Tuesday, July 29, 2025

யுத்தத்தின் கோர விளைவுகளை வெளிப்படுத்தும் 'இரு பெண்கள்' (Two Women).


இத்தாலிய நடிகையான சோபியா லோரென் ஹாலிவூட்டினையும் கலக்கிய சிறந்த நடிகைகளிலொருவர். சோபியா லோரேன் என்றதும் அவரது கவர்ச்சிகரமான உடல்வாகினைத்தான் பலரும் முதலில் நினைவுக்குக்கொண்டு வருவார்கள். சோபியா லோரேன் அழகான உடல்வாகுகொண்டவர் மட்டுமல்லர் அற்புதமான நடிகைகளிலுமொருவர். முதல் முதலாக ஆஸ்காரின் சிறந்த நடிகைக்கான விருது ஆங்கிலமொழியிலில்லாத ஒரு திரைப்பபடத்தில் நடித்த நடிகையொருவருக்காகக் கொடுக்கப்பட்டதென்றால், அவ்விருதினைப் பெற்ற நடிகை சோபியா லோரென்தான். புகழ்பெற்ற இத்தாலிய நாவலாசிரியர்களிலொருவரான அல்பேர்ட்டோ மொராவியோ (இவரது படைப்புகளில் பாலியல் சம்பவங்கள் சிறிது தூக்கலாகவிருக்கும். அதனால் சிலர் எஸ்.பொ.வை இவருடன் ஒப்பிடுவதுமுண்டு) எழுதிய நாவலான 'இரு பெண்கள்' (Two Women) என்னும் நாவலினை மையமாக வைத்து உருவான Two Women கறுப்பு/வெள்ளைத் திரைப்படம் 22 சர்வதேச விருதுகளைச் சோபியா லோரென்னுக்கு அள்ளிக்கொடுத்த திரைப்படம்.. போர் மக்கள் மேல் ஏற்படுத்திய விளைவுகளைப் பார்ப்பவர் நெஞ்சினை அதிரவைக்கும் வகையில் விபரிக்கும் திரைப்படமிது. 'விட்டோரியோ டி சிகா'வின் (Vittorio De Sica) இயக்கத்தில் வெளியான ( Vittorio De Sica புகழ்பெற்ற இத்தாலியத் திரைப்பட இயக்குநர். இவரது திரைப்படங்கள் நான்கு தடவைகள் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளன. புகழ்பெற்ற The Bicycle Thief திரைப்படத்தினை இயக்கியவர் இவர்தான்.) இத்திரைப்படத்தின் கதைச் சுருக்கமிதுதான்:

Monday, July 28, 2025

எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிப் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள சிறுகதை 'கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு!' (ஓவியம் - AI) - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிப் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள சிறுகதை 'கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு!'  (ஓவியம் - AI)

கூறும் பொருள் , பாத்திரப் படைப்பு காரணமாக  இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது. திட்டமிட்டு, கச்சிதமாகப் பின்னப்பட்ட  கதை. இந்தியப் பெண்ணுக்கும், வெள்ளையின ஆணுக்கும் , ‘இன் விட்ரோ’ கருத்தரித்தல் (IVF) முறையில் பிறந்த பெண் குழந்தை கிளியோ.  மரபு அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரிபவன் அக்கணவன். அவனது தந்தை தொல்லியல் அறிஞர்.  

   இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -

கதையின் சாரம் இதுதான்: கிளியோ ஒருவேளை எகிப்திய அழகி கிளியோபாட்ராவின் மரபணு மூலம் உருவாக்கப்பட்டவளோ? அக்கணவனின் தந்தை தொல்லியல் அறிஞர் என்பதால், அவரால் அந்த மரபணு சேகரிக்கப்பட்டிருந்ததோ?  இவ்விதமான சந்தேகம் நியாயமானதுதான் என்பதை நிரூபிக்கும் வகையில், தகுந்த ஆதாரங்களுடன் கதை பின்னப்பட்டுள்ளது.  கிளியோவும் சமுதாயப் பிரக்ஞை மிக்க பெண்ணாக உருவாகியிருக்கின்றாள். இயற்கையை அழிக்கும் அரசியல்வாதிகளைக் கடுமையாக எதிர்ப்பவள். அதன் காரணமாக அவள் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத்தான் வீட்டைத்துறந்து பறந்தாளோ என்னுன் கேள்வியுடன் கதை முடிகின்றது.

