Tuesday, May 25, 2021

வண்ணநிலவனும் , கி.ராஜநாராயணனும்! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் வண்ணநிலவன் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்குக் கிடைத்த தமிழக அரசின் அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதை சிறிது அதிகமென்று கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் கி.ராஜநாராயணின் படைப்புகள் எவையும் ஞானப்பீட விருது பெறும் தகுதி உள்ளவை அல்ல என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வண்ணநிலவனின் மேற்படி கூற்று சிறிது ஏமாற்றத்தினை அளிக்கின்றது. . அவ்விதம் அவர் கூறுவது அவரது உரிமை. ஆனால் அவ்விதம் அவர் கூறிய தருணம் உரிய தருணமல்ல. என்னைப்பொறுத்தவரையில் தமிழ் எழுத்தாளர்கள் இருவருக்குத்தான் இதுவரையில் அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதை கிடைத்துள்ளது. எழுத்தாளர் பிரபஞ்சனுக்குப் புதுவை அரசு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குக்களை நடத்தியது. தற்போது தமிழக அரசு எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதையினை நடாத்தியுள்ளது.

Monday, May 24, 2021

கவிதை: ஒட்டகங்களை விட.. வ.ந.கிரிதரன் -


ஒட்டகங்கள் பாலைகளைக் கண்டு
துவண்டு விடுவதில்லை;
தளர்வதில்லை.
வீசும் மணற்காற்றுகளைக் கண்டு
அஞ்சுவதில்லை.
நீர் தேக்கி, நீண்ட தொலைவுகளை நாடிப்
பயணிப்பதில் அதிக பிரியம் கொண்டவை
அவை.
உளப்புயல்கள் வீசியடிக்கையிலெல்லாம்,
நினைவுச் சுழல்களுக்குள் சிக்கும்போதெல்லாம்,
அகக்கடலில் படகுகளையிழந்து
நீச்சலடிக்கையிலெல்லாம்
நான் ஒட்டகங்களை நினைப்பதுண்டு.
ஒட்டகங்களைப்போல் நானிருக்க வேண்டுமென்று
நினைப்பதுண்டு.
எவை கண்டும் தளராத
அவை பற்றி அவ்வேளைகளில் சிந்திப்பதுண்டு.

Friday, March 19, 2021

வ.ந.கிரிதரனின் 'கணவன்' (Husband Short Story by V.N.Giritharan Summary) - Witty Garden -

சிறுகதை: 'கணவன்' - வ.ந.கிரிதரன் - நான் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவன். என் படைப்புகள் பல அச்சுருவில் வெளிவராத நிலையிலும் இணையத்தில் பல்வேறு தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. மின்னூல்களாகப் பல படைப்புகளுள்ளன. எனது படைப்புகள் பலவற்றை வாசகர்கள் தாமாகவே இனங்கண்டு அவற்றைப்பற்றி எழுதியுள்ளார்கள். பல்கலைகழகங்களில் ஆய்வுகள் செய்துள்ளார்கள். தற்போதும் மாணவியொருத்தர் முனைவர் பட்டப்படிப்புக்காக ஆய்வுகள் செய்து வருகின்றார். எழுத்தாளர்கள், கலை,இலக்கிய விமர்சகர்கள், சமூக, அரசியற் செயற்பாட்டாளர்கள் என என்னுடன் தொடர்பு கொண்ட பலரும் இணையத்தில் வெளியான எனது படைப்புகள் வாயிலாக என்னை அறிந்து தொடர்பு கொண்டவர்கள்தாம். நான் ஏன் இதைக் கூறுகின்றேன் என்றால்.. இன்னும் எழுத்தாளர்கள் பலர் இணையத்தின் ஆரோக்கியமான பயன்பாட்டினை அறியாமல் , அவற்றைப்பாவிக்காமல் இருக்கின்றார்கள் என்பதனால்தான். மேலும் அவர்கள் தம் படைப்புகளை வெளிப்படுத்துவதற்குக் கலை,இலக்கிய ஆளுமைகளின் அங்கீகாரத்தை எண்ணிச் செயற்படுவதுதான். உங்களுக்கு யாருடைய அங்கீகாரமும் தேவையில்லை. உங்கள் படைப்புகளை இணையத்தில் வலைப்பதிவுகளில், இணைய இதழ்களில் பதிவேற்றுங்கள். அவை வாசகர்களை நேரில் சென்றடையும். உங்கள் படைப்புகள் தரமாக இருந்தால் நிச்சயம் இன்றோ அல்லது நாளையோ அல்லது என்றோ நிச்சயம் அது உரிய வாசகர்களைச் சென்றடையும் என்பது மட்டும் நிச்சயமானது. 

