Friday, August 22, 2025

எம்ஜிஆர் வழியில் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் ஆரம்பம்!


அண்மையில் தமிழகத்தில் நடிகர் விஜய்யின் தமிழர் வெற்றிக் கழக மாநாடு மதுரையில் நடந்தது. அம்மாநாடு பற்றிய செய்திகளை ஊடகங்களில் பார்த்தேன். அதில் தென்பட்ட ஒரு விடயம் என் கவனத்தை ஈர்த்தது. அது  - மாநாடு உள்ளடக்கியிருந்த அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் உருவப்படங்களுடன் கூடிய விஜய்யின் படம். இது ஒன்றைக் காட்டுகிறது. விஜய் தமிழக மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்திருக்கின்றார் என்பதுதான் அது.

எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்தபோது அண்ணா பெயரை வைத்து ஆரம்பித்தார். அவ்விதம் ஆரம்பித்து கலைஞர், எம்ஜிஆர் என்னும் ஈர் ஆளுமைகளுக்கிடையிலான மோதல்களாகத் தமிழகச் சட்டசபைத்தேர்தலை மாற்றினார். அவர் திரைப்படத்துறையில் இருந்தவரையில் எம்ஜிஆர் , சிவாஜி என்னும் உச்ச நட்சத்திரங்களுக்கிடையிலான மோதலை எவ்விதம் கையாண்டு வெற்றி பெற்றாரோ, அவ்விதமே அரசியலிலும் கலைஞர் , எம்ஜிஆருக்கிடையிலான மோதலைக் கையாண்டு வெற்றி பெற்றார். இதனால்தான் வெற்றி பெறுவதற்குக் கீரைக் கடைக்கும் எதிர்க்கடை தேவை என்பர். இவ்விதம் ஈர் எதிரிகளின் போட்டியாக அரசியலை மாற்றுவதன் மூலம் ,  மக்களின் கவனம் அதில் பதிந்து நிற்கும். அதன் வழியே பிரிந்து நிற்பார்கள். இதில் ஏனைய கட்சிகள் அடியுண்டு போய்விடும்.

Thursday, August 21, 2025

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் ' இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 1) வ.ந.கிரிதரன் -




தன் குறுகிய வாழ்வில் மகாகவி பாரதியின் சிந்தனை வளர்ச்சியை வெளிப்படுத்தும் அவரது எழுத்துகள் (கவிதைகள், கட்டுரைகள்) என்னை மிகவும் வியப்புக்குள்ளாக்குபவை.  அவரது எழுத்துகள் மானுட பருவங்களின் வளர்ச்சிக்கேற்ப அர்த்தங்களிலும் புது அர்த்தங்கள் தருபவை.  குழந்தைக்கும் பாரதியைப்பிடிக்கும்.  சிந்தனை முதிர்ச்சியுற்ற , தேடல்மிக்க மானுடருக்கும் பிடிக்கும்.  இருப்பை நன்கு உணர்ந்து கொண்ட , முதிர்ச்சியுற்ற சிந்தனையாற்றல் மிக்க ஒருவரின் எழுத்துகளுக்கே காலத்துடன் ஈடுகட்டி, இவ்விதம் எழுந்து நிற்கும் வல்லமை உண்டு. ஏனைய ஒற்றைப்பரிமாணம் மிக்க தட்டை எழுத்துகள் மானுடப் பருவமொன்றுடன் தேங்கி, அப்பருவத்துக்குரிய அழியாக கோலங்களாக நிலைத்து நின்றுவிடும் பண்பு மிக்கவை. ஓர் எழுத்தாளராக, தேசிய, மானுட வர்க்க . சமூக விடுதலைப் போராளியாக அவர்தம் ஆளுமையின் பரிணாம் வளர்ச்சியினைச் சாத்தியமாக்கியவை எவை, சாத்தியமாக்கிய ஆளுமைகள் எவர் என்ற் கேள்விகள் அடிக்கடி எனக்குள் எழுவதுண்டு.  

