'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Wednesday, September 17, 2025
'பதிவு'களில் அன்று - எழுத்தாளர் ரதனின் சினிமா விமர்சனக் குறிப்புகள்!
[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
1. மார்ச் 2007 இதழ் 87 - சினிமா! 'யாப்பன'விற்கு வாருங்கள்! - ரதன் -
இலங்கையில் தடை செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சிங்கள திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் அசோக கங்கம. ஏனையோர் பிரசன்ன விதானக, விமுக்தி ஜயசுந்தர ஆகியோர். இவாகளது படங்களின் தடைக்கு எதிராக, மூத்த திரைப்பட இயக்குனரும், சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றவருமான லெஸடர் ஜேம்ஸ் பீரிஸ் கருத்து தெரிவித்தபொழுது, இவ்வாறான தடைகள் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்துக்கு நாட்டை இட்டு செல்கின்றமைக்கான அறிகுறியாகும் என தெரிவித்துள்ளார். The Chairman of the National Film Corporation (NFC) Sunil S. Sirisena (who is also a secretary to the Defence Ministry) கருத்து தெரிவிக்கையில் படைப்பாளிகளுக்கு எல்லைகள் வகுப்பது தரமான படங்கள் வெளிவருவதை தடைசெய்யும் என்றார். தனது 'Handa Kaluwara’ படத்துக்கு எதிரான தடைக்கு உயர் நீதி மனறம் சென்றவரும் சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றவருமான பிரசன்ன விதானக கருத்து தெரிவிக்கையில் அரசியல்வாதிகள், தங்களின் சப்பாத்துக்களின் கீழ், படைப்பாளிகள் தமது கருத்துக்களை, கொள்கைகளை போட்டுவிடவேணடும் என நினைக்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் படைப்பாளிகள் அடிபணியப் கூடாது. கிட்லர், ஸ்ராலினுக்கு எதிராக நிமிர்ந்து நின்ற படைப்பாளிகளை இன்றும் உலகம் மதிக்கின்றது என்றார். ஆனாலும் பெரும்பாலான வெகுசனத் தொடர்பு சாதனங்கள், இத்தடையை ஆதரித்து மௌனம் தெரிவித்தன. இவற்றையும் மீறி இந்த படைப்பாளிகள் தொடர்ந்து படங்களை தயாரிக்கின்றனர்.இதில் அசோக கங்கமவும் ஒருவர். இவர் இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமாக முதலில் This is my moon (இது என் நிலா) என்ற படத்தையும், பின்னர் சுனாமி பற்றிய கிழக்கிலங்கையை மையமாகக் கொண்ட 'Neganahira Weralen Asena' or 'The East is Calling' என்ற தொலைக் காட்சி தொடரையும் இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து 'Me Paren Enna' (இவ்வழியால் வாருங்கள்- Take This Road) என்ற தெலைக் காட்சி தொடரையும் இயக்கியுள்ளார். இந்த தொடரைப்பற்றி பார்ப்பதற்கு முன்னர், இவர் தமிழ் தேசியம் பற்றி தெரிவித்த கருத்துக்களை பார்ப்பது அவசியம். அவற்றில் சில:
•இலங்கையில் கலாச்சாரம் இல்லை, சமூகம் இல்லை, மனித உநவுகள் இல்லை. இருப்பதெல்லாம் தனி மனிதர்கள். அவர்கள் தன்னிச்சையாக இருக்கலாம், விரும்பின் நிர்வாணமாக நடந்து திரியலாம். சுதந்திரமாக செக்ஸ் படம் எடுக்கலாம் •தேசியவாதிகள், இனவாதிகளின் கருத்துப்படி “ இனப்பிரச்சினை மேறகத்தியரால் ஏற்படுத்தப்பட்டது. இவாகளுக்கு மேற்கத்திய சினிமாவும், விஞஞானமும எதிரி. ஆனால, இன்று வீதியால ஒரு பெண் நடந்து செல்ல முடியாது, பாடசாலைக்கு சிறுவர்கள் வாகனத்தில் கூட பாதுகாப்பாக செல்லமுடியாது. மக்களுக்கு தங்களுக்கு தேவையான உணவு,உடையை வாங்கமுடியாதுள்ளது. வெகுசன தொடாபு சாதனங்களில் வன்முறைப்பற்றிய செய்திகள் நிரம்பி வழிகின்றன. - யுத்தத்தில் இராணுவத்தின் தியாகம் என்பதும், தேசத்துக்காக, நாட்டு மக்களுக்காக என்று கூறப்படுபவையும் வெறும் அரசியல் கோஷங்கள். வேறு தொழில் இல்லாமையினால் வாழ்க்கையைக் கொண்டு நடத்தவே இராணுவத்தில் பலர் சேர்கின்றனர்.
•போரின் விளைவு- உ.ம் - குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் பிரகாரத்தின் படி, சுமார் 33,000 குழந்தை பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 20 விகிதம் பெண் சிறுவர்கள், 10 விகிதம் ஆண் சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர். •நான் விடுதலைப்புலிகள் ஆதரவாளனில்லை. ஆனால் தமிழ் மக்கள் பிரச்சினையை ஆதரிக்கின்றேன். நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை வை அசோக கங்கம இலங்கையைப்பற்றி தெரிவித்த கருத்துக்கள்.
