Friday, July 5, 2024

கவிதை: கண்ணம்மாவுடனோர் உரையாடல் காலவெளிப்புள் பற்றி... - வ.ந.கிரிதரன் -



கண்ணம்மா!
காலவெளிப்புள்!
ஆம்! நீ ஒரு புள்தான் என்றேன்.
காலவெளிபுள்தான் என்றேன்.
அதற்கு நீ
'கொல்'லென்று நகைத்தாய்.
'பல்'லென்று முறுவலித்தாய்.
புள்ளென்றெனை அழைத்தாய்.
கள்ளா உனக்கென்ன துணிவென்றாய்.
கள்ளா என்றெனை அழைப்பதில்
கண்ணம்மா எனக்கும் சம்மதம்
என்றேன்.
ஏன் என்றாய்.
உள்ளங் கவர் கள்ளன் அதனால்
என்றேன்.
யார் உள்ளம் என்றாய்.
கண்ணம்மா,
உன் உள்ளம் என்றேன்.
மீண்டுமொரு
பல் தெரியக்
கொல்.  

Thursday, July 4, 2024

'இறைவன் என்றொரு கவிஞன். அவன் படைத்த கவிஞன் மனிதன்' - கவிஞர் கண்ணதாசன்

'ஏன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இசை - டி.ஆர்.பாப்பா. பாடியவர் - எஸ்.பி.பி. நடிப்பு - ரவிச்சந்திரன் & லட்சுமி.
 

இறைவனைக் கவிஞனாகச் சித்திரித்திருக்கின்றார் கவிஞர். மகான்களை அக்கவிதைகளில் காவியங்கள் என்கின்றார். கவிஞரின் இக்கற்பனைச் சிறப்புக்காகவே எனக்குப் பிடித்த பாடலிது. பாடலுக்கு எஸ்.பி.பி.யின் குரலும், பாப்பாவின் இசையும், ரவிச்சந்திரனின் நிதானமான நடிப்பும் இப்பாடலின் மேலதிகச் சிறப்பம்சங்கள்.
 
'கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான். பெண்ணிடம் பிறந்ததை பெண்ணுக்கே அளித்தான்' என்னும் வரிகளை ரவிச்சந்திரன் பாடுகையில் லட்சுமி வெளிப்படுத்தும் நாணம் மறக்க முடியாதது.

கவிதை: ஜிம்மி - வ.ந.கிரிதரன் -


ஜிம்மி! முதலில் நினைவுக்கு வருவது
பபா வீட்டு ஞமலி!
பபா என் பால்ய காலத்து நண்பன்.
பபா பற்றி நினைத்ததும்
ஜிம்மி பற்றிய நினைவுகளும் வந்து விடும்.
உடும்பு
பிடிப்பதில் பிரியமும், வல்லமையும்
ஜிம்மிக்கு உண்டு.
எப்பொழுதும் பபாவின் முன்
வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும் ஜிம்மியின்
தோற்றம் இன்னும் நினைவில் மங்கிவிடவில்லை.
உடும்பின் ஈரலை அதன் மூக்கில் பபா பூசி விடுவான்.
அது ஒன்று போதும் ஜிம்மிக்கு.
காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து ஓடும்
ஜிம்மிக்குப் பின் நாமும் ஓடுவோம்.

Wednesday, July 3, 2024

கவிதை: மழை பொழியும் நள்ளிரவில் படுக்கையில் நான்! - வ.ந.கிரிதரன் -


வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவில்
படுக்கையில் புரண்டபடியும்,
சுவர்ப் பல்லிகளின் அசைவுகளைப்
பார்த்தபடியும், சிந்தித்தபடியும்,
நானிருக்கின்றேன்.
வெளிச்சம் நாடி வந்தமர்ந்து
இரையாகும் பூச்சிகளைப்
பார்க்கும்போதெழும் பல்வகை
சிந்தனைகளில் மூழ்கிக்கிடக்கின்றேன். 

நோக்கலில் இரக்கம்!

பல்லிகள்தம் பார்வையில்
நான் பார்க்கவில்லை.

இதனை நான் உணர்ந்துதானிருக்கின்றேன்.
உண்டு முடித்த ஏப்பம் மிக
அவை மீண்டும் அடுத்த இரைக்காய்த்
தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்கின்றன.
அவதானித்துக்கொண்டுதானிருக்கின்றேன்.

பல்லிகளை அவதானித்தல் ஒருகாலத்தில்
ஆம்! படுக்கையில் படுத்திருந்தபடிதான்,
பல்லிகளை அவதானித்தல் ஒரு காலத்தில்
என் பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்தது.
நன்கு கவனிக்கவும் பொழுதுபோக்கு என்னும்
சொற்பதத்தை.

இன்று என் அவதானிப்பு
பொழுதுபோக்குக்கு உரியதல்ல.
இருப்புக்கான தப்பிப்பிழைத்தல் பற்றியது.
இருப்பென்னும் படைப்புத்திறனில்
பொதிந்துள்ள தவறு பற்றியது.
இவ்விதமான தருணங்களில்
இருப்பில் ஏன் துயரங்கள் கவிந்துள்ளன
என்பது புரிவது போல் தெரிந்தாலும்
உண்மையில் புரிவதில்லை.

