Thursday, February 22, 2018

கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி.... வ.ந.கிரிதரன் -


கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் நூலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததது. குமரன் புத்தக இல்லம்' பதிப்பகத்தினரால் தமிழகத்தில்; 2009இல் வெளியான நூலது. இதுவரையில் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றிப் பலர் எழுதியிருக்கின்றார்கள். இரசிகமணி கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராசன் என்று பலர், அவர்களது நூல்கள் பெரும்பாலும் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய பொதுவான அறிமுக நூல்களாகத்தான் அமைந்துள்ளன. அவற்றின் முக்கியம் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றீய தகவல்களை வழங்குகின்றன என்பதில்தான் தங்கியுள்ளது. ஆனால் கலாநிதி நா.சுப்பிரமணியனின் மேற்படி நூல் அவற்றிலிருந்தும் பெரிதும் வேறுபடுவது நூலாசிரியரின் ஈழத்து நாவல்கள் பற்றிய திறனாய்வில்தான். ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிய தகவல்களை வழங்கி நல்லதோர் ஆவணமாக விளங்கும் அதே சமயம் ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிய நல்லதொரு திறனாய்வு நூலாகவும் இந்நூல் விளங்குகின்றது. அந்த வகையில் இந்த நூலின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது. இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களிலொன்று: நூலாசிரியரின் இந்த நூலானாது அவர் தனது முதுகலைமானிப் பட்டப்படிப்புக்காக, இலங்கைப் பல்கலைக்கழகப் பேராதனை வளாகத்தில் , ஈராண்டுகள் (1970- 1972) நடாத்திய ஆய்வின் விளைவாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையாகும். வெறும் ஆய்வுக்கட்டுரையாக இல்லாமல் அவரது கடும் உழைப்பினால் நல்லதொரு திறனாய்வு நூலாகவும் மேற்படி கட்டுரை வளர்ச்சியுற்றிருக்கின்றது.

இந்நூல் 1885ஆம் ஆண்டில் வெளியான அறிஞர் சித்திலெப்பையின் 'அசன்பேயினுடைய கதை' லிருந்து 1977ஆம் ஆண்டுவரை வெளிவந்த ஞானரதனின் 'ஞானபூமி' வரை சுமார் 450 நூல்களை ஆராய்கிறது. இந்நூலின் முதல் பதிப்பு 1978இல் வெளியானது. நான் வாசித்தது திருத்தி, விரிவாக்கப்பட்ட அண்மைய பதிப்பு, குமரன் புத்தக இல்லத்தினால் 2009இல்  வெளியான பதிப்பு. அதில் 1977ற்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களை உள்ளடக்கிய பின்னிணைப்புகளுமுள்ளன.

கவிஞர் புவியரசின் மொழிபெயர்ப்பில் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்..... வ.ந.கிரிதரன் -

'கரமசோவ் சகோதரர்கள்' தஸ்தயேவ்ஸ்கியின் மிகச்சிறந்த நாவல் மட்டுமல்ல. உலக இலக்கியத்தின் சிறந்த நாவலாகவும் கருதப்படுவது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பினை 'நியூ செஞ்சுரி புக்ஸ்' பதிப்பகமும் (கவிஞர் புவியரசு மொழிபெயர்ப்பிலும்) , காலச்சுவடு பதிப்பகமும் (நேரடியாக ருஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து 'கரமஸாவ் சகோதரர்கள் என்னும் தலைப்பில்) வெளியிட்டுள்ளன.

நம்மவர்கள் பலர் அவ்வப்போது ஏன் அவரைப்போல் அல்லது இவரைப்போல் எழுத முடியவில்லையே என்று கண்ணீர் வடிப்பதுண்டு. அவர்கள் முதலில் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை வாசிக்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்விதம் வாசித்தால் அவர்கள் ஏன் அவர்கள் குறிப்பிடும் படைப்பாளிகளால் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளைப்போன்ற படைப்புகளை வழங்க முடியவில்லை என்பது புரிந்து நிச்சயம் கண்ணீர் விடுவார்கள்.

மானுட வாழ்வின் இருப்பை, இருப்பின சவால்களை, இருப்பின் இன்பதுன்பங்களை, இருப்பின் நன்மைக்கும் தீமைக்குமிடையிலான மோதல்களை, இருப்பின் நோக்கம் பற்றிய தேடலை தஸ்தயேவ்ஸ்கி எழுதியதுபோல் வேறு யாருமே இதுவரையில் எழுதவில்லை என்பது இதுவரையிலான என் வாசிப்பின் அடிப்படையில் எழுந்த கருத்து. தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளின் ஒவ்வொரு பக்கத்தையும் ஒதுக்கித்தள்ள முடியாது. அது அவரது எழுத்தின், சிந்தனையின் சிறப்பு.

வக்கிரமான உணர்வுகளும், காமமும் மிகுந்த ஒரு பணக்காரத்தந்தை, அவரது மூன்று வகைக்குணவியல்புகளுள்ள மூன்று புத்திரர்கள், அவருக்கும் பிச்சைக்காரியொருத்திக்குமிடையில் முறை தவறிப்பிறந்ததாகக் கருதப்படும் இன்னுமொரு புத்திரன், அவரது வேலைக்காரன், மூன்று புத்திரர்கள் வாழ்விலும் புகுந்துவிட்ட பெண்மணிகள், அந்தப்பெண்மணியிலொருத்திக்கும் மூத்த புத்திரனுக்கும், தந்தைக்குமிடையிலுமான காதல், காம உணர்வுகள், மேலுமிரு சகோதரர்களுக்குமிடையில் வரும் இன்னுமொரு பெண்மணி , ஒரு துறவி என வரும் முக்கியமான பாத்திரங்களை உள்ளடக்கிப் பின்னப்பட்டிருக்கும் மகாநாவல் கரமசோவ் சகோதரர்கள்.

ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

மராத்திய எழுத்தாளரான ஆஷா பகேயின் முக்கியமான நாவல்களிலொன்று 'பூமி' பி.ஆர்.ராஜாராமின் மொழிபெயர்ப்பில் தமிழில் 'சாகித்திய அகாதெமி' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஆஷா பகேயின் படைப்புகளில் நான் வாசித்த முதலாவது படைப்பு இந்த நாவல்தான். ஏற்கனவே சாகித்திய அகாதெமியினரால் வெளியிட்டப்பட்ட வங்க நாவலான 'நீலகண்டப் பறவையைத்தேடி', 'தகழி சிவசங்கரம்பிளையின்' ஏணிப்படிகள்' மற்றும் 'தோட்டி', சிவராம காரந்தின் 'மண்ணும் மனிதரும்', எஸ்.கே.பொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை', எம்.டி.வாசுதேவன் நாயரின் 'காலம்' போன்ற நாவல்களின் வரிசையில் என்னைக்கவர்ந்த இந்திய நாவல்களிலொன்றாக 'பூமி' நாவலும் அமைந்து விட்டது.

இந்த நாவலின் கதையும் வித்தியாசமானது. மராத்திய டாக்டர் ஒருவருக்கும், தமிழ் நர்ஸ் ஒருவருக்கும் மகளாகப்பிறந்தவளே நாவலின் நாயகி. சிறு வயதிலேயே அவள் தந்தையை இழந்து விடுகின்றாள். தாயாரே அவளைக் கண்ணுங்கருத்துமாக வளர்த்து வருகின்றார். நாயகியின் மாணவப்பருவத்திலேயே தாயாரும் நோய்வாய்ப்பட்டு இறக்கும் சூழ்நிலை உருவாகுகின்றது. தாயின் இறுதிக்காலம் மனதை அதிர வைக்கும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளது. நாவலின் முக்கியமான பகுதிகளில் அதுவுமொன்று. தாயாரும் இறந்து விடவே தனித்து விடப்படும் சிறுமியான நாயகியை அவளது தந்தையின் மராத்தியச் சகோதரி பம்பாய்க்குத் தன்னுடன் அழைத்துபோகின்றாள்.

நாவல் தமிழ்நாடு, பம்பாய் என இரு நகரங்களில் நடைபோடுகிறது. அத்தையுடன் வாழும் தன் இளம் பருவத்தில் பகுதி நேர வேலையாக மறைந்த பேராசிரியர் ஒருவரின் செல்வந்த மனைவிக்கு பணிவிடை செய்யும் பணிப்பெண்ணாகவும் வேலை பார்க்கின்றாள். அச்சமயத்தில் பேராசிரியரின் வீட்டு நூலகத்து நூல்களெல்லாம் அவளது இலக்கியப்பசியைத்தீர்த்திட உதவுகின்றன.

அழியாத கோலங்கள்: சாண்டில்யனின் கடல் புறா, ஓவியர் லதாவின் ஓவியங்களுடன். - வ.ந.கிரிதரன் -

-ஓவியர் லதாவின் ஓவியம்: கடல்புறா அத்தியாயம் ஒன்றில்.-



அண்மையில் இணையத்தில் ஓரத்தநாடு கார்த்திக் என்னும் அன்பரின் வலைப்பதிவில் என் பால்ய காலத்தில் நான் வாசித்த பல வெகுசனப்படைப்புகளை மீண்டும் அவை தொடராக வெளிவந்தபோது வெளியான ஓவியங்களுடன் வாசிக்க முடிந்தது. அக்காலகட்டத்தில் கல்கி, விகடன், குமுதம், கலைமகள், தினமணிக்கதிரி, ராணி , கல்கண்டு என வெளியான வெகுசன இதழ்களில் தொடராக வெளிவந்த படைப்புகள் பலவற்றை நான் சேகரித்து, 'பைண்டு' செய்து வைத்திருந்தேன். அவையெல்லாம் 1983-2009 வரையில் ஈழத்தில் நிலவிய அரசியல் சூழலில் அழிந்து விட்டன. இந்நிலையில் அண்மையில் அன்பர் ஓரத்தநாடு கார்த்திக்கின் தளத்தில் பல படைப்புகளைக்கண்ட போது , அதுவும் வெளியானபோது வெளிவந்த ஓவியங்களுடன் பார்த்தபோது என் சிந்தனைக்குருவி மீண்டும் அந்தக்காலத்துக்கே சிறகடித்துச்சென்று விட்டது. அவ்விதம் வெளியான படைப்புகளில் ஒருபோதுமே சாண்டில்யனின் 'கடல்புறா'வினை என்னால் மறக்க முடியாது.

அழியாத கோலங்கள்: பூங்குழலி - அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்? - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் புனைவதிலும் வல்லவர்கள். அது மட்டுமல்ல இருவருமே தம் நாவல்களில் வரும் பாத்திரங்களுக்கேற்பக் கவிதைகள் எழுதி, தம் நாவல்களில் இணைப்பதில் வல்லவர்கள். கல்கி தன் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஓடக்காரப்பெண் பூங்குழலியின் உணர்வுகளை மையமாக வைத்துக் கவிதையொன்று எழுதியிருப்பார். அந்தக் கவிதை ஒரு முறை வாசித்தாலும் வாசிப்பவர் நெஞ்சினை விட்டு அகலாத தன்மை மிக்கது.

'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?' என்னும் அவரது கவிதையானது ஓடக்காரப்பெண் பூங்குழலியின் சோகம் ததும்பிய நிலையினைத்தெரிவிப்பது. பொன்னியின் செல்வன் நாவலில் வரும் அந்தக்கட்டத்தினையும், அந்தக்கவிதை வரிகளையும் என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. ஒரு படைப்பானது இது போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிச்சிறந்து விளங்குகின்றது.

அந்தப்பாடலும், அது பற்றி நாவலில் வரும் கல்கியின் வர்ணனையையும் இங்கு, தற்போது நீங்கள் வாசிக்கலாம். அது கீழே:

அழியாத கோலங்கள்: நா.பா.வின் 'குறிஞ்சி மலர்' - நிலவைப் பிடித்துச் - சிறு கறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதிந்த முகம்! - வ.ந.கிரிதரன் -


- நா.பார்த்தசாரதி -
நா.பார்த்தசாரதியின் 'குறிஞ்சி மலர்'நா.பார்த்தசாரதிஎன் பதின்ம வயதுகளில் எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் நாவல்களை நான் இரசித்து வாசித்திருக்கின்றேன். அவர் தமிழ்ப்பண்டிதராதலால், பழந்தமிழ் இலக்கியத்தில் அவருக்குள்ள புலமையினை அவரது படைப்புகளினூடு உணர முடியும். சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் எனத்தமிழரின் பல்வகை இலக்கியப்படைப்புகளின் தாக்கங்களும் அவற்றினூடு விரவிக்கிடக்கும்.

பாத்திரப்படைப்பு, மொழி ஆகியவற்றுக்காக அவரது படைப்புகளை நான் என் பதின்ம வயதுகளில் விரும்பி வாசித்திருக்கின்றேன். அவரது படைப்புகளில் வரும் மாந்தர்களெல்லாரும் , சாதாரண மானிடர்களை விட ஒரு படி மேலானவர்கள்; இலட்சிய நோக்கு மிக்கவர்கள்; குறிஞ்சி மலர், பொன் விலங்கு நாவல்களில் வரும் அரவிந்தன், பூரணி, சத்தியமூர்த்தி போன்றவர்கள். இது பற்றி அவரிடமே ஒருவர் கேள்வி கேட்டிருந்தபோது அதற்கு அவர் அவ்விதமான பாத்திரங்களை வைத்து எழுதுவதிலென்ன தவறு என்று கேட்டதை எங்கோ வாசித்திருக்கின்றேன்.

அவரது நாவல்கள் அதிகமானவற்றில் முடிவு அவலச்சுவையிலிருக்கும். [ இவரைப்போன்ற இன்னுமொருவர் அக்காலகட்டத்தில் கொடி கட்டிப்பறந்த எழுத்தாளர் ஜெகசிற்பியன். அவரது படைப்புகளும் பெரும்பாலும் துன்பத்திலேயே முடிவுறும்.]

பாரதியும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும் - வ.ந.கிரிதரன் -

மகாகவி பாரதியார்ஒரு சில ஆய்வாளர்கள் பாரதி ஐரோப்பியப் பெண்களை விடுதலை பெற்ற பெண்களாகக் கருதியதாகவும் அதன் மூலம் அவனால் பால் கவர்ச்சியையே விற்பனைப் பண்டமாகப் பயன்படுத்தும் முதலாளித்துவத்தை அறிய முடியவில்லையென்றும் கருதுகின்றார்கள். இது மிகவும் தவறான கூற்று. உண்மையில் பாரதி அப்படித்தான் கருதியிருந்தானாவென்றால் அதுதானில்லை. அவனது 'மாதர்' தொகுதியிலுள்ள 'நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்' என்ற கட்டுரை இதனைத்தான் விளக்கி நிற்கின்றது.

"ஆண்,பெண் இருபாலாரும் பரிபூர்ண சமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இரு பாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டைச் சமைக்க வேண்டுமென்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மையான நோக்கம்" என மேற்படி கட்டுரையில் ஓரிடத்தில் ஐரோப்பிய நாகரீகத்தின் சமவுரிமை பற்றிய நோக்கு பற்றிக் குறிப்பிடும் பாரதி மேற்படி கட்டுரையில் இன்னுமோரிடத்தில் பின்வருமாறு கூறுகின்றான். 

"...அவற்றைப் பார்க்கும் போது நவீன ஐரோப்பிய நாகரீகம் என்று புகழப்படும் வஸ்துவின் நியாயமான, உயர்ந்த பக்குவ நிலமை மேற்படி போல்ஷ்விக் விவாக சம்பிரதாயங்களீல் எய்தப்பட்டிருகிறதென்று தெளிவாக விளங்குகின்றது...  பெண்களிற்கு விடுதலை தாங்கள் வேறுபல ஜாதியர்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப்பதே தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்களென்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றாமென்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள். அந்த வகையில் பார்த்தால், ஐரோப்பாவின் இதர பகுதிகளைக் காட்டிலும் நவீன ரஷ்யா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ளதென்பது ப்ரத்யட்மாகத் தெரிகின்றது..."

