Sunday, March 18, 2018

தாமரைச்செல்வியின் படைப்புகள் பற்றி..... வ.ந.கிரிதரன் -

ஈழத்துப்பெண் எழுத்தாளர்களில் தாமரைச்செல்வியின் கதைகளுக்கு முக்கிமானதோரிடமுண்டு. அந்த இடத்துக்கு முக்கிய காரணங்களிலொன்று இவர் தான் வாழ்ந்த காலகட்டத்து சமூக, அரசியல் பின்புலத்தில் தன் கதைகளைப்புனைந்திருப்பதுதான். இவரது கதைகள் பலவற்றில் தொண்ணூறுகளில் ஏற்பட்ட ஈழத்துத்தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள், நிலவிய போர்க்காலச்சூழல் மற்றும் இயற்கை அழிவுகள் அதிக அளவில் விபரிக்கப்படுகின்றன. இவரது கதைகள் பொதுவாக பரந்தன், கிளிநொச்சி மட்டும் வன்னிபிரதேசத்தை மையமாக வைத்துப்பின்னப்பட்டவை. போர்ச்சூழல் மக்களுக்கு, பல்வேறு வயதினருக்கும் ஏற்படுத்திய பாதிப்புகள், குறிப்பாக உளவியற் பாதிப்புகள் பற்றியெல்லாம் வெளிப்படுத்துபவை. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து , ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துத் தமிழ் மக்களின் இருப்பினை, அவர்கள காலகட்டத்துச் சமூக, அரசியற் சூழல் ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவும் இவரது படைப்புகள் இருக்கின்றனவென்றும் கூறலாம்.

அண்மையில் என் சேகரிப்பிலிருந்த புத்தகங்கள் மத்தியில் தேடிக்கொண்டிருந்தபொழுது இவரது 'வீதியெல்லாம் தோரணங்கள்' குறுநாவல் மற்றும் 'வன்னியாச்சி' (சிறுகதைத்தொகுப்பு) ஆகியவை மீள அகப்பட்டன. அவற்றை வாசித்தபொழுதே மேற்படி எண்ணங்கள் முகிழ்த்தன. மேற்படி 'வீதியெல்லாம் தோரணங்கள்' குறுநாவல் வீரகேசரி நிறுவனம் யாழ் இலக்கிய வட்டத்துடன் இணைந்து நடாத்திய கனகசெந்திநாதன் குறுநாவல் போட்டியில் இரண்டாவது இடத்தைப்பெற்ற குறுநாவல்.

இந்தக் குறுநாவல் கூறும் கதை இதுதான்: வெளிநாட்டில் வாழும் தமிழ் இளைஞனொருவனுக்கு ஊரில் தாயார் சீதனத்துடன் திருமணம் பேசுகின்றார். இரு குடும்பத்தாரும் சம்மதிக்கின்றார்கள். மணப்பெண்ணின் சகோதரன் வெளிநாட்டு இளைஞனின் நண்பன் கூட. யாழ்நகரில் நடைபெற்ற இராணுவத்தாக்குதலொன்றில் அந்த நண்பன் இறந்து விடுகின்றான். அவன் இறந்ததால் இனி யாரும் அந்த மணப்பெண்ணுக்குரிய சீதனத்தைத்தரமாட்டார்கள் என்பதால் வெளிநாட்டு இளைஞனின் தாயார் அந்தத்திருமணத்தை நிறுத்திவிடத்திட்டமிடுகின்றார். இன்னுமொரு காரணமும் உண்டு. படையினரின் தேடுதல்கள் அந்த மணப்பெண்ணிருந்த பகுதியில் நடைபெற்றதால் அந்த மணப்பெண்ணுக்கு என்னவெல்லாமோ நடந்திருக்கலாம் என்று வேறு சந்தேகத்தைக்கிளப்பி விடுகின்றாள் அந்தத்தாயார். ஆனால் ஊர் திரும்பும் வெளிநாட்டு இளைஞனோ இவ்விதமான சூழலில்தான் நண்பனின் குடும்பத்துக்குக் கை கொடுக்க வேண்டுமென்று கைவிடக்கூறிய தாயாரிடம் கூறிவிட்டு, நண்பனின் வீடு செல்வதுடன் குறுநாவல் முடிவடைகின்றது.

