Tuesday, June 2, 2026

விஞ்ஞான அறிவு நூல்களை வெளியிட்ட ஹிக்கின்பாதம்ஸ் பதிப்பகம்!


 

என் பதின்ம வயதுகளில் நான் யாழ் பொதுசன நூலகத்தில் விரும்பி வாசித்த நூல்களில் அறிவியல் நூல்களுக்கும் முக்கிய இடமுண்டு. இது பற்றி எனது பல முகநூற் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். நூலகம் பற்றிய பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்:

"நான் ஒன்பதாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது இந்த நூலகத்தில் எத்தனையோ அறிவியல் நூல்களைப் படித்திருக்கின்றேன். மிகவும் அழகாக விஞ்ஞானத்தின் பல்வேறு பிரிவுகளிலும் நூல்களை அக்காலகட்டத்தில் சென்னையிலுள்ள பதிப்பகமொன்று வெளியிட்டுக்கொண்டிருந்தது. 'பெளதிகத்தின் வரலாறு', 'கடலின் வரலாறு', 'உயிரினங்களின் வரலாறு',.. என்பது போன்ற தலைப்புகளிருக்கும். 

'பெளதிகத்தின் வரலாறு' என்னுமந்த நூலில் ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற சக்திக்கும், பொருளுக்குமிடையிலான தொடர்பினை வெளிப்படுத்தும் சூத்திரத்தை, ஒளித்துகளுக்கு உந்தம் மற்றும் இயக்கச்சக்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய சூத்திரங்களை ஒன்றிணைப்பதன் மூலம் நிறுவியிருந்தது இன்னும் பசுமையாக மனதிலுள்ளது. '... இவ்வகையான அறிவியல் நூல்கள் எங்கள் ஆர்வத்தைத் தூண்டி விட்டன. மேற்படி விஞ்ஞான நூல்களில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் பிரசுரமான அறிவியல் நூல்களின் தரமான மொழிபெயர்ப்புகளே. "

Saturday, May 30, 2026

அழியாத கோலங்கள்: ராணி வாராந்தரி சிறுவர் தொடர்கதைகள்!


என் பால்யப் பருவத்தில் எம் வாசிப்புப் பசிக்குத் தீனியாக இருந்தவற்றுள்  ராணி வாராந்தரியில் வெளியான சிறுவர் தொடர்கதைகளும் அடங்கும்.

ராணி வாராந்தரியில் இரு பக்கங்கள் சிறுவர் ஆக்கங்களுக்கு ஒதுக்குவார்கள். ஒரு பக்கத்தில் சிறுவர் தொடர்கதையொன்று வெளியாகும், அடுத்த பக்கத்தில் விடுகதைகள் , வேறு பல்சுவைத்துணுக்குகள் போன்றவை வெளியாகும்.

அண்மையில் இணையத்தில் பழைய ராணி இதழ்களின் சில பக்கங்களைக் கண்டேன். முகநூல் நண்பர் மோகன்குமார் பகிர்ந்திருந்தார். அதிலுள்ள ராணி இதழ்கள் நான் தீவிர வாசிப்பில் இறங்குவதற்கு முன் வெளியானவை. இருந்தாலும் அதே மாதிரியான வடிவமைப்பில்தான் நான் வாசிக்கத் தொடங்கியபோது ராணி வெளியாகிக்கொண்டிருந்தது. அதனால் மேற்படி ராணி இதழின் பக்கங்கள் பழைய நினைவுகளை எழுப்பி விட்டன.

(தமிழக அரசியல்) உதயநிதி & விஜய்: ஆரம்பமாகும் புதிய மோதல்!


அன்று தமிழகத்தில் திமுகவினர் ஆட்சியைப் பிடித்தபோது அவர்கள் இளவயதினர். அன்று இள வயதுத் திமுகவினர் கோட்பாட்டு ரீதியில் பகுத்தறிவு, சமநீதி , சுயமரியாதை என்று எழுத்துகள், மேடைப்பேச்சுகள், திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் என்று புயலாகப் புறப்பட்டபோது அவர்கள் பின்னால் தமிழகத்தின் இளைஞர்கள் திரண்டனர். தமிழக அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வந்தனர் தமிழக மக்கள்.


அதன் பின் இன்றுவரை அதே திமுகவினர் முதுமையின் தாலாட்டில் இருக்கும் அமைச்சர்கள் பலரை உள்ளடக்கி இருக்கும் நிலையில் தமிழக இளைஞர்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இன்று தமிழக மக்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்குப் பெரியதொரு வெற்றியைக் கொடுக்கவில்லை. அவர்களுக்குத் தவெக பற்றி உறுதியான, நம்பிக்கையான எண்ணம் இருப்பதாகத்தெரியவில்லை. அதனால்தான் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தபோது அரைகுறை வெற்றியினைக் கொடுத்தார்களோ என்று தோன்றுகின்றது.

திமுகவின் கோட்டையான சென்னையிலேயே பழையவர்களையெல்லாம் தோல்வியைத் தழுவ வைத்த மக்கள், இளையவரான உதயநிதி ஸ்டாலினை வெற்றி பெற வைத்துள்ளனர்.

Thursday, May 28, 2026

நாம் அறிந்திராத யாழ்ப்பாண நகரின் மறுபக்கங்கள் - பகுதி 1, பகுதி 2 & பகுதி 3


நாம் அறிந்திராத யாழ்ப்பாண நகரின் மறுபக்கங்கள்! 

நாம் அறிந்திராத யாழ்ப்பாண நகரின் மறுபக்கங்கள் - பகுதி 1

நாம் அறிந்திராத யாழ்ப்பாண நகரின் மறுபக்கங்கள் - பகுதி 2

நாம் அறிந்திராத யாழ்ப்பாண நகரின் மறுபக்கங்கள் - பகுதி 3

பாரதியார் பாடல் : நிலாவும் வான்மீனும் வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.


பாரதியார் பாடல் : நிலாவும் வான்மீனும்
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
டிஜிட்டல் ஓவியம் -  சாட்ஜிபிடி வழி வநகி


நிலாவும் வான்மீனும் காற்றும்
மனத்தை வாழ்த்துதல்

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோலவெறி படைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ!

பாரதியார் பாடல் : காற்று வெளியிடைக் கண்ணம்மா வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.


