![]() |
| - ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா - |
நான் எப்பொழுதுமே ஒரு குழந்தையிலக்கிய நூலொன்றினை அணுகும்போது ஒரு குழந்தை தன் சொந்த அனுபவத்தில் எவ்விதம் அந்நூலினை அணுகுமோ அவ்விதமே என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் அணுகுவேன். என் பால்ய காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த குழந்தைக் கதைத் தொகுப்புகளில் முக்கியமான அம்சம். அத்தொகுப்பின் அட்டைப்பட ஓவியமும், அதில் பாவிக்கப்பட்டுள்ள வர்ணங்களும், உள்ளே ஆக்கங்களுக்குப் பாவிக்கப்பட்டுள்ள ஓவியங்களும் மற்றும் கூறப்படும் மொழியும்தாம். எனக்கு எப்பொழுதுமே நூலொன்று பிடிப்பதாகவிருந்தால் மேற்கூறப்பட்டுள்ள சகல அம்சங்களும் முக்கியமானவை. எனக்கு மட்டுமல்ல குழந்தைகள் அனைவருக்கும் இக்கூற்று பொருந்தும். குழந்தைப்பருவத்தில் குழந்தையொன்றின் சிந்தையில் நூலொன்றின் அட்டைப்படம் கற்பனைச்சிட்டினைச் சிறகடிக்கப் பறக்க வைக்கின்றது. அந்நூலிலுள்ள ஓவியங்களிலுள்ள உருவங்கள் அவை மானுடர்களாகவிருக்கட்டும் அல்லது ஏனைய உயிரினங்களாகவிருக்கட்டும் அவற்றைப்பார்க்கும் குழந்தையொன்றின் உள்ளத்தில் களிப்பினைத தருகின்றன. சிறு வயதில் கண்ணன் சிறுவர் சஞ்சிகையில் வெளியாகும் சிட்டுக்கள் போன்ற உயிரினங்களைப்பற்றிய குழந்தைக் கவிதைகளை இரசிக்கும் அதே ஆர்வத்துடன் நான் அப்படைப்புகளுடன் வெளியாகும் ஓவியங்களையும் இரசிப்பேன். இவற்றைப்போல் அப்படைப்புகளை வெளிப்படுத்தும் எளிமையான மொழி நடையும் எனக்கு மிகவும் பிடித்தவை. வாண்டுமாமா, குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா போன்றோரின் படைப்புகளின் சிறப்புக்கு முக்கியக்காரணம் அவற்றை விபரிக்கும் எளிய, இனிய மொழிநடையே. இவ்விதமான என் மற்றும் குழந்தைகளின் பொதுவான உளவியலின் அடிப்படையிலேயே நான் இவ்வகையான குழந்தைப்படைப்புகளையும் சரி, நூல்களையும் சரி அணுகுவது வழக்கம். அதே அணுகல் முறையினைத்தான் அண்மையில் 'டொராண்டோ' நகரில் வெளியான எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் குழந்தைகளுக்கான நூல்களுக்கும் கையாண்டேன். அவற்றில் இங்கு நான் எடுத்துக்கொண்ட நூல் அவர் எழுதிய 'சிறுவர் கதைகள்' என்னும் நூலே.




