Sunday, March 18, 2018

விஷ்ணுபுரம் சில குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' பற்றிப் பலர் பலவாறு கூறியுள்ளார்கள். இவர்களது குறிப்புகளெல்லாவற்றையும் பார்க்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது. இவர்களில் பலர் யானை பார்த்த குருடர்கள். நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி. ஹேமந்தன் என்னும் பாணன் விஷ்ணுபுரம் பற்றிய கதையினைக் கூறி முடித்ததும் வசந்தன் என்னும் பாணன் கூறத்தொடங்குவதுடன் ஆரம்பமாகும் நாவல் மூன்று பாகங்களாக விரிவடைந்து வசந்தன் கதையை முடித்ததும் இன்னுமொரு பாணனான கிரிஷ்மன் மீண்டுமொருமுறை விஷ்ணுபுரம் கதையினைக் கூறத்தொடங்குவதுடன் தொடர்கிறது. நாவலைப் பற்றிப் பின் அட்டையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: ' இந்நாவலில் விஷ்ணு ஒருமுறை புரண்டு படுக்கிறார். தருக்கம், தியானம்,கற்பனை என்ற மூன்று அடிப்படையான அறிதல் முறைகளில் கற்பனையின் துணை கொண்டு , பிற இரண்டின் சாத்தியங்களை பயன்படுத்தியபடி, மானுடனின் ஞானத்தேடலின் பயணத்தைச் சித்தரிக்கிறது (சித்திரிக்கிறது). கலையும், தருக்கமும், ஆன்மீகமும், மானுட உணர்வுகளுடன் கலந்து பௌராணிகமான மாய உலகமொன்றைப் படைக்கின்றன.'