இவையெல்லாம் விளக்கி நிற்பவை தானென்ன? 'ஆணிற்குப் பெண்நிகர்' என்னும் கருத்தை வலியுறுத்தும் ஐரோப்பிய நாகரீகத்தின் நோக்கினை வரவேற்றாலும், உண்மையிலேயே ஐரோப்பாவின் ஒருபகுதியான நவீன ரஷ்யாவிலேயே பெண்களின் நிலைமை சிறப்பாகவிருப்பதாக அவன் கருதுகின்றான். இதனையே மேற்படி கட்டுரையின் இறுதிப் பகுதியில் வரும் பின்வரும் பகுதி உறுதிப்படுத்துகின்றது.

பாரதி ஒரு மார்க்ஸியவாதியா? - வ.ந.கிரிதரன் -

மகாகவி பாரதியார்பாரதியார் ருஷ்யப் புரட்சியினைப் பாராட்டி வரவேற்று 'புதிய ருஷ்யா' என்னும் கவிதையில் பின்வருமாறு பாடுகின்றார். "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு/ மேன்மையுறக் குடிமை நீதி/கடியொன்றெழுந்தது பார் குடியரசென்று/உலகறியக் கூறிவிட்டார் அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது /அடிமையில்லை அறிக என்றார்/இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான்/ கிருதயுகம் எழுக மாதோ". இதன் மூலம் ருஷ்யப் புரட்சியினை இனங்கண்டுகொண்டு முதன்முதலாகப் பாடிய இந்தியக் கவிஞனென்ற பெருமையினையும் பாரதியாரே தட்டிக் கொள்கின்றார். பாரதியின் 'மாதர் விடுதலை' பற்றிய கவிதைகள், கட்டுரைகள், 'கியூசின்' என்னும் வீரமாதினைப் பற்றிய கட்டுரைகள், அம்மாதின் கவிதை மொழிபெயர்ப்புகள், புதிய ருஷ்யாவைப் பற்றிய கவிதை, 'செல்வம்', 'தொழிலாளர்' என்னும் தலைப்பிலான கட்டுரைகள், மற்றுமவர் தத்துவப் பாடல்கள் இவையாவுமே நமக்குக் கூறி நிற்பவை தானென்ன? பாரதி ஒவ்வொரு விடயத்தினைப் பற்றியும் பல்வேறுவகைப்பட்ட கருத்துகளையும் வெகு நுணுக்கமாகப் பரிசீலித்துள்ளாரென்பது மட்டுமல்ல, சமகாலத்து நடப்புகளையும் அறிந்துள்ளாரென்பதையும்தான்.

இன்றைய உலகில், முரணான பல்போக்குச் சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பார்வைகளில் பாரதியினைக் கண்டு புளகாங்கிதமடைந்து கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியின் உண்மையான நிலைப்பாட்டினை அறிந்து கொள்ள முயல்வது மிகவும் அவசியம். இது பற்றிய அவனது முரண்பட்ட போக்குகளை, தேடலை அவனது எழுத்துகளினூடே அறிந்து கொள்ள முயலவதே சாலச் சிறந்தது.

இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் , ஒரு பதிவுக்காக..... வ.ந.கிரிதரன் -

வ.ந.கிரிதரன்
இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் , ஒரு பதிவுக்காக, இங்கு தரப்படுகின்றன. பதிவு செய்தல் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை. பதிவு செய்தலென்பது விமர்சனமல்ல. இணையத்தில் வலைப்பதிவுகளினூடு, மின்சஞ்சிகைகளினூடு எனப் பல்வேறு வழிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தையும் பதிவு செய்கின்றார்கள். இணையம் தரும் வசதியினைப் பாவித்துப் படைப்புகள் பற்றிய விபரங்களைப் பலருடனும் பகிரிந்துகொள்வதன் மூலம் ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள முடிகிறது.  அது பயனுள்ளது. ஆக்கபூர்வமானது. படைப்புகள் வாசகர்களைச் சென்றடைவதற்கு இவ்விதமான பதிவுகள் முக்கியமானவை. இன்று காலம் மாறி விட்டது. இணையம் படைப்புகளை உடனுக்குடன் உலகின் சகல மூலைகளுக்கும் கொண்டு செல்கின்றது. மிகுந்த வல்லமை மிக்க ஊடகமான இணையத்தைத் திறனாய்வாளர்கள் மிக அதிக அளவில் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நினைக்கின்றேன்.

1. தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட, நடத்துகின்ற இணைய சஞ்சிகைகளான திண்ணை, ஆறாந்திணை, அம்பலம், இசங்கமம், கூடல் போன்றவற்றில் எனது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.

2. எழுத்தாளர் பென்னேஸ்வரனால் வெளியிடப்படும் 'வடக்கு வாசல்' சஞ்சிகை சார்பில் வெளியான 'இலக்கிய மலர் 2008' இல் வெளியான கட்டுரை: இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்!  - வ.ந.கிரிதரன்

'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' - வ.ந.கிரிதரன் -

['பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா?' என்னும் தலைப்பில் , அவனது 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையினை முன்வைத்துக் கட்டுரையொன்றினை மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ் சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையில் எழுதியிருக்கின்றேன். 1981 அல்லது 1982ஆம் ஆண்டு வெளிவந்ததாகவிருக்க வேண்டும். அப்பொழுது அதன் ஆசிரியராகவிருந்தவர் பொறியியலாளர் பிரேமச்சந்திரன். எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரனை நான் முதன் முதலில் அறிந்துகொள்ளக் காரணமாகவிருந்ததும் அக்கட்டுரையே. 'நுட்பத்தில்' வெளிவந்த அக்கட்டுரையினை வாசித்துவிட்டு என்னுடன் தொடர்புகொண்டார். அதன் பின்னர் அக்கட்டுரை கைவசமில்லாத காரணத்தால் மீண்டும் 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு' என்னும் தலைப்பில் 'டொராண்டோ'வில் வெளிவந்த 'தாயகம்' (சஞ்சிகை/ பத்திரிகை)யில் எழுதினேன். பின்னர் அக்கட்டுரை 'பதிவுகள்' இணைய இதழிலும், 'திண்ணை' இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது. அக்கட்டுரையினை எழுத்தாளர் (சீர்காழி) தாஜ் தனது வலைப்பதிவான 'தமிழ்ப்பூக்க'ளிலும் மீள்பிரசுரம் செய்து அது பற்றிய தனது கருத்தினையும் பதிவு செய்திருக்கின்றார். - வ.ந.கி]  

தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சரியானதொரு தீர்வில்லை. 'இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள்,இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை' என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் 'கருத்து முதல்வாதிகள்'. இவர்கள் 'சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது' என்றும், 'இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு' என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல 'இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே' என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் 'பொருள் முதல்வாதம்' எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் 'பொருள்முதல்வாதிகள்' எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி 'ஆன்மா நிலையானது, அழிவற்றது என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே'. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் 'அப்படி எதுவுமில்லை' என்கின்றார்கள். 'இவ்வியற்கையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களே உயிரினங்கள் உருவாகக் காரணம்' என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியை ஆராய்வோமாகில் அவனும் இந்தப் பிரச்சினையை அசட்டை செய்து விடவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம். பாரதியின் கீழுள்ள கவிதை வரிகள் அவனை ஒரு கருத்து முதல்வாதியாகக் காட்டுகின்றன. 'அல்லா' என்ற கவிதையில் பாரதி பின்வருமாறு பாடுகின்றான்:

என்னைக் கவர்ந்த ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்'. - வ.ந.கிரிதரன் -

எனது மாணவப் பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களிலொருவர் ஜெகசிற்பியன். அவரது சரித்திரக் கதைகளில் 'நந்திவர்மன் காதலி', 'பத்தினிக்கோட்டம்' ஆகியவை எனக்கு அக்காலகட்டத்தில் பிடித்த நாவல்கள். சமூக நாவல்களைப் பொறுத்தவரையில் கல்கியில் தொடராக வெளிவந்த 'கிளிஞ்சல் கோபுரம்', 'ஜீவகீதம்' ஆகியவை மிகவும் பிடித்திருந்தன. நா.பார்த்தசாரதி, அகிலன் போன்ற வெகுசனப் படைப்புகளை வழங்கிய பலரின் படைப்புகளை அக்காலகட்டத்தில் பிடித்திருந்தாலும், தற்போது வாசிக்கும்போது அன்று என்னைக் கவர்ந்ததைப்போல் இன்று பெரிதாகக் கவர்வதில்லை. ஆனால் ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்' நாவலை அண்மையில் வாசித்தபொழுது அன்று என்னைக் கவர்ந்ததுபோல் இன்றும் என்னைக் கவர்ந்திருந்தது எனக்கே ஆச்சரியத்தைத் தந்தது. இதற்குக் காரணமென்னவாகவிருக்குமெனச் சிறிது சிந்தித்துப் பார்த்தேன். ஜெகசிற்பியனின் படைப்புகள் இன்றும் என்னைக் கவர்வதற்கு முக்கிய காரணங்களாக அவரது நாட்டுப்பற்று மிக்க, சமுதாயப் பிரக்ஞை மிக்க எழுத்து , பாத்திரப்படைப்பு, படைப்பினூடு அவர் தெரிவிக்கும் கருத்துகள் மற்றும் வர்ணனைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாமென்று நினைக்கின்றேன்.

 அவரது 'ஜீவகீதம்' நாவல் இந்திய மொழிகள் பலவற்றில் 'தேசிய புத்தக அறக்கட்டளை' யினால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவரது சமூக நாவல்களில் மிகவும் புகழ்பெற்ற நாவலாக இதனைக் கூறலாம். இந்நாவல் கூறும் கதைதான் என்ன?

பர்மாவுக்கு உழைப்புக்காகத் தந்தையுடன் தன் சிறுவயதில் புலம் பெயர்ந்த சபேசன் பர்மாவிலிருந்து அகதியாகத் துரத்தப்பட்டு மீண்டும் தாயகமான தமிழகத்துக்குத் திரும்புகின்றான். அவ்விதம் திரும்புகையில் அவனை முதல் கப்பலில் அனுப்பிவிட்டு அடுத்த கப்பலில் தந்தை வருவதாக ஏற்பாடு. சென்னைக்கு இவ்விதம் அகதியாக வரும் சபேசன் தனது சொந்த ஊரில் காத்திருக்கும் தாயாரைச் சந்திப்பதற்கு முன்பாகத் தந்தை அடுத்த கப்பலில் வரும் வரையில் சென்னையில் தங்கியிருக்க முடிவு செய்கின்றான். அங்கு நச்சி என்கின்ற நச்சினார்க்கினியனைச் சந்திக்கின்றான். நச்சி என்னும் இந்தப் பாத்திரம் தமிழ் இலக்கிய உலகில் இதுவரை யாரும் சந்தித்திராத வித்தியாசமான பாத்திரமென்று நான் நினைக்கின்றேன். சென்னைப் பேச்சுத்தமிழில் அசத்தும் இவனுக்கும், கணவனை இழந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணொருத்தியான லூசிக்குமிடையிலான காதல், , அதற்காக அவள் முன் தான் ஒரு உதவி இயக்குநர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர் என அவனெடுக்கும் பல்வேறு அவதாரங்கள் நாவலின் சுவையினைக் கூட்டுபவை. இவனது பிறப்பும் வித்தியாசமானது. இவனது தாயான கன்னியம்மாள் ஆங்கிலோ இந்தியக் குடும்பமொன்றின் பணிப்பெண்ணாக வேலை பார்க்கின்றாள். உலக மகா யுத்தக் காலகட்டம் அது. அக்காலகட்டத்தில் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் கறுப்பின இராணுவச் சிப்பாய் ஒருவனுக்கும், கன்னியம்மாளுக்கும் ஏற்பட்ட தொடர்பில் பிறந்தவன்தான் நச்சி.  அவனது தோற்றமும  ஈர் இனக்கலப்பின் விளைவினை வெளிப்படுத்தும் தன்மையானது.

தேவகாந்தனின் கந்தில் பாவை பற்றிச்சில கருத்துகள். - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் தேவகாந்தனின் 'கந்தில்பாவை'யை இன்று வாசித்தேன். இது நாவல் மீதான முதற் கட்ட வாசிப்பு. ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைகளை உள்ளடக்கிய நாவல் இது. வெவ்வேறு காலகட்டங்களை உள்ளடக்கிய நான்கு பகுதிகள். ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு அத்தியாயமாக்கி நூலை வகுத்திருக்கின்றார் தேவகாந்தன். பொதுவாக பகுதி 1, பகுதி 2, பகுதி 3 மற்றும் பகுதி 4 என்று பகுதிகளாகப் பிரித்திருப்பார்கள். அப்பகுதிகள் மேலும் அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு பகுதிகள் அத்தியாயங்களாகியிருக்கின்றன. தேவகாந்தன் இவ்விதம் நூலினை வகுத்ததற்கு ஏதாவது காரணம் இருக்குமோ அல்லது தற்செயலாக நடந்த நாவலின் பிரிப்பா என்பதை நாவலாசிரியரே அறிவார்.

இந்த நாவல் ஒரு குடும்பத்தின் பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கையை விபரிக்கும் வகையில் பின்னப்பட்டிருப்பதால்,  ஒவ்வொரு 'அத்தியாய'மும் (அல்லது 'பகுதியும்') பல்வேறு காலகட்டத்து ஆளுமைகளின் வாழ்வினை விபரிப்பதால், நாவல் கூறும் பொருளையும், பாத்திரப்படைப்புகளையும் , கதைப்பின்னலையும் தெளிவாக அறிவதற்கு, நாவல் மீதான முழுமையான வாசிப்பு அவசியமானது. அத்தியாயங்களில் ஒன்றைத்தவற விட்டாலும் நாவலின் முழுப்பரிமாணத்தையும் அடைவதில் சிரமம் ஏற்படும் சாத்தியமுள்ளது.

இந்த நாவலின் கூறு பொருள், பாத்திரப்படைப்பு, நான்கு தலைமுறைகளையும் உள்ளடக்கிய கதைப்பின்னல் (Plot) ஆகியவை நன்கு அமைந்திருக்கின்றன. அவை எழுத்தாளர் தேவகாந்தனின் எழுத்துச்சிறப்பினை வெளிப்படுத்துகின்றன. மேலும் இந்த நாவல் பல்வேறு காலகட்ட வாழ்வியல் அனுபவங்களை உள்ளடக்கியதால் பன்முகப் பரிமாணங்களைக்கொண்டதொரு நாவலாக உருவாகியிருக்கின்றது.

இந்த நாவலை வாசிக்க முன் . முன்னுரையில் நாவலாசிரியர் கூறும் பின்வரும் கூற்றினைச் சிறிது கவனியுங்கள்:

சரத்சந்திரரின் தேவதாஸ் பற்றி... வ.ந.கிரிதரன் -

அண்மையில் மறைந்த எழுத்தாளரும், பிரபல மொழிபெயர்ப்பாளருமான சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில்  வெளியான வங்க நாவல்கள் அல்லது படைப்புகள் எதனையாவது எங்கு கண்டாலும் எடுத்து வாசிக்கத்தவறுவதேயில்லை. அவரது மொழிபெயர்ப்பில் வெளியான வங்க நாவலான 'நீல கண்டப்பறவையைத்தேடி ' வாசித்ததிலிருந்து ஆரம்பித்த என் விருப்பங்களில் இதுவுமொன்று. மொழிபெயர்ப்பு என்பதே தெரியாத வகையில் அற்புதமாக விளங்குபவை இவரது மொழிபெயர்ப்புகள். அதுவே இவரது மொழிபெயர்ப்பின் சிறப்பும் கூட.

