Wednesday, November 20, 2024

அகிலின் கூடுகள் சிதைந்தபோது...

- எழுத்தாளர் அகில் -

போர்ச்சூழல் காரணமாகப் புகலிடம் நாடிய  பலரின் வாழ்க்கையுடன் அப்போர் தந்த வலிகளும் புலம்பெயர்ந்திருக்கும். போர்ச்சூழலில் தன் மனைவியை இழந்த ஒருவன் அவன். வீதியில் வாகனமொன்றால் அடிபட்டுக் குற்றுயிராகக் கிடக்கும் குருவியொன்றை, அதன் வலியினை அவனால் பொறுக்க முடியவில்லை. அதன் நிலை அவனது மனைவியின் மறைவை நினைவு படுத்துகிறது. புகலிட இலக்கியத்தின் , எழுத்துகளின் இன்னுமொரு முக்கிய அம்சம் பிறந்த மண் ஏற்படுத்திய, காலத்தினால் ஆற்ற முடியாத வலி சுமந்த உணர்வுகள். உளப்பாதிப்புகள்.

ஜோர்ஜ் இ.குருஷேவின் ' ஒரு துரோகியின் இறுதிக்கணம்'

- எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ் -

'தேட'லில் வெளியானது. புகலிட இலக்கியத்தின் ஓரம்சம். புகலிடத்தில் வாழ்ந்தாலும், பிறந்த மண்ணின் தாக்கங்கள், வலி இவையெல்லாவற்றையும் கடந்து செல்ல முடிவதில்லை. ஜோர்ஜ்.இ.குருஷேவின் இக்கதையில் போராட்டச்சூழலில் விடுதலைக்காகப்போராடியவர்களால் புரியப்பட்ட  மனித உரிமை மீறல்கள் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகின்றன.

இவரது முக்கியமான ஆரம்பக் காலத்துச் சிறுகதையொன்று அது கூறும் பொருளையிட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று தமிழர்களின் ஆயுத ரீதியிலான யுத்தம் முடிந்து விட்டது. ஆனால் யுத்தம் முடிந்து இன்று வரையில் அக்காலகட்டத்துத் தவறுகளை, மனித உரிமை மீறல்களையிட்டு இன்னும் நாம் விரிவாக ஆராயவில்லை. சுய பரிசோதனை செய்யவில்லை. மிகவும் எளிதாகக் கண்களை மூடிக்கொண்டு கடந்து செல்கின்றோம்.

சுமதி ரூபனின் ' அமானுஷ்ய சாட்சியங்கள்'

- எழுத்தாளர் சுமதி ரூபன் -


அக்கா ஸ்பொன்சர் பண்ணிக் கனடா வரும் ஓரிளம் பெண் அவளது அக்கா குடும்பத்துடன் தங்கியிருக்கின்றாள். அவளுக்கு அக்கா புருஷன் கொடுக்கும் பாலியல் ரியிலான தொல்லைகளைச் சகித்துக்கொண்டு , தாய் தந்தையரும் வரும் வரையில் அக்காவுடன் வாழ்கின்றாள். அவளது மனநிலையினை விபரிக்கும் கதை. அத்தான் என்றால் அப்பழுக்கற்றவர் என்று எண்ணும் அக்கா. மாப்பிள்ளை தங்கம் என்று எண்ணும் பெற்றோர். இவர்களுக்கு மத்தியில் அவள் மிகவும் இலகுவாகக் கனடாச் சட்ட உதவியை நாடியிருக்கலாம். அப்படி நாடியிருந்தால் அவளது அக்கா புருசன் சிறைக்குள் சென்றிருப்பான். அவள் ஏன் அவ்விதம் செய்யவில்லை? 

ஶ்ரீரஞ்சனியின் 'காலநதி'

- எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி -

எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி புலம்பெயர், புகலிடத்தமிழ் இலக்கியத்தில் , குறிப்பாகக் கனடாத்தமிழ் இலக்கியத்தில் தொடர்ச்சியாக எழுதிவரும் எழுத்தாளர்களில், பெண் எழுத்தாளர்களில் ஒருவர்.  சுமதி ரூபன், தமிழ்நதி, ஶ்ரீரஞ்சனி போன்றவர்கள் நிலவும் பண்பாட்டுச் சூழலை மீறுவதில் , அவற்றைக் கேள்விக்குட்படுத்தவதில் தயங்காதவர்கள். அதே ஶ்ரீரஞ்சனியின் எழுத்துகளில் புகலிடச் சூழலில் தாயொருவர் எதிர்ப்படும் சவால்களை, தாய்மை உணர்வுகளைக் காணலாம். அண்மையில் அவர் வெளியிட்டுள்ள சிறுகதைத்தொகுப்புகளில் ஒன்று 'ஒன்றே வேறே'. இத்தொகுப்பின் கதைகளை முற்றாக இதுவரையில் வாசிக்கவில்லை. வாசித்தவற்றில் உடனடியாகக் கவனத்தை ஈர்த்த கதைகளில் ஒன்று 'காலநதி'.