ஜெயமோகனின் ஞானத் தேடலே நாவலாக உருப்பெற்றிருக்கின்றது. இந்து, பௌத்த தத்துவங்களினூடு மனித வாழ்வு, பிரபஞ்சத்தின் தோற்றம், காலம் பற்றி தர்க்கரீதியாகக் கற்பனையைப் படரவிட்டு இந்நாவலைப் படைத்திருக்கின்றார் ஜெயமோகன். தான் அறிந்ததை, உணர்ந்ததை அவ்விதமே கூறவேண்டுமென்ற ஆவல் ஜெயமோகனுக்கு அதிகமாக இருப்பதை நாவல் முழுவதிலும் காண முடிகிறது. விஷ்ணுபுரம் பற்றிய வர்ணணைகளில் நாவலாசிரியர் மிக அதிகளவில் கவனமெடுத்திருக்கின்றாரென்பதை விஷ்ணுபுரம் பற்றிய வர்ணனைகள் வெளிக்காட்டுகின்றன.ஜெயமோகனின் ஞானத்தேடலே நாவல் முழுக்கப் பல்வேறு பாத்திரங்களாக, பிங்கலன், சங்கர்ஷணன்.. என உலாவருகின்றது. நாவல் முழுக்க எண்ணமுடியாத அளவிற்குப் பாத்திரங்கள். அத்தியாயத்திற்கு அத்தியாயம் புதிய புதிய பாத்திரங்களின் வருகையுடன் நாவல் நடை போடுகிறது. வழக்கமாக அத்தியாயங்களிற்கிடையில் ஒருவித தொடர்ச்சியினை ( Linearity) எதிர்பார்த்துப் பழக்கப் பட்டு விட்ட பெரும்பாலான தமிழ் வாசகர்களுக்கு இந்தத் தொடர்ச்சியற்ற தன்மை நாவலைப் புரிதலில் சிரமத்தினை ஏற்படுத்தி விடுகின்றது. இது இந்நாவலை வாசிக்க விளைபவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுமையினையும் , பாத்திரங்களைச் சம்பவங்களைக் கிரகிக்க வேண்டிய திறமையினையும் மிக அதிகமாகவே வேண்டி நிற்கிறது. ஆனால் இந்த நாவலின் அடிப்படையே ஒரு மனித உயிரின் ஞானத் தேடல் என்ற அளவில், நாவல் பாத்திரங்களினூடு, நகர அமைப்பினூடு, காட்சிகளினூடு, கூறி விவாதிக்கும் இருத்தல் பற்றிய விசாரத்தைத் தொடர்ந்து கொண்டு போவதன் மூலம் இந்நாவல் பிரதியின் வாசிப்பை இலகுவாக்கலாம். பலருக்கு இந்நாவல் புரிபடுவதிலுள்ள குழப்பம் காரணமாகத் தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கருத்துகளை வைக்கின்றார்கள். (அண்மையில் ஜெயமோகனின் நூல் விழாவில் பேசிய ஜெயகாந்தன் தன்னாலேயே நாவலின் உள்ளே புக முடியவில்லை என்று குறிப்பிட்டதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது). நாவல் பற்றி ஈழத்தின் முற்போக்கு முகாமைச் சேர்ந்த அறிஞர் அ.ந.கந்தசாமி தனது 'மனக்கண்' என்ற நாவலின் முடிவுரையில் 'என்னைப் பொறுத்தவரையில் பாரகாவியமும் நாவலும் ஒன்றென்றே நான் கருதுகிறேன். ஒன்று வசனம், மற்றது கவிதை என்ற வித்தியாசத்தைத்தவிர பாரகாவியம் எப்பொழுதுமே அவசரமாகக் கதையைச் சொல்லத் தொடங்குவதில்லை. நாட்டு வர்ணனை, நகர வர்ணனை, பருவ வர்ணனை என்று மெதுவாகவே அது கிளம்பும். காரின் வேகம் அதற்கில்லை. தேரின் வேகமே அதற்குரியது. வழியிலே ஒரு யுத்தக் காட்சி வந்ததென்று வைப்போம். உதாரணத்துக்கு வியாச பாரதத்தை எடுத்தால் பதினேழு நாள் யுத்தம் நடந்தது. பாண்டவர் வென்றனர், கௌரவர் தோற்றனர் என்று மிகச்சுருக்கமாகவே அதனைக் கூறியிருக்கலாமல்லவா? ஆனால் அவ்வாறு எழுதினால் கதா நிகழ்ச்சியை நாம் புரிந்து கொண்டாலும் யுத்தத்தின் அவலத்தையும் வெற்றி தோல்வியையும் நேரில் பார்த்தது போன்ற உணைச்சி நமக்கு ஏற்படாது. அந்த உணர்ச்சி நமக்கு ஏற்படும்வரை பொறுமையாக விவரங்களை ஒன்றின் பின்னொன்றாகச் சலிப்பின்றி எடுத்துக் கூறி நிற்கும் ஆற்றல் பெற்றவனே பாரகாவியஞ் செய்யும் தகுதியுடையவன். நல்ல நாவலாசிரியனுக்கும் இப்பண்பு இருக்கவேண்டும்.' என்று கூறியுள்ளதுதான் நினைவுக்கு வருகின்றது.ஜெயமோகனுக்கு இப்பண்பு நிறையவேயுண்டு. விஷ்ணுபுரம் பற்றிய அவரது வர்ணனைகள் வாசிப்பவரிடத்தில் அதன் பிரமாண்டம் பற்றியதொரு பிரமிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. இருத்தல் பற்றிய மானுடத்தின் ஞானத் தேடல் என்ற சிறியதொரு கருவுக்கு விஷ்ணுபுரம் என்றொரு பிரமாண்டமான நகரினைப் பல்வேறு பாத்திரங்களினூடு படைத்து, நமது காவியங்களில் கையாளப் பட்டதொரு உத்தியினைப் ( பாணன் கதை சொல்லல்) பாவித்துக் கதை சொல்லியிருக்கின்றார் ஜெயமோகன்.ஆனால் மெய்ஞானம் மட்டுமின்றி நவீன விஞ்ஞானத்தினூடும் இருப்பு பற்றிய தேடலில் மூழ்கிக் கிடப்பவர்களை இந்த நாவல் கவருமா என்பது சந்தேகத்திற்கிடமானதே.எல்லாக் கதாப் பாத்திரங்களும் கதைகளாக மாறிவிடுகின்றதொரு உண்மையில் முழு நாவலுமேயொரு கதைதான். புராணக் கதை.திரிசாகரம் திரிவிக்கிரமர் இயற்றிய மகாபத்மபுராணம். பாணர்கள் கதைசொல்வதிலுள்ள ஒழுங்கு மாறியிருப்பதாகவும் கருத இடமுண்டு. பொதுவாகக் கதைகூறும்பொழுது சில சமயங்களில் ஒழுங்குகள் மாறிக் கதை சொல்வதுமுண்டு. ஆனால் விஷ்ணுபுரத்தில் வரும் விளக்கங்களும் இந்நாவலினூடு விரவிக் கிடக்கும் இருப்பு பற்றிய தேடலும் விரைவாக இந்நாவல் கூறும் பொருள் பற்றி நம்மை வந்தடைவதைத் தடுத்து விடுகின்றன. வாசிப்பவர்களைச் சிந்திக்க, தர்க்க ரீதியாகச்சிந்திக்கப் பெரிதும் தூண்டும் படியாக நாவலின் சம்பவங்களை நடத்திச் செல்லும் தொடர்ச்சி (Plot) இருந்து விடுவது இதன் காரணம். அதே சமயம் எல்லோராலும் இந்நாவலைப் படிக்கவும் முடியாது. ஏற்கனவே ஓரளவு பிரபஞ்சத் தேடல் மிக்க அல்லது தீவிர வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே இந்நாவலின் வாசகர்களாகவும் வரமுடியும்.