இவரைப்போல் இன்னுமொருவர் ஞாபகமும் கூட வருகிறது. எழுபதுகளில் என் மாணவப்பருவத்தில் கா.ஶ்ரீ.ஶ்ரீ.யின் மொழிபெயர்ப்பில் வெளியான பிரபல மராட்டிய நாவலாசிரியரான காண்டேகரின் படைப்புகளை ஒரு வித வெறியுடன் தேடிப்பிடித்து வாசித்திருக்கின்றேன். காண்டேகரின் நாவல்களில் வரும் 'வாழ்க்கையென்றால் புயல்' போன்ற வசனங்களை விரும்பி வாசித்த அப்பருவத்து நினைவுகள் இப்பொழுதும் அவ்வப்போது தோன்றுவதுண்டு.

அண்மையில் டொராண்டோவிலுள்ள பொதுசன நூலகத்தின் ஸ்கார்பரோ கிளையொன்றில் சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான தேவதாஸ் நாவலின் பிரதியொன்றைக்கண்டபோது , அம்மொழிபெயர்ப்பு சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான காரணத்தினால் எடுத்து வாசிக்க விரும்பி இரவல் பெற்று வந்தேன். , 'நல்லநிலம்' பதிப்பக வெளியீடாக வெளீவந்த பிரதி இது.  தேவதாஸ் நாவலை எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளருமான த.நா.குமாரசாமியும் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார். ஆனால் அந்த மொழிபெயர்ப்பினை நானின்னும் வாசிக்கவில்லை.

ஏற்கனவே திரைப்படம் மூலம் எல்லாருக்கும் நன்கு அறிமுகமான கதை. வாசிப்பதில் அப்படியென்ன பெரிதாக இருக்கப்போகின்றது என்றொரு எண்ணமும் கூட எழுந்தாலும். மொழிபெயர்ப்பாளரின் மேலிருந்த விருப்பு காரணமாக எடுத்து வந்து வாசித்தேன்.

'காவியத்துக்கு ஒரு மஹாகவி!' - வ.ந.கிரிதரன் -


காவியத்துக்கு ஒரு மஹாகவி' என்று அழைக்கப்படக்காரணமாக இருந்த காவியம் மஹாகவியின் 'கண்மணியாள் காதை' காவியம். அவலச்சுவை மிக்க காவியம். தீண்டாமைக்கொடுமையினை விபரிக்கும் குறுங்காவியமிது. கவிஞர் 'சடங்கு' என்று 'விவேகி'யில் எழுதிய தனது குறுங்காவியத்தின்  நாயகனான செல்லையாவை வைத்து , லடீஸ் வீரமணிக்காக வில்லுப்பாட்டாக , இன்னுமொரு கோணத்தில் எழுதிய துயர காவியம் 'கண்மணியாள் காதை' . குறுங்காவியமானாலும் அதில்வரும் பாத்திரங்களான கண்மணியாளையும், செல்லையனையும் படித்தவர்களால் மறக்கவே முடியாது. அவ்வளவிற்குப் பாத்திரப்படைப்பு நன்கு அமைந்திருந்த காவியமது. இக்காவியம் முதலில் அன்னை வெளியீட்டகம் (யாழ்ப்பாணம்) என்னும் பதிப்பகத்தால் நவம்பர் 1968இல் நூலாக வெளிவந்தது. மேலும் 'கண்மணியாள் காதை' தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் லடீஸ் வீரமணி குழுவினரால் வில்லுப்பாட்டாக மேடையேறியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அது பற்றி 'ஈழநாடு' பத்திரிகையின் வாரமலரில் வெளிவந்த 'தேனி'யின் விமர்சனம்  'காவியத்துக்கு ஒரு மஹாகவி; வில்லுப்பாட்டுக்கு ஒரு வீரமணி' என்ற தலைப்புடன் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்படி 'கண்மணியாள் காதை'யும் எனக்கு மிகவும் பிடித்த காவியங்களிலொன்று. அதில்வரும் 'கண்மணி', 'செல்லையன்' ஆகியோர் மறக்க முடியாதவர்கள். ஒரு விதத்தில் வாசிக்கும்போது அதன் பெயரும், பாடு பொருளும், காவியத்தில் வரும் சில கவிதை வரிகளும் சிலப்பதிகாரத்தை நினைவுக்குக் கொண்டுவரும் குறுங்காவியமது. காவியத்தை இரு கூறுகளாகக் கவிஞர் பிரித்திருப்பார். முதலாம் கூறு: வெண்ணிலவு காவியத்தின் இன்பமான பக்கத்தை விபரித்தால், இரண்டாம் கூறான 'காரிருள்' காவியத்தின் துன்பகரமான பக்கத்தை விபரிக்கும்.  அக்காவியத்தில் என்னை மிகவும் கவர்ந்த வரிகளாகக் கீழுள்ளவற்றைக் குறிப்பிடலாம்:

"யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு
யாசகன் மன்ன னிடம் இருந்தோர்
பாழைப் பரிசு பெற் றான்!" எனக் கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு -
பாழைப் பரிசு பெற் றாலும், அப் பாலையைப்
பச்சைப் படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத னால், இன்று
வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்!

"ஆழக் கடலுள் அமிழ்ந்தன வே எங்கள்
அன்றைப் பெரும்புகழ்; ஆதலினால்,
வீழத் தொடங்கி முடிந்தன வாம் பல
விந்தை!" என்றோர் கதை வந்ததுண்டு -
வீழத் தொடங்கிய விந்தை முழுவதும்
மீட்டுக் கொடுத்த பெருமையிலே
'ஈழத் தமிழகம்' என்று நிலம் தனில்
இன்று நிமிர்ந்தது யாழ்ப்பாணம்!

"ஆறு நடந்து திரிந்த வயல்கள்
அடைந்து கதிர்கள் விளைந்திட, வான்
ஏறி உயர்ந்த மலை ஏதும் இல்லையே!"
என்ற ஒரு கதை சொல்வதுண்டு -
"ஏறி உய்ர்ந்த மலை இல்லை ஆயினும்
என்ன? இருந்தன தோள்கள்!" என்றே
கூறி, உழைத்த பின் ஆறிக், கலைகளில்
ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்!


---
ஆழ நீர் கொண்டு வாழ இளைஞர்
அகழ்கின் றார் தம் நிலத்தினைத் தானே!


--

காவிய நாயகியான கண்மணியாள் பற்றி வரும் வரிகள்:

பெண் ணிருக்கும் அழகை யெல்லாம்
பேணி வைத்த பொற் குடமாம்.
விண்ணவர்க்கும் எட்டாது
விளைந்திருக்கும் நிலத் தமுதாம்.

கண் ணிமிர்த்தி அவள் பார்த்தால்,
கண்டவர்கள் மறப்ப தில்லை.
மண் மிதித்தம் மயில் நடந்தால்,
மண் கூடச் சிலிர்ப்ப துண்டு.

திங்கள் அவள் முகமளவு.
செழுங் கூந்தல் மழை யளவு.
தங்கம் அவள் நிறமளவு.
தயிர் அவளின் மொழியளவு.

கொங்கை இரு செம்பளவு.
கொடி இடையோர் பிடியளவு.
பொங்கும் அவள் அங்கம் ஒரு
பொல்லாத பாம்பளவு!


செல்லையன் தனது வயலில் துலா மிதிக்கின்றான். கண்மணியாளோ நாற்று நடுகின்றாள். அவர்களுக்கிடையில் நிகழும் உரையாடலைக் கீழுள்ள  வரிகள் புலப்படுத்தும்.  செல்லையனுக்கும் , கண்மணியாளுக்குமிடையில் நிலவும் காதலை விபரிக்கும் வரிகள் இவை.

"நாற்றுப் பிடி எடுத்து
நாற்று நட்டு நான் இருக்க,
நாற்றுப் பிடி பிடியில்
நழுவுவது தான் எதற்கு?"

"சேற்றில் சதிர் மிதித்துச்
சின்ன இடை நீ வளைக்க,
நேற்றுச் சிரித்தபடி
நின்றவள் நி னைப்பெனக்கு!"

"நேற்றுச் சிரித்துவிட்டு
நின்றவள் நி னைப்பிருந்தால்,
காற்றிற் பறந்து விடும்
கதை விடுதல் தான் எதற்கு?"

"காற்றில் பறந்து வரும்
காவியத்தோ டாவி செல்ல,
ஏற்றத் துலா நடந்தே
இளைக்கும் உடல் இங்கெனக்கு!"

"ஏற்றத் துலாவினிலே
ஏறி நிற்கும் மன்னவர்க்குச்
சேற்றிற் கிடக்கும் ஒரு
சிறிய மலர் ஏன்? எதற்கு?"

"சேற்றிற் கிடைக்கும் அத்
திரு மலரோ இல்லை யென்றால்,
சோற்றைப் பிற கெதற்கு?
சொல்லடி இப் போதெனக்கு!"


மேற்படி காவியத்தின் முடிவு துயரகரமானது. செல்லையன் ஊர் இளைஞர்களுடன் கூடி, கலட்டியான தரையை உழைப்பால் பண்படுத்தி, அங்கு அவ்வூரின் தாழ்த்தப்பட்ட சமூகத்து மக்களைக் குடி அமர்த்துகின்றான். தந்தையின் எதிர்ப்பையும் மீறி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கண்மணியாள்மீது காதல் கொண்டு, அவளையே திருமணம் செய்து வாழ்க்கையைத் தொடங்குகின்றான். இவ்விதமாகக் காதலர்கள் தம் மணவாழ்வைத் தொடங்கும் சமயத்தில் நீண்டகாலமாகக் கண்மணியாளின் அழகில் ஆசை வைத்திருந்த சந்திக்கடை முதலாளி, அடியாட்களை அனுப்பி, செல்லையனைக் கொலை செய்து, கண்மணியாளைக் கவர்ந்து சென்று, தன் ஆசைக்கு இணங்க வைக்க முயல்கின்றான். அப்பொழுது அங்கிருந்து தப்பிச் செல்லும் கண்மணியாளின் நிலையைக் கவிஞர் இவ்விதம் விபரிப்பார்:

ஓடுகின்றாள், ஓடுகின்றாள்,
ஓர் இரண்டு நாய் குரைக்கப், பேய் துரத்த,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...
சேலையின் முன்றானை காற்றினிலே
செல்ல, இடை மின் நுடங்க,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...
பால் முகத்தின் மேல் வியர்வை
பாய, விழி நீர் பெருக,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...


இவ்விதம் ஓடுமவள் முத்துமாரியம்மன் ஆலயத்தை அடைகின்றாள்.  அவளுக்கேற்பட்ட அநீதிக்கெதிராகக் கவிஞர் மாரியம்மனிடம் நீதி கேட்கின்றார்.

மாரியம்மன் வாசல் வழி
வந்தாளே கண்மணியாள்.
ஊரின் ஒரு புறத்தே
உறங்கினையோ மாரியம்மா?
நல்லான் ஓர் நல்லவளை
நாடுவது நாத்திகமோ?
எல்லாரும் ஒத்த குலம்
என்று சொன்னால் ஏற்காதோ?

ஏழை இருக்க நிலம்
ஈதலும் ஓர் ஏமாற்றோ?
வேள்வி மறுப்பதுவும்
வேண்டாத வெஞ் செயலோ?
பாழை விளைத்திடுதல்
பாதகமோ, பேசடியே!
கூடி உழைத்தல்
கொடுமை என்றோ கூறுகிறாய்?

ஏடி, முத்து மாரியம்மா,
எடுத்தொரு சொல் சொல்லடியோ!
'மெல்லியலார்' வாழ
விடாயோ பெருமாட்டி?
சொல்லடியே என் தாயே,
சுறுக்காகச் சொல்லடியோ!
புல் லிதழே பிய்ந்து
புயற் காற்றிற் போனது போல்-

ஓடுகின்றாள், ஓடுகின்றாள்,
ஓர் இரண்டு நாய் குரைக்கப், பேய் துரத்த,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...


ஓடும் கண்மணியாள் தனது கணவனின் கொலையுண்ட உடலைக் காண்கின்றாள்:

காதலனைக் கண்டு கொண் டாளே!
முலை
மீ த றைந்தாள்; நிலம் மீ து ருண்டாள்.
சிறு
மாது கண் செந் நீர் வழிந் தாளே!
ஒரு
சேதி, கீழ்ப் புற வானில் ஞாயிறு
நீதி காண எழுந்ததே!
இருள்
சாதி போலே போய் ஒ ழிந்ததே!
"ஒளி
வாழ்க!" என்றும், "இருள் வீழ்க!" என்றும்,
கிளை
மீது சேவல் கூவு கின்றதே!

இவ்விதமாகச் செல்லும் மெற்படி குறுங்காவியம் பின்வருமாறு முடியும்:

ஒத்துழைத்தால், ஒன்று பட்டால்,
உயர்வு பல காட்டி நின்றால்,
ஒத்தவர் தாம் யாரும் என்றே
ஒருத்தியின் மேல் அன்பு வைத்தால்,
பித்தரின் கைக் கோடரி போய்ப்
பிளந் தெறிய, நல்லவர்கள்
செத்திடத் தான் வேண்டுவதோ?
செக முடையோர், செப்புவிரே!

இலங்கையிலிருந்து வெளிவந்த தமிழ்க் காப்பியங்களில் மஹாகவியின் 'கண்மணியாள் காதை'க்குமோரிடமுண்டு. இக்காவியத்தை முழுமையாகப்படிக்க விரும்பினால் 'நூலகம்' இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு: http://noolaham.net/project/01/44/44.htm

நன்றி: பதிவுகள்.காம்

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' - வ.ந.கிரிதரன் -

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்'

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' நேற்றுதான் என் கையில் கிடைத்தது. இந்த நாவலைப் பற்றி வெளிவந்த விமர்சனக் குறிப்புகள் காரணமாக இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. அதற்கு வடிகாலாகப் புத்தகம் இங்குள்ள புத்தகக் கடையொன்றில் நேற்றுத்தான் கிடைத்தது. இந்த நூலினை வாசிக்க வேண்டுமென்று நான் நினைத்ததற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

1. தமிழ் மக்கள் எதிர்நோக்கிய, முள்ளிவாய்க்காலில் முடிந்த யுத்தக் காலகட்டத்தில் , எவ்விதமான சிரமங்களை அவர்கள் எதிர்நோக்கினார்கள். வெளிவரும் காணொளிகள் அழிவுகளைத்தாம் காட்டும். ஆனால் அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த மக்களின் அன்றாடச் செயற்பாடுகளை, அழிவுகளை அவர்கள் எதிர்நோக்கியது எவ்வாறு போன்றவற்றை அக்காணொளிகள் காட்டுவதில்லை. இதனை அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த ஒருவரின் நாட்குறிப்புகள் அல்லது பதிவுகள்தாம் புலப்படுத்தும். இதுவுமொரு காரணம் இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற என் ஆவலுக்கு.

2. தமிழ்க்கவி விடுதலைப் புலிகள் அமைப்பிலும் இணைந்து இயங்கிய ஒருவர். அதனால் அவரது பதிவுகள் இயக்கம் சார்ந்ததாக இருக்குமா அல்லது நடுநிலையுடன் இருக்குமா என்பது பற்றி அறிய எனக்கிருந்த ஆர்வம் இன்னுமொரு காரணம்.

