Sunday, May 5, 2019

ஶ்ரீலங்கா சஞ்சிகையின் கலை, இலக்கியப்பங்களிப்பும், அ.ந.கந்தசாமியின் படைப்புகளும்! - வ.ந.கிரிதரன் -


'ஸ்ரீலங்கா' சஞ்சிகை இலங்கைத் தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தமிழ்ச் சஞ்சிகை. ஆகஸ்ட் 1950 - டிசம்பர் 1963 காலகட்ட இதழ்கள் பல (தொடர்ச்சியாக அல்ல) நூலகம் இணையத்தளத்திலுள்ளன. இவற்றைப் பார்த்தபோதுதான் ஈழத்தமிழ்இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பினைச் செய்த சஞ்சிகைகளிலொன்றாக இச்சஞ்சிகையையும் காண முடிந்தது.

அறிஞர் அ.ந.கந்தசாமி, திரு.குல சபாநாதன் போன்றவர்கள் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணி புரிந்த காலகட்டத்தில் , அவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த சஞ்சிகை இச்சஞ்சிகையென்று அறிந்திருக்கின்றேன்.ஆனால் சஞ்சிகையின் முன் அட்டையில் அரசாங்க சமாச்சாரப் பகுதியால் வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசிப்பக்கத்தின் அடியில் தகவற் பகுதியினருக்காக இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பெற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றிய விபரமெதனையும் காணவில்லை. ஆனால் இச்சஞ்சிகையின் உருவாக்கத்தில் அறிஞர் அ.ந.கந்தசாமி, திரு.குல சபாநாதன் ஆகியோரின் பங்களிப்பினை சஞ்சிகையில் வெளியான படைப்புகள் வாயிலாக அறிய முடிகின்றது. இருவருமே இச்சஞ்சிகை வெளிவந்த காலகட்டத்தில் இலங்கைத் தகவற் திணைக்களத்தில் பணி புரிந்து கொண்டிருந்ததாலும், இருவருமே நாடறிந்த எழுத்தாளர்கள் என்பதாலும் 'ஶ்ரீலங்கா' சஞ்சிகையின் ஆசிரிய பீடத்தினை அலங்கரித்தவர்களாக அறிந்த தகவல் உண்மையென்றே தோன்றுகின்றது.

 இலங்கைத் தகவற் திணைக்கள வெளியீடு என்பதால் அரசு பற்றிய , அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய சஞ்சிகையாக இச்சஞ்சிகை விளங்கினாலும், ஈழத்தமிழ்க் கலை, இலக்கியத்துக்குக் காத்திரமான படைப்புகளையும் கூடவே வெளியிட்டுள்ளதால் , ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் முக்கிய சஞ்சிகைகளிலொன்றாக இச்சஞ்சிகை விளங்குகின்றது எனலாம்.

மனவெளிக்கலையாற்றுக் குழுவினரின் இப்சனின் ஒரு பொம்மை வீடு ! - வ.ந.கிரிதரன் -

நேற்று (30.6.2018) நண்பர் தேவகாந்தனுடன் மனவெளி அமைப்பின் பத்தொன்பதாவது அரங்காடல் நாடக நிகழ்வுக்கு இப்சனின் 'ஒரு பொம்மை வீடு ' பார்க்கச்சென்றிருந்தேன். நண்பகற் காட்சி, மாலைக் காட்சி என்று இரு காட்சிகள் அரங்கு நிறைந்த மக்கள் ஆதரவுடன் நடைபெற்றன. மனவெளி கலையாற்றுக் குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.

ஏற்கனவே பலமுறை படித்திருந்த நாடகமாதலால் நாடகம் பற்றிய புரிதலுடனேயே சென்றிருந்தேன். நாடகம் எவ்விதம் மேடையேற்றப்படுகின்றது, எவ்விதம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது, எவ்விதம் இயக்கப்பட்டிருக்கின்றது, எவ்விதம் மேடை அலங்காரங்கள், ஒலி, ஒளி அமைப்புகள் இருக்கப்போகின்றன , எவ்விதம் நடிகர்களின் நடிப்பு இருக்கப்போகின்றது எனப் பல்வகை எதிர்பார்ப்புகளுடன் சென்றிருந்தேன். எதிர்பார்ப்புகள் எவையும் பொய்த்துப்போய் விடவில்லை. நாடகத்தைச் சிறப்பாக மேடையேற்றியிருந்தார்கள். அதற்காக மனவெளி அமைப்புக்கும், மொழிபெயர்த்து இயக்கிய பி.விக்னேஸ்வரனுக்கும் மற்றும் நாடகத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறையே அரசி விக்னேஸ்வரன், ஜெயப்பிரகாஷ் ஜெகவன் , எஸ்.ரி. செந்தில்நாதன் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஏனைய பாத்திரங்களான டாக்டர் ராங், திருமதி லிண்டே, அன்னா மரியா மற்றும் ஹெலெனா ஆகிய பாத்திரங்களில் குரும்பச்சிட்டி ஆர்.ராசரத்தினம், பவானி சத்தியசீலன், மாலினி பரராஜசிங்கம், கனித்தா உதயகுமார் ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர்களில் கனித்தா உதயகுமார் தவிர ஏனையோர் ஏற்கனவே நாடகத்துறையில் அனுபவம் பெற்ற தேர்ந்த நடிகர்கள். பல்கலைக்கழக மாணவியான கனித்தா உதயகுமார் அண்மையிலேயே தன்னை இத்துறையில் ஈடுபடுத்திக்கொண்டவர். நடிப்பில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்.

'ஒரு பொம்மை வீடு' இன்றைய பெண்ணியச் சிந்தனைகளுக்கெல்லாம் முன்னோடியான நாடகம் நாடகத்தின் முக்கிய ஆளுமை நோரா. வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட சிறப்பான பாத்திரம். குழந்தைகளுடன் தன் அன்புக் கணவனுடன் வாழுமொரு பெண் , அவனது நலன்களுக்காகவே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அவனுக்கு உண்மை கூறாது மறைத்த பெண், அவனுடன் வாழ்ந்த காலகட்டத்தில் , அதற்கு முற்பட்ட காலத்தில் தன் தந்தையுடன் வாழ்ந்த காலகட்டங்களிலெல்லாம் தான் ஒரு பொம்மையாகவே தான் வாழ்ந்த சமுதாயத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததை உணர்ந்து , தன் சுயமரியாதையுடன், சுய சிந்தனையுடன், சுதந்திரமாகத் தன்மீது பிணைக்கப்பட்டிருந்த தளைகளையெல்லாம் உடைத்து (திருமண பந்தமுட்பட) வாழப்புறப்படுவதுதான் நாடகத்தின் மையக்கரு.

நாடகத்தின் இடைவேளையில் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தபோது எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரன் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். அது என் கவனத்தை ஈர்த்தது. சீனாவில் ஒரு காலகட்டத்தில் பெண்ணுரிமைக்காக நோராயிசம் என்றொரு சிந்தனைப்போக்கே உருவானதாம் மேற்படி இப்சனின் நோரா பாத்திரத்தால் என்று அவர் குறிப்பிட்டதையே குறிப்பிட்டேன். இப்பாத்திரமே நாடகம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ள பாத்திரம். இதனைச் செய்வதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அதனை அரசி விக்னேஸ்வரன் மிகவும் சிறப்பாக, அநாயசமாகச் செய்திருந்தார். சுமார் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற நாடகத்தில் ஒரு கட்டத்தில் கூடத் தளர்ச்சியேதுமற்ற நிலையில், நாடக வசனங்களை நினைவில் வைத்துச் சிறப்பாகத் தன் நடிப்புத்திறமையினால் நாடகத்தைக் கண்டு களிக்க வந்திருந்த அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருந்தார் அவர். அதற்காக அவருக்குப் பாராட்டுகள். இந்நாடகத்தின் வெற்றிக்கு அவரது நடிப்பு முக்கியமானதொரு காரணம். நண்பர் எழுத்தாளர் தேவகாந்தனும் அரசி விக்னேஸ்வரனின் நடிப்பை விதந்து தன் கருத்துகளை நாடகத்தின் முடிவிலான அவருடனான உரையாடலின்போது குறிப்பிட்டார்.

ஏனைய பாத்திரங்களில் அவரது கணவராக நடித்திருந்த ஜெயப்பிரகாஷ் ஜெகவன் மற்றும் அவரது கணவரின் உடல்நலப்பயணச் செலவுகளுக்காக, டோராவின் கள்ளக்கையெழுத்துடன் பணம் கொடுத்து உதவியவராக நடித்திருக்கும் எஸ்.ரி. செந்தில்நாதன் ஆகியோருக்கு நாடகத்தில் தம் நடிப்பாற்றலை வெளிப்படுத்த நிறைய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவற்றை அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்தியிருந்தார்கள்.

இவர்களுடன் மேடையின் பின்னணியிலிருந்து உழைத்த கலைஞர்கள் அனைவரும் (இசை, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, ஒளி, ஒலி , மேடையமைப்பு போன்றவற்றுக்காக உழைத்தவர்கள்) பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பல வருடங்களுக்குப் பின்னர் நல்லதொரு நாடக நிகழ்வைக் கண்டு களித்த திருப்தியான உணர்வே நாடகத்தின் முடிவிலேற்பட்டது. அதுவே நாடகத்தின் வெற்றியும் கூட.

ngiri2704@rogers.com

நன்றி: பதிவுகள்.காம்

Saturday, May 4, 2019

எனது , வ.ந.கிரிதரனின், மூன்று கவிதைகள் பற்றி...

எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். அத்தொகுப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. அது பற்றி அறியத் தந்த மாலன் " அன்புள்ள கிரிதரன், தேர் ஒருவழியாக புறப்பட்டுவிட்டது. உங்களது கவிதை இடம்பெற்றுள்ள அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு-புவி எங்கும் தமிழ்க் கவிதை- சாகித்திய அகாதெமியின் வெளியீடாக வந்துள்ளது. 22 நாடுகளில் வசிக்கும்  தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது  தமிழ்க் கவிதைகளின் விரிவிற்கும் ஆழத்திற்கும் சான்றளிக்கும் ஓர் அரிய நூல்" என்றும் தனது மின்னஞ்சலில் குறிப்ப்ட்டுள்ளார். முதலில் இத்தொகுப்பு நூலிலுள்ள கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளதற்காக அவருக்கு நன்றி. அத்தொகுப்பினை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினை மாலனின் கடிதம் ஏற்படுத்துகின்றது.

மேற்படி தொகுப்பில் எனது கவிதையொன்றும் இடம் பெற்றுள்ளது. "நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'" என்பது அக்கவிதையின் தலைப்பு, அக்கவிதையினையே கீழே காண்கின்றீர்கள்:

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்த சமகால இருமொழிக்கவிதைத்தொகுப்பான 'Fleeting Infinity (VOL 1) ((கணநேர எல்லையின்மை) அநாமிகா அல்ஃபபெட்ஸ் (Anaaamikaa alphabets) பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. அத்தொகுப்பிலுள்ள எனது கவிதையான "கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி."

சிறப்பான தொகுதியொன்றினைத்தந்ததற்காகவும், இதற்கான அவரது கடுமையான உழைப்பிற்காகவும் லதா ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கூடவே இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

தமிழில் வெளியான கவிதைத்தொகுதிகளில் முக்கியமானதோர் கவிதைத்தொகுதியாக இக்கவிதைத்தொகுதி விளங்கும் என்பதை இத்தொகுதியின் கவிதைகள் புலப்படுத்துகின்றன.

இத்தொகுப்பிலுள்ள எனது கவிதையினையே இங்கு காண்கின்றீர்கள்.

இலங்கைத் தமிழ் இலக்கியமும் , 'இன்ஸான்' பத்திரிகையும்.


எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் 'இன்ஸான்' பத்திரிகை பற்றிப்பின்வருமாறு பதிவு செய்திருந்தார்:

"1965-1970 காலப் பகுதியில் ' இன்ஸான்'( மனிதன்) என்ற வாராந்தரி பத்திரிகை ஏ.ஏ.லத்தீஃபை ஆசிரியராக கொண்டு வெளியாகியது. முஸ்லிம் வாழ்வியலை,சமூகப் பார்வையுடன் இலக்கியமாக்கும் வாய்ப்பை வழங்கி வழிகாட்டியது. இதனூடாக வெளிப்பட்ட சிறுகதையாளர்களில குறிப்பிடத்தக்க ஒருவர் எம்.பி.எம. நிஸ்வான். ஐம்பது ஆண்டுகள் கழிந்தும் ஒரு பத்தோ இருபதோ இன்ஸான் கதைகளை தொகுத்து வெளியிடும் முயற்சி கைகூடவில்லை.இன்ஸானோடு சம்பந்தப்பட்ட ஒருசிலரே இன்று எம்மத்தியில் உள்ளனர்.அவர்கள் சந்திக்கும்போது பேசிக் கலைவதைத்தவிர வேறொன்றும் ஆகவில்லை. முஸ்லிம்களின் இலக்கியம் என்பது அனாதை இலக்கியமே என்பதற்கு இதைத்தவிர வேறென்ன அத்தாட்சி வேண்டும்? பாணந்துறை எம்.பி.எம்.நிஸ்வானின் இரு நூல்களின் வெளியீடு கடந்த 07.04.2018ல் உம்முல் மலீஹா மண்டபத்தில் நடைபெற்றபோது கருத்துரை வழங்குகையில் மேற்படி விடயங்களை எடுத்துக் கூறினேன்."

எழுத்தாளர் அந்தனி ஜீவா 'தினகரன்' (இலங்கை) பத்திரிகையில் எழுத்தாளர்ர் அ.ந.கந்தசாமி பற்றி எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடரில் பின்வருமாறு கூறுவார்:

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்து, மொழிபெயர்த்து அதனைத் தனது 'அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்' பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ள இருமொழிக் கவிதைத்தொகுப்பான 'Fleeting Infinity ( கணநேர எல்லையின்மை )

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்து, மொழிபெயர்த்து அதனைத் தனது 'அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்' பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ள இருமொழிக் கவிதைத்தொகுப்பான 'Fleeting Infinity ( கணநேர எல்லையின்மை ) நேற்று என்னை வந்தடைந்தது. உடனடியாகவே இரு பிரதிகளை அத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிஞர் ராஜாஜி ராஜகோபாலனிடம் சேர்ப்பித்து விட்டேன்.

தொகுப்பு சிறப்பாக வந்துள்ளதற்காக லதா ராமகிருஷ்ணன் பெருமைப்படலாம். தனியொருவராக அவர் மிகவும் அநாயாசமாக இதனைச் சாதித்திருக்கின்றார். அவரது கடும் உழைப்புக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

இத்தொகுப்பு சிறப்பாக வந்திருப்பதற்கு முக்கிய காரணங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம்: பொதுவாக இலக்கிய ஆளுமைகள் தம் விருப்பு, வெறுப்புகளுக்கேற்பச் சிலரின் கவிதைகளையே தேர்ந்தெடுத்து அக்கவிஞர்களின் கவிதைகளையே மொழிபெயர்த்துத் தொகுத்து வெளியிடுவார்கள். ஆனால் அவ்விதமில்லாது கவிதைகளை லதா ராமகிருஷ்ணன் தன் வாசிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துள்ளார்.

