Friday, October 31, 2025

காலத்தால் அழியாத கானம்: 'காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன்."


['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG]


கவிஞர் வாலியின் கவித்துவமான வரிகளில் , பாடகர் டி.எம்.எஸ்ஸின் இன் குரலில் , மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் மனத்தை மயக்கும்  இசையில் ஒலிக்கும் காலத்தால் அழியாத கானங்களில் ஒன்று. எத்தனை தடவைகள் கேட்டிருப்பேன். இன்னும் அலுக்கவில்லை. சலிக்கவில்லை.

'நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்'

இவ்வரிகள் கேட்கும்போதே இன்பத்தைத் தரும் வரிகள். காற்று வாங்கப் போய் எத்தனை தடவைகள் இயற்கைக் கவிதையை இரசித்து திரும்பியிருப்போம். அனுபவம் உருவாக்கிய வரிகள் இவை. 

"நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை"

சங்கப் பாடல்களிலிருந்து ஊர்  துஞ்சும் இரவுகளில் துஞ்சாதிருக்கும் காதல் உள்ளங்களின் உணர்வுகளை இரசித்து வந்திருக்கின்றோம். தமிழ்த் திரைப்படப்பாடல்களாகவும் கேட்டு மகிழ்ந்திருக்கின்றோம். அதன் ஒரு வடிவம் தானிந்தப்பாடல் வரிகளும்.

"கொஞ்சம் விலகி நின்ற போதும்
என் இதயம் தாங்கவில்லை"

காதல் வயப்பட்ட உள்ளங்கள் அனுபவிக்கும்  இயற்கையான உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்.

"என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை...
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை"

பார்வையை மீனாகவோ அல்லது நீந்துமோர் உயிரினமாகவும், பருவத்தை ஓடையாகவும், உள்ளத்தை ஊஞ்சலாகவும், மேடையாகவும் உவமையாக்கியுள்ள கவிஞரின் கவித்துவம் சிறப்பானது.  காதலனொருவன் தன் காதலுக்குரியவளின் நினைவால் விரகதாபத்தால் வாடுவதை வெளிப்படுத்தும் சிறப்புமிக்க, அனுபவ முத்திரைகளை உள்வாங்கிய வரிகள். 

படம்: கலங்கரை விளக்கம்
பாடகர்: டி.எம்.செளந்தரராஜன்
வரிகள்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
நடிப்பு: எம்ஜிஆர் / சரோஜாதேவி

https://www.youtube.com/watch?v=oLxiQEEUXyo

No comments:

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!

யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  முன்னாள் மாணவரும் , கட்டடக்கலைஞரும் வரலாற்றறிஞருமான இ.மயூரநாதன் எ...