பாரதியார் பாடல் : காற்று வெளியிடைக் கண்ணம்மா 
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
டிஜிட்டல் ஓவியம் -  சாட்ஜிபிடி வழி வநகி


காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்

பாரதியார் பாடல்: 'நடிப்பு சுதேசிகள்' வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


பாரதியார் பாடல்:  'நடிப்பு சுதேசிகள்'
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
டிஜிட்டல் ஓவியம் -  சாட் ஜிபிடி வழி வநகி


    நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
    வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
    வாய்ச் சொல்லில் வீரரடி.

    கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
    நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
    நாளில் மறப்பா ரடீ

        அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
    உச்சத்திற் கொண்டா ரடீ - கிளியே
    ஊமைச் சனங்க ளடீ!

    ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
    மாக்களுக் கோர் கணமும் - கிளியே
    வாழத் தகுதி யுண்டோ ?

   நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
    வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
    வாய்ச் சொல்லில் வீரரடி.

Wednesday, May 27, 2026

கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ! (பகுதி 2) - வ.ந.கிரிதரன் -


[ சென்ற ஞாயிறு 'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)1" நூல் பற்றி நான் ஆற்றிய உரையின் விரிவான. ஓரளவு முழுமையான கட்டுரையிது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு முழுமையாக என் உரையினை ஆற்ற் முடியாது போயிற்று. அதனை முழுமையாகத் தருவது முக்கியம் என்பதால் அது பதிவுகள் இணைய இதழில் முழுமையாக இடம் பெறுகின்றது.]
 

பகுதி இரண்டு: கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு!

1. நல்லூர்க் காலம் -  நகர அமைப்பு மற்றும்  கட்டடக்கலை

நல்லூர் ராஜதானியாக விளங்கிய காலகட்டம் பற்றிக்  குறிப்பிடுகையில் ஒல்லாந்தர் காலத்து நிலப்படங்கள், போர்த்துக்கேயர் காலத்து வரலாற்று அறிஞர்கள், பாதிரிமார்களின் நூல்கள் , கள ஆய்வு போன்றவற்றிலிருந்து நல்லூர் ராஜதானியின் தெருக்கள், ஆலயங்கள் பற்றிய தன் கருத்தை முன் வைக்கின்றார். எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (1996) நூல் பற்றியும் குறிப்பிடுகின்றார். 

"...முத்திரைச் சந்தை ஏறத்தாழ  இதன் மையத்தில் அமைந்துள்ளது.  எனினும், அக்கால நல்லூர்  ஒழுங்கான சதுர வடிவம் கொண்டது என்றோ,  அதன் சரியான மையத்திஒல் முத்திரைச் சந்தை  இருந்தது எனறோ  எடுத்துக்கொள்ள முடியாது.  ஒல்லாந்தர் கால நல்லூர்  ஒழுங்கற்ற வடிவம்  கொண்டதாக இருந்ததையே  அக்கால நிலப்படங்கள்  காட்டுகின்றன.  தற்காலத்தில் முத்திரைச்சந்தையிலிருந்து நான்குதிசைகளை நோக்கிச் செல்லும் வீதிகள் நல்லூர் தலைநகராக இருந்த காலத்திலேயே இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.  தெற்கு நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதி மட்டும் அக்காலத்தில் இருந்திருக்கலாம்." ('யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) , பக்கம் 69)

நகரம் ஒழுங்கான சதுர வடிவில் இருந்ததாகவோ , சந்தை நகரின் மையத்தில் இருந்ததாகவோ எடுத்துக்கொள்ள முடியாது என்ற  முடிவுக்கு அவர் வருவதற்கு முன்னர் , இவ்விடயத்தில் கட்டடக்கலை பற்றி, நகர அமைப்புப் பற்றிய வாஸ்துசாத்திர விதிகளையும் சிறிது கவனத்திலெடுத்திருக்கலாம். ஏனென்றால் நாம் இன்று வரை வாஸ்துசாஸ்த்திரம் பார்த்துத்தான் வீடுகளைக் கட்டுகின்றோம். இவ்விதிகளைத்தான் எம் முன்னோரும் நகரங்களை அமைக்கையில் பின் பற்றினார்கள். இவ்விதிகளின்படி தலைநகர்களை அமைக்கும்போது நகரின் மையத்தில் கிழக்கு - மேற்காக, வடக்கு - தெற்காக இரு பிரதான பாதைகள் இருக்க வேண்டும் எனவும், நகரம் சதுர வடிவில் (அவ்விதம் அமைக்க முடியாத சூழலில் செவ்வக வடிவில் ) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் இவ்விதம் அமைக்கப்படும் தலைநகரைச்சுற்றி மதில் அமைக்கப்பட வேண்டும் எனவும், பிரதான பாதைகள் மதில்களின் வாசல்களை சந்திக்குமிடத்துக்கண்மையில் ஒவ்வொரு திக்கிலும் ஆலயங்கள் அமைக்கப்பட வேண்டுமெனவும் இவ்விதிகள் குறிப்பிடுகின்றன.  இவ்விதமான பண்டைய நகர அமைப்பு விதிகளை ஆராய்ந்து , தென்னிந்திய , வட இந்திய நகரங்கள் , ஆலயங்களையெல்லாம் ஆராய்ந்திருக்கும் Architecture of the World: India  என்னும் நூல் இவற்றை ஆராய்வதற்குரிய சிறந்த உசாத்துணை நூல்களில் ஒன்று. (Andreas Wolwahsen , Henri Stierlin (Editor)  இந்நிலையில் மயூரநாதன் இவ்விடயத்தில் முடிந்த முடிவுக்கு வராமல், வாஸ்துசாத்திர விதிகளின்படி அவ்விதம் இருந்திருக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் அதற்காக உறுதியான ஆதாரங்கள் இல்லையென்று குறிப்பிட்டிருக்கலாம் என்று மேற்படி அவரது கருத்தை வாசித்தபோது தோன்றியது.

கட்டடக்கலைஞர் மயூரநாதன் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ! (பகுதி 1) - வ.ந.கிரிதரன் -

[ மே 24, 2926 அன்று  'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)1" நூல் பற்றி நான் ஆற்றிய உரையின் விரிவான. ஓரளவு முழுமையான கட்டுரையிது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு முழுமையாக என் உரையினை ஆற்ற் முடியாது போயிற்று. அதனை முழுமையாகத் தருவது முக்கியம் என்பதால் அது பதிவுகள் இணைய இதழில் முழுமையாக இடம் பெறுகின்றது.]

