Sunday, August 10, 2025

காலத்தால் அழியாத கானம் - ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?


கவிஞர் கண்ணதாசனின் சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. கவிஞரின்  எளிய, இனிய தமிழ் கேட்பவரைக் கிறங்க வைப்பது. இது போல் தெளிவான வசனங்களை உள்ளடக்கிய பாடல்களைத் தற்போது கேட்பது அரிது. மெல்லிசை மன்னர்களின் இசையில் , டி.எம்.எஸ் குரலில், எம்ஜிஆர் , ஜெயலலிதா நடிப்பில் ஒலிக்கும் பாடலை எத்தனை தரம் கேட்டாலும் அலுப்பதில்லை.
 
"ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ"
 
"ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு"
 
"உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு"
 
என் மனத்தைக் கவர்ந்த பாடல் வரிகள். சங்கப்பாடல்கள் பலவற்றில் ஊரெல்லாம் தூங்கையில் தூங்காமல் விழித்திருக்கும் பெண் ஒருத்தியின் உணர்வுகளைக் கவிஞர்கள் பலர் விபரித்திருப்பதைக் காணலாம். ஆனால் இங்கு கவிஞர் கண்ணதாசன் ஆணொருவனின் இவ்வித உணர்வுகளை விபரித்திருக்கின்றார். அதுவே சுவைக்கின்றது.
 
அதே சமயம் சங்ககாலப்பாடல்களில் பெண் தூங்காமல் விழித்திருப்பது காதலால், காதற் பிரிவால், பொருள் தேடித் தொலைதூரம் சென்று விட்ட தலைவனின் பிரிவால், ஆனால் இவனோ தன் மக்களின் விடுதலைக்காகப் போராடும் போராளி. தன் இலட்சியப் போராட்டத்தின் காரணமாக இரவில் விழித்திருப்பதும் இவன் வாழ்க்கையாகிப் போனது.  
 
'அழும் நிலவு' அற்புதமான படிமம். நிலவு அழுவதாக எவரும் எழுதி நான் வாசித்ததில்லை.
 
"பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு"
 
இதைவிட விடுதலைப் போராளி ஒருவனின் உணர்வுகளை எவ்விதம் விபரிப்பது?
நான் முதல் பார்த்த எம்ஜிஆர் , ஜெயலலிதா இணைந்து நடித்த படம் மட்டுமல்ல, அவர்களே இணைந்து நடித்த முதல் படமும் ஆயிரத்தில் ஒருவன்தான்.

நவ இந்தியாவின் குரலாக ஒலிக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் குரல்!


உலகப் பொருளாதாரத்தை உருட்டிச் செல்லும், பொருளாதாரரீதியில் வலிமை மிக்க நாடாக, உருமாறியிருக்கும் புதிய  இந்தியாவின் குரலாக ஒலிக்கிறது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் குரல்.

தற்போது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைக்குக் காரணங்கள் எவை என்பதை ஆராயும் காணொளி.



https://www.youtube.com/watch?v=iLFV8vyR3Tk

இந்தியாவின் வளர்ச்சி , இந்திய , அமேரிக்க உறவும் பற்றி, நன்கு அலசுமொரு காணொளி!


மாறி வரும் உலகில் , வளர்ந்து வரும் இந்தியாவின் நிலையை விளக்கும் தொழில் அதிபர்  எலன் மாஸ்க் ஆற்றுவது போன்ற உரையை வெளிப்படுத்தும் காணொளி.  யாரோ ஒருவர் செயற்கைத்  தொழில் நுட்பம் எலன் மஸ்க் உரையாற்றுவதுபோல் உருவாக்கியிருக்கும் காணொளி போலவே இந்தக் காணொளி  தென்படுகின்றது. ஆனால் தற்போது நிலவும் அரசியற் சூழலை நன்கு அலசும் காணொளி என்பதால் பகிர்ந்துகொள்கின்றேன்.

இந்தியாவின் வளர்ச்சி, தனித்துச் சுயாதீனமாக இயங்கும் நிலை இவையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்தியா மீதான வரி  அதிகரிப்புக்கு உண்மையான காரணம்.  

ஏனைய நாடுகளில் முன்பு போல் அமெரிக்காவால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.  குறிப்பாக இந்தியா அமெரிக்காவுடனான கூட்டுறவை விரும்பும் அதே சமயம் , அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட அதனால் முடியாது என்பதை உணர்ந்ததால் ஏற்பட்ட விரக்தியே ட்ரம்பின் இந்தியா பற்றிய நிலை மாறியதற்கு முக்கிய காரணம் என்பதை எடுத்துரைக்கும் காணொளி.

https://www.youtube.com/watch?v=4QSgjXvJBCM

Saturday, August 9, 2025

எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா ரங்கராஜனுடனான நேர்காணலொன்று!


அண்மையில் தற்செயலாக எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மனைவி சுஜாதா ரங்கராஜன் அவர்களின் நேர்காணலைப் பார்த்தேன். கேட்டேன். சுஜாதா ரங்கராஜன் அவர்களின் பாசாங்குத்தனமற்ற, நேர்மையான, சில சமயங்களில் அப்பாவித்தனமான பதில்கள் இந்நேர்காணலின் முக்கிய அம்சம்.

இந்நேர்காணல் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பன்முக ஆளுமையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள மிகவும் உதவியாகவிருக்கிறது என்பேன்.

இறுதியாகத் தன் கணவரைப்பற்றிக் கூறுகையில் அவர் சிறந்த மனிதர்,. சிறந்த எழுத்தாளர். சிறந்த கணவர் என்று வரிசைப்படுத்திக் கூறுவார் சுஜாதா ரங்கராஜன். அது இந்நேர்காணலின் உச்சம்.

இந்நேர்காணலின்போது திருமதி சுஜாதா முதுமையின் தாலாட்டில் இருப்பவர். காதல், வாழ்க்கை, இருப்பு பற்றிய இவரது சிந்தனைகள் முதிர்ச்சியானவை. இவரது பதில்களிலிருந்து நான் உணர்வது எழுத்தாளர் சுஜாதாவுக்கும் , இவருக்குமிடையில் நிலவிய காதலை. இருவருமே வெளிப்படையாக வெளிப்படுத்திக்கொள்ளாவிட்டாலும் , நிலவிய அந்தக் காதல்தான் அவர்களை ஒன்றாகப் பிணைத்து வைத்திருந்திருக்கின்றது. அந்தக் காதலே திருமதி சுஜாதாவைத் தன் கணவர் கலந்து கொள்ளும் இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் கூடவே செல்ல வைத்தது. இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து , இணைந்து வாழ்ந்திருக்கின்றார்கள். இன்று தன் கணவரை நினைவு கூர்கையில் கூட (அவரது அசட்டுத்தனங்களையும் உள்ளடக்கி) திருமதி சுஜாதாவால் மகிழ்ச்சியுடன் நினைவு கூர முடிகின்றது. தன் கணவரின் அசட்டுத்தனங்களை எண்ணி அவரால் சிரிக்க முடிகின்றது. அதற்குக் காரணம் அவரது ஆழ்மனத்தில் அவர் கணவர் மேல் அவர் கொண்டிருக்கும் காதல் என்றே நான் உணர்கின்றேன். 

Friday, August 8, 2025

கங்கை கொண்ட சோழபுரம்!


பிரயாணம்! சாகசம்! வரலாறு! என்பதன் அடிப்படையில் இயங்கும் யு டியூப் சானல் கர்ணனின் 'Tamil Navigation' சானல் ( https://www.youtube.com/watch?v=pq3_B_NoUoM ).  தமிழர்தம் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட பல காணொளிகளை உள்ளடக்கிய சானல்.  இக்காணொளியில் முதலாம் இராசேந்திரன் சோழன் கட்டிய 'கங்கை கொண்ட சோழபுரம்' ஆலயம் பற்றிய பல அரிய தகவல்களை அறிந்துகொள்ள முடியும். 


கங்கை கொண்டசோழபுரம் ஆலயம், அதிலுள்ள முக்கிய சிற்பங்கள், தாங்கு  தளம் (அதிட்டானம்) போன்ற கட்டடப் பகுதிகள், மன்னன் வெட்டிய சோழகங்கம் ஏரி (இப்பொழுது வறண்டு கிடக்கிறது), அவனது அரச மாளிகை இருந்த இடம் எனப் பல அரிய தகவல்களை உள்ளடக்கிய காணொளியைப் பார்ப்பது மகிழ்ச்சி தருவது. நீங்களும் ஒரு தடவை பாருங்கள்.

Tuesday, August 5, 2025

க.பாலேந்திராவின் இயக்கத்தில் 'ஒரு பாலை வீடு'


அவைக்காற்றுக் கழகத்தின் தயாரிப்பில் , நாடகவியலாளர் பாலேந்திராவின் இயக்கத்தில் வெளியான நாடகம் 'ஒரு பாலை வீடு'. இந்நாடகம் Federico García Lorca
 என்னும் ஸ்பானிய நாடகாசிரியரின் 'தி ஹவுஸ் ஆஃப் பேர்னார்டா அல்பா' (The House of Bernarda Alba ) என்னும் நாடகமே தமிழில் 'ஒரு பாலை வீடு' என்னும் பெயரில் மேடையேற்றப்பட்டது. மேடையேற்றியவர்கள் சுண்டுக்குளி பழைய மாணவியர் சங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Federico García Lorca ஒரு பாலினச் சேர்க்கையாளர். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் இடதுசாரிஅமைப்பான குடியரசுக் கட்சியினை ஆதரித்த இவரை வலது சாரிகளும், பாசிசவாதிகளுமான தேசியப் படையினர் படுகொலை செய்தனர் என்பது துயரகரமானது. இவரது உடல் கூடக் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்டபோது , அதனைப்பற்றிய சிறப்பானதொரு விமர்சனத்தை , சிரித்திரன் சஞ்சிகையின் வைகாசி 1979 இதழில் எழுதியிருக்கின்றார் ஆ.க.பராக்கிரமசிங்கம்.  நாடக இயக்கத்தை, அரங்கு அமைப்பை, நடிகர்களின் திறமையை  என அவற்றை விதந்து தனது விமர்சனத்தில் எழுதியிருக்கும் கட்டுரையாளர்,  தனது விமர்சனத்தின் இறுதியில் ஈழத்து நாடகத்துறையையிட்டு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும், அதற்காக பாலேதிராவையும், அவைக்காற்றுக் கழகத்தையும் பாராட்டியிருக்கின்றார்.

