள்ள சிலை இவருடையதுதான் .
ஓட்டாவா செனட் கட்டடத்துக்கு அருகாமையில், வெளியில் அமைந்துள்ள இவரது சிலையே இது. இதற்கு முன் நிற்பவர் வேறு யாருமல்லர். அடியேனே.

ஓட்டாவாக் (Ottawa) காட்சிகள் - படைவீரர்களின் நினைவுச்சின்னம் (1812 - 1815)


ஏழு வீரர்களைக்கொண்ட இந்நினைவுச் சின்னம் கனடா வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கது. அமெரிக்காவுக்கும் , பிரிட்டிஷ் பேரரசின் கீழிருந்த கனடாவுக்கும் இடையில் நடைபெற்ற போரை நினைவு கூரும்பொருட்டு அமைக்கப்பட்ட சிலை. Triumph Through Diversity (பல்லின மக்களினூடு கிடைத்த வெற்றி). என்னும் தலைப்பில் அமைக்கப்பட்ட சிலை. இந்த யுத்தம் 1812 தொடக்கம் 1815 வரையில் நடைபெற்றது. 
 
கனடியப் படையினர், பிரிட்டிஷ் படையினர், கனடாவின் பூர்விகக் குடிப்போராளிகள் (மேட்டிஸ், பூர்விக முதலாவது தேசப் (First Nations) போர்வீரர் , பிரெஞ்சுக் கனடியப் படைவீரர், ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த தன்னார்வப்போராளிகள், றோயல் கடற்படையினர் எனப் பலர் இணைந்து அமெரிகக ஆக்கிரமிப்புக்கெதிராகப் போராடினார்கள். இவ்வேழு பிரிவினரையும் நினைவுகூரும் வகையில் , கனடியச் செனட் கட்டடத்துக்கு அண்மையில் வடிவமைக்கப்பட்ட இந்நினைவுச் சின்னத்தில் காணப்படும் , ஏழு வகைப்பிரிவினரையும் நினைவு கூரும் வகையில் ஏழு வீரர்களில் உருவங்கள் இச்சிலையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

Thursday, September 4, 2025

நிழல்!


நேற்று ஒரு திருமணத்துக்காக, டொரோண்டோ நகரிலிருக்கும் காசாலோமா (Casaloma) சென்றிருந்தபோது அந்தி சாய்ந்து இருள் கவிந்திருந்தது.
 
நிகழ்வு முடிந்து திரும்புகையில் வாகனத்தரிப்பிடத்தில் தற்செயலாக, அங்கிருந்த மின்குமிழ் வெளிச்சத்தில், நான் நின்றிருந்த தரையில் தென்பட்ட என் நிழல் இது.
ஒரு சாய்வில் , சிறிது நீண்டிருந்த நிழலைப் பார்த்ததும் , ஓவியமொன்றைப் பார்க்கும் உணர்வு எனக்கேற்பட்டது. உடனேயே அவ்வனுபவத்தை என் அலைபேசிக் கமராவில் அகப்படுத்திக்கொண்டேன்.
 
எனைவிட்டு என்றும் பிரியாத 
என் உறவே!
இன்றுனைப்பார்த்ததும்
ஒரு கணம் மயங்கினேன்.
 
ஓவியர் ஒருவர்தம் கைவண்ணத்தில்
நிசம் தன்மேல் ஏற்படுத்தப்பட்ட
கற்பனை உணர்வால், 
படைப்பாற்றலால்,
தரையில் கிடக்குமொரு சித்திரமாக
நீண்டிருந்தாய்.
நிழலே நான் நெஞ்சிழந்தேன்.
 
உனைப்பார்த்து ஒரு கணம் சொக்கினேன்.
 
தன் நிழல் கண்டு
தனை மறந்த எழுத்தாளன்
இவன் ஒருவனாகவே
இருக்கக் கூடும்.

காசலோமா (Casa Loma). பற்றிச் சில வரிகள்...


நேற்று ஒரு திருமணத்துக்காக டொரோண்டோவில் பிரபலமான கட்டடங்களில் ஒன்றான 'காசலோமா' சென்றிருந்தேன். குறிப்பிட்ட அளவிளவிலான விருந்தினர்களை உள்ளடக்கிய திருமணம். அப்போது மேற்படி காசாலோமா எடுத்த சில புகைப்படங்கள் இவை.
 
'டொரோண்டோ' மாநகருக்கு வருகை தரும் எவரும் பார்க்கத் தவறாத கட்டடம் காச லோமா (Casa Loma). அரண்மனைபோன்ற பெரியதொரு மாளிகை. உண்மையில் அரண்மனையாகச் செல்வந்தர் ஹென்றி பெல்லட் (Sir Henry Pellatt) என்பவரால் 1911- 1914 காலகட்டத்தில் கட்டப்பட்ட மாளிகை. கோதிக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்ட இம்மாளிகை டொரோண்டாக் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் முக்கியமானதொரு கட்டடம்.  இக்கட்டடத்தை வடிவமைத்த கட்டடக்கலைஞர் E.J. Lennox .
 
98 அறைகளைக்கொண்ட மாளிகையில் 61 அடி உயரமான பெரிய மண்டபம், இரகசிய நடைபாதைகள், பந்துவீச்சு (bowling) அரங்கம், பணியாட்களர்களுக்கான சுரங்கப்பாதைகள், குதிரைகளைப் பராமரிக்கும் பகுதிகள் முக்கியமானவை.
 
முதலாம் உலக மகாயுத்தத்தைத்தொடர்ந்து , ஹென்றி பெல்லட் நிதிச்சிக்கலில் சிக்கியதால் , அவரால் அரசுக்குக் கட்ட வேண்டிய வருமானவரியைக் கட்ட முடியாமல் போனது. அதனால் அரசு அதனைத் தன் வசமாக்கியது. 
 

அதன்பின் பல வருடங்களாக, ஹொட்டல், கிளப், ஆய்வு நிலையம் எனப் பல்வேறு வழிகளில் பாவிக்கப்பட்டு வந்த இவ்வரண்மனை 2014ஆம் ஆண்டு தொடக்கம் Liberty Entertainment Group என்னும் அமைப்பினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. 
 
தற்போது சுற்றுலாத்தலமாகவும், அருங்காட்சியகமாகவும்ம் , நிகழ்வுகளுக்கான மண்டபமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வருடா வருடம் 650,000 ற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தரும் கட்டடமாக விளங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
காசலோமா - https://casaloma.ca/

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...