Tuesday, September 2, 2025

இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் மலையாளத் திரைப்படப்பாடலொன்று - 'ஒரு நாலு நாளாய் என்னிலுள்ளே தீயாக' !


மலையாளத்திரைப்படங்களில் எனக்குப் பிடித்த ஒரு விடயம் - அது கலைப்படைப்பாக இருக்கட்டும் அல்லது வெகுசனப் படைப்பாக இருக்கட்டும், இயக்குநர்கள் இயல்பாக மானுடர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை உள் வாங்கிக் காட்சிகளை அமைத்திருப்பார்கள். அதற்கு நல்லதோர் உதாரணம் இந்தப்பாடல்.

மம்முட்டி, பார்வதி நடித்த 'கார்னிவல்' (1989) திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலிது. 'ஒரு நாலு நாளாய் என்னிலுள்ளே தீயாக' என்னும் இப்பாடல். இப்பாடல் எனக்குப் பிடித்ததற்கு முக்கிய காரணம்?


மம்முட்டி தன் நண்பர்கள் மூவருடன் கள்ளுக்கொட்டிலில் கள் , அநேகமாகத் தென்னங் கள் ஆகவிருக்க வேண்டும். அவரது நினைவெல்லாம் அவரது உள்ளங்க கவர்ந்தவள் பற்றிய நினைப்புகள்தாம். அவளைப்பற்றிய நினைவுகளில் , குடிக்கும் கள் ஏற்றிய வெறி மயக்கத்தில் அவர் தன் அவளைப்பற்றிய உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கின்றார். அப்போது அவருடைய, அவரது நண்பர்களுடைய உடல் அசைவுகளை அவதானியுங்கள் , நிச்சயம் பிரமித்துப் போவீர்கள். மிகவும் இயல்பாக அமைந்திருக்கும் அவ்வுடல் அசைவுகளை உள்வாங்கிய இயக்குநருக்கு ஒரு சபாஷ். இதில் மம்முட்டியின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.



இவ்விதமான, மிகவும் இயல்பான மானுடரின் நடத்தையை வெளிப்படுத்தும் காட்சிகள் பலவற்றை மலையாளத் திரைப்படங்களில் காணலாம்.


இதில் வரும் பார்வதி எண்பதுகளின் இறுதியில் மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகையர்களில் ஒருவர். அடுத்த வீட்டுப்பெண் போன்ற அவரது தோற்றமே அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. இவரே நடிகர் ஜெயராமின் மனைவி. ஜெயராம் இயக்குநர் மணிரத்தினத்தின் 'பொன்னியின் செல்வன்'திரைபப்டத்தில் ஆழவார்க்கடியானாக வந்து எம்மைச் சிரிக்க வைத்தவர். மலையாளத் திரையுலகில் இவர் புகழ்பெற்ற நாயக நடிகர்களில் ஒருவர்.

பாடலைக்கேட்டுக் களிக்க https://www.youtube.com/watch?v=kAgchoDbYj4&list=RDkAgchoDbYj4&start_radio=1


 

Monday, September 1, 2025

ஆங்கில மொழிபெயர்ப்பாக வெளியான முதலாவது கனடாத் தமிழ் நாவல் (மின்னூல்) வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' . ஆங்கில மொழிபெயர்ப்பாக , அச்சில் வெளியான முதலாவது கனடாத் தமிழ் நாவல் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு , மாவென்சி பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் நேத்ரா றொட்ரிகோ.  இம்மொழி பெயர்ப்பு நூலின் வெளியீடு செப்டெம்பர் 6, 2025 அன்று ஸ்கார்பரோ நகரில் நடைபெறவுள்ளது.இது பற்றிய அறிவிப்பினை Tamil Arts Collective விடுத்துள்ளனர். அவ்வழைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "The publication of the 'Prison of Dreams' quintet marks a historic moment in Canadian Tamil literature, as it is the first book length translations of a Tamil novelist  published in Canada." அதாவது 'கனவுச்சிறை’ஐந்து பாகப் புதினத் தொகுப்பு கனடாவில் வெளிவருவது, கனடியத் தமிழ்ச் சமூக இலக்கிய வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். ஏனெனில், இது கனடாவில் வெளியிடப்பட்ட முதல் முழுநீளத் தமிழ்ப் புதின மொழிபெயர்ப்பு ஆகும்.' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவகாந்தனின் கனவுச்சிறை மகா  நாவல். தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் முக்கிய படைப்பு. அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதுதான் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் முழுநீள கனடாத்  தமிழ்ப் புதின மொழிபெயர்ப்பா?  அப்படிக்கூறுவதற்கில்லை.  எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'தமிழ் நாவல் ஏற்கனவே ஆங்கிலத்துக்கு எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் ஆங்கில மின்னூற் பதிப்பு ஏறகனவே அமேசன் கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகியுள்ளது. 

Saturday, August 30, 2025

இளைஞர்களே! சிந்தியுங்கள்! செயற்படுங்கள்! மாற்றங்களை, ஏற்றங்களை ஏற்படுத்துங்கள்! - நந்திவர்ம பல்லவன் -

[பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள நந்திவர்மப்பல்லவனின் கட்டுரை.]

இந்தப் பதிவு இளைய தலைமுறையினருக்கானது. சமுதாயப் பிரக்ஞை மிக்க, தொலை நோக்குச் சிந்தனை மிக்க இளைய தலைமுறையினருக்கானது. 

தமிழ் இளைஞர்களே!  நீங்கள் செயற்பட வேண்டிய தருணமிது. தமிழ்த் தேசியத்தைப் பற்றிக் கவலைப்பட அரசியல்வாதிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் அவர்கள் வழியில் செல்லட்டும். ஆனால் தமிழர்களின் வர்க்க விடுதலை, சமூக விடுதலை பற்றிக் கவலைப்படுவதற்கு , செயற்படுவதற்கு யாருளர்? தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளது. வடக்கில் அது போன்ற அமைப்பொன்றும் இல்லை. அத்தகைய மக்கள் விடுதலை  அமைப்பொன்றின் தேவை உள்ள காலகட்டம் இது.  அதன் பெயர் மக்கள் விடுதலை அணி,  மக்கள் விடுதலை அமைப்பு  என்று  கூட இருக்கலாம். இளைஞர்களே1 சிந்தியுங்கள்! இப்பதிவு உங்களில் யாருக்காவது ஒரு பொறியினைத் தட்டி விடுமானால் அதுவே இப்பதிவின் முக்கிய நோக்கம்.

நீங்கள் ஒவ்வொருவரும் வாழும் , உங்கள் ஊரில் உள்ள மக்களைப் பாருங்கள். சமூகப் பிரிவுகள் , வர்க்கப்பிரிவுகளாக அவர்கள் பிரிந்து கிடக்கினறார்கள்.  அவர்களின் வர்க்க விடுதலை பற்றி, சமூக விடுதலை பற்றிச் சிந்திப்பவர்கள் யார் இருக்கின்றார்கள்? அவர்களைப் பற்றித் தொலை நோக்குடன் சிந்தியுங்கள். அவர்களில் ஒருவர்தான் நீங்களும். சமூகப்பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கும் நீங்கள் அனைவரும் ஒரு வர்க்கமாக ஒன்றிணைந்துதான் இருக்கின்றீர்கள். வர்க்கமாக ஒன்றிணைவதை  உங்களுக்கிடையில் நிலவும் சமூகப் பிரிவுகள் தடுத்து நிற்கின்றன. அதைப் புரிந்து   கொள்ளுங்கள். செயற்படுங்கள்.

நீங்கள் வாழும் கிராமங்களில், ஊர்களில் நீங்கள் இவ்விடயத்தில் இளையவர்களாக ஒன்றிணைந்து பல ஆக்கபூர்வமான விடயங்களைச் செய்யலாம்.சமூக, வர்க்கப்பிரிவுகளை  மக்களிடத்தில் எடுத்துரைத்து, அவை நீக்கப்படுவதன் அவசியம் பற்றிய கூட்டங்கள் நடத்தலாம். அடிக்கடி கருத்தரங்குகள் நடத்தலாம், அவை சம்பந்தமான நூல்களை, பத்திரிகைகள் உள்ளடக்கிய நூல் நிலையங்களை அமைக்கலாம். இலாப , நோக்கற்ற அமைப்புகளை உருவாக்கி அவற்றின் மூலமும் இப்பணிகளைச் செய்யலாம்.

நெஞ்சை அள்ளும் 'மதில்கள்' உரையாடல்! அடூர் கோபாலகிருஷ்ணனின் செதுக்கிய திரைமொழி!


அடூர் கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில், திரைக்கதையில், தயாரிப்பில் வெளியான மதிலுகள் (மதில்கள்) மலையாளத் திரைப்படத்தின் மூலக்கதை எழுத்தாளார் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியது. அவரது சொந்த அனுபவங்களையொட்டி எழுதிய நாவலாகக் கருதப்படுவது 'மதில்கள்' குறுநாவல். 

நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற திரைப்படத்தில் (இயக்கம், நடிப்பும், ஒலிப்பதிவு & சிறந்த பிராந்தியத் திரைப்படம்) பஷீராக  மம்முட்டி நடித்திருப்பார். கதையின் பிரதான பெண் பாத்திரமான நாராயணியை படம் முழுவதும் வெளிப்படுத்த மாட்டார்கள். குரல்தான் அவரை அடையாளப்படுத்தும். குரலுக்குச் சொந்தக்காரி நடிகை K. P. A. C. லலிதா.  இவர் இயக்குநரும், தயாரிப்பாளருமான பரதனின் மனைவி. சாந்தம், அமரம் (இவரது கணவர் பரதன் இயக்கியது) ஆகிய படங்களில் நடித்ததற்காக இரு தடவைகள் இந்திய் அரசின் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் மணிரத்தினத்தின் அலைபாயுதே, காற்று வெளியிடை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை ஷாலினியின் தாயாராக் நடித்திருக்கின்றார். இவரது மகன் சிதார்த் பரதனும் நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இவரை உணர்வுகளின்  இராணி என்பர். அவ்வளவுக்கு உணர்வுகளை வெளிப்படுத்தி நடிப்பதில் வல்லவர் இவர்.

