Saturday, July 26, 2025

கல்பனாவின் 'யுகசந்தி'

 

'Veryrare Book' என்னும் முகநூலைத் தற்செயலாகப் பார்த்தேன். உண்மையிலேயே அரிய நூல்கள்,  வெகுசன இதழ்த்தொடர்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய பக்கமிது. இதற்கான இணைய இணைப்பு - https://www.facebook.com/veryrare.book

என் பால்ய பருவத்தில் , நான் வாசிக்கத்தொடங்கியிருந்த சமயம் , கலைமகள் இதழில் ஒரு தொடர்கதை வெளியானது. அதனை எழுதியவர் எழுத்தாளர் கல்பனா. அக்காலகட்டத்தில் கல்கியில் ஓவியர் கல்பனா என்பவர் ஓவியங்கள் தீட்டிக்கொண்டிருந்தார். ஆனால் இவர் கதைகள் எழுதுபவர். இவர் பெண்ணா அல்லது பெண்ணின் பெயரில் எழுதிய ஆணா? தெரியவில்லை. இவரைப்பற்றிய தகவல்களும் இணையுத்தில் கிடைக்கவில்லை. 

 ஆனால், இவரது 'யுகசந்தி' தொடர்கதை மட்டும் நினைவிலுள்ளது. அத்தொடரை நான் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால் முதலாவது அத்தியாயம் ஆற்றங்கரைக் காட்சியுடன் அல்லது வெள்ளப்பெருகுடன் ஆரம்பமானதாக நினைவிலுள்ளது. அத்தொடரைப் பின்னர் வாசிக்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன், ஆனால் வாசிக்கவில்லை.

Friday, July 25, 2025

கவிச்சக்கரவர்த்தியும், கவியரசரும்!


'இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்"


இப்பாடல் கம்பரின் கம்பராமாயணத்தில் வரும் பாடல். இராமனின் கால் பட்டு சாபம் நீங்குகின்றாள் அகலிகை. இதை விசுவாமித்திரர் விபரிப்பதாகக் கம்பர் இப்பாடலை எழுதியிருப்பார்.   

இப்பாடலில் வண்ணம் என்னும் சொல் எத்தனை அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.  

கம்பரின் கவித்துவத்தை வெளிப்படுத்தும் கவிதையிது. கருமை வண்ணமுடைய தாடகையுடனான போரில் , அதாவது 'மை வண்ணத்து அரக்கி போரில்' மழை தரும் கார்மேக வண்ணமுடைய இராமனின் வில்லை இயக்கும் கை வண்ணம் கண்டேன். இங்கு கல்லை மிதித்து அகலிகையின் சாபத்தை நீக்கிய இராமனின் கால் வண்ணம் கண்டேன் என்கின்றார் விசுவாமித்திரர் கூற்றாகக் கம்பர்.  

இங்கு கம்பர் கரிய நிறம் வாய்ந்த தாடகையின் அழகைக் குறைத்து மதிப்பதற்காக மை வண்ணம் அரக்கி என்கின்றார் கம்பர். இதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவ்விதமான புரிதல் இன்றுதானே எமக்கு வந்திருக்கின்றது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இந்தப் புரிதல் இருந்திருக்காது. அதனால் கம்பரைக் குறை கூற முடியாது.



இவ்விதம் வண்ணம் என்னும் சொல்லைப் பலமுறை பாவித்துக் கவிஞர் கண்ணதாசன் அற்புதமானதொரு பாடலை எழுதியிருக்கின்றார். அது 'பாசம்' திரைப்படத்தில் வரும் 'பால் வண்ணம் பருவம்  கம்பர் தன் பாடலில் எட்டு முறை வண்ணத்தைப் பாவித்திருந்தால் , கவிஞர் கண்ணதாசன் பன்னிரண்டு முறை பாவித்திருப்பார். 