Friday, February 19, 2021

கவிதை: கவிதை = அறிவுணர்வுப்புரிதல்கள் ->ஆழ்வுணர்வுக்கவி -> கவிதைகள்! - வ.ந.கிரிதரன் -

அண்மைக்காலமாக அடிக்கடி கனவுகள்
வருகின்றன.
சிலவேளைகளில் அவை கனவுகளா
நனவுகளா என்பதில் கூட
என்னால் வேறுபாடுகளைக் காண முடிவதில்லை.
முன்பெல்லாம் ஆழ்ந்துறங்கையில் வரும் கனவுகள்
இப்போதெல்லாம் அரைத்தூக்கத்திலும் வருகின்றன.
நம்பவே முடியவில்லை. நிஜமா? நிழலா? என்பதை.
ஆனால் கனவுகள் நனவுகள் அல்ல என்பதை
உணர்கையில் ஏற்படும் திருப்தி
இனியதோர் அனுபவம்.
அப்பாடா என்று எத்தகையதோர் நிம்மதி!
ஏன் கனவுகள் எம்மை ஆட்டிப்படைக்கின்றன?
என்று அவ்வப்போது எண்ணுவதுண்டு.
அறிவுணர்வின் புரிதல்கள்தமை
ஆழ்வுணர்வுக்கவி
வடித்திடும் கவிதைகளா?
அல்லது
அக்கதாசிரியர் வடித்திடும்
புனைவுக் காட்சிகளா?

கவிதை: பழைய புத்தகக்கடை அனுபவமொன்று! - வ.ந.கிரிதரன் -

எனக்குப் பிடித்த விடயங்களிலொன்று
பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது.
புதுக் கடைகளில் வாங்குவதை விடப்
பழைய புத்தகக் கடைகளில்  வாங்குவதிலுள்ள
இன்பமே தனி.
பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பதைப்போல்
எல்லாவகைப் புத்தகங்களும்
புதுப்புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை.
உதாரணத்துக்கு ஒன்று கூறுவேன்.
உங்களால் பழைய  புத்தகக் கடைகளில்
வாங்குவதைப்போல்
புதுப்புத்தகக் கடைகளில்
பால்ய பருவத்தில் பிடித்தமான இதழொன்றில்
தொடராக வெளியான,
ஓவியங்களுடன் கூடிய , அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட
நூல்களை ஒருபோதுமே பெற முடியாது.
அந்நூல்களைக் கைகளால் அளைகையிலுள்ள சுகம்
இருக்கிறதே
அதுவொரு பெரும் சுகமென்பேன்.
அவ்வகையான சுகத்தினை ஒருபோதுமே உங்களால்
புதுப்புத்தகக் கடைகளில் பெற முடியாது.

கவிதை: நூலகம் நோக்கி! - வ.ந.கிரிதரன் -

அந்த உலகம் எனக்குப் பலவிதங்களிலும் பிடித்த உலகம்
என்பேன்.
என் மனத்தில் சஞ்சலங்கள் அலையடிக்கத்தொடங்குகையில்,
என் மனத்தில் சஞ்சலப்புயல்கள் வீசத்தொடங்குகையில்,
என் மனத்தின் அமைதி சீர்குலையத்தொடங்குகையில்,
நான் அந்த உலகை நோக்கிப் பயணமாகத் தொடங்குகின்றேன்.
அந்த உலகப்பயணம் தரும் திருப்தியை எனக்கு வேறெந்தப் பயணமும்
தருவதில்லை.
அந்த உலகில் நானும் காட்சிகள் அற்புதமானவை.
பறவைகளைப் பற்றிய புரிதல்களை,
அறிவியற் சாதனைகளை வெளிப்படுத்தும்
அந்த உலகில் நான் எவ்வளவு நேரமானாலும் என்னை மறந்து
பயணிப்பேன். அந்த உலகின் மிகச்சிறப்புகளிலொன்று காலக்கப்பல்.
அந்த உலகின் காலக்கப்பலைப்போல் இன்னுமொரு காலக்கப்பலை
நான் வெறெங்கும் கண்டதில்லை.
அந்தக் காலக்கப்பற் பயணத்துக்காகவே நான் அடிக்கடி அங்கு செல்வதுண்டு.
அந்தக்கப்பலிலேறி
ஆதியில் இங்கு ஆட்டம்போட்ட இராட்சதப்பறவைகள், மிருகங்களின் காலகட்டத்துக்கு
என்னால் மிகவும் இலகுவாகச் சென்று விட முடிகின்றது.
ஆனால் அக்காலக்கப்பல் என்னை அவற்றிடமிருந்து திறமையாக
பாதுகாக்கவும் செய்கின்றது.
என்னால் அம்மிருகங்கள்,பட்சிகளின் அபாயங்களைப்பற்றிய சிந்தனைகளை நீக்கி
அங்கு அக்கப்பலில் பயணிக்க முடிகின்றது.

கவிதை: எமக்கும் கீழே தட்டையர் கோடி! - வ.ந.கிரிதரன் -


தட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால்
எனக்கு மிகவும் பிடித்த
பொழுதுபோக்கு.
பரிமாண வித்தியாசங்கள் எங்களுக்கிடையில்
ஏற்படுத்திய வித்தியாசங்கள்
எங்களுக்கு மிகவும் சாதகமாகவிருக்கின்றன.
அதனால் தட்டையர்கள் உலகு எப்பொழுதும்
எனக்கு உவப்பானதாகவே இருக்கின்றது.
தட்டையர்கள் உலகில் நான் எப்போதுமே உவகையுறுவதற்கு
முக்கிய காரணங்களிலொன்று
என்னவென்று நினைக்கின்றீர்கள்?
மானுடப் படைப்பிலுள்ள பலவீனங்களிலொன்றுதான்.
ஏனெனில் அங்கு நான் அவர்களைவிட
எல்லாவகையிலும் உயர்ந்தவன்.
என்னை மீறி அங்கு எவையுமேயில்லை.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...