நீண்ட தேடுதல் முடிவுக்கு வந்தது: அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் முப்பது கிடைத்தது!


அறிஞர் அ.ந.கந்தசாமியின் பத்திரிகையில் வெளியான ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. தொடராகத் தினகரனில் வெளியானபோது வாசகர்களின் அமோக ஆதரவினைப்பெற்ற நாவலிது. அ.ந.க.வின் துள்ளு தமிழ் நடையில் நாவலை வாசிப்பதே பேரின்பம்.  அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் வானொலியில் அவரது 'தணியாத தாக'த்தைத் தொடர்ந்து, அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலையும் வானொலி நாடகமாக ஒலிபரப்பினார். இந்நாவல் தவிர அ.ந.க அவர்கள் தன் இறுதிக் காலத்தில் இன்னுமொரு நாவலையும் , மலையக மக்களை மையமாக வைத்துக் 'களனி வெள்ளம்' என்னும் பெயரில் எழுதியதாகவும், அந்நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 83கலவரத்தில் செ.க.வின் கொழும்பு இருப்பிடம் எரியுண்டபோது அந்நாவலும் எரியுண்டு போனதாகவும் அறிகின்றேன்.

இவ்விதமானதொரு சூழலில் 'மனக்கண்' நாவலைத் தேடிக்கொண்டிருந்தபோது செ.கணேசலிங்கன் அவர்கள் கமலினி செல்வராசனிடம் இருக்கும் என்றும் , அவரது முகவரியைத்தந்து அவருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியிருந்தார். அவருடன் தொடர்பு கொண்டபோது அவர் அதைத்தருவதற்கு இலட்சங்களில் பணம் கேட்டார். எனவே அம்முயற்சியைக் கை விட வேண்டியதாயிற்று. பின்னர் எழுத்தாளர்கள் பலருக்கு எழுதிப்பார்த்தேன். தினகரன் ஆசிரியருக்கும் எழுதிப்பார்த்தேன். எதுவுமே கிடைக்கவில்லை. பின்னர் இலங்கைச்சுவடிகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அப்போது  அதன் இயக்குநராகவிருந்த விமலரட்னவுக்குக் கடிதமொன்று எழுதினேன். அதில் மனக்கண் நாவல் வெளியான காலகட்டத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கான பதிலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று எழுதினேன். என்ன ஆச்சரியம்.. அவரிடமிருந்து பதிற் கடிதம் வந்திருந்தது. அதில் மனக்கண் நாவல் வெளியான தினகரன் பிரதிகள் இருப்பதாகவும், அதனை அனுப்புவதாயின் போட்டோப்பிரதிகள் மற்றும் தேடுதலுக்கான கட்டணத்தை அனுப்பும்படி கூறியிருந்தார். கட்டணம் ஐம்பது கனேடிய டொலர்களுக்கும் குறைவானது. அனுப்பினேன். அவர் நாவலை 'லீகல் சைஸ்' அளவில் அனுப்பியிருந்தார். ஆனால் சுவடிகள் திணைக்களத்திடம் அத்தியாயம் 30 இருக்கவில்லை.

Friday, May 3, 2019

யாழ் நகரத்துத் திரையரங்குகள் பற்றியதொரு நனவிடை தோய்தல்! - வ.ந.கிரிதரன் -

அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன். அக்காலகட்டத்தில் யாழ் நகரில் பல திரையரங்குகள் பல இருந்தாலும் (மனோஹரா, ராணி, ராஜா, றீகல்,, ஹரன், சாந்தி, ஶ்ரீதர், லிடோ (பழைய வின்சர்), வின்சர் , வெலிங்டன் & றியோ ), இவற்றில் என்னை அதிகம் பாதித்தவை பற்றிய பதிவுகளிவை. இவற்றையும், இவற்றுக்கான எதிர்வினைகளையும் பதிவு செய்வதன் அவசியம் கருதி அவை அனைத்தையும் தொகுத்து இங்கு தருகின்றேன்.

யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று - ராணி

முகநூலில் Shan Naranderan ராணி (யாழ்ப்பாணம்) திரையரங்கின் புகைப்படமொன்றினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அதனை இங்கு மீண்டும் நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இன்று ராணி திரையரங்கு இருந்த இடத்தில் 'சீமாட்டி' வர்த்தக நிலையமுள்ளது. ஆனால் அன்று எம் பதின்ம வயதுகளில் அவ்வாழ்வுக்குரிய பொழுதுபோக்குகளில் முக்கிய இடத்தை வகித்த திரையரங்குகளிலொன்றாக விளங்கிய திரையரங்கு ராணி. முதன் முதலில் ராணி திரையரங்கைப் பார்த்த தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் இ.போ.சபையின் பஸ்ஸில் வந்து , யாழ் பஸ் நிலையத்தில் இறங்கியபொழுது கண் முன்னால் விரிந்தது ராணி திரையரங்கின் முன் அமைக்கப்பட்டிருந்த அடிமைப்பெண் எம்ஜிஆரின் பிரமாண்டமான , ஓவியர் மணியத்தின் 'கட் அவுட்' இடுப்பில் கைகளை வைத்து, மணிமுடியுனிருந்த அந்த எம்ஜிஆரின் கட்அவுட் இன்னும் கண் முன்னால் விரிகின்றது. இன்னுமொரு முறை அவ்விதம் வந்து யாழ் பஸ் நிலையத்தில் இறங்கியபொழுது 'மாட்டுக்கார வேலன்' திரைப்படத்திலிடம் பெறும் 'ஒரு பக்கம் பார்க்குறா' பாடலுக்கான காட்சியை வெளிப்படுத்தும் இரு எம்ஜிஆர்களின் உயர்ந்த உருவங்களை உள்ளடக்கிய இரு 'கட் அவுட்'டுகள். இவ்விதமாக ராணி திரையரங்குடன் ஆரம்பமாகியதென் உறவு.

இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் மற்றும் நடாத்தப்பட்ட ஆய்வுகள்..... இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் மற்றும் நடாத்தப்பட்ட ஆய்வுகள்..... - வ.ந.கிரிதரன் --

இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் , ஒரு பதிவுக்காக, இங்கு தரப்படுகின்றன. பதிவு செய்தல் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை. பதிவு செய்தலென்பது விமர்சனமல்ல. இணையத்தில் வலைப்பதிவுகளினூடு, மின்சஞ்சிகைகளினூடு எனப் பல்வேறு வழிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தையும் பதிவு செய்கின்றார்கள். இணையம் தரும் வசதியினைப் பாவித்துப் படைப்புகள் பற்றிய விபரங்களைப் பலருடனும் பகிரிந்துகொள்வதன் மூலம் ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள முடிகிறது.  அது பயனுள்ளது. ஆக்கபூர்வமானது. படைப்புகள் வாசகர்களைச் சென்றடைவதற்கு இவ்விதமான பதிவுகள் முக்கியமானவை. இன்று காலம் மாறி விட்டது. இணையம் படைப்புகளை உடனுக்குடன் உலகின் சகல மூலைகளுக்கும் கொண்டு செல்கின்றது. மிகுந்த வல்லமை மிக்க ஊடகமான இணையத்தைத் திறனாய்வாளர்கள் மிக அதிக அளவில் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நினைக்கின்றேன்.

1. தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட, நடத்துகின்ற இணைய சஞ்சிகைகளான திண்ணை, ஆறாந்திணை, அம்பலம், இசங்கமம், கூடல் போன்றவற்றில் எனது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.
2. எழுத்தாளர் பென்னேஸ்வரனால் வெளியிடப்படும் 'வடக்கு வாசல்' சஞ்சிகை சார்பில் வெளியான 'இலக்கிய மலர் 2008' இல் வெளியான கட்டுரை: இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்!  - வ.ந.கிரிதரன்
3. ஊடகவியலாளர் செந்தில்நாதனின் ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலருக்காக எழுதிய கட்டுரை: 'கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!'
4. தமிழகத்திலிருந்து வெளியாகும் 'துளிர்' இதழுக்காகப் பல வருடங்களுக்கு முன்னர் அறிவியல் கட்டுரை கேட்டிருந்தார்கள். அனுப்பியிருந்தேன். இதழில் வெளிவந்ததாகக் கூறியிருந்தார்கள். ஆனால், அந்த இதழ் என் கைகளுக்கு வந்து சேரவில்லை. எனவே என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.
5. கணையாழியில் வெளியான எனது படைப்புகள்:
அ. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)
ஆ. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).
இ. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
ஈ. 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
உ. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்ஆர்தர் சி.கிளார்க் (கணையாழி மே 2012)

இன்று புதிதாய்ப் பிறந்தேன்.















இன்று புதிதாய்ப் பிறந்தேன்.
இருப்பினை
நம்பிக்கையுடனும், கனவுகளுடனும்,
வியப்புடனும், வினாக்களுடனும்
எதிர்கொள்ளும் உணர்வுகள் பொங்கிட
இன்று புதிதாய்ப் பிறந்தேன். இனி
என்றும் புதியாய்ப் பிறப்பேன்.
'இன்று புதிதாய்ப் பிறந்தேன் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற் றிருந்து' வாழ்வேன்”
இனி என்றும் புதியாய்ப் பிறப்பேன்.

எழுத்தாளர் கு.ப.ரா.வின் வசன கவிதை பற்றிய கூற்றொன்றும் , அதற்கான எதிர்வினையொன்றும்...

எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூற் பதிவாக எழுத்தாளர் கு.ப.ரா.வின் கீழ்வரும் கூற்றொன்றினைப் பதிவு செய்திருந்தார். :

" வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி அலங்காரம் உண்டு. அதற்கும் தளையுண்டு. மோனையுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கும் ரிதம் உண்டு. செய்யுள் எழுதுவதைக்காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம். செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைகளும் ஒரு இசை இன்பத்தை ஊட்டிவிடும். ஆனால் வசன கவிதையில் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில் தட்டினால்தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும். சொல்லில் கவிதையின் அம்சம் இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது - வெறும் வசனம்தான் ”  ( கு.ப. ராஜகோபாலன் - 1939 இல் )

மேற்படி கூற்றுக்கான என் எதிர்வினை:

இது கு.ப.ராஜகோபாலன் அவர்கள் மரபுக்கவிதையின் ஆதிக்கமிருந்த காலகட்டத்தில் , மரபுக்கவிதையைச் சிறிது எளிமைப்படுத்தி பாரதியார் மரபுக்கவிதைகளையும், வசன கவிதைகளையும் எழுதியதன் பின்னர் மணிக்கொடி எழுத்தாளர்கள் மரபை மீறிக்கவிதைகள் படைக்க முற்பட்ட காலகட்டத்தில் கூறிய அல்லது எழுதிய கூற்று. இதனை இன்று ஏற்க வேண்டியதில்லை. கு.ப.ரா போன்றவர்களால் மரபை முற்றாக மீற முடியாமலிருந்ததால் தான் இவ்விதம் கூற முடிவதாகவே கருதுகின்றேன். கவிதை என்றால் மரபுக்கவிதைதான். அதனால் வசன கவிதைகளிலும் மரபுக்கவிதையின் அம்சங்கள் இருக்க வேண்டுமென்று  அவர் கருதினாரென்று கருதுகின்றேன். மரபுக்கவிதைன் அம்சங்களைப்போல்  வசனகவிதைகளும் மோனை, தளை போன்ற கட்டுப்பாடுகளை உள்ளடக்கியவை என்னும் கருத்தில்தான் கு.ப.ரா இங்கு கூறியுள்ளார். ஆனால் கட்டுப்பாடுகள் அல்லது விதிகளுடன் கூடிய மரபுக்கவிதைகளுக்குரிய அம்சங்களை முன்வைத்து , மரபை மீறி உருவான கவிதையொன்றினை ஆராய்வது சரியானதல்ல என்பதென் கருத்து. இங்கு அவர் வசனகவிதைக்குரிய தளை, மோனை, அணி அலங்காரம் எவ்விதமிருக்க வேண்டும் என்று தெளிவாக விபரிக்காவிட்டாலும், மரபுக்கவிதைக்குரிய அம்சங்களான அவற்றின் அடிப்படையில் அவர் வசனகவிதையை ஆராய்வது சரியல்ல என்பதே என் கருத்து. ஆனால் வசன கவிதையிலோ , புதுக்கவிதையிலோ அல்லது இன்றுள்ள கவிதையிலோ மரபுக்கவிதைக்குரிய அம்சங்கள் இருக்கலாம்; இல்லாமலிருக்கலாம். இருப்பதால் மட்டும் அவை கவிதைகளாவதில்லை. இல்லாமலிருப்பதால் மட்டும் அவை கவிதைகளில்லை என்பதுமில்லை.

உங்களை நாம் மறக்க மாட்டோம்

ஊடகங்கள் உங்களை மறந்து விட்டன.
ஊடகங்கள்  மட்டுமா
உங்களைக் காக்க வேண்டிய அரசும்
உங்களைக் காக்க வில்லை.
ஊடகங்களுக்கோ உங்களை அழித்தவர்கள்
உங்களைக் காயப்படுத்தியவர்கள் பற்று
எழுதுவதற்கே நேரம் போதவில்லை.
உங்களைப்பற்றி எழுதுவதற்கு எங்கே நேரம்
உள்ளதவர்களுக்கு.
நடக்கப்போவதை அறியாமல்
நீங்கள் இருந்தீர்கள்.
நடக்கப்போவதை அறியாமல்
நீங்களிருந்ததைப்போல்
உங்கள் குழந்தைகளும் இருந்தார்கள்.
உங்கள் பிரார்த்தனைகளிலிர்ருந்த கனவுகளெத்தனையோ?
உங்கள் பிரார்த்தனைகள்
உங்கள் குடும்பத்தைப்பற்றி இருந்திருக்கக் கூடும்.
உங்கள் உறவுகளைப்பற்றி இருந்திருக்கக் கூடும்.
உங்கள் பிறந்த மண்ணைப்பற்றியதாக இருந்திருக்கக் கூடும்.
இருந்தும்
உங்களைப்பற்றி, உங்களை இழந்தவர்தம் வலி பற்றி
ஊடகங்களேன் எழுதவில்லை?
ஊடகங்களால் மறக்கடிக்கப்பட்ட
மறைக்கப்பட்ட வலிதனை
உள்ளதுள்ளபடி எடுத்துரைப்போம்.
உங்கள் கனவுகளை
உங்கள் குழந்தைகள் பற்றி, அவர்தம்
உள்ளத்துக் கனவுகளை, உணர்வுகளை நாம்
உலகிற்கெடுத்துரைப்போம். உங்களை நாம்
உள்ளவரை மறந்துவிட மாட்டோம்.
உதிர்ந்தவர்களே! உங்களை நாம்
உள்ளவரை மறந்துவிட மாட்டோம்.