'காலநதி'யின் சுழல்களுக்குள் சிக்கித் தடுமாறி, அலைந்து முதுமைப்பருவத்தில் தன் வளர்ந்த மகளுடன் கனடாவில் வாழும் தாயொருத்தியின் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தும் கதை மட்டுமல்ல, முடிவில் அவளுக்குச் சிறந்ததொரு வழியினையும் காட்டி நிற்கிறது. பார்வதி என்பது அவளது பெயர். கதை முதியவளான அவளது உடலுழைப்பை வேண்டும் , போலிப்பண்பாட்டுக் கோட்பாடுகளைக் காரணமாகக் காட்டி அவளது நியாயமான உணர்வுகளுக்கு முட்டுக்கட்டை போடும் மகளின் உணர்வுகளையும்வ் செயலையும் வெளிப்படுத்துகின்றது. சாடுகிறது.

க.நவத்தின் 'சீருடை'

- எழுத்தாளர் க.நவம் -

'டயஸ்போறா' இலக்கியத்தின் பல்வேறு பண்புகளை நவத்தின் இச்சிறுகதையில் காணலாம். ஊரில் பொறியியலாளரான செந்தில்நாதன் கனடாவில் பாதுகாவலாராக வேலை பார்க்கின்றார். அவர் வேலைக்குச் செல்கையில் கோர்ட் , சூட்டுடன் செல்வார். வேலைக்குச் சென்றபின்தான் பாதுகாவனுக்குரிய ஆடைகளை அணிந்துகொள்வார். தான் பாதுகாவலான வேலை செய்வதைக் குழந்தை கூட அறியாமல் மறைத்து வைப்பார். ஒரு நாள் வழியில் சந்திக்கும் ஊரில் அவனுக்குக் கீழ் ஊழியராகப் பணியாற்றிய ஒருவரின் மகன் லெக்‌ஷ்ஸ் காரில் வருகின்றான். அவருக்கு லிஃப்ட் கொடுக்கின்றான்.இங்கு அவன் செல்வச் செழிப்பில் கிளீனிங் கொம்பனி நடத்துகின்றான். அவனிடம் ஊரிலை கிடைக்காத படிக்கிற வசதி இங்கு கிடைத்திருக்கு என்று எகத்தாளமாகக் கூறுவார். பதிலுக்கு அவனும் படிச்சவையெல்லாரும் என்னத்தைக் கிழிச்சவையள் என்ற மாதிரி பதிலிறுப்பான். அத்துடன் இப்பவும் செக்கியூரிடி கார்ட் வேலையோ செய்கிறீர்கள் என்று கேட்பான். இது அவரது தன்மானத்தை எழுப்பிவிடவே காரை நிற்பாட்டும்படி கூறி இறங்கிவிடுவார்.

தேவகாந்தன் - ஊர் & சதுரக் கள்ளி

- எழுத்தாளர் தேவகாந்தன் -

ஒரு காலத்தில் ஊர் என்றால் அங்கு நிலவிய சமூகப் பிணைப்புகள் நினைவுக்கு வரும், ஊர் பற்றிய நினைவுகளுடன் யுத்தம் முடிந்தபின் செல்லும் ஒருவரின்  ஊர் பற்றிய மனச்சித்திரம் எவ்விதம் சீர்குலைகிறது என்பதை விபரிக்கும் தேவகாந்தனின் சிறுகதையான ஊர் நல்லதொரு சிறுகதை. நீண்ட சிறுகதையல்ல. ஆனால் கச்சிதமாக எழுதப்பட்ட சிறுகதை. போர்ச்சூழல் புதியவர்களை ஊருக்குப் புலம்பெயர வைத்திருக்கின்றது. அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளைக்கூட கவனிக்காத ஊர் அவருக்கு ஊர்பற்றிய மனச்சித்திரத்தைச் சிதைக்கப் போதுமானது. இங்கு இருவிதமான புலம்பெயர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஒன்று புகலிடம் நாடிய வெளிநாட்டுப் புலம்பெயர்வு. இன்னுமொன்று உள்நாட்டுப் புலம்பெயர்வு. ஒரு காலத்தில் ஊரில் சமூக வாழ்வு சிறப்பாக இருந்தது. ஒருவருக்கொன்றென்றால் அது  எல்லோருக்கும் தெரியும். ஓடிச்சென்று உதவுவார்கள். அதை ஊர் திரும்பும் அவரால் காண முடியவில்லை. யுத்தம் அதனைச் சிதைத்து விட்டிருந்தது. இதனை விபரிக்கும் கதைதான் 'ஊர்'.