பஷீர் அரசியல் காரணங்களுக்காகத் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருப்பவர். நாராயணியோ கொலைக்குற்றத்துகாக ஆயுள் தண்டனை பெற்ற கைதி. இருவரையும் சிறைச்சாலை மதில் பிரிக்கின்றது. இருவருக்கிடையிலும் நட்பு , காதலுடன் கூடிய நட்பு மலர்கின்றது. இங்குள்ள காணொளியிலுள்ள உரையாடல் இத்திரைப்படத்தின் முக்கியமான ஒரு பகுதி. அடூர் கோபாலகிருஷ்ணனின் செதுக்கிய திரைமொழிக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. 

Friday, August 29, 2025

நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற அடூர் கோபால்கிருஷணனின் மலையாளத் திரைப்படம் 'மதில்கள்'! - வ.ந.கிரிதரன் -


நடிகர் மம்முட்டியின் சிறந்த படங்களிலொன்று 'மதில்கள்' . ஃபோர்ப்ஸ் சஞ்சிகை தேர்தெடுத்த இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிப்புக்கான்  25 தேர்வுகளில் ஒன்றாக இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் மம்முட்டியின் நடிப்பும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைக்கதை, இயக்கம் & தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் 1990ற்கான இந்திய மத்திய அரசின் நான்கு விருதுகளை இயக்கம், நடிப்பு , ஒலிப்பதிவு & சிறந்த பிராந்தியத்  திரைப்படம் ஆகியவற்றுக்காகப் பெற்றது. சிறந்த நடிப்புக்காக மம்முட்டிக்கு இப்படத்திற்காகவும், 'ஒரு வடக்கன் வீரகதா'வுக்காகவும் கிடைத்தது. ஒரே நேரத்தில் இவ்விதம் இரு படங்களுக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்ற ஒரே  நடிகர் மம்முட்டியாக மட்டுமேயிருப்பார்.

இத்திரைப்படத்தின் கதையை எழுதியவர் மலையாள இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான வைக்கம் முகம்மது பஷீர்.  அது ஒரு குறுநாவல். அவரது சொந்தச் சிறை அனுபவத்தின் அடிப்படையில் உருவான சுயசரிதை நாவலாக அந்நாவல் அமைந்துள்ளதாகக் குறிப்பிடுவர்.

கதை இதுதான்: தேசத்துரோகக் குற்றத்துக்காகத் தண்டனை பெற்ற அரசியல் கைதி பஷீர். அங்கிருக்கும்  பெண்களின் சிறையில் கொலைக்குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்ற பெண் கைதி நாராயணி.   ஆண்களின் சிறைப்பகுதியையும், பெண்களின் சிறைப்பகுதியையும் பிரிக்கின்றது நெடுமதில்.

(பதிவுகள்.காம்) பேராசிரியர் இரமணிதரன் கந்தையாவின் 'டிஜிட்டல்' ஓவியங்கள் (1) - இலங்கைத் தமிழ் இலக்கிய ஆளுமைகள்!

 - பேராசிரியர் க.கைலாசபதி -

ஒஹியோ மாநிலத்திலுள்ள சென்ரல் ஸ்டேட் யுனிவேர்சிடியில் (Central State University) சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah) புகலிடத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவர். இரமணிதரன் கந்தையா, சித்தார்த்த சே குவேரா என்னும் பெயரில் சிறுகதை, கவிதை எழுதி வருபவர். பதிவுகள் இணையத் தளத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் இடம் பெற்ற விவாதத்தளத்தில் திண்ணை தூங்கி என்னும் பெயரில் விவாதங்கள் பலவற்றில் பங்கு பற்றியவர். 

'டிஜிட்டல்' வடிவில் மெருகூட்டப்பட்ட புகைப்படங்கள்!


- வ.ந.கிரிதரன் -

நண்பர் எழுத்தாளர் இரமணிதரன் கந்தையாவின் டிஜிட்டல் ஓவியங்களில் மனத்தைப் பறிகொடுத்த நான், என் புகைப்படங்களை அனுப்பியதும் , தயங்காமல் உடனடியாக அவற்றையும் மெருக்கூட்டி , டிஜிட்டல் ஓவியங்களாக்கி அனுப்பியிருந்தார். நன்றி இரமணி.
 
எழுத்து (சிறுகதை, கவிதை) , 'டிஜிட்டல் ஓவியம்' எனத் தன் கைவண்ணத்தைக் காட்டி வரும் நண்பர் இரமணிதரன் கந்தையாவுக்கு நன்றியும் , வாழ்த்துகளும்.

Wednesday, August 27, 2025

என் அபிமான நடிகர் விரைவில் பூரண நலத்துடன் மீண்டு வரவேண்டும்! வருவார்!


எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. அவரது நடிப்பு நெஞ்சை நிறைப்பது. அண்மைக்காலமாக அவர் உடல் நலமற்று இருப்பதாகவும், தற்போது நலம்டைந்து வருவதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்ற்ன.  எந்த வேடமென்றாலும் சிறப்பாகச் செய்யும் ஆற்றல் மிக்கவர். அவரது குரலும், சிரிப்பும், நடிப்பும் எப்போதும் பார்ப்பவருக்கு இன்பத்தைத் தருவன.  விரைவில் பூரண நலத்துடன் மீண்டும் மம்முட்டி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு.  வைக்கம் முகம்மது பஷீரின் குறுநாவலான 'மதிலுகள்' திரைப்படக் காட்சி. மதிலுகள் மம்முட்டிக்குத் நடிப்புக்காகத் தேசிய விருதினைப் பெற்ற திரைப்படம். மம்முட்டி மூன்று தடவைகள் இந்திய மத்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் மம்முட்டி CBI துப்பறியும் அதிகாரியாக நடித்திருக்கும் மலையாளத்திரைப்படங்கள் புகழ்பெற்றவை. எனக்கும் அவை மிகவும் பிடிக்கும். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தில் நடித்ததற்காகவும் இவர் இந்திய மத்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கின்றார். நடிகர்  மம்முட்டி ஆரம்பத்தில் சட்டத்தில் இளங்க்லைப் பட்டம் பெற்று வழக்குரைஞராகப் பணியாற்றி நடிக்க வந்தவர் என்பது இவரைப்பற்றிய இன்னுமொரு தகவல்.

Monday, August 25, 2025

கவிதை: குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -



 * ஓவியம் - AI

குளிர்காலம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது. 
கனடாவில் ஆண்டுகள் பலவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இன்னும் இந்தக் குளிர்காலம் மீதான
என் வெறுப்பு குறைந்தபாடாகவில்லை.
வழக்கம்போல் குளிர்காலம் பற்றிய நினைவுகள் 
வந்தவுடன், கூடவே அதனுடன் இணைந்து  
வரும் பனி, உறைபனி எல்லாமே நினைவுக்கு 
வந்து விடுகின்றன.
இவற்றை இம்முறை எவ்விதம் சமாளிக்கப் போகின்றேன்
என்பது பற்றிய எண்ணங்களே 
என் சிந்தையெங்கும் வியாபிக்கத்தொடங்குகின்றன.

நானும்தான் பல தடவைகள் முயற்சி செய்து பார்த்து விட்டேன்,
இம்முறையாவது குளிர்காலத்துடன் ஒரு 
நட்பு ஒப்பந்தம் செய்து 
நிம்மதியாக இருந்து விடுவோமேயென்று.
 எண்ணங்கள் எல்லாமே 
என்னைச் சுற்றிக் குளிர்காலம் 
தன்கரங்களை விரிக்கும் அத்
தருணத்தில் ஓடியொளிந்து விடுகின்றன.

அடுத்தவருடமாவது 
அதனுடன் ஓர் ஐக்கியம் ஏற்பட வேண்டும்.
ஏற்படுமா? என்னும் எண்ண்ங்கள் பெருக,
இம்முறை அதனுடன் நட்பு பாராட்டும் 
எண்ணங்களைத்  தவிர்த்து விடுகின்றேன்.
அதனுடான போருக்கு என்னைத்
தயார்படுத்திக்கொள்கின்றேன்.

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் 'இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 4 - இறுதிப்பகுதி) வ.ந.கிரிதரன் -


அடுத்த இரண்டு பகுதிகளும் ('திலகரின் அரசியலை, பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை' , 'சுருக்கம்' & அணுகுமுறை) இருபத்து நான்கு வயது இளைஞனான பாரதி வரலாற்றில் எந்தப் புள்ளியில் நிறகின்றான் என்பதை ஆராய்வதுடன், அவனது சரியான ஆளுமையை முடிவு செய்வதுமாகும்.  அவன் மதவாதியா, தீவிரவாதியா, ஆங்கிலேயருக்கெதிரான் தேசிய விடுதலைப்போரில் அவனது நிலைப்பாடும், செயற்பாடும் எவையெவை என்பவை பற்றித் தர்க்கபூர்வமாக ஆராய்வதாகும்.  அவற்றை ஆராய்வதற்கு முதல் ஜோதிகுமார் பாரதியாரின் எழுத்தின் நோக்கம், எழுத்தின் தன்மை பற்றிச் சிறிது கவனம் செலுத்துகின்றார். 

பாரதியின் எழுத்தின்  நோக்கமும், தன்மையும்

பாரதியாரின் எழுத்தின் முக்கிய பண்பாக அவதானிக்கக்கூடியது அவரது ஆழமும், எளிமையும் கூடிய மொழி நடை.  உதாரணத்துக்கு 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையைக் கூறலாம். பொருள் முதல்வாதம், கருத்து முத்ல்வாதம் பற்றிய தர்க்கமே அதன் அடிநாதம். ஆனால் அதனைக்கண்டடைவது முறையான, தர்க்கமொன்றின் மூலமே சாத்தியம். ஆனால் அவர் அக்கவிதையில் பாவித்துள்ள மொழி நடை என்பது மிகவும் எளிமையானது. எல்லாருக்கும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியது. அதனால் விளையும் முக்கிய நன்மைக்களிலொன்று - வாசிப்பின் பல்வேறு படி நிலைகளிலுள்ள வாசகர்களாலும் இக்கவிதையை எளிதாக வாசிகக் முடியும். ஆனால் , புரிதல்தான் அவரவர் வாசிக்கும், சிந்திக்கும் திறன் மற்றும் அனுபவத்திற்கேற்ப வேறுபடும். 