கதையில் ஆங்காங்கே சிந்திக்கத்தூண்டும் பகுதிகளும்  கலந்திருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்று; 

 "அவர்கள் இருவரும் பல விடயங்களை அறியும் ஆவலுடன் பல நாடுகளுக்கு ஒன்றாகச் சென்று பயணித்தார்கள். கல்பனாவின் தாய்நாடான இந்தியாவுக்கு அடிக்கடி சென்றார்கள். கல்பனாவின் தாய் சொல்லிய இதிகாச புராண கதைகளையும் அதில் சொல்லப் பட்டிருக்கும் மாயா ஜாலக் கதைகளையும கேட்டு வளர்ந்தவள் கல்பனா.ஆனால் மார்க் தன் மனைவியுடன் இந்தியா சென்றபோது அக்கதைகளில் பெண்கள் நடத்தப்படும விதங்களையும் அத்துடன் இந்தியக் கடவுளர் பலர் போர் ஆயதங்களுடனிருப்பதையும் விமர்சித்தபோது ‘தமிழர் நாகரிகச் சரித்திரம் சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்டது. ஆனால் காலக்கிரமத்தில் சமயம் என்ற பெயரில் மனிதமற்ற முறையில் சாதி மத பேதங்கள் உண்டாக்கப் பட்டு இந்திய மக்கள் ஒருநாளும் ஒருத்தரை ஒருத்தர் சரிசமமாகப் பார்க்க முடியாத மாதிரி சமூக அமைப்பை மாற்றி அமைத்திருக்கிறது’ என்ற விளக்கத்தைச் சொன்னாள கல்பனா."

இக்கதையை  இயக்குநர் சங்கர் வாசித்தால் , 'எந்திரன்' திரைப்படத்தைப் போல் 'கிளியோபாட்ரா' என்னும் பெயரில் , பிருமாண்டமான, தொழில் நுட்பங்கள் மிளிரும் திரைப்படமொன்றினைத் தயாரிக்ககூடும், அதற்கேற்பக் கச்சிதமாகப் பின்னப்பட்ட கதை.

சிறுகதை: கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு!  -    இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -

கிளியோளியோ அவளின் அறையில் இல்லை. அவள் வீட்டில் இருந்தால் ஜாஸ் இசை இருக்கும் என்பதால் அந்த இசையற்ற மௌனம் அசாதாரணமானது. கிளியோ ஜாஸ் இசையை நேசிக்கிறாள். ‘இது மனித குலத்தின் ஆன்மாவின் ஒலி’ என்கிறாள். அவளின் அறை காலியாக உள்ளது அவளுடைய பயணப் பை அங்கு இல்லை. அவளை இழந்த உணர்வு அவளின் வளர்ப்புத் தாயான ஸாராவுக்கு ஏற்படுகிறது.

Saturday, July 26, 2025

கல்பனாவின் 'யுகசந்தி'

 

'Veryrare Book' என்னும் முகநூலைத் தற்செயலாகப் பார்த்தேன். உண்மையிலேயே அரிய நூல்கள்,  வெகுசன இதழ்த்தொடர்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய பக்கமிது. இதற்கான இணைய இணைப்பு - https://www.facebook.com/veryrare.book

என் பால்ய பருவத்தில் , நான் வாசிக்கத்தொடங்கியிருந்த சமயம் , கலைமகள் இதழில் ஒரு தொடர்கதை வெளியானது. அதனை எழுதியவர் எழுத்தாளர் கல்பனா. அக்காலகட்டத்தில் கல்கியில் ஓவியர் கல்பனா என்பவர் ஓவியங்கள் தீட்டிக்கொண்டிருந்தார். ஆனால் இவர் கதைகள் எழுதுபவர். இவர் பெண்ணா அல்லது பெண்ணின் பெயரில் எழுதிய ஆணா? தெரியவில்லை. இவரைப்பற்றிய தகவல்களும் இணையுத்தில் கிடைக்கவில்லை. 

 ஆனால், இவரது 'யுகசந்தி' தொடர்கதை மட்டும் நினைவிலுள்ளது. அத்தொடரை நான் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால் முதலாவது அத்தியாயம் ஆற்றங்கரைக் காட்சியுடன் அல்லது வெள்ளப்பெருகுடன் ஆரம்பமானதாக நினைவிலுள்ளது. அத்தொடரைப் பின்னர் வாசிக்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன், ஆனால் வாசிக்கவில்லை.

Friday, July 25, 2025

கவிச்சக்கரவர்த்தியும், கவியரசரும்!


'இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்"


இப்பாடல் கம்பரின் கம்பராமாயணத்தில் வரும் பாடல். இராமனின் கால் பட்டு சாபம் நீங்குகின்றாள் அகலிகை. இதை விசுவாமித்திரர் விபரிப்பதாகக் கம்பர் இப்பாடலை எழுதியிருப்பார்.   

இப்பாடலில் வண்ணம் என்னும் சொல் எத்தனை அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.  