இலங்கைத்தமிழ் இலக்கியமும், விமர்சனமும் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பும், மு.பொன்னம்பலத்தின் இருட்டடிப்பும்!



இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி எனக்கருதப்படும் இவர், புலமை காரணமாக அறிஞர் அ.ந.கந்தசாமி என்று அழைக்கப்பட்ட இவர் சிறுகதை, கவிதை,  நாடகம், விமர்சனம் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தனது குறுகிய கால வாழ்வினில் காத்திரமான பங்களிப்பினை நல்கியவர். அவ்வப்போது இலங்கைத்தமிழ்  இலக்கியம் பற்றி எழுதும் சிலர் அத்துறையில் போதிய புலமையற்றோ அல்லது திட்டமிட்டோ இவரது பங்களிப்பினை மறைத்துவிடுகின்றனர்.

அ.ந.க.வின் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் விமர்சனத்துக்கான (அல்லது திறனாய்வுக்கான) பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அ.ந..க.வின் புலமை காரணமாகவே பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் தனது 'ஒப்பியல் இலக்கியம்' நூலினை அ.ந.க.வுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வுத்துறைக்குப் பெரும்பங்களிப்பு செய்தவர் பேராசிரியர் கைலாசபதி. அவர் ஒருவருக்குத் தன் நூலினைச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார் என்றால் அதனைச் சாதாரணமாக எடுத்துவிட முடியாது. அச்சமர்ப்பணத்தில் அவர் இவ்விதம் கூறுவார்:

“  பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங்கொடுத்து வருபவரும், இன்றைய  ஈழத்து  எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவரும், பிறமொழி யிலக்கியங்களைக் கற்றுமகிழ்ந்து அவற்றைத் தழுவியும் மொழிபெயர்த்தும்  தமிழுக்கு அணி செய்தவரும் ,பலதுறை வல்லுனருமான காலஞ்சென்ற அ.ந. கந்தசாமி அவர்களது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்”

மு.தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலிலிருந்து....

மு.தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலில் ஓரிடத்தில் இவ்விதம் வருகின்றது:

"அ.ந.கந்தசாமி கூட சோலாவைப்பற்றித்தான் எழுதினார். சோலா இயற்கைவாதியே ஒழிய சோஸலிஸ்ட் யதார்த்தவாதியல்ல. அதோடு அப்படி ஒருவரைத்தான் தேட வேண்டுமென்றால் மார்க்ஸே பால்சாக்கைப்பிடித்திருக்கலாம். ஆனால் அவர் சோலாவைத்தான் பிடித்தார்."

இக்கூற்றினை சிறிது ஆராய்வோம். அ.ந.க சோலாவைப்பற்றி எழுதுவதிலென்ன தவறிருக்க முடியும். ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எமிலி சோலாவின் நாவலான 'நானா'வைத் தமிழுக்கு மொழிபெயர்த்து சுதந்திரன் பத்திரிகையில் வெளியிட்டவர் அ.ந.க. சோலாவின் பாதிப்பு அ.ந.க.வுக்கு நிறையவேயுண்டு. எமிலி சோலாவைப்பற்றி அவர் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அதில் சுதந்திரனில் 'நானா' தொடராக வெளியான சமயம் எழுதிய 'எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி நானா மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா' என்னும் கட்டுரையும் முக்கியமானது.

எமிலி ஸோலாவின் இலக்கியம் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார்:

"ஸோலா இலக்கியத்திலே மோகனமான கனவுகளைத் தோற்றுவிக்கும் போக்கில் நம்பிக்கை கொண்டவரல்ல. சாக்கடை உலகைச் சாக்கடை நாற்றத்தை நாம் உணரத்தக்கவகையில் இயற்கைத்தன்மையுடனே சமைப்பதில்தான் அவரது சிறந்த கலை வெற்றி பெறுகிறதென்று கூறலாம். 'இயற்கை வாதம்' (Naturalism) என்று அவரும் அவரது கோஷ்ட்டியினரும் தமது இலக்கியப் பாணிக்கு நாமகரணம் செய்து கொண்டனர்."

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்ள 'தேசிய இலக்கியமும், மரபுப்போராட்டமும்' என்னும் நூல் பற்றியுமான பதிவு!.


இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றைப்பொறுத்தவரையில் முக்கியமான காலகட்டங்களாக 'மறுமலர்ச்சி'க் காலகட்டத்தையும், 'இலங்கை எழுத்தாளர் முற்போக்குக் கழகக்' காலகட்டத்தையும் குறிப்பிடலாம். இலங்கை மண்ணுக்கேயுரிய மண்வாசனை மிக்க தனித்துவம் மிக்க எழுத்துகளைப்படைக்க வேண்டுமென்று 'மறுமலர்ச்சிக்' குழு வழிவந்த இளைஞர்கள் எண்ணினார்கள். ஆனால் அந்நோக்கமே 'தேசிய இலக்கியம்' என்னும் கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் வழிச் செயற்பட்ட எழுத்தாளர்கள் , திறனாய்வாளர்கள். தேசிய இலக்கியம் பற்றிய புரிதலுக்காக எழுத்தாளர் இளங்கீரனின் 'மரகதசம்' சஞ்சிகையில் 'தேசிய இலக்கியம்' பற்றி 'மரகதம் ' சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் க.கைலாசபதி, ஏ.ஜே.கனகரட்னா, அ.ந.கந்தசாமி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.

இதனைத்தொடர்ந்து தினகரன் பத்திரிகையில் மரபினைப்பேணிய பண்டிதர்களுக்கும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களுக்குமிடையில் தலையெடுத்த 'மரபு' பற்றிய விவாதமும் முக்கியமானது. இரு சாராரும் தினகரன் பத்திரிகையில் நடாத்திய விவாதம் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வு.

'மரகதம்' சஞ்சிகையில் வெளியான 'தேசிய இலக்கியம்' பற்றிய கட்டுரைகளையும், தினகரன் பத்திரிகையில் நிகழ்ந்த மரபு பற்றிய விவாதக் கட்டுரைகள் சிலவற்றையும், வேறு சில கட்டுரைகளையும் தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கின்றனர் 'சவுத் ஏசியன் புக்ஸ்' (சென்னை) பதிப்பகத்தினர். தொகுத்தவர் எழுத்தாளர் சுபைர் இளங்கீரன். மிகவும் முக்கியமான தொகுப்பு.

Friday, January 4, 2019

வ.ந.கிரிதரனின் பதினான்கு கவிதைகள்!

1. சுடரும் இரகசியங்கள்!.
இருண்டு கிடக்கிறது இரவு வான்.
சுடரும் பெண்கள்; விரியும் வெளி.
தனிமையின் மோனம். இலயிப்பினில்
இருப்பு. பெண்களே! பெண்களே! பகர்ந்திடுவீரா உம்
இரகசியத்தை? 'அஞ்சுதலற்ற கதிர்கள்.சூனியத்தைத்
துளைத்து வருமொளிக் கதிர்கள்.
அட, அண்டத்திலார்க்கும் அஞ்சுவமோ?
ஓராயிரம் கோடி ஆண்டுகள்
ஓடியே வந்தோம்; வருகின்றோம்;
வருவோம். காலப் பரிமாணங்களைக் காவியே
வந்தோம்; வருகின்றோம்; வருவோம்.
வெளியும் விரவிக் கிடக்கும்
சூனியமும் கண்டுதான் துவண்டோமோ?
அஞ்சுதலற்ற நெஞ்சினர் எம்முன்னே
மிஞ்சி நிற்பவர்தானெவருமுண்டோ?
தெரிந்ததா? விளக்கம் புரிந்ததா?
நொக்குங்கள்! நோக்குங்கள்!
நோக்கம்தான் புரிந்ததுவோ?'
புரிந்ததில் இனித்தது இரவுப்
பொழுது.

2. மின் பின்னியதொரு பின்னலா ?

நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம்
உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று.
தனியாக எப்பொழுதுமே இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.
உனக்கும் எனக்குமிடையில் எப்பொழுதுமே ஒரு தூரம்
இருக்கத் தானே செய்கிறது. அது எவ்வளவுதான் சிறியதாக
இருந்த போதிலும்.
எப்பொழுதும் ஒரு நேரம் இருக்கத் தானே செய்கிறது
கணத்தினொரு சிறுபகுதியாக என்றாலும்.
நீ இருப்பதாக நீ சொல்லுவதைக் கூட நான் அறிவதற்கும்
புரிவதற்கும் எப்பொழுதுமே இங்கு நேரமுண்டு. தூரமுமுண்டு
கண்ணே!
காண்பதெதுவென்றாலும் கண்ணே! அதனை அப்பொழுதே
காண்பதற்கு வழியென்றுண்டா ?
காலத்தைக் கடந்தாலன்றி ஞாலத்தில் அது
நம்மால முடியாதன்றோ ?
தூரமென்று ஒன்று உள்ளவரை நேரமொன்று இங்கு
இருந்து தானே தீரும் ? அது எவ்வளவுதான்
சிறியதாக இருந்த போதும்.
வெளிக்குள் காலத்திற்குள் கட்டுண்டதொரு இருப்பு
நம் இருப்பு கண்ணம்மா1
காலத்தினொரு கூறாய் உன்னை நான் காண்பதெல்லாம்
இங்கு உன்னை நான் அறிவதெல்லாம்
மின்னலே! மின் பின்னியதொரு பின்னலா ?
உன்னிருப்பும் இங்கு மின் பின்னியதொரு
பின்னலா ? என் கண்ணே!

Tuesday, January 1, 2019

இணையத்தில் கூகுள் அட்சென்ஸ் (AdSense)மூலம் வருமானம் பெற ஆர்வமுள்ளவர்களுக்கான தகவல்!

இணையத்தில் கூகுள் 'அட்சென்ஸ்' பாவித்து யு டியூப் மற்றும் உங்களது வலைப்பதிவு மூலம் எவ்விதம் பணம் சம்பாதிக்கலாம் என்பதை மிகவும் எளிமையாக, தன் சொந்த அனுபவங்களைச் சான்றுகளாக வைத்து இக்காணொளி இளைஞர் விளங்கப்படுத்துகின்றார். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் சொந்தமாக , நியாயமான வருமானத்தை கூகுள் அட்சென்ஸ் மூலம் பெறலாம். ஏனைய  நாடுகளில் உள்ளவர்களும் கடுமையாக முயற்சி செய்தால் நியாயமான வருமானத்தைப்பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள காணொளியைப்பார்க்கவும்.  முழுமையாகப் பார்க்கவும். பயன் பெறவும்.

இணையத்தில் வருமானம்

Sunday, December 30, 2018

தொடர் நாவல்: குடிவரவாளன் (15 -19) -வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் பதினைந்து: நியூயார்க்கில் குடை வியாபாரம்!

நண்பர்களிருவரும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். நாற்பத்திரண்டாவது வீத்யில் அமைந்திருந்த நூலகத்தை மையமாக வைத்து 'பிராட்வே' சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் நூலகத்திற்குச் சென்று பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் புரட்டினால் நல்லதுபோல் இளங்கோவுக்குப் பட்டது. அருள்ராசா இளங்கோவைப் போல் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலக்கியெம்ன்று எதிலும் பெரிதாக ஆர்வமற்றவன். ஆனால் கல்வி சம்பந்தமான, தொழில் வாய்ப்புகள் சம்பந்தமான, வியாபாரம் சம்பந்தமான விடயங்களில் ஆர்வமுள்ளவன். அவை பற்றிய விடயங்களை படிப்பதில் அதிகக் கவனம் செலுத்துபவன். அவனுக்கும் சிறிது நேரத்துக்கு நூலகம் சென்று ஏதாவது பிடித்த விடயங்களைப் பற்றிய பத்திரிகை, சஞ்சிகைகளைப் புரட்டினால் நல்லதுபோல் பட்டது. சிறிது நேரம் ஓய்வெடுத்தததும் போலாகுமெனப் பட்டது. இதன் காரணமாக இருவருக்கும் நூலகம் செல்வதில் எந்தவிதக் கருத்து வேறுபாடுகளும் ஏற்படவில்லை. எனவே நூலகத்தை நோக்கி நடையைக் கட்டினார்கள். அப்பொழுதும் அவர்களது சிந்தனை முழுவதும் குடிவரவு அதிகாரிகளுடனான சந்திப்பு பற்றியேயிருந்தது. இளங்கோ டிம் லாங்கைன்ச் சந்தித்திருந்தான். அருள்ராசாவுக்கு வந்து வாய்த்தவனோ டிம் லாங்கினைப் போல் அவ்வளவு வேடிக்கையானவனாக இருக்கவில்லை. வழக்கம்போல் அதிகாரிகளுக்குரிய கடின முகபாவமும், வார்த்தைகளை அளந்து, அதிகாரத்துடன் கொட்டும் தன்மையும் கொண்டவனாக விளங்கினான். எனவே அவனுக்கும் அருள்ராசாவுக்குமிடையிலான உரையாலும் மிகவும் குறுகியதாகவே அமைந்து விட்டதில் ஆச்சரியமேதுமிருக்கவில்லை. அவனொரு இத்தாலிய அமெரிக்கன். கிளாட் மன்சினி என்பது அவனது பெயர். அவனுக்கும், அருள்ராசாவுகுமிடையில் நடைபெற்ற உரையாடலும் பினவருமாறு சுருக்கமாக மட்டுமே அமைந்திருந்தது:

அருள்ராசாவின் ஆவணப் பிரதிகளைப் பார்த்தபடியே குடிவரவுத் திணைக்கள அதிகாரி கிளாட் மன்சினி " உனக்கு என்னவிதத்தில் உதவ முடியும்?" என்று ஆரம்ப வினாவினைத் தொடுத்தான்.

அதற்கு அருள்ராசா " சமூகக் காப்புறுதி இலக்க அட்டை எடுப்பது பற்றியே விசாரிப்பதற்காக இங்கு வந்துள்ளேன்.." என்றான்.

அதற்கு கிளாட் மன்சினி " உனது விடயம் சம்பந்தமாக எங்களிடமிருந்து உனக்குரிய பதில் வரும் வரையில் எதுவும் செய்வதற்கில்லை. அதுவரை நீ பொறுத்திருக்கத்தான் வேண்டும்." என்று பதிலிறுத்தான். அதற்கு மேல் அவனுடன் கதைப்பதில் எந்தவிதப் பயனுமில்லை என்பதை உணர்ந்து கொண்ட அருள்ராசா பதிலுக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியேறினான்.

தொடர் நாவல்: குடிவரவாளன் (27) -வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!

1.