இந்நாடகம் பெர்ணார்டா அல்பா என்னும் பெண்மணியையும், அவரது திருமணமாகாத  ஐந்து பெண்கள் பற்றியும் வைத்துப்பின்னப்பட்ட நாடகம் 'ஒரு பாலை வீடு' என்பதையும், நாடகத்தின் தமிழாக்கத்தைச் செய்த நிர்மலா நித்தியானந்தனே , நாடகத்தின் பிரதான வேடமான பெர்னார்டோ அல்பா வேடத்தில் நடித்திருப்பதையும், அவரது கடைசிப் பெண்ணாக நிர்மலா நித்தியானந்தனின் கடைசித்தங்கையான சுமதி ராஜசிங்கம் நடித்திருப்பதையும் மேற்படி விமர்சனத்திலிருந்து அறிய முடிகின்றது. 

கலைஞர் சோக்கல்லோ சண்முகத்தின் முன்மாதிரியான, அர்ப்பணிப்புடன் கூடிய கலையுலக வாழ்க்கை!



அண்மையில் தனது தொண்ணூறாவது பிறந்த நாளைக் கொண்டாடிய கலைஞரும், எழுத்தாளருமான சோக்கல்லோ சண்முகநாதன் அவர்கள் முக்கியமான தமிழ்க் கலைஞர். வில்லுப்பாட்டும், நாடகம், எழுத்து, நடிப்பு எனப் பன்முகத்திறமை மிக்கவர். சிறந்த மரபுக்கவிஞரும் கூட. இவரது 'சோக்கல்லோ' நகைச்சுவைக் கதம்ப நிகச்சி மிகவும் புகழ்பெற்ற மேடை நாடகங்களிலொன்று. இலங்கையில் பல இடங்களில் 500 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்ட நாடகமிது. அதன் காரணமாகவே சோக்கல்லோ சண்முகம் என்றழைக்கப்பட்டவர். 

Sunday, August 3, 2025

ஒரு பதிவுக்காக - பல்வேறு இலக்கியச் சிறப்பிதழ்கள், தொகுப்பு நூல்கள், மலர்கள் ஆகியவற்றில் வெளியான என் , வ.ந.கிரிதரனின், படைப்புகள்


பல்வேறு இலக்கியச் சிறப்பிதழ்கள், தொகுப்பு நூல்கள், மலர்கள் ஆகியவற்றில் வெளியான என் , வ.ந.கிரிதரனின்,  படைப்புகள் இவை.  இவை முழுமையான  பட்டியல் அல்ல. ஒரு சில விடுபட்டிருக்கலாம். 

பல்வேறு இலக்கியச் சிறப்பிதழ்கள், தொகுப்பு நூல்கள், மலர்கள் ஆகியவற்றில் வெளியான என் , வ.ந.கிரிதரனின்,  படைப்புகள் இவை.  இவை முழுமையான  பட்டியல் அல்ல. ஒரு சில விடுபட்டிருக்கலாம். 

1.  'அறிவுத்தாகமெடுத்தலையும் வெங்கட் சாமநாதனும், அவரது  கலை மற்றும் தத்துவயியற் பார்வைகளும்' - வ.ந.கிரிதரன் - கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அரை நூற்றாண்டு எழுத்தியக்கப்பணியினைக் கெளரவிக்கும் முகமாக சந்தியா பதிப்பகம் (தமிழ்நாடு)  'வெங்கட் சாமிநாதன் வாதங்களும், விவாதங்களும்'  தொகுப்பு நூல்.   தொகுப்பாசிரிர்கள்: எழுத்தாளர்கள் பா.அகிலன்,. திலீப்குமார் & சத்தியமூர்த்தி. 

2. இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்!  - வ.ந.கிரிதரன் -  'வடக்கு வாசல்' (புது தில்லி)  'இலக்கிய மலர் 2008' வ் ஆசிரியர் எழுத்தாளர் பென்னேஸ்வரன்.

3.  'கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!'  - வ.ந.கிரிதரன் - தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலர், ஆழி பப்ளிஷர்ஸ்; ஆசிரியர் - 'ஆழி' செந்தில்நாதன்.

4. இரு கட்டுரைகள்: . 'அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் '  & 'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும்' - வ.ந.கிரிதரன் -  கணையாழி தொகுப்பு (1995 -2000)

5. சிறுகதை- சொந்தக்காரன் - வ.ந.கிரிதரன் - கணையாழி கனடாச் சிறப்பிதழ்

Saturday, August 2, 2025

வ.ந.கிரிதரனின் நூல் அணிந்துரைகள்!





அவ்வப்போது நூல்களுக்கு நான் எழுதிய அணிந்துரைகள் இவை.

1. காத்யானா அமரசிங்ஹவின் 'தரணி' (பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடு) நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு எழுதிய அணிந்துரை.
2.  எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்'  நூலுக்கு எழுதிய அணிந்துரை.
3. 'போர்க்காலம் - தோழிகளின் உரையாடல்' என்னும் தலைப்பில்  தமிழினி ஜெயக்குமாரனின் நூலுக்கு எழுதிய அணிந்துரை. சிவகாமி பதிப்பக வெளியீடு.
4.  தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த  எழுத்தாளர் பொன் குலேந்திரனின் 'காலம்' (அறிவியற் சிறுகதைகள்) தொகுப்புக்காக  எழுதிய அணிந்துரை.
5. நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் சங்கத்தமிழ் இலக்கியக் கட்டுரைத்தொகுப்பு நூலுக்கு எழுதிய  அணிந்துரை. 'விஜே பப்ளிகேஷன்ஸ்' வெளியீடு.
6. எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராஜாவின் 'தராசு முனைகள்'  நூலுக்கு எழுதிய அணிந்துரை. 
7. மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் 'வேர் மறந்த தளிர்கள்' (பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியானது) நாவலுக்கு எழுதிய அணிந்துரை.


1. காத்யானா அமரசிங்ஹவின் 'தரணி'!


அண்மையில் நான் வாசித்த புனைகதை 'தரணி'. இதுவொரு சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. சிங்கள இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்ஹ. புனைகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பன்முகத்திறமை மிக்கவர் இவர். அத்துடன் ஊடகத்துறையிலும் தீவிரமாகச் செயற்படும் சமூக, அரசியற் செயற்பாட்டாளர். இலங்கையின் சமகால சமூக, அரசியற் பிரச்சினைகளில் மிகுந்த தெளிவு மிக்கவர். அவற்றை இன, மத, மொழி ரீதியாக அணுகாமல், மானுடப்பிரச்சினைகளாக அணுகுமொருவர். இதனை இவர் எழுதி அண்மையில் வெளிவந்த 'தரணி' நாவலிலும் காணலாம். இந்நாவல் இலங்கையில் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிவுக்காக - கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது எட்டுக் கட்டுரைகள் - வ.ந.கிரிதரன் -


 

கணையாழி சஞ்சிகைக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானதோரிடமுண்டு. நீண்ட காலமாக வெளிவரும் சஞ்சிகை, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தையடுத்து , தற்போது இணைய இதழாக வெளிவருகின்றது. 

ஒரு காலத்தில் கணையாழி சஞ்சிகையில் என் எழுத்துகள் வெளிவருவாமா என்று நினைத்திருந்தேன். ஆனால் தமிழகத்திலிருந்து வெளியாகும் சஞ்சிகைகளில் கணையாழியில் மட்டுமே எனது எழுத்துகள் அதிகமாக வெளிவந்திருக்கின்றன என்பது மகிழ்ச்சியளிப்பது. 

கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகள்:

1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன்
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். 
3.  கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. கணையாழி டிசம்பர் 2000: 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. கணையாழி மே 2012: ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்- 
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7.  கணையாழி செப்டம்பர் 2017:  கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயிஓன் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -
9. கணையாழி மார்ச் 2020: விநாயக முருகனின் 'ராஜிவ்காந்தி சாலை'
10. கணையாழி ஏப்ரில் 2020: 'பிரமிளின் "காலவெளி": கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
11. கணையாழி மே 2020: 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற் காதல் பற்றி..'
12. கணையாழி ஜனவரி 2022: பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!


* கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு நூலில் எனது ' அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்' &  'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் ' ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகளில் எட்டுக் கட்டுரைகள் கீழே:

1. பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!
2. தமிழ்நதியின் 'பார்த்தீனியம்'
3.  நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! -
4. வானியற்பியற் கட்டுரை : அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்
5. ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்!
7. பிரமிளின் 'காலவெளி': 'கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
8.  பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி...


1. பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!

என்னை தனது எழுத்துகளால் ஆட்கொண்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். தனது குறுகிய வாழ்வில் அவரால் எவ்விதம் இவ்விதம் சிந்திக்க  முடிந்தது? செயற்பட  முடிந்தது? எழுத முடிந்தது ? என்று நான் அடிக்கடி வியந்துகொள்வதுண்டு. தனது குறுகிய வாழ்வில் கவிதை, கட்டுரை, புனைகதை என்று அவர் ஆற்றிய இலக்கியப் பங்களிப்பு போற்றுதற்குரியது. அந்நியராதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டின் விடுதலைக்காக, வாழ்ந்த மண்ணில் நிலவிய தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மூட நம்பிக்கைகள் போன்ற சமூகச் சீரழிவுகளுகெதிராக, சுற்றியிருக்கும் இயற்கைக்காக, வாழும் சக உயிர்களுக்காக  அவரது எழுத்துகள் குரலெழுப்பின. பல்வகைப்பட்ட மானுடரின் உணர்வுகளையும் அவரது கவிதைகள் வெளிப்படுத்தின. தான் வாழ்ந்த காலத்தை மீறிய அவரது சிந்தனையை , அவற்றில் காணப்படும் தெளிவினை அவரது எழுத்துகள் வெளிப்படுத்தின. அத்துடன் சிந்திப்பதுடன் நின்று விடாமல் அதற்கேற்ப நிஜ வாழ்விலும் செயற்பட்டவரும் கூட.  இவ்விதமாகப் பல்வேறு விடயங்களைப்பற்றிச் சிந்தித்த அவரது சிந்தனை மானுட இருப்பு பற்றியும் சிந்தித்தது. இருப்பு பற்றிய சிந்தனைகள் கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்புமொன்று. அக்கேள்விகளெல்லாம் அவருக்கும் ஏற்பட்டன. அக்கேள்விகளுக்கான விடைகளையும் அவர் தர்க்கரீதியாகச் சிந்தித்தார். அச்சிந்தனைப்போராட்டங்களை வெளிப்படுத்தும் அவரது முக்கியமான கவிதையாக  'உலகத்தை நோக்கி வினவுதல்' என்னும் கவிதையைக்  குறிப்பிடலாம். 

தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சாியானதொரு தீர்வில்லை. ‘இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள், இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை ‘ என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் ‘கருத்து முதல்வாதிகள் ‘. இவர்கள் ‘சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது ‘ என்றும், ‘இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு ‘ என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல ‘இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே ‘ என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் ‘பொருள் முதல்வாதம் ‘ எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் ‘பொருள்முதல்வாதிகள் ‘ எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி ‘ஆன்மா நிலையானது, அழிவற்றது ‘ என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே ‘. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் ‘அப்படி எதுவுமில்லை ‘ என்கின்றார்கள். ‘இவ்வியற்கையில் ஏற்பட்ட பாிணாம மாற்றங்களே உயிாினங்கள் உருவாகக் காரணம் ‘ என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். பாரதியாரையும் இந்தத்தத்துவக் குழப்பம் விட்டு வைக்கவில்லையென்பதைத்தான் மேற்படி 'உலகத்தை வினவுதல்' கவிதை வெளிப்படுத்துகின்றது. 

Wednesday, July 30, 2025

தொடர்கதை : நவீன விக்கிரமாதித்தன் (பாகம் இரண்டு) - வ.ந.கிரிதரன்


[பதிவுகள் இணைய இதழில் ஆரம்பித்திருக்கும் புதிய நாவலின் முதல் அத்தியாயம். ஏற்கனவே வெளியாகி , நூலுருப்பெற்ற 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலின் இரண்டாம் பகுதி.]


ஓவியம் AI

அத்தியாயம் ஒன்று - தழுவல் பற்றிய தர்க்கமொன்று!


இருண்டிருக்கின்றது. வீட்டின் முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு மேலே விரிந்து கிடக்கும் விண்ணைப் பார்த்தவாறிருக்கின்றேன். இத்தனை வருடங்களில் எத்தனை தடவைகள் இவ்விதம் பார்த்திருப்பேன். ஒரு முறையேனும் அலுக்காத, சலிப்படைய வைக்காத  ஒன்றென்று இருக்குமென்றால் , என்னைப்பொறுத்தவரையில் அது இதுதான். இவ்விதம் விரிந்து கிடக்கும் பேரண்டத்தை பார்த்தபடி, சிந்தனையில் ஆழ்ந்தபடி , மெய்ம்மறந்து இருப்பதைப்போல் வேறோர் இன்பம்  எதுவும் இல்லையென்பேன். வழக்கம்போல் சிந்தனை நதி பெருவெள்ளமாகச் சீறிப்பாய்கின்றது. எதற்காக? எதற்காக? எதற்காக? அர்த்தமென்ன? ஏன்? ஏன்? ஏன்?  இதற்கு, இந்த வினாவுக்கு ஒருபோதுமே விடை கிடைக்கப்போவதில்லை. விடை கிடைக்காத வினா என்பது தெரிந்துதானிருக்கின்றது. இருந்தாலும் வினாக்கள் எழாமல் இருப்பதில்லை.  சிந்தித்தலென்னும் செயல் இருக்கும் வரையில் , அதற்கு ஒருபோதுமே முடிவில்லை. 

கோடி,கோடிக் கணக்கில் கொட்டிக் கிடக்கும் , என்ணற்ற சுடர்களில் மனது மூழ்கிப்போய்க் கிடக்கின்றது. அத்தனையும் சுடர்களா? அவற்றில் கோடிக்கணக்கில் சுடர்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டங்களும் இருக்கலாம். இருக்கும். ஆயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான, பில்லியன் கணக்கான ஒளியாண்டுத் தொலைவுகள் பிரமிக்க வைக்கின்றன. ஏன்! எதற்காக? ஏன்? 

இவ்விதமான  சமயங்களில் எனக்குத் துணையாக ,மனோரஞ்சிதமும் வந்து விடுவாள். வந்தாள். வந்தவள் என்னுடன் நெருக்கியபடி, அருகில் தோளணைத்தாள். விண்ணைப்பார்த்தாள். விண்ணில் கொட்டிக்கிடக்கும் நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்தாள். அப்பொழுது  அவள் 'ஷாம்பு' போட்டு, முழுகி வந்திருந்தாள். ஷாம்பு மணம் நாசியில் மெல்ல நுழைந்தது. என் கன்னத்தை ஒரு முறை செல்லமாகத்  தட்டினாள்.  அவளை ஒரு கணம் உற்று நோக்கினேன். இவள் மட்டும் துணையாக இல்லையென்றால்.. அவளற்ற இருப்பை ஒரு கணம் மனம் எண்ணிப்பார்த்தது. என் எண்ண ஓட்டத்தை அவள் புரிந்து கொண்டாள் என்பதை உணர்ந்தேன். சில விடயங்களை உள்ளுணர்வு மூலம் உணர முடிகின்றது. உள்ளுணர்வு மூலம் இவ்விதம் உணர முடிவதற்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்க முடியுமென்று இன்னுமொரு கிளை பிரித்துச் சிந்தனை நதி ஓடியது.

Tuesday, July 29, 2025

நடிகரும், எழுத்தாளரும், பேச்சாளருமான தமிழ் அரசியல்வாதி 'சொல்லின் செல்வர்' செ.இராசதுரை! - வ.ந.கிரிதரன் -


இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியமானதோர் ஆளுமை மட்டக்களப்பு மாநகர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக , முப்பத்து மூன்று வருடங்களிருந்த 'சொல்லின் செல்வர்' என்றழைக்கப்படும்  செல்லையா இராசதுரை அவர்கள். அவரது தொண்ணூற்றியெட்டாவது பிறந்தநாள் (ஜூலை 26)  அண்மையில் கொண்டாடப்பட்டது. அதனையொட்டிப் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் மனத்தைத் தொடும் முகநூற் பதிவொன்றினை அண்மையிலிட்டிருந்தார்.அதற்கான இணைப்பு

செ.இராசதுரை அவர்கள் வசீகரத்தோற்றம் மிக்கவர். நான் தமிழரசுக் கட்சி பற்றி அறிந்தபோது என்னைக் கவர்ந்த தமிழ் அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர். அப்பாவுக்கு அவர் மேல் மிகுந்த மதிப்பு இருந்தது. தமிழகத்தில் திமுக அரசியல்வாதிகள் போல், இலங்கையில் சிறப்பான மொழியில் உரையாற்றுவதில் முதலிடத்தில் இருப்பவர் இராசதுரை அவர்கள் என்பார்.

யுத்தத்தின் கோர விளைவுகளை வெளிப்படுத்தும் 'இரு பெண்கள்' (Two Women).


இத்தாலிய நடிகையான சோபியா லோரென் ஹாலிவூட்டினையும் கலக்கிய சிறந்த நடிகைகளிலொருவர். சோபியா லோரேன் என்றதும் அவரது கவர்ச்சிகரமான உடல்வாகினைத்தான் பலரும் முதலில் நினைவுக்குக்கொண்டு வருவார்கள். சோபியா லோரேன் அழகான உடல்வாகுகொண்டவர் மட்டுமல்லர் அற்புதமான நடிகைகளிலுமொருவர். முதல் முதலாக ஆஸ்காரின் சிறந்த நடிகைக்கான விருது ஆங்கிலமொழியிலில்லாத ஒரு திரைப்பபடத்தில் நடித்த நடிகையொருவருக்காகக் கொடுக்கப்பட்டதென்றால், அவ்விருதினைப் பெற்ற நடிகை சோபியா லோரென்தான். புகழ்பெற்ற இத்தாலிய நாவலாசிரியர்களிலொருவரான அல்பேர்ட்டோ மொராவியோ (இவரது படைப்புகளில் பாலியல் சம்பவங்கள் சிறிது தூக்கலாகவிருக்கும். அதனால் சிலர் எஸ்.பொ.வை இவருடன் ஒப்பிடுவதுமுண்டு) எழுதிய நாவலான 'இரு பெண்கள்' (Two Women) என்னும் நாவலினை மையமாக வைத்து உருவான Two Women கறுப்பு/வெள்ளைத் திரைப்படம் 22 சர்வதேச விருதுகளைச் சோபியா லோரென்னுக்கு அள்ளிக்கொடுத்த திரைப்படம்.. போர் மக்கள் மேல் ஏற்படுத்திய விளைவுகளைப் பார்ப்பவர் நெஞ்சினை அதிரவைக்கும் வகையில் விபரிக்கும் திரைப்படமிது. 'விட்டோரியோ டி சிகா'வின் (Vittorio De Sica) இயக்கத்தில் வெளியான ( Vittorio De Sica புகழ்பெற்ற இத்தாலியத் திரைப்பட இயக்குநர். இவரது திரைப்படங்கள் நான்கு தடவைகள் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளன. புகழ்பெற்ற The Bicycle Thief திரைப்படத்தினை இயக்கியவர் இவர்தான்.) இத்திரைப்படத்தின் கதைச் சுருக்கமிதுதான்:

Monday, July 28, 2025

எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிப் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள சிறுகதை 'கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு!' (ஓவியம் - AI) - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிப் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள சிறுகதை 'கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு!'  (ஓவியம் - AI)

கூறும் பொருள் , பாத்திரப் படைப்பு காரணமாக  இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது. திட்டமிட்டு, கச்சிதமாகப் பின்னப்பட்ட  கதை. இந்தியப் பெண்ணுக்கும், வெள்ளையின ஆணுக்கும் , ‘இன் விட்ரோ’ கருத்தரித்தல் (IVF) முறையில் பிறந்த பெண் குழந்தை கிளியோ.  மரபு அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரிபவன் அக்கணவன். அவனது தந்தை தொல்லியல் அறிஞர்.  

   இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -

கதையின் சாரம் இதுதான்: கிளியோ ஒருவேளை எகிப்திய அழகி கிளியோபாட்ராவின் மரபணு மூலம் உருவாக்கப்பட்டவளோ? அக்கணவனின் தந்தை தொல்லியல் அறிஞர் என்பதால், அவரால் அந்த மரபணு சேகரிக்கப்பட்டிருந்ததோ?  இவ்விதமான சந்தேகம் நியாயமானதுதான் என்பதை நிரூபிக்கும் வகையில், தகுந்த ஆதாரங்களுடன் கதை பின்னப்பட்டுள்ளது.  கிளியோவும் சமுதாயப் பிரக்ஞை மிக்க பெண்ணாக உருவாகியிருக்கின்றாள். இயற்கையை அழிக்கும் அரசியல்வாதிகளைக் கடுமையாக எதிர்ப்பவள். அதன் காரணமாக அவள் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத்தான் வீட்டைத்துறந்து பறந்தாளோ என்னுன் கேள்வியுடன் கதை முடிகின்றது.

கதையில் ஆங்காங்கே சிந்திக்கத்தூண்டும் பகுதிகளும்  கலந்திருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்று; 

 "அவர்கள் இருவரும் பல விடயங்களை அறியும் ஆவலுடன் பல நாடுகளுக்கு ஒன்றாகச் சென்று பயணித்தார்கள். கல்பனாவின் தாய்நாடான இந்தியாவுக்கு அடிக்கடி சென்றார்கள். கல்பனாவின் தாய் சொல்லிய இதிகாச புராண கதைகளையும் அதில் சொல்லப் பட்டிருக்கும் மாயா ஜாலக் கதைகளையும கேட்டு வளர்ந்தவள் கல்பனா.ஆனால் மார்க் தன் மனைவியுடன் இந்தியா சென்றபோது அக்கதைகளில் பெண்கள் நடத்தப்படும விதங்களையும் அத்துடன் இந்தியக் கடவுளர் பலர் போர் ஆயதங்களுடனிருப்பதையும் விமர்சித்தபோது ‘தமிழர் நாகரிகச் சரித்திரம் சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்டது. ஆனால் காலக்கிரமத்தில் சமயம் என்ற பெயரில் மனிதமற்ற முறையில் சாதி மத பேதங்கள் உண்டாக்கப் பட்டு இந்திய மக்கள் ஒருநாளும் ஒருத்தரை ஒருத்தர் சரிசமமாகப் பார்க்க முடியாத மாதிரி சமூக அமைப்பை மாற்றி அமைத்திருக்கிறது’ என்ற விளக்கத்தைச் சொன்னாள கல்பனா."

இக்கதையை  இயக்குநர் சங்கர் வாசித்தால் , 'எந்திரன்' திரைப்படத்தைப் போல் 'கிளியோபாட்ரா' என்னும் பெயரில் , பிருமாண்டமான, தொழில் நுட்பங்கள் மிளிரும் திரைப்படமொன்றினைத் தயாரிக்ககூடும், அதற்கேற்பக் கச்சிதமாகப் பின்னப்பட்ட கதை.

சிறுகதை: கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு!  -    இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -

கிளியோளியோ அவளின் அறையில் இல்லை. அவள் வீட்டில் இருந்தால் ஜாஸ் இசை இருக்கும் என்பதால் அந்த இசையற்ற மௌனம் அசாதாரணமானது. கிளியோ ஜாஸ் இசையை நேசிக்கிறாள். ‘இது மனித குலத்தின் ஆன்மாவின் ஒலி’ என்கிறாள். அவளின் அறை காலியாக உள்ளது அவளுடைய பயணப் பை அங்கு இல்லை. அவளை இழந்த உணர்வு அவளின் வளர்ப்புத் தாயான ஸாராவுக்கு ஏற்படுகிறது.

Saturday, July 26, 2025

கல்பனாவின் 'யுகசந்தி'

 

'Veryrare Book' என்னும் முகநூலைத் தற்செயலாகப் பார்த்தேன். உண்மையிலேயே அரிய நூல்கள்,  வெகுசன இதழ்த்தொடர்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய பக்கமிது. இதற்கான இணைய இணைப்பு - https://www.facebook.com/veryrare.book

என் பால்ய பருவத்தில் , நான் வாசிக்கத்தொடங்கியிருந்த சமயம் , கலைமகள் இதழில் ஒரு தொடர்கதை வெளியானது. அதனை எழுதியவர் எழுத்தாளர் கல்பனா. அக்காலகட்டத்தில் கல்கியில் ஓவியர் கல்பனா என்பவர் ஓவியங்கள் தீட்டிக்கொண்டிருந்தார். ஆனால் இவர் கதைகள் எழுதுபவர். இவர் பெண்ணா அல்லது பெண்ணின் பெயரில் எழுதிய ஆணா? தெரியவில்லை. இவரைப்பற்றிய தகவல்களும் இணையுத்தில் கிடைக்கவில்லை. 

 ஆனால், இவரது 'யுகசந்தி' தொடர்கதை மட்டும் நினைவிலுள்ளது. அத்தொடரை நான் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால் முதலாவது அத்தியாயம் ஆற்றங்கரைக் காட்சியுடன் அல்லது வெள்ளப்பெருகுடன் ஆரம்பமானதாக நினைவிலுள்ளது. அத்தொடரைப் பின்னர் வாசிக்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன், ஆனால் வாசிக்கவில்லை.

Friday, July 25, 2025

கவிச்சக்கரவர்த்தியும், கவியரசரும்!


'இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்"


இப்பாடல் கம்பரின் கம்பராமாயணத்தில் வரும் பாடல். இராமனின் கால் பட்டு சாபம் நீங்குகின்றாள் அகலிகை. இதை விசுவாமித்திரர் விபரிப்பதாகக் கம்பர் இப்பாடலை எழுதியிருப்பார்.   

இப்பாடலில் வண்ணம் என்னும் சொல் எத்தனை அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.  

கம்பரின் கவித்துவத்தை வெளிப்படுத்தும் கவிதையிது. கருமை வண்ணமுடைய தாடகையுடனான போரில் , அதாவது 'மை வண்ணத்து அரக்கி போரில்' மழை தரும் கார்மேக வண்ணமுடைய இராமனின் வில்லை இயக்கும் கை வண்ணம் கண்டேன். இங்கு கல்லை மிதித்து அகலிகையின் சாபத்தை நீக்கிய இராமனின் கால் வண்ணம் கண்டேன் என்கின்றார் விசுவாமித்திரர் கூற்றாகக் கம்பர்.  

இங்கு கம்பர் கரிய நிறம் வாய்ந்த தாடகையின் அழகைக் குறைத்து மதிப்பதற்காக மை வண்ணம் அரக்கி என்கின்றார் கம்பர். இதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவ்விதமான புரிதல் இன்றுதானே எமக்கு வந்திருக்கின்றது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இந்தப் புரிதல் இருந்திருக்காது. அதனால் கம்பரைக் குறை கூற முடியாது.



இவ்விதம் வண்ணம் என்னும் சொல்லைப் பலமுறை பாவித்துக் கவிஞர் கண்ணதாசன் அற்புதமானதொரு பாடலை எழுதியிருக்கின்றார். அது 'பாசம்' திரைப்படத்தில் வரும் 'பால் வண்ணம் பருவம்  கம்பர் தன் பாடலில் எட்டு முறை வண்ணத்தைப் பாவித்திருந்தால் , கவிஞர் கண்ணதாசன் பன்னிரண்டு முறை பாவித்திருப்பார். 

இப்பாடலின் இன்னுமொரு சிறப்பு. மெல்லிசை மன்னர்கள் எம்ஜிஆருக்குப் பி.பி.ஶ்ரீனிவாசின் குரலைப்பாவித்திருப்பதுதான். காட்சியின் சூழலுக்கு மென்மையான பாடகர் பி.பி.ஶ்ரீனிவாசின் குரல் பொருந்தும் என்பதால் பாவித்திருக்க வேண்டுமென்று கருதுகின்றேன். உண்மையில் நன்கு பொருந்தத்தான் செய்கிறது.  பி.பி.,ஶ்ரீனிவாஸ், பி.சுசீலா இருவரும் மிகவும் சிறப்பாக இப்பாடலைப் பாடியிருப்பார்கள்.

பாடலைக் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=qYuON1qbTCE&list=RDqYuON1qbTCE&start_radio=1 

Wednesday, July 23, 2025

83 ஜூலை இனப்படுகொலை நினைவுகள்.... - வ.ந.கிரிதரன் -

[ஓவிய உதவி -  நன்றி The Nation.] 

83 ஜூலை இனப்படுகொலை  இலங்கையின் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனை. இலங்கையை  26 வருடங்கள் சமூக யுத்ததில் மூழ்கிப்போக வழி வகுத்த இனப்படுகொலையது.  போர் நாட்டுக்கு மிகப்பெரிய அழிவைத்தந்தது. இரு பக்கத்திலும் படையினர், விடுதலைப்போராளிகள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். பொதுமக்கள் இலட்சக்கணக்கில் உயிரிழந்தனர்.  இலங்கைத் தமிழர் பிரச்சினையை உபகண்ட, சர்வதேசப் பிரச்சினைகளிலொன்றாக உருமாற்றியது கறுப்பு ஜூலையே. கறுப்பு ஜூலையை மறந்து விட்டால் மீண்டும் நாட்டில் இன்னுமொரு கறுப்பு ஜூலை ஏற்படும் நிலை ஏற்படலாம். மீண்டும் நாடு யுத்தத்துக்குள் மூழ்கி விடலாம். 

