Friday, March 23, 2018

காலத்தால் அழியாத கானங்கள்: "மல்லிகைக்கா மல்லிகைக்கா எங்கடி போறே". சாஜிசுப்புலக்சுமி இரட்டையரின் அபார நடனம்! உலக சமாதானத்தை வலியுறுத்தும் பட்டுக்கோட்டையாரின் கருத்துமிக்க பாடல்! - வ.ந.கிரிதரன் -



இப்பாடலில் தற்செயலாகத்தான் தடுக்கி விழுந்தேன். ஆனால் நான் விழுந்ததோ பெரும் புதையல் ஒன்றின் மீது என்பதை இக்கானத்தைக் கேட்டதும், பார்த்ததும்தாம் உணர்ந்துகொண்டேன்.  கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கருத்தாழம் மிக்க, கற்பனையாற்றல் மிக்க பாடலில், அப்பாடலைப் பாடி ஆடும் அக்குழந்தைகளின் நடனத்தில், பாடலைப்பாடும் பாடகர்களின் குரலினிமையில் நான் என்னையே மறந்தேன். மேலுமோர் அரிய தகவலையும் இப்பாடலைப் பாடி ஆடும் அக்குழந்தை நடனமணிகளைப்பற்றி அறிந்து கொண்டேன்.

முதலில் கவிஞரின் கற்பனைச்சிறப்பினைச் சிறிது பார்ப்போம். மல்லிகைக்கும், ரோஜாவுக்குமிடையில் சிறு தர்க்கம் முகிழ்க்கிறது. ரோஜா மல்லிகையைப்பார்த்து கேட்கிறாள்:

 "மல்லிகைக்கா மல்லிகைக்கா எங்கடி போறே
கொஞ்சம் சொல்லடியக்கா
எதுக்கு இப்படி குலுக்கி நடக்குறே?".

அதற்கு மல்லிகை பதிலளிக்கின்றாள் இவ்விதம்:

"நான் மணவறையை சிங்காரிச்சு
வாசனைய அள்ளித் தெளிச்சு
வாறவங்க எல்லாரையும் மயக்கப் போறேன்
நான் மயக்கப் போறேன்
புது மணப் பொண்ணு கூந்தலிலே
மணக்கப் போறேன்"

பதிலுக்கு ரோஜா மல்லிகையைப்பார்த்து சீண்டுகிறாள் இவ்விதம்:
"நீ மணப் பொண்ணு தலையில் மட்டும்
மணக்கப் போறே
நான் மாப்பிள்ளை கழுத்தை சுத்தி
தொங்கப் போறேன்'

பதிலுக்கு மல்லிகையோ இவ்விதம் பதிலளிக்கிறாள்:

"நீ வாசனைய கொடுத்து புட்டு
வதங்கப் போறே
இங்கே வாறவங்க கையில் எல்லாம்
சுருங்கப் போறே அஹ்ஹா சுருங்கப் போறே"

இவ்விதமாக மல்லிகைக்கும், ரோஜாவுக்குமிடையிலான யார் சிறந்தவர் என்னும் தர்க்கம், போட்டி தொடர்கிறது. இச்சமயம் அங்கு தாமரைத் தங்கச்சி வருகின்றாள். அவளிடம் மல்லிகையும், ரோஜாவும் தங்களில் யார் சிறந்தவர் என்று கேட்கின்றார்கள்.

பதிலுக்குத் தாமரையோ பட்டுக்கோட்டையாரின் குழந்தையாகவே பதிலளிக்கின்றாள். எவ்விதம்? இவ்விதம்:

"மலருவதெல்லாம் உலருவதில்லை
மறந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி
சில மனிதரைப் போலே வம்புகள் பேசி
திரிந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி
மலருவதெல்லாம் உலருவதில்லை
மறந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி
சில மனிதரைப் போலே வம்புகள் பேசி
திரிந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி"

இவ்விதம் மல்லிகைக்கும், ரோஜாவுக்கும் அறிவுரை கூறும் தாமரை அவர்களிடம் "உலகில் சிறந்தது என்ன?" என்று கேட்கின்றாள். அதற்கு மல்லிகையோ "அன்பு உள்ளவர் செய்திடும் தானம்" என்று பதிலளிக்கின்றாள். மேலும் தன்

கேள்வியைத்தொடரும் தாமரையோ "அந்த தானத்தில் சிறந்தது என்ன?" என்று கேட்கின்றாள். பதிலளிக்கும் ரோஜாவோ "நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்" என்று கூறுகின்றாள். இதற்கு எதிர்க்கேள்வியாகத் தாமரையோ "அதிலும் சிறந்தது என்ன?"