நாளை மறுநாள் அவன் அமெரிக்க மண்ணில் காலடி வைத்துச் சரியாக ஒருவருடமாகப் போகின்றது. இளங்கோவுக்குக் காலத்தின் கடுகதிப் பயணம் ஆச்சரியத்தைத் தந்தது. பால்யகாலத்தில் காலம் ஆறுதலாக விரைந்ததுபோல் இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போதிருக்கிறது. எந்தவித வாழ்க்கைப் போராட்டங்களையும் சுமக்க வேண்டிய பொறுப்புகளின்றி, சுதந்திரச் சிட்டுக்களாகப் பெற்றோரின் அரவணைப்பில் பொழுது எவ்வளவு ஆறுதலாக, இனிமையாகக் கழிந்தது? இரவுகளில் கொட்டிக் கிடக்கும் சுடர்களை, மின்மினிகளை, முழுநிலவை, பெருவிழி ஆந்தைகளை, நத்துக்களை, அணில்களை, விண்ணில் கோடிழுக்கும் நீர்க்காகங்களை, குக்குறுப்பான், கொண்டைக் குருவி, மாம்பழத்திக் குருவி, ஆலா, ஆட்காட்டி, ஊருலாத்தி, கிளி, மைனா, மணிப்புறாவெனப் புள்ளினங்களையெல்லாம் இரசிப்பதற்கு நிறையவே பொழுதுகளிருந்தன. ஆனால் இன்று... இருத்தற் போராட்டத்தின் சுமைகளையெல்லாம் தாங்கவேண்டிய சூழலில், இரசிப்பதற்குக் கூடப் பொழுதுகளில்லை? அவ்வளவு விரைவாக அவற்றின் பயணம்! இருந்தாலும் இவ்வளவு இடர்களுக்கிடையிலும் ஒரு சில நூல்களையாவது படிப்பதற்கு அவனால் முடிந்தது. சிந்திப்பதற்கு முடிந்தது. இந்த ஒரு வருடத்தில் அவன் வாழ்வு ஏதாவது பயன்களைப் பெற்றிருக்கிறதா? பொருளியல்ரீதியில் பலவகை அனுபவங்களைத்தவிர எந்தவிதக் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுமில்லை. ஆனால் ஒன்று... இந்த அனுபவங்கள் மிகுந்த பயனுள்ளவை. இருப்பின் பல்முனைத் தாக்குதல்களையும் உறுதியுடன் உள்வாங்கி, நம்பிக்கையுடன் எதிர்த்து நடை பயிலும் பண்பினை அவனுக்கு அளித்துள்ளவை இந்த அனுபவங்கள்தான். 'அச்சமில்லை, அமுங்கதலில்லை. நடுங்குதலில்லை நாணுதலில்லை. பாவமில்லை, பதுங்குதலில்லை. ஏது நேரிடினு மிடர்ப்பட மாட்டோம். கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம். யார்க்கு மஞ்சோம். எதற்கு மஞ்சோம். எங்கு மஞ்சோம். எப்பொழுது மஞ்சோம். வான் முண்டு. மாரியுண்டு. ஞாயிறுங் காற்றும் நல்ல நீரும், தீயு மண்ணும், திங்களு மீன்களும் உடலுமறிவு முயிரு முளவே' என்னும் உறுதியான மனப்பாங்கினை அவை அவனுக்களித்துள்ளன.

வவுனியா நண்பன் ஜெயரட்ணத்தின் உணவகத்திலும் சிறிது காலம் நண்பகற் பொழுதில் உணவு விநியோகிக்கும் பணியாளாகப் பணி புரிநது பார்த்து விட்டான். அதற்குப் பின் சிறிது காலம் வங்க நண்பன் கோஷின் தொழிற்சாலையிலும்  தொழிலாளியாக வேலை பார்த்தான். அதுவும் ஓரிரு மாதங்களே நீடித்தது. அதன் பின் வழக்கம்போல் மீண்டும் இருப்புடனான போராட்டம் தொடங்கி விட்டது. ஏற்கனவே முடிவு செய்திருந்ததன்படி மேலும் இந்த மண்ணில் தொடர்ந்திருப்பதை நினைத்துப் பார்க்கவே அவனால் முடியாததாகவிருந்தது. எந்தவிதச் சட்டபூர்வமான ஆவணங்களுமின்றி , பொருளியல்ரீதியில் ஒருவித உறுதியான நிலையினை அடைந்து, ஆழமாக வேரூன்றுவதற்கு முடியாமலிருந்தது. இந்த நிலையில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். நாளை மறுநாள் இந்த மண்ணில் காலடிவைத்துச் சரியாக ஒருவருடமாகிறது. அடுத்த வருடத்தின் முதல் நாளன்று அவனால் இந்த மண்ணில் ஒரு கணம்கூட இருக்க முடியாது. நாளை மறுநாளிரவு அவனது வாழ்வின் அடுத்த கட்டம் ஆரம்பமாகவேண்டும். மீண்டும் முதலிலிருந்து, அடிமட்டத்திலிருந்து, நம்பிக்கைகளுடன், கனவுகளுடன், எதிர்பார்ப்புகளுடன், உற்சாகத்துடன் அவனது இருதத்லுக்கான பயணம் தொடங்க வேண்டும். இதற்கு ஒரே வழி.. எந்த மண்ணை நோக்கிக் கடந்த ஆவணி மாதத்தில், ஈழதில் வெடித்த இனக்கலவரத்தைத் தொடர்ந்து அவன் புறப்பட்டானோ, எந்த மண்ணை நோக்கிய அவனது பயணம் இடையில் இந்த மண்ணில் தடைபட்டதோ, அந்த மண்ணை நோக்கி, கனடாவை நோக்கி, அவனது பயணம் மீண்டும் புதிதாக ஆரம்பிக்க வேண்டும். கையிலுள்ள இருநூறு டாலர்களுடன், அவன் மீண்டும் தன் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். இவ்விதமாக இறுதித் தீர்மானமெடுத்தவுடன் அன்றிரவு அவன் தன் அறை நண்பர்களுக்குத் தன் எதிர்காலத்திட்டங்களை எடுத்துரைத்துப் பிரிவதற்கு முன்னர் அவர்களுடன் இறுதிப் பொழுதினை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டான். இவ்விதமாக உறுதியானதொரு முடிவினைத் தன் எதிர்காலம் பற்றியெடுத்ததும், அவனது நெஞ்சின் பாரம் சிறிதளவு குறைந்தது. அந்தவிடத்தை களியுடன் கூடியதொரு உற்சாகம் கலந்த உணர்வுகள் ஆக்கிரமித்துக் கொண்டன. அன்றிரவு அறை நண்பர்களுடன் ஆனந்தமாகக் கூடிக் கதைத்தான்.

தொடர் நாவல்: குடிவரவாளன் (26) -வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் இருபத்தியாறு: நடுவழியில்...

ஸ்பானிஷ்கார முகவனான பப்லோவுடனான அனுபத்தின் பின்னர் இளங்கோ முகவர்களின் மூலம் வேலை தேடும் படலத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தான். நேரடியாகவே நகரில் அலைந்து திரிந்து வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தான். சட்டவிரோதக் குடிகள் மில்லியன் கணக்கில் வசிக்குமொரு மாநகரில் தனக்கேன் வேலையொன்றை எடுப்பது சிரமமாகவிருக்கிறதென்று எண்ணியெண்ணி மனம் சலித்தான். இருந்தாலும் சோர்ந்து விடாமல் முயனறு கொண்டிருந்தான். இத்தகையதொரு சந்தர்ப்பத்தில்தான் அவன் ஜெயரடணத்தை மான்ஹட்டன் நகரத்துத் தெருக்களிலொன்றில் தற்செயலாகச் சந்தித்தான். ஈழத்தின் வன்னிமாவட்டத்தின் முக்கிய நகர்களிலொன்றான வவுனியாவைச் சேர்ந்தவனவன். நாற்பத்தியாறாவது தெருவிலுள்ள இத்தாலியனின் உணவகமொன்றில் பகல் நேரத்தில் உணவக உதவியாளனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இளங்கோ அன்றாட வாழ்வுக்கே திண்டாடுவதைப் பார்த்த அவன் இளங்கோவுக்குப் பின்வருமாறு புத்திமதியொன்றைக் கூறினான்: "இளங்கோ உனக்கு விருப்பமென்றால், பகல்நேரத்தில் ஓரிரு மணித்தியாலங்கள் செய்யக் கூடியதொரு சிறு வேலையொன்றுள்ளது, அதனை உனக்கு எடுத்துத் தரலாம். ஆனால் உன்னால் அதனைச் செய்ய முடியுமோ தெரியாது.."இவ்விதம் ஜெயரட்ணம் இழுக்கவே இளங்கோ "பரவாயில்லை ஜெயம். சொல்லு. முடிந்தால் செய்யிறேன். பார்ப்பம்" என்றான்.


அதற்கு ஜெயரட்ணம் "வேலையொன்றும் பெரிதாகக் கஷ்ட்டமான வேலையில்லை. மத்தியான நேரத்தில் பதினொரு மணியிலிருந்து இரண்டு மணிவரையிலை எங்கட ரெஸ்ட்ராண்டிறிற்கு வருகிற ஓர்டர்களுக்குரிய சாப்பாட்டைக் கொண்டு சென்று குடுப்பதுதான். 'டெலிவரி' வேலை. சில் நேரத்திலை கிட்டடியிலையும் இருக்கும். சில நேரத்திலை ஹை ரைஸ் பில்டிங்கிலை ஐம்பது அறுபது புளோரென்று ஏறி இறங்கவேண்டியும் வரும். பெரிதாகச் சம்பளமெதுவும் தரமாட்டான்கள். மினிமத்திற்கும் குறைச்சுத்தான் தருவான்கள். ஆனா சாப்பாட்டை ஓரடர் பண்ணுறவங்கள் நல்லா டிபஸ் தருவாங்கள். அதெல்லாம் உனக்குத்தான். மற்றது..."

"மற்றது.. என்ன " என்றான் இளங்கோ.

அதற்கு ஜெயரடணம் தொடர்ந்து விளக்கமளித்தான்: "மத்தியானச் சாப்பாடும் தருவாங்கள். எங்கடை ரெஸ்டாரண்டிலிருந்து என்னத்தை வேண்டுமென்றாலும் எடுத்துத் தின்னலாம். அந்த விதத்திலை பார்க்கேக்கை பரவாயில்லையென்று சொல்லலாம். இன்னொரு நல்ல வேலை கிடைக்கிற வரையிலை கொஞ்ச நேரம் செய்யிறதாலை உனக்குத்தான் நல்லது. நல்லா யோசித்துச் சொல்லு. இன்றைக்கு முழுக்க நல்லா யோசி. விருப்பமென்றால் நாளைக்கே எங்கட ரெஸ்டாரண்டிற்கு பத்து மணி போலை வா. முதலாளிக்கு உன்னை அறிமுகம் செய்து வைக்கிறன்."

தொடர் நாவல்: குடிவரவாளன் (25) -வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்!

இளங்கோவின் குறிப்பேட்டிலிருந்து..........

வாழ்க்கை வழக்கம் போலவே உருண்டோடிக் கொண்டிருக்கிறது. ஒரு சில சமயங்களில் சலிப்பு மிகவும் அதிகமாகி நம்பிக்கை தளர்ந்து விடுகிறது. அச்சமயங்களிலெல்லாம் எந்தவிதமான எதிர்மறையான சிந்தனைகளும் தாக்கவிடாமலிருப்பதற்காக நேரம் காலமென்றில்லாமல் நகர் முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருப்பேன். அருள் கூட சில சமயங்களில் என் அலைச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அறையிலேயே தங்கி விடுவான். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, சூழலை, சமூக வாழ்க்கையினை எனப் பல்வேறு விடயங்களை அறியும்பொருட்டுக் கவனத்தைத் திருப்பினேன். அவ்வப்போது நகரத்தின் பிரதான நூலகத்துக்குச் செல்வதுமுண்டு. ஒரு சில சமயங்களில் புரூக்லீன் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் நண்பர்களைச் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதலாக அளவளாவி வருவதுமுண்டு.  இதே சமயம் அனிஸ்மான் கூறியபடி மான்ஹட்டனிலிருந்த பலசரக்குக் கடையொன்றை நடாத்திக் கொண்டிருந்த குஜராத் தம்பதியினரிடமிருந்து வேலை வழங்கற் கடிதமொன்றினையும் எடுத்து வேலை செய்வதற்குரிய அனுமதிப்பத்திரத்துக்காக விண்ணப்பித்தோம். அதே சமயம் அனிஸ்மான் கூறியபடியே எம் விடயத்தில் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைத்தத்னாலேற்பட்ட மனித உரிமை மீறல்கள் விளைவித்த பாதிப்புகளுக்காக அமெரிக்க அரசிடம் நட்ட ஈடு கேட்டும் விண்ணப்பித்தோம். நாட்கள்தான் வேகமாகச் சென்று கொண்டிருந்தனவே தவிர காரியமெதுவும் நடக்கிறமாதிரித் தெரியவில்லை. இதே சமயம் மீண்டும் பகல் நேரங்களில் வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தோம்.

 இவ்விதமாகக் காலம் சென்று கொண்டிருந்தபோதுதான் ஒருநாள் நண்பகற் பொழுதில் மகேந்திரனைச் சந்தித்தேன். இவன் கிரேக்கக் கப்பலொன்றில் பல வருடங்களாக வேலை பார்த்து விட்டு அண்மையில் அக்கப்பல் நியூயார்க் வந்திருந்த சமயம் பார்த்து இங்கேயே தங்கி விட்டவன். இப்பொழுது என்னைப்போல் வேலை தேடிக் கொண்டிருந்தான். ஒரு நாள் வழக்கம் போல் பகல் முழுவ்தும் அலைந்து திரிந்து சலித்துப் போய் நாற்பத்திரண்டாவது வீதியிலிருந்த பிரதான பஸ் நிலையத்தில் பொழுதினை ஓட்டிக் கொண்டிருந்தபொழுது அவனாகவே வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தான் வேலை தேடித்தருமொரு முகவனைச் சந்திக்கப் போவதாகவும் , அவன் மிகவும் திறைமைசாலியென்று கேள்விப்பட்டிருப்பதாகவும், நான் விரும்பினால் நானும் அவனுடன் அந்த முகவனைச் சந்திக்க வரலாமென்றும் கூறினான். அவனது கூற்றிலிருந்த உற்சாகம் சலித்துக் கிடந்த என் மனதிலும் மெல்லியதொரு நப்பாசையினை ஏற்படுத்தியது. அத்துடன் மகேந்திரன் கூறிய இன்னுமொரு விடயம்தான் எனக்கு மீண்டும் அத்தகையதொரு நப்பாசையினை ஏற்படுத்தக் காரணமாகவிருந்தது. அவனறிந்தவகையில் இந்த முகவன் அவனைச் சந்திக்கும் முதல்நாளிலேயே உடனடியாக வேலைக்கு அனுப்பி விடுவானாம். அதுதான் அவனது சிறப்பாம். அவன் அமெரிக்க மண்ணில், குறிப்பாக நியூயார்க் மாநகரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் மக்களனைவருக்கும் ஆபத்தில் அபயமளிக்கும் கடவுளாம். அவன் இவ்விதமாகவெல்லாம் அந்த முகவனைப் பற்றி அளந்து கொட்டவே நான் கேட்டேன்: "இதையெல்லாம் எங்கையிருந்து நீ அறிந்து கொண்டனி". அதற்கவன் வழியில் சந்தித்த ஸ்பானிஷ்காரனொருவன் கூறியதாகவும், அவன் தந்திருந்த பத்திரிகையொன்றிலும் இந்த முகவனின் விளம்பரம் வந்திருந்ததாகவும், அதில் கூட இவனைச் சந்திக்கும் எவரையும் உடனடியாகவே வேலை செய்யுமிடத்திற்கு அனுப்பிவிடுவதில் இவன் சமர்த்தனென்று குறிப்பிடப்பட்டிருந்ததைத் தான் பார்ததாகவும் கூறியபொழுது எனக்கும் அந்த முகவன்பேரில் நல்லதொரு அபிப்பிராயமேற்பட்டது. இதன்விளைவாக நானும் மகேந்திரனுடன் சேர்ந்து அந்த முகவனிடம் செல்வதற்குச் சம்மதித்தேன். விடா முயற்சியில்தானே வாழ்க்கையின் வெற்றியே தங்கியுள்ளது. ஊக்கமது கைவிடேலென்று அவ்வைக் கிழவி கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துரைத்திருக்கின்றாளல்லவா.