மணி வேலுப்பிள்ளையின் 'மொழியினால் அமைந்த வீடு' - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான மணி வேலுப்பிள்ளை தற்போது டொராண்டோவில் வசித்து வருகின்றார். எழுத்தாளர் மணி வேலுப்பிள்ளை நல்லதொரு மொழிபெயர்ப்பாளரும், கட்டுரையாளருமாவார். சிலிய ஜனாதிபதி அலந்தே, டெங் சியாவோ பிங், அம்மாவின் காதலன் மாயாகோவஸ்கி மற்றும் ரோசா லக்சம்பேர்க் போன்ற கட்டுரைகளும், தமிழ் மொழிபெயர்ப்பு (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு..) பற்றிய மொழிபெயரியல்பு, மொழியினால் அமைந்த வீடு, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, விபுலானந்த அடிகளின் கலைச்சொல்லாக்க வழிமுறைகள் போன்ற கட்டுரைகள் அதனையே வெளிப்படுத்துகின்றன.

மொழிபெயர்ப்பாளர்கள் பலர் மொழிபெயர்ப்புகளுடன் நின்று விடுகையில், இவர் மொழிபெயர்ப்பு பற்றிய ஆழமான கட்டுரைகளைத் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இவை படைப்புகளை மொழிபெயர்க்க விரும்பும் எழுத்தாளர்களுக்கு பயன் மிக்க ஆலோசனைகளை வழங்குகின்றன.

ஆழமான கட்டுரைகளைச் சுவையாக எழுதுவதில் வல்லவர் இவர். உதாரணத்துக்கு 'மொழியினால் அமைந்த வீடு' கட்டுரை கீழுள்ளவாறு முடிவதைப்பாருங்கள்:

"உள்ளதை உள்ளபடி உரைப்பதற்கு மொழி ஒரு போதும் தடையாய் இருக்கப் போவதில்லை. உள்ளதை உள்ளபடி உரைக்க முற்படாதவர்களுக்கே மொழி தடங்கல் விளைவிக்கும். ஆதலால்தான் ஆட்சியாளரும், அரசியல்வாதிகளும் , விமர்சகர்களும், அவர்களுக்கு உடந்தையாய் விளங்கும் செய்திமான்களும் மொழியைத் திரித்து வருகின்றார்கள். மொழித் திரிபுவாதிகள் கட்டியெழுப்பிய வீட்டிலேயே பரந்துபட்ட பாமர மக்கள் வாடகைக் குடிகளாய் வாழ்ந்து வருகின்றார்கள்."

றியாஸ் குரானாவின் தமயந்தி பற்றிய குறிப்பு பற்றி.... - வ.ந.கிரிதரன் -

அண்மையில் றியாஸ் குரானா தமயந்தியின் படைப்புகளைப்பற்றிப்பின்வருமாறு தன் முகநூல் குறிப்பொன்றில் கூறியிருந்தார்:

"சில விசயங்கள் ஆச்சரியமானதுதான். அவ்வப்போது உதிரியாக இதழ்களில் சில கதைகளைப் படித்திருக்கிறேன். ஓரிண்டு கவிதைகளும் அதிலடங்கும். ஆனால், அவர் ஈழத்து இலக்கியப் பரப்பில் முக்கியமானவர்தான். ஆர்வமூட்டும் கதைசொல்லி. அவருடைய கதைகள், கவிதைகள் தொகுப்பாக்கம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஈழத்து இலக்கிய வெளியில் தொகுப்பாக்கம் செய்வதே பெரும் சவாலான விசயம். சிலர் அதை அவ்வளவாக பொருட்படுத்துவதே இல்லை. "