அண்மையில் பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகி , நூலுருப்பெற்ற 'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின்  ' 23ஆம் வயதில்  பாரதி' (23 - 24ஆம் வயதில் பாரதி, இருபத்து நான்காம் வயதில் பாரதி, இருபத்து மூன்றாம் வயதில் பாரதி, '23-24 வயதில் பாரதி : வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் - கட்டுரையும்' என்னும் தலைப்புகளில் பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளை உள்ளடக்கிய நெடுங்கட்டுரை) கட்டுரையில் இக்கேள்விகளுக்கான சில  பதில்கள் இருப்பதை வாசித்தபோது அறிய முடிந்தது. இந்நெடுங் கட்டுரை ஜோதிகுமாரின் தர்க்கச்சிறப்பு மிக்க சிந்தனை முதிர்ச்சியின் வெளிப்பாடு என்பதைக் கட்டுரையை வாசிக்கும் எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.  பாரதியின் அனைவராலும் அறியப்பட்ட அவரது ஆளுமையின் அடிப்படைக்கூறுகளைந் நிர்ணயிக்கும் முக்கிய அவரது வயதாக 23 - 24 ஐக் குறிப்பிடலாம் என்பதை ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கின்றது இக்கட்டுரை. கூடவே அப்பருவத்தில் அவரது ஆளுமையில் , சிந்தனையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களைக் கவனத்திலெடுத்து ஆராய்கின்றது.

Monday, August 18, 2025

அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க்கோ ரூபியோவின் குதர்க்கமும், இந்தியா மீதான அமெரிக்காவின் மேலதிக வரி விதிப்பும்!


அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க்கோ ரூபியோவின் இந்தியா மீதான மேலதிக வரி விதிப்பு பற்றிய கருத்து குதர்க்கமானது மட்டுமல்ல,  இ ந்தியாவைக் களங்கப்படுத்துவதும் கூட. ருஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய்யை வாங்கி, சுத்திகரித்து அதை ஐரோப்பிய நாடுகளுக்கு விற்று இலாபம் சம்பாதித்து  வருகின்றது சீனா. அதற்கு அமெரிக்கா மேலதிகத்  தடை விதிக்கவில்லை. ஆனால், இந்தியாவுக்கு விதித்துள்ளது. 

இதற்கு அவர் கூறும் காரணம் - அவ்விதம் மேலதிக வரியினைச் சீனாவுக்கு விதித்தால் அது சீனாவிடமிருந்து எண்ணெய்யைப் பெற்றுக்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளப் பாதிக்குமாம்.  ருஷ்யாவிடமிருந்து எண்ணெய்யைத் தன் நாட்டின் தேவைக்காக இந்தியா வாங்கினால், அது இந்தியா உக்ரேனுக்கு எதிரான ருஷ்யாவின் போருக்கு உதவுகின்றதாம்,. அதற்காக வரி விதிக்கின்றார்களாம். ஆனால் இந்தியாவை விட அதிகமாக எண்ணெய்யை வாங்கும்  சீனாவின் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை ஐரோப்பிய நாடுகள் வாங்குகின்றன. ஆனால் இது உக்ரேனுக்கு எதிரான ருஷ்யாவின் போருக்கு உதவ வில்லையாம். இதைவிடக் குதர்க்கத்தனமான பதில் வேறென்ன இருக்க முடியும்?

Saturday, August 16, 2025

இசைக்கு ஏது எல்லை: 'புஞ்சி சமனலி' நெஞ்சங் கவர்ந்த சிங்களப் பாடல்!

பேராசிரியர் சுனில் ஆரியரத்னா

பேராசிரியர் சுனில் ஆரியரத்னாவின் இயக்கத்தில்வெளியான திரைப்படம் 'பத்தினி'.   'நாம கடவுள்' புகழ் பூஜா உமாசங்கர் கண்ணகியாக நடித்திருக்கும் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிஙகளத்திரைப்படம். 