இதுபோன்ற மேலும் சில காரணங்களைக் குறிப்பிடலாம். ஆனால் மேலுள்ள காரணங்கள்தாம் முக்கியமானவை.

இந்த நாவலைப் பொறுத்தவரையில் ஏனைய முக்கியமான நாவல்களைப் போல் பாத்திரப்படைப்பு, கதைப்பின்னல், உரையாடல், கூறும்பொருள், மொழி என்பவற்றின் அடிப்படையில் அணுக முடியாது. இதன் முக்கியத்துவம் நடந்து முடிந்த பேரழிவினை ஆவணப்படுத்தும் பதிவுகள் என்ற வகையில்தானிருக்கின்றது. யூதச்சிறுமி ஆன் ஃபிராங்கின் புகழ்பெற்ற 'தினக்குறிப்புகள்' எவ்விதம் ஆவணச்சிறப்பு மிக்கவையாக இருக்கின்றனவோ (அத்தினக்குறிப்புகள் அச்சிறுமியின் பதின்ம வயது உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இலக்கியச்சிறப்பும் மிக்கவை) அதுபோல்தான் தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' நாவலும் ஆவணச்சிறப்பு மிக்கதாகவிருக்கின்றது. அதன் காரணமாகவே ஈழத்தமிழர் இலக்கியத்தில் முக்கியமானதொரு படைப்பாகத் தன்னை நிலைநிறுத்துக்கொள்கின்றது.

ஆய்வு: புகலிடத் தமிழ் நாவல் முயற்சிகள்! - வ.ந.கிரிதரன் -

மகுடம் கனடாச்சிறப்பிதழ்
- இன்று - மே 31, 2014 -'டொராண்டோ'வில் எழுத்தாளர் அகில், மருத்துவர் லம்போதரன் ஆதரவில் நடைபெற்ற மாதாந்த இலக்கிய நிகழ்வில் ஆற்றிய உரையின் முழுமையான வடிவம். நிகழ்வில் நேரப் பற்றாக்குறை காரணமாக கட்டுரை முழுவதையும் வாசிக்க முடியவில்லை.  இக்கட்டுரை இலங்கையிலிருந்து வெளிவரும் மகுடம் சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் (ஏப்ரில் - டிசம்பர் 2016)  முழுமையாகப் பிரசுரமாகியுள்ளது. அதன் மீள்பிரசுரமே இங்கு வெளியாகியுள்ள கட்டுரை. -  வ.ந.கி -

புலம் பெயர் தமிழ் இலக்கியமும், புகலிடத் தமிழ் இலக்கியமும், புகலிட நாவல்களும் பற்றி....

இன்று உலகெங்கும் தமிழர்கள் புலம் பெயர்ந்து பரந்து வாழ்கின்றார்கள். சங்க காலத்திலிருந்து காலத்துக்குக் காலம் தமிழர்கள் புலம் பெயர்வது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. 'திரை கடலோடித் திரவியம் தேடினார்கள் அற்றைத் தமிழர்கள். பொருளியல் காரணங்களுகாக அன்று தமிழ் மன்னர்கள் அயல் நாடுகளின் மீது படையெடுத்து தமது ஆட்சியினை விஸ்தரித்தார்கள். அதன் காரணமாகத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். அந்நியர் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு , நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது தமிழகத்திலிருந்து தமிழர்கள் பலர் இலங்கை, மலேசியா என்று பல்வேறு நாடுகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவ்விதமாகத் தொடர்ந்த தமிழ் மக்களின் புலம்பெயர்தலில் முக்கியமானதொரு நிகழ்வு கடந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஆரமபித்த ஈழத்தமிழரின் பல்வேறு திக்குகளையும் நோக்கிய புலம் பெயர்தல்.

Wednesday, February 21, 2018

தேவன் (யாழ்ப்பாணம்)! - வ.ந.கிரிதரன்

[ யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தின் வருடாந்தக் கலைவிழாவான 'கலையரசி 2015' நிகழ்வினையொட்டி வெளியான 'கலையரசி' மலரில் வெளியான தேவன் (யாழ்ப்பாணம்) பற்றிய சுருக்கமான கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம். - வ.ந.கி]

ஈழத்துத்தமிழ் இலக்கிய வரலாற்றில் யாழ் இந்துக்கல்லூரியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர்கள் தொடக்கம் ஆசிரியர்கள் வரை பலர் ஈழத்துத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார்கள். இது பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். அந்த வகையில் யாழ் இந்துக்கல்லூரியின் ஆசிரியரான தேவன் - யாழ்ப்பாணம் அவர்களின் இலக்கியப்பங்களிப்பு பற்றிச் சுருக்கமாக ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

தேவன் - யாழ்ப்பாணம் மிகச் சிறந்த பேச்சாளர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்கு பேசும் ஆற்றல் வாய்த்தவர். இதனால் அன்றைய காலகட்டத்தில் யாழ்நகரில் நடைபெற்ற கலை, இலக்கிய நிகழ்வுகளில் , அந்நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கும் பிரதான தொகுப்பாளராக அப்பொழுது அவர் அனைவராலும் அழைக்கப்பட்டுக்கொண்டிருந்தார்.

இது தவிர தேவன் - யாழ்ப்பாணம் என்றால் உடனே ஞாபகம் வருவது அவரது புகழ்பெற்ற 'ஸ்கோடா' (Skoda) மோட்டார் வாகனமாகும். அதன் காரணமாக அன்றைய காலகட்டத்து மாணவர்களால் அவர் 'ஸ்கோடா' என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்பட்டதும் நினைவுக்கு வருகின்றது. அந்தக் கண்ணாடி அணிந்த முகமும், அந்த 'ஸ்கோடா' மோட்டார் வாகனமும் இப்பொழுதும் ஞாபகத்திலிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் 1924இல் பிறந்த இளையப்பா மகாதேவன் தன் புனைபெயராக தேவன் என்று வைத்துக் கொண்டார். தேவன் - யாழ்ப்பாணம் அவர்களின் முதலாவது நினைவு மலரில் தேரடியான் என்னும் பெயரில் தேவன் அவர்களின் தமையனாரான இளையப்பா தர்மலிங்கம் அவர்கள் கட்டுரையொன்று எழுதியிருக்கின்றார். அது  தேவன் அவர்களின் பெயருக்கான காரணங்கள் பற்றிய மேலதிகத் தகவல்களை வழங்குகின்றது. [இது பற்றிய தகவல்களை வழங்கிய என் முகநூல் நண்பர்களில் ஒருவராகிய திருமலை மூர்த்தி அவர்களுக்கு நன்றி.] தேவன் அவர்களது பெற்றோர் சேர். அ. மகாதேவா அவர்கள் மேல் மதிப்பு வைத்திருந்தார்கள். அதன் காரணமாக தேவன் அவர்களுக்கு மகாதேவா என்னும் பெயர் அவர் பிறப்பின்போது வைக்கப்பட்டது. அப்பெயர் அவரது பாட்டியால் சுருக்கி 'தேவு' என்று அழைக்கப்பட்டது. 'துப்பறியும் சாம்பு' புகழ்  'ஆனந்த விகடன் தேவன்' மேல் மதிப்பு வைத்திருந்த தேவன் , அவருக்கே கடிதம் எழுதி, அவரது ஆசியுடன் 'தேவன்' என்னும் பெயரினைப் பாவிக்கத்தொடங்கினார். தேவன் இந்தியாவிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்காக தேவன் - யாழ்ப்பாணம் என்று தன் புனைபெயரை வைத்துக்கொண்டார் தேவன் அவர்கள்.

கனடாத் தமிழ் இலக்கியமும் 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகையின் பங்களிப்பும். - வ.ந.கிரிதரன் -

கனடாத் தமிழ் இலக்கியமென்றால் 'தாயகம்', 'காலம்', 'தேடல்', 'ரோஜா', 'பொதிகை' போன்ற சஞ்சிகைகளும், 'பதிவுகள்' இணைய இதழும், 'தாய் வீடு', 'ஈழநாடு', 'சுதந்திரன்', 'வைகறை' போன்ற இலவசப்பத்திரிகைகளும், எழுத்தாளர்கள், அமைப்புகளினால் வெளியிடப்பட்ட நூல்களும் ஞாபகத்துக்கு வரும். அவை பற்றிய போதிய பதிவுகள் ஏற்கனவே பல்வேறு ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரையில் எங்கும் பதிவு செய்யப்படாத (பதிவுகள் இணைய இதழ் தவிர்ந்த) ஒரு சஞ்சிகை பற்றிய பதிவு இது. அது ஒரு கையெழுத்துச் சஞ்சிகை. செப்டெம்பர் 1987 தொடக்கம் ஜனவரி 1989 வரையில் 11 இதழ்கள் வெளியான சஞ்சிகை. (செப்டெம்பர் 1987 தொடக்கம்  ஆகஸ்ட் 1988 வரை 10 இதழ்களும், பின்னர் ஜனவரி 1989 இல் இன்னுமொரு இதழும் மொத்தம் 11) வெளியான 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகையினை நான் ஆசிரியராக இருந்து வெளியிட்டேன். 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகையின் ஒவ்வொரு இதழும் 100 பிரதிகள் எடுக்கப்பட்டு, 'டொராண்டோ'விலுள்ள தமிழ் வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் விநியோகிக்கப்பட்டன. வெளியான 11 இதழ்களில் இதழ் 9, இதழ் 10 ஆகியன கூட்டு முயற்சியாக வெளிவந்தன. 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகையினை வாசித்த, எழுத்து மற்றும் வாசிப்பு ஆர்வம் கொண்ட இளைஞர்கள் சிலர் (சுகுமார், குலம், ஜெயராஜ், கீதானந்த சிவம்) தாங்களும் சேர்ந்து 'குரல்' சஞ்சிகையினை வெளியிட ஒத்துழைப்பதாகக் கூறி அவ்விரு இதழ்களையும் வெளிக்கொணர ஒத்துழைப்பு நல்கினர். அந்த இரு இதழ்களும் வடிவமைப்பில் ஏனைய இதழ்களை விடச் சிறிது சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர்களின் ஒத்துழைப்பே. 'குரல்' கையெழுத்துச்சஞ்சிகையின்  இறுதி இதழ் ஜனவரி 1989 வெளியான இதழ் 11. 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகை , கையெழுத்துச் சஞ்சிகை என்பதால், இலக்கிய ஆர்வம் காரணமாக வெளியிடப்பட்ட சஞ்சிகை.

1. குரல் சஞ்சிகையின் முதலாவது இதழில் (முதலிரு இதழ்களும் 8.5" X 11" அளவில் வெளியானவை; ஏனைய இதழ்கள் 5.5" X 8.5" அளவில் வெளியானவை)  இடம் பெற்றுள்ளவை: இதழாசிரியர் எண்ணம், அட்டைப்படக் கட்டுரை - இந்தியத்தலையீடும், தமிழர் விடுதலைப்போரும் - கிரிதரன், எனது கவிதை (புனைபெயரில்) - மீண்டும் நாம் படை சமைப்போம், தொடர்கதை - அகதிகள் - கிரிதரன்,  மற்றும்  தமிழீழச்செய்திகள். 'இந்தியத் தலையீடும், தமிழர் விடுதலைப்போரும்' கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

நூல் அறிமுகம்: கடல்புத்திரனின் 'வெகுண்ட உள்ளங்கள்' தவிர்க்க முடியாததோர் ஆவணப்பதிவு! - வ.ந.கிரிதரன் -

புலம்பெயர் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் பாலமுரளிக்கும் (கடல்புத்திரன்) ஓரிடமுண்டு.  இவரது சிறுகதைகள் சில  கனடாவில் வெளிவந்த 'தாயகம்' சஞ்சிகை / பத்திரிகையில் வெளிவந்திருக்கின்றன. அத்துடன் அவரது சிறு நாவல்களான 'வேலிகள்' மற்றும் 'வெகுண்ட உள்ளங்கள்' ஆகியனவும் 'தாயக'த்தில் தொடராக வெளிவந்தன. இவையனைத்தையும் பின்னர் ஒரு தொகுப்பாக மங்கை பதிப்பகம் (கனடா) தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் மூலம் , அவர்களுக்குத் தமிழகத்தில் விற்பனை உரிமையினைக் கொடுத்து வெளியிட்டது. இவரது சிறுகதைகள் பல 'பதிவுகள்' இணையத்தளத்தில் வெளிவந்துள்ளன.  'சிறுகதைகள்.காம்' இணையத்தளத்திலும் இவரது சிறுகதைகள் சில பிரசுரமாகியுள்ளன. எனது இந்தப் பதிவு கடல்புத்திரனின் 'வேலிகள்' தொகுப்பிலுள்ள நாவல்களிலொன்றான 'வெகுண்ட உள்ளங்கள்' பற்றியது. ஈழத்துத் தமிழ் அரசியல் நாவல்களென்றால் நிச்சயம் இந்த நாவலும் குறிப்பிடப்பட வேண்டியது அவசியமென்று கருதுகின்றேன்.

'வேலிகள்' தொகுப்பின் பின் அட்டையிலுள்ள இவரைப்பற்றிய அறிமுகத்தில் சில தகவற் பிழைகளுள்ளன. இவர் பிறந்தது யாழ்ப்பாணத்திலுள்ள வண்ணார்பண்ணை என்னும் பகுதியில். ஆனால் இவரது பால்ய காலத்தின் பெரும்பகுதி கழிந்தது கடலோரக்கிராமங்களிலொன்றான 'வடக்கு அராலி'யில். வவுனியாவிலும் இவரது குழந்தைப்பருவத்தின் சில ஆண்டுகள் கழிந்திருக்கின்றன.  மேலும் 'வேலிகள்' நூலின் பின்னட்டை அறிமுகத்தில் இவர் கனடாவுக்கு 'அகதி'யாகப் புலம்பெயர்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இவர் கனடாவுக்கு நிரந்தர வசிப்பிட உரிமைபெற்றுப் புலம் பெயர்ந்தவர்.

Monday, February 19, 2018

ஓவியம் பிறந்த கதை: நியுயார்க் நடைபாதையில் வீதி ஓவியரின் கைவண்ணம்!

1983 கலவரத்தைத்தொடர்ந்து நாட்டை விட்டு நீங்கிக் கனடா வரும் வழியில், பாஸ்டன் நகரில் தடுக்கப்பட்டு, நியூயார்க் மாநகரத்தின் புரூக்லீன் நகரிலுள்ள தடுப்பு முகாமில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு வெளியே விட்டபோது, அடுத்த ஒன்பது மாதங்கள் வரையில் நியூயார்க் மாநகரத்தில் மான்ஹட்டன் நகரில் பெரும்பாலும் எனது வாழ்க்கை கழிந்தது. 'West 4th Street / Avenue of the Americas வீதிகளிரண்டும் சந்திக்கும் சந்தியில் Avenue of the Americas' வீதியின் கிழக்குப் பக்கமாகவிருந்த நடைபாதையில் மனிதரின் உருவப்படங்கள் வரையும் வீதி ஓவியர்கள் சிலர் அவ்வழியால் செல்லும் மனிதர்களில் விரும்பும் சிலரின் உருவப்படங்களை வரைவது வழக்கம். ஒரு மாலை நேரம் அவ்வழியால் சென்று கொண்டிருந்தபொழுது நான்கு ஓவியர்கள் அந்நடைபாதையில் காணப்பட்டனர். அவர்களில் மூவருக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்து விட்டனர். ஒருவருக்கு ஒருவருக்குக் கிடைக்காததால் , தனிமையில் வாடிக்கையாளரை எதிர்நோக்கி வாடி நிற்கும் கொக்காகக் காத்திருந்தார். மற்ற ஓவியர்கள் தம் தொழிலில் மும்முரமாக ஈடிபட்டிருந்தனர். நான் தனித்திருந்த ஓவியரிடம் ஒருவரின் உருவப் படத்தை வரைவதற்கு எவ்வளவு செல்வாகும் என்றேன்.