1.

வரலாற்று முக்கியத்துவம்

கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் அவரது 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)' என்னும் இந்த நூல் மூலம் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவராக முகிழ்த்திருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும்.  இலங்கைத்  தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முககிய குறைபாடுகளில் ஒன்று  வரலாற்றுத் தெளிவின்மை.  இலங்கையின் தொன்மக் குடிகளாக இருந்தும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை கோலோச்சிய யாழ்ப்பாண இராச்சியம் பற்றி, அதன் மன்னர்களைப்பற்றி, இருந்த இராஜதானிகள் பற்றி ஆதாரபூர்வமான,  வரலாற்றுச் சான்றுகளுடன் கூடிய வரலாறு  இல்லை என்றுதான் கூற வேண்டும்.  இலங்கைத் தமிழரின்  வரலாற்றைப் பற்றிக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நூல். அது போல் கைலையாமாலை , வையாபாடல் போன்றவையும் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இவையெல்லாமே கூறும் வரலாறு இவை எழுதப்பட்ட காலத்திற்கு முற்பட்டவை. எனவே பல கர்ணபரம்பரைக் கதைகள், கேள்வி ஞானத்தகவல்களை உள்ளடக்கியவை. இவற்றை வடி கட்டு , உண்மை பொய் அறிவதற்கு முதலியார் செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோர் முயற்சி செய்திருக்கின்றார்கள்.  அவற்றின் விளைவுகளே முதலியார் செ.இராசநாயகத்தின் யாழ்ப்பாணச் சரித்திரமும், சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனமும். மேலும் பலர் யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதியிருந்தாலும், இவை முக்கியமானவை.

மேலும் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுவதில் இலங்கைத் தமிழர்  காட்டும் அசிரத்தை. இவ்விடயத்தில் எம்மவருக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை என்று நூலாசிரியர் மயூரநாதன்  அண்மைய ஆதித்தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். உதாரணத்துக்கு அவர் கங்கா சத்திரம் இடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். கங்கா சத்திரம் இருந்ததால்தான் அப்பகுதி சத்திரத்துச் சந்தி என்று அழைக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இச்சமயத்தில் எனக்கு ஒரு நினைவு தோன்றுகின்றது. எண்பதுகளில் யாழ் ஈழநாடு பத்திரிகையில் யாழ் நகரில் பழமையின் சின்னங்கள் பேணப்படுவதன் அவசியம் என்றொரு கட்டுரை எழுதினேன்.  எழுதிய பின்னரே யாழ் மாநகரசபை கங்கா சத்திரத்தை இடித்தது. இவ்விதமிருக்கின்றது எம்மவரின் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுதல் பற்றிய புரிதல். இந்நிலை மாற வேண்டும். இதற்கு நிச்சயம் இந்நூல் உதவி புரியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.


அதே நேரம் சிங்களவர்களைப்பொறுத்தவரையில் தம் வரலாற்றினைக் காலத்துக்குக் காலம் ஒழுங்காகப் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள். தீபவம்சம், அதனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட மகாவம்சம், தொடர்ந்து எழுதப்பட்ட சூளவம்சம்  என அவர்கள் தம் வரலாற்றைப் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள். இவ்விதம் இலங்கைத் தமிழரும்  செய்து வந்திருந்தால் இலங்கைத் தமிழரின் வரலாற்றில் தற்போது எதிர்கொள்ளும் குழப்பங்களைத்  தவிர்த்திருக்கலாம்.

இந்நிலையில்தான் மயூரநாதனின் இந்நூலின் முக்கியத்துவம் உள்ளது.  பொது யுகத்தின் பின் 1621 தொடக்கம் 1948 வரையிலான காலகட்டத்தில் , யாழ்ப்பாண நகரம் எப்படியிருந்தது என்பதை ஆதாரபூர்வமாகச் , சான்றுகளுடன் விபரிக்கும் வரலாற்று நூல் 'யாழ்ப்பாண நகரின் வளர்ச்சி வரலாறு'  நூல். இவ்விதமான வரலாற்று நூல்கள் அதிக அளவில் எதிர்காலத்தில் வரவேண்டும். தமிழ நகரப் பகுதிகளில் நவீனத் தொழில் நுட்பம் கொண்டு , அண்மையில் யாழ் கோட்டைப் பகுதியில் நடத்தியது போல், ட்ரோன்கள், ரேடார் போன்றவற்றின் உதவி கொண்டும் ஆய்வுகள் செய்வதன் மூலம் கடந்த கால வரலாற்றினை இன்னும் தெளிவாக அறிய முடியும். அதே போல் வழக்கமான தொல்லியற் செயற்பாடுகளான அகழாய்வுகள் மூலமும் ஆய்வுகள் தொடர வேண்டும். இவற்றின் அடிப்படையில் மேலும் பல வரலாற்று நூல்கள் உருவாவது காலத்தின் தேவை.

பெளதிகரீதியிலான வரலாற்று நூல்
அடுத்தது மயூரநாதனின் இந்நூலின் முக்கியமான இன்னுமொரு சிறப்பு - இது பெளதிகரீதியில் யாழ்ப்பாண நகரத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளும் நூல் என்பதாகும்.  பொதுவாக அரச வம்சங்களின் அடிப்படையில் அமையும் வரலாற்று நூல் அல்ல இந்நூல்.

பெளதிகரீதியிலான நகரொன்றின் வளர்ச்சி வரலாறு என்னும்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அது என்ன பெளதிகரீதியிலான என்பதுதான் அது. 

பெளதிகக் கண்ணோட்டம் என்பது ஒரு நகரத்தின் கட்டமைப்பு, புவியியல், சுற்றுச்சூழல் , நில அமைப்பு, நகர அமைப்பு, கட்டடக் கலை, சமூக,அரசியல் தாக்கங்கள் ஏற்படுத்திய நகர மாற்றங்கள், தொழில் நுட்பங்கள் ஏற்படுத்திய விளைவுகள், மக்கள் தொகை அதிகரிப்பு, இவை காரணமாக நகரில் பல்வகைகளில் ஏற்பட்ட வளர்ச்சி, மற்றும் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றைப் பற்றிய வரலாறு என்று பொதுவாகக் கூறலாம். குறிப்பாகக் கூறினால் மேலும் விளக்கமாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

1 .நிலப்பயன்பாடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி  - நகரமொன்றின் நிலப்பயன்பாடு எவ்விதமிருந்தது ,காலத்துடன் எவ்விதம் மாறுதலடைந்தது என்பதை வெளிப்படுத்துவது அது பற்றிய வரலாறு.

2. கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு  - கட்டிடக்கலைப் பாணிகளின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள், நுட்பங்கள் மற்றும் அழகியல் கூறுகள் நகரத்தின் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகின்றன. இவற்றை வெளிப்படுத்தும் பெளதிகரீதியிலான வரலாறு.

3    சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் தாக்கங்கள்  -  ஒரு நகரத்தின் புவியியல் இருப்பிடம் (மலைகள், ஆறுகள், கடல்கள்) அதன் வளர்ச்சிப் போக்கை எவ்வாறு பாதித்தது என்பதை பெளதிக ரீதியிலான வரலாறு   வெளிப்படுத்துகிறது. 

4. சமூக-பொருளாதாரப் பரிணாமம்  -  நகரமொன்றின்  சமூக மற்றும் பொருளாதாரம் எவ்விதம் நகர அமைப்பைப் பாதிக்கின்றன என்பதைப் பெளதிகரீதியிலான வரலாறு எடுத்துரைக்கும்.

5. அழிவு மற்றும் மறுகட்டமைப்பு: போர்கள், இயற்கை சீற்றங்கள் அல்லது அரசியல் மாற்றங்கள் ஒரு நகரத்தின் பெளதிக அமைப்பை எவ்வாறு அழித்தன என்பதையும், பின்னர் அவை எவ்வாறு மறுகட்டமைக்கப்பட்டன என்பதையும் பெளதிக வரலாறு பதிவு செய்கிறது.         

6.     பழங்குடி அறிவு மற்றும் உள்ளூர் பாரம்பரியம்:  ஒரு நகரத்தின் பழமையான பெளதிக கட்டமைப்புகள், அங்கு வாழ்ந்த மக்களின் உள்ளூர் அறிவு, சுற்றுச்சூழல் பற்றிய புரிதல் மற்றும் பாரம்பரிய கட்டுமான முறைகளை வெளிப்படுத்தலாம். 

7.     எதிர்காலத் திட்டமிடல் மற்றும் சவால்கள்:  ஒரு நகரத்தின் பெளதிக வரலாற்றைப் புரிந்துகொள்வது, அதன் எதிர்காலத் திட்டமிடலுக்கு முக்கியமானது. கடந்தகாலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலமும், வெற்றிகரமான அணுகுமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் நிலையான மற்றும் மீள்திறன் மிக்க நகரங்களை உருவாக்க முடியும். புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களை வகுக்கும்போது, வரலாற்றுச் சூழல் மற்றும் பெளதிக அம்சங்களைப் புரிந்துகொள்வது, நகரத்தின் தனித்துவத்தை நிலைநிறுத்த உதவும்.

இவை பெளதிகரீதியிலான நகரொன்றின் வரலாறு வழங்கும் ஆரோக்கியமான விளைவுகள். அதே சமயம் மயூரநாதனின் இந்நூல் யாழ்ப்பாண நகரத்தின் அந்நியர் ஆதிக்கத்தின் கீழிருந்த காலத்தின் வரலாறு. இது அந்நியரின் ஆதிக்கத்தின் வரலாறு. இது தேவைதானா என்றும் சிலர் கேட்கக்கூடும். உண்மைதான்.இது அந்நியர் ஆதிக்கத்தின் கீழ் யாழ் மண் இருந்தபோது எப்படியிருந்தது என்பதை வெளிப்படுத்தும் வரலாறுதான். அதற்காக இது அந்நியர் பெருமை பேசும் வரலாறு அல்ல. அந்நோக்கத்தில்  இந்நூல் எழுதப்படவும் இல்லை. இது யாழ் மண்ணின் வரலாறு. மனிதன் ஒருவனின் வாழ்க்கையில் இன்பப்பக்கங்கள் அல்ல துன்பப்பக்கங்களும் நிச்சயம் இருக்கும், அம்மனிதனின் வரலாறு என்னும்போது அம்மனிதனின் இன்பப்பக்கத்தின் வரலாறு மட்டுமல்ல. துன்பப்பக்கத்தையும் உள்ளடக்கிய வரலாறுதான். அம்மனிதன் சிறையில் இருக்கலாம்,வெளியில் இருக்கலாம்,அம்மனிதனின் வரலாறு சுதந்திரமாக அவன் வெளியில் இருக்கும் வரலாற்றுடன் , சிறையில் அவன் இருந்த காலத்தையும் உள்ளடக்கியதுதான்.  

அது போன்றதுதான் நகரமொன்றின் வரலாறும், புகழ்பெற்ற துறைமுகப்பட்டினமாகப் புகழுடன் விளங்கிய யாழ்ப்பாண நகரம் சில நூற்றாண்டுகள் அந்நியர் ஆதிக்கத்தின் கீழும் இருந்தது. அக்காலகட்டத்தின் வரலாறு யாழ்மண்ணின் வரலாறு. அங்கு வாழ்ந்த மக்களின் வரலாறு. அதைத்தான் மயூரநாதனின் இந்நூலும் வெளிப்படுத்துகின்றது.அதனால்தான் இந்நூலின் முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது.

வரலாறும் அந்நியர் வரலாறும் பற்றி..

மேலும் அந்நியர் கால ஆட்சியில் ஒரு நகரத்தின் வரலாறு பதிவு செய்யப்படுவது, அது அந்நியரின் வரலாறாக இருந்தாலும்,  இது வெறும் அந்நியரின் வரலாறு  மட்டுமல்ல, நம் மண்ணிலும், நம் மக்களின் வாழ்விலும் அந்நிய ஆட்சி ஏற்படுத்திய ஆழமான தாக்கங்களின் வரலாறு.  அந்நிய ஆட்சி ஒரு நகரத்தின் பெளதிக, சமூக, பொருளாதார, மற்றும் கலாச்சார அமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்களை ஆவணப்படுத்துவது, அந்தத் தாக்கத்தின் முழு வீச்சையும் புரிந்துகொள்ள உதவுகிறது.  சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள், கட்டிடங்கள், பொது நிர்வாகக் கட்டமைப்புகள் போன்ற உள்கட்டமைப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன, அவை யாரால், ஏன் உருவாக்கப்பட்டன, அதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை அறிய  வழி வகுக்கின்றது.