அந்நிலை மீண்டும் ஏற்படக் கூடாதென்றால் நாட்டில் சகல இன மக்களும் சகல உரிமைகளுடனும் வாழும் நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்தின மக்களும் எவ்வித அச்சமுமற்று, அன்புடன், இணைந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் சந்தேகங்களும் , அச்சமும் ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் நிறுத்தப்பட  வேண்டும். 

"கறுப்பு ஜூலையை நாம் நினைவு கூர வேண்டும். ஏனென்றால் மீண்டுமொரு தடவை அவ்விதமான கறுப்பு ஜூலை தோன்றக்கூடாதென்பதற்காக" என்னும் கருத்தை மையமாக வைத்து ஊடகவியலாளர் டி.பி,எஸ்.ஜெயராஜ் நல்லதொரு ஆங்கிலக் கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரை கறுப்பு ஜூலையின் மூலக் காரணிகள், அதனை நடத்தியவர்கள், ஏற்பட்ட அழிவுகள் எனப் பலதரப்பட்ட விடயங்களை விரிவாக ஆராய்கின்றது.  

ஆம்! 83 ஜூலை இனப்படுகொலையை நாம் மீண்டும் மீண்டும் நினைவு கூர வேண்டும். நினைவு கூர்வோம். மீண்டுமொரு 83 ஜூலை இனப்படுகொலை போன்றதொரு நிகழ்வு  நிகழாதிருப்பதற்காக, புரியப்பட்ட   அநீதிக்கு நீதி கிடைப்பதற்காக, மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம்.

இங்கு கடந்த ஆண்டுகளில் நான் எழுதிய 83 ஜூலை இனப்படுகொலை பற்றிய முகநூல்  நினைவுக்குறிப்புகளிலிருந்து சில குறிப்புகளை (சில எதிர்வினைகளையும்)   இணைத்திருக்கின்றேன்.  இவற்றில் நினைவு கூரப்படுபவையெல்லாம் ,  நினைக்கும்போதெல்லாம் என் நினைவில் தோன்றுபவை. உங்கள் நினைவுகளிலும்தாம்.

Tuesday, July 22, 2025

செக்கு மூலம் எண்ணெய்!


செக்கிழுத்த செம்மல் என்பர் 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரப்பிள்ளையை விபரிக்கையில். காரணம் அவரது ஆங்கிலேயருக்கு எதிரான வர்த்தக , விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளால் அவரைச் சிறையில் அடைத்தது ஆங்கிலேயரின் ஆதிக்க அரசு. சிறையில் செக்கிழுக்க வைத்தது. அதன் காரணமாகவே அவரைச் செக்கிழுத்த செம்மல் என்றும் அழைப்பர். 
 
பலருக்குச் செக்கு என்றால் எப்படியிருக்கும் என்பது தெரியாது, ஆனால் அது பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களுக்கு இப்பதிவு சிறிது விளக்கத்தைத் தருமென்று நம்புகின்றேன். முதலில் செக்கு பற்றித் 'தகவல் திரட்டி' என்னும் முகநூற் பக்கக்குறிப்பைக் கீழே தருகின்றேன்:

Monday, July 21, 2025

நடிகர் திலகத்தின் நினைவாக...


நான் ஆரம்பத்திலிருந்தே வாத்தியாரின் இரசிகன். ஆனாலும்  நடிகர் திலகத்தின் படங்களைப்  பார்ப்பதை என்னால் தவிர்க்க முடிந்ததில்லை. காரணம் அவரது நடிப்பு.   அவரது நடிப்பு மிகை நடிப்பென்றால் அதற்குக் காரணம் அக்காலகட்டத்தின் தேவையாக அது இருந்ததுதான். அதனால்தான் அவர் அப்படி நடித்தார். திரைப்படங்கள் என்பவை கலைக்காக மட்டும் எடுக்கப்படுவதில்லை. வர்த்தகமே அதன் முக்கிய  அம்சம்.  பெரும்பான்மையான இரசிகர்கள் விரும்பியது வசனங்களையும்,  வசனங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுடன் கூடிய நடிப்பையும்தாம்  நடிகர் திலகம் சிறந்த நடிகர் அதனால் அவரால் அக்கால இரசிகர்கள் விரும்பியதைத் தன் நடிப்பால் கொடுக்க  முடிந்தது.   அக்காலகட்டத்தில் என் அம்மா, அப்பாவுக்கு மிகவும் பிடித்த  திரைப்பட ஜோடி சிவாஜி _ பத்மினிதான்.

தமிழ்ச் சினிமா பாட்டிலிருந்து வசனத்துக்கு மாறிக்கொண்டிருந்த வேளையில் அவ்வுலகில் வந்து குதித்தவர்  விழுப்புரம் சின்னையா கணேசன் (சிவாஜி  கணேசன்).  சமுதாயச் சீர்கேடுகளைச் சுட்டெரிப்பதை மையமாகக் கொண்ட திராவிடர்  கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை  சினிமாவைத் தம் கட்சிகளின் பிரச்சாரத்துக்குப் பாவிக்கத்தொடங்கிய காலகட்டத்தில் வெளியான திரைப்படம்  கலைஞரின் வசனத்தில் வெளியான 'பராசக்தி'. அதில் முக்கிய கதாநாயகனாக நடித்ததன் மூலம் , ஒரேயுடியாக உச்ச நட்சத்திரமாகியவர் நடிகர் திலகம்.  அவரே அத்தகையதொரு வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார். தமிழகத்தில் பல இடங்களில் வெள்ளி விழாக் கொண்டாடிய 'பராசகதி' இலங்கையில் 240 நாட்களைக் கடந்து ஓடியது.

Sunday, July 20, 2025

நடிகரும், பாடகருமான மு.க.முத்து மறைந்தார்!


கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மறைவுச் செய்தியைத் தாங்கி வந்தது முகநூல். இவர் கலைஞருக்கும், முதல் மனைவி பத்மாவதிக்கும் பிறந்த முதலாவது குழந்தையே மு.க.முத்து. பத்மாவதி பிரபல பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் சகோதரி. மு.க.முத்துவின் திரைப்படங்களை நான் பார்த்ததில்லை,. ஆனால் அவரது திரைப்படப்பாடல்களை நான் இரசிப்பவன். குறிப்பாக அவரே பாடி நடித்த 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க' பாடலைக் கூறலாம்.


கலைஞரின் மகனாக நான் முதலில் அறிந்தது மு.க.முத்துவையே. குமுதத்தில் கலைஞரின் 'ரோமாபுரிப்பாண்டியன்' தொடராக வெளியான காலத்தில் , அல்லது அதற்குச் சிறிது முன்பாக அல்லது பின்பாக , ஒரு தடவை பிரபலங்களின் குழந்தைகள் எழுதிய ஓரிரு பக்கக் கதைகளை வெளியிட்டிருந்தார்கள். கட்டுரைகளாகவுமிருக்கலாம். சரியாக நினைவிலில்லை. அவ்விதம் ஒரு கதையையோ அல்லது கட்டுரையையோ எழுதியிருந்தார் சிறுவனான மு.க.முத்து.

Monday, July 14, 2025

'அபிநய சரஸ்வதி' சரோஜாதேவி மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!


நடிகை சரோஜாதேவியின் மறைவுச் செய்தியினை இணையம் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல். கலைஞர்கள் அழிவதில்லை. அவர்கள்தம் கலைகளூடு நிலைத்து நிற்பார்கள். சரோஜாதேவியும் அவ்விதமே நிலைத்து நிற்பார்.


என் அபிமான நடிகையர்களில் ஒருவர் அவர். நான் நினைவு தெரிந்து முதல் பார்த்த திரைப்படம் எம்ஜிஆர், சரோஜாதேவி இணைந்து நடித்த திரைப்படமான 'எங்க வீட்டுப் பிள்ளை'. அதன் பிறகு அவர் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த சில திரைப்படங்களே வெளிவந்தன. அவற்றில் என்னைக் கவர்ந்தது அன்பே வா. எம்ஜிஆர் , சரோஜாதேவி காலம் மறைந்து , எம்ஜிஆர் , ஜெயலலிதா காலம் தமிழ்த் திரையுலகில் கோலோச்சத்தொடங்கி விட்டது. ஆனால் அதுதான் சரோஜாதேவியின் நடிப்புக்கு இடம் கொடுத்த பல திரைப்படங்கள் வெளியாகக் காரணமாக அமைந்தது. தாமரை நெஞ்சம், குலவிளக்கு, பணமா பாசமா ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

நானோ எம்ஜிஆரின் இரசிகன். எம்ஜிஆர் , சரோஜாதேவி இணைந்து நடித்த, 1958 - 1965 காலப்பகுதியில் வெளியான பல திரைப்படங்கள் மீள் வெளியீடுகளாக வெளியானபோது அவற்றைச் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பார்த்தேன். அக்காலகட்டத்து எம்ஜிஆர்,சரோஜாதேவி படப்பாடல்கள் பல டி.எம்.எஸ் , பி.சுசீலா இணைந்து பாடி மிகவும் புகழ் பெற்ற பாடல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் மறக்க முடியாத இன்னுமொரு விடயம் - 'எங்க வீட்டுப் பிள்ளை' திரையிடப்பட்டபோது அதற்காக இலங்கைக்கு எம்ஜிஆருடன் சரோஜாதேவியும் வந்திருந்தார். அவர்கள் சென்றவிடமெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வரவேற்றார்கள். பழைய பத்திரிகைகள், சஞ்சிகைகளைத்தேடிப் பார்த்தால் எத்தகைய வரவேற்பு என்பதை அறிந்துகொள்ளலாம்.