தொடர் நாவல்: குடிவரவாளன் (24) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை!

" வாருங்கள் என் அன்புக்குரிய நண்பர்களே! காலை வணக்கங்கள்! இன்று நான் உங்களை சந்திக்க விரும்பியதற்கொரு முக்கியமான காரணமுண்டு. அதற்குமுன்னர் உங்களது வாழ்க்கையைப் பற்றிச் சிறிது அறிய விரும்புகின்றேன். வாழ்க்கை எப்படியிருக்கிறது? என்னால் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டியதேதாவதிருக்கிறதா?" இவ்விதமாக இளங்கோவையும் அருள்ராசாவையும் வரவேற்றார் சட்டத்தரணி அனிஸ்மான். இதற்கு இளங்கோவையே பதிலளிக்குமாறு பார்வையால் உணர்த்தினான் அருள்ராசா. அதனைப் புரிந்து கொண்ட இளங்கோ சிறிது விபரமாகக் கூறத்தொடங்கினான்: "நற்காலை வந்தனங்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும் அனிஸ்மான் அவர்களே! உங்களது பரிவான விசாரணைக்கு எமது நன்றி. நீங்கள் உடனடியாக அழைத்ததால்தான் தற்போது வந்துள்ளோம். இருந்தாலும் சிறிது காலமாகவே உங்களைச் சந்திக்க வேண்டுமென்று எண்ணியிருந்தோம். அதற்குள் நீங்களே அழைத்து விட்டீர்கள் பழம் பழுவிப் பாலில் விழுந்தது மாதிரி"

 'மேலே கூறுங்கள்' என்பது போன்றதொரு பாவனையில் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் அனிஸ்மான். இளங்கோவே மேலே தொடர்ந்தான்: "தற்போது எங்கள் முன்னாலுள்ள முக்கியமான பிரச்சினையே 'சமூகக் காப்புறுதி இலக்க அட்டை' போன்ற சட்டரீதியான ஆவணங்களைப் பெறுவதுதான். 'ச.கா.இ' அட்டை இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாதுள்ளது. எங்களிடமிருந்த கடவுச் சீட்டையும் குடிவரவுத் திணைக்களத்தினர் பாஸ்டனிலேயே பறித்து வைத்துள்ளனர். இந்நிலையில் 'ச.கா.இ.' அட்டையில்லாமல் சட்டரீதியாகவொரு வேலைகூடச் செய்ய முடியாமலுள்ளது. வங்கியொன்றில் கணக்கொன்றும் ஆரம்பிக்க முடியாமலுள்ளது. நீங்கள்தான் இந்த விடயத்தில் எப்படியாவது உதவ வேண்டும். ஒழுங்காக வேலையொன்றும் செய்ய முடியாமல் அன்றாட வாழ்க்கையையே கொண்டு நடத்த முடியாமலுள்ளது"

இளங்கோ இவ்விதம கூறவும் அவன் கூறுவதையே மிகவும் அவதானமாகச் செவிமடுத்துக் கொண்டிருந்த சட்டத்தரணி அனிஸ்மான "உங்கள் நிலை எனக்கு நன்றாகவே புரிகிறது. நிச்சயமாக என்னால் முடிந்த அளவுக்கு முயன்று பார்க்கிறேன் மேலும் நீங்கள் மட்டும் யாராவது ஒருவரது வர்த்தக நிறுவனத்திலிருந்து உங்களுக்கு வேலையிருப்பதாக ஒரு கடிதமொன்றினை எடுத்துத் தந்தால் அதனையும், உங்களது இன்றைய நிலையினையும் வைத்து குடிவரவுத் திணைக்களத்திடம் உங்களுக்கு வேலை செய்வதற்குரிய அனுமதிப் பத்திரம் கோரி விண்ணப்பிக்கலாம்."

தொடர் நாவல்: குடிவரவாளன் (20 - 23) - வ.ந.கிரிதரன் --

அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!

அடுத்த மூன்று வாரங்களும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் ஹரிபாபுவுடன் கழிந்தது. ஹரிபாபு கூறியபடியே அவர்களுக்குமொரு நடைபாதைக் கடையினை கிறிஸ்தோபர் வீதியும், நான்காம் வீதி மேற்கும் சந்திக்குமிடத்தில் போட்டுக் கொடுத்துவிட்டான். ஹரிபாபு, அவன் மனைவி மற்றும் ஹென்றி எல்லோரும் தமது பழைய இடங்களிலேயே தங்கள் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஹரிபாபுவுக்கு நண்பர்களிருவரும் வேடிக்கையாக வைத்த பெயர் 'நடுத்தெரு நாராயணன்'. நடுத்தெரு நாராயணன் கடையிலிருந்து நடைபாதைக்கு வந்தவன். அவனது கடையிலேயே அவனது விற்பனைப் பொருட்கள் யாவுமிருந்தன. நடுத்தெரு நாராயணன் நடைபாதை வியாபாரத்தின் பல்வேறு விதமான நெளிவு சுளிவுகளையும் கற்றுத்தேர்ந்த கில்லாடி. இந்த விடயத்தில் சில சமயங்களில் நியூயார்க் காவற்துறைக்குக் கண்களில் விரல்களை விட்டு ஆட்டிடும் வல்லமை பெற்றிருந்த அவனிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் பல இருந்தன. அவ்விதம்தான் இளங்கோ அவனைப்பற்றி எண்ணிக் கொண்டான்.

சில சமயங்களில் வார இறுதி நாட்களில் நியூயார்க் நகரின் சில வீதிகளை மூடி விட்டு அங்கு நடைபாதை வியாபாரிகளைப் பொருட்கள் விற்பதற்கு அனுமதி வழங்குவார்கள். அத்தகைய சமயங்களில் அவ்விதம் மூடப்பட்ட வீதிகளில் வைத்து விற்பதற்கு அதிக அளவில் கட்டணத்தைச் மாநகரசபைக்குச் செலுத்த வேண்டும். இத்தகைய சமயங்களில் நடுத்தெரு நாராயணனான ஹரிபாபு வின் செயற்திட்டம் பின்வருமாறிருக்கும்:

Saturday, December 29, 2018

மிலான் குந்தெராவின் 'நாவலின் கலை' என்னும் நூலிலிருந்து..

மிலான் குந்தெராவின் 'நாவலின் கலை' என்னும் நூலிலுள்ள கட்டுரைகளைப் புரட்டிக்கொண்டிருக்கின்றேன். நூலிலுள்ள முதலாவது கட்டுரை "The Depreciated Legacy of Cervantes".. அதில் நாவல் பற்றி, இருத்தல் பற்றி, மனிதர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் என் கவனத்தை ஈர்த்த சில கருத்துகளை என் மொழியில் சுருக்கமாகத் தருகின்றேன்.

எட்மண்ட் ஹஸ்ஸேர்ல் வியன்னாவிலும், பிராக்கிலும் ஆற்றிய ஐரோப்பிய மனிதத்துவம் பற்றிய புகழ்பெற்ற உரையில் ஐரோப்பிய விஞ்ஞானம் பற்றிக் குறிப்பிடுகையில் ஒரு பக்கத் தன்மை மிக்கதான ஐரோப்பிய விஞ்ஞானமானது உலகை கணித மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக்குரியதொன்றாக மட்டுமே ஆக்கிவிட்டது. மானுட வாழ்க்கையை அதன் கவனத்துக்கப்பால், அதன் எல்லைக்கப்பால் வைத்துவிட்டது என்று கூறியுள்ளார்.

விஞ்ஞான வளர்ச்சியானது மனிதரை விஞ்ஞானத்தின் சிறப்பு விதிகளுக்குள் உந்தித்தள்ளி விட்டது. எவ்வளவுக்கெவ்வளவு மனிதர் அறிவில் முன்னேறினார்களோ அவ்வளவுக்கவ்வளவு வாழ்வை முழுமையாகவோ அல்லது தம்மைப்பற்றி முழுமையாகவோ அறிந்துகொள்வதில் பின்னேறினார்கள். எட்மண்ட ஹஸ்ஸேட்லின் மாணவரான ஹைடெகரின் புகழ்பெற்ற சொற்றொடரான 'இருத்தலை மறத்தல்' (the forgetting of being) என்னும் சூழலுக்குள் மனிதர் தள்ளப்பட்டுவிட்டார். ரெனெ தெக்கார்தே (Rene Descartes) குறிப்பிட்டதுபோல் மனிதர் தொழில்நுட்பம், அரசியல் மற்றும் வரலாறு ஆகிய விசைகளால் புறக்கணிக்கப்பட்டுவிட்ட ஒரு பொருளாக ஆகி விட்டார். இவ்விசைகளுக்கு மனிதரோ அவர்தம் வாழ்வு பெறுமதியற்றதொன்று. முக்கியத்துவமற்றதொன்று. ஆரம்பத்திலிருந்தே மூடி மறைக்கப்பட்டதொன்று.

நகுலனின் சுசீலா! யார் அவள்?

எஸ்.ராமகிருஷ்ணனின் 'நாவலெனும் சிம்பொனி' நூலில் எழுத்தாளர் நகுலன் பற்றியதொரு கட்டுரையுள்ளது. சிறு கட்டுரை அது. அதில் நகுலனின் படைப்புகளில் அடிக்கடி காணப்படும் சுசீலா என்னும் பெண் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. நகுலனின் சுசீலா பற்றி எஸ்.ரா பின்வருமாறு கூறுவார்:

"'சுசீலாவின் உயர் தன்மைகள் சுசீலாவிடம் இல்லை' எனப்பேசும் இவர், கவிதையெங்கும் காணப்படும் சுசீலா எனும்  பெண் பெயரைக்கொண்டு அதைப்பெண்ணாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்ப்படுகிறது.  இப்பெண்பெயர் உருவாக்கும்  வார்த்தைச் சித்திரம் ஏற்கனவே உருவாகும் மனநிலையின் தீவிரத்திற்கு எதிர்நிலையாகவோ , சமன் செய்யும் ஒன்றாகவோ, பரிகசிக்கும் நிலையாகவோ கொள்ளலாம். ஒருவகையில் மரபுக்கவிதையில் வரும் வெண்சங்கே, பாம்பே, கிளியே, குதம்பாய்போல் இதுவும் சுய எள்ளல் குறியீடாகக் கொள்ளலாம்.  சில இடங்களில் சுசிலா மூலம் ஏற்படுத்தும்  நெருக்கம் பாரதியின் கண்ணம்மா என்ற வார்த்தை உருவின் செயல்பாடு போலத் தெரிகிறது."

எழுத்தாளர்கள் பலர் அவ்வப்போது சுசீலா போன்ற விடயமொன்றினைப்பற்றிக் குறிப்பிடும்போது அவ்விடயம் பற்றிய போதிய ஆய்வெதுமின்றி முடிவொன்றுக்கு வந்து விடுகின்றார்கள். அதற்கு எஸ்.ராமகிருஷ்ணனும் விதிவிலக்கானவரல்லர் என்பதையே நகுலனின் சுசீலா பற்றிய அவரது கூற்றும், அது பற்றிய மேலதிக விளக்கங்களும் புலப்படுத்துகின்றன.

எஸ்.ரா. நகுலனின் சுசீலா பற்றி இவ்விதமான முடிவொன்றுக்கு வர முன்னர் நகுலனின் படைப்புகள் அனைத்திலும் நகுலன் எவ்விதம் சுசீலாவை விபரித்திருக்கின்றார் என்று பார்த்திருக்க வேண்டும். பார்த்தாரா என்பது தெரியவில்லை. அவ்விதம் அவர் செய்திருந்தால் நிச்சயமாக 'சுசீலாவும் ஒரு எள்ளல்' என்னும் முடிவுக்கு வந்திருக்க மாட்டார். எனக்கென்னவோ நகுலனின் வாழ்வில் எதிர்பட்ட , அவர் காதலித்த ஆனால் அவருக்குக் கிடைக்காமற் போன பெண்ணொருத்திதான் அவர் படைப்புகளில் வரும் சுசீலா என்னும் பாத்திரமாக இருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. தனக்குக் கிடைக்காமற் போன பெண்ணைச் சுசீலா என்னும் பாத்திரமாக உருவகித்து அவளைத்தன் எழுத்துகளில் நடமாடவிட்டு , அவளுடன் எழுத்துலகில் வாழ்ந்து வந்திருக்கின்றார் நகுலன் என்றே தோன்றுகின்றது. இறுதிவரைத் தனிமையில் வாழ்ந்த நகுலன் நிஜ வாழ்க்கையில் தனக்குக்கிடைக்காமற் பெண்ணைச் சுசீலாவாக்கி மானசீகமாக வாழ்ந்த்திருக்கின்றார் என்றே தோன்றுகின்றது.

காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் 'தங்ஙள் அமீர்'!


நண்பர் எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் குறுநாவல்கள் அடங்கிய தொகுதி காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 'தங்ஙள் அமீர்' என்னும் பெயரில் வெளிவரவுள்ளது. வாழ்த்துகள். 'தங்ஙள் அமீர்' குறுநாவல் 'பதிவுகள்' இணைய இதழில் (23.04.2014) வெளியான குறுநாவல் என்பதையும் இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன். அக்குறுநாவல் பதிவுகள் இதழில் வெளியாகியபோது வெளியான எனது அறிமுகக் குறிப்பினையும் இங்கு பதிவு செய்கின்றேன்.