அதற்கவர் தற்சமயம் தனக்கு வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாததால் என்னை 'மொட'லாக வைத்துத் தான் ஓவியம் வரைவதாகவும், அதன் மூலம் தனக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்கும் சாத்தியமுண்டென்றும் அத்துடன் நான் விரும்பியதைத் தரலாம் என்று கூறினார். நானும் சந்தோசத்துடன் சம்மதித்தேன். அப்பொழுது நான் தொப்பியினை எப்பொழுதும் அணிவது வழக்கம். அருகிலிருந்த கதிரையில் என்னை அமர்த்திவிட்டு, ஓவியர் என்னை வரையத்தொடங்கி விட்டார்.

நாவல்: குடிவரவாளன் (1) - வ.ந.கிரிதரன் -

- வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' -

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா II" [ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு  முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் அமெரிக்கா 2007 ஆம் காலப்பகுதியில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் இந்நாவல் தமிழகத்தில் 'ஓவியா பதிப்பக' வெளீயீடாகக் 'குடிவரவாளன்' என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. ஒரு பதிவுக்காக இந்நாவல் இங்கு தொடராகப் பிரசுரமாகும். - வ.ந.கி -]

அத்தியாயம் ஒன்று: 'இன்று புதிதாய்ப் பிறந்தேன்'
 
நியூயார்க் மாநகரத்தின் புரூக்லின் நகரின்கண் ஃப்ளஷிங் வீதியில் அமைந்திருந்த சீர்திருத்தப் பள்ளியாகவும், அவ்வப்போது சட்டவிரோதக் குடிகாரர்களின் தடுப்புமுகாமாகவும் விளங்கிய அந்த யுத்தகாலத்துக் கடற்படைக்கட்டடத்தின் ஐந்தாவது மாடியின் பொழுதுபோக்குக் கூடமொன்றிலிருந்து இருள் கவிந்திருக்குமிந்த முன்னிரவுப் பொழுதில் எதிரே தெரியும் 'எக்ஸ்பிரஸ்' பாதையை நோக்கிக் கொண்டிருக்குமிந்த அந்தக் கணத்தில் இளங்கோவின் நெஞ்சில் பல்வேறு எண்ணங்கள் வளைய வந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரு மாதங்களாக அவன் வாழ்வினோர் அங்கமாக விளங்கிக் கொண்டிருந்த இந்தத் தடுப்புமுகாம் வாழ்க்கைக்கோர் விடிவு. நாளை முதல் அவனோர் சுதந்திரப் பறவை. சட்டவிரோதக் குடியாக அச்சிறையினுள் அடைபட்டிருந்த அவனைப் பிணையில் வெளியில் செல்ல அனுமதித்துள்ளது அமெரிக்க அரசின் நீதித்துறை. அவனது அகதி அந்தஸ்துக் கோரிக்கைக்கானதொரு தீர்வு கிடைக்கும் அவன் வெளியில் தாராளமாகத் தங்கித் தனது வாழ்வின் சவால்களை எதிர்நோக்கலாம். அவனைப் பற்றிச் சிறிது இவ்விடத்தில் கூறுவது வாசகருக்கு உதவியாகவிருக்கலாம்.

இளங்கோ: இவனொரு இலங்கைத்தீவின் தமிழ்க் குடிமகன். இளைஞன். 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகளிலொருவன். இலங்கையின் பிரதான இரு சமூகங்களான தமிழ் மற்றும் சிங்களச் சமூகங்களுககிடையிலான இனரீதியிலான புகைச்சல்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமானதொரு சமூக, அரசியல் ரீதியிலானதொரு வரலாறுண்டு.  இறுதியாக இலங்கையை ஆண்ட விதேசியர்களான ஆங்கிலேயர் 1948இல் இலங்கையைவிட்டு வெளியேறிய காலகட்டத்திலிருந்து ஆரம்பித்தது அண்மைய இனரீதியிலான மோதல்கள். ஆயினும் இவ்விதமானதொரு நிலையுருவாவதற்குக் காரணங்களாக இத்தீவின் கடந்தகால வரலாற்று நிகழ்வுகள் இருந்தன. துட்டகாமினி / எல்லாளன் தொடக்கம், முதலாம் இராசராசன் / இராஜேந்திரன் பின் சிங்கைப் பரராசசேகரன் எனத் தொடர்ந்து , கடைசிக் கண்டி மன்னன் ஸ்ரீஇராசசிங்கன் என முடிந்த நீண்டகாலத்து வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் அவ்வளவு இலகுவாக ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது. இரு பிரதான சமூகங்களுக்குமிடையில் நிலவிய பரஸ்பர அவநம்பிக்கையும், இனரீதியிலான குரோதங்களும் 1948இலிருந்து மீண்டும் சிறிது சிறிதாகப் பற்றியெறிந்து இன்று சுவாலை விட்டெரிய ஆரம்பித்துள்ளன. இனரீதியிலான திட்டமிட்ட குடியேற்றங்கள், கல்வியில் தரப்படுத்தல், மொழி மற்றும் மதரீயிலான அரசியல் முன்னெடுப்புகள் இவையெல்லாம பிரச்சினையை மேலும் சுவாலை விட்டெரிய வைத்தன. இவையெல்லாம் மேலோட்டமான காரணங்கள். ஆழமான அடிப்படைக் காரணங்களாக நாட்டு மக்களிடையே நிலவிய சமூக, அரசியல், பொருளாதாரரீதியிலான குணாம்சங்கள்,  பிரச்சினைகளிருந்தன.

இலக்கியம் ஒரு காலக் கண்ணாடி: ம.வே.திருஞானசம்பத்தப்பிள்ளையின் படைப்புகளை முன்வைத்துச்சில குறிப்புகள்... - வ.ந.கிரிதரன் -

- *'டொராண்டோ'வில் 22.10.17 அன்று நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் 'உலகம் பலவிதம்' தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வில் நான் ஆற்றிய உரை -

இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி என்றொரு கூற்றுள்ளது. உண்மை.  இலக்கியப்படைப்பொன்றினை ஆராய்ந்து பார்ப்போமாயின் பல்வேறு விடயங்களை அப்படைப்பினூடு அறிந்து கொள்ள முடியும். அப்படைப்பில் பாவிக்கப்பட்டுள்ள மொழியிலிருந்து அப்படைப்பின் காலகட்டத்தை ஆய்வொன்றின் மூலம் அறிவதற்குச் சாத்தியமுண்டு. உதாரணத்துக்குச் சங்க இலக்கியப்படைப்புகளை எடுத்துக்கொள்ளலாம். அவற்றினூடு பண்டைத்தமிழரின் வாழ்க்கை முறை, இருந்த நகர அமைப்பு, ஆட்சி முறை, நிலவிய மானுடரின் பல்வேறு விடயங்களைப் பற்றிய நம்பிக்கைகள் .. எனக்கூறிக்கொண்டே செல்லலாம். எனது இச்சிற்றுரையில் இலக்கியம் காலக்கண்ணாடி என்னும் அடிப்படையில் ம.வெ.திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்களின் படைப்புகளை உள்ளடக்கிய  'உலகம் பலவிதம்' நூலினை அணுகுவதாகும்.

அளவில் இந்நூல் பெரியது. நூலிலுள்ள அனைத்துப் படைப்புகளையும் குறுகிய காலத்தில் முழுமையாக வாசிப்பதென்பது சாத்தியமற்றதொன்று. ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் அடிப்படையில்  இந்நூலை அணுகலாம். அதுவும் கூட முழு நூலைப்பற்றிய இவ்விதமானதோர் அணுகுதலுக்குரிய மாதிரி அணுகலாகவிருக்கும் என்பதால், அது என் நம்பிக்கை என்பதால் அவ்விதமே இந்நூலை அணுகுவதற்கு முடிவு செய்து, அவ்வணுகுதலின் அடிப்படையில் இலக்கியம் காலக்கண்ணாடி என்னும் கூற்றிலுள்ள உண்மை பற்றி அறிதற்குச் சிறிது முயற்சி செய்வதே என் நோக்கம்.

இதற்காக நான் இத்தொகுப்பபிலுள்ள இரு நாவல்கள் மற்றும் ஆசிரியரின் பத்திகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றின் மீது என் கவனத்தைத்திருப்பப் போகின்றேன்.

கவிதை: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'! - வ.நகிரிதரன் -

- வ.ந.கிரிதரன் -
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று.
விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ , நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.

இரவுவானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திரச் சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கின்றேன்.

எப்பொழுதுமே இறுதி வெற்றி
உனக்குத்தான்.
எப்பொழுதுமே உன்காட்டில்
மழைதான். அதற்காக
மனந்தளர்வதென் பண்பல்ல. ஆயின்
உன்னை வெற்றி கொள்ளுதலுமென்
பேரவாவன்று.பின்
உனைப் புரிதல்தான்.

ஓரெல்லையினை
ஒளிச்சுடருனக்குத்
தந்துவிடும் பொருளறிந்த
எனக்கு
அவ்வெல்லையினை மீறிடும்
ஆற்றலும், பக்குவமும்
உண்டு; புரியுமா?

கவிதை 'நள்யாமப்பொழுதொன்றில்... - - வ.ந.கிரிதரன் -

- அண்மையில் முகநூலில் எனது கவிதையான 'நள்யாமப்பொழுதொன்றில்...' கவிதையினை பதிவு செய்திருந்தேன். அது பற்றி நிகழ்ந்த சிறு கருத்துப்பரிமாறல்கள் சுவையானவை. வாசகர்களுக்கும் பயனுள்ளவையாக அமையுமென்று கருதி இங்கும் பதிவிடுகின்றேன். -

கவிதை 'நள்யாமப்பொழுதொன்றில்..

சொல்லவிந்து, ஊர் துஞ்சும்
நள்யாமப்பொழுதுகளில்
விசும்பு நீந்தி ஆங்கு
நீந்தி விளையாடிடும் விண்மீன்கள்தம்
வனப்பில் எனை மறக்கும்
தருணங்களில்,
இராப்பட்சிகள் குறிப்பாக
ஆந்தைகள் சிந்தனைச்சிறகடிக்கும்.
கூரிய அவைதம் பெருங்கண்
விரித்து
இரை தேடி இரவு முழுக்கப்
பறந்து திரியும்.
ஆந்தைகளுக்குப் போட்டியாக
அவ்வப்போது நத்துக்களும்
குரல் கொடுக்கும்.
மீன்களே! உங்கள் நீச்சலின் காரணத்தை
விளக்குவீரா?
ஆந்தைகளே! நத்துகளே! உங்கள்
இருப்பின் காரணத்தை எனக்கும்
சிறிது பகர்வீரா?
இரவுவான் வியக்கும் பண்பு
தந்தாய்! எந்தையே
இத்தருணத்தில் உனை நான்
என்
நினைவில் வைக்கின்றேன்.

அணிந்துரை: எழுத்தாளர் பொன் குலேந்திரனின் அறிவியற் புனைவுகள் பற்றி.... வ.ந.கிரிதரன் -

பொன் குலேந்திரனின் 'காலம்'  தொகுப்பு
- தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் பொன் குலேந்திரனின் 'காலம்' (அறிவியற் சிறுகதைகள்) தொகுப்புக்காக நான் எழுதிய அணிந்துரை இது. -

அறிவியல் புனைகதை (Science Fiction)  என்றால் அறியப்பட்ட அறிவியல் தகவல்கள் ,  உண்மைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் அல்லது சம காலத்தில் நடக்க் இருப்பதை எதிர்வு கூறி, அதனடிப்படையில் படைக்கப்படும் புனைவு என்றுதான் பொதுவாக அறியப்பட்டுள்ளது. விண்வெளிப்பயணங்கள், ஏனைய கிரக உயிரினங்கள், பிரம்மாண்டமான விண்வெளித்தொலைவுகளைக் கடப்பதற்கான வழிவகைகள், புதிர் நிறைந்த விண்வெளி அதிசயங்கள் (கருந்துளைகள் போன்ற) , பல்பரிமாண உயிரினங்கள், மானுடரின் எதிர்கால நிலை, நமது பூமியின் எதிர்கால நிலை, இவ்விதமான விடயங்களைக் கருப்பொருளாகக்கொண்டு படைக்கப்படும் புனைகதைகளையே அறிவியல் புனைகதைகள் என்போம். சமகால அறிவியல் உண்மைகளை விபரித்தலைக் கருப்பொருளாகக் கொண்ட புனைகதைகளை அவ்வகையான புனைகதைகளாகக் கருதுவதில்லை. ஆனால் அறிவியல் விடயங்களை மையமாக வைத்துப் புனையப்பட்டவையாதலால் அவையும் அறிவியல் புனைகதைகளே என்று அத்தகைய புனைகதைகளைப் படைத்த எழுத்தாளர் ஒருவர் வாதாடினால் அவருடைய தர்க்கத்தையும் மறுப்பதற்கில்லை. அவ்வகையில் பொன் குலேந்திரன் அவர்களின் இத்தொகுதியிலுள்ள புனைகதைகளையும் அறிவியல் கதைகளாகக் கொண்டு இத்தொகுதிக்கதைகளைபற்றிச் சிறிது நோக்குவோம்.

பொன் குலேந்திரன் அவர்கள்  ஒரு பௌதிகவியல் பட்டதாரி. அத்துடன் தொலை தொடர்புப் பொறியியலாளரும் கூட. அவரது பரந்த அறிவியல் உண்மைகளைப்பற்றிய அறிவு பிரமிக்க வைக்கின்றது. அவரது பன்முகப்பட்ட சுய தேடலை, சுய வாசிப்பை அது வெளிப்படுத்துகின்றது. தான் அறிந்ததை, உணர்ந்ததை சிறு சிறு கதைகளாக அழகாகப்புனைந்துள்ளார் அவர். அது அவரது எழுத்துத்திறனைப் புலப்படுத்துகின்றது.

இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளைப்பொறுத்தவரையில் மூன்று வகையான பிரதான பண்புகளை அவதானிக்க முடிகின்றது. முதலாவது வகைப்புனைகதைகள் பொதுவாக அறிவியல் கதைகள் என்று கூறப்படும் கதைகள்.  அடுத்தவகைப்பண்பாக சமகால அறிவியல் உண்மைகளை விபரிக்கும் கதைகள். மூன்றாவது வகைப்பண்பாக ஆசிரியரின் மத மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை ஆங்காங்கே வெளிப்படுத்தும் கதைகள். இவ்விதமாக முப்பண்புகளை வெளிப்படுத்தும் கதைகளில் பல ஆசிரியரின் படைப்புத்திறனை வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன.

'திண்ணை'க் கவிதைகள் மூன்று! - வ.ந.கிரிதரன் -

'திண்ணை' இணைய இதழில் முன்பு வெளியாகிய கவிதைகள் இவை. என்னை எப்பொழுதுமே நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில் உருவான மானுட இருப்பும், இதற்கும் மேலான உயிரினங்களின் சாத்தியம் பற்றிய சிந்தனைகளும், எம் இருப்பின் முப்பரிமாண எல்லையும் , காலவெளி பற்றிய புரிதல்களும் அவற்றின் மீதான சிந்தனையும், இயற்கையின் பேரழகும், படைக்கப்பட்டுள்ள ஏனைய உயிரினங்களின் படைப்புச்சிறப்பும் கவரும் விடயங்கள். எம் இருப்பு '"வெறுமைக்குள் விரியும் திண்ம இருப்பு.". நாமோ 'பரிமாண விலங்குகள் தாங்கும் அடிமைகள்'. அவை பற்றிச் சிந்திப்பதிலுள்ள இன்பம் எனக்கு வேறெவற்றிலுமில்லையென்பேன். ஆழநடுக்காட்டில் பல்லாண்டுகள் தனித்து விடப்பட்டாலும் கூட என்னால் இவை பற்றித் தொடர்ச்சியாகச் சிந்தித்துக்கொண்டேயிருக்க முடியும். 'என்று வருமந்த ஆற்றல்?', 'காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்! மற்றும்' 'மழையைச் சுகித்தல்! ஆகிய கவிதைகளிலும் என் இந்த உளப்பாங்கினை நீங்கள் கண்டிட முடியும்.