Saturday, August 23, 2025

ஜெயகாந்தனின் 'ஞானரதம்' கவிதை - 'நிழல்'


எழுபதுகளில் வெளியான 'ஞானரதம்' சஞ்சிகையில் வெளியான எழுத்தாளர் ஜெயகாந்தனின் கவிதை இது. இக்கவிதை மீதான என் புரிதல் கீழே:
 

மானுட வாழ்வின் பொருள் மீதான ஆசையினை ஒளியாகக் கவிஞர் சித்திரித்திருக்கக் கூடும். விட்டில்கள் ஒளி நாடிச் சென்று மாய்வதைப்போல் மானுடரும் பொருள் தேடி ,அதில் மூழ்கி மாய்ந்து போகின்றார்.
 
ஆனால், நான் இருப்பின் தன்மையை விளங்கியவன். ஒளிநாடிச் செல்லும் விட்டில் அல்லன். எனக்கு வழி காட்டிட விளக்கு (செல்வம் பெருக்க அறிவுரை கூறும் வழிகாட்டி ) தேவையில்லை. எனக்குத் தேவையெல்லாம் எனக்குப் பின்னால் நீண்டிருக்கும் நிழலைக் காட்டும் விளக்கொன்றே.
 
நிழல் என்பது நிஜம் அல்ல. நிஜம் போல் தெரியும் நான் உண்மையில் என் பின்னால் நீண்டிருக்கும் நிழல் போன்றவன். நிஜமற்ற நிழல் போன்றதுதான் மானுட இருப்பும். நிஜமென்று நாம் நம்பும் மானுட இருப்பும் ஒருவகையில் நிழல்தான். அதனை எனக்கு வெளிக்காட்ட, புரியவைக்கக்கூடிய விளக்குத்தான் (குரு போன்ற வழிகாட்டியே) எனக்குத் தேவை. 
 
இப்படியும் புரிந்து கொள்ளலாம். உங்கள் புரிதல் எப்படியோ? 

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் ' இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 3) - இருபத்திநான்காம் வயதில் பாரதி: பாரதியின் முகங்கள் - வ.ந.கிரிதரன் -


இப்பகுதியின் ஆரம்பத்தில் ஜோதிகுமார் பாரதியின் மூன்று முரண்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவையாவன்;  அவனது சிந்தையில் காணப்படும் முரண், அவன் அரசியலில் தென்படும் முரண், அவன் எழுத்தில் புலப்படும் முரண்.  இவ்விதம் ஆரம்பமாகும் கட்டுரையில் கட்டுரையாசிரியர் தொடர்ந்து இம்முரண்கள் பற்றி விரிவாகத் தர்க்கம் செய்வார் என்றே வாசிக்கும் எவரும் உணர்வர், ஆனால் 'இம்முரண்கள் ஒவ்வொன்றும் , தனித்தனி உதாரணங்களோடு அவனது வாழ்க்கை நகர்வுகளுக்கு ஏற்ப விவாதிக்கப்படுவது விரும்பத்தக்கது' என்பதுடன் மேலும் அம்முரண்கள் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்து விடுகின்றார் ஜோதிகுமார். 'இதன் காரணத்தினாலேயே ,இக்கட்டுரைத்தொடரின் முடிவுகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட முடியாதவையாகின்றன' என்றும் கூறுகின்றார்.  இம்முரண்களைப்பற்றி விரிவாகத் தர்க்கத்தைத் தொடர்ந்திருந்தால் அது மிகவும் பயனுடையதாகவிருந்திருக்கும். பாரதியின் முரண்கள் எல்லாம் அவனது தேடலையும், வளர்ச்சியையும் , அவ்வளர்ச்சியினூடு அவனிடம் ஏற்பட்ட முதிர்ச்சியினையும், தெளிவினையும் வெளிப்படுத்துவதாக அத்தர்க்கம் அமைந்திருக்கும். அதற்கான சந்தர்ப்பத்தைத் தவற் விட்டுவிட்டார் ஜோதிகுமார். பிறிதொரு சந்தர்ப்பத்தில் , விரிவாக இம்முரண்கள் பற்றிய தர்க்கத்தை அவர் தொடர்வார் என்று எதிர்பார்ப்போம்.

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் ' இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 2) - இருபத்திநான்காம் வயதில் பாரதி: ஆன்ம உணர்ந்திறன் வ.ந.கிரிதரன் -


இருபத்திநான்காம் வயதில் பாரதி: ஆன்ம உணர்ந்திறன்


இப்பகுதியின் ஆரம்பத்தில் ஜோதிகுமார் 'மனிதனது இதய தாபங்கள் அனைதையும் சரியாக உள்வாங்கி, அவற்றை நல்ல முறையில் எதிரொலிக்கக் கூடியதாக, தன் ஆன்மாவை நுண் உணர்வுமிக்கதாய் மாற்றி அமைத்துக்கொள்ள உண்மைக் கலைஞன் வேண்டப்படுகின்றான். ஆனால், இத்தகைய ஆன்மாவை வடிவமைப்பதென்பதும், அதனைத் தக்கவைத்துக்கொள்வது என்பதும் கடின செய்கையே.'  என்று குறிப்பிடுகின்ரார்.  இது ஒரு கேள்வியை எழுப்புகிறது. அது - ஜோதிகுமார் ஆன்மா என்னும் கருதுகோளை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதுதான். மார்க்சியவாதிகள் ஆன்மா என்னும் கருதுகோளை ஏற்பதில்லை. அவர்கள் பொருள்முதல்வாதிகள்.  ஆன்மா என்று ஒன்றிருப்பதை ஏற்றுக்கொள்வதில்லை.  உண்மையில் ஆன்மா என்று இங்கு ஜோதிகுமார் கருதுவது எதனை?

ஆன்மா என்று ஜோதிகுமார் கருதுவது , பொருள்முதல்வாதிகள் கருதுவது போல் , உடலிலிருந்து தனித்து இயங்குமொன்றினை அல்ல , மாறாகச் சிந்தையைத்தான். அதனைத்தான் இந்நெடுங்கட்டுரையில் மூன்றாம் ப்குதியில் வரும் இவ்வரி புலப்படுத்துகின்றது: "ஓன்று அவனது ஆன்மாவில் (சிந்தையில்) தட்டுப்படக் கூடிய முரண்''

இங்கு பாரதியார் ஆன்மாவுக்கு இன்னுமோர் அர்த்தமாகச்  சிந்தை என்று கருதுவதையும் அறிய முடிகின்றது.  சிந்தை என்பது மார்க்சியவாதிகளின் கருத்துப்படி பொருள்வயமான மூளையின் செயற்பாடு. மூளையில்லையேல் சிந்தையில்லை என்பது அவர்கள் கருத்து.மாறாகக் கருத்துமுதல்வாதிகளோ ஆன்மா என்பது உடலிலிருந்து வேறானது என்று கருதுவர்.

Friday, August 22, 2025

எம்ஜிஆர் வழியில் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் ஆரம்பம்!


அண்மையில் தமிழகத்தில் நடிகர் விஜய்யின் தமிழர் வெற்றிக் கழக மாநாடு மதுரையில் நடந்தது. அம்மாநாடு பற்றிய செய்திகளை ஊடகங்களில் பார்த்தேன். அதில் தென்பட்ட ஒரு விடயம் என் கவனத்தை ஈர்த்தது. அது  - மாநாடு உள்ளடக்கியிருந்த அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் உருவப்படங்களுடன் கூடிய விஜய்யின் படம். இது ஒன்றைக் காட்டுகிறது. விஜய் தமிழக மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்திருக்கின்றார் என்பதுதான் அது.

எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்தபோது அண்ணா பெயரை வைத்து ஆரம்பித்தார். அவ்விதம் ஆரம்பித்து கலைஞர், எம்ஜிஆர் என்னும் ஈர் ஆளுமைகளுக்கிடையிலான மோதல்களாகத் தமிழகச் சட்டசபைத்தேர்தலை மாற்றினார். அவர் திரைப்படத்துறையில் இருந்தவரையில் எம்ஜிஆர் , சிவாஜி என்னும் உச்ச நட்சத்திரங்களுக்கிடையிலான மோதலை எவ்விதம் கையாண்டு வெற்றி பெற்றாரோ, அவ்விதமே அரசியலிலும் கலைஞர் , எம்ஜிஆருக்கிடையிலான மோதலைக் கையாண்டு வெற்றி பெற்றார். இதனால்தான் வெற்றி பெறுவதற்குக் கீரைக் கடைக்கும் எதிர்க்கடை தேவை என்பர். இவ்விதம் ஈர் எதிரிகளின் போட்டியாக அரசியலை மாற்றுவதன் மூலம் ,  மக்களின் கவனம் அதில் பதிந்து நிற்கும். அதன் வழியே பிரிந்து நிற்பார்கள். இதில் ஏனைய கட்சிகள் அடியுண்டு போய்விடும்.

