Friday, August 22, 2025
எம்ஜிஆர் வழியில் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் ஆரம்பம்!
அண்மையில் தமிழகத்தில் நடிகர் விஜய்யின் தமிழர் வெற்றிக் கழக மாநாடு மதுரையில் நடந்தது. அம்மாநாடு பற்றிய செய்திகளை ஊடகங்களில் பார்த்தேன். அதில் தென்பட்ட ஒரு விடயம் என் கவனத்தை ஈர்த்தது. அது - மாநாடு உள்ளடக்கியிருந்த அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் உருவப்படங்களுடன் கூடிய விஜய்யின் படம். இது ஒன்றைக் காட்டுகிறது. விஜய் தமிழக மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்திருக்கின்றார் என்பதுதான் அது.
எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்தபோது அண்ணா பெயரை வைத்து ஆரம்பித்தார். அவ்விதம் ஆரம்பித்து கலைஞர், எம்ஜிஆர் என்னும் ஈர் ஆளுமைகளுக்கிடையிலான மோதல்களாகத் தமிழகச் சட்டசபைத்தேர்தலை மாற்றினார். அவர் திரைப்படத்துறையில் இருந்தவரையில் எம்ஜிஆர் , சிவாஜி என்னும் உச்ச நட்சத்திரங்களுக்கிடையிலான மோதலை எவ்விதம் கையாண்டு வெற்றி பெற்றாரோ, அவ்விதமே அரசியலிலும் கலைஞர் , எம்ஜிஆருக்கிடையிலான மோதலைக் கையாண்டு வெற்றி பெற்றார். இதனால்தான் வெற்றி பெறுவதற்குக் கீரைக் கடைக்கும் எதிர்க்கடை தேவை என்பர். இவ்விதம் ஈர் எதிரிகளின் போட்டியாக அரசியலை மாற்றுவதன் மூலம் , மக்களின் கவனம் அதில் பதிந்து நிற்கும். அதன் வழியே பிரிந்து நிற்பார்கள். இதில் ஏனைய கட்சிகள் அடியுண்டு போய்விடும்.அறிஞர் அண்ணா , எம்ஜிஆர் , கலைஞர், ஜெயலலிதா இவர்கள் எல்லாரும் மக்களைக் கவர்ந்த ஆளுமைகள். இவர்களில் அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் இருவரும் பெரிதாக ஊழற் குற்றச்சாட்டுகளில் அகப்படாதவர்கள். எம்ஜிஆர் அரசியலில் இருந்தவரை அவரோ, அவரது குடும்பத்தவரோ சொத்துகள் பெருக்கியதாக வரலாறில்லை. அண்ணா, எம்ஜிஆர் மறைந்து ஆண்டுகள் பல கடந்து, இன்றும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப்பெற்ற தலைவர்களாக நினைவில் பதிந்து கிடக்கின்றார்கள். அறிஞர் அண்ணாவை வைத்து , கலைஞரின் தலைமையிலான திமுகவுக்கு எதிராக எம்ஜிஆர் எவ்விதம் வெற்றிக்கனியைத் தட்டிக்கொண்டாரோ அவ்விதமே அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் என்னும் ஆளுமைகளின் வாரிசாகத் தன்னை நிலை நிறுத்தி , எம்.கே ஸ்டாலினுக்கெதிராக வெற்றிவாகை சூடுவாரா விஜய் என்பது தற்போதுள்ள கேள்வி?
என்னைப்பொறுத்தவரையில் கலைஞர் எம்ஜிஆர் என்று அன்று திமுக பிரிந்தபோது தமிழகத்தில் கலைஞருக்கெதிரான பேரலையொன்று எழுந்தது. எம்ஜிஆர்தான் திமுக என்று பெரும்பாலான மக்கள் மனத்திலிருந்த பிம்பத்தைக்கலைஞர் உடைத்தபோது, அது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் எம்ஜிஆர் மேல் எழுந்த அநுதாபமும், அபிமானமும், கலைஞருக்கெதிராக எம்ஜிஆர் வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளும் எம்ஜிஆரின் வெற்றிக்கு வழி வகுத்தன. ஆனால் தற்போது அவ்விதமானதொரு சூழலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக இல்லை. இந்நிலையில் திமுகவுக்கு எதிராக அன்று எம்ஜிஆர் கட்சியை உருவாக்கியபோது அவருக்குக்கிடைத்த மகத்தான் ஆதரவு விஜய்யை ஆட்சிக்கட்டிலில் வைக்குமா என்பது கேள்விக்குறி.