இங்கு விமர்சகர்கள் என்ற பெயரில் உலா வருபவர்களில் பலர் தம் அங்கீகாரத்துக்காக தம் சிஷ்யகோடிகளாகச்சிலரைத்தூக்கிப் பிடிப்பார்கள். சிஷ்யகோடிகளும் அவர்களைத்தூக்கிப்பிடிப்பார்கள். ஒருவரையொருவர் முதுகு சொறிந்து கொள்வதில் குளிர்காய்வார்கள். இவர்கள் வெளியிடும் தொகுப்புகளும் அவ்விதமாகவே இருப்பதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் யாருக்கும் அடி பணியாத, வளைந்து கொடுக்காதவர்களை இந்த முதுகு சொறியும் கூட்டம் கண்டு கொள்வதில்லை. மேலும் அவர்களும் இவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதில்லை. மேலும் வளைந்து கொடுக்காதவர்களைப்பற்றி அங்கீகாரத்தை நாடுமொரு விமர்சகர்  தூக்கி வைத்து எழுதினாலும், தம்மை அவ்விதம் எழுதி விட்டார்களே என்று வளையாதவர்கள் பதிலுக்கு அவர்களைத்தூக்கி வைப்பதில்லை வழக்கமான சிஷ்யகோடிகளைப்போல். இதனால் அவ்வகை விமர்சகர்களுக்கு எந்தவித ஆதாயமுமில்லை. ஆனால் உண்மையான படைப்பாளிகளை அவர்களது படைப்புகளினூடு தரமான வாசகர்கள் கண்டு கொள்வார்கள். இன்று நீங்கள் கண்டு கொண்டதைப்போல. அவ்விதமான படைப்புகள் கால ஓட்டத்தில் நின்று பிடிக்கும்.

விஷ்ணுபுரம் சில குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' பற்றிப் பலர் பலவாறு கூறியுள்ளார்கள். இவர்களது குறிப்புகளெல்லாவற்றையும் பார்க்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது. இவர்களில் பலர் யானை பார்த்த குருடர்கள். நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி. ஹேமந்தன் என்னும் பாணன் விஷ்ணுபுரம் பற்றிய கதையினைக் கூறி முடித்ததும் வசந்தன் என்னும் பாணன் கூறத்தொடங்குவதுடன் ஆரம்பமாகும் நாவல் மூன்று பாகங்களாக விரிவடைந்து வசந்தன் கதையை முடித்ததும் இன்னுமொரு பாணனான கிரிஷ்மன் மீண்டுமொருமுறை விஷ்ணுபுரம் கதையினைக் கூறத்தொடங்குவதுடன் தொடர்கிறது. நாவலைப் பற்றிப் பின் அட்டையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: ' இந்நாவலில் விஷ்ணு ஒருமுறை புரண்டு படுக்கிறார். தருக்கம், தியானம்,கற்பனை என்ற மூன்று அடிப்படையான அறிதல் முறைகளில் கற்பனையின் துணை கொண்டு , பிற இரண்டின் சாத்தியங்களை பயன்படுத்தியபடி, மானுடனின் ஞானத்தேடலின் பயணத்தைச் சித்தரிக்கிறது (சித்திரிக்கிறது). கலையும், தருக்கமும், ஆன்மீகமும், மானுட உணர்வுகளுடன் கலந்து பௌராணிகமான மாய உலகமொன்றைப் படைக்கின்றன.'

