Monday, March 19, 2018

ழகரம் 5 இலக்கிய இதழ் (மலர்) பற்றி... வ.நகிரிதரன் -

ழகரம் 5 இலக்கிய மலரின் வடிவமைப்பைப் பொறுத்த அளவில் ஓரிரு புறக்கணிக்கத்தக்க குறைபாடுகள் இருந்தாலும், மொத்தத்தில் நிறைவான வடிவமைப்பு. இதுவரை கனடாவில் வெளியான இலக்கிய இதழ்களில் தரத்தில் இதனை முதல் நிலையில் வைப்பதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை. சிறிய குறைபாடுகள் என்றால்.. அதற்கு உதாரணமாக இதழில் வெளியான எனது கட்டுரையான அ.ந.க.வின் 'மனக்கண்' கட்டுரையைக் குறிப்பிடலாம். இந்தக் கட்டுரைக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. அது: இதுவரையில் அ.ந.க.வின் ஒரே நாவலான 'மனக்கண்' நாவலுக்கு யாருமே விமர்சனம் எழுதவில்லை என்னைத்தவிர. அதற்கு நாவல் தொடராக வெளிவந்தபோதும் இதுவரையில் நூலாக வெளிவராததும் காரணங்களிலொன்றாக இருக்கலாம்.

இதழில் கட்டுரையில் எனக்கு நாவல் பிடித்திருப்பதற்கு நான்கு காரணங்களைக் குறிப்பிட்டிருப்பேன். அதில் முதல் மூன்று காரணங்களையும் உரிய சிறிது பெரிய , தடித்த எழுத்துருக்களைப்பாவித்து வடிவமைத்திருக்கின்றார்கள். நான்காவது காரணமான 'நாவல் கூறும் பொருள்' என்பதற்கும் அவ்விதம் பாவிக்க மறந்து விட்டார்கள். மேலும் கட்டுரையில் 'மனக்கண்' நாவலிலிருந்து சில பகுதிகளை உதாரணத்துக்காகப் பாவித்திருக்கிறேன். அப்பகுதிகளை ஏனைய பகுதிகளிலிருந்து சிறிது வேறுபடுத்திக்காட்டியிருக்க வேண்டும். அதனைச்செய்யத்தவறி விட்டார்கள். ஆனால் இந்தக் குறைகள் முன்பே கூறியுள்ளதுபோல் புறக்கணிக்கத்தக்கவை.

மலரின் முதலாவது கட்டுரையான 'தமிழ்நதி'யின் 'எழுத்தின் பாலினம்' இதழின் முக்கியமான கட்டுரைகளிலொன்று. மேனாட்டு இலக்கியத்தில் அன்றிலிருந்து இன்றுவரை, எவ்விதம் பெண் எழுத்தாளர்கள் அவர்கள் பெண்களாக இருக்கின்ற காரணத்தினால் ஆண் பெயர்களில் மறைந்திருந்து எழுதினார்கள், எழுதி வருகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் நல்லதொரு கட்டுரை. கட்டுரை புகழ் பெற்ற ஆண் எழுத்தாளர்கள் பலரால் காலத்துக்குக் காலம் பெண் எழுத்தாளர்கள் எவ்வளவுதூரம் அவர்களது பால் (Gender)  காரணமாகக் கீழத்தரமாக எள்ளி நகையாடப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கட்டுரை உதாரணங்களுடன் வெளிப்படுத்துகிறது.

'தோழர் பால'னின் 'இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு' பற்றி.... வ.ந.கிரிதரன் -

தோழர் பாலனின் 'இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு' என்னும் சிறிய நூல் தோழர் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. 'கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது ' என்பார்கள். அதற்கொப்ப அளவில் சிறியதானாலும், கூறும் பொருளில் காத்திரமானதாக, புரட்சிகரமானதாக அமைந்துள்ள நூலிது. இலங்கை மீதான இந்தியாவின் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவரீதியிலான தலையீடுகளை விபரிப்பதும், இவற்றால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்களை வெளிப்படுத்துவதும், எவ்விதம் இந்தியத்தலையீட்டிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கு இலங்கையின் மக்கள் அனைவரும் இன, மத , மொழி ரீதியிலான பிரிவுகள் ஏதுமற்று , ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதையும் தர்க்கரீதியாக விபரிப்பதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். இது தன் நோக்கத்தில் வெற்றியே அடைந்திருக்கின்றது என்பதை இதனை வாசிக்கும்போது உணர முடிகின்றது.