உட்கட்சிப்போராட்டத்தில் பலமிழந்து கிடக்கும் அதிமுக இவ்விதமே தேர்தலைச் சந்திக்குமானால் , அன்று ஜெயலலிதா அணி, ஜானகி அணி என அதிமுக பிரிந்து நின்று திமுகவைச் சந்தித்தபோது ஏற்பட்ட நிலைதான் விஜய்யுக்கும் ஏற்படும். திமுக எதிர்க்கட்சிகளின் பிளவுகளால் இலகுவாக வெற்றிவாகை சூடும். ஜானகி அணியினை ஓரங்கட்டி, ஜெயலலிதா பலமான அரசியல் சக்தியாக உருவானார். அது போல் பிளவுண்டு கிடக்கும் அதிமுகவை ஓரங்கட்டி நடிகர் விஜய்யின் தமிழர் வெற்றிக் கழகம் பலமான எதிர்க்கட்சியாக உ ருவாகும் சாத்தியங்கள் அதிகம். ஏனெனில் திமுக்வுக்கென்று அன்றிலிருந்து இன்றுவரை உறுதியான ஒரு வாக்கு வங்கியுண்டு. அது ஒருபோதும் நிலை குலைந்ததில்லை. மாறாக தமிழர் வெற்றிக்கழகம் , எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அதிமுகவுடன் ஒன்று சேர்ந்து தேர்தலைச் சந்திக்குமானால், அது ஆட்சியிலிருக்கும் திமுகவுக்கு மிகுந்த சவாலினைக் கொடுக்கும். ஆனால் ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு அந்தச் சவால் இருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் பிரதான் எதிர்க்கட்சியாகத் தமிழர் வெற்றிக்கழகத்தை ஆக்கும் சாத்தியங்களுள்ளன. எவ்விதம் எதிர்க்கட்சித்தலைவியாக இருந்து , தன்னை அரசியலில் மேலும் வளர்த்து, தமிழக முதல்வராக ஜெயலலிதா மாறினாரோ அவ்விதம் விஜய்யின் அரசியல் எதிர்காலமும் அமைவதற்குச் சாத்தியங்கள் அதிகமாகவுள்ளன.
தமிழர் வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்கும் சந்தர்ப்ம் ஏற்பட்டால் ஒருபோதும் எடப்பாடி பழனிச்சாமி தன் ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்க மாட்டார். இந்நிலையில் விஜய் பிரிந்து கிடக்கும் ஏனைய அதிமுகவினரை ஒன்றிணைத்துத் தன் தலைமையில் கூட்டணி அமைக்கும் பட்சத்தில், அவர்களுக்கும் அரசியல் எதிர்காலம் சிறக்கும் அதே சமயம் எடப்பாடியின் அரசியல் எதிர்காலம் சிறுக்கும். அந்நிலையி8ல் அடுத்தடுத்த வரும் தேர்தல்களில் விஜய்யின் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் அதிமுகவினரே உண்மையான அதிமுகவினராக உருமாறும் சாத்தியங்களும் உள்ளன.
எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்தபோது எவ்விதம் தூற்றப்பட்டாரோ அவ்விதமே விஜய் மீதும் அரசியல் எதிரிகள் சேற்றினை வாரியிறைப்பார்கள். அவற்றைத்தாங்கும் சக்தி நிச்சயம் விஜய்யிற்கு இருக்கும் என்பதையும் எதிர்பார்க்கலாம்.
மீண்டும் தமிழக அரசியலில் மக்களுக்கு நன்கு அறிமுகமான , வசீகரகமான தலைமைகளில் வரும் சட்டசபைத்தேர்தல் நடைபெற உள்ளதால், இப்பொழுதே தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது..
Subscribe to:
Post Comments (Atom)
POTA கண்டு அஞ்சும் GOTA! (குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது - இலங்கையின் இன்றூள்ள அரசியல் சூழல் பற்றிய அவதானிப்பொன்று!)
முன்னாள் இலங்கையின் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் அறிமுகம் செய்யப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA -Prevention of Terrorism Act) , அது அற...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
No comments:
Post a Comment