ஜெயமோகனின் ஞானத் தேடலே நாவலாக உருப்பெற்றிருக்கின்றது. இந்து, பௌத்த தத்துவங்களினூடு மனித வாழ்வு, பிரபஞ்சத்தின் தோற்றம், காலம் பற்றி தர்க்கரீதியாகக் கற்பனையைப் படரவிட்டு இந்நாவலைப் படைத்திருக்கின்றார் ஜெயமோகன். தான் அறிந்ததை, உணர்ந்ததை அவ்விதமே கூறவேண்டுமென்ற ஆவல் ஜெயமோகனுக்கு அதிகமாக இருப்பதை நாவல் முழுவதிலும் காண முடிகிறது. விஷ்ணுபுரம் பற்றிய வர்ணணைகளில் நாவலாசிரியர் மிக அதிகளவில் கவனமெடுத்திருக்கின்றாரென்பதை விஷ்ணுபுரம் பற்றிய வர்ணனைகள் வெளிக்காட்டுகின்றன.ஜெயமோகனின் ஞானத்தேடலே நாவல் முழுக்கப் பல்வேறு பாத்திரங்களாக, பிங்கலன், சங்கர்ஷணன்.. என உலாவருகின்றது. நாவல் முழுக்க எண்ணமுடியாத அளவிற்குப் பாத்திரங்கள். அத்தியாயத்திற்கு அத்தியாயம் புதிய புதிய பாத்திரங்களின் வருகையுடன் நாவல் நடை போடுகிறது. வழக்கமாக அத்தியாயங்களிற்கிடையில் ஒருவித தொடர்ச்சியினை ( Linearity) எதிர்பார்த்துப் பழக்கப் பட்டு விட்ட பெரும்பாலான தமிழ் வாசகர்களுக்கு இந்தத் தொடர்ச்சியற்ற தன்மை நாவலைப் புரிதலில் சிரமத்தினை ஏற்படுத்தி விடுகின்றது. இது இந்நாவலை வாசிக்க விளைபவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுமையினையும் , பாத்திரங்களைச் சம்பவங்களைக் கிரகிக்க வேண்டிய திறமையினையும் மிக அதிகமாகவே வேண்டி நிற்கிறது. ஆனால் இந்த நாவலின் அடிப்படையே ஒரு மனித உயிரின் ஞானத் தேடல் என்ற அளவில், நாவல் பாத்திரங்களினூடு, நகர அமைப்பினூடு, காட்சிகளினூடு, கூறி விவாதிக்கும் இருத்தல் பற்றிய விசாரத்தைத் தொடர்ந்து கொண்டு போவதன் மூலம் இந்நாவல் பிரதியின் வாசிப்பை இலகுவாக்கலாம். பலருக்கு இந்நாவல் புரிபடுவதிலுள்ள குழப்பம் காரணமாகத் தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கருத்துகளை வைக்கின்றார்கள். (அண்மையில் ஜெயமோகனின் நூல் விழாவில் பேசிய ஜெயகாந்தன் தன்னாலேயே நாவலின் உள்ளே புக முடியவில்லை என்று குறிப்பிட்டதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது). நாவல் பற்றி ஈழத்தின் முற்போக்கு முகாமைச் சேர்ந்த அறிஞர் அ.ந.கந்தசாமி தனது 'மனக்கண்' என்ற நாவலின் முடிவுரையில் 'என்னைப் பொறுத்தவரையில் பாரகாவியமும் நாவலும் ஒன்றென்றே நான் கருதுகிறேன். ஒன்று வசனம், மற்றது கவிதை என்ற வித்தியாசத்தைத்தவிர பாரகாவியம் எப்பொழுதுமே அவசரமாகக் கதையைச் சொல்லத் தொடங்குவதில்லை. நாட்டு வர்ணனை, நகர வர்ணனை, பருவ வர்ணனை என்று மெதுவாகவே அது கிளம்பும். காரின் வேகம் அதற்கில்லை. தேரின் வேகமே