1. என்று வருமந்த ஆற்றல்? - வ.ந.கிரிதரன்

நள்ளிரவுக் கருமை;
மூழ்கிக் கிடக்குமுலகு; தண்ணொளி
பாய்ச்சும் நிலவு; ‘கெக்க’லித்துச்
சிரிக்கும் சுடரு.

விரிவான் விரிவெளி.
‘புதிர் நிறை காலவெளி.

வெறுமைக்குள் விரியும்
திண்ம இருப்பு.

பரிமாண விலங்குகள்
தாங்கும் அடிமை.

பன்முறையெனினும்
மீறி வியப்பதற்கெதுவுண்டு.

படியளக்கும் படைத்தவரே!
படைத்ததேன்? பகர்வீரா?

அறிவுத்தாகம் மிகுந்த
அலைவு; தாகசாந்திதான்
எப்போது?
அலையெனப் பரவும்
நிலை வரும் வரையிலா?
என்று வருமந்த
நிலை? அன்றி
‘அதிவெளி’ கடக்கும்
ஆற்றல் வரும் வரையிலா?
என்று வருமந்த
ஆற்றல்?


 நன்றி: திண்ணை - http://puthu.thinnai.com/?p=3648

அ.ந.க.வின் 'மனக்கண்' - வ.ந.கிரிதரன் -


- அறிஞர் அ.ந.கந்தசாமி -
ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியெனக் கருதப்படுபவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம், நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஈடுபட்டு ஆழமாகத் தன் தடத்தினைப் பதித்தவரிவர். இவர் எழுதிய ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. இந்த 'மனக்கண்' நாவல் பற்றிய எனது விமர்சனக் குறிப்புகளே இவை. எனக்குத் தெரிந்த வரையில் அ.ந.க.வின் 'மனக்கண்' நாவல் பற்றி வெளிவந்த விரிவான, முதலாவதான,   விமர்சனக் கட்டுரை இதுவாகத்தானிருக்கும். அந்த வகையில் இக்கட்டுரைக்கொரு முக்கியத்துவமுண்டு. இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று: நமது விமர்சகர்களுக்கு நூலாக வெளிவந்த நூல்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதிப்பழக்கம். இன்னுமொரு காரணம் பெரும்பாலான விமர்சகர்களுக்குத் தேடுதல் மிகவும் குறைவு. தமக்கு அனுப்பி வைக்கப்படும் நூல்களுக்கு மட்டுமே அவர்களது கவனம் திரும்பும். அவ்விதம் கிடைக்கும் நூல்களைத் தம் புலமையினை வெளிப்படுத்துவதற்குத் தொட்டுக்கொள்ளப்படும் ஊறுகாயைப்போல் பாவித்துக்க்கொள்வார்கள்.  மிகச்சிலர்தாம் நூலாக வெளிவராத பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளுக்கும் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள்.இவர்களை உண்மையில் பாராட்டத்தான் வேண்டும். [ தனது இறுதிக்காலத்தில் இவர் மலையகத்தமிழர்களை மையமாக வைத்து கழனி வெள்ளம் என்றொரு நாவலினை எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாவல்  எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், அது 1983 இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறியப்படுகிறது]. 'மனக்கண்' ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்து இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர்களின் ஆதரவினைப் பெற்றதொரு நாவல். இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று அ.ந.க நாவலில் வரும் பாத்திரங்களுகிடையிலான உரையாடல்களில் பேச்சுத்தமிழைக் கையாளுவதற்குப் பதில் , பல்வேறு பகுதிகளிலுமிருந்து வாசிக்கும் அனைவருக்கும் புரியவேண்டுமென்பதற்காகச் 'சரளமான ஒரு செந்தமிழ் நடையினைப்' பாவித்திருப்பதுதான்.

அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்! - வ.ந.கிரிதரன் -


- இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட 'வாதங்களும், விவாதங்களும்' நூலுக்காக எழுதப்பட்டது. நூலினை பா.அகிலன், எழுத்தாளர் திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோர் தொகுத்துள்ளார்கள். ]  -  'நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை' என்று ஆரம்பத்திலிருந்தே பிரகடனப்படுத்தி வருகின்றேன்" (விவாதங்கள் சர்ச்சைகள்,  பக்கம்263) என்று தன்னைப்பற்றி வெங்கட் சாமிநாதன் கூறிக்கொண்டாலும் இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற கலையின் பல்வேறு துறைகளிலும் ஆழமான, காத்திரமான பங்களிப்பினைச் செய்த கலை விமர்சகர் இவரென்பது மறுக்கமுடியாதவுண்மை மட்டுமல்ல நன்றியுடன் விதந்துரைக்கப்பட வேண்டியதுமாகும். 1960இல் 'எழுத்து' இதழில் வெளியான 'பாலையும், வாழையும்' கட்டுரையின் மூலம் எழுத்துலகிற்குக் காலடியெடுத்து வைத்த வெ.சா.வின் க்லைத்துறைக்கான பங்களிப்பு ஐம்பதாண்டுகளை அடைந்திருக்கிறது. இந்த ஐம்பதாண்டுக் காலகட்டத்தில் 'சாமிநாதனது பேனா வரிகள் புலிக்குத் தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது என்றபடி சகலதையும் பதம் பார்க்கும்' என்னும் சி.சு.செல்லப்பாவின் கூற்றின்படி அனைவரையும் பதம் பார்த்துத்தான் வந்திருக்கிறது. ஒரு சில வேளைகளில் உக்கிரமாகவும் இருந்திருக்கிறது. ஒரு படைப்பாளியின் படைப்பினை ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கி அதன் நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் எந்தவிதத் தயக்கங்களுமின்றி வெளிப்படுத்தும் வெ.சா. சில சமயங்களில் அவரது விமர்சனங்களை முன்னுரைகளென்ற பெயரில் கேட்கும் சிலருக்கு நேரிடையாகவே மறுத்துமிருக்கின்றார். தனக்குச் சரியென்று பட்டதை, எந்தவிதத் தயக்கங்களுமின்றி, எந்தவித பயன்களையும் எதிர்பார்க்காதநிலையில் , துணிச்சலுடன் எடுத்துரைக்கும் வெ.சா..வின் போக்கு வெ.சா.வுக்கேயுரிய சிறப்பியல்புகளிலொன்று. -
 அறுபதுகளில், எழுபதுகளில் கோலோச்சிக் கொண்டிருந்த முற்போக்கிலக்கியப் படைப்புகளைக் காரமாக விமர்சித்தவர் வெ.சா. அதன் காரணமாக, 'கலை சமுதாயத்திற்கே' என்னும் முற்போக்கணியினரை, அவர்தம் கலைப்படைப்புகளின் தன்மையினைத் தன அறிவிற்கேற்ப , தர்க்கரீதியாக விமர்சித்த காரணத்தினால் வெ.சா.வைக் 'கலை கலைக்காகவே' என்று வாதிடும், 'அழகியலுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கு'மொரு' அழகியல் உபாசகராகவும், சமுதாயப் பிரக்ஞையற்றவொருவராகவும் ஓரங்கட்டிவிடவும் சிலர் தலைப்பட்டனர். அவரை முக்கியமான விமர்சகராக ஏற்றுக் கொண்டு அதே சமயம் அவர் அறிவுத்தளத்தையொரு பொருட்டாகவே கருதியதில்லையென்றும், அவரது மொழி விமர்சனத்திற்குரிய தர்க்க மொழியல்லவென்றும் கூறித் தமது மேலாவிலாசத்தைக் காட்டும் முனைப்புகளும் நடைபெறாமலில்லை. வேறு சில இளம் படைப்பாளிகளோ அவரை ஞான சூனியமென்றும், அயோக்கியனென்றும் கூட வசை பாடினர். இவை பலவற்றுக்கு அவர் தன் பாணியில் பதிலிறுத்துள்ளார். அத்தகைய அவரது பதில்களில் சிலரைச் சீண்டியுமிருக்கிறார். தனது எழுத்தினைப் பற்றிக் குறிப்பிடும்போது 'எல்லாமே தனி மனிதனாகவும், இந்தச் சமுதாயத்தில் ஓர் அங்கமாகவும், என் உணர்வுகளைத் தாக்கிய, சுற்றிச் சமூகத்தில் நடக்கும் அருவருப்பான நடப்புகளைப் பற்றிய என் எதிர்வினைகள்' ('விவாதமேடைச் சர்ச்சைகள்'; பக்கம் 4- முன்னுரையில்) என்று குறிப்பிடும் இவரது எண்ணங்களின் தர்க்கச் சிறப்பும், பரந்த வாசிப்புடன் கூடிய அறிவும் பிரமிக்க வைப்பன.. கலாநிதி கைலாசபதியின் 'தமிழ் நாவல் இலக்கியம்' பற்றிய இவரது 'மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல்' என்னும் விரிவான ஆய்வுக் கட்டுரை, 'பேராசிரியர் நா.வானமாலையின் ஆராய்ச்சி விநோதங்கள்' போன்ற கட்டுரைகளும் அவற்றிற்கான எம்.ஏ.நுஃமான் போன்றவர்களின் எதிர்வினைககளும் தமிழ் இலக்கியத் துறைக்கு வளம் சேர்ப்பன.

தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா? - வ.ந.கிரிதரன் -

-  இன்று , நவம்பர் 13, 2016, டொராண்டோவில் தமிழர் வகைதுறைவள நிலைய ஆதரவில் நடைபெற்ற தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் வெளியீடு மற்றும் கலந்துரையாடலில் நான் ஆற்றிய உரையின் முழு வடிவம். - வ.ந.கி  -
தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' சுயசரிதை பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பினாலும், தமிழர் இலக்கிய உலகில் முக்கியமானதொரு நூலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இதனது சிங்கள மொழிபெயர்ப்பும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.

தமிழினியின் சுய விமர்சனம் பற்றிக்குறிப்பிடுகையில் தேசம் ஜெயபாலன் 'இது கூர்வாளல்ல. மொட்டை வாள்' என்று குறிப்பிட்டிருப்பார். அண்மையில் தமிழினியின் கணவர்ஜெயக்குமரனுடனான நேர்காணலொன்றில்தான் இவ்விதம் குறிப்பிட்டிருக்கின்றார். மேலோட்டமாகப் பார்த்தால் தமிழினியின் இயக்கம் பற்றிய விமர்சனங்கள் காரமாக இல்லாதிருப்பதுபோல் தென்பட்டாலும், சிறிது ஊன்றிக்கவனித்தால் மிகவும் கடுமையான விமர்சனங்கள் அவை என்பது தெரியவரும். ஆனால் அவர் முட்டி மோதிக்கொண்டு மோதும் விமர்சனத்தை இங்கு வைக்கவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவரைத் தனிப்பட்டரீதியில் விமர்சிக்கவில்லை. அதனால் ஜெயபாலன் அவ்விதம் நினைத்திருக்கக்கூடும். ஆனால் தமிழினி விமர்சனத்தை முன் வைக்கும்போது கோட்பாட்டு ரீதியில் முன் வைக்கின்றார். விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பு பின்பற்றிய கொள்கைகள் அடிப்படையில் அவற்றை விமர்சிக்கின்றார். அந்த அமைப்பில் போராடி, இறுதியில் நிராதரவாகக் கைவிடப்பட்டு, இராணுவத்திடம் சரணடைந்து,  சிறைவாழ்க்கை, தடுப்புமுகாம் வாழ்க்கை, புனர்வாழ்வு என்று பல படிகளினூடு சென்று மீண்டும் சமூகத்திற்குள் வருகின்றார். அவ்விதம் வந்தவரைச் சமூகம் எதிர்கொண்ட முறை அதிர்ச்சியூட்டுகின்றது. இந்நிலையில்  அவரது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் தமிழினி என்னும் முன்னாள் பெண் போராளியொருவருக்கு மனம் திறந்த நிலையில் நடந்தவற்றை ஆராய்ந்து முடிவுக்கு வருவதற்குப் பூரண உரிமையுண்டு. அவரது கருத்துகளை ஏற்கலாம். ஏற்காமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு அவர் தான் நினைத்தவாறு கருத்துகள் கூற உரிமையுள்ளது என்பதை ஏற்கவேண்டும்.

பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி.... வ.ந.கிரிதரன் -

மகாகவி பாரதியார் 'சுயசரிதை' என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார். பாரதியாரின் ஆளுமையை அறிந்து கொள்வதற்கு உதவும் கவிதைகளிலொன்று அவரது இந்தக்கவிதை. இதுவொரு நீண்ட கவிதை. கவிதையின் ஆரம்பம் "பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே." என்ற பட்டினத்துப்பிள்ளையாரின் கவிதை வரிகளுடன் ஆரம்பமாகின்றது. பாரதியார் தன்னைச் சித்தர்களிலொருவராகக்கருதுபவர். சித்தர்களிலொருவரான பட்டினத்தாரின் இருப்பு பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பமாகியிருப்பது ஒன்றினை நன்கு புலப்படுத்துகின்றது. அது பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனையினைத்தான். 'பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்னும் கூற்றுக்கேற்ப அவரது வாழ்வில் கடந்து போன இழப்புகளைப்பற்றிச் சுயசரிதை விபரிக்கின்றது. நிறைவேறாத பிள்ளைக்காதல் அதாவது மானுடரின் முதற் காதல், அவரது ஆங்கிலக்கல்வி கற்றல், அவரது திருமணம் மற்றும் அவரது தந்தை வியாபாரத்தில் நொடிந்துபோய் வறுமையுறல்போன்ற விடயங்களைக்கவிதை விபரிக்கின்றது ஆனால் இந்த வாழ்வே இவ்விதமானதொரு கனவுதான் என்பதை அவர் நன்கு புரிந்திருக்கின்றார். ஆனால் அதற்காக அவர் வாழ்விலிருந்து ஓடி, ஒதுங்கிப்போய் விட்டவரா?

இவ்விதமாக இழந்தவை பற்றியெல்லாம் விபரிக்கும் அவர், ஆரம்பத்தில் 'உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி லுங்கன வாகும்' என்று கூறும் அவர்,  தன் கவிதையின் இறுதியில் உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி னுங்கன வாகும்' என்று மானுட வாழ்வே ஒரு கனவு என்பார். ஆனால் அதற்காக , அதனை நினைத்து , நினைத்து வருந்துவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'இதற்குநான் பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்? பண்டு போனதை எண்ணி யென்னாவது? சிலதி னங்கள் இருந்து மறைவதில் சிந்தை செய்தெவன் செத்திடு வானடா' என்று கூறித் தன் சுயசரிதையினை முடிப்பார்.