மானுட விடுதலைப்போராளியான தோழர் தமிழரசன் பற்றிய தோழர் பாலனின் எண்ணங்களே 'ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' . - வ்.ந.கிரிதரன் -

- * தோழர் பாலன் எழுதிய 'ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' என்னும் மின்னூல் பற்றிய எண்ணத்துளிகள் சில.

தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியை உருவாக்கி, அக்கட்சியின் படைப்பிரிவாகத் தமிழ்நாடு விடுதலைப்படையினை நிறுவி , தமிழ்நாட்டில் மாவோயிச, லெனிசிச அடிப்படையிலான பொதுவுடமை அமைப்பொன்று அமைக்கப்பட வேண்டுமென்பது தோழர் தமிழரசனின் எண்ணம், செயற்பாடு எல்லாம். 1987இல் தோழர் தமிழரசன் பொன்பரப்பிலிருந்த வங்கியொன்றினை இயக்கத்தேவைகளுக்காகக் கொள்ளையிட முயன்றபோது பொது மக்களால் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவர் அவ்விதம் கொல்லப்பட்டது இந்திய மத்திய அரசின் திட்டமிட்ட சதியால் என்று உறுதியாக எடுத்துரைக்கின்றது தோழர் பாலனின் தோழர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' என்னும் இந்த நூல்.

'தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை' என்னும் இயக்கம் புலிகள் இயக்கத்தில் ஆரம்பத்தில் ஏற்பட்ட பிளவின்போது உருவான புதியபாதைப்பிரிவில் இயங்கிப்பின்னர் அதிலிருந்து பிரிந்து தோழர் பாலன், தோழர் நெப்போலியன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட மாவோயிச, லெனிசிசத்தைத் தம் கோட்பாடாகக் கொண்ட, மக்களின் சமூக அரசிய பிரச்சினைகளுக்கு ஒருபோதுமே முதலாளித்துவ பாராளுமன்ற அரசியல் சாதகமாக இருக்கப்போவதில்லை என்பதைத் திடமாக நம்பும் புரட்சிகர அமைப்பாகும். அந்த அமைப்பினைச்சேர்ந்த தோழர் பாலனின் பார்வையில் தோழர் தமிழரசனை வைத்து எடை போடுவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். தோழர் தமிழரசன் பயங்கரவாதியா அல்லது புரட்சிவாதியா என்பதை தோழர் தமிழரசனின் வாழ்க்கையினூடு, அவரது சமூக, அரசியற் செயற்பாடுகளினூடு, அவர் நம்பிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் தத்துவங்களினூடு , உணர்ச்சிவசப்படாமல், நிதானமாகத் தர்க்கரீதியாக ஆராய்ந்து தோழர் தமிழரசன் பயங்கரவாதி அல்லர். பொதுவுடமையினை நிறுவுவதாகச் செயற்பட்ட புரட்சிவாதி என்று நிறுவுவதுதான் நூலின் பிரதான நோக்கம். அந்த நோக்கத்தில் இந்நூல் வெற்றியடைந்துள்ளதா என்பதைச் சிறிது நோக்குவோம்.

கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' பற்றிய குறிப்புகள் சில! - வ.ந.கிரிதரன் -


2012 ஆம் ஆண்டு இலங்கை சென்ற நண்பர் ஒருவரிடம் என்னிடம் கொடுத்து விடும்படி திரு.கே.எஸ்.சிவகுமாரனால் கொடுத்து விடப்பட்டிருந்த 'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' நூல் அண்மையில்தான் என் கைகளை வந்தடைந்தது. :-) மறக்காமல் நினைவில் வைத்திருந்து நூலை என்னிடம் சேர்ப்பித்த  நண்பருக்கு நன்றி. :-) இது போல் இன்னுமொருவரிடமும் திரு.கே.எஸ்.சிவகுமாரன் நூல்கள் சிலவற்றைக் கொடுத்திருந்த விபரத்தை நண்பர் சில வருடங்களுக்கு முன்னர் அறியத்தந்திருந்தார். ஆனால் நூல்கள் இன்னும் என் கைகளுக்கு வந்து சேரவில்லை. :-)
இன்னுமொருவரிடம் கொடுத்திருந்த நூல் பொதி பெற்றவர் இன்னுமொருவரிடம்  கொடுத்து சிறிது காலம் தாழ்த்தியென்றாலும் வந்து சேர்ந்து விட்டது.

'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' நூல் கைக்கடக்கமானது. கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பதற்கொப்ப மிகுந்த பயன் மிக்கது. குறிப்பாக ஆவணச்சிறப்பு மிக்கது. இந்நூலில் கே.எஸ்.எஸ் அவர்கள் எழுத்தாளர்களைபற்றி, வெளிவந்த நூல்கள் பற்றி, தன்னைப் பாதித்த அண்மைக்கால நாடகங்கள், சிங்களத்திரைப்படம் பற்றி, என்று பல விடயங்களைப்பற்றி , எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

அமரர் சோமகாந்தன் தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய 'காந்தன் கண்ணோட்டம்' என்னும் பத்தி எழுத்துகள் பற்றியொரு கட்டுரை தொகுப்பிலுள்ளது. இச்சிறு கட்டுரை சோமகாந்தனின் பத்தி எழுத்துகளை விபரிப்பதுடன், பத்தி எழுத்துகள் பற்றிய கே.எஸ்.எஸ் அவர்களின் கருத்துகளையும் உள்ளடக்கியிருப்பது இதன் சிறப்பு.

கலாப்ரியாவின் 'உருள் பெருந்தேர்' ஓடிய என் மனப்பாதையில் அது பதித்த தடங்கள்.... வ.ந.கிரிதரன் -


  எழுத்தாளர்களின் பால்ய காலத்து அனுபவங்களை, வாசிப்பு அனுபவங்களை, மொத்தத்தில் அவர்கள்தம் வாழ்க்கை அனுபவங்களை வாசிப்பதில் எனக்கு எப்பொழுதுமே ஆர்வமுண்டு. முக்கிய காரணம் எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்கள் வெறும் அபுனவுகளாக  மட்டும் இருந்து விடாமல் இலக்கியச்சிறப்பு மிக்கதாக, கலைத்துவம் மிக்கதாகவும் இருக்கும். ஒளிவு, மறைவு இல்லாமல் அவர்கள் எழுத்தில் வெளிப்படும் நேர்மை நெஞ்சினைத்தொடும்.

