Friday, June 21, 2024

எழுத்தாளர் பா, ராகவனின் கூற்றொன்று பற்றி...


எழுத்தாளர் பா.ராகவன் பின்வரும் முகநூல் பதிவினை இட்டிருந்தார்: 
 
"கள்ளச்சாராய மரணங்களின் தொடர்ச்சியாகக் குடிகாரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை சாகித்ய அகடமி, ஞானபீடம் போன்ற விருதுகளுடன் வழங்கப்படும் தொகையைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. ஒரு சிறந்த எழுத்தாளனைவிட ஒரு சிறந்த குடிகாரன் குடும்பத்துக்கு நிறைய நல்லது செய்ய முடியும் போலிருக்கிறது."
 
உண்மையில் அதிர்ச்சியாகவிருந்தது. கலை, இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்கள் முகநூலில் சுட்டிக்காட்டிய பின்பே இதனை அறிந்தேன். எழுத்தாளர் ஒருவர் குறிப்பாகப் புனைகதை எழுத்தாளர் என்பவர் மானுடரின் அனைத்துப் பக்கங்களையும் நன்கறிந்தவராக இருப்பது அவசியம். ராகவனின் இக்கூற்று அவர் இவ்விதம் பரந்த மனப்பான்மையுடன் மானுடரை அணுகாமல் , குறுகிய பார்வையுடன் அணுகுகின்றாரோ என்று எண்ண வைக்கிறது. 
 
முதலில் ஒருவரின் மரணம் என்பது அவரது குடும்பத்தினரைப் பாதிப்பது. அவ்வகையான இழப்புக்குக் கொடுக்கப்படும் நட்ட ஈட்டுத்தொகையுடன் , எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு வழங்கப்படும் விருதுத் தொகையினை ஒப்பிடுவதே சரியானதொன்றல்ல.
 
மது அருந்துவது ஒன்றும் தவறானதொன்றல்ல. அது அவரவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பைச் சார்ந்தது. மேலும் இங்கு ஏன் ஒருவர் கள்ளச்சாராயம் அருந்தும் நிலை ஏற்பட்டது. அவரது பொருளியற் காரணங்களினால். இந்நிலையில் வழங்கப்பட்ட கள்ளச்சாராயத்தைத் தயாரித்து விற்றவர் கடுமையாகத்தண்டிக்கப்பட வேண்டும். அதனை அருந்தி மரணித்தவர் தன் உயிரைப் போக்குவதற்காக அதனை அருந்தவில்லை. வாழ்க்கைச் சுமைகளால் பாதிக்கப்பட்ட ஒருவராக அவர் இருக்கக்கூடும். சிறிது இருப்பில் மகிழ்ச்சியை ஏற்றி , மறுநாள் மீண்டும் வாழ்க்கைபோராட்டத்தை எதிர்கொள்வதற்கு அவர் எண்ணியிருக்கக் கூடும். இந்நிலையில் அவரது மரணம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. அவரது இழப்பால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகை நியாயமானது. தேவையானது. அதனை எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் விருதுத்தொகைகளுடன் ஒப்பிடுவதே என்னப்பொறுத்தவரையில் மனிதாபிமானம் அற்றதென்பேன். இதனை எழுத்தாளர் பா.ராகவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
 

 

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல். கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல் வாழும் வாழ்வுதனை வாழவிடு இய...

பிரபலமான பதிவுகள்