எழுத்தாளர் தாஜ் அவர்களை தொண்ணூறுகளிலிருந்து எனக்குத் தெரியும். ஸ்நேகா (தமிழகம்) வெளியிட்ட எனது நூல்களான அமெரிக்கா, நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆகிய நூல்களைத் தமிழக நூல் நிலையமொன்றில் கண்டு வாசித்து அவை பற்றி எனக்குக் கடிதங்கள் இரண்டு அனுப்பியிருந்தார். அதன் பின்னர் வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற நாவல்களிலொன்றான 'என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' நாவலையும் தனது நண்பர் ஒருவர் மூலம் எனக்குக் கிடைக்கச் செய்தார். மறக்க முடியாது.

தாஜ் அவர்களின் சிறுகதையான 'பால்ய விவாஹம்' பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காலச்சுவடு, கணையாழி போன்ற சஞ்சிகைகளில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவள விழாபோட்டியிலும் இவரது கவிதை முத்திரைக்கவிதையாக விருது பெற்றுள்ளது. இவர் தமிழ்ப்பூக்கள் என்னும் வலைப்பதிவினையும் வைத்திருக்கின்றார்.

எழுத்தாளரின் தாஜ் எழுதிய தங்ஙள் அமீர் குறுநாவல் பற்றி 'பதிவுகள்' இணைய இதழில் நான் எழுதியிருந்த அறிமுகக் குறிப்பு:

"புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அந்நிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் 'தங்ஙள் அமீர்' இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. 'தங்ஙள் அமீர்' என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர் இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக 'தங்ஙள் அமீரை'ப் பாவிப்பதும்தாம்.

எழுத்தாளர் பிரபஞ்சனின் மரணமும், அவரது ஆசையொன்றும்!

பிரபஞ்சன் அவர்கள் 'ஜெயித்த கதை' கட்டுரையின் இறுதியில் 'என் விருப்பமெல்லாம் , எழுத்தைப் போலவே , என் மரணமும் கெளரவமாக இருக்க வேண்டும் என்பதுதான்' என்று குறிப்பிட்டிருந்தார்.  அவரது  ஆசை அவரது மரணத்தில் நிறைவேறியுள்ளது. நீண்ட காலத்துக்குப் பிறகு எழுத்தாளர் ஒருவருக்கு உரிய  மரியாதைகொடுத்து அவரது இறுதி அஞ்சலியை நடாத்தியதற்காகப் புதுவை மாநில அரசையும், அதன் முதல்வரையும் பாராட்டுகின்றேன்.

தம்  வாழ்நாளெல்லாம் தம் எழுத்தால் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும்  எழுத்தாளர்களைப் பொதுவாக மாநில அரசுகள் கவனிப்பதில்லை. இந்நிலையில் அரச மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு இறுதி அஞ்சலியினைச் செய்ததன் மூலம் புதுவை மாநில அரசு உயர்ந்து நிற்கிறது. தமிழக அரசும், ஏனைய மாநில அரசுகளும் இம் முன்மாதிரியைப் பின்பற்றட்டும். எழுத்தாளர்கள் வாழும் காலத்திலேயே அவர்களது படைப்புகளை இலகுவாக வெளியிடும் வகையிலான திட்டங்கள் பலவற்றை உருவாக்கட்டும். நூலகங்கள் இலகுவாக அவர்கள்தம் நூல்களை வாங்கும் திட்டங்களை உருவாக்கட்டும். எழுத்தாளர்களின் நூல்களுக்குக் கொடுக்க வேண்டிய நூலுரிமைப்பணத்தை உரிய முறையில் கொடுப்பதை உறுதி செய்யும் திட்டங்களை உருவாக்கட்டும்.

நியுயோர்க் நடைபாதை ஓவியரின் கைவண்ணம்!


இங்குள்ள ஓவியத்துக்கு ஒரு வரலாறுண்டு. 1984இல் வரையப்பட்ட ஓவியம் இது. இன்றும் என்னிடம் மாற்றமின்றி அவ்விதமேயுள்ளது. இதனை வரைந்தவர் வீதி ஓவியர்களிலொருவர். பென்சிலால் வரையப்பட்ட ஓவியம்.

1983 கலவரத்தைத்தொடர்ந்து நாட்டை விட்டு நீங்கிக் கனடா வரும் வழியில், பாஸ்டன் நகரில் தடுக்கப்பட்டு, நியூயார்க் மாநகரத்தின் புரூக்லீன் நகரிலுள்ள தடுப்பு முகாமில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு வெளியே விடப்பட்டபோது, அடுத்த ஒன்பது மாதங்கள் வரையில் நியூயோர்க் மாநகரத்தில் மான்ஹட்டன் நகரில் பெரும்பாலும் எனது வாழ்க்கை கழிந்தது. 'West 4th Street / Avenue of the Americas வீதிகளிரண்டும் சந்திக்கும் சந்தியில் Avenue of the Americas' வீதியின் கிழக்குப் பக்கமாகவிருந்த நடைபாதையில் மனிதரின் உருவப்படங்கள் வரையும் வீதி ஓவியர்கள் சிலர் அவ்வழியால் செல்லும் மனிதர்களில் விரும்பும் சிலரின் உருவப்படங்களை வரைவது வழக்கம். ஒரு மாலை நேரம் அவ்வழியால் சென்று கொண்டிருந்தபொழுது நான்கு ஓவியர்கள் அந்நடைபாதையில் காணப்பட்டனர். அவர்களில் மூவருக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்து விட்டனர். ஒருவருக்கு ஒருவருக்குக் கிடைக்காததால் , தனிமையில் வாடிக்கையாளரை எதிர்நோக்கி வாடி நிற்கும் கொக்காகக் காத்திருந்தார். மற்ற ஓவியர்கள் தம் தொழிலில் மும்முரமாக ஈடிபட்டிருந்தனர். நான் தனித்திருந்த ஓவியரிடம் ஒருவரின் உருவப் படத்தை வரைவதற்கு எவ்வளவு செல்வாகும் என்றேன்.

என்னைப் பாதித்த முதலிருபது நூற் பட்டியல்!


இதுவரை வாசித்த நூல்களில் என்னைப் பாதித்த முக்கியமான இருபது நூல்களை எண்ணிப்பார்த்தேன். அவற்றின் பட்டியல் இது. இன்னும் பல நூல்களுள்ளன. ஆனால் நினைத்தபொழுது முதலில் நினைவுக்கு வந்தவை இவை. என்னைக் கவர்ந்த வெகுசனப்படைப்புகள் பட்டியலும் விரைவில் வரும். அது போல் என்னைக் கவர்ந்த தமிழகப்படைப்புகள், ஈழத்துப் படைப்புகள், என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள், வெகுசன எழுத்தாளர்கள் பட்டியல்களும் வெளியாகும்

1. புத்துயிர்ப்பு - டால்ஸ்டாய்
2. Crime and Punishment - Dostoyefsky
3. பாரதியார் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்புகள்.
4. The Brothers Karamazov - Dostoyefsky
5. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை - மார்க்ஸ், எங்கெல்ஸ்
6. தாய் - மார்க்சிம் கோர்க்கி
7. The Metamorphosis - Franz Kafka
8. The old man and the Sea - Ernest Hemingway
9. வெற்றியின் இரகசியங்கள் - அ.ந.கந்தசாமி
10. Candide - Voltaire
11. காலம் - வாசுதேவன் நாயர்
12. ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்! - ஜெயகாந்தன்
13. The Fabric of The Cosmos - Brian Greene
14. A brief History Of Time - Stephen Hawkings
15. Hyperspace -Michio Kaku
16. மோகமுள் - தி.ஜானகிராமன்
17. அன்னா கரீனினா - டால்ஸ்டாய்
18. ஏணிப்படிகள் - தகழி சிவசங்கரன்பிள்ளை
19. ஒரு கிராமத்தின் கதை - எஸ்.கே.பொற்றேகாட்
20. நீலகண்ட பறவையைத்தேடி.. - அதீன் பந்த்யோபாத்

நான் இரசித்த புனைவுக் காட்சியொன்று!


ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' தொடர்நாவலில் சம்பவங்களுக்கு உயிர்த்துடிப்புடன் ஓவியர் கோபுலு சித்திரங்கள் வரைந்திருப்பார்.  ஆனந்த விகடனில் நாவல் தொடராக வெளிவந்தபோதே நாவலில் வரும் ஒரு காட்சியும், அதற்கு கோபுலு வரைந்திருந்த ஓவியமும் பசுமரத்தாணி போல் ஆழ்மனத்தில் சென்று படிந்துவிட்டது. மானுட உளவியலைப் பிரதிபலிக்கும் ஜெயகாந்தனின் வசனங்களுக்கு உயிரூட்டியிருந்தார் கோபுலு. காலச்சுவடு பதிப்பகத்தினர் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' 'நாவலை வெளியிட்டபோது ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ஓவியங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். அந்நூல் என்னிடமுள்ளது. அவ்வப்போது அந்நாவலில் அப்பக்கத்தைப்புரட்டிப் பார்ப்பேன். மனத்தின் இறுக்கம் நெகிழ்ந்து இன்பத்திலாழ்ந்துவிடும். ஜெயகாந்தனின் வசனங்களையும், கோபுலுவின் அவ்வோவியத்தையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

இதழ்களில் தொடர்களாக வெளிவந்த நாவல்களை வெளியிடும் பதிப்பகங்கள் அத்தொடர்களில் வெளிவந்த ஓவியங்களையும் உள்ளடக்கி வெளியிடுவது சிறப்பு  மிக்கதென்பதென் எண்ணம். இதுபோல் முல்லை பதிப்பகத்தினர் வெளியிட்ட விந்தனின் பாலும் பாவையும் நாவலிலும் அந்நாவல் தொடராக வெளிவந்த ஓவியங்களுடன் வெளியிட்டிருக்கின்றார்கள். அந்நூலும் என்னிடமுள்ளது. ஆனந்தவிகட வெளியிட்ட பொன்னியின் செல்வன் நாவலிலும் ஓவியர் மணியத்தின் ஓவியங்களையும் உள்ளடக்கியிருந்தார்கள் என்பதும் இத்தருணத்தில் நினைவு கூரத்தக்கது.

நாம் இரசித்த காதல் கடிதமொன்று!

புனைகதைகளில் எத்தனையோ காதல் கடிதங்களை வாசித்திருக்கின்றேன். அவையெல்லாம் காலப்போக்கில் நினைவிலிருந்தும் மறைந்து போய்விட்டன, ஒன்றைத்தவிர. அந்த ஒன்று கு.அழகிரிசாமியின் 'தீராத விளையாட்டு' நாவலில் வரும் கடிதம். கல்கி சஞ்சிகையில் தொடராக வெளியான நாவல்களிலொன்று.

இக்கதையின் நாயகன் ரங்கராஜன் தன் தாய் ஜானகியைப்போல் மிகவும் அழகு வாய்ந்தவன். அவனும் அவனது அயல் வீட்டுக்குக் குடிவந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் விஜயாவுக்குமிடையில் காதல் முகிழ்க்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அவள் வேறொருவரைத்திருமணம் செய்கின்றாள். பின்னர் அவனுக்கும் வேறொரு திருமணம் நடந்து பல துயர நிகழ்வுகளுக்குள்ளாகிய அவனது வாழ்க்கையில் அவனது முன்னாள் காதலியின் தங்கை எதிர்ப்படுகின்றாள். அவளிடம் அவன் அவளது அக்கா பற்றி விசாரிக்கையில் அவள் இன்னும் தன்னுடன் எடுத்த புகைப்படங்களெல்லாவற்றையும் வைத்திருப்பதாகக் கூறுகின்றாள். அதற்கு அவன் இன்னுமொருவர் மனைவியான அவளது அக்கா தன்னிடம் வைத்திருக்கும் தன் ஞாபகத்தை உணர்த்தும் அனைத்தையும் அழித்துவிட வேண்டுமென்று கூறுகின்றான்.. பதிலாக அவள் தனக்கு எழுதிய கடிதத்தைக்கொடுத்து அதை அவளது அக்காவிடம் கொடுத்து அழித்து விடும்படியும், அவளிடமுள்ள தன்னை நினைவுபடுத்தும் புகைப்படங்கள் அனைத்தையும் வாங்கிவரும்படியும் கூறுகின்றான்.

Saturday, October 6, 2018

கவிதைத்தொகுப்பு: எதிர்காலச்சித்தன் பாடல்! - அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள். -

அறிமுகம்: கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு!   - வ.ந.கிரிதரன் -

ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது

[மறுமலர்ச்சிக் குழுவினரால் வெளியிடப்பட்ட சஞ்சிகையே 'மறுமலர்ச்சி' சஞ்சிகை. இச்சஞ்சிகையில் எழுதிய படைப்பாளிகளையே மறுமலர்ச்சி எழுத்தாளர்களாகக் காணும் போக்கொன்று செங்கை ஆழியானுட்பட இன்று இலக்கிய விமர்சனங்கள், ஆய்வுகள் செய்ய விரும்பும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினைச் சார்ந்த செல்லத்துரை சுதர்ஸன் போன்றவர்கள் மத்தியில் நிலவுவதாகத் தெரிகிறது. இது ஒரு பிழையான அணுகுமுறை. மறுமலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கி, அதில் பாடுபட்டவர்களின் படைப்புகள் யாவும் மறுமலர்ச்சிப் படைப்புகளாகத்தான் கருதப்பட வேண்டும். உண்மையில் மறுமலர்ச்சிச் சிறுகதைகள், அல்லது மறுமலர்ச்சிக் கவிதைகள், அல்லது மறுமலர்ச்சிப் படைப்புகள் , மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும்போது அது மறுமலர்ச்சி சஞ்சிகையில் எழுதிய எழுத்தாளர்களை மட்டும் குறிக்கவில்லை.  அது மறுமலர்ச்சி காலகட்டப் படைப்பாளிகளையும் குறிப்பிடுகிறது. அந்த 'மறுமலர்ச்சி' இதழினை வெளியிட்ட மறுமலர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியவர்களின் படைப்புகளையும் குறிக்கிறது. இதுவே சரியான நிலைப்பாடாகவிருக்க முடியும் என்பதென் கருத்து. செங்கை ஆழியான, செல்லத்துரை சுதர்ஸன் போன்றோர் இந்த விடயத்தில் கருத்துச் செலுத்த வேண்டுமென்பதென் அவா. சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா, எம். ஏ. நுஃமான் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்' என்னும் நூலில் ஈழத்துக் கவிதையுலகின் மறுமலர்ச்சிக் கட்ட காலம் பற்றிக் குறிப்பிடும்போது அ.ந.கந்தசாமி, மகாகவி, நாவற்குழியூர் நடராசன் ஆகியோரை மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்களாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் கவீந்த்திரன் என்னும் புனைபெயரிலும் எழுதிய அறிஞர் அ.ந.கநதசாமியை ஈழத்தின் தமிழ்க் கவிதையில் முதலாவதாக இடதுசாரிச் சிந்தனையினை அறிமுகப்படுத்திய படைப்பாளியாகவும் குறிப்பிடுவர்.இவ்விதம் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றியே குறிப்பிடப்படவேண்டுமே தவிர 'மறுமலர்ச்சி' சஞ்சிகையின் படைப்புகளை மட்டும் மையமாக வைத்து மறுமலர்ச்சிக் காலகட்டத்தை எடை போடக்கூடாது. அவ்விதமான போக்கு ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய பிழையான பிம்பத்தினைத் தந்துவிடும் அபாயமுண்டு. ]

அ.ந.க. ஒரு செயல் வீரர். ஏனையவர்களைப் போல் வாயளவில் நின்று விட்டவரல்லர். தான் நம்பிய கொள்கைகளுக்காக இறுதிவரை பாடுபட்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்களிலொருவர். மேற்படி சங்கத்தின் கீதமாகவும் இவரது கவிதையே விளங்குகின்றது. அவரது கவிதைகளின் கருப்பொருட்களாகத் தீண்டாமை, தோட்டத்தொழிலாளர் இழிநிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள், சமுதாயச் சீரமைப்பு, இயற்கை, காதல், தத்துவம், வர்க்க விடுதலை, பிடித்த ஆளுமைகள் போன்றவை விளங்குகின்றன. இவரது கவிதைகள் தமிழமுது, தேன்மொழி, ஈழகேசரி, வசந்தம், வீரகேசரி, பாரதி, தினகரன், ம்ல்லிகை, நோக்கு, இளவேனில், சுதந்திரன், ஸ்ரீலங்கா போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன [அ.ந.க.வின் கவிதைகள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அவர் பங்கு பற்றிய கவியரங்குகள் பற்றிய விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவேண்டியதவசியம்.].