Thursday, August 21, 2025

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் ' இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 1) வ.ந.கிரிதரன் -




தன் குறுகிய வாழ்வில் மகாகவி பாரதியின் சிந்தனை வளர்ச்சியை வெளிப்படுத்தும் அவரது எழுத்துகள் (கவிதைகள், கட்டுரைகள்) என்னை மிகவும் வியப்புக்குள்ளாக்குபவை.  அவரது எழுத்துகள் மானுட பருவங்களின் வளர்ச்சிக்கேற்ப அர்த்தங்களிலும் புது அர்த்தங்கள் தருபவை.  குழந்தைக்கும் பாரதியைப்பிடிக்கும்.  சிந்தனை முதிர்ச்சியுற்ற , தேடல்மிக்க மானுடருக்கும் பிடிக்கும்.  இருப்பை நன்கு உணர்ந்து கொண்ட , முதிர்ச்சியுற்ற சிந்தனையாற்றல் மிக்க ஒருவரின் எழுத்துகளுக்கே காலத்துடன் ஈடுகட்டி, இவ்விதம் எழுந்து நிற்கும் வல்லமை உண்டு. ஏனைய ஒற்றைப்பரிமாணம் மிக்க தட்டை எழுத்துகள் மானுடப் பருவமொன்றுடன் தேங்கி, அப்பருவத்துக்குரிய அழியாக கோலங்களாக நிலைத்து நின்றுவிடும் பண்பு மிக்கவை. ஓர் எழுத்தாளராக, தேசிய, மானுட வர்க்க . சமூக விடுதலைப் போராளியாக அவர்தம் ஆளுமையின் பரிணாம் வளர்ச்சியினைச் சாத்தியமாக்கியவை எவை, சாத்தியமாக்கிய ஆளுமைகள் எவர் என்ற் கேள்விகள் அடிக்கடி எனக்குள் எழுவதுண்டு.  

அண்மையில் பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகி , நூலுருப்பெற்ற 'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின்  ' 23ஆம் வயதில்  பாரதி' (23 - 24ஆம் வயதில் பாரதி, இருபத்து நான்காம் வயதில் பாரதி, இருபத்து மூன்றாம் வயதில் பாரதி, '23-24 வயதில் பாரதி : வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் - கட்டுரையும்' என்னும் தலைப்புகளில் பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளை உள்ளடக்கிய நெடுங்கட்டுரை) கட்டுரையில் இக்கேள்விகளுக்கான சில  பதில்கள் இருப்பதை வாசித்தபோது அறிய முடிந்தது. இந்நெடுங் கட்டுரை ஜோதிகுமாரின் தர்க்கச்சிறப்பு மிக்க சிந்தனை முதிர்ச்சியின் வெளிப்பாடு என்பதைக் கட்டுரையை வாசிக்கும் எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.  பாரதியின் அனைவராலும் அறியப்பட்ட அவரது ஆளுமையின் அடிப்படைக்கூறுகளைந் நிர்ணயிக்கும் முக்கிய அவரது வயதாக 23 - 24 ஐக் குறிப்பிடலாம் என்பதை ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கின்றது இக்கட்டுரை. கூடவே அப்பருவத்தில் அவரது ஆளுமையில் , சிந்தனையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களைக் கவனத்திலெடுத்து ஆராய்கின்றது.

Monday, August 18, 2025

அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க்கோ ரூபியோவின் குதர்க்கமும், இந்தியா மீதான அமெரிக்காவின் மேலதிக வரி விதிப்பும்!


அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க்கோ ரூபியோவின் இந்தியா மீதான மேலதிக வரி விதிப்பு பற்றிய கருத்து குதர்க்கமானது மட்டுமல்ல,  இ ந்தியாவைக் களங்கப்படுத்துவதும் கூட. ருஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய்யை வாங்கி, சுத்திகரித்து அதை ஐரோப்பிய நாடுகளுக்கு விற்று இலாபம் சம்பாதித்து  வருகின்றது சீனா. அதற்கு அமெரிக்கா மேலதிகத்  தடை விதிக்கவில்லை. ஆனால், இந்தியாவுக்கு விதித்துள்ளது. 

இதற்கு அவர் கூறும் காரணம் - அவ்விதம் மேலதிக வரியினைச் சீனாவுக்கு விதித்தால் அது சீனாவிடமிருந்து எண்ணெய்யைப் பெற்றுக்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளப் பாதிக்குமாம்.  ருஷ்யாவிடமிருந்து எண்ணெய்யைத் தன் நாட்டின் தேவைக்காக இந்தியா வாங்கினால், அது இந்தியா உக்ரேனுக்கு எதிரான ருஷ்யாவின் போருக்கு உதவுகின்றதாம்,. அதற்காக வரி விதிக்கின்றார்களாம். ஆனால் இந்தியாவை விட அதிகமாக எண்ணெய்யை வாங்கும்  சீனாவின் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை ஐரோப்பிய நாடுகள் வாங்குகின்றன. ஆனால் இது உக்ரேனுக்கு எதிரான ருஷ்யாவின் போருக்கு உதவ வில்லையாம். இதைவிடக் குதர்க்கத்தனமான பதில் வேறென்ன இருக்க முடியும்?

Saturday, August 16, 2025

இசைக்கு ஏது எல்லை: 'புஞ்சி சமனலி' நெஞ்சங் கவர்ந்த சிங்களப் பாடல்!

பேராசிரியர் சுனில் ஆரியரத்னா

பேராசிரியர் சுனில் ஆரியரத்னாவின் இயக்கத்தில்வெளியான திரைப்படம் 'பத்தினி'.   'நாம கடவுள்' புகழ் பூஜா உமாசங்கர் கண்ணகியாக நடித்திருக்கும் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிஙகளத்திரைப்படம். 

பேராசிரியர் சுனில் ஆரியரத்னாவைச் (Sunil Ariyaratne)  சிங்களக் கலை,இலக்கிய உலகு நன்கறியும். கவிஞர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், திரைக்கதாசிரியர், பாடலாசிரியர் எனச் சிங்களத்திரையுலகில், சின்னத்திரையுலகில் நன்கறியப்பட்ட ஒருவர்.   

காவிய மாந்தர்களை வைத்து இவர் உருவாக்கிய சிங்களத்திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பையும், வசூலையும் பெற்றவை. சிலப்பதிகாரக் கதையை மையமாக வைத்து இவர் எடுத்த சிங்களத்திரைப்படமான 'பத்தினி' பெற்ற வரவேற்பைத்தொடர்ந்து இவர் சித்தார்த்தரின் (புத்தர்) மனைவியான யசோதராவை மையமாக வைத்து உருவாக்கிய Bimba Devi Alias Yashodhara என்னும் திரைப்படமும்  2018இல் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

Thursday, August 14, 2025

பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் பதிவுகள் பற்றி வெளியான ஊடகக் குறிப்புகள் சில..


'பதிவுகள்' இணைய இதழ் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளிவரும் இணைய இதழ். தமிழ் இணைய இதழ்களில்  வெளியாகும் இணைய இதழ்களில் திண்ணை, பதிவுகள், அம்பலம், ஆறாந்திணை ஆகியவை ஆரம்ப காலத்து இணைய இதழ்கள். பதிவுகள் இணைய் இதழின் ஆரம்பக் காலகட்டத்தில்  பதிவுகள் பற்றி ஊடகங்களில் வெளியான குறிப்புகளில் சில இவை.

'பதிவுகள்' பற்றி விகடன்...

ஆனந்த விகடன் ஆவணி 20,2000 இதழில்...

உலகே..உலகே..உடனே வா; காந்தி இருந்திருந்தால்... 

'பதிவுகள்' இணைய இதழில் (http://www.pathivukal.com) மகாத்மா காந்தியின் பேரன் டாக்டர் சாந்தி காந்தியைப் பற்றிக் கடுமையான விமரிசனம் வந்திருக்கிறது. அவர் இருந்திருந்தால் அமெரிக்காவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான குடியரசுக் கட்சியின் பக்கம் தான் இருந்திருப்பார் என்று அவர் சொன்னதுதான் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது. ஏன்? கட்டுரை  சொல்லும் விளக்கம்- 

"அமெரிக்காவில் வாழும் பெரும்பாலான கறுப்பின மக்கள் ஜனநாயகக் கட்சியினையே ஆதரிக்கின்றார்கள். குடியரசுக் கட்சியின் செயற்பாடுகள் இனத்துவேசம் பிடித்தவையெனக் கருதுகின்றார்கள். இம்முறை உப ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 'டிக் செய்னி' தென்னாபிரிக்காவின் முன்னால் ஜனாதிபதியான நெல்சன் மண்டலா சிறையிலிருந்து விடுவிக்கப் படுவதற்கு எதிராக அமெரிக்கக் காங்கிரஸில் வாக்களித்தவர். முன்னால் வெள்ளையினச் சிறுபான்மை அரசிற்கெதெராகத் தடைகள் கொண்டு வருவதை பலமுறை எதிர்த்துக் காங்கிரஸில் வாக்களித்தவர். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்ஸினைப் பயங்கரவாத இயக்கமாகக் கருதியதால்தான் தான் அவ்விதம் வாக்களித்ததாக நாடகமாடுகின்றவர். தென்னாபிரிக்க மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவரின் கொள்ளுப் பேரன் , 'தென்னாபிரிக்க மகாத்மா'வின் விடுதலைக்கு எதிராக வாக்களித்தவரின் கட்சிக்காகப் பிரசாரம் செய்வதை என்னவென்பது?"

Wednesday, August 13, 2025

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -


தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வெளியான நாவலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இந்நாவல் விடுக்கும்  முக்கியமான  அறைகூவல்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்;

1.பஞ்சமர் என்னும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரவினர் தம் சமூக விடுதலைக்காகத் தம்மை அடிமைகளாகத் தொடர்ந்தும் வைத்திருக்கும் சமூகத்தொழில்களைச் செய்வதிலிருந்து வெளிவரவேண்டும்.  அவ்வகையான தொழில்களைக் குறிப்பிட்ட சமூகத்தினர்தாம் செய்ய வேண்டும் என்னும் நிலை மாற வேண்டும். மேனாடுகளில் எவ்விதம் மானுட சமுதாயத்துக்கு வேண்டிய பல் தொழில்களையும் கற்று அவ்வகையான தொழில்களைச் செய்கின்றார்களோ அவ்விதமே அவ்வகையான தொழில்கள் செய்யப்பட வேண்டும்.  இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் சிகை அலங்காரத் தொழிலாளியான முத்தனும், அவனது மனைவியும் தாம் வாழ்ந்த குடிசையிலிருந்து புலம் பெயர்கின்றார்கள். புலம் பெயர்ந்து நாட்டின் இன்னுமொரு பகுதிக்குச் செல்கினறார்கள்.  அவர்கள் சென்றதும் அவர்கள் வாழ்ந்த குடிசை சமூக மாற்றத்தை . விடுதலையை விரும்பும் ஏனைய தமிழ்ச் சமூக இளைஞர்களால் எரிக்கப்படுகின்றது. அந்த எரித்தல் என்பது ஒரு குறியீடு.  'குடிமைத்தொழில் செய்யும் குடிமகன் ஒருவன் வாழுவதற்கு இனி அந்தக் குடிசை அங்கு வேண்டியதில்லைத்தான்' என்று நாவல் முடிகின்றது.