ஒரு நகரம் அந்நியர் ஆட்சிக்கு முன் எப்படி இருந்தது, அந்நியர் ஆட்சியில் எப்படி மாறியது, ஆட்சிக்குப் பின் எப்படி பரிணாம வளர்ச்சி பெற்றது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க அந்நியர் காலப் பதிவுகள் அவசியம்.

அந்நியர்கள் தங்கள் தேவைகளுக்காக நகரத்தை எவ்வாறு வடிவமைத்தார்கள், அது உள்ளூர் சமூகத்தின் வளர்ச்சிக்கு எந்த அளவு உதவியது அல்லது தடையாக இருந்தது என்பதையும் அறியவும் அக்காலகட்ட வரலாறு உதவுகின்றது. 

அந்நியர்கள் தங்கள் நிர்வாக, அறிவியல், மற்றும் தொழில்நுட்ப அறிவை எவ்வாறு உள்ளூர் சூழலில் அறிமுகப்படுத்தினார்கள் என்பதை இந்த வரலாறு பதிவு செய்யும். இவை உள்ளூர் வளர்ச்சிக்கு எவ்வகையில் உதவின என்பதை அறிந்துகொள்ள இவ்வரலாறு துணை செய்யும்.

அதே சமயம், இந்த அறிவையும், உள்ளூர் வளங்களையும் பயன்படுத்தி எவ்வாறு தங்கள் நலன்களுக்காக சுரண்டினார்கள் என்பதையும் வரலாறு  அம்பலப்படுத்தக்கூடும். 

அந்நியர் ஆட்சி உள்ளூர் சமூக அமைப்பில், சமூக உறவுகளில், பொருளாதாரப் பிரிவினைகளில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பதிவுசெய்வது முக்கியம். புதிய சட்டங்கள், வரிவிதிப்புகள், நிர்வாக அமைப்புகள் எவ்வாறு சமூக மாற்றங்களைத் தூண்டின என்பதை அறியலாம். இவற்றைப்பற்றி அறிந்து  கொள்ள இவ்வகையான அந்நியக் காலகட்டப் பெளதிகரீதியிலான வரலாறு உதவும்.

அதே சமயம்   அந்நியர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள், கிளர்ச்சிகள், மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு இயக்கங்கள் பற்றிய பதிவுகளும், அந்நியர் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அவற்றின் வீரியத்தையும், பின்னணியையும் புரிந்துகொள்ள  அந்நியர் காலகட்ட வரலாறு  உதவி செய்யும்.

அந்நியர் வருகை கலாச்சாரக் கலப்புக்கு வழிவகுத்தது. புதிய மொழிகள், கல்வி முறைகள், மதங்கள், கலை வடிவங்கள் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டன, அவை உள்ளூர் கலாச்சாரத்துடன் எவ்வாறு இணங்கின அல்லது மோதின என்பதைப் பதிவுசெய்வது ஒரு நகரத்தின் பன்முக கலாச்சாரப் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அவ்வகையிலும் மயூரநாதனின் பெளதிகரீதியிலான வரலாற்றை எடுத்தியம்பும் இவ்வரலாற்று நூல் இருக்கின்றது.

இவ்வகையில் காலனித்துவக் கால வரலாற்றுப் பதிவுகள் ஒரு நகரத்தின் அடையாளத்தின் ஒரு பகுதியாகும்.  அந்நியர் காலப் பதிவுகள் சார்புத்தன்மை கொண்டவையாகவும், ஆதிக்கச் சக்திகளின் பார்வையை மட்டுமே பிரதிபலிப்பவையாகவும் இருக்கலாம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். ஆனால், அவற்றை விமர்சனபூர்வமாக அணுகி, உள்ளூர் மக்களின் குரல்களுடனும், பிற ஆதாரங்களுடனும் இணைத்துப் பார்க்கும்போது, அவை ஒரு நகரத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு அவசியமான, தவிர்க்க முடியாத கூறுகளாக மாறுகின்றன. இவை வெறும் அந்நியரின் வரலாறு அல்ல, அது நம்முடைய, பன்முகத்தன்மை கொண்ட, சவால்கள் நிறைந்த வரலாற்றின் ஒரு முக்கியமான அத்தியாயம்.

[தொடரும்]

girfinav@gmail.com

Tuesday, May 26, 2026

எம்ஜிஆர் சிறந்த நர்த்தகர்!



 

எம்ஜிஆர் & பத்மினி இருவரின் நடிப்பில் ஜொலிக்கும் இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படப்பாடல்களில் ஒன்று. முக்கிய காரணம் - எம்ஜிஆரின் நடனத்திறமை.

எம்ஜிஆர் மிகச்சிறந்த நர்த்தகர் என்பதை வெளிப்படுத்தும் பாடல் இது. பத்மினியைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். நாட்டியப்பேரொளி அவர். அவருடன் கூட எம்ஜிஆர் நடித்திருக்கும் இப்பாடலைப் பார்க்கும்போது அவரை விட அதிகமாக ஒளர்வது எம்ஜிஆர்தான் என்றுதான் நான் உணர்கின்றேன். காரணம் - பாடல் முழுவதும் வியாபித்துக்கிடக்கும் எம்ஜிஆரி உடல் அசைவுகள்.

குறிப்பாக பாடலின் ஆரம்பத்தில் 43 - 59 செக்கனில் எம்ஜிஆரின் உடல் அசைவுகளைக் கூர்ந்து பாருங்கள். தலைப்புறம் என்ன மாதிரி ஏனைய உடலின் பாகங்களிலிருந்து வேறுபட்டு ஆடுகின்றது. அசைகின்றது. அற்புதம்! தேர்ந்த நர்த்தகர் ஒருவரால் மட்டுமே இவ்விதமான உடல் அசைவுகளை வெளிப்படுத்த முடியும்.