பேராசிரியர் சுனில் ஆரியரத்னாவைச் (Sunil Ariyaratne)  சிங்களக் கலை,இலக்கிய உலகு நன்கறியும். கவிஞர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், திரைக்கதாசிரியர், பாடலாசிரியர் எனச் சிங்களத்திரையுலகில், சின்னத்திரையுலகில் நன்கறியப்பட்ட ஒருவர்.   

காவிய மாந்தர்களை வைத்து இவர் உருவாக்கிய சிங்களத்திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பையும், வசூலையும் பெற்றவை. சிலப்பதிகாரக் கதையை மையமாக வைத்து இவர் எடுத்த சிங்களத்திரைப்படமான 'பத்தினி' பெற்ற வரவேற்பைத்தொடர்ந்து இவர் சித்தார்த்தரின் (புத்தர்) மனைவியான யசோதராவை மையமாக வைத்து உருவாக்கிய Bimba Devi Alias Yashodhara என்னும் திரைப்படமும்  2018இல் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

Thursday, August 14, 2025

பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் பதிவுகள் பற்றி வெளியான ஊடகக் குறிப்புகள் சில..


'பதிவுகள்' இணைய இதழ் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளிவரும் இணைய இதழ். தமிழ் இணைய இதழ்களில்  வெளியாகும் இணைய இதழ்களில் திண்ணை, பதிவுகள், அம்பலம், ஆறாந்திணை ஆகியவை ஆரம்ப காலத்து இணைய இதழ்கள். பதிவுகள் இணைய் இதழின் ஆரம்பக் காலகட்டத்தில்  பதிவுகள் பற்றி ஊடகங்களில் வெளியான குறிப்புகளில் சில இவை.

'பதிவுகள்' பற்றி விகடன்...

ஆனந்த விகடன் ஆவணி 20,2000 இதழில்...

உலகே..உலகே..உடனே வா; காந்தி இருந்திருந்தால்... 

'பதிவுகள்' இணைய இதழில் (http://www.pathivukal.com) மகாத்மா காந்தியின் பேரன் டாக்டர் சாந்தி காந்தியைப் பற்றிக் கடுமையான விமரிசனம் வந்திருக்கிறது. அவர் இருந்திருந்தால் அமெரிக்காவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான குடியரசுக் கட்சியின் பக்கம் தான் இருந்திருப்பார் என்று அவர் சொன்னதுதான் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது. ஏன்? கட்டுரை  சொல்லும் விளக்கம்- 

"அமெரிக்காவில் வாழும் பெரும்பாலான கறுப்பின மக்கள் ஜனநாயகக் கட்சியினையே ஆதரிக்கின்றார்கள். குடியரசுக் கட்சியின் செயற்பாடுகள் இனத்துவேசம் பிடித்தவையெனக் கருதுகின்றார்கள். இம்முறை உப ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 'டிக் செய்னி' தென்னாபிரிக்காவின் முன்னால் ஜனாதிபதியான நெல்சன் மண்டலா சிறையிலிருந்து விடுவிக்கப் படுவதற்கு எதிராக அமெரிக்கக் காங்கிரஸில் வாக்களித்தவர். முன்னால் வெள்ளையினச் சிறுபான்மை அரசிற்கெதெராகத் தடைகள் கொண்டு வருவதை பலமுறை எதிர்த்துக் காங்கிரஸில் வாக்களித்தவர். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்ஸினைப் பயங்கரவாத இயக்கமாகக் கருதியதால்தான் தான் அவ்விதம் வாக்களித்ததாக நாடகமாடுகின்றவர். தென்னாபிரிக்க மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவரின் கொள்ளுப் பேரன் , 'தென்னாபிரிக்க மகாத்மா'வின் விடுதலைக்கு எதிராக வாக்களித்தவரின் கட்சிக்காகப் பிரசாரம் செய்வதை என்னவென்பது?"