Sunday, August 10, 2025

காலத்தால் அழியாத கானம் - ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?


கவிஞர் கண்ணதாசனின் சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. கவிஞரின்  எளிய, இனிய தமிழ் கேட்பவரைக் கிறங்க வைப்பது. இது போல் தெளிவான வசனங்களை உள்ளடக்கிய பாடல்களைத் தற்போது கேட்பது அரிது. மெல்லிசை மன்னர்களின் இசையில் , டி.எம்.எஸ் குரலில், எம்ஜிஆர் , ஜெயலலிதா நடிப்பில் ஒலிக்கும் பாடலை எத்தனை தரம் கேட்டாலும் அலுப்பதில்லை.
 
"ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ"
 
"ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு"
 
"உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு"
 
என் மனத்தைக் கவர்ந்த பாடல் வரிகள். சங்கப்பாடல்கள் பலவற்றில் ஊரெல்லாம் தூங்கையில் தூங்காமல் விழித்திருக்கும் பெண் ஒருத்தியின் உணர்வுகளைக் கவிஞர்கள் பலர் விபரித்திருப்பதைக் காணலாம். ஆனால் இங்கு கவிஞர் கண்ணதாசன் ஆணொருவனின் இவ்வித உணர்வுகளை விபரித்திருக்கின்றார். அதுவே சுவைக்கின்றது.
 
அதே சமயம் சங்ககாலப்பாடல்களில் பெண் தூங்காமல் விழித்திருப்பது காதலால், காதற் பிரிவால், பொருள் தேடித் தொலைதூரம் சென்று விட்ட தலைவனின் பிரிவால், ஆனால் இவனோ தன் மக்களின் விடுதலைக்காகப் போராடும் போராளி. தன் இலட்சியப் போராட்டத்தின் காரணமாக இரவில் விழித்திருப்பதும் இவன் வாழ்க்கையாகிப் போனது.  
 
'அழும் நிலவு' அற்புதமான படிமம். நிலவு அழுவதாக எவரும் எழுதி நான் வாசித்ததில்லை.
 
"பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு"
 
இதைவிட விடுதலைப் போராளி ஒருவனின் உணர்வுகளை எவ்விதம் விபரிப்பது?
நான் முதல் பார்த்த எம்ஜிஆர் , ஜெயலலிதா இணைந்து நடித்த படம் மட்டுமல்ல, அவர்களே இணைந்து நடித்த முதல் படமும் ஆயிரத்தில் ஒருவன்தான்.

நவ இந்தியாவின் குரலாக ஒலிக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் குரல்!


உலகப் பொருளாதாரத்தை உருட்டிச் செல்லும், பொருளாதாரரீதியில் வலிமை மிக்க நாடாக, உருமாறியிருக்கும் புதிய  இந்தியாவின் குரலாக ஒலிக்கிறது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் குரல்.

தற்போது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைக்குக் காரணங்கள் எவை என்பதை ஆராயும் காணொளி.



https://www.youtube.com/watch?v=iLFV8vyR3Tk

இந்தியாவின் வளர்ச்சி , இந்திய , அமேரிக்க உறவும் பற்றி, நன்கு அலசுமொரு காணொளி!


மாறி வரும் உலகில் , வளர்ந்து வரும் இந்தியாவின் நிலையை விளக்கும் தொழில் அதிபர்  எலன் மாஸ்க் ஆற்றுவது போன்ற உரையை வெளிப்படுத்தும் காணொளி.  யாரோ ஒருவர் செயற்கைத்  தொழில் நுட்பம் எலன் மஸ்க் உரையாற்றுவதுபோல் உருவாக்கியிருக்கும் காணொளி போலவே இந்தக் காணொளி  தென்படுகின்றது. ஆனால் தற்போது நிலவும் அரசியற் சூழலை நன்கு அலசும் காணொளி என்பதால் பகிர்ந்துகொள்கின்றேன்.

இந்தியாவின் வளர்ச்சி, தனித்துச் சுயாதீனமாக இயங்கும் நிலை இவையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்தியா மீதான வரி  அதிகரிப்புக்கு உண்மையான காரணம்.  

ஏனைய நாடுகளில் முன்பு போல் அமெரிக்காவால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.  குறிப்பாக இந்தியா அமெரிக்காவுடனான கூட்டுறவை விரும்பும் அதே சமயம் , அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட அதனால் முடியாது என்பதை உணர்ந்ததால் ஏற்பட்ட விரக்தியே ட்ரம்பின் இந்தியா பற்றிய நிலை மாறியதற்கு முக்கிய காரணம் என்பதை எடுத்துரைக்கும் காணொளி.

https://www.youtube.com/watch?v=4QSgjXvJBCM

Saturday, August 9, 2025

எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா ரங்கராஜனுடனான நேர்காணலொன்று!


அண்மையில் தற்செயலாக எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மனைவி சுஜாதா ரங்கராஜன் அவர்களின் நேர்காணலைப் பார்த்தேன். கேட்டேன். சுஜாதா ரங்கராஜன் அவர்களின் பாசாங்குத்தனமற்ற, நேர்மையான, சில சமயங்களில் அப்பாவித்தனமான பதில்கள் இந்நேர்காணலின் முக்கிய அம்சம்.

இந்நேர்காணல் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பன்முக ஆளுமையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள மிகவும் உதவியாகவிருக்கிறது என்பேன்.

இறுதியாகத் தன் கணவரைப்பற்றிக் கூறுகையில் அவர் சிறந்த மனிதர்,. சிறந்த எழுத்தாளர். சிறந்த கணவர் என்று வரிசைப்படுத்திக் கூறுவார் சுஜாதா ரங்கராஜன். அது இந்நேர்காணலின் உச்சம்.

இந்நேர்காணலின்போது திருமதி சுஜாதா முதுமையின் தாலாட்டில் இருப்பவர். காதல், வாழ்க்கை, இருப்பு பற்றிய இவரது சிந்தனைகள் முதிர்ச்சியானவை. இவரது பதில்களிலிருந்து நான் உணர்வது எழுத்தாளர் சுஜாதாவுக்கும் , இவருக்குமிடையில் நிலவிய காதலை. இருவருமே வெளிப்படையாக வெளிப்படுத்திக்கொள்ளாவிட்டாலும் , நிலவிய அந்தக் காதல்தான் அவர்களை ஒன்றாகப் பிணைத்து வைத்திருந்திருக்கின்றது. அந்தக் காதலே திருமதி சுஜாதாவைத் தன் கணவர் கலந்து கொள்ளும் இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் கூடவே செல்ல வைத்தது. இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து , இணைந்து வாழ்ந்திருக்கின்றார்கள். இன்று தன் கணவரை நினைவு கூர்கையில் கூட (அவரது அசட்டுத்தனங்களையும் உள்ளடக்கி) திருமதி சுஜாதாவால் மகிழ்ச்சியுடன் நினைவு கூர முடிகின்றது. தன் கணவரின் அசட்டுத்தனங்களை எண்ணி அவரால் சிரிக்க முடிகின்றது. அதற்குக் காரணம் அவரது ஆழ்மனத்தில் அவர் கணவர் மேல் அவர் கொண்டிருக்கும் காதல் என்றே நான் உணர்கின்றேன். 

Friday, August 8, 2025

கங்கை கொண்ட சோழபுரம்!


பிரயாணம்! சாகசம்! வரலாறு! என்பதன் அடிப்படையில் இயங்கும் யு டியூப் சானல் கர்ணனின் 'Tamil Navigation' சானல் ( https://www.youtube.com/watch?v=pq3_B_NoUoM ).  தமிழர்தம் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட பல காணொளிகளை உள்ளடக்கிய சானல்.  இக்காணொளியில் முதலாம் இராசேந்திரன் சோழன் கட்டிய 'கங்கை கொண்ட சோழபுரம்' ஆலயம் பற்றிய பல அரிய தகவல்களை அறிந்துகொள்ள முடியும். 


கங்கை கொண்டசோழபுரம் ஆலயம், அதிலுள்ள முக்கிய சிற்பங்கள், தாங்கு  தளம் (அதிட்டானம்) போன்ற கட்டடப் பகுதிகள், மன்னன் வெட்டிய சோழகங்கம் ஏரி (இப்பொழுது வறண்டு கிடக்கிறது), அவனது அரச மாளிகை இருந்த இடம் எனப் பல அரிய தகவல்களை உள்ளடக்கிய காணொளியைப் பார்ப்பது மகிழ்ச்சி தருவது. நீங்களும் ஒரு தடவை பாருங்கள்.

Tuesday, August 5, 2025

க.பாலேந்திராவின் இயக்கத்தில் 'ஒரு பாலை வீடு'


அவைக்காற்றுக் கழகத்தின் தயாரிப்பில் , நாடகவியலாளர் பாலேந்திராவின் இயக்கத்தில் வெளியான நாடகம் 'ஒரு பாலை வீடு'. இந்நாடகம் Federico García Lorca
 என்னும் ஸ்பானிய நாடகாசிரியரின் 'தி ஹவுஸ் ஆஃப் பேர்னார்டா அல்பா' (The House of Bernarda Alba ) என்னும் நாடகமே தமிழில் 'ஒரு பாலை வீடு' என்னும் பெயரில் மேடையேற்றப்பட்டது. மேடையேற்றியவர்கள் சுண்டுக்குளி பழைய மாணவியர் சங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Federico García Lorca ஒரு பாலினச் சேர்க்கையாளர். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் இடதுசாரிஅமைப்பான குடியரசுக் கட்சியினை ஆதரித்த இவரை வலது சாரிகளும், பாசிசவாதிகளுமான தேசியப் படையினர் படுகொலை செய்தனர் என்பது துயரகரமானது. இவரது உடல் கூடக் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்டபோது , அதனைப்பற்றிய சிறப்பானதொரு விமர்சனத்தை , சிரித்திரன் சஞ்சிகையின் வைகாசி 1979 இதழில் எழுதியிருக்கின்றார் ஆ.க.பராக்கிரமசிங்கம்.  நாடக இயக்கத்தை, அரங்கு அமைப்பை, நடிகர்களின் திறமையை  என அவற்றை விதந்து தனது விமர்சனத்தில் எழுதியிருக்கும் கட்டுரையாளர்,  தனது விமர்சனத்தின் இறுதியில் ஈழத்து நாடகத்துறையையிட்டு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும், அதற்காக பாலேதிராவையும், அவைக்காற்றுக் கழகத்தையும் பாராட்டியிருக்கின்றார்.