பொதுவாக இந்தியாவின் தலையீடு இலங்கையிலுள்ளது என்பது யாவரும் அறிந்ததே. இந்தியாவை மீறி இலங்கையால் எதுவுமே செய்ய முடியாது என்பதும் யாவரும் அறிந்ததே. இந்தியாவைப்பொறுத்தவரையில் அதன் அயல் நாடுகளுடனான வெளிநாட்டுக்கொள்கை அதன் தேசிய நலன்களுக்கு அமையவே அமைந்துள்ளது. அயல் நாடுகள் அதன் தேசிய நலன்களுக்கு முரணாகச் செயற்படும்போது அது அந்நாடுகளை ஆக்கிரமிக்கவும் தயங்காது என்பதை வரலாறு காட்டி நிற்கிறது. அயல் நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தனது நலன்களுக்குச் சார்பாகப் பயன்படுத்துவதில் இந்தியா ஒருபோதுமே தயங்கியதில்லை. இதனை இந்நூல் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இதுவரை காலம் இலங்கையின் மீதான இந்தியத்தலையீட்டினை வரலாற்றுக்கண் கொண்டு , சுருக்கமாக ஆராயும் இந்நூல், , இந்தியா எவ்விதம் தன் அயல்நாடுகளில் தன் நலன்களுக்காகத்தலையிடுகின்றது என்பதையும் புள்ளி விபரங்களுடன் வெளிப்படுத்துகிறது.

ராஜாஜி ராஜகோபாலனின் 'குதிரையில்லாத ராஜகுமாரன்' பற்றிச்சில குறிப்புகள்... வ.ந.கிரிதரன் -

ராஜாஜி ராஜகோபாலனின் சிறுகதைத்தொகுப்பான 'குதிரையில்லாத ராஜகுமாரன்'  படித்தேன்.  தொகுப்பில் நான் வாசித்த கதைகளின் அடிப்படையில் என் கருத்துகளை இங்கு பதிவு செய்கின்றேன்.

நான் வாசித்த கதைகளில்  மிகச்சிறந்த சிறுகதைகளாக நான் கருதுவது 'பத்தியம்' மற்றும் 'கடவுளும் கோபாலபிள்ளையும்' ஆகிய கதைகளைத்தாம். 'பத்தியம்'  ஆயுர்வேத வைத்தியர் மயில்வாகனம் அவர்களைப்பற்றியது. கதையில் ஒன்றிற்கும் அதிகமான இடங்களில் ஆயுள்வேத வைத்தியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பரியாரியார் அல்லது வைத்தியர் மயில்வாகனம் என்றழைக்கப்படும் ஆயுர்வேத வைத்தியரின் இன்றைய நிலை 'மேனாட்டு' வைத்திய முறையின் காரணமாகப்பாதிக்கப்பட்ட நிலையில் , வறுமையில் அவர் வாடுகின்றார். அவ்விதம் வாடும் நிலையில், அவரிடம் அவரது ஊரைச்சேர்ந்த இரு இளைஞர்கள் வருகின்றார்கள். எதற்கு? கொழும்பில் வேலை பார்க்கும் அவர்கள் , விடுமுறைக்காக ஊருக்கு வருகின்றார்கள். வந்தவர்கள் விடுமுறைக்காலத்தைச்சிறிதி நீட்டி விட்டார்கள். அதற்குக்காரணத்தைக்கூற வேண்டுமே? அதற்காக ஆயுர்வேத வைத்தியரிடம் ஒரு 'மெடிக்கல் ரிபோர்ட்' காசு கொடுத்து வாங்க வருகின்றார்கள். ஆனால் அவர்களோ தமது நோய்களுக்காக ஆங்கில வைத்தியத்தை நாடுபவர்கள் என்பதை அறிந்ததும் மயில்வாகனத்தார் ' சேர்ட்டிபிக்கட்டை நம்பி வந்தால் போதுமோ? வைத்தியத்தை நம்பியல்லோ வரவேணும்" என்கின்றார். அதற்கு அவர்கள் காசு எவ்வளவென்றாலும் தரத்தயார் என்கின்றார்கள். அதற்கு அவரோ "அது எனக்குத்தேவையில்லை. நான் வைத்தியத்துக்கு மாத்திரம் காசு வாங்குவன். போட்டு வாருங்கோ" என்று கூறி அனுப்பி விடுகின்றார். ஒரு சிறுகதைக்குரிய அம்சங்களுடன் , நவீனத்தொழில் நுட்பம் எவ்விதம் பாரம்பரியத்தொழில் நுட்பத்தினைப் பாதிக்கின்றது என்பதை எடுத்தியம்பும் 'பத்தியம்' அதே சமயம் வைத்தியர் மயில்வாகனத்தாரின் தன் தொழில் மீதான பக்தியினையும், கொள்கைப்பிடிப்பினையும் எடுத்துக்காட்டுகிறது. வறுமைப்பிடியில் வாடும் சமயத்தில் கூட அவர் பணத்துக்காகத் தன் னை விற்றுவிடவில்லை. கதை 'டாக்டர் மயில்வாகனம் புரண்டு படுத்தார்' என்று ஆரம்பமாகின்றது. ஆயுர்வேத வைத்தியரான, பரியாரியான மயில்வாகனத்தாரை வைத்தியர் மயில்வாகனத்தார் புரண்டு படுத்தார் என்று ஆரம்பித்திருக்கலாமென்று தோன்றியது. ஆங்கில வைத்திய முறையினை எதிர்ப்பவர் அவர். அவரை அறிமுகப்படுத்தும்போது ஆங்கிலத்தைத்தவிர்த்திருக்கலாமே.