அவர் நினைவாக , எனக்கு பிடித்த அவர் நடிப்பில் உருவான திரைப்படப் பாடல்களில் சில:

Friday, July 11, 2025

மறக்க முடியாத எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி! - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர்  இந்திரா பார்த்தசாரதிக்குப் பிறந்த நாள் ஜூலை 10.  என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத எழுத்தாளுமைகளில் ஒருவர் இ.பா. தனது மனைவி இந்திராவின் பெயரையும் பாவித்து, இந்திரா பார்த்தசாரதி என்னும் பெயரில் எழுதுபவர். எழுத்தாளர் ரங்கராஜன் தன்  மனைவி சுஜாதா என்னும் பெயரில் தமிழ்  இலக்கிய உலகில் தடம் பதித்தது நினைவுக்கு வருகின்றது.  

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எனக்கு  முதலில் அறிமுகமானபோது நான் ஒருவித வெறியுடன் வாசிப்பில் மூழ்கிக்கிடந்த பால்ய  பருவத்தினன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் அப்போது எனக்கு வயது பதினொன்றுதான். பத்து வயதிலேயே கல்கியில், விகடனில், குமுதத்தில், கலைமகளில், தினமணிக்கதிரி தொடர்களாக வெளியான தொடர்கதைகளை, சிறுகதைகளை , தீவிரமாக, வாசிக்கத்தொடங்கி விட்டிருந்தேன்.வெகுசனச் சஞ்சிகைகளில் எழுதி என் கவனத்தை ஈர்த்த, தீவிர இலக்கிய எழுத்தாளுமையாளர்களாக ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி . கு,அழகிரிசாமி போன்றோர் இருந்தனர். இவர்களது எழுத்துகள்  பொதுவான வெகுசன எழுத்தாளர்களின் எழுத்துகளிலிருந்து வேறுபட்டவை. ஆனால் அது இவர்கள் மீதான என் ஈர்ப்புக்குத் தடையாக இருந்ததில்லை. என் வயதுக்கு மீறிய விடயங்களைப்பற்றியெல்லாம் இவர்கள்தம் படைப்புகள் இருந்தாலும், அனைவரையும் சென்றடையும் வகையில் , ஒரு வித எல்லை மீறாத எழுத்து நடையில்  இவர்கள் எழுதினார்கள்.

Thursday, July 10, 2025

அது ஒரு கனாக்காலம்!


இனி ஒருபோதுமே அக்காலம் திரும்பப் போவதில்லை. மானுடத் தொழில் நுட்ப வளர்ச்சி மானுட வாழ்க்கைக்குப் பல வசதிகளை உருவாக்கி விட்டது. புதிய பல பொழுது போக்குகளையும் உருவாக்கி விட்டது. இத்தொழில்நுட்பம் உருவாக்கிய வசதிகள் தொடர்ச்சியாக மானுடரைக்  கூட்டு வாழ்க்கையிலிருந்து, சமூக வாழ்க்கையிலிருந்து மேலும் மேலும் பிரித்துக்கொண்டே செல்கின்றன. ஆதியில் மானுடர் குழுக்களாக, தாய் வழிச் சமுதாயங்களாக வாழ்ந்தார்கள். குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தாலும், குழுக்களுக்கிடையில் ஒருவிதப் பொதுவுடமை நிலவியது.  சமூக வாழ்க்கை இருந்தது.

பின்னர் தொழில் நுட்ப வளர்ச்சி படிப்படியாக அம்மானுடரின் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே வந்தது. ஆற்றோர நாகரிகம், விவசாயம், பண்டமாற்றுப் பொருளாதாரம் ,தனியுடமை, ஒருதார மணமுறை, குடும்பம்  என அது மேலும் பரிணாமம் அடைந்து வந்தது. நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம், முதலாளித்துவ ஏகாதிபத்தியம் எனப் பிரிந்திருந்த உலகம் மேலும் மேலும் மாற்றங்களச் சந்தித்து வந்தது..

Wednesday, July 9, 2025

'காலம்' செல்வத்துடன் ஒரு சந்திப்பு!




{ஜூலை 7, 2025} நேற்று மாலை 'காலம்' செல்வத்துடன் சிறிது நேரம் , மிடில் ஃபீல்ட்டும் ஃபிஞ் வீதியும் சந்திக்குமிடத்தில் அமைந்திருக்கும் டிம் ஹோர்ட்டன் கோப்பிக் கடையில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது.
 
Worldcat, முகநூல், யு டியூப், இணையத்தளம், டொமைன், அவரிடம் விற்பனைக்காக இருக்கும் நூல்கள் என உரையாடல் பல விடயங்களைத் தொட்டுச் சென்றது.
 
உரையாடலின் முடிவில் எழுத்தாளர் தேவகாந்தன் பற்றி அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் மனத்தில் ஒலிக்கின்றன. 'தன் வாழ்க்கையையே எழுத்துக்காக அர்ப்பணித்தவர் தேவகாந்தன்' என்று உண்மையிலேயே ஆழ்மனத்திலிருந்து அவர் கூறிய வார்த்தைகளில் இருந்த உண்மை என் நெஞ்சைத் தொட்டது.

Tuesday, July 8, 2025

பண்ணைத்துறையின் பெயருக்கான காரணம் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -


 


யாழ்ப்பாண இராச்சியத்தின் காலத்தில் முக்கிய துறைமுகங்களாக விளங்கியவை கொழும்புத்துறை , பண்ணைத்துறை ஆகிய துறைமுகங்கள். பண்ணைத்துறை என்பதற்கான பெயருக்கான காரணம் எதுவாக இருக்கும்? அண்மையில் வெளியான கட்டடக்கலைஞர் மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' நூல் பற்றிய விமர்சனத்தில் கலாநிதி சிவ தியாகராஜா அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

 ".... யாழ்ப்பாணக் கோட்டை இருக்கும் பண்ணை என்ற இடப்பெயர் அவ்விடத்தில் முற்காலத்திலிருந்த ஓர் உலகப்பண்ணையின் ( World Market ) பெயரின் எச்சமாகவே தோன்றுகின்றது."  

 

பண்ணை என்பது விவசாயம், பல்வகை மிருக வளர்ப்பு (கோழிப்பண்ணை, பாற் பண்ணை என)  ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளைக்  குறிக்கப்பயன்படும் சொல். ஆங்கிலத்தில் Farm என்பார்கள். கலாநிதி சிவ தியாகராஜா கூறுவது போல் இவ்விதமான ஒரு பகுதி துறைமுகங்களுக்கு அருகில் இருப்பதில்லை. துறைமுகங்களுக்கு அருகில் பெரும் வர்த்தகச் சந்தைகள் இருப்பதுதான் வழமை.  

Saturday, July 5, 2025

மேலும் பல புதிய ஆக்கங்களுடன் பதிவுகள் இணைய இதழ்!


2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்க்கொண்டு வெளியாகும் இணைய இதழ் பதிவுகள்.  பதிவுகள் இணைய இதழை https://www.geotamil.com ,  https://www.pathivukal.com ஆகிய இணையத்தள  முகவரிகளில் வாசிக்கலாம். படைப்புகளை , ஆக்கபூர்வமான கருத்துகளை ngiri2704@rogers.com அல்லது editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்புங்கள்.

Wednesday, July 2, 2025

நண்பர்களின் நால்வரின் ஒன்று கூடல்!

இடமிருந்து வலமாக: வரதீஸ்வரன், வித்தியானந்தன், பிறேமச்சந்திரா & நான்.



இன்று நான் நண்பர்கள் வரதீஸ்வரன், வித்தியானந்தன், பிறேமச்சந்திரா ஆகியோரை , வரதீஸ்வரன் வீட்டில் சந்தித்து , மாலைப்பொழுதை இனிதாகக் கழித்தேன். இவர்களில் வரதீஸ்வரன், வித்தியானந்தன் ஆகியோருடனான அறிமுகம்  மொறட்டுவைப்பல்கலைககழகத்தின் மாணவர் விடுதியில் ஆரம்பமானது. நான் அங்கு கற்கச்சென்றபோது முதல்வருடம் மாணவர் விடுதி B இல் தங்கிப் படிப்பை ஆரம்பித்தேன். அந்த விடுதியில் அவ்விதம் தம் படிப்பை ஆரம்பித்தவர்கள்தாம் நண்பர்கள் வரதீஸ்வரனும், வித்தியானந்தனும்.  வித்தியானந்தன் கடல்துறைப் (Marine) பொறியியல் துறையிலும், வித்தியானந்தன் மின்சாரப்பொறியியல் துறையிலும், பிறேமச்சந்திரா மூலகப் (Materials) பொறியியல் துறையிலும் படிப்பதற்காக வந்திருந்தவர்கள். நான் கட்டடக்கலை படிப்பதற்காகச் சென்றிருந்தவன். வித்தியானந்தன் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் 'நுட்பம்'  இதழாசிரியராக நான் இருந்தபோது மலர்க்குழுவில் ஓர் உறுப்பினராக இருந்தவர். 

Tuesday, July 1, 2025

புகலிட அன்னையே! நீ வாழ்க! (இசை - Suno AI & ஓவியம் - AI)


இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்!

புகலிட அன்னையே! நீ வாழ்க!  

பல்லின மக்கள் ஒன்றென வாழும்
புண்ணிய பூமி உனது பூமியே!
நல்லறம் பேணி நானிலம் போற்ற
நல்லன்னை எனவே  என்றென்றும் வாழ்க நீ!

புகலிடம் நாடிப் பிறந்தமண் பிரிவோர்
புகலிட அன்னை என்போம் உனையே!
கனடாத் தாயே! கருணையின் வடிவே!
உனது அன்பால் உயிர் பிழைத்தோம்!

இத்தினம் உனது உதயத்து நாளாம்!
இன்றல்ல என்றுமே உனை வாழ்த்துவோம்.
என்றுமே இன்றுபோல் உன்கருணை பொங்கட்டும்.
நன்றாக  வாழ்ந்திட உனை வாழ்த்துகிறோம்.

புகலிடம் அன்னையே! நீ வாழ்க! - வ.ந.கிரிதரன் -



பல்லின மக்கள் ஒன்றென வாழும்
புண்ணிய பூமி உனது பூமியே!
நல்லறம் பேணி நானிலம் போற்ற
நல்லன்னை எனவே  என்றென்றும் வாழ்க!