இடையில் கோடிழுக்கும் மின்னலை
சன்னலூடு நோக்குகின்றேன்.
இடியெனத் தொடரும் பேரோசை
கேட்டு நான் படுத்திருக்கின்றேன்.
மாகவிஞர் பலரைப் பாதித்த இயற்கை நிகழ்வு!
அவர்கள்தம் வரிகளில் இளகியிருந்திருக்கின்றேன்.
அவற்றையும் கூடவே எண்ணிக்கொள்கின்றேன்.
வயற்புறத்து மண்டூகங்களின் வாய்ப்பாட்டு
தொடங்கி விட்டது.
விடிய விடிய நடக்கும் இசைக்கச்சேரி.
இந்த மழை பொழியும் நள்ளிரவில்
நான்
துஞ்சாதிருக்கின்றேன்.
நெஞ்சார மழை பற்றிய
நினைவுகளில் மூழ்கிக்கிடக்கின்றேன்.
நள்மழை இன்று
நீண்டநேரம் பெய்யப்போகுதென்ற
உணர்வு.

நெடுமழை!
கடுமழை!
அடைமழை!

மண்டூகங்களே! நீவிர் உம்
மழைக்கச்சேரியை நிறுத்திவிடாதீர்.
இரசிகன் நானிருக்கின்றேன்
நள்மழை பற்றிய நும் கச்சேரியை
நெஞ்சில் வைத்து இரசிப்பதற்கு.
ஆம்! நானிருக்கின்றேன்.
விடிய விடிய இரசிப்பதற்கு
விடியும்வரை நானிருப்பேன்
மண்டூகங்களே!

வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவில்
நான் படுக்கையில் புரண்டபடியும்,
சிந்தித்தபடியும்,
சுவர்ப் பல்லிகளின் அசைவுகளைப்
பார்த்தபடி நானிருக்கின்றேன்.

girinav@gmail.com

நன்றி: வ.ந.கிரிதரன் பக்கம் - https://vngiritharan230.blogspot.com/2024/07/blog-post_3.html#more


girinav@gmail.com

Tuesday, July 2, 2024

வ.ஐ.ச. ஜெயபாலனின் 'கள்ளிப்பலகையும், கண்ணீர்த்துளிகளும்'


சிறந்த கவிஞர்களிலொருவராக அறியப்படும் வ.ஐ.ச. ஜெயபாலன் நான் சந்தித்த காலகட்டத்தில் மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவராக, வாய்க்கு வாய் 'ராசா' என்று அழைக்குமொருவராக, ஈழத்துத் தமிழர்களின் சமூக, அரசியல் பற்றிய விடயங்களைச் சம்பாஷிப்பதில் மிகவும் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். இவ்விதமே அவர் என் நினைவினிலிருக்கின்றார்.

'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' பற்றிய ஆய்வுக்காக, ஈழத்தமிழர்களின் வரலாற்றினைக்கூறும் நூல்களிலொன்றான 'யாழ்ப்பாண வைபவமாலை'யினைப்பெறுவதற்காக இவரை முதன் முதலாகச்சந்தித்திருக்கின்றேன். அதன் பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகைக்கு இவரது கவிதை வேண்டிச் சந்தித்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில இவருடன் சைக்கிளில் யாழ்நகரில் திரிந்த நாள்கள் நினைவிலுள்ளன. அதன் பின்னர் கொழும்பில் சந்தித்திருக்கின்றேன். அப்பொழுது இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஏதோவொரு பாடத்திட்டத்தில் (அரசியல் சம்பந்தமானதாகவிருக்கலாம்) சேர்ந்து படித்துக்கொண்டிருந்தார்.

Friday, June 28, 2024

கவிதை; ஒண்டாரியோ அறிவியல் மையம்: கட்டடக்காட்டுக் குளிர் தென்றல்! - வ.ந.கிரிதரன் -


- அண்மையில் ஒண்டாரியோ உள்கட்டுமான அமைச்சர்  Kinga Surma திடீரென  ஒண்டாரியோ சயன்ஸ் சென்டரை, எவ்வித முன்னறிவித்தலுமின்றி, கூரைக் கட்டுமானத்ன் நிலை காரணமாக மூடினார். அதன் தாக்கம் இக்கவிதை. -


நீ வெறும் நில அடையாளம் மட்டுமல்ல.
நீ வெறும் கட்டடக்கலை அற்புதம் மட்டுமல்ல.
நீ
நகரத்து மக்களின்,
நாட்டு மக்களின்
வாழ்வுடன் பின்னிப் பிணைந்த
ஓர் அனுபவம்.
உணர்வுச்சித்திரம்.

நீ எங்களுக்கு ஆசானாக இருந்தாய்.
நீ எங்களுக்கு நண்பராக இருந்தாய்.
நீ எங்களுக்கு வித்தை காட்டும் மந்திரவாதியாகவிருந்தாய்.
நீ எங்களுக்கு இன்பத்தைத்தரும் கலைஞராக இருந்தாய்.

எனக்குப் பிடித்த கவிஞர் எம்.ஏ.நுஃமானின் 'நிலம் என்னும் நல்லாள்'



பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் சிறந்த திறனாய்வாளர் மட்டுமல்லர். சிறந்த கவிஞரும் கூட. இலங்கைத் தமிழ் இலக்கியத்தில், கவிதைத்துறையில் இவரது கவிதைகள் மிகுந்த பங்களிப்பை ஆற்றியுள்ளன.  இவரது கவிதைகள் பல எனக்குப் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்:

1. நடை. இனிய, நெஞ்சை அள்ளிச்செல்லும் நடை. சிலு சிலுவென்று வீசிச்செல்லும் தென்றலை அனுபவிப்பதுபோலிருக்கும் இவரது மொழியை வாசிக்கையில்.  ]

2. மரபுக் கவிதையின் அம்சங்கள், குறிப்பாக மோனை வெகு அழகாக இவரது கவிதைகளில் விரவிக் கிடக்கும். வலிந்து திணிக்காத வகையில் , தேவைக்குரியதாக அவை பாவிக்கப்பட்டிருப்பதால் வாசிக்கையில் திகட்டுவதில்லை. இன்பமே பொங்கி வழியும்.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...