இவ்விதமாகப் பாடல் முழுவதும் நடனத்திறமையை வெளிப்படுத்தும் உடல் அசைவுகள், முக அசைவுகள் பத்மினியை விட அதிகம் இருப்பதால்தான் எம்ஜிஆர் இப்பாடலில் பத்மினியை விடச் சிறிது அதிகமாக என்னைக் கவர்கின்றார்.

https://www.youtube.com/watch?v=-cyfzYIXK8g

படம் - மதுரை வீரன்
பாடகர்கள் - டி.எம்.எஸ் & ஜிக்கி
இசை; ஜி.ராமநாதன்
பாடலாசிரியர் - தஞ்சையா என்.ராமையாதாஸ்

டிஜிட்டல் ஓவியம் - சாட்ஜிபிடி வழி வநகி



Friday, May 22, 2026

ஆதி டிவி (AATHI TV): (நேர்காணல்) அன்றும் இன்றும் வரலாற்றுப் பேழை - யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு!


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை , மே 24, 2026 அன்று ஸ்கார்பரோ சிவிக் சென்டரில் (டொரோண்டோ, கனடா) நடைபெறவுள்ள கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ' யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)' நூல் வெளியீடு பற்றி , ஆதி தொலைக்காட்சியில் (AATHI TV) நடைபெற்ற நேர்காணல் இது. இதில் நானும், நண்பர் எழுத்தாளர் கனடா மூர்த்தியும் நேரில் கலந்து கொண்டோம். மெய்நிகர் வழியாக நூலாசிரியர் இ.மயூரநாதன் கலந்து கொண்டார்.


தற்போது இந்நேர்காணல் ஆதி தொலைக்காட்சியின் யு டியூப் சானலில் பதிவேற்றப்பட்டுள்ளது. காணொளியைப் பாருங்கள். நூல் வெளியீட்டுக்கு வந்து ஆதரவு வழங்குங்கள். கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

காணொளிக்கான இணைப்பு - https://www.youtube.com/watch?v=JMogjIFOmZE

ஆதி டிவி (AATHI TV): (நேர்காணல்) அன்றும் இன்றும் வரலாற்றுப் பேழை - யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு!

தொகுப்பாளர்: ஜனந்தினி ஜெயனபவன்

சிறப்பு விருந்தினர்:
இ. மயூரநாதன்
மு. நாராயண மூர்த்தி
வ.ந. கிரிதரன்

தொழில்நுட்பம்: பிரதாப் , ஹரேன்

வழிநடத்தல்: விஜிதா விமலன்

தயாரிப்பு : ஆதி டிவி (Aathi TV)

பாரதியார் பாடல் : சரஸ்வதி காதல் வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.கூடப் பாடும் பெண் AIயின் புத்திரி.


- வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.கூடப் பாடும் பெண் AIயின் புத்திரி. டிஜிட்டல் ஓவியம் - சாட்ஜிபிடி வழி வநகி -


பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேன் அங்குப்
பள்ளிப் படிப்பினிலே -- மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் -- அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும் -- கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேனம்மா!     

பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேன் 

ஆடிவரு கையிலே -- அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள்; கையில்
ஏடு தரித்திருப்பாள், -- அதில்
இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை
நாடி யருகணைந்தால், -- பல
ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்; ?இன்று
கூடி மகிழ்வ மென்றால், -- விழிக்
கோணத்தி லேநகை காட்டிச்செல் வாளம்மா!

பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேன் 

Tuesday, May 19, 2026

வ.ந.கிரிதரன் பாடல், வ.ந.கிரிதரன் குரலில் : சில தருணங்கள்!


வ.ந.கிரிதரன் பாடல், வ.ந.கிரிதரன் குரலில்  : சில தருணங்கள்!

இசைத்துப் பாடுவது SUNO 5.5.  டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி



இருப்பில் சில தருணங்களைப் பற்றிய நினைவுகள் சிந்தையை விட்டு நீங்குவதேயில்லை. இத்தருணமும் அத்தகையதே. கறுப்பு ஜூலையில் உயிர் தப்ப ஓடிக்கொண்டிருக்கையில் அருகில் என்னருகே சிறகடிக்கிறது சிட்டு ஒன்று. அப்பொழுது நான் நினைத்தேன் 'சிட்டுக்குரிய சுதந்திரம் கூட இந்நாட்டுக் குடிமகனாகிய எனக்கு இல்லை.' அத்தருணமும் , நினைப்பும் நிரந்தரமாகவே என் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன. இவ்வனுபவம் பற்றி எனது 'குடிவரவாளன்' நாவலிலும் பதிவு செய்துள்ளேன்.



சில தருணங்கள்!

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே  இல்லை.

அத்தகைய தருணங்களில் ஒன்றே இத்தருணம்.
இத்தகைய தருணங்கள் வலியைத் தருபவை.
நினைத்துப் பார்க்கின்றேன் மீண்டும் ஒருதடவை.
நேற்றுத்தான் போலின்னும் நினைவில் தெரிகிறது.

Sunday, May 17, 2026

பன்முக ஆளுமை மிக்க ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள் மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ்


பன்முக ஆளுமை மிக்க ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள் மறைந்த தகவலினை முகநூல்  வாயிலாக அறிந்தேன். துயருற்றேன். அவர் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்குமென் ஆழ்ந்த இரங்கல்.

அவரை நான் அதிகம் சந்தித்ததில்லை. ஓரிரு தடவைகள் நேரில் சந்தித்துள்ளேன். ஆனால் அவர் என்னுடன் முகநூல் மெசஞ்சர் மூலம் தொடர்பிலிருந்தார். கடந்த 2019லிருந்து ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாள் அன்று மெசஞ்சர் மூலம்   வாழ்த்துச் செய்தியை அனுப்பிக்கொண்டிருந்தார். தான் எழுதும் ஆங்கிலக்கட்டுரைகள், அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கான இணைய இணைப்புகளை மெசஞ்சர்வாயிலாக அனுப்புவார். அவ்விதம் அவர் அனுப்பிய இறுதித்தகவல் மார்ச் 24 வந்திருந்தது. பாடகர் டி.எம்.எஸ். செளந்தரராஜன் பற்றிய பதிவு. ஒரு தடவை பிரிகேடியர் பால்ராஜ் பற்றிய அவரது கட்டுரைக்கு நான் எழுதியபோது அதற்கு அவரது வலைப்பதிவில் எதிர்வினை எழுதியதுடன் , மெசஞ்சர் மூலம் விரிவான பதிலையும் அனுப்பியிருந்தார்.