பொன் குலேந்திரனின் 'முகங்கள்' - வ.ந.கிரிதரன் -

கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் பொன்.குலேந்திரனின் 'முகங்கள்' சிறுகதைத்தொகுதியினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. 'ஓவியா பதிப்பகம்' (தமிழகம்) வெளியீடாக , அழகான அட்டையுடன் வெளிவந்திருக்கின்றது. தான் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களை மையமாக வைத்து அவரால் எழுதப்பட்ட 21 சிறுகதைகளின் தொகுப்பிது.

இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளை பின்வருமாறு வகைப்படுத்த முடிகிறது: குறிப்பிட்ட ஆளுமை மிக்க ஒருவர் பற்றிய விவரணச்சித்திரங்களாச் சில கதைகள் அமைந்துள்ளன. சந்திக்கடை சங்கரப்பிள்ளை, வைத்தியர் வைத்திலிங்கம், சண்டியன் சங்கிலி இஸ்மாயில், நாட்டாண்மை நாச்சிமுத்து, நாவிதர் நாகலிங்கம், பியூன் பிரேமதாசா, அரசாங்க அதிபர அபயசேகரா, சின்னமேளக்காரி சிந்தாமணி போன்ற சிறுகதைகளை இவ்வகையில் அடக்கலாம். இவ்விதமான சிறுகதைகள் பொதுவாக ஒருவரைப்பற்றி அல்லது ஒரு பிரதேசமொன்றினைப்பற்றிய விவரணைகளாக, ஆரம்பம் , முடிவு போன்ற அம்சங்களற்று அமைந்திருக்கும். இதற்கு நல்லதோர் உதாரணமாகப் 'புதுமைப்பித்தனின்' புகழ் பெற்ற சிறுகதைகளிலொன்றான 'பொன்னகரம்' சிறுகதையினைக் குறிப்பிடலாம்.

இன்னும் சில சிறுகதைகள் குறிப்பிட்ட ஆளுமை மிக்க ஒருவரைபற்றிய விவரணையாக இருக்கும் அதே சமயம், எதிர்பாராத திருப்பமொன்றுடன், அல்லது முக்கியமானதொரு நீதியினைப் புகட்டும் கருவினைக்கொண்டதாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

Sunday, March 18, 2018

'பதிவுகள்' இணைய இதழில் வெளியான நூல் மதிப்புரைகள் சில! - வ.ந.கிரிதரன் -

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்ப காலகட்டத்தில் நூல் மதிப்பரைகளை வெளியிட்டு வந்தது. நூல் மதிஉப்புரைக்காக தமது படைப்புகளின் இரு பிரதிகளை அனுப்பி வைககவும் என்ற எமது வேண்டுகோளினையேற்று, எழுத்தாளர்கள் தமது படைப்புகளைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைத்தார்கள். நூல் மதிப்புரை பகுதிக்காக அவ்வப்போது பல்வேறு புனைபெயர்களில் மதிப்புரைகள் எழுதுவதுண்டு. அவ்விதம் அவதானி, திருமூலம், மார்க்சியன், ஊர்க்குருவி, வானதி  போன்ற புனைபெயர்களில் எழுதிய நூல் மதிப்புரைககளில் சில  மீள்பிரசுரமாகின்றன ஒரு பதிவுக்காக.