என்று கேட்பாள். இதற்கு விடை பகரும் ரோஜாவோ பின்வருமாறு பதிலளிப்பாள்:

"பல அகிம்சா மூர்த்திகள் ஆராய்ந்து சொன்ன
உலக சமாதானம் உலக சமாதானம்
பல அகிம்சா மூர்த்திகள் ஆராய்ந்து சொன்ன
உலக சமாதானம் உலக சமாதானம் "

அதற்கு தாமரையோ இவ்விதம் உலக சமாதானத்தை வற்புறுட்த்திப் பதிலளிப்பாள்:

"அதை நாம் உணர்ந்து நடக்க வேணும்
எல்லோரும் ஒண்ணாய் இருக்க வேணும்
அதை நாம் உணர்ந்து நடக்க வேணும்
எல்லோரும் ஒண்ணாய் இருக்க வேணும்
அப்போ தான் உலவும் சமாதானம்
எங்கும் நிலவும் சமாதானம்
சமாதானம் சமாதானம்
அனைவர் அதை நாம் உணர்ந்து நடந்திடுவோம்
எல்லோரும் ஒண்ணாய் இருந்திடுவோம்
அதை நாம் உணர்ந்து நடந்திடுவோம்
எல்லோரும் ஒண்ணாய் இருந்திடுவோம்"

என்ன கருத்து மிக்க பாடல். பட்டுக்கோட்டையாரின் சிந்தனைச்சிறப்பினை வெளிப்படுத்தும் பாடல். போர்களினால் சூழ்ந்திருக்கும் இன்றைய நிலையில் மிகவும் அவசியமானது உலக சமாதானம்.  உலக சமாதானத்தை வற்புறுத்தும் இப்பாடல் அவரது னுட நேயம் மிக்க கவித்துவச் சிறப்பால் சிறக்கின்ற அதே சமயம் இப்பாடலை உள்ளடக்கிய நடனத்துக்காகவும், அதனை ஆடிய அச்சிறுமிகளின் நடனச்சிறப்புக்காகவும் மேலும் சிறந்து விளங்குகின்றது. மல்லிகையாகவும், ரோஜாவாகவும் நடனமிடும் அச்சிறுமிகளின் நடனத்தில் குறிப்பாக இருவரும் ஒருங்கிணைந்து (synchronise)  ஆடும் தருணங்களில் நிலவிய முழுமைக்கும் நான் மயங்கியே விட்டேன். யார் இவர்கள் என்று விக்கிபீடியாவைச் சிறிது மேய்ந்தேன். அப்பொழுதுதான் அவர்களைப்பற்றி  மேலதிக விபரங்களை அறிந்து கொண்டேன். அவை வருமாறு:

அச்சிறுமிகளின் பெயர்கள் சாஜி, சுப்புலக்சுமி. ஆனால் இருவரும் இணைந்தே ஐம்பதுகளில், அறுபதுகளின் ஆரம்பத்தில் தமிழ் மற்றும் ஹிந்தித்திரைப்படங்களில் இரட்டையராகத் தோன்றி ஆடி இரசிகர்களை மகிழ்வித்திருக்கின்றார்கள். இவர்கள்  உறவினர்களும் கூட. சாஜி பிரபல கர்நாடகப்பாடகிகளில் ஒருவரான P.A.ராஜாமணியின் (இவர் புகழ்பெற்ற கர்நாடகப் பாடகியான பி.எ. பெரியநாயகியின் சகோதரி) மகள். சுப்புலக்சுமி அவரது மச்சாள் முறையாவனவர். முத்துச்சாமிப்பிள்ளை  என்பவரிடம் முறையாக நடனம் பயின்று செப்டமபர் 14, 1953 அன்று , சென்னையிலுள்ள ஆர்.ஆர்.சபா மண்டபத்தில் , ராஜா சேர்.முத்தையாச் செட்டியார் முன்னிலையில் அரங்கேறியிருக்கின்றார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது அன்னை  இல்லம் வீட்டின் குடி புகுர்தலில் இவர்களது நடனத்தையும் ஏற்பாடி செய்திருக்கின்றார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் 'பம்பர சகோதரிகள்' என்று இவர்களது நடனத்திறமைக்காகப் பாராட்டுதலை பெற்றுள்ளார்கள். வேகமான , துல்லியமான  (precise) இவர்களது நடன அசைவுகளுக்காக அவர் இப்பாராட்டுதலை வழங்கியிருக்கின்றார். திரைப்படத்துறையில் ஏற்பட்ட கால மாற்றங்கள் காரணமாகக் காணாமல் போனவர்களில் இச்சகோதரிகளும் அடங்குவர். இவர்களில் சுப்புலக்சுமி  பரதநாட்டியத்தை மாணவர்களுக்குப் பயில்வித்து வந்தார். அவரது இச்சேவைக்காகத்  2000இல் தமிழக அரசின் கலைமாமணி பட்டமும் பெற்றிருக்கின்றார். சாஜி லக்ஸ் சோப் விளம்பர மாடலாக அன்று விளங்கிய ஆர்.பத்மா (இவர் நாற்பதுகளில்  தமிழ்ப்படங்களில் நடித்திருக்கின்றார்) என்பவரின் மகனான வி.எஸ்.சாந்தாராம் என்பவரை மணந்து, 2010இல் மார்பகப்புற்றுநோய் காரணமாக மரணித்திருக்கின்றார்.
சாஜிசுப்புலக்சுமி இரட்டையர் பற்றி மேலும் விரிவாக ஆராய வேண்டுமென்ற அவாவினை ஏற்படுத்தி விட்டது இப்பாடல்.