எழுத்தாளர்களின் அபுனைவுகளில் மட்டுமல்ல அவர்கள்தம் புனைவுகள் கூட சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாக அப்புனைவுகள் இருந்து விடுவதுதான். புகழ் பெற்ற உலகப்பெரும் எழுத்தாளர்களின் சிறப்பான படைப்புகள் அவர்கள் சிந்தனைகளின், வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாகவே அமைந்திருப்பதை அவர்களது படைப்புகளை வாசிக்கும்போது அறிய முடிகின்றது.

மேலும் அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் தெரிவிக்கும் புதுத்தகவல்கள் ஒரு காலகட்ட வரலாற்றுச்சின்னங்களாக விளங்கும். காலமாற்றத்தில் காணாமல் போனவற்றையெல்லாம் அவர்கள்தம் எழுத்துகளில் வாசிக்கும்போது வாசிப்பின்பத்துடன் எம்மையும் எம் கடந்த காலத்துக்கே அழைத்துச்சென்று விடுகின்றன.

அண்மையில் என் நெஞ்சினைத்தொட்டதொரு எழுத்தாளரின் வாழ்க்கை அனுபவங்களினை வெளிப்படுத்தும் புத்தகமொன்றாக எழுத்தாளர் கலாப்ரியாவின் வாழ்வு அனுபவங்களின் தொகுப்பான '  ' என்னும் நூலினைக் குறிப்பிடலாம். இன்றுதான் டொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் அதனை இரவல் பெற்றேன். வாசித்துக் கொண்டிருக்கின்றேன். இதுவரை வாசித்த நூலில் வரும் அவர் வாழ்வில் வந்து போன மனிதர்கள் பற்றிய அனுபவங்கள் நெஞ்சினைத்தொட்டன என்று மட்டும் கூறிவிடமுடியாது. வாசித்த பின்னரும் நெஞ்சினை வாட்டும் வகையில் கலாப்ரியாவின் அனுபவங்கள் நெஞ்சினை உலுக்கு விட்டன என்றே கூற வேண்டும். உதாரணத்துக்கு அவர் வாழ்வில் வந்து போன குடும்பமொன்று பற்றிய விபரிப்பினைக் கூறலாம்.

'நிலக்கிளி' நாவல் பற்றிய சிந்தனைத்துளிகள்..... வ.ந.கிரிதரன் -

ஈழத்துத்தமிழ் நாவல்களில் அனைத்துக்குழுக்களாலும் தவிர்க்க முடியாததொரு படைப்பாகக்கருதக்கூடிய படைப்பு அ.பாலமனோரகனின் 'நிலக்கிளி'. அந்த ஒரு படைப்பின் மூலம் ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் தனக்கென்றோரிடத்தைப்பிடித்துக்கொண்டவர் அவர். வன்னி மண்ணின் மணம் கமழும் நல்லதொரு நாவல். நிலக்கிளி நல்லதொரு படிமம். நிலத்தில் பொந்துகள் அமைத்து கூடுகட்டி வாழும் அழகிய பறவைகள் நிலக்கிளிகள். இவை தாம் வசிக்கும் வளைகளை விட்டு அதிக உயரம் பறப்பதில்லை. இவ்விதம் நிலக்கிளிகளைப்பற்றிக்குறிப்பிடும் ஆசிரியர் பதஞ்சலியையும் அவ்விதமானதொரு நிலக்கிளியாக நாவலில் உருவகித்திருக்கின்றார். இந்த நாவல் என்னைக்கவர்ந்ததற்கு முக்கிய காரணங்கள்: வன்னி மண் வாசனை தவழும் எழுத்து மற்றும்பாத்திரப்படைப்பு (நாவலின் பாத்திரங்கள் அனைத்துமே உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றன).

