Wednesday, November 20, 2024

கவிதை: நான் நானாக.. - வ.ந.கிரிதரன் -



எல்லைகளற்று பரந்திருக்கும் விரிவெளியில்
அகதிமேகங்கள் அலைகின்றன.
அலைச்சல் தாளாமல் அவை
அழுதுபொழிகின்றன.
இருப்பைத் தப்ப வைப்பதற்காய்ப்
புள்ளொன்று சிறகடிக்கின்றது.
அதனை விரைவை மீறித்
தொடர்கிறது பெரும்புள்.
பகல் இப்படியென்றால்...
இரவு வானை நோக்குகின்றேன்.
தொலைவில்
ஒளியாண்டுத் தொலைவுகளில்
மலர்ந்து உதிர்ந்து விட்ட
நாகரிகங்களின் பெருமூச்சுகளை
தனிமைகளில் பயணிக்கும் ஒளிச்சுடர்களில்
உணர்கின்றேன்.
இன்று எனக்கு என்ன நடந்தது?
எப்பொழுதும் இருப்பில்
அர்த்தம் கண்டு மகிழ்பவன் நான்.
இன்பம் கண்டு உவகையில் ஊறுபவன் நான்.
இன்று எனக்கு என்ன நடந்தது?
'இன்று உனக்கு என்ன நடந்தது?'
அதுதான் தெரியவில்லையடி கண்ணம்மா
என்றேன்.

மனங்கொத்தியின் கொத்தல்கள்: கலைச்செல்வன் பற்றிய நினைவுகள்!

-எழுத்தாளர் கலைச்செல்வன் -

கவிஞர் வாசுதேவனின் 'தொலைவில்' கவிதைத்தொகுப்பைப் புரட்டிக்கொண்டிருக்கையில் ஒரு கவிதை கண்ணில் பட்டது, கவிதையின் தலைப்பு 'உயிர்நிழல்'.  கவிதையை வாசித்தபோது அது 'உயிர்நிழல்' கலைச்செல்வனைப் பற்றியது என்பதை அறிய முடிந்தது.

'சத்தமிட்டுச் சிரித்து
புயலைப்போல் சினந்து
ஆழங்களில் அமிழ்ந்து
உச்சிகளில் தாவி நீ செய்யும்
உன்னத மாயவித்தைகள்
அவற்றின் உச்ச நிலைகளில்
அமைதியுற்று
உன் உதடுகளிலிருந்து
புகையாய்ப் போயின.

ஆவேசத்துடன் ஆர்ப்பரித்த் நீ
அடைய முடியாததன் முன்னால்
கூற முடியாததன் கொடூரத்தின்  முன்னால்
கூற்றுகளுக்கப்பாற்பட்டவை  முன்னால்
குழந்தையாய் நின்றாய்.'

கவிஞரின் மேற்படி வரிகள் கலைச்செல்வனின் ஆளுமையைச் சிறப்பாக விபரிக்கின்றன. கவிதையின் வரிகள் அவரது கலைச்செல்வனுடான நட்பின் ஆழத்தையும் வெளிப்படுத்துவன. இக்கவிதை வரிகள் எனக்குக் கலைச்செல்வனைப் பற்றிய நினைவுகளைச் சிறகடிக்கச் செய்து விட்டன. கவிதைத் தொகுப்பின் இன்னுமொரு கவிதை 'மனமெனும் மரங்கொத்தி' சிறப்பான உவமை. படிமம். தலைப்பை 'மனமெனும் மரங்கொத்தி' என்று உவமையாக வைத்திருப்பதற்குப் பதிலாக 'மனங்கொத்தி' என உருவகமாக வைத்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். என் மனங்கொத்தியையும் இக்கவிதைகள் கலைச்செல்வன் பற்றிய நினைவுகளைக்கொத்தியெடுக்க வைத்துவிட்டன.

Tuesday, November 12, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - காலவெளிக் குழந்தைகள் நாம்


இசை & குரல்: AI SUNO | ஓவியம் : AI

காலவெளிக் குழந்தைகள் நாம்

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

இருக்கும் இருப்பைப் புரிந்து கொள்ளல்
இன்பம் மிக்கது. ஊக்கம் தருவது.
இருப்பை அறிதல் அறியும் பொருட்டு
இருப்பது என்றால் அதுபோதும் எனக்கு.

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

இருப்பை அறிந்து கொள்வதற்கு நம்
இருப்பின் காலம் போதவே போதா.
இருந்தும் இருப்பை முழுவதும் அறிய
இருக்கும் வரையில் முயற்சி செய்வேன்.