புகலிடம் நாடிப் பிறந்தமண் பிரிவோர்
புகலிட அன்னை என்போம் உனையே!
கனடாத் தாயே! கருணையின் வடிவே!
உனது அன்பால் உயிர் பிழைத்தோம்!

இத்தினம் உனது உதயத்து நாளாம்!
இன்றல்ல என்றுமே உனை வாழ்த்துவோம்.
என்றுமே இன்றுபோல் உன்கருணை பொங்கட்டும்.
நன்றாக  வாழ்ந்திட உனை வாழ்த்துகிறோம்.



Saturday, June 28, 2025

எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரனின் 'மூன்று மழைக்கால இரவுகள்' சிறுகதை! - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரனின் 'மூன்று மழைக்கால இரவுகள்' சிறுகதை அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்று மட்டுமல்ல இலங்கையிலிருந்து  வெளியான சிறந்த தமிழ்ச் சிறுகதைகளிலும் ஒன்று என்று கூறலாம். இந்தச் சிறுகதை இலங்கையின் போர்ச்சூழலின் முக்கிய காலகட்டங்களைப் பிரதிபலிக்கும் அதே சமயம் ,  போர்ச்சூழலில் குடும்பங்களின் அலைதல்கள், அவை ஏற்படுத்திய மன உளைச்சல்கள், அமைப்பையே மாற்றிவிடும் உத்வேகத்துடன் எழுந்த இளையவர்கள்தம் கனவுகளின் சிதைவுகள், காரணமான அவர்களுக்கிடையிலான உள் முரண்பாடுகள்,  நண்பர்களின்  இழப்புகள், பிரிதல்கள்  என்பவற்றையெல்லாம் இந்த ஒரு சிறுகதை எடுத்தியம்புகின்றது.

 - எஸ்.கே.விக்னேஸ்வரன் -

Friday, June 27, 2025

திறனாய்வாளர் ஈழக்கவியின் 'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்' நூல் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன்'



- பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் -

- ஜீவநதி சஞ்சிகையின் ஜூன் பதிப்பு  ஏ.எச்.எம். நவாஸ் (ஈழக்கவி ) சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. அதில்  எனது கட்டுரை  'திறனாய்வாளர் ஈழக்கவியின் 'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்'  நூல் பற்றிய சிந்தனைகள்! ' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. - 


'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்' என்னும் ஈழக்கவியின் சிறு நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது.  ஜீவநதி வெளியீடு. பேராசிரியரின் மொழியியல்ரீதியிலான  பங்களிப்பை ஆராயும் நூல். உண்மையில் பேராசிரியர் எம்,ஏ.நுஃமானின் இலக்கியப் பங்களிப்புகள் பற்றி எழுதும் பலரும் அவரது கவிதைப் பங்களிப்பு, திறனாய்வுப் பங்களிப்பு ஆகியவற்றையே பிரதானப்படுத்தி எழுதுவார்கள். பேராசிரியர் நுஃமானும் அவ்விடயங்களிலேயே அதிகமான கட்டுரைகளைப் பொது வாசகர்களுக்காக எழுதுவார். ஆனால் உண்மையில் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் மொழியியல் அறிஞரும் ஆவார். மொழியியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். அத்துறைப் பேராசிரியராக யாழ் பல்கலைகக்ழகத்தில் பல வருடங்கள் பணி  புரிந்தவர். ஆய்வரங்குகளில் மொழியியலில் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தவர். இந்நிலையில் அவரது மொழியியற் சிந்தனைகள், ஆய்வுப் பங்களிப்புகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இக்கவனத்தைச் செலுத்துவதற்கான தூண்டலை ஈழக்கவியின் இந்நூல்  செய்திருக்கின்றது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்க நூலாக  இதனைக் கருதலாம்.

இந்நூல் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் பற்றிய  நல்லதோர் அறிமுகத்தையும்  , குறிப்பாக அவரது, குடும்பப் பின்னணி.  கல்வித் தகைமைகள் , இலக்கியப் பங்களிப்புகள் (திறனாய்வு உட்பட), கல்விப் பங்களிப்பு  ஆகியவற்றைச் சுருக்கமாக விபரிக்கும் . அதே சமயம் மொழியியல் அறிஞராக அவரது மொழியியல் துறைப்பங்களிப்பையும் எடுத்துரைக்கின்றது.

Wednesday, June 25, 2025

கட்டடக்கலைஞர் இ. மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948) நூல் , நல்லூர் ராஜதானி பற்றிய கருத்துகள்! - வ.ந.கிரிதரன் -


கட்டடக்கலைஞர்  இ. மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு  (1621 - 1948) ' மிக முக்கியமானதொரு வரலாற்று ஆவணம்.  493 பக்கங்களைக் கொண்ட இநந நூலை  குமரன், எழுநா,ஆதிரை  பதிப்பகங்கள்  இணைந்து வெளியிட்டுள்ளன. மிகுந்த உழைப்பின் அறுவடை இவ்வாய்வு நூல்.  அதற்காக நூலாசிரியர் மயூரநாதனுக்கும், வெளியிட்ட பதிப்பகங்களுக்கும் அதன் பின்னணியில் இருந்தவர்களுக்கும் நாம் அனைவரும் நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம்.  நூலைபெறுவதற்கு உதவிய ஓராயம் அமைப்பினருக்கும் நன்றி. 

தமிழரசர் காலத்து நல்லூர் தொடக்கம், போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்  காலகட்டங்களைச் சேர்ந்த யாழ்ப்பாண நகரம் பற்றிய,  சரித்திரக் குறிப்புகள், நில வரைபடங்கள் , வெளிக்கள ஆய்வுத் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மயூரநாதன் இந்நூலை உருவாக்கியுள்ளார். இந்நூலை உருவாக்க மயூரநாதன் பாவித்துள்ள ஆதாரங்கள் மேலும் பலரின் ஆய்வுகளுக்கு அத்திவாரங்களாக உதவக்கூடியவை. 

- கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் -

இந்நூலின் நல்லூர் பற்றிய பகுதியில் மயூரநாதன் எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு'  நூலையும் கவனத்திலெடுத்து தன் கருத்துகளை  முன் வைத்திருக்கின்றார். அதற்காக என் நன்றி அவருக்குண்டு.

Monday, June 23, 2025

இலக்கியமும் , புலம்பெயர் இலக்கியமும் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அது பற்றிய கருத்தும் பற்றி....


எழுத்தாளர் அ.முத்துலிங்கம் புலம்பெயர் இலக்கியம் பற்றிக் கூறுகையில் 'எழுத்திலே புலம்பெயர்ந்த எழுத்து புலம்பெயராத எழுத்து என்ற வகைப்பாடு கிடையாது. நல்ல எழுத்து, மோசமான எழுத்து என இரண்டு பிரிவுதான்.'' என்று கூறியிருந்ததாக ஒரு கூற்றினை முகநூலில் முகநூல் நண்பர்களில் ஒருவரான Kandasamy R  பகிர்ந்திருந்தார். என்னைப்பொறுத்தவரையில் அவ்விதம் கூறுவதால புலம்பெயர் இலக்கியம் படைக்கும் ஒருவரைக் குறைத்து மதிப்பிடுவதாக, அவரை ஒரு பிரிவுக்குள் கட்டிப்போடப்படும் அபாயம் இருப்பதாக முத்துலிங்கம் அவர்கள் கருதுவதுபோல் தெரிகின்றது.

Saturday, June 21, 2025

எழுத்தாளர் நடேசனின் புலம்பெயர் இலக்கியம் பற்றிய கருத்துகள் பற்றி....

எழுத்தாளர் நடேசன் தனது முகநூல் பக்கத்தில் புலம்பெயர் இலக்கியம் பற்றியொரு பதிவினை இட்டிருக்கின்றார். அதில் அவர் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்: 

1. புலம்பெயர் இலக்கியம் - இலக்கியம் புலம் பெயர்வது இல்லை. இந்த சொற்றொடர் தவறாகும்.

2. புலம் பெயர்ந்தோர் இலக்கியம் படைத்தால் அதை புலம்பெயர் பெயர்தோர் இலக்கியம் எனலாம். ஆனால்  பெரிய முக்கியமான விடயம் இல்லை. 

3. தமிழ் நாட்டில் அக்காலத்தில் பிராமணர் இலக்கியம் படைத்தார்கள்  இப்பொழுது மற்றைய சாதியினரும் படைக்கிறார்கள். அவை எல்லாம் எனக்கு தமிழ் நாட்டில் இருந்து வந்த தமிழ் இலக்கியமே.  

4. யாராவது மாகாபாரதம், இராமாயணம்த்தை போரிலக்கியம் என்றால் எப்படி இருக்கும்?

5. இலங்கையில் இருந்து வெளிநாட்டில் வசிப்பவர்கள் எழுதுவது மட்டுமே தமிழ் இலக்கியம் ஆகாது . நீங்கள் எழுதுவது டயஸ்போரிக் இலக்கியம்,  என்றால் என்ன நியாயம்?

6. இந்த டயஸ்போரிக் வார்த்தை யூதர்களினால் உருவாக்கப்பட்டது . 

7. வெளிநாடுகளில் இருந்து சிங்கள மொழியில் எழுதும் சிங்களவர்கள் இந்த சொல்லடையை பாவிப்பதில்லை.

8. எனது அசோகனின் வைத்தியசாலை,  பண்ணையில் ஒரு மிருகம்,   வாழும்சுவடுகள் டயஸ்போரிக் இலக்கியவகையை அல்ல .தமிழ் இலக்கியத்தில் எவரும் தொடாத  ஒரு பகுதி என சொல்கிறேன்.