இந்த நிலக்கிளிகளைப்பற்றி நான் இந்நாவலைப்படிப்பதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. எனது பால்ய காலம் வன்னியின் ஒரு பகுதியாக வவுனியாவில் கழிந்திருந்தாலும் அங்கு நான் வாழ்ந்திருந்த காலத்தில் இவ்விதமானதொரு பறவையைப்பற்றிக்கேட்டதேயில்லை. நிலக்கிளி என்பது இன்னுமொரு பறவைக்கு பால மனோகரன் வைத்த பெயரா அல்லது உண்மையிலேயே அப்பெயரில் அழைக்கப்படுமொரு பறவை உள்ளதா? ஏனெனில் இன்று வரை எனக்கு 'நிலக்கிளி' என்னும் பறவை பற்றி 'நிலக்கிளி' நாவலில் வருவதை விட மேலதிகமான தகவல்களெதுவும் கிடைக்கவில்லை. 'நிலக்கிளி' பற்றி வன்னி நண்பர்கள் யாராவது மேலதிகத்தகவல்களிருப்பின் பகிர்ந்து கொள்ளவும்.

இந்த நாவலின் ஆரம்பம் முரலிப்பழம் பற்றிய வர்ணனையுடன் 'கார்த்திகை மாதத்தின் கடைசி நாட்கள்! அடிக்கடி பெய்த பெரு மழையில் குளித்த தண்ணிமுறிப்புக் காடுகள் பளிச்சென்றிருந்தன. ஈரலிப்பைச் சுமந்துவந்த காலையிளங் காற்றில் முரலிப் பழங்களின் இனிய மணம் தவழ்ந்து வந்தது' என்று ஆரம்பிக்கின்றது. நல்லதோர் ஆரம்பம். அந்த ஆரம்பமே நாவல் இயற்கை எழில் ததும்பும் வன்னி மண்ணின் மணம் கமழும் நாவலென்பதை எடுத்துக்காட்டி விடுகிறது. தொடர்ந்து வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

நா.பா.வின் 'நித்திலவல்லி' தந்த நினைவுகள்... வ.ந.கிரிதரன் -


கடந்த சில வருடங்களில் கல்கி, நா.பார்த்தசாரதி போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழக அரசினால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதால் அவை தமிழகத்தின் பல பதிப்பகங்களுக்கும் அவர்களது வியாபாரத்துக்கு உதவி வருகின்றன. அண்மையில் டொராண்டோ நூலகத்தில் நா.பார்த்தசாரதியின் 'நித்திலவல்லி' 'கபாடபுரம்' போன்ற நாவல்களின் கவிதா பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்த புதிய பதிப்புகளைப் பார்த்தேன். அழகாக அச்சிட்டு, வெளியிட்டிருக்கின்றார்கள். இவற்றில் 'நித்திலவல்லி'  நாவலை, ஓவியர் கோபுலுவின் அழகான ஓவியங்களுடன் எனது மாணவப் பருவத்தில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது வாசித்திருக்கின்றேன். வெகுசன படைப்புகளைத் தந்த எழுத்தாளர்களில் எனக்கு நா.பார்த்தசாரதியும் பிடித்த எழுத்தாளர்களிலொருவர். அவரது சமூக மற்றும் சரித்திர நாவல்களான குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம், நித்திலவல்லி போன்ற நூல்களை நான் அன்று விரும்பி வாசித்திருக்கின்றேன். நா.பா.வின் எழுத்து வாசிப்பதற்கு இனிமையானது. அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர் என்பதால் நெஞ்சைனையள்ளும் இனிய தமிழில் அவரது படைப்புகள் விளங்கும். அந்தத்தமிழுக்காகவே வாசிக்கலாம். உதாரணமாக 'நித்திலவல்லி' பின்வருமாறு தொடங்குகின்றது:

".. வாதவூர் எல்லையைக் கடக்கும்போதே கதிரவன் மலைவாயில் விழுந்தாயிற்று.  மருத நிலத்தின் அழகுகள் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தன. சாலையின் இருபுறமும் பசுமையான  நெல் வயல்களும், தாமரைப் பொய்கைகளும்,  சோலைகளும், நந்தவனங்களும்,  மூங்கில்கள் சிலிர்த்தெழுந்து  வளர்ந்த மேடுகளுமாக  நிறைந்திருந்தன.  கூடடையும் பறவைகளின்  பல்வேறு  விதமான ஒலிகளும், மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று  காற்றில் உராயும் ஓசையும், செம்மண் இட்டு மெழுகினாற் போன்ற  மேற்கு வானமும் அந்த இளம் வழிப்போக்கனுக்கு உள்ளக் கிளர்ச்சி அளித்தன."