அதற்குரியது. வழியிலே ஒரு யுத்தக் காட்சி வந்ததென்று வைப்போம். உதாரணத்துக்கு வியாச பாரதத்தை எடுத்தால் பதினேழு நாள் யுத்தம் நடந்தது. பாண்டவர் வென்றனர், கௌரவர் தோற்றனர் என்று மிகச்சுருக்கமாகவே அதனைக் கூறியிருக்கலாமல்லவா? ஆனால் அவ்வாறு எழுதினால் கதா நிகழ்ச்சியை நாம் புரிந்து கொண்டாலும் யுத்தத்தின் அவலத்தையும் வெற்றி தோல்வியையும் நேரில் பார்த்தது போன்ற உணைச்சி நமக்கு ஏற்படாது. அந்த உணர்ச்சி நமக்கு ஏற்படும்வரை பொறுமையாக விவரங்களை ஒன்றின் பின்னொன்றாகச் சலிப்பின்றி எடுத்துக் கூறி நிற்கும் ஆற்றல் பெற்றவனே பாரகாவியஞ் செய்யும் தகுதியுடையவன். நல்ல நாவலாசிரியனுக்கும் இப்பண்பு இருக்கவேண்டும்.' என்று கூறியுள்ளதுதான் நினைவுக்கு வருகின்றது.ஜெயமோகனுக்கு இப்பண்பு நிறையவேயுண்டு. விஷ்ணுபுரம் பற்றிய அவரது வர்ணனைகள் வாசிப்பவரிடத்தில் அதன் பிரமாண்டம் பற்றியதொரு பிரமிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. இருத்தல் பற்றிய மானுடத்தின் ஞானத் தேடல் என்ற சிறியதொரு கருவுக்கு விஷ்ணுபுரம் என்றொரு பிரமாண்டமான நகரினைப் பல்வேறு பாத்திரங்களினூடு படைத்து, நமது காவியங்களில் கையாளப் பட்டதொரு உத்தியினைப் ( பாணன் கதை சொல்லல்) பாவித்துக் கதை சொல்லியிருக்கின்றார் ஜெயமோகன்.ஆனால் மெய்ஞானம் மட்டுமின்றி நவீன விஞ்ஞானத்தினூடும் இருப்பு பற்றிய தேடலில் மூழ்கிக் கிடப்பவர்களை இந்த நாவல் கவருமா என்பது சந்தேகத்திற்கிடமானதே.எல்லாக் கதாப் பாத்திரங்களும் கதைகளாக மாறிவிடுகின்றதொரு உண்மையில் முழு நாவலுமேயொரு கதைதான். புராணக் கதை.திரிசாகரம் திரிவிக்கிரமர் இயற்றிய மகாபத்மபுராணம். பாணர்கள் கதைசொல்வதிலுள்ள ஒழுங்கு மாறியிருப்பதாகவும் கருத இடமுண்டு. பொதுவாகக் கதைகூறும்பொழுது சில சமயங்களில் ஒழுங்குகள் மாறிக் கதை சொல்வதுமுண்டு. ஆனால் விஷ்ணுபுரத்தில் வரும் விளக்கங்களும் இந்நாவலினூடு விரவிக் கிடக்கும் இருப்பு பற்றிய தேடலும் விரைவாக இந்நாவல் கூறும் பொருள் பற்றி நம்மை வந்தடைவதைத் தடுத்து விடுகின்றன. வாசிப்பவர்களைச் சிந்திக்க, தர்க்க ரீதியாகச்சிந்திக்கப் பெரிதும் தூண்டும் படியாக நாவலின் சம்பவங்களை நடத்திச் செல்லும் தொடர்ச்சி (Plot) இருந்து விடுவது இதன் காரணம். அதே சமயம் எல்லோராலும் இந்நாவலைப் படிக்கவும் முடியாது. ஏற்கனவே ஓரளவு பிரபஞ்சத் தேடல் மிக்க அல்லது தீவிர வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே இந்நாவலின் வாசகர்களாகவும் வரமுடியும்.