விதவைத்திருமணத்தை வலியுறுத்தும் வவுனியூர் இரா. உதயணனின் 'வலியின் சுமைகள்' ! - வ.ந.கிரிதரன் -


வவுனியூர் இரா. உதயணன் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினை  'விதி வரைந்த பாதையிலே'  என்னும் நாவலுக்காகவும், 'பனிநிலவு' நாவலுக்காக எழுத்தாளர் கு,சின்னப்பபாரதி  விருதினையும் பெற்றவர். இவரது நாவல்கள், சிறுகதைகள் நூலுருப்பெற்றுள்ளன. தினகரம், வீரகேசரி பத்திரிகைகளில் தொடர்களாக இவரது நாவல்கள் வெளிவந்துள்ளன. இவ்விதம் வீரகேசரியில் 54 அத்தியாயங்கள் தொடராக வெளியான நாவலான 'வலியின் சுமைகள்' நாவல்  ஓவியங்களுடன் கூடிய அத்தியாயங்களுடன் 'இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம்'  வெளியீடாக , 2015இல் வெளிவந்துள்ளது. நூலுக்கான் ஓவியங்களை வரைந்திருப்பவர் ஓவியர் கெளசிக். இந்நாவலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. 

வன்னியூர் இரா. உதயணனின் எழுத்து சரளமானது. வாசிப்புக்கு எவ்வித தடங்கலும் தராத தெளிந்த நீரோடை போன்றது. ஆங்காங்கே மண் வாசனை தெறிக்கும் இயற்கை வர்ணனைகளை உள்ளடக்கியது.  வாசிப்பைத்தூண்டும் கதைப்பின்னல்களைக்கொண்டது. மானுட சமுதாயத்துக்கு பயன் தரும் சமுதாயப் பிரக்ஞை  மிக்க முற்போக்குக் கருத்துகளை உள்ளடக்கியது.  'வலியின் சுமைகள்' நாவலிலும் இப்பண்புகள் அனைத்தையும் காணலாம்.

Friday, June 20, 2025

தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள்' பற்றி... - வ.ந.கிரிதரன் -


 

'சாம்பரில் திரண்ட சொற்கள்'  எழுத்தாளர் தேவகாந்தனின் அண்மையில் வெளியான நாவல்.  'தாய்வீடு' பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவல் 'தாய்வீடு' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. சிறப்பான வடிவமைப்புடன், ஓவியர் ஜீவாவின் அழகான ஓவியங்களுடன் வெளிவந்துள்ள நூல். ஒரு காலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான  தொடர்கதைகளின் வெற்றிக்கு அவற்றில் வெளியான ஓவியங்களும் ஒரு காரணம். 'பொன்னியின் செல்வன்' நாவலில் எம்மையெல்லாம் கவர்ந்த பாத்திரமான  வாணர் குலத்து வீரனான வல்லவரையன் வந்தியத்தேவனை .  அவனை உயிர்த்துடிப்புடன் வரைந்த் ஓவியர்களான மணியம், வினு, மணியம் செல்வன், பத்மவாசன் ஆகியோரின் ஓவியங்கள் வாயிலாகத்தான்  நினைவில் வைத்திருக்கின்றோம்.  'கடல்புறா' நாவலின் நாயகன் இளையபல்லவன் என்றழைக்கப்படும் கருணாகரத்தொண்டைமானை ஓவியர் லதாவின் ஓவியங்கள் மூலம்தான் நினைவில் வைத்திருக்கின்றோம்.  'ராணிமுத்து' வெளியீடாக வெளிவந்த மாத நாவல்களும் ஓவியங்களை உள்ளடக்கியே வெளிவந்தன. நாவல்களின் ஓவியங்களும் முக்கியமானவை. மேற்படி நாவலும் இவ்விதமே ஓவியங்களுடன் வெளியாகியிருப்பது வடிவமைப்புக்கு வனப்பைத்தருவதுடன், வாசிப்புக்கும் வளத்தைத்தருகின்றது..

Tuesday, June 17, 2025

த.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ் எழுதிய 'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் அல் - புனைவுக்கான (2024) விருது!


'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' என்னும் நூலை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது அவருடன் இறுதிவரை பணி புரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான  த.பிச்சாண்டி எழுதியிருக்கின்றார். எம்ஜிஆரினுடனான தன் அனுபவங்களை அந்நூலில்  அவர் பகிர்ந்திருக்கின்றார். இந்நூல் பற்றி அந்தமழை.காம் தளத்தில் வெளியாகியுள்ள மதிமலர் என்பவரின் நூல் அறிமுகக் குறிப்பு என் கவனத்தை ஈர்த்தது. எம்ஜிஆர் என்னும் மனிதரின், முதல்வரின் மனிதாபிமானம் மிக்க ஆளுமையை வெளிப்படுத்தும் அறிமுகம். நூலை முழுமையாக வாசிக்கும் ஆர்வத்தைத்தரும் அறிமுகம்.

இந்நூலுக்கு இம்முறை தமிழ் இலக்கியத்தோட்டம் வழங்கும் அல்- புனைவுக்கான இயல் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  அந்திமழை.காம் தளத்தில் வெளியான நூல் அறிமுகக் குறிப்பினை இங்கு பகிர்ந்துள்ளேன்.

நூல்: எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் நினைவுகள், த.பிச்சாண்டி இ.ஆ.ப(ப.நி), பிவி பதிப்பகம், கலைஞர் கருணாநிதி நகர், சென்னை-78. கைபேசி: 9884980760 விலை ரூ 860.

************************************************************************************************
(அந்திமழை.காம்) நூல் அறிமுகம்: என்ன செய்தார் எம்.ஜி.ஆர்.? எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் நினைவுகள்!  - மதிமலர் -

திண்டுக்கல் மாவட்டத்தில் 1977-இல் நில உச்சவரம்பு அலுவலராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார் அந்த இளம் அதிகாரி. அச்சமயம் அங்கே குடகனாற்றில் வெள்ளம் வந்து ஏராளமான பேர் இறந்துவிட்டனர். எக்கச் சக்க சேதம்.


முதலமைச்சர் வந்து பார்வையிடும் வழியில் ஓர் இடத்தை நிர்வகிக்கும் வேலைதான் அந்த அதிகாரிக்கு. முதலமைச்சர் கையால் சேலைகள் வழங்கலாம் என விரும்பி உள்ளூர் பிரமுகர் ஒருவர் சேலைகளை அடுக்கி வைக்க, அவரை இவர் அனுமதிக்க மறுத்துவிட்டார். முதல்வரின் பயணத் திட்டத்தில் இது இடம் பெறவில்லை. உடைந்த அணையைப் பார்த்துவிட்டு, இந்த இடத்துக்கு வருகையில் பெரும் பெண்கள் கூட்டம் கூடிவிட்டது. அங்கே இறங்கும் திட்டம் இல்லை என்றாலும் மகளிர்கூட்டத்தைப் பார்த்து இறங்கினார் அவர். எங்களுக்கு சேலை கொடுக்கும் திட்டத்தை இவர் நிறுத்திவிட்டார் என இளம் அதிகாரி மீது அங்கிருந்த பெண்கள் புகார் கூறினர். முதலமைச்சர் இவரை முறைத்தார். நாளைக்கு மதுரைக்கு வந்து என்னைப் பாருங்க. எனக்கு கெட்ட பேர் வாங்கித்தருவதற்காகவே இருக்கீங்களா? என்றவாறு அவர் புறப்பட்டார். உடன் வந்திருந்த மாவட்ட கலெக்டரும் மூத்த அதிகாரிகளும் உனக்கு தண்ணியில்லா காடுதான் என்று சொன்னார்கள்.

Monday, June 16, 2025

எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணனுடன் ஒரு மாலைப்பொழுது!


இன்று கனடாவுக்குக் குடும்ப நிகழ்வு ஒன்றுக்காக வருகை தந்திருக்கும் எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணனைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இதற்குக் காரணமான என் பால்ய காலத்து நண்பன் திருநாவுக்கரசுக்கு (வவுனியா) நன்றி.

உதயணன் அவர்களுடனான இச்சந்திப்பில் எழுத்தாளர் தேவகாந்தன், சமூக,அரசியற் செயற்பாட்டாளர் எல்லாளன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

'ஸ்டூஃப்வில்' (Stouffville) நகரில் அமைந்துள்ள 'சந்தோஷ் ஸ்பைஸ் பலஸ்' (Santhosh Spice Palace) உணவகத்தில் அனைவரும் கலந்துரையாடினோம். 

எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணன், நான் , சமூக, அரசியற் செயற்பாட்டாளர் எல்லாளன்.

புகலிட அனுபவங்கள், எழுத்துலக அனுபவங்கள், வவுனியா பற்றிய நனவிடை தோய்தல்கள், ஈழநாடு பத்திரிகையுடனான எழுத்துலக அனுபவங்கள்  எனப் பல்வேறு விடயங்களைத் தொட்டுச் சென்றது உரையாடல். எம் வெளியான நூல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டோம்.

வவுனியூர் இரா.உதயணன் நாடறிந்த எழுத்தாளர்களில்  ஒருவர்.  நாவல், சிறுகதை என இவரது இலக்கியப்பங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது. ஏப்ரில் மாத ஜீவநதி சஞ்சிகை 'வவுனியூர் இரா. உதயணன்' சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளில் இவரது நாவல்கள் தொடர்களாக வெளியாகியுள்ளன.  'விதி வரைந்த பாதையிலே' நாவலுக்காக இலங்கைச் சாகித்திய மண்டல விருதினையும், 'பனி நிலவு' நாவலுக்காக எழுத்தாளர் கு,சின்னப்பபாரதி விருதினையும் பெற்றவர். 

இடமிருந்து வலமாக - எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணன், நான் , எழுத்தாளர் தேவகாந்தன்.

எழுத்தாளர் வவுனியூர் இரா. உதயணனுடனான மாலைப்பொழுது இனிமையாகக் கழிந்தது.  இச்சந்திப்பில் எடுக்கப்பட்ட  புகைப்படங்கள் சிலவற்றையே இங்கு காண்கின்றீர்கள். 

காலத்தால் அழியாத கானம் - ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?

கவிஞர் கண்ணதாசனின் சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. கவிஞரின்  எளிய, இனிய தமிழ் கேட்பவரைக் கிறங்க வைப்பது. இது போல் தெளிவான வசனங்களை உள்ளடக்க...

பிரபலமான பதிவுகள்