Thursday, January 12, 2023

சிங்கிஸ் ஐத்மாத்தாவின் 'அன்னை வயல்'! - வ.ந.கிரிதரன் -



அளவில் சிறியதான இந்த நாவல் கிடைத்ததுமே முதலில் வாசித்தேன். தல்கோனை என்னும் முதிய பெண் வயலுடன் பேசுவதாக ஆரம்பிக்கும் நாவல், முடிவில் அவ்வயலிடமிருந்து அவள் பிரியாவிடை கூறுவதுடன் முடிகிறது. இதற்கிடையில் அவள் அதுவரை காலத்துத் தன் வாழ்வை பகிர்ந்துகொள்கின்றாள். சிறுமியாக, யுவதியாக, மனைவியாக, தாயாக, மாமியாக, பாட்டியாக என அவளது வாழ்வின் அனைத்துப் பருவச் சம்பவங்களையும் விபரிக்கின்றாள். எவ்விதம் ஜெர்மனியருடனான போர் அவர்கள் வாழும் கிராமத்து மனித வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றது என்பதை விபரிக்கும் நாவல் போர்ச் சூழலில் வாழ்ந்த அனைவருக்கும் தம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.

சிறிய நாவலில் இயற்கையுடன் ஒன்றிய மானுட வாழ்வு எவ்விதம் பல்வகை இடர்களுக்குள்ளாகிறது என்பதை நெஞ்சைத்தொடும் வகையில் ,அதிர வைக்கும் வகையில் விபரிக்கப்படுகின்றது. பாசம், காதல் போன்ற மானுட உணர்வுகளையெல்லாம் போர் எவ்விதம் சிதைத்து விடுகின்றது.

Saturday, January 7, 2023

தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (18) - தளைகள்! தளைகள்! தளைகள்! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம்  (18) : தளைகள்! தளைகள்! தளைகள்!

"கண்ணம்மா, எத்தனை எத்தனை தளைகள்.  சுற்றியெங்கு பார்த்தாலும் தளைகள். உள்ளே தளைகள். வெளியேயும் தளைகள்."

என்ற என்னைப்பார்த்து ஒரு வித வியப்புடன் கேட்டாள் மனோரஞ்சிதம் "என்ன கண்ணா, தளைகளா? எந்தத் தளைகளைச் சொல்லுறாய்?"

"பொதுவாகக் கூறினேன் கண்ணம்மா, நாம் வாழும் சமுதாயத்தில் நிலவும் தளைகள்தாம் எத்தனை? எத்தனை?"

"கண்ணா நீ சொல்வதும் சரிதான். சமுதாயக் கட்டுப்பாடுகள், வர்க்கங்களின் பிரிவுகளால் பலம் வாய்ந்த வர்க்கங்களினால் செலுத்தப்படும் ஆதிக்கத் தளைகள், பால் ரீதியான கட்டுப்பாட்டுத் தளைகள், தீண்டாமைத் தளைகள், இன, மத, மொழி, தேசரீதியிலான கட்டுப்பாட்டுத் தளைகள், ..இத்தளைககளால் பிணைக்கப்பட்ட கைதிகள் நாங்கள் கண்ணா"

"கண்ணம்மா, இவையெல்லாம் புறத்தில் இருக்கும் தளைகள்.  இதேபோல் இவற்றின் தாக்கங்கள், மற்றும் மானுடப் படைப்பின் தன்மையால் அகத்தில் உருவான  தளைகளாலும் பிணைக்கப்பட்டு இருக்கிறோம். இல்லையா கண்ணம்மா?  இவ்வகையான தளைகள்  அனைத்திலுமிருந்து  விடுபடுவதன் மூலம்தான் மானுடருக்கு முழுமையான விடுதலை கிடைக்கும்.  ஒன்று புற விடுதலை. அடுத்தது அக விடுதலை. இல்லையா கண்ணம்மா?"

