Thursday, July 2, 2020

கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து / திராவிடக் கட்டடக்கலையும்! - வ.ந.கிரிதரன் -


கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன்
- கட்டடக்கலைஞர்  அஞ்சலேந்திரன் -
அண்மையில் 'Kälam / Tradition & Heritage /C.Anjalendran / The Architecture of the Tamil Hindus of Sri Lanka' என்னும் தலைப்பிடப்பட்ட , இலங்கைக் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனுடான நேர்காணலை உள்ளடக்கிய காணொளியொன்றினைப் பார்த்தேன். அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் சிலவற்றைப்பற்றிய என் கருத்துகளின் பதிவிது. காணொளிக்கான இணைப்பினை இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.
 
முன்னாள் வவுனியா பா.உ சி.சுந்தரலிங்கத்தின் பேரனும் , கட்டடக்கலைஞருமான அஞ்சலேந்திரன் புகழ்பெற்ற இலங்கை, தெற்காசியக் கட்டடக்கலைஞர்களிலொருவர். இங்குள்ள காணொளியில் அஞ்சலேந்திரன் இந்துக் கட்டடக்கலை பற்றிக் கூறிய கருத்துகளிலிருந்து அவருக்கு இந்துக்கட்டடக்கலை பற்றி மேலோட்டமான புரிதல்தான் உள்ளதோ என்று சந்தேகப்படுகின்றேன். உதாரணத்துக்கு அவர் கோயில் விமானத்தைக் கோபுரமாகக் கருதிக் கூறிய கருத்துகள்.

Thursday, June 25, 2020

கோப்பாய்க் கோட்டையின் பழைய கோலம்! - வ.ந.கிரிதரன் -

எண்பதுகளில் வீரகேசரியில் நான் எழுதிய கோப்பாய்க் கோட்டை பற்றிய கட்டுரையிது. 15-3-1981 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியானது. நண்பர்களே! கோப்பாய்க் கோட்டை பற்றி நீங்கள் அறிந்த விபரங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி. இக்கட்டுரைக்கு வீரகேசரி நிறுவனத்தினர் ரூபா 35 அனுப்பியிருந்தார்கள். மறக்க முடியாது.

அக்கட்டுரை கீழே:
 
நல்லூர் நகர் பற்றி ஆராய விளைந்த போது, கட்டடக் கலை மாணவனான நான் உதவி நாடி கலாநிதி கா.இந்திரபாலாவை நாடிய போது தான், அவர் தனது சிரமத்தைப் பொருடபடுத்தாது தனது வேலைகளுக்கு மத்தியில் எனக்கு உதவினார். அபோதுதான் அவர் கோப்பாயில் அமைந்திருந்த தமிழ் மன்னர்களின் கோட்டையைப் பற்றியும் அது பற்றிய சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரை பற்றியும் கூறினார். தமிழரின் பழமை வாய்ந்த சின்னங்களின் பரிதாப நிலை கண்டு மனம் நொந்திருந்த எனக்கு அந்தக் கோட்டை அந்தக் கோட்டையின் இன்றைய நிலையைப் பார்க்க வேண்டும் போலிருக்கவே , கோப்பாய் விரைந்தேன். கோப்பாய் பொலிஸ் ஸ்டேசனுக்கு முன்பாயுள்ள சேர்ச்சைச் சேர்ந்த சற்குணசிங்கம் என்பவர் எனக்கு அப்பகுதியினைக் காட்டி உதவினார்.

வரலாற்றுச் சுவடுகள்: 'வானம்பாடியின் ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழ்' (ஜனவரி 1982) - வ.ந.கிரிதரன் -


'வானம்பாடி' சஞ்சிகையின் இருபத்தோராவது இதழ் ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழாக வெளியிட்டிருந்தது. கவிதைகளைத் தொகுத்திருப்பவர்கள்: சேரன், நுஃமான் & அ.யேசுராசா,

ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழ் என்றுள்ளது, ஆனால் இச்சிறப்பிதழில் சேரன், மஹாகவி, நுஃமான், அ.யேசுராசா, தா.இராமலிங்கம், ஜெயபாலன், மு.பொன்னம்பலம், வில்வரத்தினம் எனப் பலரின் கவிதைகள் ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கின்றன. எதற்காக இந்தப்பாரபட்சம்?

இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த வேறு கவிஞர்கள் எவருமேயில்லையா? கவீந்திரன் (அ.ந.கந்தசாமி), அம்பி, பிரமிள், ஜீவா ஜீவரத்தினம், சத்தியசீலன், ஏ.இக்பால், இ.இரத்தினம், சில்லையூர் செல்வராசன், மருதூர்க்கொத்தன், சாரதா, நாவற்குழியூர் நடராசன், .. என்று என்னால் மேலும் கவிஞர்கள் பலரின் சிறந்த கவிதைகளை எடுத்துக்காட்ட முடியும். கவிஞர் ஒருவரின் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைத் தொகுப்பில் சேர்ப்பதற்குப் பதில் சிறந்த கவிஞர்கள் பலரின் கவிதைகளை நிச்சயம் சேர்த்திருக்க வேண்டும். ஒரு கவிஞரின் ஒரு கவிதை தொகுப்புக்குப் போதுமானது. ஏனென்றால் தொகுப்பானது ஈழத்துத் தமிழ்க்கவிதையின் வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாகவிருக்க வேண்டுமே தவிர கவிஞர்கள் சிலரைத் தூக்கிப்பிடிப்பதாக இருக்கக் கூடாது. அதிலும் தொகுப்பாளர்களைத் தூக்கிப்பிடிப்பதாக இருக்கக் கூடாது.

வரலாற்றுச் சுவடுகள்: மறுமலர்ச்சிக்காலம் இலக்கியச் சிறப்பிதழ் - வ.ந.கிரிதரன் -

மறுமலர்ச்சிக்காலம் இலக்கியச் சிறப்பிதழ் - கலைப்பெருமன்றம் உழவர் விழா மலர் , அம்பனை, தெல்லிப்பழை - 1973 -

இலங்கைத்தமிழ் இலக்கிய உலகம் பெருமைப்படத்தக்கதொரு மலரிது . இம்மலரில் எழுத்தாளர் அ.செ.முருகானந்தனுக்குச் 'சிந்தனைச் செல்வர்'என்னும் பட்டம் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார். அவரைப்பற்றி, அவரது இலக்கியப் பணி பற்றி இலக்கிய ஆளுமைகள் பலரின் அரிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

இதற்காக தெல்லிப்பழை கலைமன்றத்தினர், மலர்க்குழுவினர் ( ஆ.சிவநேசச் செல்வன், மயிலங்கூடலூர் பி.நடராசன், பொன்.நாகரத்தினம், வை.குணாளன்) பெருமைப்படலாம். மறக்காமல் கெளரவிக்கப்பட வேண்டிய இலக்கியவாதியொருவர் கெளரவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இவ்வமைப்பும், தொகுப்பாளர்களும் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகின்றார்கள். காரணம்: அ.செ.மு பற்றிய விரிவான மலர் என்பதுடன் அவர் 'சிந்தனைச் செல்வர்' என்னும் பட்டம் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார். அவ்வகையில் இதுவரை வெளியான முதலாவதும் , ஒரேயொரு நூலும் இதுதான். (நான் அறிந்தவரை) என்பதற்காக.

'குடிவரவாளன்': புகலிடம் நாடிய இலங்கைத்தமிழ் அகதியொருவனின் நியுயார்க் மாநகரத்து வாழ்வை விபரிக்கும் நாவல் - வ.ந.கிரிதரன் -


எனது (வ.ந.கிரிதரன்) நாவலான 'குடிவரவாளன்' நாவல் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் அகதியொருவனின் நியூயார்க் மாநகரத்து வாழ்க்கையை விபரிப்பது. சட்டவிரோதக் குடியாகச் சுமார் ஒருவருடன் வரையில் அம்மாநகரில் தப்பிப்பிழைத்தலுக்காக அலைந்து திரிந்த வாழ்வை விபரிக்கும் நாவல். புகலிடத்தமிழர்கள் மத்தியிலிருந்து வெளியான , புகலிட வாழ்வை விபரிக்கும் நாவல்களில் 'குடிவரவாளன்' நாவலுமொன்று. தமிழகத்தில் ஓவியா பதிப்பாக வெளியான நாவலிது.

