- எழுத்தாளர் ஜெயகாந்தனின் இளமைத்தோற்றம். - |
எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த தினம் ஏப்ரில் 24.
எழுத்தாளர் ஜெயகாந்தன் என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை. வெகுசனப் படைப்புகளில் மூழ்கிக்கிடந்த பருவத்தில் வெகுசன ஊடகங்களினூடு, வித்தியாசமானவராக அறிமுகமாகி என்னைக் கவர்ந்தவர் ஜெயகாந்தன். இவர் பெயரை நான் முதன் முதலில் கேட்டது என் பெற்றோரின் உரையாடலொன்றின்போதுதான். அவர்கள் ஆனந்தவிகடனில் வெளியான இவரது 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன', 'கோகிலா என்ன செய்து விட்டாள்' போன்ற முத்திரைக்கதைகளாக வெளியான குறுநாவல்களைப்பற்றி உரையாடியபோதுதான் முதன் முதலில் இவரது பெயரை நான் அறிந்துகொண்டேன்.
ஜெயகாந்தனின் 'கைவிலங்கு' குறுநாவல் கல்கியில் வெளியானது. இதுவே பின்னர் 'காவல் தெய்வ'மாகத் திரைக்கு வந்தது. அதே பெயரில் ராணிமுத்து பிரசுரமாகவும் வெளியானது. எழுத்தாளர் சாவியை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'தினமணிக்கதிர்' ஜெயகாந்தனின் 'ஒரு பிடி சோறு' சிறுகதைத்தொகுப்பிலிருந்த சிறுகதைகள் பலவற்றை மீள்பிரசுரம் செய்தது. இவரது புகழ்பெற்ற 'டிரெடில்', 'பிணக்கு', 'ஒரு பிடி சோறு', 'ராசா வந்துட்டாரு' போன்ற சிறுகதைகளை அப்போதுதான் வாசித்தேன்.