புஷ்பராணியின் 'அகாலம்: ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்' - வ.ந.கிரிதரன் -

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அதில் முன்னணியிலிருந்த பெண்களில் மயிலிட்டி  புஷ்பராணி முக்கியமானவர். பின்னர் பல்வேறு அமைப்புகள் உருவாகக் காரணமாகவிருந்த ஆரம்பகாலத் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் அமைப்பான தமிழ் மகளிர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை அமைப்பிலும் (TLO) தீவிரமாக இயங்கியவர். புலோலி வங்கிக் கொள்ளையில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு காவற்துறையினரின் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர். 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்னும் நூலை எழுதிய புஷ்பராஜாவின் சகோதரி. இவரது 'அகாலம் (ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்)' என்னும் நூலை அண்மையில் வாசித்தேன். 'கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வெளிவந்த நூல். 

இந்நூலுக்குப் பல முக்கியத்துவங்களுள்ளன. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் பெண் போராளிகளில் முன்னோடியான புஷ்பராணியின் அனுபவப் பதிவுகளிவை. இந்த நூல் ஏனைய இதுபோன்ற அண்மைக்காலப் பதிவுகளிலிருந்து இன்னுமொருவகையில் வேறுபடுகின்றது. ஏனைய நூல்களெல்லாம் ஆவணப்பதிவுகளென்ற வகையில் முக்கியத்துவம் பெற்றால், 'அகாலம்' ஆவணப்பதிவாக இருக்கும் அதே சமயம் இலக்கியத்தரமிக்க பிரதியாகவும் அமைந்திருப்பது இதன் சிறப்பு. இதற்கு புஷ்பராணி ஓர் எழுத்தாளராகவுமிருப்பது காரணம். தனது போராட்ட அனுபவங்களை விபரிக்கையில் அக்காலத்து மெல்லிய உணர்வுகளையெல்லாம், தன் இளமைக்காலத்து வாசிப்பு அனுபவங்களையெல்லாம் விபரித்துச் செல்கின்றார். அடுத்த முக்கியமான அம்சம் தனது அனுபவங்களை வெளிப்படையாக, குறைநிறைகளுடன் விபரிக்கின்றார். சிவகுமாரின் தாயாரான அன்னலட்சுமி அம்மையாரின் சிறப்புகளை விபரிக்கும் அதே சமயம் சிவகுமாரின் அந்திரட்டியில் அவ்வூர்த் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாக உணவு வழங்குவதையும் அதுபற்றிய அன்னலட்சுமி அம்மையாரின் மன உணர்வுகளையும் கூடவே விபரிக்கின்றார். அது போல் தமிழ் மகளிர் அமைப்பின் ஆரம்பகாலப் பெண் போராளிகளிலொருவரான அங்கயற்கண்ணி மறைந்து மறைந்து தன்னை வந்து சந்திப்பதையும் விபரிக்கின்றார். இவ்விதமாகப் பலருடனான அனுபவங்களை விபரிக்கையில் அவர்களின் குறைநிறைகளை விபரிக்கின்றார். அவர்கள்மேல் கோபம் போன்ற உணர்வுகளின்றி விபரிக்கின்றார். தமிழ், சிங்களப் பொலிசாரின் வன்முறைகளை விபரிக்கும் அதே சமயம் அவர்களது நல்ல அம்சங்களையும் குறிப்பிடுகின்றார். இவ்விதமான விபரிப்பால் இவர் கூறும் நபர்களைப் பற்றிய ஓரளவுக்கு முழுமையான பிம்பங்கள் கிடைக்கின்றன. பெண் போராளிகளாகக் கைது செய்யப்பட்ட இவரும், கல்யாணி போன்றவர்களும் விசாரணைகளில் அடைந்து சித்திரவதைகள் துயரகரமானவை. அவற்றையெல்லாம் தாங்கித் தப்பிபிழைத்த இவர்களது துணிவு மிக்க ஆளுமை வியப்பூட்டுவது.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...