Sunday, December 25, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (17) நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம்  (17) நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்!


"கண்ணம்மா, எதற்காக இங்கு வந்து பிறந்தோம்?"   திடீரென  நான் கேட்கவே   மனோரஞ்சிதம் சிறிது திடுக்கிட்டுப் போனாள்.

"என்ன கண்ணா? உனக்கு என்ன நடந்தது? ஏனிந்தக் கேள்வி? அதுவும் இந்தச் சமயத்தில்" என்று கேட்கவும் செய்தாள்.  அத்துடன் என் தோள்களைப் பிடித்துக் குலுக்கினாள்.

"கண்ணம்மா, எனக்கு அடிக்கடி வரும் கேள்விதான். இதிலொன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லையே. நீ இவ்விதம் திடுக்கிடுவதுதான் வியப்பைத் தருகிறதடீ"

"கண்ணா, சில விடயங்களில் கேள்வி கேட்கக் கூடாது. இருப்பின் இரகசியமும் அவற்றிலொன்று"

'கண்ணம்மா, எனக்கு அதில் உடன்பாடில்லை. கேள்வி கேட்பது பகுத்தறிவு படைத்த மனிதரின் பிரத்தியேக உரிமை. எப்பொழுதும் பாவிக்க வேண்டிய உரிமை. இருப்பிலொரு தெளிவினை அடைதற்கு இவ்விதமான கேள்விகள் அவசியமில்லையா கண்ணம்மா?"

Friday, December 16, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (16) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம்  (16) -   நவீன விக்கிரமாதித்தனின்  குறிப்பேட்டுப் பக்கங்கள் சில.

மனோரஞ்சிதம் எதனையெடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அவ்வாசிப்பில் தன்னை முழுமையாக  மூழ்கடிக்க வைத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அப்படியெதைத்தான் அவள் இவ்விதம் வாசித்துக்கொண்டிருக்கின்றாள் என்பதை அறியும் ஆவல் மேலிட்டது. மேலிட்ட ஆவலுடன் அவளை நெருங்கி அவள் வாசித்துக்கொண்டிருந்த நூலைப் பார்த்தேன். உண்மையில் அது நூலல்ல. ஒரு குறிப்பேடு. அது என் குறிப்பேடுகளிலொன்று.  அவ்வப்போது என் எண்ணங்களை எழுத்துகளாக  அக்குறிப்பேட்டில் பதிவு செய்வது என் பொழுது போக்குகளிலொன்று. கவிதைகளாக, கட்டுரைகளாக எனப் பல் வடிவங்களில் அவை இருக்கும். அக்குறிப்பேடுகளிலொன்றினைத்தான் அவளெடுத்டு வாசித்துக்கொண்டிருந்தாள்.

"கண்ணம்மா, ஒருத்தரின் குறிப்பேட்டை அவரது அனுமதியின்றி இன்னொருவர் வாசிப்பது தவறில்லையா?"

"கண்ணா, என் கண்ணனின்  குறிப்பேட்டை நான் வாசிக்காமல் வேறு யார் வாசிப்பது? உன் கண்ணம்மா வாசிப்பதில் தவறேதுமில்லை. பேசாமல் மனத்தைக் குழப்பிக்கொள்ளாதே கண்ணா."

சிறிது நேரம் வாசித்துவிட்டுக் கூறினாள்:

"கண்ணா இவையெல்லாம் உன் 'டீன் ஏஜ்' பருவத்தில் எழுதியவை. ஒவ்வொரு கவிதைக்கும், கட்டுரைக்கும் மேல் எழுதின திகதி, மாதம், ஆண்டைக் குறிப்பிட்டிருக்கிறாய்."

Sunday, December 11, 2022

ஆய்வுக்கையேட்டில் வ.ந.கிரிதரனின் An Immigrant நாவல் (குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு) !