மானுட விடுதலைப்போராளியான தோழர் தமிழரசன் பற்றிய தோழர் பாலனின் எண்ணங்களே 'ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' . - வ்.ந.கிரிதரன் -

- * தோழர் பாலன் எழுதிய 'ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' என்னும் மின்னூல் பற்றிய எண்ணத்துளிகள் சில.

தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியை உருவாக்கி, அக்கட்சியின் படைப்பிரிவாகத் தமிழ்நாடு விடுதலைப்படையினை நிறுவி , தமிழ்நாட்டில் மாவோயிச, லெனிசிச அடிப்படையிலான பொதுவுடமை அமைப்பொன்று அமைக்கப்பட வேண்டுமென்பது தோழர் தமிழரசனின் எண்ணம், செயற்பாடு எல்லாம். 1987இல் தோழர் தமிழரசன் பொன்பரப்பிலிருந்த வங்கியொன்றினை இயக்கத்தேவைகளுக்காகக் கொள்ளையிட முயன்றபோது பொது மக்களால் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவர் அவ்விதம் கொல்லப்பட்டது இந்திய மத்திய அரசின் திட்டமிட்ட சதியால் என்று உறுதியாக எடுத்துரைக்கின்றது தோழர் பாலனின் தோழர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' என்னும் இந்த நூல்.

'தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை' என்னும் இயக்கம் புலிகள் இயக்கத்தில் ஆரம்பத்தில் ஏற்பட்ட பிளவின்போது உருவான புதியபாதைப்பிரிவில் இயங்கிப்பின்னர் அதிலிருந்து பிரிந்து தோழர் பாலன், தோழர் நெப்போலியன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட மாவோயிச, லெனிசிசத்தைத் தம் கோட்பாடாகக் கொண்ட, மக்களின் சமூக அரசிய பிரச்சினைகளுக்கு ஒருபோதுமே முதலாளித்துவ பாராளுமன்ற அரசியல் சாதகமாக இருக்கப்போவதில்லை என்பதைத் திடமாக நம்பும் புரட்சிகர அமைப்பாகும். அந்த அமைப்பினைச்சேர்ந்த தோழர் பாலனின் பார்வையில் தோழர் தமிழரசனை வைத்து எடை போடுவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். தோழர் தமிழரசன் பயங்கரவாதியா அல்லது புரட்சிவாதியா என்பதை தோழர் தமிழரசனின் வாழ்க்கையினூடு, அவரது சமூக, அரசியற் செயற்பாடுகளினூடு, அவர் நம்பிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் தத்துவங்களினூடு , உணர்ச்சிவசப்படாமல், நிதானமாகத் தர்க்கரீதியாக ஆராய்ந்து தோழர் தமிழரசன் பயங்கரவாதி அல்லர். பொதுவுடமையினை நிறுவுவதாகச் செயற்பட்ட புரட்சிவாதி என்று நிறுவுவதுதான் நூலின் பிரதான நோக்கம். அந்த நோக்கத்தில் இந்நூல் வெற்றியடைந்துள்ளதா என்பதைச் சிறிது நோக்குவோம்.

கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' பற்றிய குறிப்புகள் சில! - வ.ந.கிரிதரன் -


2012 ஆம் ஆண்டு இலங்கை சென்ற நண்பர் ஒருவரிடம் என்னிடம் கொடுத்து விடும்படி திரு.கே.எஸ்.சிவகுமாரனால் கொடுத்து விடப்பட்டிருந்த 'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' நூல் அண்மையில்தான் என் கைகளை வந்தடைந்தது. :-) மறக்காமல் நினைவில் வைத்திருந்து நூலை என்னிடம் சேர்ப்பித்த  நண்பருக்கு நன்றி. :-) இது போல் இன்னுமொருவரிடமும் திரு.கே.எஸ்.சிவகுமாரன் நூல்கள் சிலவற்றைக் கொடுத்திருந்த விபரத்தை நண்பர் சில வருடங்களுக்கு முன்னர் அறியத்தந்திருந்தார். ஆனால் நூல்கள் இன்னும் என் கைகளுக்கு வந்து சேரவில்லை. :-)
இன்னுமொருவரிடம் கொடுத்திருந்த நூல் பொதி பெற்றவர் இன்னுமொருவரிடம்  கொடுத்து சிறிது காலம் தாழ்த்தியென்றாலும் வந்து சேர்ந்து விட்டது.