இப்பாடலின் இன்னுமொரு சிறப்பு. மெல்லிசை மன்னர்கள் எம்ஜிஆருக்குப் பி.பி.ஶ்ரீனிவாசின் குரலைப்பாவித்திருப்பதுதான். காட்சியின் சூழலுக்கு மென்மையான பாடகர் பி.பி.ஶ்ரீனிவாசின் குரல் பொருந்தும் என்பதால் பாவித்திருக்க வேண்டுமென்று கருதுகின்றேன். உண்மையில் நன்கு பொருந்தத்தான் செய்கிறது.  பி.பி.,ஶ்ரீனிவாஸ், பி.சுசீலா இருவரும் மிகவும் சிறப்பாக இப்பாடலைப் பாடியிருப்பார்கள்.

பாடலைக் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=qYuON1qbTCE&list=RDqYuON1qbTCE&start_radio=1 

Wednesday, July 23, 2025

83 ஜூலை இனப்படுகொலை நினைவுகள்.... - வ.ந.கிரிதரன் -

[ஓவிய உதவி -  நன்றி The Nation.] 

83 ஜூலை இனப்படுகொலை  இலங்கையின் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனை. இலங்கையை  26 வருடங்கள் சமூக யுத்ததில் மூழ்கிப்போக வழி வகுத்த இனப்படுகொலையது.  போர் நாட்டுக்கு மிகப்பெரிய அழிவைத்தந்தது. இரு பக்கத்திலும் படையினர், விடுதலைப்போராளிகள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். பொதுமக்கள் இலட்சக்கணக்கில் உயிரிழந்தனர்.  இலங்கைத் தமிழர் பிரச்சினையை உபகண்ட, சர்வதேசப் பிரச்சினைகளிலொன்றாக உருமாற்றியது கறுப்பு ஜூலையே. கறுப்பு ஜூலையை மறந்து விட்டால் மீண்டும் நாட்டில் இன்னுமொரு கறுப்பு ஜூலை ஏற்படும் நிலை ஏற்படலாம். மீண்டும் நாடு யுத்தத்துக்குள் மூழ்கி விடலாம். 

அந்நிலை மீண்டும் ஏற்படக் கூடாதென்றால் நாட்டில் சகல இன மக்களும் சகல உரிமைகளுடனும் வாழும் நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்தின மக்களும் எவ்வித அச்சமுமற்று, அன்புடன், இணைந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் சந்தேகங்களும் , அச்சமும் ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் நிறுத்தப்பட  வேண்டும். 

"கறுப்பு ஜூலையை நாம் நினைவு கூர வேண்டும். ஏனென்றால் மீண்டுமொரு தடவை அவ்விதமான கறுப்பு ஜூலை தோன்றக்கூடாதென்பதற்காக" என்னும் கருத்தை மையமாக வைத்து ஊடகவியலாளர் டி.பி,எஸ்.ஜெயராஜ் நல்லதொரு ஆங்கிலக் கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரை கறுப்பு ஜூலையின் மூலக் காரணிகள், அதனை நடத்தியவர்கள், ஏற்பட்ட அழிவுகள் எனப் பலதரப்பட்ட விடயங்களை விரிவாக ஆராய்கின்றது.  

ஆம்! 83 ஜூலை இனப்படுகொலையை நாம் மீண்டும் மீண்டும் நினைவு கூர வேண்டும். நினைவு கூர்வோம். மீண்டுமொரு 83 ஜூலை இனப்படுகொலை போன்றதொரு நிகழ்வு  நிகழாதிருப்பதற்காக, புரியப்பட்ட   அநீதிக்கு நீதி கிடைப்பதற்காக, மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம்.

இங்கு கடந்த ஆண்டுகளில் நான் எழுதிய 83 ஜூலை இனப்படுகொலை பற்றிய முகநூல்  நினைவுக்குறிப்புகளிலிருந்து சில குறிப்புகளை (சில எதிர்வினைகளையும்)   இணைத்திருக்கின்றேன்.  இவற்றில் நினைவு கூரப்படுபவையெல்லாம் ,  நினைக்கும்போதெல்லாம் என் நினைவில் தோன்றுபவை. உங்கள் நினைவுகளிலும்தாம்.