Saturday, May 16, 2026

'காலம்' இதழ் ஆதரவில் மூன்று நூல்களின் வெளியீடும் வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சியும்!


அண்மையில் கனடாவில் காலம் இதழின் ஆதரவில் நடைபெற்ற மூன்று நூல்களின் வெளியீட்டில் உரையாற்றியவர்களின் உரைகளை உள்ளடக்கிய முழுமையான காணொளி ஊடகவியலாளர் கிருபா கந்தையாவின் 'தடயத்தார்' யு டியூப் சானலில் பதிவேற்றப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தி வரும் கிருபா கந்தையா அவர்களுக்குப் பாராட்டும் , நன்றியும்.
 
இங்கு உரையாற்றியவர்களில் நானும் ஒருவன். அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் அறிவியல் நூலான 'ஒளியிலிருந்து இருளுக்கு' என்னும் நூல் பற்றிய எனது உரையினையும் இக்காணொளி முழுமையாக உள்ளடக்கியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இக்காணொளியைப் பாருங்கள். அனைவர்தம் உரைகளையும் கேளுங்கள். கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். காணொளிக்கான இணைப்பு - https://www.youtube.com/watch?v=cdGp-qqsQ5s
 

 

நூலகம் தளத்தின் ஆரம்பக்கால வரலாறும் , அமரர் ஈழநாதனின் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன் -

அமரர் ஈழநாதன் 


எண்ணிம நூலகமான 'நூலகம்' தளம் மகத்தான வரலாற்றுப் பணியினை ஆற்றி வருகின்றது.  இன்று பெரியதொரு நிறுவனமாக வளர்ந்து நிற்கும் நூலகம் நிறுவனத்தின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள இப்பதிவு துணை புரியும். பதிவுகள் இணைய இதழில் வெளியான இக்கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்து கொள்கின்றேன்.  இப்பதிவுகள் நூலகம் நிறுவனத்தின் உருவாக்கத்துக்குப் பங்களித்தவர்கள் பற்றிய தகவல்களைத் தருவதால் முக்கியமானது. நூலகத்தின் வரலாறு முறையாகப் பதிவு செய்யப்பட இப்பதிவு உதவியாகவிருக்கும்.  மேலும் அமரர் ஈழநாதனின் ஆரம்பக் காலத்துப் பங்களிப்புகளை மறந்து விட முடியாது. இப்பதிவுகள் அவரது பங்களிப்பையும் எடுத்துக்காட்டும்.

1. பதிவுகள் - மே 2006 இதழ் 77  -  நூலகக் குழுவிலோர் கருத்துப் பரிமாறலும், விளக்கமும்! - https://www.geotamil.com/pathivukal/noolagam_forum_discussion.html

2. பதிவுகள் - 15 ஜூலை 2020  - வரலாற்றுச் சுவடுகள்: 'நமது வரலாற்றை நாங்கள்தாம் ஆவணப்படுத்த வேண்டும்' - பதிவுகள் -வரலாற்றுச் சுவடுகள்: 'நமது வரலாற்றை நாங்கள்தாம் ஆவணப்படுத்த வேண்டும்' - பதிவுகள் -     - வ.ந.கிரிதரன் - 

தில்லைநாதன் கோபிநாத் எழுதிய 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்'அண்மையில் நண்பர் தில்லைநாதன் கோபிநாத் எழுதிய 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்னும் நூலை வாசித்தேன். மேற்படி நூலின் தலைப்பு அவ்விதமிருப்பதால்தான் இப்பதிவை எழுத வேண்டிய தேவையேற்பட்டது. சில காரணங்களால் தவிர்க்கப்பட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டி ஆவணப்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்பதால்தானிந்த பதிவு. 'பதிவுகள்' இணைய இதழ் நூலகத்தின் ஆரம்பகாலத்திலிருந்தே அது பற்றிய செய்திகளை வெளியிட்டு அதன் முயற்சிகளுக்கு ஆதரவு வெளியிட்டு வருகின்றது. உலகளாவியரீதியில் தன் வாசகர்கள் மத்தியில் அது பற்றிய செய்திகளை எடுத்துச்செல்ல உதவி வருகின்றது. தனிப்பட்டரீதியிலும் எனது  நூல்கள்,மின்னூல்கள் ,தனிப்பட்ட சேகரங்களை நூலகத்திட்டத்துக்கு வழங்கியுள்ளேன். என் நாவலான 'குடிவரவாளன்' நாவலையும் வழங்கியுள்ளேன். ஆனால் அவை தனிப்பட்ட ஒருவரின் பங்களிப்பு என்பதால் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதொன்றல்ல. இது போல் எழுத்தாளர்கள் பலர் , தனிப்பட்டவர்கள் பலர் தம்மிடமிருந்த நூல்களை நூலகத்திட்டத்துக்கு வழங்கியுள்ளார்கள். ஆனால் 'பதிவுகள்' என்னும் இணைய இதழ் நூலகத்திட்டம் பற்றிய தகவல்களைப்பிரசுரித்து உலகளாவியரீதியில் அது பற்றிய விபரங்களை எடுத்துச் சென்றிருப்பதால்  நூலில் அது பற்றிக் குறிப்பிட்டிருக்கலாமென்று தோன்றியது.

நூலின் தலைப்பு 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்றிருப்பதால் , திண்ணை போன்ற இணைய இதழ்களெல்லாம்  குறிப்பிடப்பட்டுள்ளதால் ,'பதிவுகள்' பற்றியும் ஒரு வரியாவது குறிப்பிட்டிருக்கலாமென்று தோன்றியது. கோபி வேண்டுமென்றே தவிர்த்திருக்க மாட்டார். சில வேளை ஆரம்பகாலப் பதிவுகளில் வெளியான தகவல்கள் அவருக்கு முக்கியத்துவமில்லாமலிருந்திருக்கலாம் அல்லது ஞாபகத்திலில்லாமலிருந்திருக்கலாம். 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்னும் நூலின் தலைப்புக்கேற்ப 'பதிவுகள்' இணைய இதழும் ஆவணப்படுத்தப்பட வேண்டிய தன்னைப்பற்றிய தகவலைத் தான் தான் ஆவணப்படுத்த வேண்டுமென்ற நிலையில் இப்பதிவை முன் வைக்கின்றது. அதற்கொப்ப 2000ஆம் ஆண்டிலிருந்து பதிவுகள் இணைய இதழில் நூலகம் பற்றி வெளியான தகவல்கள் சிலவற்றைக் கீழே தருகின்றோம்.