Wednesday, August 13, 2025

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -


தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வெளியான நாவலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இந்நாவல் விடுக்கும்  முக்கியமான  அறைகூவல்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்;

1.பஞ்சமர் என்னும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரவினர் தம் சமூக விடுதலைக்காகத் தம்மை அடிமைகளாகத் தொடர்ந்தும் வைத்திருக்கும் சமூகத்தொழில்களைச் செய்வதிலிருந்து வெளிவரவேண்டும்.  அவ்வகையான தொழில்களைக் குறிப்பிட்ட சமூகத்தினர்தாம் செய்ய வேண்டும் என்னும் நிலை மாற வேண்டும். மேனாடுகளில் எவ்விதம் மானுட சமுதாயத்துக்கு வேண்டிய பல் தொழில்களையும் கற்று அவ்வகையான தொழில்களைச் செய்கின்றார்களோ அவ்விதமே அவ்வகையான தொழில்கள் செய்யப்பட வேண்டும்.  இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் சிகை அலங்காரத் தொழிலாளியான முத்தனும், அவனது மனைவியும் தாம் வாழ்ந்த குடிசையிலிருந்து புலம் பெயர்கின்றார்கள். புலம் பெயர்ந்து நாட்டின் இன்னுமொரு பகுதிக்குச் செல்கினறார்கள்.  அவர்கள் சென்றதும் அவர்கள் வாழ்ந்த குடிசை சமூக மாற்றத்தை . விடுதலையை விரும்பும் ஏனைய தமிழ்ச் சமூக இளைஞர்களால் எரிக்கப்படுகின்றது. அந்த எரித்தல் என்பது ஒரு குறியீடு.  'குடிமைத்தொழில் செய்யும் குடிமகன் ஒருவன் வாழுவதற்கு இனி அந்தக் குடிசை அங்கு வேண்டியதில்லைத்தான்' என்று நாவல் முடிகின்றது.

Sunday, August 10, 2025

காலத்தால் அழியாத கானம் - ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?


கவிஞர் கண்ணதாசனின் சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. கவிஞரின்  எளிய, இனிய தமிழ் கேட்பவரைக் கிறங்க வைப்பது. இது போல் தெளிவான வசனங்களை உள்ளடக்கிய பாடல்களைத் தற்போது கேட்பது அரிது. மெல்லிசை மன்னர்களின் இசையில் , டி.எம்.எஸ் குரலில், எம்ஜிஆர் , ஜெயலலிதா நடிப்பில் ஒலிக்கும் பாடலை எத்தனை தரம் கேட்டாலும் அலுப்பதில்லை.
 
"ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ"
 
"ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு"
 
"உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு"
 
என் மனத்தைக் கவர்ந்த பாடல் வரிகள். சங்கப்பாடல்கள் பலவற்றில் ஊரெல்லாம் தூங்கையில் தூங்காமல் விழித்திருக்கும் பெண் ஒருத்தியின் உணர்வுகளைக் கவிஞர்கள் பலர் விபரித்திருப்பதைக் காணலாம். ஆனால் இங்கு கவிஞர் கண்ணதாசன் ஆணொருவனின் இவ்வித உணர்வுகளை விபரித்திருக்கின்றார். அதுவே சுவைக்கின்றது.
 
அதே சமயம் சங்ககாலப்பாடல்களில் பெண் தூங்காமல் விழித்திருப்பது காதலால், காதற் பிரிவால், பொருள் தேடித் தொலைதூரம் சென்று விட்ட தலைவனின் பிரிவால், ஆனால் இவனோ தன் மக்களின் விடுதலைக்காகப் போராடும் போராளி. தன் இலட்சியப் போராட்டத்தின் காரணமாக இரவில் விழித்திருப்பதும் இவன் வாழ்க்கையாகிப் போனது.  
 
'அழும் நிலவு' அற்புதமான படிமம். நிலவு அழுவதாக எவரும் எழுதி நான் வாசித்ததில்லை.
 
"பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு"
 
இதைவிட விடுதலைப் போராளி ஒருவனின் உணர்வுகளை எவ்விதம் விபரிப்பது?
நான் முதல் பார்த்த எம்ஜிஆர் , ஜெயலலிதா இணைந்து நடித்த படம் மட்டுமல்ல, அவர்களே இணைந்து நடித்த முதல் படமும் ஆயிரத்தில் ஒருவன்தான்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...