**************************************************************************************

படம்: மக்களைப்பெற்ற மகாராசி
பாடல் வரிகள்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை: கே.வி.மகாதேவன்
நடனம்: சாயி, சுப்புலக்சுமி (இரட்டையர்) & கிருஷ்ணவேணி
பாடகர்கள்: ஜிக்கி, கே.யமுனாராணி & A. G. ரத்னமாலா
https://www.youtube.com/watch?v=_-gGPwOtvHY

மல்லிகைக்கா மல்லிகைக்கா பாடல் வரிகள்:

ஓ… ஓ… ஓ… மல்லிகைக்கா
ஓ… ஓ… ஓ… ஏண்டி ரோஜாக்கா ( இசை )

மல்லிகைக்கா மல்லிகைக்கா எங்கடி போறே
கொஞ்சம் சொல்லடியக்கா
எதுக்கு இப்படி குலுக்கி நடக்குறே ( இசை )
மல்லிகைக்கா மல்லிகைக்கா எங்கடி போறே
கொஞ்சம் சொல்லடியக்கா
எதுக்கு இப்படி குலுக்கி நடக்குறே ( இசை )

மல்லிகைக்கா:
நான் மணவறையை சிங்காரிச்சு
வாசனைய அள்ளித் தெளிச்சு
வாறவங்க எல்லாரையும் மயக்கப் போறேன்
நான் மயக்கப் போறேன்
புது மணப் பொண்ணு கூந்தலிலே
மணக்கப் போறேன் ( இசை )

ரோஜாக்கா:
நீ மணப் பொண்ணு தலையில் மட்டும்
மணக்கப் போறே
நான் மாப்பிள்ளை கழுத்தை சுத்தி
தொங்கப் போறேன்
நீ மணப் பொண்ணு தலையில் மட்டும்
மணக்கப் போறே
நான் மாப்பிள்ளை கழுத்தை சுத்தி
தொங்கப் போறேன்

மல்லிகைக்கா:
நீ வாசனைய கொடுத்து புட்டு
வதங்கப் போறே
இங்கே வாறவங்க கையில் எல்லாம்
சுருங்கப் போறே அஹ்ஹா சுருங்கப் போறே

இருவரும்:
அடி தந்தனத் தானா தந்தனத் தானா
சரக்கிது தானா
உன் தரத்துக்கும் உடல் நிறத்துக்கும்
நான் பொருந்திப் போனேனா

அடி தந்தனத் தானா தந்தனத் தானா
சரக்கிது தானா
உன் தரத்துக்கும் உடல் நிறத்துக்கும்
நான் பொருந்திப் போனேனா

மல்லிகைக்கா:
கள்ளமில்லா மனசுக்கென்னை
உவமை சொல்வாங்க
பெரும் கவிஞரெல்லாம் காவியத்தில்
இடம் கொடுப்பாங்க
கள்ளமில்லா மனசுக்கென்னை
உவமை சொல்வாங்க
பெரும் கவிஞரெல்லாம் காவியத்தில்
இடம் கொடுப்பாங்க

காத்தடிச்சா போதும்
என்னை காணத் துடிப்பாங்க
காத்தடிச்சா போதும்
என்னை காணத் துடிப்பாங்க
உன்னைக் கண்டா கூட
முள்ள நினைச்சு முகம் சுளிப்பாங்க
ஓ… ஓ… ஓ…

இருவரும்:
அடி தந்தனத் தானா தந்தனத் தானா
சரக்கிது தானா
உன் தரத்துக்கும் உள்ள குணத்துக்கும்
நான் பொருந்திப் போனேனா
அடி தந்தனத் தானா தந்தனத் தானா
சரக்கிது தானா
உன் தரத்துக்கும் உள்ள குணத்துக்கும்
நான் பொருந்திப் போனேனா