 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முனைவர்பட்ட  ஆய்வுகள் சம்பந்தமாக உருவாக்கியிருந்த கையேடு ஒன்று  அண்மைய கூகுள் தேடுதலில் என்னைக் கவர்ந்தது. அதற்கான முகவரி: https://www.msuniv.ac.in/images/academic/PhD/English.pdf

பதினைந்து பக்கங்களைக் கொண்ட அக்கையேட்டின் பக்கம் பதின்மூன்றே என் கவனத்தை ஈர்த்த பக்கம். அது புகலிடக் கற்கைநெறிகளைப்பற்றியது. அது ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலிரு பகுதிகளில் புகலிடக்கற்கை நெறி பற்றிய கொள்கை விளக்கங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.  

வாழ்க நீ எம்மான்! - வ.ந.கிரிதரன் -


இன்று மகாகவி பாரதியாரின் பிறந்ததினம்.  என் பால்ய பருவத்தில் என்று என் தந்தையார் பாரதியாரின் முழுக்கவிதைகளும் அடங்கிய தொகுதியை வாங்கித் தந்தாரோ அன்று ஆரம்பித்த பிணைப்பு இன்றுவரை தொடர்கிறது. இவரது கவிதைத்தொகுப்பொன்று எப்பொழுதும் என் மேசையில் அருகில், கண்ணில் படும் தூரத்திலிருக்கும்.

சமுதாயம், அரசியல், தேசிய விடுதலை, வர்க்க விடுதலை, மானுட விடுதலை, இருப்பு பற்றிய தேடல்கள், காதல் போன்ற மானுட உணர்வுகள்,  இயற்கை , எழுத்து ,  பெண் உரிமை என்று அனைத்தைப் பற்றியும் இவர்  பாடியிருக்கின்றார். அவற்றிலுள்ள புலமை, எளிமை, அனுபவத்தெளிவு இவைதாம் என்னை இவர்பால் ஈர்த்ததற்குக் காரணம். இன்னுமொரு முக்கிய காரணம் - ஆரோக்கிய எண்ணங்களை  வெளிப்படும் வரிகள்.

தமிழ் இலக்கிய உலகில் என்னைப் பாதித்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் பாரதியார்.  தன் குறுகிய காலத்தில் இவர் சாதித்தவை ஏராளம். பிரமிக்க வைப்பவை.

எழுத்தாளராக, ஊடகவியலாளராக, பத்திரிகை ஆசிரியராக,  தேசிய , மானுட விடுதலைப்போராளியாக, தத்துவவாதியாக இவரது ஆளுமை பன்முகமானது.

அவர் நினைவாக எனக்குப் பிடித்த அவரது கவிதையொன்று - https://dheivegam.com/nirpathuve-nadapathuve-bharathiyar-kavithai/

ஒரு கடிதம்!

அண்மையில் தமிழகத்தில் அமெரிக்கன் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளராகவிருக்கும் க.ஆனந்தராஜன் அவர்கள் 'எனது 'குடிவரவாளன்' நாவலைப்பற்றி 'நவீனத் தமிழாய்வு; என்னும் பன்னாட்டுக் காலாண்டு ஆய்விதழில் எழுதிய ஆய்வுக்கட்டுரை பற்றி எழுதியிருந்தேன். அது பற்றி அவர் எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதிலவர் எனது 'அமெரிக்கா', 'குடிவரவாளன்' ஆகிய இரு நாவல்களை மையமாக வைத்துத் தான் முனைவர் பட்ட  ஆய்வு செய்வதாகவும், அமெரிக்கன் கல்லூரியில் எனது அமெரிக்கா நாவல் அமெரிக்கன்  கல்லூரியின் பாடத்திட்டத்திலும் உள்ளதாகவும் எழுதியிருந்தார்.  மகிழ்ச்சி தந்த விடயமிது. அவரது முனைவர் பட்ட ஆய்வு வெற்றியடைய வாழ்த்துகள்.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...