பின்வரும் நூல்களுக்கான மதிப்புரைகளை இங்கு நீங்கள் வாசிக்கலாம்: கே.எஸ்.சிவகுமாரனின் 'அசையும் படிமங்கள் , ஆழியாளின் 'உரத்துப் பேச..., ' நடேசனின் 'வாழும் சுவடுகள்', பாரிஸிலிருந்து வெளிவரும் உயிர் நிழல்!,  அசை அரையாண்டிதழ், ஊடறு: பெண்படைப்பாளிகளின் தொகுப்பு, திலகபாமாவின் கவிதைகள்!, பா.அ. ஜயகரனின் 'எல்லாப் பக்கமும் வாசல்'! , ஆசி. கந்தராஜாவின் 'பாவனை பேசலன்றி..', செ.க.வின் 'சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை', நடேசனின் வண்ணத்திக்குளம்: சில குறிப்புகள்! & காஞ்சனா தாமோதரனின் 'இக்கரையில்..'

மதிப்புரைகளுக்காக நூல்கள் அதிக அளவில் வரத்தொடங்கியதால் அப்பகுதியினை நிறுத்தி வைத்தோம். அதற்குப்பதிலாகத் தற்பொழுது பதிவுகள் இணைய இதழுக்கு நூல்கள் பற்றி அனுப்பப்படும் மதிப்புரைகளை 'நூல் அறிமுகம்' என்னும் பகுதியில் வெளியிட்டு வருகின்றோம். ஏற்கனவே 'பதிவுகளி'ல் வெளியான மதிப்புரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு பதிவுக்காக அவ்வப்போது மீள்பிரசுரமாகும்.


1. . கே.எஸ்.சிவகுமாரனின் 'அசையும் படிமங்கள்'
வெளியீடு: மீரா பதிப்பகம், 191/23 ஹைலெவல் வீதி, கொழும்பு -06, இலங்கை. தொலைபேசி: 826336. விலை: 150 ரூபா | ஆசிரியரின் மின்னஞ்சல்: kssivan.1@juno.com. - பதிவுகள், ஜூன் 2003 இதழ் 42 -

தமிழில் திரைப்படங்கள் பற்றி அண்மைக் காலமாகத் தான் மிகவும் விரிவாக யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் எழுதி வருகின்றார்களெனெ நினைத்தேன். ஆனால் அண்மையில் கே.எஸ்.சிவகுமாரனின் 'அசையும் படிமங்கள்' நூலினை வாசித்த பொழுதுதான் புரிகின்றது சிவகுமாரன் அறுபதுகளிலிருந்தே திரைப்படக் கலை பற்றி அவ்வப்போது தமிழில் எழுதி வந்துள்ள விடயம். இதுவரை காலமும் இலக்கியப் படைப்புகள் பற்றியே இவர் அவ்வப்போது தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருவதாகக் கருதியிருந்த எனக்கு 'அசையும் படிமங்கள்' வியப்பினையே தந்தது.

கொழும்பிலிருந்து மீரா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'அசையும் படிமங்கள்' நூலில் திரைப்படக் கலை மற்றுந் திரைப்படத் திறனாய்வு பற்றிய கட்டுரைகள் காணப்படுகின்றன. மிகவும் எளிமையான தமிழில் சாதாரண ஒரு வாசகருக்குப் புரியக் கூடிய வகையில் எழுதப்பட்டுள்ள ஆரம்பக் கட்டுரைகளாக இவற்றைக் கொள்ளலாம். மிகவும் நுணுக்கமான ஆய்வுக் கட்டுரைகளல்ல இவை. ஆனால் திரைப்படக் கலை, திரைப்படத் திறனாய்வு பற்றி அறிய மற்றும் புரிய விரும்புவோருக்கு வழிகாட்டக் கூடியதொரு முதனூலாக 'அசையும் படிமங்கள்' நூலினக் கூறுவதில் எனக்கு எந்தவித தயக்கமுமில்லை.

அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'வில்லூன்றி மயானம்' - வ.ந.கிரிதரன் -

நூலகம் தளத்தினை மேய்ந்து கொண்டிருந்தபொழுது 'மல்லிகை' சஞ்சிகையின் 15.10.67 இதழ் ஆண்டு மலராக வெளிவந்திருந்தது கண்டேன். உள்ளடக்கத்தினைப் பார்த்தபொழுது அதில் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் (கட்டுரைகள், கவிதைகள் என) வெளிவந்திருந்ததை அறிய முடிந்தது. மேலும் மலரின் சிறப்பினை அதில் வெளிவந்திருந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'வில்லூன்றி மயானம்' என்னும் கட்டுரை அதிகரித்துள்ளது என்றே கூறுவேன். அ.ந.க மறைந்தது 14.02.1968இல். ஆனால் இக்கட்டுரை அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் அவர் எழுதிய கட்டுரை. அந்த வகையில் அவரது கடைசிக்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகளிலொன்றாக நான் இதனைக் கருதுகின்றேன். அ.ந.க.வின் இக்கட்டுரையை இப்பொழுதுதான் முதன் முறையாக அறிகின்றேன். அவரது படைப்புகளைச் சேகரித்துக்கொண்டிருக்கும் எனக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சி. நூலகத்துக்கும், மல்லிகைக்கும் நன்றி நன்றி.