Sunday, May 27, 2018

லக்பிமா.காம்: கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு ! 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு! - - கத்யானா அமரசிங்ஹ | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, 'மந்திரி மனை' என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய வீடுகளின் கட்டடக்கலையும் ஒருங்கே அமைந்திருந்த அந்த அரண்மனையை முதன்முதலாகக் கண்டபோது, இலங்கையின் தென்பகுதியில் காணக்கூடிய மழையும், வெயிலும், காலமும் பொலிவிழக்கச் செய்திருக்கும் பழங்கால, பாழடைந்த ‘வளவ்வ’ எனப்படும் பாரம்பரிய வீடுகளை அது நினைவுபடுத்திற்று. யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அந்த அரண்மனையானது, போர்த்துக்கேயர்களின் வருகையோடு ஆரம்பித்த காலனித்துவ யுகத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த மந்திரியொருவரின் இல்லமாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. அவ்வாறே யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர்கள் கைப்பற்ற முன்பு இம் மந்திரி மனை அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் யாழ்ப்பாண மன்னரொருவரின் அரண்மனையும் இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

முதன்முறையாக 'மந்திரி மனை'யைக் கண்ட எனது உள்ளத்தில் யாழ்ப்பாண வரலாறு குறித்த பல தரப்பட்ட எண்ணங்கள் கேள்வியெழுப்பின. எனினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கே இருந்திருக்கக் கூடிய தமிழ் மன்னரொருவரின் ராஜதானியைக் குறித்து கற்பனை செய்து பார்ப்பதைத் தவிர, அதைக் குறித்து மேலதிக விபரங்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பில்லை என்பதனால் அந்தக் கற்பனைகளும் கூட தோன்றிய இடத்திலேயே மரித்து விடவும் வாய்ப்பிருந்தது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ராஜதானிகள் குறித்து நாங்கள் பலதரப்பட்ட வரலாறுகளைப் படித்திருந்த போதிலும், ஆயிரக்கணக்கான வருடங்கள் யாழ்ப்பாணத்தில் நிலவியிருந்த ராஜதானிகளின் அமைவிடங்கள் மற்றும் வரலாறு குறித்த விரிவான குறிப்பொன்றை எங்கிருந்து தேடிப் படிப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

எனினும் அதற்கு சில வாரங்களின் பின்னர், ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’' எனும் ஆய்வு நூலொன்று எனக்குக் கிட்டியதானது, கோடையில் துவண்டிருக்கும் ஒருவர் மீது அகாலத்தில் பெய்த மழை போன்றிருந்தது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கட்டடவியல் பட்டதாரியும், தமிழ் எழுத்தாளருமான நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்) எழுதிய இந்த ஆய்வு நூலானது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த  யாழ்ப்பாண ராஜதானி நகர அமைப்பு  குறித்து எழுதப்பட்ட முதல் அறிவியல் ரீதியான ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட அந் நூலானது, இந்திய எழுத்தாளர்களில் ஒருவரான லதா ராமகிருஷ்ணனால்  ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நான் வாசித்தது ஆங்கில மொழிபெயர்ப்புப் பிரதியாகும்.
எனக்கு முதன்முதலாக கிரிதரன் அறிமுகமாவது ஒரு கவிஞராகவும், சிறுகதை மற்றும் நாவல் எழுத்தாளராகவும்தான். அதற்கும் மேலதிகமாக உலகம் முழுவதும் தமிழ் வாசகர்களிடையே பிரபலமான வலைத்தளமாகவுள்ள ‘பதிவுகள்’ இணைய இதழாசிரியர் அவர். ஆயிரக்கணக்கான வருடங்களாக யாழ்ப்பாணத்தில் திகழ்ந்த ராஜதானிகளின் வரலாறுகள் குறித்தும், அதன் இறுதி ராஜதானியாகக் கருதப்படும் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு  குறித்தும் மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை, பல வருடங்கள் பாடுபட்டு ஆய்வுகள் செய்து அவர் எழுதியிருக்கும் இச் சிறந்த ஆய்வு நூலிலிருந்து அறிந்து கொண்டேன்.

Saturday, April 21, 2018

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்! - வ.ந.கிரிதரன் -

"The Wanderers Of The Sky And Their Cry Of Melancholy " என்னும் தலைப்பில் நான் எழுதிய ஆங்கிலக் கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பு லக்பிம சிங்களத் தினசரியின் ஞாயிற்றுப் பதிப்பில்
http://e-paper.lakbima.lk/…/Apr…/last_22_04_18/manjusawa.pdf  (22.04.2018) வெளியாகியுள்ளது. அக்கவிதை தமிழில் கீழே:

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்! - வ.ந.கிரிதரன் -
"படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை எப்பொழுதுமே
என்னிதயத்தை ஆழமாகத் தொடுவன.

காலையிலிருந்து
மழை பலமாகப்
பெய்து கொண்டிருக்கிறது.

மழை.
அகதிகளின் கண்ணீர்.
நாடற்ற வான் நாடோடிகள்,
மேகங்களின்
கண்ணீர்,

வழக்கம்போல்
படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை என்னிதயத்தை
ஆழமாகத் தொடுகின்றன.

(பதிவுகள்.காம்) வாசிப்பும், யோசிப்பும் 281: சங்கக்கவிதைகளும், ஓசையும்.. - வ.ந.கிரிதரன் -


அண்மையில் கவிஞர் விக்ரமாதித்யனின் 'எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு' என்னும் நூலை வாசித்தேன். கவிஞர் தன் பால்ய காலம் பற்றி, தனது பிறந்த மண்ணான திருநெல்வேலி பற்றி, தன் கவிதைகள் பற்றி, கவிதைகள் பற்றி, தானறிந்த சக இலக்கிய ஆளுமைகள் பற்றி, திரைப்படப்பாடல்களை எழுதிய கவிஞர்களைப்பற்றி, அவர்களின் பாடல் வரிகள் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, திமுக அரசியல்வாதிகள் பற்றி, அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, சக கவிஞர்களின் கவிதைகளைப்பற்றி, .. இவ்விதம் பல்வேறு விடயங்களைச் சுவையான, நெஞ்சையள்ளும் நடையில் கூறியிருக்கின்றார். பொதுவாகவே எனக்கு கலை, இலக்கிய ஆளுமைகளின் நனவிடை தோய்தல்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுண்டு. கவிஞர் விக்ரமாதித்யனின் இந்நூலையும் அவ்விதமே வாசித்தேன்.

அவர் நேர்காணலொன்றில் சங்கக்கவிதைகள் பற்றிக் கூறியிருந்த பின்வரும் கூற்று என் கவனத்தைக் கவர்ந்தது: "சங்கக் கவிதைகள் இசை கருதிச் செய்யப்பட்டவையல்ல". இன்னுமோரிடத்தில் " தமிழில் திருத்தக்கதேவர், கம்பனிலிருந்துதான் ஓசை, சந்தம் கூடி வருகிறது" என்கின்றார்.

கவிஞரின் இக்கூற்றுகளை வாசித்துக்கொண்டிருந்த போது எனக்கு தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் முனைவர் கெளசல்யா சுப்பிரமணியனின் "இசைத்தமிழ்ச் சிந்தனைகள்" நூலின் ஞாபகம் வந்தது. அதிலவர் சங்க காலத்திலிருந்து தமிழ் இசைப் பாடல்களின் வரலாறு தொடங்குவதாகக் கூறுவதுடன் அதற்கான ஆதாரங்களையும் ஆய்வுரீதியாக முன் வைத்திருப்பது நினைவுக்கு வந்தது. நூலிலுள்ள 'கலிப்பாவும் தமிழரின் இசை மரபும்' என்னும் கட்டுரையில் சங்கத் தமிழ்ப்பாவினங்களில் ஒன்றான கலிப்பா எவ்விதம் பிற்காலத்தில் உருவான கீர்த்தனைகளின் உருவாக்கத்துக்கு முன்னொடியாக விளங்கியது என்றெல்லாம் கூறியிருப்பது நினைவுக்கு வந்தது. அதில் அவர் கீர்த்தனைகளில் வரும் பல்லவி , அநுபல்லவி மற்றும் சரணம் என்பன 'கலிப்பாவின் தரவு, தாழிசை. சுரிதகம் என்ற கட்டமைப்புடன் ஓரளவு ஒத்த காட்சியைத் தருவதை உணர முடியும்" என்று கூறுவார் (பக்கம் 61). மேலும் அவர் "கீர்த்தனையிலே சரணங்களே அவற்றின் உயிர்ப்பான உள்ளடக்கப் பகுதியாகத் திகழ்வன. கலிப்பாவில் தாழிசைகளும் அப்படியே. எனவே கீர்த்தனை என்னும் இசைப்பா வடிவத்துக்கு கலிப்பாவின் அமைப்பு - குறிப்பாக ஒத்தாழிசைக் கலிப்பாவின் தரவு, தாழிசை அமைப்பு - ஒரு முன்னோடி நிலை என்பதை நாம் உய்த்துணர முடியும்." (பக்கம் 61) என்றும் கூறுவார்

Monday, April 9, 2018

பால்ய காலத்து அழியாத கோலங்கள் - ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி' - வ.ந.கிரிதரன் -

என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களில் ராணிமுத்துப் பிரசுரங்களுக்கு முக்கியமானதோரிடமுண்டு. நான் ஆர்வமாக வாசிக்கத்தொடங்கியிருந்த காலகட்டத்தில்தான் ராணிமுத்து மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் அடிப்படையில் அக்காலகட்டத்தில் பிரபலமாக விளங்கிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வந்தது. அவ்வகையில் வெளியான முதலாவது நாவல் அகிலனின் 'பொன்மலர்'. ஆனால் அப்புத்தகத்தை அப்பா வாங்கவில்லை. அப்பா வாங்கத்தொடங்கியது ராணிமுத்து பிரசுரத்தின் இரண்டாவது வெளியீட்டில் இருந்துதான். இரண்டாவதாக வெளியான நாவல் அறிஞர் அண்ணாவின் 'பார்வதி பி.ஏ' இவ்விரண்டு நாவல்களும் முதலும் இரண்டும் என்று ஞாபகத்திலுள்ளது. இதன் பின் வெளியான நாவல்களில் எங்களிடம் இருந்ததாக இன்னும் என் நினைவிலுள்ளவை:

ஜெயகாந்தனின் 'காவல் தெய்வம்'.
ஜெயகாந்தனின் 'வாழ்க்கை அழைக்கிறது'.
மாயாவியின் 'வாடாமலர்'
ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'
சாண்டில்யனின் 'ஜீவபூமி'
சாண்டில்யனின் 'உதயபானு' & இளையராணி
நாரண துரைக்கண்ணனின் 'உயிரோவியம்'
அகிலனின் 'சிநேகிதி'
பானுமதி ராமகிருஷ்ணாவின் 'மாமியார் கதைகள்'
விந்தனின் 'பாலும் பாவையும்'
கலைஞர் கருணாநிதியின் 'வெள்ளிக்கிழமை'
அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா'
மு.வ.வின் 'அந்த நாள்'
சி.ஏ.பாலனின் 'தூக்குமர நிழலில்'
குரும்பூர் குப்புசாமியின் 'பார் பார் பட்டணம் பார்'
மாயாவியின் 'வாடாமலர்'
லக்சுமியின் 'காஞ்சனையின் கனவு' & 'பெண்மனம்'

இவை இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன. ஜெயராஜின் அட்டைப்படத்துடன் , நூலின் உள்ளேயும் நாலைந்து ஓவியங்கள் அவர் வரைந்திருப்பார்.

அக்காலகட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பிரசுரங்களாக ராணி முத்துப் பிரசுரங்கள் விளங்கின. என்னிடமிருந்தவற்றைப் பத்திரமாக ஏனைய நூல்களுடன் வைத்திருந்தேன். அவை அனைத்தையுமே நாட்டுச் சூழலில் தொலைத்து விட்டேன்.

Saturday, April 7, 2018

கவிதை: பருத்தித்துறைக் கடற்கரையில்... சிங்களக் கவிதையின் ஆங்கில வடிவம்: கத்யானா அமரசிங்ஹ | தமிழில் : வ.ந.கிரிதரன் -



சிங்கள மொழியில் தான்  எழுதிய இக்கவிதையினை  ஆங்கில வடிவில் அனுப்பியிருந்தார் கத்யானா அமரசிங்க. அதனைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளேன். அண்மையில் அவரது வடக்குக்கான பயணத்தில் பருத்தித்துறைக்கடற்கரையில் அவரடைந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை. தமிழ் மக்களின் உணர்வுகளை, பிரச்சினைகளை நன்கு உணர்ந்துகொண்ட சிங்கள எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்க. சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், கொழும்புப் பல்கலைக்கழக
விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe) தற்போது லக்பிம பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.  -



நான் அங்கிருந்தேன் கண்ணீர்த்துளியின் மறு முனையில்
துயரக் காற்றினால் தாக்கப்பட்ட மறுமுனை
ஆழமான நீலக் கடலும் கூட
நெஞ்சை வலிக்கும் கதையினை அமைதியாகக்
கூறும்.
வீசிக்கொண்டிருந்த புயல்கள்
இளம் பறவைகளை அவற்றின்
அன்னையரிடமிருந்து பிரித்திருந்த
நேரமொன்றிருந்தது.