விஷ்ணுபுரம் சில குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -


ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' பற்றிப் பலர் பலவாறு கூறியுள்ளார்கள். இவர்களது குறிப்புகளெல்லாவற்றையும் பார்க்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது. இவர்களில் பலர் யானை பார்த்த குருடர்கள். நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி. ஹேமந்தன் என்னும் பாணன் விஷ்ணுபுரம் பற்றிய கதையினைக் கூறி முடித்ததும் வசந்தன் என்னும் பாணன் கூறத்தொடங்குவதுடன் ஆரம்பமாகும் நாவல் மூன்று பாகங்களாக விரிவடைந்து வசந்தன் கதையை முடித்ததும் இன்னுமொரு பாணனான கிரிஷ்மன் மீண்டுமொருமுறை விஷ்ணுபுரம் கதையினைக் கூறத்தொடங்குவதுடன் தொடர்கிறது. நாவலைப் பற்றிப் பின் அட்டையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: ' இந்நாவலில் விஷ்ணு ஒருமுறை புரண்டு படுக்கிறார். தருக்கம், தியானம்,கற்பனை என்ற மூன்று அடிப்படையான அறிதல் முறைகளில் கற்பனையின் துணை கொண்டு , பிற இரண்டின் சாத்தியங்களை பயன்படுத்தியபடி, மானுடனின் ஞானத்தேடலின் பயணத்தைச் சித்தரிக்கிறது (சித்திரிக்கிறது). கலையும், தருக்கமும், ஆன்மீகமும், மானுட உணர்வுகளுடன் கலந்து பௌராணிகமான மாய உலகமொன்றைப் படைக்கின்றன.'

ஜெயமோகனின் ஞானத் தேடலே நாவலாக உருப்பெற்றிருக்கின்றது. இந்து, பௌத்த தத்துவங்களினூடு மனித வாழ்வு, பிரபஞ்சத்தின் தோற்றம், காலம் பற்றி தர்க்கரீதியாகக் கற்பனையைப் படரவிட்டு இந்நாவலைப் படைத்திருக்கின்றார் ஜெயமோகன். தான் அறிந்ததை, உணர்ந்ததை அவ்விதமே கூறவேண்டுமென்ற ஆவல் ஜெயமோகனுக்கு அதிகமாக இருப்பதை நாவல் முழுவதிலும் காண முடிகிறது. விஷ்ணுபுரம் பற்றிய வர்ணணைகளில் நாவலாசிரியர் மிக அதிகளவில் கவனமெடுத்திருக்கின்றாரென்பதை விஷ்ணுபுரம் பற்றிய வர்ணனைகள் வெளிக்காட்டுகின்றன.ஜெயமோகனின் ஞானத்தேடலே நாவல் முழுக்கப் பல்வேறு பாத்திரங்களாக, பிங்கலன், சங்கர்ஷணன்.. என உலாவருகின்றது. நாவல் முழுக்க எண்ணமுடியாத அளவிற்குப் பாத்திரங்கள். அத்தியாயத்திற்கு அத்தியாயம் புதிய புதிய பாத்திரங்களின் வருகையுடன் நாவல் நடை போடுகிறது. வழக்கமாக அத்தியாயங்களிற்கிடையில் ஒருவித தொடர்ச்சியினை ( Linearity) எதிர்பார்த்துப் பழக்கப் பட்டு விட்ட பெரும்பாலான தமிழ் வாசகர்களுக்கு இந்தத் தொடர்ச்சியற்ற தன்மை நாவலைப் புரிதலில் சிரமத்தினை ஏற்படுத்தி விடுகின்றது. இது இந்நாவலை வாசிக்க விளைபவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுமையினையும் , பாத்திரங்களைச் சம்பவங்களைக் கிரகிக்க வேண்டிய திறமையினையும் மிக அதிகமாகவே வேண்டி நிற்கிறது. ஆனால் இந்த நாவலின் அடிப்படையே ஒரு மனித உயிரின் ஞானத் தேடல் என்ற அளவில், நாவல் பாத்திரங்களினூடு, நகர அமைப்பினூடு, காட்சிகளினூடு, கூறி விவாதிக்கும் இருத்தல் பற்றிய விசாரத்தைத் தொடர்ந்து கொண்டு போவதன் மூலம் இந்நாவல் பிரதியின் வாசிப்பை இலகுவாக்கலாம். பலருக்கு இந்நாவல் புரிபடுவதிலுள்ள குழப்பம் காரணமாகத் தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கருத்துகளை வைக்கின்றார்கள். (அண்மையில் ஜெயமோகனின் நூல் விழாவில் பேசிய ஜெயகாந்தன் தன்னாலேயே நாவலின் உள்ளே புக முடியவில்லை என்று குறிப்பிட்டதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது).

அறிவியல்: பிரபஞ்சத்து மாயங்கள்! 'கரும் ஈர்ப்பு மையங்கள்'! - வ.ந.கிரிதரன் -


சாதாரண மனிதரிலிருந்து விஞ்ஞானிகள் வரை மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்துப் புதிரென்று ஒன்றிருந்தால் அது இந்தக் கருந்துளைகள் (Black Holes) தான். உண்மையில் இவற்றைத் தமிழில் கருந்துளைகள் என மொழிபெயர்ப்பதை விடக் 'கரும் ஈர்ப்பு மையங்கள் ' என மொழி பெயர்ப்பதே மிகவும் பொருத்தமாகவிருக்குமெனக் கருதுகின்றேன். ஏனெனில் இவை மிகவும் ஈர்ப்புச் சக்தி மிக்கவை. ஒளிக்கதிர்களையே வெளியேற முடியாத அளவிற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையான இவற்றை கரும் ஈர்ப்பு மையங்களென அழைப்பதே சரியென்றெனக்குப் படுவதால் இவை இனி கரும் ஈர்ப்பு மையங்கள் என்றே அழைக்கப் படும்.  ஒளிக்கதிர்களையே தப்பியோட விடாது சிறைப்பிடித்துவிடுமளவிற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையாக இவை இருப்பதால் இவை மிகவும் விந்தையானவை. இரகசியமானவை. புதிரானவை. இவற்றை நேரடியாகப் பார்க்கும் வல்லமை படைத்தவர்கள் இருப்பார்களேயானால் அவர்களால் தாங்கள் கண்டதை எமக்குத் தெரிவிப்பதற்குக் கூட முடியாது. ஊகங்கள், பக்க விளைவுகள் இவற்றைக் கொண்டு மட்டும் தான் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள, அனுமானித்துக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.  கரும் ஈர்ப்பு மையங்கள் உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களே. விண்ணில் நாம் காணும் நட்சத்திரங்களை அவற்றின் திணிவினை சூரியனின் திணிவுடன் ஒப்பிட்டுப் பிரிக்க முடியும். இவ்விதம் பெறப்படும் திணிவு சூரிய திணிவு (Solar Mass) என அழைக்கப் படும்.நட்சத்திரங்களின் திணிவானது ஒரு குறிப்பிட்ட சூரியத் திணிவிலும் அதிகாக இருக்கும் பொழுது அந் நட்சத்திரம் கரும் ஈர்ப்பு மையமாக உருவாகும் வாய்ப்பு உண்டு. இத்திணிவுக்கும் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானிகளிலொருவரான சந்திரசேகருக்கும் மிக முக்கியமானதொரு தொடர்பு உண்டு. அதுவென்ன என்பதை இக்கட்டுரையின் இறுதியில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

ஐன்ஸ்டனின் பொதுச் சார்பியற் கோட்பாடானது (General Theory Of Relativity) இத்தகைய கரும் ஈர்ப்பு மையங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை எதிர்வு கூறிய போதும் , சுமார் 200 வருடங்களுக்கு முன்னரே ஆங்கிலேயரொருவரும் பிரெஞ்சுக்காரரொருவரும் இத்தகைய பொருட்கள் இப்பிரபஞ்சத்தில் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் கூறியுள்ளார்களென்பதும் வியப்பிற்குரியது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோன் மைக்கல் என்பவரால் 1783 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரையொன்றில் மிகவும் ஈர்ப்புச் சக்தி கூடிய நட்சத்திரங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோன் மைக்கலின் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்ட சில வருடங்களின் பின்னர் பிரெஞ்சு விஞ்ஞானியான 'மார்கிள் டி லாப்பிளாஸ் ' என்பவர் தான் எழுதிய 'இவ்வுலகின் அமைப்பு முறை ' பற்றிய நூலிலும் இது போன்ற கருதுகோள்களை முன்வைத்திருந்தாரென அறியக் கிடக்கின்றது. ஆனால் ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியற் கோட்பாடே முதன் முதலாகக் கணிதச் சூத்திரங்கள் அடிப்படையில் கரும் ஈர்ப்பு மையங்கள் பற்றித் தற்போது அறியப் பட்ட அர்த்தத்தில் எதிர்வு கூறின. உண்மையில் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகளுக்குக் கிடைத்த இன்னுமொரு வெற்றியென்றே இதனைக் கூறலாம். அதே சமயம் 'வெளி ', 'நேரம் ' என்பவை சுயாதீனமற்றவை. சார்பானவை என்பதை முதன் முதலாக ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியற் கோட்பாடு இவ்வுலகிற்கறிவித்ததும் குறிப்பிடத் தக்கது.

அறிவியல்; ஆறுதலற்று விரையும் அண்டப் பொருட்கள்! பிரபஞ்ச வடிவம் பற்றிய புரிதல்கள்! - வ.ந.கிரிதரன் -

- அலெக்ஸாண்டர் பிரிட்மென் -
இரவு நேரங்களில் அண்ணாந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப் பாருங்கள். கோடிக் கணக்கில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, கிரகங்களை உபகிரகங்களைக் கவனியுங்கள். அதே சமயம் இன்னும் ஒன்றையும் மனதிலே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு செக்கனும் பிரமாண்டமானதொரு வேகத்தில் விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சமொன்றின் சிறியதொரு கோணத்தில் விரைந்து கொண்டிருக்கும் சிறியதொரு கோளொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதே அது. நெஞ்சினைப் பிரமிக்க வைத்து விடுகின்றதல்லவா! அப்படியானால் நம்மால் ஏனிந்த வேகத்தை உணர முடியவில்லை? மூடியதொரு புகையிரதத்தினுள் இருக்குமொருவருக்கு எவ்விதம் புகையிரதம் வேகமாகச் செல்வது தெரியாதோ அது போன்றதொரு நிலையில் தான் எம்முடைய நிலையும். பூமியைச் சுற்றிப் படர்ந்திருக்கும் வாயு மண்டலம்தான் எம்மை மூடிய புகையிரத்தைனைப் போல் இக்கோளினை வைத்திருக்கின்றது. அதனால் தான் எம்மால் எமது வேகத்தைக் கூட உணர முடியாமலிருக்கின்றது. இன்னும் ஒரு காரணம் - எம்மைச் சுற்றியுள்ள சுடர்களுக்கும், கிரகங்களுக்குமிடையிலான தொலைவு மிக மிக அதிகமானது. இத் தொலைவும் எமது வேகத்தினை உணரமுடியாதிருப்பதற்கு இன்னுமொரு காரணம். புகைவண்டியினுள் விரையும் ஒருவருக்கு அருகில் தெரியும் காட்சிகள் வேகமாகச் செல்வது போலும், மிகத் தொலைவிலுள்ள காட்சிகள் ஆறுதலாக அசைவது போலவும் தெரிவதற்கு அடிப்படைக் காரணம் தொலைவு தான்.

இவ்விதம் எல்லையற்றுப் பரந்து கிடக்கும் இப்பிரபஞ்சம் பற்றி அறிவதன மூலம் மனிதர்கள் தம் பிறப்பின் காரணத்தின் சூத்திரத்தை அறிவதற்கு முயன்று கொண்டிருக்கின்றார்கள். அரிஸ்டாட்டில், கலிலியோ, நியூட்டன் , ஐன்ஸ்டைனென்று பிரபஞ்சம் பற்றிய கோட்பாடுகள் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன.

இந்த வகையில்தான் 'அலெக்ஸாண்டர் பிரிட்மென்'னுடைய (Alexander Friedman) (1920) பிரபஞ்சம் பற்றிய கருத்துகளையும் பார்க்க வேண்டும். ஐன்ஸ்டைனின் கணித சூத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்த பிரிட்மான் பிரபஞ்சத்தின் உருவ அமைப்பு பற்றிய கோட்பாடுகளை விபரித்தார். அலெக்ஸாண்டர் பிரிட்மான் பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அளவு பற்றி ஆராய்ந்தார். இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளானது வெளியை வளைக்கும் தன்மை படைத்தது. எனவே இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அளவு பற்றி ஆராய்ந்த பிரிட்மான் 'இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் மொத்த அளவானது இப்பிரபஞ்சத்திற்கு ஒரு வடிவினை, உருவ அமைப்பினை உருவாக்கும் அளவுக்குப் போதுமானது' என எடுத்துக் காட்டினார்.

அறிவியல் உலகம்: மனிதரின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்! - வ.ந.கிரிதரன் -

- சிக்மண்ட் பிராய்ட் -
"மனிதன் சூழ்நிலையின் கைதி" என்றொரு கூற்று நிலவுகின்றது. கூர்ந்து கவனிப்போமாயின் மனிதரின் வாழ்வின் பெரும்பாலான படிகளை நிர்ணயிப்பது அவர் வாழும் சமுதாயத்தில் நிலவிடும் புறச்சூழல்தான். இச் சூழலின் தாக்கம் அல்லது பாதிப்பு ஒவ்வொரு மனிதரின் மீதும் ஒரே விதமான தாக்கத்தினை வெளிப்படுத்துவதில்லை. மாறாக அவரது உடனடிச் சூழலான குடும்பச் சூழல், அவரது அகச்சூழல், என்பவற்றிற்கேற்பவே இப்பாதிப்பும் அவரிடத்தில் ஏற்படுத்தும் விளைவுகளும் இருந்து விடுகின்றன. வர்க்கங்களால், ஏற்றத்தாழ்வுகளால் பிளவுண்டு கிடக்கும் புறச்சூழல் மனிதரில் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் வலியவை. பெரும்பாலான தெளிவுள்ள மனிதர்களே இச்சூழலின் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்க முடியாமல் நீரோட்டத்தில் அள்ளுப்பட்டுச் செல்லும் கட்டையைப் போல் அள்ளுண்டு போகும்போது சாதாரணமனிதர்களின் நிலை என்ன? இத்தகைய பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைத்த ஒருசிலரே சூழலை மீறிய சரித்திர புருஷர்களாக, மானிட வழிகாட்டிகளாக உருவாகுகின்றார்கள்.

இவ்வாறு மனிதரைப் பல வழிகளிலும் ஆட்டிப்படைக்கும் இம் மனதினை மனோவியல் அறிஞரான சிக்மண்ட் பிராய்ட் இரு பகுதிகளாகப் பிரிக்கின்றார்.

1. உணர்வு மனம் (அல்லது புற மனம்)

2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்)

மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உணர்ச்சிக்கப்பாற்பட்ட ஆழ் மனமே. சகல விதமான அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளைப் புதைத்து வைத்துள்ளது. இந்த ஆழ்மனம்தான் மனிதரது சகல விதமான பிரச்னைகளிற்கும் காரணம். பகுத்தறிவு பேசுவது மனிதரின் உணர்வு மனம். ஆனால் அவரது உணர்விற்கப்பாற்பட்ட மனமான ஆழ்மனதினிலே அவர் பேசும் பகுத்தறிவிற்கேற்ற கொள்கைகள், எண்ணங்கள் பதிந்திராவிட்டால்..அவர் எவ்வளவு பகுத்தறிவு வாதம் புரிந்தும் பயனில்லை.