நூலகம் தளத்தின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. நூலகம் தளம் இல்லாவிடின் பல இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய தகவல்கள் பலவற்றை என்னால் பெறவே முடியாது போயிருக்கும். இதன் வளர்ச்சிக்காக உழைத்த , உழைக்கும் அனைவரையும் வாழ்த்துகின்றேன்.

Thursday, May 14, 2026

ஒரு தகவலுக்காக: தொன்மை மிகு நல்லை மூதூர்! - வ.ந.கிரிதரன் -


எழுநா இதழில் வெளியான கலாநிதி சிவா  தியாகராஜாவின் 'யாழ்ப்பாணப் பட்டினம்: பொங்கொலிநீர்ச் சிங்கைநகர் – பகுதி 1' என்னும் கட்டுரையில் நல்லூர் நகர் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண வைபவமாலையிலும், கைலாயமாலையிலும் ஆரியச் சக்கரவர்த்திகளின் தலைநகர் நல்லூர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் முற்பட்ட தமிழ் நூல்களிலோ சாசனங்களிலோ நல்லூரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. ஆகவே யாழ்ப்பாண மன்னர்களுடைய முதலாவது தலைநகர் சிங்கைநகர் என்றும் பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பெருமாள் நடத்திய படையெடுப்பிற்குப் பின்னரே இரண்டாவது தலைநகரான நல்லூர் அமைக்கப்பட்டது என்றும் கொள்ளவேண்டும். (ஞானப்பிரகாசர் 1928: பக் 106-107). இங்குள்ள 'யாழ்ப்பாண வைபவமாலையிலும், கைலாயமாலையிலும் ஆரியச்சக்கரவர்த்திகளின் தலைநகர் நல்லூர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் முற்பட்ட தமிழ் நூல்களிலோ சாசனங்களிலோ நல்லூரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை.' என்னும் கூற்று கலாநிதி சிவா தியாகராஜாவின் கூற்று என்று கருதுகின்றேன். 

Sunday, May 10, 2026

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!



யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  முன்னாள் மாணவரும் , கட்டடக்கலைஞரும் வரலாற்றறிஞருமான இ.மயூரநாதன் எழுதிய 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ' என்னும் நூலிற்கான வெளியீட்டு நிகழ்வு  மே 24, 2026 அன்று பிற்பகல் 2 மணிக்கு , ஸ்கார்பரோ சிவிக் சென்டரில் நடைபெறவுள்ளது.  கல்விக்கூடங்களின் முன்னாள் மாணவர்கள்  அக்கல்லூரிகளின் சொத்துக்களே. அவர்கள் பெருமை மிகு சாதனைகள் அக்கல்விக்கூடங்களின் சாதனைகளே.  மயூரநாதனின் இந்த வரலாற்று நூலானது அவ்வகையில் முக்கியமானதொரு சாதனை.

தமிழர் வரலாற்று நூல்களில் இந்நூல் மிகவும் முக்கியத்துவம் மிக்கது. யாழ்ப்பாண நகரின் பெளதிகக் கட்டமைப்பு, கட்டடச்சூழல் போன்றவற்றின் அடிப்படையில் நகரின் நானூறு ஆண்டு வரலாற்றை அணுகுவது இந்நூலின் முக்கிய சிறப்பம்சம். இத்தகவலை உங்களுக்குத் தெரிந்தவர்களுடன், தெரிந்த அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.  

யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி மற்றும் மொறட்டுவைப் பல்கலைககழக  முன்னாள் மாணவர் அமைப்புகளே!  உங்கள் முன்னாள் மாணவர் ஒருவரின் வரலாற்றுச் சாதனை இது. இதனை ஆதரிப்பது அவசியம். உங்கள் அமைப்பு அங்கத்தவர்களுடன் இத்தகவலைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக இருங்கள்.

Thursday, May 7, 2026

மகாகவி பாரதியாரின் பாடல் வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5 AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி


மகாகவி பாரதியாரின் பாடல் வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது  SUNO 5.5  AI  ஓவியம்:  சாட் ஜிபிடி   வழி வநகி


மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!

ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்து கை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்

மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!

தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய்,புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய்,சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்

மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!

Monday, May 4, 2026

நடிகர் விஜய்யின் ஆச்சரியப்படத்தக்க வெற்றியின் தன்மை பற்றிய ஓர் அலசல்!


நடந்து முடிந்த தமிழகச் சட்டசபைத்  தேர்தலில் நடிகர் விஜய் கருத்துக்கணிப்புகள், மற்றும் என்னைப்போன்றவர்களின் ஊகங்களைப் பொய்யாக்கி முதலிடத்தில் 108 தொகுதிகள் பெற்று முன்னிலையில் இருக்கின்றார். தனது பட நாயகன்களைப்போல் சவால் விட்டு, பஞ்ச் வசனங்கள் பேசி, தனியாக நின்று அரசியலில் பழம் பெரும் பெருச்சாளிகளை எல்லாம் ஓரங்கட்டி முன்னுக்கு வந்திருக்கின்றார். அதற்காக அவருக்கு என் வாழ்த்துகள். 

தமிழக மக்கள் புத்திசாலிகள். எச்சரிக்கையுடன் கூடியதொரு வெற்றியைத்தான் விஜய்யிற்குக் கொடுத்திருக்கின்றார்கள். அவருக்கு அறுதிப்பெரும்பான்மையற்ற வெற்றியைத்தான் கொடுத்திருக்கின்றார்கள். எவ்விதம் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசித்து விஜய் முதலமைச்சர் நாற்காலியில் உட்காருவார். ஆட்சியில் அமர்வார். பார்ப்போம் என்று எச்சரிக்கையுடன் கூடிய வெற்றியைக் கொடுத்திருக்கின்றார்கள்.

விஞ்ஞான அறிவு நூல்களை வெளியிட்ட ஹிக்கின்பாதம்ஸ் பதிப்பகம்!

  என் பதின்ம வயதுகளில் நான் யாழ் பொதுசன நூலகத்தில் விரும்பி வாசித்த நூல்களில் அறிவியல் நூல்களுக்கும் முக்கிய இடமுண்டு. இது பற்றி எனது பல முக...