இந்நாடகம் பெர்ணார்டா அல்பா என்னும் பெண்மணியையும், அவரது திருமணமாகாத  ஐந்து பெண்கள் பற்றியும் வைத்துப்பின்னப்பட்ட நாடகம் 'ஒரு பாலை வீடு' என்பதையும், நாடகத்தின் தமிழாக்கத்தைச் செய்த நிர்மலா நித்தியானந்தனே , நாடகத்தின் பிரதான வேடமான பெர்னார்டோ அல்பா வேடத்தில் நடித்திருப்பதையும், அவரது கடைசிப் பெண்ணாக நிர்மலா நித்தியானந்தனின் கடைசித்தங்கையான சுமதி ராஜசிங்கம் நடித்திருப்பதையும் மேற்படி விமர்சனத்திலிருந்து அறிய முடிகின்றது. 

கலைஞர் சோக்கல்லோ சண்முகத்தின் முன்மாதிரியான, அர்ப்பணிப்புடன் கூடிய கலையுலக வாழ்க்கை!



அண்மையில் தனது தொண்ணூறாவது பிறந்த நாளைக் கொண்டாடிய கலைஞரும், எழுத்தாளருமான சோக்கல்லோ சண்முகநாதன் அவர்கள் முக்கியமான தமிழ்க் கலைஞர். வில்லுப்பாட்டும், நாடகம், எழுத்து, நடிப்பு எனப் பன்முகத்திறமை மிக்கவர். சிறந்த மரபுக்கவிஞரும் கூட. இவரது 'சோக்கல்லோ' நகைச்சுவைக் கதம்ப நிகச்சி மிகவும் புகழ்பெற்ற மேடை நாடகங்களிலொன்று. இலங்கையில் பல இடங்களில் 500 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்ட நாடகமிது. அதன் காரணமாகவே சோக்கல்லோ சண்முகம் என்றழைக்கப்பட்டவர். 

Sunday, August 3, 2025

ஒரு பதிவுக்காக - பல்வேறு இலக்கியச் சிறப்பிதழ்கள், தொகுப்பு நூல்கள், மலர்கள் ஆகியவற்றில் வெளியான என் , வ.ந.கிரிதரனின், படைப்புகள்


பல்வேறு இலக்கியச் சிறப்பிதழ்கள், தொகுப்பு நூல்கள், மலர்கள் ஆகியவற்றில் வெளியான என் , வ.ந.கிரிதரனின்,  படைப்புகள் இவை.  இவை முழுமையான  பட்டியல் அல்ல. ஒரு சில விடுபட்டிருக்கலாம். 

பல்வேறு இலக்கியச் சிறப்பிதழ்கள், தொகுப்பு நூல்கள், மலர்கள் ஆகியவற்றில் வெளியான என் , வ.ந.கிரிதரனின்,  படைப்புகள் இவை.  இவை முழுமையான  பட்டியல் அல்ல. ஒரு சில விடுபட்டிருக்கலாம். 

1.  'அறிவுத்தாகமெடுத்தலையும் வெங்கட் சாமநாதனும், அவரது  கலை மற்றும் தத்துவயியற் பார்வைகளும்' - வ.ந.கிரிதரன் - கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அரை நூற்றாண்டு எழுத்தியக்கப்பணியினைக் கெளரவிக்கும் முகமாக சந்தியா பதிப்பகம் (தமிழ்நாடு)  'வெங்கட் சாமிநாதன் வாதங்களும், விவாதங்களும்'  தொகுப்பு நூல்.   தொகுப்பாசிரிர்கள்: எழுத்தாளர்கள் பா.அகிலன்,. திலீப்குமார் & சத்தியமூர்த்தி. 

2. இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்!  - வ.ந.கிரிதரன் -  'வடக்கு வாசல்' (புது தில்லி)  'இலக்கிய மலர் 2008' வ் ஆசிரியர் எழுத்தாளர் பென்னேஸ்வரன்.

3.  'கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!'  - வ.ந.கிரிதரன் - தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலர், ஆழி பப்ளிஷர்ஸ்; ஆசிரியர் - 'ஆழி' செந்தில்நாதன்.

4. இரு கட்டுரைகள்: . 'அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் '  & 'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும்' - வ.ந.கிரிதரன் -  கணையாழி தொகுப்பு (1995 -2000)

5. சிறுகதை- சொந்தக்காரன் - வ.ந.கிரிதரன் - கணையாழி கனடாச் சிறப்பிதழ்

Saturday, August 2, 2025

வ.ந.கிரிதரனின் நூல் அணிந்துரைகள்!





அவ்வப்போது நூல்களுக்கு நான் எழுதிய அணிந்துரைகள் இவை.

1. காத்யானா அமரசிங்ஹவின் 'தரணி' (பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடு) நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு எழுதிய அணிந்துரை.
2.  எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்'  நூலுக்கு எழுதிய அணிந்துரை.
3. 'போர்க்காலம் - தோழிகளின் உரையாடல்' என்னும் தலைப்பில்  தமிழினி ஜெயக்குமாரனின் நூலுக்கு எழுதிய அணிந்துரை. சிவகாமி பதிப்பக வெளியீடு.
4.  தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த  எழுத்தாளர் பொன் குலேந்திரனின் 'காலம்' (அறிவியற் சிறுகதைகள்) தொகுப்புக்காக  எழுதிய அணிந்துரை.
5. நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் சங்கத்தமிழ் இலக்கியக் கட்டுரைத்தொகுப்பு நூலுக்கு எழுதிய  அணிந்துரை. 'விஜே பப்ளிகேஷன்ஸ்' வெளியீடு.
6. எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராஜாவின் 'தராசு முனைகள்'  நூலுக்கு எழுதிய அணிந்துரை. 
7. மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் 'வேர் மறந்த தளிர்கள்' (பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியானது) நாவலுக்கு எழுதிய அணிந்துரை.


1. காத்யானா அமரசிங்ஹவின் 'தரணி'!


அண்மையில் நான் வாசித்த புனைகதை 'தரணி'. இதுவொரு சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. சிங்கள இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்ஹ. புனைகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பன்முகத்திறமை மிக்கவர் இவர். அத்துடன் ஊடகத்துறையிலும் தீவிரமாகச் செயற்படும் சமூக, அரசியற் செயற்பாட்டாளர். இலங்கையின் சமகால சமூக, அரசியற் பிரச்சினைகளில் மிகுந்த தெளிவு மிக்கவர். அவற்றை இன, மத, மொழி ரீதியாக அணுகாமல், மானுடப்பிரச்சினைகளாக அணுகுமொருவர். இதனை இவர் எழுதி அண்மையில் வெளிவந்த 'தரணி' நாவலிலும் காணலாம். இந்நாவல் இலங்கையில் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிவுக்காக - கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது எட்டுக் கட்டுரைகள் - வ.ந.கிரிதரன் -


 

கணையாழி சஞ்சிகைக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானதோரிடமுண்டு. நீண்ட காலமாக வெளிவரும் சஞ்சிகை, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தையடுத்து , தற்போது இணைய இதழாக வெளிவருகின்றது. 

ஒரு காலத்தில் கணையாழி சஞ்சிகையில் என் எழுத்துகள் வெளிவருவாமா என்று நினைத்திருந்தேன். ஆனால் தமிழகத்திலிருந்து வெளியாகும் சஞ்சிகைகளில் கணையாழியில் மட்டுமே எனது எழுத்துகள் அதிகமாக வெளிவந்திருக்கின்றன என்பது மகிழ்ச்சியளிப்பது. 

கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகள்:

1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன்
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். 
3.  கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. கணையாழி டிசம்பர் 2000: 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. கணையாழி மே 2012: ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்- 
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7.  கணையாழி செப்டம்பர் 2017:  கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயிஓன் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -
9. கணையாழி மார்ச் 2020: விநாயக முருகனின் 'ராஜிவ்காந்தி சாலை'
10. கணையாழி ஏப்ரில் 2020: 'பிரமிளின் "காலவெளி": கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
11. கணையாழி மே 2020: 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற் காதல் பற்றி..'
12. கணையாழி ஜனவரி 2022: பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!


* கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு நூலில் எனது ' அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்' &  'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் ' ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகளில் எட்டுக் கட்டுரைகள் கீழே:

1. பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!
2. தமிழ்நதியின் 'பார்த்தீனியம்'
3.  நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! -
4. வானியற்பியற் கட்டுரை : அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்
5. ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்!
7. பிரமிளின் 'காலவெளி': 'கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
8.  பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி...


1. பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!