இன்றைய பெரும்பான்மையான சமய , அரசியல் தலைவர்களுட்பட சாதாரண மக்களீனதும் நிலை இதுதான். உணர்ச்சிகரமாகப் பேசுவதொன்று, செய்வதொன்றாக இருப்பதைப் பார்த்துப் பார்த்து அலுத்துக் கிடக்கின்றோமே.இந்நிலைக்குக் காரணம் இந்தப் புற , அக (ஆழ்)மனங்களிற்கிடையிலான போராட்டம்தான். புறச்சூழல், அகச்சூழலின் விளைவுகள் மனிதரில் புறமனதினில் ஏற்படுத்தும் பாதிப்பு செயலுருப் பெற வேண்டுமானால் அவரது ஆழ்மனமும் புறமனமும் ஒன்றாக இயங்க வேண்டியது அவசியம்.

அறிவியல்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! - வ.ந.கிரிதரன் -



 அண்மையில் மறைந்த விஞ்ஞானப் புனைகதையுலகில் முக்கிய படைப்பாளியாக விளங்கிய ஆர்தர் சி. கிளார்க்கை ஒருமுறை என் வாழ்வில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் வாழ்க்கைச் சரித்திரத்தில் அதுவொரு முக்கிய சந்திப்பாகவும் அமைந்து விட்டது. மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலைப் பட்டப்படிப்பினை முடித்துப் அதற்குரிய சான்றிதழினை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பெற்றது அவரது கைகளிலிருந்துதான். அவர்தான் அப்பொழுது மொறட்டுவைப் பல்கலைக் கழகத்து வேந்தராக இருந்தார். அவரது நினைவாக இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.-  இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானப் புனைகதையுலகில் கொடிகட்டிப் பறந்த முக்கியமான மூலவர்களாக மூவர் குறிப்பிடப்படுவார்கள். ஒருவர் ஐசக் அசிமோவ். ரஷிய நாட்டவர். அடுத்தவர் அமெரிக்கரான ரொபேட் ஏ றெய்ன்லெய்ன். இவர் மிசூரியைச் சேர்ந்தவர். அடுத்தவர் ஆர்தர் சி.கிளார்க். இவர் பிரிட்டனைச் சேர்ந்தவர்.

ஆர்தர் சி. கிளார்க் ஐம்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து அண்மையில் மறையும் வரையில் இலங்கையில் வசித்து வந்தாலும் அவர் பிறந்தது இங்கிலாந்திலுள்ள 'மைன்ஹெட்' என்னுமிடத்தில்தான். 1917இல் பிறந்த அவர் இலண்டனிலுள்ள 'கிங் காலேஜ்'ஜில் இயற்பியல் மற்றும் கணித்தில் தனது பட்டப்படிப்பினை முதற்பிரிவுச் சித்தியுடன் நிறைவு செய்தவர். மிகவும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானப் புனை கதை எழுத்தாளராக விளங்கிய கிளார்க் ஒரு விஞ்ஞானியும் கூடத்தான். தகவல் பரிமாற்றத்திற்கான செயற்கைக் கோள்களின் ஆட்சி கோலோச்சிக் கொண்டிருக்கும் இன்றைய யுகத்தின் பிதாமகரே இவரேதான். ஏனெனில் பூமிக்கான தகவல் பரிமாற்றத்திற்கான செயற்கைக் கோள்கள் பற்றிய கோட்பாட்டினை அன்றைய காலத்தில், நாற்பதுகளிலேயே, எதிர்வு கூறியவர் இவர். மேலும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது பிரிட்டிஷ் றோயல் விமானப்படையின் ராடார் நிபுணராகவும் இவர் பணிபுரிந்திருக்கின்றார்.

ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).

இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலிருந்துக் கூட இவ்விதமானதொரு நகர அமைப்பு நூல் நானறிந்த வரையில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. பொதுவாக நகர அமைப்பு பற்றித் தெரிவித்த தகவல்களைத் திரட்டி ஆய்வு நூல்கள் வந்திருக்கின்றனவே தவிர ஒரு குறிப்பிட்ட நகர அமைப்பு பற்றி முறையான ஆய்வுகளின் அடிப்படையில் ஆய்வு நூலேதும் வந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் இந்நூலுக்கொரு முதனூலென்றதொரு முக்கியத்துவமுண்டு. இந்தத் துறையில் ஆய்வு செய்ய விளையும் மாணவர்களுக்கு முதனூலாகவும் உதாரணப் பிரதியாகவும் நிச்சயம் இந்த நூலிருக்கும். இந்நூலின் அணிந்துரையில் பிரபல எழுத்தாளர் செ.யோகநாதன் கூறுவதுபோல் 'பின்னொருகாலத்தில் ,சுதந்திரக்காற்று வீசும் சூழலில் வாழப்போகின்ற இளந்தலைமுறை ஆய்வாளர்களுக்கு இந்த நூல் ஓர் ஆக்கபூர்வமான வழிகாட்டியாக அமையுமென்று நிச்சயமாக நம்புகின்றேன். ஏற்கனவே வெளிவந்த நூற் பிரதி மேலும் புதுக்கி இங்கு எழுதப்பட்டுள்ளது.

இந்நூலின் முன்னுரையில் கூறியிருப்பது போல் எனக்கு நல்லூர் நகர அமைப்பு பற்றி ஆராய வேண்டுமென்னும் ஆவல் ஏற்பட்டதற்குப் பல காரணங்களுண்டு. சிறு வயதில் நான் படித்த நாவல்கள் குறிப்பாகக் கல்கி , ஜெகசிற்பியன் போன்றவர்களின் நாவல்கள் தமிழர்களின் அன்றைய தலைநகர்களான தஞ்சாவூர், காஞ்சி போன்றவற்றின் நகர் அமைப்பு பற்றி அறியும் ஆர்வத்தினை அதிகரிக்க வைத்தன. நல்லூர் ராஜதானியைப் பொறுத்தவரையில்  போதிய வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப் படவில்லை. நல்லூர் இராஜதானி புகழ்பெற்று விளங்குவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் புகழ் பெற்ற தலைநகர்களாக விளங்கிய நகர்கள் அநுராதபுரம், யாப்பகூவா போன்ற தென்னிலங்கை நகரங்கள். அவை பற்றியெல்லாம் விரிவான நூல்கள், ஆய்வுகள் வெளிவந்திருக்கும் போது நல்லூர் இராஜதானியின் நகர் அமைப்பு பற்றிய ஆய்வுகளெதுவும் வெளிவராதது துரதிருஷ்ட்டமானது.

கட்டுரை: 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -

- கடந்த ஆண்டு வெளியான 'கணையாழிக் கட்டுரைகள் (1995 - 2000) ' என்னும் தொகுப்பு நூல் பற்றிய எனது விமர்சனம் செப்டம்பர் 2017 'கணையாழி' இதழில் வெளியாகியுள்ளது. ஒரு பதிவுக்காக அக்கட்டுரை இங்கு மீள்பிரசுரமாகின்றது. - வ.ந.கி -

அண்மைககாலத்தில் வெளிவந்து நான் வாசித்த கட்டுரைத்தொகுதிகளில் சிறந்த தொகுதிகளிலொன்றாகக் 'கணையாழிக்கட்டுரைகள் (1995-2000) தொகுதியினைக் கருதுவதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை. இந்தக்கட்டுரைதொகுதி என்னைக் கவர்வதற்குக் காரணமாக  இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ள கட்டுரைகளின் கூறுபொருள், கட்டுரைகளின் மொழிநடை ஆகியவற்றையே குறிப்பிடுவேன்.

கட்டுரைகளின் கூறுபொருள்
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளின் கூறுபொருள் பன்முகத்தன்மை வாய்ந்தவை. கலை, இலக்கியம், அறிவியல், அரசியல் எனக் கட்டுரைகள் பல விடயங்களைப்பற்றிக் கூறுபவை. இலக்கியத்தை என்னும் அதை மேலு பல உபபிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். கவிதை, படைப்பாளிகளின் படைப்புத்தன்மை, நாடகம், மொழிநடை (வட்டாரத்தமிழ் போன்ற), மேனாட்டு இலக்கிய அறிமுகம், நூல் அறிமுகம் இவ்விதம் இலக்கியத்தின் பன்முகப்பிரிவுகளிலும் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது தேர்வாளர்களின் கடும் உழைப்பினை வெளிப்படுத்துகின்றது. இப்பிரிவிவில் வெளியான கட்டுரைகள் வெளிப்படுத்தும் விடயங்கள், தகவல்களும் பற்பல.

படைப்பாளிகளைப்பற்றிய கட்டுரைகளாகச் சா.கந்தசாமியின்  'ஒரு படைப்பாளியின் நடைப்பயணத்தில்' , 'ஆருயிர் கண்ணாளுக்கு' (எழுத்தாளர் புதுமைப்பித்தன் மனைவிக்கு எழுதிய நெஞ்சினைத் தொடும் கடிதம்), 'கருத்துக்குளத்தில் கல்லெறிந்த கலகக்காரர்'(பிரபஞ்சனின் கலைஞர் படைப்புகள் பற்றிய பார்வை), சா.கந்தசாமியின் 'இலக்கிய சரிதம்' , தஞ்சை ப்ரகாஷின் 'எம்.வி.வெங்கட்ராம் எனும் நிரூபணம்', விக்கிரமாதித்யனின் 'நவீன கவிதை பிரமிளுக்கு முன்னும் பின்னும்' , ஞானக்கூத்தனின் 'டி.எஸ்.இலியட்டும் தமிழ் நவீன இலக்கியமும்' , அசோகமித்திரனின் 'சக பயணி' போன்ற கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.

நூல் அறிமுகம்: விமல் குழந்தைவேலின் வெள்ளாவி பற்றி.... - வ.ந.கிரிதரன் -

விமல் குழந்தைவேலுவின் 'வெள்ளாவி' புகலிடத்தமிழர்கள் மத்தியிலிருந்து வெளிவந்த நாவல்களில்முக்கியமான நாவல். அம்பாறை மாவட்டத்திலுள்ள கோளாவில் பகுதி வட்டாரத் தமிழில் நாவல் எழுதப்பட்டிருக்கின்றது. ஈழத்தில் வெளிவந்த வட்டாரத்தமிழில் வெளிவந்த நாவல்களில் இந்நாவலை முதலிடத்தில் வைக்கலாம். ஆடை துவைக்கும் சமூகத்தைச்சேர்ந்த பரஞ்சோதி என்னும் பெண் பாத்திரத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ள நாவல் பல பிரச்சினைகளைத் தொட்டுச் செல்கின்றது. சமூக, பொருளியல் மற்றும் அரசியற் பிரச்சினைகளை நாவல் வெளிப்படுத்துகின்றது. ஆணாதிக்கச் சமூகத்தில். அதுவும் தாழ்த்தப்பட்ட சமூகமொன்றில் பிறக்கும் சமூகமொன்றில் பிறக்கும் பெண்ணொருத்தி எத்தனை விதமான உளவியற் துன்பங்களை அடைய வேண்டியிருக்கின்றது என்பதை பரஞ்சோதி,, அவளது தாய் மாதவி ஆகியோர் தம் வாழ்வில் அடையும் அனுபவங்கள்: வெளிப்படுத்துகின்றன. பெண்ணைப்போகப்பொருளாகப் பயன்படுத்தும் போடியார் எவ்வளவு இயல்பாக மாதவியின் மகளை ஓரிரவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிச் செல்கின்றார். இந்த உண்மையை அறியாத பரஞ்சோதி , தன் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தந்தை தன்னை விரும்பிய வரதனாக இருக்குமோ என்று சந்தேகம் அடைகின்றாள். இச்சமயம் நடந்த உண்மையை அறிந்த தாயார் மாதவி போடியாரிடம் சென்று சண்டை போட்டு விட்டு வந்தவள் அந்தத் துயர் காரணமாகவே இறந்து விடுகின்றாள். வயிற்றில் குழந்தையுடன் தனித்து அநாதரவாக விடப்பட்ட பரஞ்சோதியை அரவணைத்துத் அவளது பிறக்கப்போகும் குழந்தையுடன் தன் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்கின்றான் நாகமணி. பிறக்கும் குழந்தை அரவிந்தன் வளர்ந்து பெரியவனாகி இயக்கத்தில் இணைந்து போராடப்போவதுடன் நாவல் நிறைவு பெறுகிறது. நாவலின் பிரதான விடயங்கள் இவையே.

நூல் அறிமுகம்: 'கசாக்கின் இதிகாசம்' - வ.ந.கிரிதரன்

 - 30.10.2017 அன்று 'ரொறன்ரோ' தமிழ் சங்கத்தின் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வில் நான் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். -

இங்கு நான் அண்மையில் நான் வாசித்த நூலொன்றினை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.  இது நூல் பற்றிய அறிமுகமேயன்றி விரிவான திறனாய்வு அல்ல என்பதையும் முதலிலேயே கூறிக்கொள்ள விழைகின்றேன். இதுவொரு புதினம்.  மலையாள மொழியிலிருந்து தமிழுக்கு  எழுத்தாளர் யூமா வாசுகியால்  மொழிபெயர்க்கப்பட்ட நாவல்.  ஓ.வி.விஜயனின் (ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன்)  'கசாக்கின் இதிகாசம்' நாவலைத்தான் குறிப்பிடுகின்றேன். இம்மொழிபெயர்ப்பைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

முதலில் சுருக்கமாக நாவலாசிரியர் ஓ.வி.விஜயன் அவர்களைப்பற்றிப் பார்ப்போம். ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன் மலையாள மொழியில் எழுத்தாளர், பத்திரிகையாளர், கேலிச்சித்திரக்காரர் எனப்பன்முகபரிமாணங்களைக்கொண்டவர். நாவல், சிறுகதை, மற்றும் கட்டுரை என இவரது இலக்கியக் களம் விரிந்தது. இவரது சகோதரி ஓ.வி உஷா,வும் மலையாளக் கவிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2.7.1939இல் கேரள மாநிலத்திலுள்ள கோழிகோடு விளயஞ்சாதனூர் என்னுமிடத்தில் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் (Presidency College, Madras) ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். 2005இல் மறைந்து விட்டார். கேரள சாகித்திய அக்காதெமி, மத்திய சாக்கித்திய அக்காதெமி மற்றும் கேரள மாநில அரசின் உயர்ந்த இலக்கிய விருதான எழுத்தச்சன் விருது போன்ற விருதுகளைப்பெற்ற ஓ.வி.விஜயன் இந்திய அரசின் பத்மபூஷண் விருதினையும் பெற்றவர். இவரது மனைவி தெரசா . அவரும் அமரராகிவிட்டார். ஒரே மகனான மது அமெரிக்காவில் வசிக்கின்றார்.

'கசாக்கின் இதிகாசம்' என்னுமிந்த நாவல் மலையாளத்தில் வெளிவந்த ஆண்டு 1969. இதுவே ஓ.வி.விஜயனின் முதலாவது நாவலாகும். இதிகாசமென்றதும் பன்னூறு பக்கங்களைக் கொண்ட விரிந்த நாவலாக இதனை யாரும் கருதி விடாதீர்கள்.  தமிழ் மொழிபெயர்ப்பு 239 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது. விக்கிபீடியாக் குறிப்புகளின்படி இந்நாவலை ஆசிரியர் எழுதுவதற்கு 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. இந்நாவலின் கட்டுக்கோப்பான மொழி இறுக்கத்தின் காரணத்தை உணர் முடிகின்றது. ஆனால் எழுத்தாளர் ஜெயமோகன் மிகக்குறுகிய காலத்தில் எழுதப்பட்ட நாவலாக இதனைக் குறிப்பிடுவார்:

எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் என்பதும் சார்பானது!

எழுத்தாளர் சுவிஸ் பா.ரவி தன் முகநூற் பதிவொன்றில் 'எழுத்தாளரைக் கொண்டாட வேண்டும் என சொல்லப்படுவதை எப்படி அணுகுவது என குழப்பமாக இருக்கிறது...

பிரபலமான பதிவுகள்