Friday, August 29, 2025

'டிஜிட்டல்' வடிவில் மெருகூட்டப்பட்ட புகைப்படங்கள்!


- வ.ந.கிரிதரன் -

நண்பர் எழுத்தாளர் இரமணிதரன் கந்தையாவின் டிஜிட்டல் ஓவியங்களில் மனத்தைப் பறிகொடுத்த நான், என் புகைப்படங்களை அனுப்பியதும் , தயங்காமல் உடனடியாக அவற்றையும் மெருக்கூட்டி , டிஜிட்டல் ஓவியங்களாக்கி அனுப்பியிருந்தார். நன்றி இரமணி.
 
எழுத்து (சிறுகதை, கவிதை) , 'டிஜிட்டல் ஓவியம்' எனத் தன் கைவண்ணத்தைக் காட்டி வரும் நண்பர் இரமணிதரன் கந்தையாவுக்கு நன்றியும் , வாழ்த்துகளும்.

Wednesday, August 27, 2025

என் அபிமான நடிகர் விரைவில் பூரண நலத்துடன் மீண்டு வரவேண்டும்! வருவார்!


எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. அவரது நடிப்பு நெஞ்சை நிறைப்பது. அண்மைக்காலமாக அவர் உடல் நலமற்று இருப்பதாகவும், தற்போது நலம்டைந்து வருவதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்ற்ன.  எந்த வேடமென்றாலும் சிறப்பாகச் செய்யும் ஆற்றல் மிக்கவர். அவரது குரலும், சிரிப்பும், நடிப்பும் எப்போதும் பார்ப்பவருக்கு இன்பத்தைத் தருவன.  விரைவில் பூரண நலத்துடன் மீண்டும் மம்முட்டி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு.  வைக்கம் முகம்மது பஷீரின் குறுநாவலான 'மதிலுகள்' திரைப்படக் காட்சி. மதிலுகள் மம்முட்டிக்குத் நடிப்புக்காகத் தேசிய விருதினைப் பெற்ற திரைப்படம். மம்முட்டி மூன்று தடவைகள் இந்திய மத்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் மம்முட்டி CBI துப்பறியும் அதிகாரியாக நடித்திருக்கும் மலையாளத்திரைப்படங்கள் புகழ்பெற்றவை. எனக்கும் அவை மிகவும் பிடிக்கும். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தில் நடித்ததற்காகவும் இவர் இந்திய மத்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கின்றார். நடிகர்  மம்முட்டி ஆரம்பத்தில் சட்டத்தில் இளங்க்லைப் பட்டம் பெற்று வழக்குரைஞராகப் பணியாற்றி நடிக்க வந்தவர் என்பது இவரைப்பற்றிய இன்னுமொரு தகவல்.

Monday, August 25, 2025

கவிதை: குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -



 * ஓவியம் - AI

குளிர்காலம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது. 
கனடாவில் ஆண்டுகள் பலவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இன்னும் இந்தக் குளிர்காலம் மீதான
என் வெறுப்பு குறைந்தபாடாகவில்லை.
வழக்கம்போல் குளிர்காலம் பற்றிய நினைவுகள் 
வந்தவுடன், கூடவே அதனுடன் இணைந்து  
வரும் பனி, உறைபனி எல்லாமே நினைவுக்கு 
வந்து விடுகின்றன.
இவற்றை இம்முறை எவ்விதம் சமாளிக்கப் போகின்றேன்
என்பது பற்றிய எண்ணங்களே 
என் சிந்தையெங்கும் வியாபிக்கத்தொடங்குகின்றன.

நானும்தான் பல தடவைகள் முயற்சி செய்து பார்த்து விட்டேன்,
இம்முறையாவது குளிர்காலத்துடன் ஒரு 
நட்பு ஒப்பந்தம் செய்து 
நிம்மதியாக இருந்து விடுவோமேயென்று.
 எண்ணங்கள் எல்லாமே 
என்னைச் சுற்றிக் குளிர்காலம் 
தன்கரங்களை விரிக்கும் அத்
தருணத்தில் ஓடியொளிந்து விடுகின்றன.

அடுத்தவருடமாவது 
அதனுடன் ஓர் ஐக்கியம் ஏற்பட வேண்டும்.
ஏற்படுமா? என்னும் எண்ண்ங்கள் பெருக,
இம்முறை அதனுடன் நட்பு பாராட்டும் 
எண்ணங்களைத்  தவிர்த்து விடுகின்றேன்.
அதனுடான போருக்கு என்னைத்
தயார்படுத்திக்கொள்கின்றேன்.