ரோஜாக்கா:
நீ மலரும் முன்னே கடைக்கு வந்து
மலரும் முன்னே கடைக்கு வந்து
மல்கிப் போறவ

மல்லிகைக்கா:
நீ உலரும் முன்னே தொட்டா கூட
உதிர்ந்து போறவ
நீ உலரும் முன்னே தொட்டா கூட
உதிர்ந்து போறவ
ஒஹ்ஹோ

ரோஜாக்கா:
நீ வளரும் போதே கொம்பைத் தேடி புடிச்சவ
நீ வளரும் போதே கொம்பைத் தேடி புடிச்சவ

மல்லிகைக்கா:
அதுக்கு வகையில்லாம
தனிச்சு நின்னு தவிச்சவ
அதுக்கு வகையில்லாம
தனிச்சு நின்னு தவிச்சவ
ஓ… ஓ… ஓ…

இருவர்:
அடி தந்தனத் தானா தந்தனத் தானா
சரக்கிது தானா
உன் தரத்துக்கும் உள்ள குணத்துக்கும்
நான் பொருந்திப் போனேனா
அடி தந்தனத் தானா தந்தனத் தானா
சரக்கிது தானா
உன் தரத்துக்கும் உள்ள குணத்துக்கும்
நான் பொருந்திப் போனேனா

மல்லிகைக்கா:
தங்கச்சி தங்கச்சி தாமரை தங்கச்சி
எங்களுக்குள்ளே எவ தான் சிறந்தவ
எடுத்து சொல்லடி தங்கச்சி

ரோஜாக்கா:
தங்கச்சி தங்கச்சி தாமரை தங்கச்சி
எங்களுக்குள்ளே எவ தான் சிறந்தவ
எடுத்து சொல்லடி தங்கச்சி

தாமரைத்தங்கச்சி:
மலருவதெல்லாம் உலருவதில்லை
மறந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி
சில மனிதரைப் போலே வம்புகள் பேசி
திரிந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி
மலருவதெல்லாம் உலருவதில்லை
மறந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி
சில மனிதரைப் போலே வம்புகள் பேசி
திரிந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி

தாமரைத்தங்கச்சி:
உலகில் சிறந்தது என்ன

மல்லிகைக்கா:
அன்பு உள்ளவர் செய்திடும் தானம்

தாமரைத்தங்கச்சி:
அந்த தானத்தில் சிறந்தது என்ன

ரோஜாக்கா::
நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்

தாமரைத்தங்கச்சி:
உலகில் சிறந்தது என்ன

மல்லிகைக்கா:
அன்பு உள்ளவர் செய்திடும் தானம்

தாமரைத்தங்கச்சி:
அந்த தானத்தில் சிறந்தது என்ன

ரோஜாக்கா::
நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்

தாமரைத்தங்கச்சி:
அதிலும் சிறந்தது என்ன

ரோஜாக்கா:
பல அகிம்சா மூர்த்திகள் ஆராய்ந்து சொன்ன
உலக சமாதானம் உலக சமாதானம்
பல அகிம்சா மூர்த்திகள் ஆராய்ந்து சொன்ன
உலக சமாதானம் உலக சமாதானம் ( இசை )

தாமரைத்தங்கச்சி:
 அதை நாம் உணர்ந்து நடக்க வேணும்
எல்லோரும் ஒண்ணாய் இருக்க வேணும்
அதை நாம் உணர்ந்து நடக்க வேணும்
எல்லோரும் ஒண்ணாய் இருக்க வேணும்
அப்போ தான் உலவும் சமாதானம்
எங்கும் நிலவும் சமாதானம்
சமாதானம் சமாதானம்
அனைவர் அதை நாம் உணர்ந்து நடந்திடுவோம்
எல்லோரும் ஒண்ணாய் இருந்திடுவோம்
அதை நாம் உணர்ந்து நடந்திடுவோம்
எல்லோரும் ஒண்ணாய் இருந்திடுவோம்

No comments:

வான் பாயும் பட்டாணிச்சுப்புளியங்குளம் தந்த வான் பாய்தல் பற்றிய சிந்தனைகள்!

மாரியில் மழை பெய்து பட்டாணிச்சுப்புளியங்குளம் நிறைந்து வழிகையில் வான் பாயுமொலி இரவின் இருளை, அமைதியைத் துளைத்துக்கொண்டு கேட்கும். குருமண்காட...

பிரபலமான பதிவுகள்