Friday, June 28, 2024

கவிதை; ஒண்டாரியோ அறிவியல் மையம்: கட்டடக்காட்டுக் குளிர் தென்றல்! - வ.ந.கிரிதரன் -


- அண்மையில் ஒண்டாரியோ உள்கட்டுமான அமைச்சர்  Kinga Surma திடீரென  ஒண்டாரியோ சயன்ஸ் சென்டரை, எவ்வித முன்னறிவித்தலுமின்றி, கூரைக் கட்டுமானத்ன் நிலை காரணமாக மூடினார். அதன் தாக்கம் இக்கவிதை. -


நீ வெறும் நில அடையாளம் மட்டுமல்ல.
நீ வெறும் கட்டடக்கலை அற்புதம் மட்டுமல்ல.
நீ
நகரத்து மக்களின்,
நாட்டு மக்களின்
வாழ்வுடன் பின்னிப் பிணைந்த
ஓர் அனுபவம்.
உணர்வுச்சித்திரம்.

நீ எங்களுக்கு ஆசானாக இருந்தாய்.
நீ எங்களுக்கு நண்பராக இருந்தாய்.
நீ எங்களுக்கு வித்தை காட்டும் மந்திரவாதியாகவிருந்தாய்.
நீ எங்களுக்கு இன்பத்தைத்தரும் கலைஞராக இருந்தாய்.கனல் உமிழும்
கட்டடக்காட்டின்
குளிர் தென்றல் நீ.

எத்தனை வருடங்கள் எம்முடன்
பின்னிப் பிணைந்திருந்தாய்.
எம் பால்ய பருவத்து நினைவுகளில்,
பதின்ம வயது நினைவுகளில்,
இளமைப்பருவத்து நினைவுகளில்,
நடுத்தர வயது நினைவுகளில்,
முதுமைப் பருவத்து நினைவுகளில்
நீ இருக்கிறாய்.
நீ அப்பருவங்களில் எம்முடன் பயணித்தாய்.

உன்னை எம்மிடமிருந்து
எவ்வித முன்னறிவித்தலுமின்றிப்
பிரித்தது எது?
அரசியலா? அல்லது
தவறானதோர் தொழில்நுட்ப
அறிக்கையா?

எது எப்படியிருந்தபோதும்
அது மன்னிக்க முடியாதது.
உனக்கு நாங்கள் பிரியாவிடை கூறவில்லை.
அது மன்னிக்க முடியாதது.
உன்னை நாங்கள் இறுதியாகப் பார்த்து]
முத்தம் கொடுக்கவில்லை.
அது மன்னிக்க முடியாதது.

உன்னை மீண்டும் முன்புபோல்
ஆரத்தழுவிட
ஆவலுடன் காத்திருக்கின்றோம்.
நீ
மீண்டும் உயிர்த்தெழுவாய்
என்னும் நம்பிக்கையுடன்
காத்திருக்கின்றோம்.

girinav@gmail.com

No comments:

ஆகஸ்ட் 2026இல் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள்!

ஆகஸ்ட் மாதம் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள், அவர்கள் பார்த்த பக்கங்கள் பற்றிய விபரங்கள் இவை! வருகை தந்தவர்கள் (Unique Visitors) - 5...