Tuesday, July 22, 2025

செக்கு மூலம் எண்ணெய்!


செக்கிழுத்த செம்மல் என்பர் 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரப்பிள்ளையை விபரிக்கையில். காரணம் அவரது ஆங்கிலேயருக்கு எதிரான வர்த்தக , விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளால் அவரைச் சிறையில் அடைத்தது ஆங்கிலேயரின் ஆதிக்க அரசு. சிறையில் செக்கிழுக்க வைத்தது. அதன் காரணமாகவே அவரைச் செக்கிழுத்த செம்மல் என்றும் அழைப்பர். 
 
பலருக்குச் செக்கு என்றால் எப்படியிருக்கும் என்பது தெரியாது, ஆனால் அது பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களுக்கு இப்பதிவு சிறிது விளக்கத்தைத் தருமென்று நம்புகின்றேன். முதலில் செக்கு பற்றித் 'தகவல் திரட்டி' என்னும் முகநூற் பக்கக்குறிப்பைக் கீழே தருகின்றேன்:

Monday, July 21, 2025

நடிகர் திலகத்தின் நினைவாக...


நான் ஆரம்பத்திலிருந்தே வாத்தியாரின் இரசிகன். ஆனாலும்  நடிகர் திலகத்தின் படங்களைப்  பார்ப்பதை என்னால் தவிர்க்க முடிந்ததில்லை. காரணம் அவரது நடிப்பு.   அவரது நடிப்பு மிகை நடிப்பென்றால் அதற்குக் காரணம் அக்காலகட்டத்தின் தேவையாக அது இருந்ததுதான். அதனால்தான் அவர் அப்படி நடித்தார். திரைப்படங்கள் என்பவை கலைக்காக மட்டும் எடுக்கப்படுவதில்லை. வர்த்தகமே அதன் முக்கிய  அம்சம்.  பெரும்பான்மையான இரசிகர்கள் விரும்பியது வசனங்களையும்,  வசனங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுடன் கூடிய நடிப்பையும்தாம்  நடிகர் திலகம் சிறந்த நடிகர் அதனால் அவரால் அக்கால இரசிகர்கள் விரும்பியதைத் தன் நடிப்பால் கொடுக்க  முடிந்தது.   அக்காலகட்டத்தில் என் அம்மா, அப்பாவுக்கு மிகவும் பிடித்த  திரைப்பட ஜோடி சிவாஜி _ பத்மினிதான்.

தமிழ்ச் சினிமா பாட்டிலிருந்து வசனத்துக்கு மாறிக்கொண்டிருந்த வேளையில் அவ்வுலகில் வந்து குதித்தவர்  விழுப்புரம் சின்னையா கணேசன் (சிவாஜி  கணேசன்).  சமுதாயச் சீர்கேடுகளைச் சுட்டெரிப்பதை மையமாகக் கொண்ட திராவிடர்  கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை  சினிமாவைத் தம் கட்சிகளின் பிரச்சாரத்துக்குப் பாவிக்கத்தொடங்கிய காலகட்டத்தில் வெளியான திரைப்படம்  கலைஞரின் வசனத்தில் வெளியான 'பராசக்தி'. அதில் முக்கிய கதாநாயகனாக நடித்ததன் மூலம் , ஒரேயுடியாக உச்ச நட்சத்திரமாகியவர் நடிகர் திலகம்.  அவரே அத்தகையதொரு வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார். தமிழகத்தில் பல இடங்களில் வெள்ளி விழாக் கொண்டாடிய 'பராசகதி' இலங்கையில் 240 நாட்களைக் கடந்து ஓடியது.

Sunday, July 20, 2025

நடிகரும், பாடகருமான மு.க.முத்து மறைந்தார்!


கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மறைவுச் செய்தியைத் தாங்கி வந்தது முகநூல். இவர் கலைஞருக்கும், முதல் மனைவி பத்மாவதிக்கும் பிறந்த முதலாவது குழந்தையே மு.க.முத்து. பத்மாவதி பிரபல பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் சகோதரி. மு.க.முத்துவின் திரைப்படங்களை நான் பார்த்ததில்லை,. ஆனால் அவரது திரைப்படப்பாடல்களை நான் இரசிப்பவன். குறிப்பாக அவரே பாடி நடித்த 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க' பாடலைக் கூறலாம்.


கலைஞரின் மகனாக நான் முதலில் அறிந்தது மு.க.முத்துவையே. குமுதத்தில் கலைஞரின் 'ரோமாபுரிப்பாண்டியன்' தொடராக வெளியான காலத்தில் , அல்லது அதற்குச் சிறிது முன்பாக அல்லது பின்பாக , ஒரு தடவை பிரபலங்களின் குழந்தைகள் எழுதிய ஓரிரு பக்கக் கதைகளை வெளியிட்டிருந்தார்கள். கட்டுரைகளாகவுமிருக்கலாம். சரியாக நினைவிலில்லை. அவ்விதம் ஒரு கதையையோ அல்லது கட்டுரையையோ எழுதியிருந்தார் சிறுவனான மு.க.முத்து.

Monday, July 14, 2025

'அபிநய சரஸ்வதி' சரோஜாதேவி மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!


நடிகை சரோஜாதேவியின் மறைவுச் செய்தியினை இணையம் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல். கலைஞர்கள் அழிவதில்லை. அவர்கள்தம் கலைகளூடு நிலைத்து நிற்பார்கள். சரோஜாதேவியும் அவ்விதமே நிலைத்து நிற்பார்.


என் அபிமான நடிகையர்களில் ஒருவர் அவர். நான் நினைவு தெரிந்து முதல் பார்த்த திரைப்படம் எம்ஜிஆர், சரோஜாதேவி இணைந்து நடித்த திரைப்படமான 'எங்க வீட்டுப் பிள்ளை'. அதன் பிறகு அவர் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த சில திரைப்படங்களே வெளிவந்தன. அவற்றில் என்னைக் கவர்ந்தது அன்பே வா. எம்ஜிஆர் , சரோஜாதேவி காலம் மறைந்து , எம்ஜிஆர் , ஜெயலலிதா காலம் தமிழ்த் திரையுலகில் கோலோச்சத்தொடங்கி விட்டது. ஆனால் அதுதான் சரோஜாதேவியின் நடிப்புக்கு இடம் கொடுத்த பல திரைப்படங்கள் வெளியாகக் காரணமாக அமைந்தது. தாமரை நெஞ்சம், குலவிளக்கு, பணமா பாசமா ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

நானோ எம்ஜிஆரின் இரசிகன். எம்ஜிஆர் , சரோஜாதேவி இணைந்து நடித்த, 1958 - 1965 காலப்பகுதியில் வெளியான பல திரைப்படங்கள் மீள் வெளியீடுகளாக வெளியானபோது அவற்றைச் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பார்த்தேன். அக்காலகட்டத்து எம்ஜிஆர்,சரோஜாதேவி படப்பாடல்கள் பல டி.எம்.எஸ் , பி.சுசீலா இணைந்து பாடி மிகவும் புகழ் பெற்ற பாடல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் மறக்க முடியாத இன்னுமொரு விடயம் - 'எங்க வீட்டுப் பிள்ளை' திரையிடப்பட்டபோது அதற்காக இலங்கைக்கு எம்ஜிஆருடன் சரோஜாதேவியும் வந்திருந்தார். அவர்கள் சென்றவிடமெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வரவேற்றார்கள். பழைய பத்திரிகைகள், சஞ்சிகைகளைத்தேடிப் பார்த்தால் எத்தகைய வரவேற்பு என்பதை அறிந்துகொள்ளலாம்.

அவர் நினைவாக , எனக்கு பிடித்த அவர் நடிப்பில் உருவான திரைப்படப் பாடல்களில் சில:

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...