['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 
தமிழினி ஜெயக்குமாரனின் நினைவு தினம் அக்டோபர் 18.  அதனையொட்டி முகநூலில் முன்பு எழுதிய பதிவொன்றினையும், அதற்கு எழுதப்பட்ட எதிர்வினைகள் சிலவற்றையும் அவர் நினைவாக இங்கு பதிவு செய்கின்றேன். 
பெண் போராளியான தமிழினியை யாருமே, அவருடன் இணைந்து போராடியவர்கள் உட்பட ,  அவர் மதிப்பு வைத்திருந்த எழுத்தாளர்கள் உட்பட , எவருமே  நினைவு கூர்வதில்லை.   எழுத்தாளர் ஒருவர்  மட்டும் புகழ்பெற்ற தமிழகச் சஞ்சிகையொன்றில்  அவரை மிகவும் கீழ்த்தரமாகச் சித்திரித்து புனைகதை எழுதியிருந்தார்.   இது துரதிருஷ்ட்டமானது.
 
ஆனால் தமிழினி அவரது எழுத்துகளூடு நினைவு கூரப்படுவார். அவரது எழுத்துகள் நிலையானவை. அவரது எழுத்துகள் அவருடன் போராடி மறைந்த வீராங்கனைகளை நினைவு கூர்பவை. அவர் ஈடுபட்ட போராட்ட வரலாற்றை நினைவு கூர்பவை.  காலத்தின் கட்டாயமான சுயவிமர்சனத்தைச் செய்பவை அவரது எழுத்துகள். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கவை. சுயவிமர்சனமில்லாமல் மானுட இருப்பு ஒருபோதுமே முன்னேற்றம் அடைவதில்லை. வரலாற்றுப் பாதையில் கடந்த காலம் பற்றிய சுய விமர்சனங்களே மானுடரை அடுத்த நிலைக்கு உயர்த்திச் செல்பவை. அவ்வகையில் வரலாற்றுப்பங்களிப்பைச் செய்பவை. வரலாற்று முக்கியத்துவம் மிக்கவை.
இப்பதிவு நானறிந்த எழுத்தாளரும், சமூக,அரசியற்  செயற்பாட்டாளருமான தமிழினியை நினைவு கூர்பவை. 
தமிழினிக்கும் எனக்குமிடையிலான தொடர்பு அரசியல்ரீதியிலானதல்ல. சக எழுத்தாளர்களுக்கிடையிலான தொடர்பு, இணைய இதழ் ஆசிரியருக்கும், எழுத்தாளருக்குமிடையிலான தொடர்பு. உண்மையில் அவருடன் தொடர்பு ஏற்பட்டதற்குக் காரணம் இணையம் மற்றும் முகநூலே. அவரது கணவர் ஜெயக்குமாரன் ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழுக்கு அறிமுகமானவர். அவரது ஆக்கங்கள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியிருக்கின்றன. முகநூலிலும் என் நண்பராக இருப்பவர். அவர்தான் தமிழினியின் கணவர் என்னும் விடயமே  தமிழினியின் மறைவுக்குப் பின்னர்தான் தெரிய வந்தது.
தமிழினி ரொமிலா ஜெயன் என்னும் பெயரிலும் முகநூலில் கணக்கு வைத்திருந்தார். ஆனால் அது எனக்குத் தெரியாது. எனக்கும் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அந்தபெயர் எனக்கு அறிமுகமில்லாததால் நீண்ட காலமாக அந்த நட்பு அழைப்பினை ஏற்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. பின்னர் அந்தப்பெயரில் சிறுகதையொன்று 'அம்ருதா' (தமிழகம்) சஞ்சிகையில் வெளியான பின்னர்தான் அந்தப்பெயரில் கவனம் செலுத்தினேன். ரொமிலா ஜெயன் சக எழுத்தாளர்களிலொருவர் என்பது விளங்கியதால், அவரது நட்புக்கான அழைப்பினை ஏற்றுக்கொண்டேன். அதன்பின்னர் தமிழினி தனது சொந்தப்பெயரிலேயே முகநூலில் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அப்பொழுதும் ரொமிலா ஜெயனும், தமிழினியும் ஒருவரே என்பது தெரிந்திருக்கவில்லை. அவரது மறைவுக்குப் பின்னரே இருவரும் ஒருவரே என்பதும் புரிந்தது.
தமிழினி என்ற பெயரில் முகநூல் அழைப்பு அனுப்பியபோது அவரது முகநூலில் அவர் பாவித்திருந்த படம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது.  பல்வேறு கைகள் இணைந்து நிற்கும் காட்சி அது. பல்வேறு கருத்துள்ளவர்களுடனும் நட்புக்கரம் கோர்த்து, ஒன்றுபட்டுச் செயற்பட அவர் விரும்பியதை வெளிப்படுத்தும் படம் அது. அதனால்தான் அவரது முகநூல் நண்பர்களாகப் பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கிவர்களும் இணைந்திருக்க முடிந்தது.  படத்திலுள்ள கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அளவுகளில் வேறுபட்டவை. அவை அனைத்தும் ஒன்றுபட்டு ஆக்கபூர்வமாக இயங்குவதைப்போல், முரண்பட்ட கருத்துள்ளவர்களாலும் ஒன்றுபட்டு , முரண்பாடுகளுக்குள் ஓர் இணக்கம் கண்டு இயங்க முடியும். சமூக ஊடகமான முகநூலில் அவரது செயற்பாடுகள் இதனைத்தான் எமக்குக் கூறி நிற்கின்றன. பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கியவர்களெல்லாரும் அவருடன் முகநூலில் கைகோர்த்திருந்தார்கள். அனைவருடனும் அவர் நிதானமாக, உணர்ச்சிவசப்படாமல் கருத்துகளைப் பரிமாறியிருக்கின்றார். அதனால்தான் அவரது மறைவு அனைத்துப்பிரிவினரையும் பாதித்திருக்கின்றது.