1944இல் சாதியின் பெயரால் நடாத்தப்பட்ட 'வில்லூன்றி மயானப்படுகொலை' பற்றி 1944 நவம்பர் 9ந் தேதி 'தினகரன்' தினசரியில் அ.ந.க வில்லூன்றி மயானம் என்றொரு கவிதையை எழுதியிருக்கின்றார். அப்பொழுது அ.ந.க.வுக்கு வயது இருபது. அதன் பின்னர் மல்லிகையில் இக்கட்டுரையை எழுதும்போது அவருக்கு வயது 43.

அ.ந.க.வின் இக்கட்டுரை 'வில்லூன்றி மயானம்' மிகவும் முக்கியமானது பல விடயங்களில். அவரது அந்திமக் காலத்தில் வெளியான அவரது படைப்புகளில் ஒன்று என்ற வகையில், வில்லூன்றி மயானப் படுகொலையைப்பற்றிக் கவிதை எழுதிய அவர் அப்படுகொலை பற்றி எழுதிய கட்டுரை என்னும் வகையில் .. இவ்விதம் முக்கியம் வாய்ந்த கட்டுரை இது. இக்கட்டுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார்: 

'தேன்மொழி'க் கவிதைகள் - 1 - வ.ந.கிரிதரன் -

 நூலகம்' தளம் பல்வேறு வழிகளிலும் உதவி வருகின்றது. மிகவும் பயனுள்ள அரியதோர் ஆவணத்தளமாக 'நூலகம்' உருமாறி வந்திருக்கின்றது. அத்துடன் 'தேன்மொழி' சஞ்சிகையின் 'நூலகத்தில்' இதுவரை வலையேற்றப்படாத பிரதிகளையும் தந்துதவிய 'நூலகம்' கோபி அவர்களுக்கு நன்றி. 'தேன்மொழிக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைத்தொடரினை எழுதுவதற்கு அவரது இந்த உதவியே முக்கிய காரணம்.

தேன்மொழி சஞ்சிகை கவிதைக்காக வெளிவந்த முதலாவது சஞ்சிகை. மறுமலர்ச்சிக்காலப்படைப்பாளிகளே இச்சஞ்சிகைக்கும் தோற்றுவாய். மறுமலர்ச்சி சஞ்சிகையினை வெளியிட்ட எழுத்தாளர் தி.ச.வரதராஜனே தேன்மொழியின் நிர்வாக ஆசிரியராக விளங்கியவர். இணையாசிரியராக இருந்தவர் கவிஞர் மஹாகவி. 1955இல் நான்கு இதழ்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதழ்கள் வெளியாகியுள்ளனவா என்பது ஆய்வுக்குரிய விடயம். அத்துடன் 'நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நினைவுச்சின்னம்' என்னும் தாரக மந்திரத்துடன் எழுத்தாளர் தி.ச.வரதராஜனை நிர்வாக ஆசிரியராகவும், கவிஞர் மஹாகவியை இணை ஆசிரியராகவும் கொண்டு வெளியான சஞ்சிகை. சஞ்சிகையின் அட்டைப்படம் ஒவ்வொன்றும்  'தங்கத்தாத்தா' சோமசுந்தரப்புலவரின் கவிதை வரிகளைத் தாங்கி வெளியாகியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. சஞ்சிகையின் கடைசிப்பக்கத்தில் தேன்மொழியில் எழுதும் படைப்பாளிகளில் ஒருவரைப்பற்றியச் சுருக்கமான குறிப்பும் காணப்படுகின்றது. மேலதிக விபரங்கள்: அச்சு - ஆனந்தா அச்சகம். தேன்மொழி அலுவலகம்: 226 , காங்கேசன் துறை வீதி, யாழ்ப்பாணம், இலங்கை.  ஆண்டுக்கட்டணம் - ரூ. 3.00. தனிப்பிரதி 23 சதம்.

மறுமலர்ச்சி இதழ் மூலம் ஈழத்தமிழ் இலக்கியத்தில் கால்பதித்த தி.ச.வரதராஜன் (வரதர்) அவர்கள் முதலாவது கவிதைகளுக்காக மட்டும் வெளிவந்த முதலாவது சஞ்சிகையான தேன்மொழியினையும்  வெளியிட்டவர் என்னும் பெருமைக்குள்ளாகின்றார்.

புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!

  காலத்துக்குக் காலம் புதுப் புதுத்  தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...