இந்நாவல் ஏற்கனவே வெளியான எனது சிறுநாவலான 'அமெரிக்கா' வின் தொடர்ச்சி. 'அமெரிக்கா' அமெரிக்காவில் புகலிடம் தேடி அரசியல் அடைக்கலம் நாடிய இலங்கைத்தமிழ் அகதி ஒருவனின் சுமார் மூன்று மாதம் வரையியிலான நியூயார்க் மாநகரத்தின் ஒரு பகுதியான புரூக்லின் நகரில் அமைந்துள்ள தடுப்பு முகாம் வாழ்வை விபரிப்பது. 'அமெரிக்கா' தடுப்பு முகாம் சட்டவிரோதக் குடிவரவாளன் ஒருவனின் தடுப்பு முகாம் வாழ்வை விபரித்தால், 'குடிவரவாளன்' நாவல் நியூயார்க் மாநகரின் அச்சட்டவிரோதக் குடிவரவாளனின் தப்பிப்பிழைத்தலுக்கான அலைதலை விபரிக்கும்.

கவிதை: மாநகரத்துப் பெருமழை! - வ.ந.கிரிதரன்

இருண்டிருக்கும் மாநகரத்திரவு.
இருளைக்கிழித்தொரு மின்னலின் கோடிழுப்பு.
இடியின் பேரொலி.
யன்னலினூடு பார்க்கையில் பேசாத்திரைப்படமாய்
மழைக்காட்சி விரிகிறதெதிரே.
இழந்தது உறவுகள் , உருண்டு புரண்ட மண்
மட்டுமல்ல,
இதுபோன்ற இயற்கை நிகழ்வுகளையும்தாமென்று
உணர்ந்தது உள்ளம்.
இழந்ததையெண்ணிக் கழிவிரக்கமா?
இன்னுமா?
அன்று மட்டுமல்ல,
இன்று மட்டுமல்ல,
என்றுமே இருக்கப்போகும்
உணர்வு இதுவென்றும்
உணர்ந்தேன்.
உணர்வுகளுக்கு அடை போட முடியுமா?
எதற்காக? யாருக்காக?

(பதிவுகள்.காம்) 2020: கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய கோலம்! - வ.ந.கிரிதரன் -


நாற்பதுகளில் (1940) சுவாமி ஞானப்பிரகாசர் முதல் முறையாகக் கோப்பாய்க் கோட்டை இருந்த இடத்தைக் கண்டுபிடித்து ஒரு கட்டுரையொன்றினை ஆங்கில ஆய்விதழொன்றில் எழுதியிருந்தார். எண்பதுகளில் நான் கலாநிதி கா.இந்திரபாலாவை யாழ் பல்கலைக்கழகத்தில் சந்தித்தபோது அவர் காட்டினார். அந்த ஆய்விதழ் யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் இருக்கக்கூடும். அதனடிப்படையில் நான் அக்கோட்டையிருந்த இடத்தைப் பார்க்கச் சென்றேன். என்னுடன் நண்பர் ஆனந்தகுமார் வந்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். என்னுடன் யாழ் பல்கலைக்கழகத்துக்கு அவருடனே சென்றிருந்தேன். கோப்பாய்க் கோட்டைக்குச் செல்கையிலும் அவர்தான் வந்திருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. பின்னர் அக்கோப்பாய்க் கோட்டை பற்றி எழுதி வீரகேசரிக்கு அனுப்பினேன். வீரகேசரி 15.3.1981 வாரவெளியீட்டில் அதனைப் பிரசுரித்ததுடன் சன்மானமும் (ரூபா 35) அனுப்பியிருந்தார்கள்.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...