என்னை தனது எழுத்துகளால் ஆட்கொண்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். தனது குறுகிய வாழ்வில் அவரால் எவ்விதம் இவ்விதம் சிந்திக்க  முடிந்தது? செயற்பட  முடிந்தது? எழுத முடிந்தது ? என்று நான் அடிக்கடி வியந்துகொள்வதுண்டு. தனது குறுகிய வாழ்வில் கவிதை, கட்டுரை, புனைகதை என்று அவர் ஆற்றிய இலக்கியப் பங்களிப்பு போற்றுதற்குரியது. அந்நியராதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டின் விடுதலைக்காக, வாழ்ந்த மண்ணில் நிலவிய தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மூட நம்பிக்கைகள் போன்ற சமூகச் சீரழிவுகளுகெதிராக, சுற்றியிருக்கும் இயற்கைக்காக, வாழும் சக உயிர்களுக்காக  அவரது எழுத்துகள் குரலெழுப்பின. பல்வகைப்பட்ட மானுடரின் உணர்வுகளையும் அவரது கவிதைகள் வெளிப்படுத்தின. தான் வாழ்ந்த காலத்தை மீறிய அவரது சிந்தனையை , அவற்றில் காணப்படும் தெளிவினை அவரது எழுத்துகள் வெளிப்படுத்தின. அத்துடன் சிந்திப்பதுடன் நின்று விடாமல் அதற்கேற்ப நிஜ வாழ்விலும் செயற்பட்டவரும் கூட.  இவ்விதமாகப் பல்வேறு விடயங்களைப்பற்றிச் சிந்தித்த அவரது சிந்தனை மானுட இருப்பு பற்றியும் சிந்தித்தது. இருப்பு பற்றிய சிந்தனைகள் கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்புமொன்று. அக்கேள்விகளெல்லாம் அவருக்கும் ஏற்பட்டன. அக்கேள்விகளுக்கான விடைகளையும் அவர் தர்க்கரீதியாகச் சிந்தித்தார். அச்சிந்தனைப்போராட்டங்களை வெளிப்படுத்தும் அவரது முக்கியமான கவிதையாக  'உலகத்தை நோக்கி வினவுதல்' என்னும் கவிதையைக்  குறிப்பிடலாம். 

தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சாியானதொரு தீர்வில்லை. ‘இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள், இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை ‘ என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் ‘கருத்து முதல்வாதிகள் ‘. இவர்கள் ‘சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது ‘ என்றும், ‘இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு ‘ என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல ‘இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே ‘ என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் ‘பொருள் முதல்வாதம் ‘ எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் ‘பொருள்முதல்வாதிகள் ‘ எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி ‘ஆன்மா நிலையானது, அழிவற்றது ‘ என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே ‘. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் ‘அப்படி எதுவுமில்லை ‘ என்கின்றார்கள். ‘இவ்வியற்கையில் ஏற்பட்ட பாிணாம மாற்றங்களே உயிாினங்கள் உருவாகக் காரணம் ‘ என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். பாரதியாரையும் இந்தத்தத்துவக் குழப்பம் விட்டு வைக்கவில்லையென்பதைத்தான் மேற்படி 'உலகத்தை வினவுதல்' கவிதை வெளிப்படுத்துகின்றது. 

Wednesday, July 30, 2025

தொடர்கதை : நவீன விக்கிரமாதித்தன் (பாகம் இரண்டு) - வ.ந.கிரிதரன்


[பதிவுகள் இணைய இதழில் ஆரம்பித்திருக்கும் புதிய நாவலின் முதல் அத்தியாயம். ஏற்கனவே வெளியாகி , நூலுருப்பெற்ற 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலின் இரண்டாம் பகுதி.]


ஓவியம் AI

அத்தியாயம் ஒன்று - தழுவல் பற்றிய தர்க்கமொன்று!


இருண்டிருக்கின்றது. வீட்டின் முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு மேலே விரிந்து கிடக்கும் விண்ணைப் பார்த்தவாறிருக்கின்றேன். இத்தனை வருடங்களில் எத்தனை தடவைகள் இவ்விதம் பார்த்திருப்பேன். ஒரு முறையேனும் அலுக்காத, சலிப்படைய வைக்காத  ஒன்றென்று இருக்குமென்றால் , என்னைப்பொறுத்தவரையில் அது இதுதான். இவ்விதம் விரிந்து கிடக்கும் பேரண்டத்தை பார்த்தபடி, சிந்தனையில் ஆழ்ந்தபடி , மெய்ம்மறந்து இருப்பதைப்போல் வேறோர் இன்பம்  எதுவும் இல்லையென்பேன். வழக்கம்போல் சிந்தனை நதி பெருவெள்ளமாகச் சீறிப்பாய்கின்றது. எதற்காக? எதற்காக? எதற்காக? அர்த்தமென்ன? ஏன்? ஏன்? ஏன்?  இதற்கு, இந்த வினாவுக்கு ஒருபோதுமே விடை கிடைக்கப்போவதில்லை. விடை கிடைக்காத வினா என்பது தெரிந்துதானிருக்கின்றது. இருந்தாலும் வினாக்கள் எழாமல் இருப்பதில்லை.  சிந்தித்தலென்னும் செயல் இருக்கும் வரையில் , அதற்கு ஒருபோதுமே முடிவில்லை. 

கோடி,கோடிக் கணக்கில் கொட்டிக் கிடக்கும் , என்ணற்ற சுடர்களில் மனது மூழ்கிப்போய்க் கிடக்கின்றது. அத்தனையும் சுடர்களா? அவற்றில் கோடிக்கணக்கில் சுடர்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டங்களும் இருக்கலாம். இருக்கும். ஆயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான, பில்லியன் கணக்கான ஒளியாண்டுத் தொலைவுகள் பிரமிக்க வைக்கின்றன. ஏன்! எதற்காக? ஏன்? 

இவ்விதமான  சமயங்களில் எனக்குத் துணையாக ,மனோரஞ்சிதமும் வந்து விடுவாள். வந்தாள். வந்தவள் என்னுடன் நெருக்கியபடி, அருகில் தோளணைத்தாள். விண்ணைப்பார்த்தாள். விண்ணில் கொட்டிக்கிடக்கும் நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்தாள். அப்பொழுது  அவள் 'ஷாம்பு' போட்டு, முழுகி வந்திருந்தாள். ஷாம்பு மணம் நாசியில் மெல்ல நுழைந்தது. என் கன்னத்தை ஒரு முறை செல்லமாகத்  தட்டினாள்.  அவளை ஒரு கணம் உற்று நோக்கினேன். இவள் மட்டும் துணையாக இல்லையென்றால்.. அவளற்ற இருப்பை ஒரு கணம் மனம் எண்ணிப்பார்த்தது. என் எண்ண ஓட்டத்தை அவள் புரிந்து கொண்டாள் என்பதை உணர்ந்தேன். சில விடயங்களை உள்ளுணர்வு மூலம் உணர முடிகின்றது. உள்ளுணர்வு மூலம் இவ்விதம் உணர முடிவதற்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்க முடியுமென்று இன்னுமொரு கிளை பிரித்துச் சிந்தனை நதி ஓடியது.

Tuesday, July 29, 2025

நடிகரும், எழுத்தாளரும், பேச்சாளருமான தமிழ் அரசியல்வாதி 'சொல்லின் செல்வர்' செ.இராசதுரை! - வ.ந.கிரிதரன் -


இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியமானதோர் ஆளுமை மட்டக்களப்பு மாநகர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக , முப்பத்து மூன்று வருடங்களிருந்த 'சொல்லின் செல்வர்' என்றழைக்கப்படும்  செல்லையா இராசதுரை அவர்கள். அவரது தொண்ணூற்றியெட்டாவது பிறந்தநாள் (ஜூலை 26)  அண்மையில் கொண்டாடப்பட்டது. அதனையொட்டிப் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் மனத்தைத் தொடும் முகநூற் பதிவொன்றினை அண்மையிலிட்டிருந்தார்.அதற்கான இணைப்பு

செ.இராசதுரை அவர்கள் வசீகரத்தோற்றம் மிக்கவர். நான் தமிழரசுக் கட்சி பற்றி அறிந்தபோது என்னைக் கவர்ந்த தமிழ் அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர். அப்பாவுக்கு அவர் மேல் மிகுந்த மதிப்பு இருந்தது. தமிழகத்தில் திமுக அரசியல்வாதிகள் போல், இலங்கையில் சிறப்பான மொழியில் உரையாற்றுவதில் முதலிடத்தில் இருப்பவர் இராசதுரை அவர்கள் என்பார்.

யுத்தத்தின் கோர விளைவுகளை வெளிப்படுத்தும் 'இரு பெண்கள்' (Two Women).


இத்தாலிய நடிகையான சோபியா லோரென் ஹாலிவூட்டினையும் கலக்கிய சிறந்த நடிகைகளிலொருவர். சோபியா லோரேன் என்றதும் அவரது கவர்ச்சிகரமான உடல்வாகினைத்தான் பலரும் முதலில் நினைவுக்குக்கொண்டு வருவார்கள். சோபியா லோரேன் அழகான உடல்வாகுகொண்டவர் மட்டுமல்லர் அற்புதமான நடிகைகளிலுமொருவர். முதல் முதலாக ஆஸ்காரின் சிறந்த நடிகைக்கான விருது ஆங்கிலமொழியிலில்லாத ஒரு திரைப்பபடத்தில் நடித்த நடிகையொருவருக்காகக் கொடுக்கப்பட்டதென்றால், அவ்விருதினைப் பெற்ற நடிகை சோபியா லோரென்தான். புகழ்பெற்ற இத்தாலிய நாவலாசிரியர்களிலொருவரான அல்பேர்ட்டோ மொராவியோ (இவரது படைப்புகளில் பாலியல் சம்பவங்கள் சிறிது தூக்கலாகவிருக்கும். அதனால் சிலர் எஸ்.பொ.வை இவருடன் ஒப்பிடுவதுமுண்டு) எழுதிய நாவலான 'இரு பெண்கள்' (Two Women) என்னும் நாவலினை மையமாக வைத்து உருவான Two Women கறுப்பு/வெள்ளைத் திரைப்படம் 22 சர்வதேச விருதுகளைச் சோபியா லோரென்னுக்கு அள்ளிக்கொடுத்த திரைப்படம்.. போர் மக்கள் மேல் ஏற்படுத்திய விளைவுகளைப் பார்ப்பவர் நெஞ்சினை அதிரவைக்கும் வகையில் விபரிக்கும் திரைப்படமிது. 'விட்டோரியோ டி சிகா'வின் (Vittorio De Sica) இயக்கத்தில் வெளியான ( Vittorio De Sica புகழ்பெற்ற இத்தாலியத் திரைப்பட இயக்குநர். இவரது திரைப்படங்கள் நான்கு தடவைகள் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளன. புகழ்பெற்ற The Bicycle Thief திரைப்படத்தினை இயக்கியவர் இவர்தான்.) இத்திரைப்படத்தின் கதைச் சுருக்கமிதுதான்:

Monday, July 28, 2025

எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிப் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள சிறுகதை 'கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு!' (ஓவியம் - AI) - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிப் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள சிறுகதை 'கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு!'  (ஓவியம் - AI)

கூறும் பொருள் , பாத்திரப் படைப்பு காரணமாக  இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது. திட்டமிட்டு, கச்சிதமாகப் பின்னப்பட்ட  கதை. இந்தியப் பெண்ணுக்கும், வெள்ளையின ஆணுக்கும் , ‘இன் விட்ரோ’ கருத்தரித்தல் (IVF) முறையில் பிறந்த பெண் குழந்தை கிளியோ.  மரபு அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரிபவன் அக்கணவன். அவனது தந்தை தொல்லியல் அறிஞர்.  

   இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -

கதையின் சாரம் இதுதான்: கிளியோ ஒருவேளை எகிப்திய அழகி கிளியோபாட்ராவின் மரபணு மூலம் உருவாக்கப்பட்டவளோ? அக்கணவனின் தந்தை தொல்லியல் அறிஞர் என்பதால், அவரால் அந்த மரபணு சேகரிக்கப்பட்டிருந்ததோ?  இவ்விதமான சந்தேகம் நியாயமானதுதான் என்பதை நிரூபிக்கும் வகையில், தகுந்த ஆதாரங்களுடன் கதை பின்னப்பட்டுள்ளது.  கிளியோவும் சமுதாயப் பிரக்ஞை மிக்க பெண்ணாக உருவாகியிருக்கின்றாள். இயற்கையை அழிக்கும் அரசியல்வாதிகளைக் கடுமையாக எதிர்ப்பவள். அதன் காரணமாக அவள் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத்தான் வீட்டைத்துறந்து பறந்தாளோ என்னுன் கேள்வியுடன் கதை முடிகின்றது.

கதையில் ஆங்காங்கே சிந்திக்கத்தூண்டும் பகுதிகளும்  கலந்திருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்று; 

 "அவர்கள் இருவரும் பல விடயங்களை அறியும் ஆவலுடன் பல நாடுகளுக்கு ஒன்றாகச் சென்று பயணித்தார்கள். கல்பனாவின் தாய்நாடான இந்தியாவுக்கு அடிக்கடி சென்றார்கள். கல்பனாவின் தாய் சொல்லிய இதிகாச புராண கதைகளையும் அதில் சொல்லப் பட்டிருக்கும் மாயா ஜாலக் கதைகளையும கேட்டு வளர்ந்தவள் கல்பனா.ஆனால் மார்க் தன் மனைவியுடன் இந்தியா சென்றபோது அக்கதைகளில் பெண்கள் நடத்தப்படும விதங்களையும் அத்துடன் இந்தியக் கடவுளர் பலர் போர் ஆயதங்களுடனிருப்பதையும் விமர்சித்தபோது ‘தமிழர் நாகரிகச் சரித்திரம் சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்டது. ஆனால் காலக்கிரமத்தில் சமயம் என்ற பெயரில் மனிதமற்ற முறையில் சாதி மத பேதங்கள் உண்டாக்கப் பட்டு இந்திய மக்கள் ஒருநாளும் ஒருத்தரை ஒருத்தர் சரிசமமாகப் பார்க்க முடியாத மாதிரி சமூக அமைப்பை மாற்றி அமைத்திருக்கிறது’ என்ற விளக்கத்தைச் சொன்னாள கல்பனா."

இக்கதையை  இயக்குநர் சங்கர் வாசித்தால் , 'எந்திரன்' திரைப்படத்தைப் போல் 'கிளியோபாட்ரா' என்னும் பெயரில் , பிருமாண்டமான, தொழில் நுட்பங்கள் மிளிரும் திரைப்படமொன்றினைத் தயாரிக்ககூடும், அதற்கேற்பக் கச்சிதமாகப் பின்னப்பட்ட கதை.

சிறுகதை: கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு!  -    இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -

கிளியோளியோ அவளின் அறையில் இல்லை. அவள் வீட்டில் இருந்தால் ஜாஸ் இசை இருக்கும் என்பதால் அந்த இசையற்ற மௌனம் அசாதாரணமானது. கிளியோ ஜாஸ் இசையை நேசிக்கிறாள். ‘இது மனித குலத்தின் ஆன்மாவின் ஒலி’ என்கிறாள். அவளின் அறை காலியாக உள்ளது அவளுடைய பயணப் பை அங்கு இல்லை. அவளை இழந்த உணர்வு அவளின் வளர்ப்புத் தாயான ஸாராவுக்கு ஏற்படுகிறது.

Saturday, July 26, 2025

கல்பனாவின் 'யுகசந்தி'

 

'Veryrare Book' என்னும் முகநூலைத் தற்செயலாகப் பார்த்தேன். உண்மையிலேயே அரிய நூல்கள்,  வெகுசன இதழ்த்தொடர்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய பக்கமிது. இதற்கான இணைய இணைப்பு - https://www.facebook.com/veryrare.book

என் பால்ய பருவத்தில் , நான் வாசிக்கத்தொடங்கியிருந்த சமயம் , கலைமகள் இதழில் ஒரு தொடர்கதை வெளியானது. அதனை எழுதியவர் எழுத்தாளர் கல்பனா. அக்காலகட்டத்தில் கல்கியில் ஓவியர் கல்பனா என்பவர் ஓவியங்கள் தீட்டிக்கொண்டிருந்தார். ஆனால் இவர் கதைகள் எழுதுபவர். இவர் பெண்ணா அல்லது பெண்ணின் பெயரில் எழுதிய ஆணா? தெரியவில்லை. இவரைப்பற்றிய தகவல்களும் இணையுத்தில் கிடைக்கவில்லை. 

 ஆனால், இவரது 'யுகசந்தி' தொடர்கதை மட்டும் நினைவிலுள்ளது. அத்தொடரை நான் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால் முதலாவது அத்தியாயம் ஆற்றங்கரைக் காட்சியுடன் அல்லது வெள்ளப்பெருகுடன் ஆரம்பமானதாக நினைவிலுள்ளது. அத்தொடரைப் பின்னர் வாசிக்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன், ஆனால் வாசிக்கவில்லை.

Friday, July 25, 2025

கவிச்சக்கரவர்த்தியும், கவியரசரும்!


'இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்"


இப்பாடல் கம்பரின் கம்பராமாயணத்தில் வரும் பாடல். இராமனின் கால் பட்டு சாபம் நீங்குகின்றாள் அகலிகை. இதை விசுவாமித்திரர் விபரிப்பதாகக் கம்பர் இப்பாடலை எழுதியிருப்பார்.   

இப்பாடலில் வண்ணம் என்னும் சொல் எத்தனை அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.  

கம்பரின் கவித்துவத்தை வெளிப்படுத்தும் கவிதையிது. கருமை வண்ணமுடைய தாடகையுடனான போரில் , அதாவது 'மை வண்ணத்து அரக்கி போரில்' மழை தரும் கார்மேக வண்ணமுடைய இராமனின் வில்லை இயக்கும் கை வண்ணம் கண்டேன். இங்கு கல்லை மிதித்து அகலிகையின் சாபத்தை நீக்கிய இராமனின் கால் வண்ணம் கண்டேன் என்கின்றார் விசுவாமித்திரர் கூற்றாகக் கம்பர்.  

இங்கு கம்பர் கரிய நிறம் வாய்ந்த தாடகையின் அழகைக் குறைத்து மதிப்பதற்காக மை வண்ணம் அரக்கி என்கின்றார் கம்பர். இதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவ்விதமான புரிதல் இன்றுதானே எமக்கு வந்திருக்கின்றது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இந்தப் புரிதல் இருந்திருக்காது. அதனால் கம்பரைக் குறை கூற முடியாது.



இவ்விதம் வண்ணம் என்னும் சொல்லைப் பலமுறை பாவித்துக் கவிஞர் கண்ணதாசன் அற்புதமானதொரு பாடலை எழுதியிருக்கின்றார். அது 'பாசம்' திரைப்படத்தில் வரும் 'பால் வண்ணம் பருவம்  கம்பர் தன் பாடலில் எட்டு முறை வண்ணத்தைப் பாவித்திருந்தால் , கவிஞர் கண்ணதாசன் பன்னிரண்டு முறை பாவித்திருப்பார். 

இப்பாடலின் இன்னுமொரு சிறப்பு. மெல்லிசை மன்னர்கள் எம்ஜிஆருக்குப் பி.பி.ஶ்ரீனிவாசின் குரலைப்பாவித்திருப்பதுதான். காட்சியின் சூழலுக்கு மென்மையான பாடகர் பி.பி.ஶ்ரீனிவாசின் குரல் பொருந்தும் என்பதால் பாவித்திருக்க வேண்டுமென்று கருதுகின்றேன். உண்மையில் நன்கு பொருந்தத்தான் செய்கிறது.  பி.பி.,ஶ்ரீனிவாஸ், பி.சுசீலா இருவரும் மிகவும் சிறப்பாக இப்பாடலைப் பாடியிருப்பார்கள்.

பாடலைக் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=qYuON1qbTCE&list=RDqYuON1qbTCE&start_radio=1 

இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் மலையாளத் திரைப்படப்பாடலொன்று - 'ஒரு நாலு நாளாய் என்னிலுள்ளே தீயாக' !

மலையாளத்திரைப்படங்களில் எனக்குப் பிடித்த ஒரு விடயம் - அது கலைப்படைப்பாக இருக்கட்டும் அல்லது வெகுசனப் படைப்பாக இருக்கட்டும், இயக்குநர்கள் இயல...

பிரபலமான பதிவுகள்