கம்பரின் கவித்துவத்தை வெளிப்படுத்தும் கவிதையிது. கருமை வண்ணமுடைய தாடகையுடனான போரில் , அதாவது 'மை வண்ணத்து அரக்கி போரில்' மழை தரும் கார்மேக வண்ணமுடைய இராமனின் வில்லை இயக்கும் கை வண்ணம் கண்டேன். இங்கு கல்லை மிதித்து அகலிகையின் சாபத்தை நீக்கிய இராமனின் கால் வண்ணம் கண்டேன் என்கின்றார் விசுவாமித்திரர் கூற்றாகக் கம்பர்.  

இங்கு கம்பர் கரிய நிறம் வாய்ந்த தாடகையின் அழகைக் குறைத்து மதிப்பதற்காக மை வண்ணம் அரக்கி என்கின்றார் கம்பர். இதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவ்விதமான புரிதல் இன்றுதானே எமக்கு வந்திருக்கின்றது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இந்தப் புரிதல் இருந்திருக்காது. அதனால் கம்பரைக் குறை கூற முடியாது.



இவ்விதம் வண்ணம் என்னும் சொல்லைப் பலமுறை பாவித்துக் கவிஞர் கண்ணதாசன் அற்புதமானதொரு பாடலை எழுதியிருக்கின்றார். அது 'பாசம்' திரைப்படத்தில் வரும் 'பால் வண்ணம் பருவம்  கம்பர் தன் பாடலில் எட்டு முறை வண்ணத்தைப் பாவித்திருந்தால் , கவிஞர் கண்ணதாசன் பன்னிரண்டு முறை பாவித்திருப்பார். 

இப்பாடலின் இன்னுமொரு சிறப்பு. மெல்லிசை மன்னர்கள் எம்ஜிஆருக்குப் பி.பி.ஶ்ரீனிவாசின் குரலைப்பாவித்திருப்பதுதான். காட்சியின் சூழலுக்கு மென்மையான பாடகர் பி.பி.ஶ்ரீனிவாசின் குரல் பொருந்தும் என்பதால் பாவித்திருக்க வேண்டுமென்று கருதுகின்றேன். உண்மையில் நன்கு பொருந்தத்தான் செய்கிறது.  பி.பி.,ஶ்ரீனிவாஸ், பி.சுசீலா இருவரும் மிகவும் சிறப்பாக இப்பாடலைப் பாடியிருப்பார்கள்.

பாடலைக் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=qYuON1qbTCE&list=RDqYuON1qbTCE&start_radio=1 

Wednesday, July 23, 2025

83 ஜூலை இனப்படுகொலை நினைவுகள்.... - வ.ந.கிரிதரன் -

[ஓவிய உதவி -  நன்றி The Nation.] 

83 ஜூலை இனப்படுகொலை  இலங்கையின் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனை. இலங்கையை  26 வருடங்கள் சமூக யுத்ததில் மூழ்கிப்போக வழி வகுத்த இனப்படுகொலையது.  போர் நாட்டுக்கு மிகப்பெரிய அழிவைத்தந்தது. இரு பக்கத்திலும் படையினர், விடுதலைப்போராளிகள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். பொதுமக்கள் இலட்சக்கணக்கில் உயிரிழந்தனர்.  இலங்கைத் தமிழர் பிரச்சினையை உபகண்ட, சர்வதேசப் பிரச்சினைகளிலொன்றாக உருமாற்றியது கறுப்பு ஜூலையே. கறுப்பு ஜூலையை மறந்து விட்டால் மீண்டும் நாட்டில் இன்னுமொரு கறுப்பு ஜூலை ஏற்படும் நிலை ஏற்படலாம். மீண்டும் நாடு யுத்தத்துக்குள் மூழ்கி விடலாம். 

அந்நிலை மீண்டும் ஏற்படக் கூடாதென்றால் நாட்டில் சகல இன மக்களும் சகல உரிமைகளுடனும் வாழும் நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்தின மக்களும் எவ்வித அச்சமுமற்று, அன்புடன், இணைந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் சந்தேகங்களும் , அச்சமும் ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் நிறுத்தப்பட  வேண்டும். 

"கறுப்பு ஜூலையை நாம் நினைவு கூர வேண்டும். ஏனென்றால் மீண்டுமொரு தடவை அவ்விதமான கறுப்பு ஜூலை தோன்றக்கூடாதென்பதற்காக" என்னும் கருத்தை மையமாக வைத்து ஊடகவியலாளர் டி.பி,எஸ்.ஜெயராஜ் நல்லதொரு ஆங்கிலக் கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரை கறுப்பு ஜூலையின் மூலக் காரணிகள், அதனை நடத்தியவர்கள், ஏற்பட்ட அழிவுகள் எனப் பலதரப்பட்ட விடயங்களை விரிவாக ஆராய்கின்றது.  