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

Thursday, November 7, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்



இசை & குரல் - AI SUNO | ஓவியம் - AI

இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.

நேரம் கடந்து சிந்திப்பேன் எப்போதும்.
தூரம் பற்றிச் சிந்திப்பேன் அப்போது.
காலத்தின் அடுக்குகள் தாங்கி நிற்கும்
விண் பற்றிச் சிந்திப்பேன் தப்பாமல்.

இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.

Wednesday, November 6, 2024

புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் கனடாச் சிறுகதைகளின் வகிபாகம் குறித்து.. - வ.ந.கிரிதரன் -


- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் வாசிக்கவிருந்த எனது உரையின் முழு வடிவமிது. அன்று நேரக் கட்டுப்பாடு காரணமாக முழுமையாக , விரிவாக உரையாட  முடியவில்லை. -


1. 'டயற்போறா' பற்றிய சிந்தனைகள்...

இன்று புலம்பெயர் மக்களைக் குறிக்கப் பாவிக்கப்படும் டய்ஸ்போறா என்னும் ஆங்கிலச் சொல் ஆரம்பத்தில் புகலிடம் நாடி பல்வேறு திக்குகளாகச் சிதறடிக்கப்பட்ட யூதர்களைக் குறிக்கப்பயன்பட்டது. ஆரம்பத்தில் யூதேயா யூதர்களின் தாயகமாக விளங்கியது. அது தற்போதுள்ள பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசம். கி.மு.586இல் பாபிலோனிய மன்னர் யூதேயா மீது படையெடுத்தார். எருசலேமிலிருந்த  முதலாவது தேவாலயத்தை அழித்தார். யூதர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினார். யூதர்கள் தம்மிருப்புக்காகப் பல்வேறு திக்குகளிலும் சிதறடிக்கப்பட்டார்கள். இதனைக்குறிக்கவே கிரேக்க மொழியில் இச்சிதறலை diaspeirō என்றழைத்தனர்.  இதன் அர்த்தம் சிதறல். இதிலிருந்து உருவான சொல்லே டயஸ்போறா (Diaspora).

Wednesday, October 30, 2024

மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்புகள்: 'Modern Tamil Poetry - A Miniature canavas ' (1 & 2)


கலைஞன் பதிப்பகம் அண்மையில் நேர்த்தியான வடிவமைப்பில், இரண்டு தொகுப்புகளாகத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை 'Modern Tamil Poetry - A Miniature canavas ' என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது. 
 
முதலாவது தொகுப்பில் 153 கவிஞர்களின் கவிதைகளும், இரண்டாவது தொகுப்பில் 161 கவிஞர்களின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. முதல், தொகுப்புக் கவிதைகளை எஸ்.என்.ஶ்ரீவஸ்தாவும், இரண்டாவது தொகுப்புக் கவிதைகளை எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்துள்ளார்கள்.
இரண்டாவது தொகுப்பில் எனது கவிதையொன்றின் மொழிபெயர்ப்பும் இடம் பெற்றுள்ளது. ஒட்டகங்கள் என்னும் எனது கவிதை In Comparision.. என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. 

அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்,கவியரசன்) 'எதிர்காலச் சித்தன் பாடல்'! - கவிதைத்தொகுப்பு!


இலங்கையின் நவீனத் தமிழ்க்கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக நான் நிச்சயம் கவீந்திரனைக் (அ.ந.கந்தசாமி) குறிப்பிடுவேன். மகாகவி பாரதியாரை தவிர்த்து விட்டு நவீனத் தமிழ்க் கவிதையைப் பற்றிப் பேச முடியாது. அதுபோல் இலங்கையின் நவீனத் தமிழ்க்கவிதையைப் பற்றி அதன் முன்னோடிகளைப் பற்றிப் பேசும் எவரும் அ.ந.கந்தசாமியைத்தவிர்க்க முடியாது என்பது என் கருத்து.
 
அ.ந.கந்தசாமியின் கவிதைப் பங்களிப்பை அறிய நிச்சயம் வாசிக்க வேண்டிய கவிதைத்தொகுப்பு எதிர்காலச்சித்தன் பாடல். தற்போது நூலகம் தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு - https://noolaham.net/project/1207/120622/120622.pdf
 
இந்நூல் தற்போது கிண்டில் - அமேசன் மின்னூலாகவும் கிடைக்கின்றது - https://www.amazon.com/dp/B0DJSK811V

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...