சதுரக்கள்ளி சிறுகதையும் புலம்பெயர் தமிழர் ஓருவரின் ஊர் திரும்பலையும், அச்சமயம் அடையாளங்கள் இழந்து இருக்கும் அவரது வீட்டையும், அயலவரான பெண் ஒருத்தியுடன் ஏற்பட்ட  பிணக்கு பற்றியும், அதன் விளைவாக குடும்பங்கள் பிரிபட்டதையும், வசியம் செய்து  விட்டாலுமென்ற பயத்தால் அவரின் தந்தையார் வேலிக்கருகில் வளர்த்த சதுரக்கள்ளி பற்றியும், தந்தையின் இறப்பு பற்றியும், விபரிக்கும். வீட்டின் ஜன்னல், நிலை  பாகங்களையெல்லாம் திருடிச் சென்றுவிட்டார்கள். வீடு சென்றவர் அமைதி திரும்பட்டும் வீட்டை என்ன செய்வது என்பது பற்றிச் சிந்திக்கலாம் என்று திரும்புகின்றார்.

அ.முத்துலிங்கத்தின் 'புதுப்பெண்சாதி'


எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தொழில் காரணமாக உலகின் பல்வேறு பாகங்களுக்கும் சென்றவர்.,அவற்றின் பின்னணியில் கதைகள் எழுதியவர்,. இவ்விதம் அவர் திரிந்துகொண்டிருந்தபோதும் அவரால் பிறந்த மண்ணை மறக்கவே முடியவில்லை. ஊர் பற்றிய , அவரது நெஞ்சில் நிலைத்து விட்ட நினைவுகளையும் அவர் காவிச்சென்றார் என்பதைத்தான் அவரது பெரும்பாலான கதைகள் புலப்படுத்துகின்றன. புலம்பெயர் இலக்கியத்தில் இது ஒரு பொதுவான பண்பு. நினைவுகளைக் காவிச்செல்லும் ஒட்டகங்கள்தாம் புலம்பெயர் மனிதர்கள். அ.முத்துலிங்கமும் அதற்கு விதிவிலக்கானவர். ஊர் நினைவுகளை, ஊர் ஆளுமைகளை மையமாகக்கொண்டு அவர் எழுதிய கதைகள் பல இதனைத்தான் புலப்படுத்துகின்றன. புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தவர் அல்லர் அவர். பணி நிமித்தம் புலம்பெயர்ந்தவர். ஆயினும் அவர் நிலத்தின் நிகழ்வுகள் அவரையும் பாதிக்கின்றன.அதன் விளைவுகள், பாதிப்புகள் அவர் கதைகள் பலவற்றில் தெரிகின்றன.

அவரது புதுப்பெண்சாதி - மறக்க முடியாத கதை. என்னைப்பொறுத்தவரையில் அ.முத்துலிங்கத்தின் மிகச்சிறந்த கதையாக இதையே குறிப்பிடுவேன். கதை இதுதான். பத்மலோசனி என்னும் படித்தவள். கணிதம் ,ஆங்கிலம் எல்லாவற்றிலும் விருதுகள் வாங்கியவள். அழகானவள். அழகிய கண்களுக்குச் சொந்தக்காரி. ஊரில் கடை வைத்திருக்கும் ராமநாதனுக்கு மனைவியாக வருகின்றாள், அன்றிலிருந்து அவள் ஊருக்கு ராமநாதனின் புதுப் பெண்சாதி என்பதைக்குறிக்கப் புதுப்பெண்சாதி என்றழைக்கப்படுகின்றாள். கணவனுக்குத்  துணையாகக் கடையில் வேலை செய்கிறாள். அவளது பெயர் யாருக்கும் தெரியாது. புதுப்பெண்சாதி அம்மா, புதுப்பெண்சாதி அக்கா, புதுப்பெண்சாதி என்றே அழைக்கப்படுகின்றாள்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...