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் 'இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 4 - இறுதிப்பகுதி) வ.ந.கிரிதரன் -


அடுத்த இரண்டு பகுதிகளும் ('திலகரின் அரசியலை, பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை' , 'சுருக்கம்' & அணுகுமுறை) இருபத்து நான்கு வயது இளைஞனான பாரதி வரலாற்றில் எந்தப் புள்ளியில் நிறகின்றான் என்பதை ஆராய்வதுடன், அவனது சரியான ஆளுமையை முடிவு செய்வதுமாகும்.  அவன் மதவாதியா, தீவிரவாதியா, ஆங்கிலேயருக்கெதிரான் தேசிய விடுதலைப்போரில் அவனது நிலைப்பாடும், செயற்பாடும் எவையெவை என்பவை பற்றித் தர்க்கபூர்வமாக ஆராய்வதாகும்.  அவற்றை ஆராய்வதற்கு முதல் ஜோதிகுமார் பாரதியாரின் எழுத்தின் நோக்கம், எழுத்தின் தன்மை பற்றிச் சிறிது கவனம் செலுத்துகின்றார். 

பாரதியின் எழுத்தின்  நோக்கமும், தன்மையும்

பாரதியாரின் எழுத்தின் முக்கிய பண்பாக அவதானிக்கக்கூடியது அவரது ஆழமும், எளிமையும் கூடிய மொழி நடை.  உதாரணத்துக்கு 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையைக் கூறலாம். பொருள் முதல்வாதம், கருத்து முத்ல்வாதம் பற்றிய தர்க்கமே அதன் அடிநாதம். ஆனால் அதனைக்கண்டடைவது முறையான, தர்க்கமொன்றின் மூலமே சாத்தியம். ஆனால் அவர் அக்கவிதையில் பாவித்துள்ள மொழி நடை என்பது மிகவும் எளிமையானது. எல்லாருக்கும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியது. அதனால் விளையும் முக்கிய நன்மைக்களிலொன்று - வாசிப்பின் பல்வேறு படி நிலைகளிலுள்ள வாசகர்களாலும் இக்கவிதையை எளிதாக வாசிகக் முடியும். ஆனால் , புரிதல்தான் அவரவர் வாசிக்கும், சிந்திக்கும் திறன் மற்றும் அனுபவத்திற்கேற்ப வேறுபடும். 

Saturday, August 23, 2025

ஜெயகாந்தனின் 'ஞானரதம்' கவிதை - 'நிழல்'


எழுபதுகளில் வெளியான 'ஞானரதம்' சஞ்சிகையில் வெளியான எழுத்தாளர் ஜெயகாந்தனின் கவிதை இது. இக்கவிதை மீதான என் புரிதல் கீழே:
 

மானுட வாழ்வின் பொருள் மீதான ஆசையினை ஒளியாகக் கவிஞர் சித்திரித்திருக்கக் கூடும். விட்டில்கள் ஒளி நாடிச் சென்று மாய்வதைப்போல் மானுடரும் பொருள் தேடி ,அதில் மூழ்கி மாய்ந்து போகின்றார்.
 
ஆனால், நான் இருப்பின் தன்மையை விளங்கியவன். ஒளிநாடிச் செல்லும் விட்டில் அல்லன். எனக்கு வழி காட்டிட விளக்கு (செல்வம் பெருக்க அறிவுரை கூறும் வழிகாட்டி ) தேவையில்லை. எனக்குத் தேவையெல்லாம் எனக்குப் பின்னால் நீண்டிருக்கும் நிழலைக் காட்டும் விளக்கொன்றே.
 
நிழல் என்பது நிஜம் அல்ல. நிஜம் போல் தெரியும் நான் உண்மையில் என் பின்னால் நீண்டிருக்கும் நிழல் போன்றவன். நிஜமற்ற நிழல் போன்றதுதான் மானுட இருப்பும். நிஜமென்று நாம் நம்பும் மானுட இருப்பும் ஒருவகையில் நிழல்தான். அதனை எனக்கு வெளிக்காட்ட, புரியவைக்கக்கூடிய விளக்குத்தான் (குரு போன்ற வழிகாட்டியே) எனக்குத் தேவை. 
 
இப்படியும் புரிந்து கொள்ளலாம். உங்கள் புரிதல் எப்படியோ? 