ஓ! நான் இப்பொழுது தனிமையை உணர்கின்றேன்.
இந்த வெறுமையான வானத்தின் கீழ்
நான் கனத்த இதயத்துடன் காத்திருக்கின்றேன்.
தூரத்துக் கனவினில்
தமது தாய் மண்ணிலிருந்து பறந்து சென்ற
எனது வடக்குப் பறவை நண்பர்களின்
சிறகடிப்பினை நான் கேட்கின்றேன்.
அவர்கள் திரும்பி வருவதைக் காண்கின்றேன்
இந்த இனிய ஆனால் இன்னும் தூரத்துக் கனவினில்

புகைப்படம் உதவி: கத்யானா அமரசிங்க

Kathyana Amarasinghe: kathaish@gmail.com

ngiri2704@rogers.com
[- இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஞானம் கலை, இலக்கியச் சஞ்சிகையின் ஏப்ரில் 20018 இதழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அறுபதாண்டு இலக்கியப்பங்களிப்பினைச் சிறப்பிக்கும் மலராக வெளிவந்திருக்கின்றது. அதில் வெளியாகியுள்ள எனது கட்டுரையான 'அ.முத்துலிங்கத்தின் இலக்கியப்பங்களிப்பு பற்றிய குறிப்புகள் சில' என்னுமிக் கட்டுரை ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. - ]

இலங்கைத்தமிழ் இலக்கியத்தில், புலம் பெயர்தமிழ் இலக்கியத்தில் காத்திரமாகத் தடம் பதித்தவை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துகள். இவரது எழுத்துலகக் கால கட்டத்தை  புலம்பெயர்வதற்கு முன், புலம் பெயர்ந்ததற்கு பின் என இருவேறு காலகட்டங்களில் வைத்து ஆராய்வது சரியான நிலைப்பாடாகவிருக்கும். இவர் பரவலாக , உலகளாவியரீதியில், குறிப்பாகத் தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட காலகட்டம் இவரது புலம்பெயர் எழுத்துக் காலகட்டம். அதற்காக இவரது ஆரம்ப எழுத்துலகக்காலகட்டம் ஒன்றும் குறைவானதல்ல. தனது ஆரம்பக் காலகட்ட எழுத்துகள் வாயிலாகவும் இவர் கலை, இலக்கியத்திறனாய்வாளர்களின் கவனத்தைப்பெற்று, அக்காலகட்டத்துப் படைப்புகள் மூலம் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் கால் பதித்தவர்தான். அந்த வகையிலும் இவர் புறக்கணிக்கப்பட முடியாதவரே. இச்சிறுகட்டுரையில் இயலுமானவரையில் இவரது இலக்கியப்பங்களிப்பினைச் சுருக்கமாக நோக்குவதற்கு முயற்சி செய்கின்றேன். இதன் மூலம் என் பார்வையில் இவரது இலக்கியப்பங்களிப்பினை இவரது படைப்புகளை நான் அறிந்த வரையில், வாசித்த வரையில் நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இவரது படைப்புகளை இவர் நாட்டிலிருந்து புலம்பெயர்வதற்கு முற்பட்ட  காலகட்டத்தை வைத்து நோக்கினால் ஒன்றினை அவதானிக்கலாம். இக்காலகட்டத்தில் அ.முத்துலிங்கம் அவர்களின் இலக்கியப்பங்களிப்பு சிறுகதை வடிவிலேயே அதிகமாகவிருந்திருக்கின்றது. இவரது புகழ்பெற்ற முதற் கதையான 'அக்கா' தினகரன் பத்திரிகை நடாத்திய சிறுகதைப்போட்டியில் முதற் பரிசினைப்பெற்றிருக்கின்றது. 1964இல் வெளியான இவரது முதலாவது சிறுகதைத்தொகுதியிலும் இடம் பெற்றுள்ளதுடன் அதன் பெயராகவும் விளங்குகின்றது. இவரது எழுத்தார்வத்திற்கு ஆரம்பத்தில் ஊக்குசக்தியாக விளங்கியவர் பேராசிரியர் க.கைலாசபதி என்பதை 'அக்கா' நூலுக்கான முன்னுரையில் இவர் எழுதிய முன்னுரையிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. பேராசிரியர் கைலாசபதி அவர்களும், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுமே இவரது ஆரம்ப எழுத்துலகச் செயற்பாடுகளை ஊக்குவிப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதை அ.மு.அவர்கள் அம்முன்னுரையில் பதிவு செய்திருக்கின்றார். இவர் எழுத்துலகில் புகுந்த காலகட்டத்தில் இலங்கைத்தமிழ் இலக்கியச் சூழலில் பல் வகையான இலக்கியப்போக்குகள் நிலவி வந்தன. கலை மக்களுக்காக என்னும் கோட்பாட்டுடன் இயங்கிய முற்போக்கு இலக்கியச் சூழல், பாலியல் சார்ந்த எழுத்தை மையமாக வைத்து எஸ்.பொ. இயங்கிக்கொண்டிருந்த 'நற்போக்குச் சூழல்' (முற்போக்கு எழுத்தாளர்களின் கூடாரத்துடன் எழுந்த பிணக்குகள் காரணமாகத் தனித்தியங்கிய எழுத்தாளர்கள் தம்மை அழைக்கப் பாவித்த பதமாகவே இதனை நான் கருதுகின்றேன்), கலை, கலைக்காகவே என்னும் நோக்கில் இயங்கிய எழுத்துக்குக் கலை என்னும் ரீதியில் முக்கியத்துவம் கொடுத்த எழுத்துலகச் சூழல், இவற்றுக்கு இடைப்பட்ட , அனைத்தையும் உள்ளடக்கிய , பிரபஞ்ச யதார்த்தவாதம் என்னும் நோக்கில் இயங்கிய மு.தளையசிங்கம் அவர்களின் சிந்தனைகளை மையமாகக்கொண்ட எழுத்துலகச் சூழல் எனப்பல்வேறு சிந்தனைகளைக்கொண்டதாக விளங்கிய இலங்கைத்தமிழ் இலக்கியச்சூழலுக்குள் அ.மு. அவர்கள் நுழைந்தபோது அவரது எழுத்தானது இவ்வகையான சூழல்கள் அனைத்திலிருந்தும் தனித்து, தனித்தன்மையுடன் விளங்கியதை அவதானிக்க முடிகின்றது.

Tuesday, April 3, 2018

(பதிவுகள்.காம்) நேர்காணல்: பிரபல தமிழ் -சிங்கள் மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான திரு.ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்களுடனான கலந்துரையாடல். நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரன்.

பிரபல தமிழ் -> சிங்கள் மொழிபெயர்ப்பாளரும், சிங்கள எழுத்தாளருமான திரு.ஜி.ஜி.சரத் ஆனந்த , Nadigamvila Ggs Ananda , அவர்களுடன் அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழானது மின்னஞ்சல் வாயிலாக நேர்காணலொன்றினை நடாத்தியது. மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு சரத் ஆன்ந்த அவர்கள் விரிவான பதில்களை அளித்துள்ளார். அதற்காக அவருக்கு எமது முதற்கண் நன்றி. இந்நேர்காணலில் அவர் தன்னைப்பற்றி, தான் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்துள்ள தமிழ்ப்படைப்புகள் பற்றி, மொழிபெயர்க்க எண்ணியுள்ள தமிழ்ப்படைப்புகள் பற்றி, இவ்வகையான மொழிபெயர்ப்புகள் இனங்களுக்கிடையிலான நல்லுணர்வுக்கும், புரிந்துணர்வுக்கும் ஏன் அவசியமானவை என்பது பற்றி, சமகாலச் சிங்கள கலை, இலக்கியச் செயற்பாடுகள் பற்றி, தான் ஏன் மொழிபெயர்ப்புத் துறைக்கு வந்தார் என்பது பற்றி, தற்போதுள்ள நாட்டின் அரசியற் சூழல் பற்றி, நாட்டின் எதிர்காலம் பற்றி.. இவ்விதம் பல்வேறு விடயங்களைப்பற்றியும் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார். இவ்விதமான நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகளின் தேவை தற்காலச்சூழலில் மிகவும் அவசியமென்று 'பதிவுகள்' கருதுகின்றது. அதனால் இந்நேர்காணலை வெளியிடுவதில் பெருமையுமடைகின்றது.

இணையம் மூலம், குறிப்பாக முகநூல் வாயிலாக நாம் அடைந்த பயன்கள் ஆரோக்கியமானவை என்பதற்கு இவரைப்போன்ற கலை, இலக்கியவாதிகளுடனான தொடர்புகள், கருத்துப்பரிமாறல்களே பிரதான சான்றுகள். இவரது மொழிபெயர்ப்பில் எனது சிறுகதைகளான  'உடைந்த காலும், உடைந்த மனிதனும்', மற்றும் 'நடு வழ்யில் ஒரு பயணம்' ஆகியன லக்பிமா' சிங்களப் பத்திரிகையின் வாரவெளியீட்டில் வெளியாகியுள்ளன. எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலினையும் மொழிபெயர்ப்பதில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

1. முதலில் உங்களைப்பற்றிய அறிமுகமொன்றினைத் தாருங்கள். உங்களது எழுத்துப்பணியின் ஆரம்பம், குடும்பம் போன்ற விடயங்கள்..?

நான் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தில் திஸ்ஸமஹாராம (Tissamaharama) நகரத்தில் பிறந்தேன். பிறந்த திகதி 20/06/1972. அப்பா ஒரு விவசாயி. அம்மாவுக்குத் தொழில் இல்லை. (ஒரு குடும்பப் பெண்.) இப்போது அவர்கள் உயிருடனில்லை. மறைந்து விட்டார்கள். எனக்கு எட்டு சகோதர, சகோதரிகள். நான் தான் கடைக்குட்டி. இளையவன். நெதிகம்வில (Nadigamwila) என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகின்றேன். திஸ்ஸமஹாராம – தெபரவெவ (Debarawewa) தேசீய கல்லூரியில் படித்தேன். பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிப்புற மாணவனாக இளங்கலைப் (B.A) பட்டமும், களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் (M.A) பட்டமும் பெற்றுள்ளேன். திருமணமாகிவிட்டது. மனைவியின் பெயர் ஸுமித்ரா. ஆரம்பத்தில் ‘லக்பிம’ சிங்கள பத்திரிகையின் நிருபராகப்பணியாற்றினேன். அதுவே என் முதற் தொழில்.

சிறிது காலம் திஸ்ஸமஹாராம பிரிவேனாவில் ஓர் ஆசிரியராகவும் வேலை பார்த்தேன். 2005 ஆண்டிலிருந்து) 'காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தில்' (Department of Land Title Settlement)  ஓர் அபிவிருத்தி உத்தியோகத்தராக (Development officer)  வேலை பார்த்து வருகின்றேன்.

பாடசாலைக் காலத்திலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகின்றேன். அவை பல பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. அவற்றில் சில இலக்கிய போட்டிகளில், சான்றிதழ்கள், பரிசுகள் பெற்றுள்ளன. ஆதலால் ஆர்வம் அதிகரித்தது. அப்படி தான் நான் இலக்கியத் துறைக்கு வந்தேன்.

2. தமிழ்ப்படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டுமென்ற ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? தமிழ் மொழியைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? இவ்வகையான ஆர்வம் ஏற்படுவதற்கு உங்களைத் தூண்டிய விடயங்கள் யாவை?

 நான் வாழும் பகுதியில் தமிழ் மொழி பாவனையிலில்லை . கல்விப்பொதுத்தராதர உயர்தரப் (G.C.E - A/L)  பரீட்சைக்காக விஞ்ஞான பாடங்களை படிக்கும் காலத்தில் நல்லோர் ஆசிரியரைச் சந்தித்தேன். அந்த ஆசிரியரின் பெயர் M.H.M. நவாஸ். அவர் மூலம் தமிழ் மொழியைப் படித்தேன். A/L முடித்தவுடன்  றுஹுண பல்கலைக்கழகத்தில் ‘Certificate course in Tamil language’ படித்து சான்றிதழைP பெற்றுள்ளேன். மற்றும் ‘மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்’ (Centre for policy alternatives) மூலம் நடாத்திய ‘விபாஷா மொழிபெயர்ப்பு நிகழ்ச்சி திட்டத்தி'ல்  திறமைச் சித்தி பெற்று,  'டிப்ளோமா' சான்றிதலைப் பெற்றுள்ளேன். அப்பாட நெறியைக் கற்கும்போது பிரபல உரை மொழிபெயர்ப்பாளரான எஸ்.சிவகுருநாதன் அவர்களை சந்திக்கும் சந்தர்பம் கிடைத்தது. தமிழ்ப் படைப்புகளை சிங்களத்துக்கு மொழிபெயர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி அவர்தான் எனக்கு எடுத்துரைத்தார். இந்தப் பாதைக்கு என்னைக் கொண்டு வந்தவர் அவர். அது மட்டுமல்ல. இலங்கையில் பிரபல தமிழ் எழுத்தாளர்களின் நூல்களையும் அவர் எனக்குத் தந்தார். அவற்றை வாசிக்கும்போது அந்த அனுபவங்களை எனது சிங்கள சமூகத்துக்கும் தர வேண்டும் என நினைத்தேன்.

முதலாவதாக நான் தமிழ்ச் சிறுகதைகளை மொழிபெயர்த்து சிங்கள பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலம் வெளியிட்டேன். பிறகு தான் நூல்களாக வெளியிட ஆரம்பித்தேன். என் முதலாம் நூல் தான் ‘பேத நெத்தி ஹதவத்’ (பேதமில்லா நெஞ்சங்கள்) என்ற சிறுகதைத் தொகுப்பு. அது 2003ஆம் ஆண்டில் வெளியானது. 2004ஆம் ஆண்டில் அரசகரும மொழிகள் திணைக்களம் (Department of official languages)  நடாத்திய ‘எழுத்துக்கலை மூலம் மொழி அபிவிருத்திக்கும், இன ஒற்றுமைக்கும் வழங்கும் பங்களிப்புக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூலைத் தெரிவு செய்வதற்கான போட்டியில்’ முதலாம் இடத்தை அந்த நூல் பெற்றது. அதற்கான பரிசாக 10,000 ரூபாய் பெறுமதியுள்ள ஒரு காசோலையும் கிடைத்தது. என் ஆர்வமும் அதிகரித்த்து.     அவ்வாறு தான் இத்துறைக்கு பிரவேசித்தேன்.

எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் என்பதும் சார்பானது!

எழுத்தாளர் சுவிஸ் பா.ரவி தன் முகநூற் பதிவொன்றில் 'எழுத்தாளரைக் கொண்டாட வேண்டும் என சொல்லப்படுவதை எப்படி அணுகுவது என குழப்பமாக இருக்கிறது...

பிரபலமான பதிவுகள்