Wednesday, March 21, 2018

கவிதை: பரிணாமம் - வ.ந.கிரிதரன் -















ஒரு காலத்தில் நான் தேசியவாதியாகவிருந்தேன்.
ஆண்ட பரம்பரையின் பெருமைகளில் மனதொன்றிக்
கற்பனைகளில் மூழ்கியிருந்தேன்.
பின்னுமோர் சமயம் நான் இடதுசாரித்தேசியவாதியானேன்.
தேசியம் கலந்த புரட்சியில் மனதொன்றியிருந்தேன்.
பின்னர் நான் மானுட வாதியானேன்.
'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' என்னும்
என் மூதாதையின் அன்றைய நோக்கில்
வியந்து கிடந்தேன்.
இன்று நானோர் பிரபஞ்சவாதி.
எதனையும் பிரபஞ்ச நோக்கில் வைத்து
அணுகுகின்றேன்.
தேசியத்தை, மார்க்சியத்தை, மானுடநோக்கினை
அவற்றின் நிலையில் வைத்து அணுகுகின்றேன்.
பிரபஞ்ச நோக்கில், மானுட நோக்கில்,
வைத்து அனைத்தையும் அணுகுகின்றேன்.
ஒரு சமயம் முரண்பாடுகளைப் பகை முரண்பாடுகளாக
அணுகினேன். இன்றோ?
நட்புரீதியில் அவற்றைக் கையாள்கின்றேன்.
இன்னும் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டாதீர்கள்!
கிணற்றுக்குள்ளிருந்து கத்தும் நுணல்களாக இருக்காதீர்கள்.
வெளியில் வாருங்கள்!
விரிந்து கிடக்கும் நீல வானைப் பாருங்கள். ஆங்கு
கொட்டிக் கிடக்கும் நட்சத்திரக் குவியல்களைப் பாருங்கள்.
வெளியினூடு அதி வேகங்களில் விரையும்
சுடர்க்கூட்டங்களைப் பாருங்கள்.
'காலவெளி'யின் மாயா ஜாலங்களைப் பாருங்கள். அவற்றில்
மனத்தைப் பறிகொடுங்கள்.
பிரமாண்டமானதொரு வெளியில் விரையுமொரு வாயுக் குமிழிக்குள்
வளைய வரும் இருப்பைப் பாருங்கள்.
வெளியில் வாருங்கள். விரிந்து கிடக்கும் வானைத்தைப்போல
உங்கள் மனமும் விரிவதை அறிவீர்கள்.
புரிந்துகொள்வீர்கள்.

















ngiri2704@rogers.com

No comments:

பதிவுகள் இணைய இதழின் ஜூலை 2026 ,மாதப் புள்ளி விபரம்! பாவித்த மென்பொருள் - (cPanel) Awstats

cPanel - Awstats அறிக்கை காட்டும் இந்த புள்ளிவிவரங்கள்,  பதிவுகள் இணைய் இதழ் மிகப் பெரிய அளவில் வாசகர்களைக் கொண்ட ஒரு முன்னணி ஊடகமாக இயங்கி...