ஆம்! 83 ஜூலை இனப்படுகொலையை நாம் மீண்டும் மீண்டும் நினைவு கூர வேண்டும். நினைவு கூர்வோம். மீண்டுமொரு 83 ஜூலை இனப்படுகொலை போன்றதொரு நிகழ்வு  நிகழாதிருப்பதற்காக, புரியப்பட்ட   அநீதிக்கு நீதி கிடைப்பதற்காக, மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம்.

இங்கு கடந்த ஆண்டுகளில் நான் எழுதிய 83 ஜூலை இனப்படுகொலை பற்றிய முகநூல்  நினைவுக்குறிப்புகளிலிருந்து சில குறிப்புகளை (சில எதிர்வினைகளையும்)   இணைத்திருக்கின்றேன்.  இவற்றில் நினைவு கூரப்படுபவையெல்லாம் ,  நினைக்கும்போதெல்லாம் என் நினைவில் தோன்றுபவை. உங்கள் நினைவுகளிலும்தாம்.

Tuesday, July 22, 2025

செக்கு மூலம் எண்ணெய்!


செக்கிழுத்த செம்மல் என்பர் 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரப்பிள்ளையை விபரிக்கையில். காரணம் அவரது ஆங்கிலேயருக்கு எதிரான வர்த்தக , விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளால் அவரைச் சிறையில் அடைத்தது ஆங்கிலேயரின் ஆதிக்க அரசு. சிறையில் செக்கிழுக்க வைத்தது. அதன் காரணமாகவே அவரைச் செக்கிழுத்த செம்மல் என்றும் அழைப்பர். 
 
பலருக்குச் செக்கு என்றால் எப்படியிருக்கும் என்பது தெரியாது, ஆனால் அது பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களுக்கு இப்பதிவு சிறிது விளக்கத்தைத் தருமென்று நம்புகின்றேன். முதலில் செக்கு பற்றித் 'தகவல் திரட்டி' என்னும் முகநூற் பக்கக்குறிப்பைக் கீழே தருகின்றேன்:

Monday, July 21, 2025

நடிகர் திலகத்தின் நினைவாக...


நான் ஆரம்பத்திலிருந்தே வாத்தியாரின் இரசிகன். ஆனாலும்  நடிகர் திலகத்தின் படங்களைப்  பார்ப்பதை என்னால் தவிர்க்க முடிந்ததில்லை. காரணம் அவரது நடிப்பு.   அவரது நடிப்பு மிகை நடிப்பென்றால் அதற்குக் காரணம் அக்காலகட்டத்தின் தேவையாக அது இருந்ததுதான். அதனால்தான் அவர் அப்படி நடித்தார். திரைப்படங்கள் என்பவை கலைக்காக மட்டும் எடுக்கப்படுவதில்லை. வர்த்தகமே அதன் முக்கிய  அம்சம்.  பெரும்பான்மையான இரசிகர்கள் விரும்பியது வசனங்களையும்,  வசனங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுடன் கூடிய நடிப்பையும்தாம்  நடிகர் திலகம் சிறந்த நடிகர் அதனால் அவரால் அக்கால இரசிகர்கள் விரும்பியதைத் தன் நடிப்பால் கொடுக்க  முடிந்தது.   அக்காலகட்டத்தில் என் அம்மா, அப்பாவுக்கு மிகவும் பிடித்த  திரைப்பட ஜோடி சிவாஜி _ பத்மினிதான்.

தமிழ்ச் சினிமா பாட்டிலிருந்து வசனத்துக்கு மாறிக்கொண்டிருந்த வேளையில் அவ்வுலகில் வந்து குதித்தவர்  விழுப்புரம் சின்னையா கணேசன் (சிவாஜி  கணேசன்).  சமுதாயச் சீர்கேடுகளைச் சுட்டெரிப்பதை மையமாகக் கொண்ட திராவிடர்  கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை  சினிமாவைத் தம் கட்சிகளின் பிரச்சாரத்துக்குப் பாவிக்கத்தொடங்கிய காலகட்டத்தில் வெளியான திரைப்படம்  கலைஞரின் வசனத்தில் வெளியான 'பராசக்தி'. அதில் முக்கிய கதாநாயகனாக நடித்ததன் மூலம் , ஒரேயுடியாக உச்ச நட்சத்திரமாகியவர் நடிகர் திலகம்.  அவரே அத்தகையதொரு வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார். தமிழகத்தில் பல இடங்களில் வெள்ளி விழாக் கொண்டாடிய 'பராசகதி' இலங்கையில் 240 நாட்களைக் கடந்து ஓடியது.

வ.ந.கிரிதரனின் குரலில் பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!'

வ.ந.கிரிதரனின் குரலில் பாரதியாரின்  'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!' இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI  டிஜிட்டல் ஓவியம்: கூகுள் ந...