'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' நூல் கைக்கடக்கமானது. கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பதற்கொப்ப மிகுந்த பயன் மிக்கது. குறிப்பாக ஆவணச்சிறப்பு மிக்கது. இந்நூலில் கே.எஸ்.எஸ் அவர்கள் எழுத்தாளர்களைபற்றி, வெளிவந்த நூல்கள் பற்றி, தன்னைப் பாதித்த அண்மைக்கால நாடகங்கள், சிங்களத்திரைப்படம் பற்றி, என்று பல விடயங்களைப்பற்றி , எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

அமரர் சோமகாந்தன் தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய 'காந்தன் கண்ணோட்டம்' என்னும் பத்தி எழுத்துகள் பற்றியொரு கட்டுரை தொகுப்பிலுள்ளது. இச்சிறு கட்டுரை சோமகாந்தனின் பத்தி எழுத்துகளை விபரிப்பதுடன், பத்தி எழுத்துகள் பற்றிய கே.எஸ்.எஸ் அவர்களின் கருத்துகளையும் உள்ளடக்கியிருப்பது இதன் சிறப்பு.

கலாப்ரியாவின் 'உருள் பெருந்தேர்' ஓடிய என் மனப்பாதையில் அது பதித்த தடங்கள்.... வ.ந.கிரிதரன் -


  எழுத்தாளர்களின் பால்ய காலத்து அனுபவங்களை, வாசிப்பு அனுபவங்களை, மொத்தத்தில் அவர்கள்தம் வாழ்க்கை அனுபவங்களை வாசிப்பதில் எனக்கு எப்பொழுதுமே ஆர்வமுண்டு. முக்கிய காரணம் எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்கள் வெறும் அபுனவுகளாக  மட்டும் இருந்து விடாமல் இலக்கியச்சிறப்பு மிக்கதாக, கலைத்துவம் மிக்கதாகவும் இருக்கும். ஒளிவு, மறைவு இல்லாமல் அவர்கள் எழுத்தில் வெளிப்படும் நேர்மை நெஞ்சினைத்தொடும்.

எழுத்தாளர்களின் அபுனைவுகளில் மட்டுமல்ல அவர்கள்தம் புனைவுகள் கூட சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாக அப்புனைவுகள் இருந்து விடுவதுதான். புகழ் பெற்ற உலகப்பெரும் எழுத்தாளர்களின் சிறப்பான படைப்புகள் அவர்கள் சிந்தனைகளின், வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாகவே அமைந்திருப்பதை அவர்களது படைப்புகளை வாசிக்கும்போது அறிய முடிகின்றது.

மேலும் அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் தெரிவிக்கும் புதுத்தகவல்கள் ஒரு காலகட்ட வரலாற்றுச்சின்னங்களாக விளங்கும். காலமாற்றத்தில் காணாமல் போனவற்றையெல்லாம் அவர்கள்தம் எழுத்துகளில் வாசிக்கும்போது வாசிப்பின்பத்துடன் எம்மையும் எம் கடந்த காலத்துக்கே அழைத்துச்சென்று விடுகின்றன.

அண்மையில் என் நெஞ்சினைத்தொட்டதொரு எழுத்தாளரின் வாழ்க்கை அனுபவங்களினை வெளிப்படுத்தும் புத்தகமொன்றாக எழுத்தாளர் கலாப்ரியாவின் வாழ்வு அனுபவங்களின் தொகுப்பான '  ' என்னும் நூலினைக் குறிப்பிடலாம். இன்றுதான் டொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் அதனை இரவல் பெற்றேன். வாசித்துக் கொண்டிருக்கின்றேன். இதுவரை வாசித்த நூலில் வரும் அவர் வாழ்வில் வந்து போன மனிதர்கள் பற்றிய அனுபவங்கள் நெஞ்சினைத்தொட்டன என்று மட்டும் கூறிவிடமுடியாது. வாசித்த பின்னரும் நெஞ்சினை வாட்டும் வகையில் கலாப்ரியாவின் அனுபவங்கள் நெஞ்சினை உலுக்கு விட்டன என்றே கூற வேண்டும். உதாரணத்துக்கு அவர் வாழ்வில் வந்து போன குடும்பமொன்று பற்றிய விபரிப்பினைக் கூறலாம்.

புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!

  காலத்துக்குக் காலம் புதுப் புதுத்  தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...