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் ' இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 3) - இருபத்திநான்காம் வயதில் பாரதி: பாரதியின் முகங்கள் - வ.ந.கிரிதரன் -


இப்பகுதியின் ஆரம்பத்தில் ஜோதிகுமார் பாரதியின் மூன்று முரண்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவையாவன்;  அவனது சிந்தையில் காணப்படும் முரண், அவன் அரசியலில் தென்படும் முரண், அவன் எழுத்தில் புலப்படும் முரண்.  இவ்விதம் ஆரம்பமாகும் கட்டுரையில் கட்டுரையாசிரியர் தொடர்ந்து இம்முரண்கள் பற்றி விரிவாகத் தர்க்கம் செய்வார் என்றே வாசிக்கும் எவரும் உணர்வர், ஆனால் 'இம்முரண்கள் ஒவ்வொன்றும் , தனித்தனி உதாரணங்களோடு அவனது வாழ்க்கை நகர்வுகளுக்கு ஏற்ப விவாதிக்கப்படுவது விரும்பத்தக்கது' என்பதுடன் மேலும் அம்முரண்கள் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்து விடுகின்றார் ஜோதிகுமார். 'இதன் காரணத்தினாலேயே ,இக்கட்டுரைத்தொடரின் முடிவுகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட முடியாதவையாகின்றன' என்றும் கூறுகின்றார்.  இம்முரண்களைப்பற்றி விரிவாகத் தர்க்கத்தைத் தொடர்ந்திருந்தால் அது மிகவும் பயனுடையதாகவிருந்திருக்கும். பாரதியின் முரண்கள் எல்லாம் அவனது தேடலையும், வளர்ச்சியையும் , அவ்வளர்ச்சியினூடு அவனிடம் ஏற்பட்ட முதிர்ச்சியினையும், தெளிவினையும் வெளிப்படுத்துவதாக அத்தர்க்கம் அமைந்திருக்கும். அதற்கான சந்தர்ப்பத்தைத் தவற் விட்டுவிட்டார் ஜோதிகுமார். பிறிதொரு சந்தர்ப்பத்தில் , விரிவாக இம்முரண்கள் பற்றிய தர்க்கத்தை அவர் தொடர்வார் என்று எதிர்பார்ப்போம்.

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் ' இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 2) - இருபத்திநான்காம் வயதில் பாரதி: ஆன்ம உணர்ந்திறன் வ.ந.கிரிதரன் -


இருபத்திநான்காம் வயதில் பாரதி: ஆன்ம உணர்ந்திறன்


இப்பகுதியின் ஆரம்பத்தில் ஜோதிகுமார் 'மனிதனது இதய தாபங்கள் அனைதையும் சரியாக உள்வாங்கி, அவற்றை நல்ல முறையில் எதிரொலிக்கக் கூடியதாக, தன் ஆன்மாவை நுண் உணர்வுமிக்கதாய் மாற்றி அமைத்துக்கொள்ள உண்மைக் கலைஞன் வேண்டப்படுகின்றான். ஆனால், இத்தகைய ஆன்மாவை வடிவமைப்பதென்பதும், அதனைத் தக்கவைத்துக்கொள்வது என்பதும் கடின செய்கையே.'  என்று குறிப்பிடுகின்ரார்.  இது ஒரு கேள்வியை எழுப்புகிறது. அது - ஜோதிகுமார் ஆன்மா என்னும் கருதுகோளை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதுதான். மார்க்சியவாதிகள் ஆன்மா என்னும் கருதுகோளை ஏற்பதில்லை. அவர்கள் பொருள்முதல்வாதிகள்.  ஆன்மா என்று ஒன்றிருப்பதை ஏற்றுக்கொள்வதில்லை.  உண்மையில் ஆன்மா என்று இங்கு ஜோதிகுமார் கருதுவது எதனை?

ஆன்மா என்று ஜோதிகுமார் கருதுவது , பொருள்முதல்வாதிகள் கருதுவது போல் , உடலிலிருந்து தனித்து இயங்குமொன்றினை அல்ல , மாறாகச் சிந்தையைத்தான். அதனைத்தான் இந்நெடுங்கட்டுரையில் மூன்றாம் ப்குதியில் வரும் இவ்வரி புலப்படுத்துகின்றது: "ஓன்று அவனது ஆன்மாவில் (சிந்தையில்) தட்டுப்படக் கூடிய முரண்''

இங்கு பாரதியார் ஆன்மாவுக்கு இன்னுமோர் அர்த்தமாகச்  சிந்தை என்று கருதுவதையும் அறிய முடிகின்றது.  சிந்தை என்பது மார்க்சியவாதிகளின் கருத்துப்படி பொருள்வயமான மூளையின் செயற்பாடு. மூளையில்லையேல் சிந்தையில்லை என்பது அவர்கள் கருத்து.மாறாகக் கருத்துமுதல்வாதிகளோ ஆன்மா என்பது உடலிலிருந்து வேறானது என்று கருதுவர்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...