'இது என் நிலா' போரின்போது இராணுவச் சிப்பாயிடம் சென்றடைகிறாள் ஒருத்தி. சிப்பாய் இவளைக் கண்டதும் சுட முயற்சிக்கிறான். அவள் தனது சங்கிலியைக் கழற்றுகிறாள். ஆனால் அவன் குறி வைப்பதில் இருந்து விலகவில்லை. அடுத்து பாவாடையைத் தூக்குகிறாள். முகத்தை மூடிக் கொள்கிறாள். அவன் புணர்கிறான். அவனைத் தொடர்ந்து அவளும் கிராமத்துக்குச் செல்கிறாள். இவளது வருகை அவனது முறைப் பெண்ணுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. கிராமத்தில் சிப்பாயின் அண்ணன், மாணவன் போன்றோரால் அவள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிறாள். இறுதியாக அருகில் உள்ள பௌத்த விகாரையில் தஞ்சம் அடைகிறாள். மறுநாள் காவியுடையை அநாதரவாக விட்டுவிட்டு பிக்கு காணாமல் போய்விடுகிறார். இறுதியில் இப் பெண்ணுக்கு பிறக்கும் பிள்ளையை கைகளில் ஏந்தி இது என் நிலா என்கிறான். இதுவும் தமிழ் மக்கள் பிரச்சினை தங்களது கைகளில் உள்ளன என்று கூறுவது போல் உள்ளது. இங்கு யுத்தத்தின் கொடுமையை பாலியல், மதம் எனபனவற்றின் ஊடாக் காட்ட முற்படுகிறார். யுத்தத்தின் பிரதிபலிப்புகளை சமூக தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர். கிராமங்களில் பாலியல் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதன் வெளிப்பாடு தான் போர்ப் பிரதேசங்களில் இராணுவ வீரர்களின் பாலியல் கொடூரங்கள் என சமாதானம் கூறுகிறாரோ என்ற ஜயமும் எழுகிறது. மனிதனின் வழமையான இயங்குதலை, இருத்தலை தீர்மானிப்பது பாலியலா? இன்றைய சிங்கள சமூகம் பாலியலை மையப்பட்டு இயங்குகிறது என்பது இவரது குற்றச்சாட்டு. இது பௌத்த, சிங்கள சமூகத்ததை விமர்சிக்கலாம், ஆனால் இனப்பிரச்சினை கொடூரங்களுக்கான காரணிகளில் ஒன்றாக கருதமுடியாது. இறுதியாக 'இது என் நிலர்' என இராணுவவீரர் கூறும் காட்சி தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒன்ற விடவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்புகின்றது. இங்கும் யுத்தத்தின் மூலவேர் ஆராயப்படாமல் அதன் எச்ச சொச்சங்கள்
விமர்சிக்கப்படுகின்றன.
இந்த 11 வாரத் தொடரை ரூபவாகினி மற்றும் சனலைத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பின. இதன் மூலம் 25 விகிதம் கிராம பார்வையாளர்களையும், 41 விகிதம் நகர பார்வையாளர்கயையும் பார்வையிட்டுள்ளனர். இது மொத்தம் 4.1 மில்லியன் மக்களாவார். இதில் தமிழ், முஸலீம் பார்வையாளர்களும் அடங்குவர். இவரது முந்தைய படங்களை தடைசெய்த அரசு, இந்த தொடரை, அதுவும் தனது அரச தொலைக்காட்சி நிறுவனம் மூலம் ஒளிபரப்பச்செய்தமை ஆச்சரியத்துக்குரியதும், சிந்திக்கவேண்டிய விடயமுமே..
A9 பாதை திறந்து விட்ட பொழுது, அவ்வழியே சுபசிங்க குடும்பமும், ஒரு முஸ்லீம் குடும்பமும், பிரயாணிக்கின்றது. சுபசிங்க குடும்பம் நாகதீபத்திற்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். சிங்கள நூல்களும், இணையத்தளங்களும் யாழ்ப்பாணம் முழுவதும் புத்தர் யாழ்ப்பாணம் வந்த பொழுது சிங்கள மக்கள் நிறைந்து வாழ்ந்தார்கள் என பிரச்காரம் செய்கின்றார்கள். கந்தரோடை, நிலாவரை, உருத்திரபுரம், வவனிக்குளம், சுன்னாகம், கொடியவத்தை, மல்லாகம், உடுவில், புலோலி போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாக கூறிய சுவடுகளை சான்றாக ட்டுகிறர்கள். http://easyweb.easynet.co.uk/~sydney/jaffna.htm) கி.மு 1ம் நூற்றாமாண்டு புத்தர், இலங்கைக்கு இரண்டாம் தடவை விஜயம் செய்த பொழுது நாகதீபத்திற்கும் சென்றதாக கூறப்படுகிறது. நாகதீபம், நயினாதீவில் அமைந்துள்ளது. புத்தர் சென்ற தலமாதனால் பௌத்தர்கள் இக் கோவிலுக்கு தரிசனம் செல்வது வழமை.
பயணங்களை அடிப்படையாகக்கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ளன. இது கதையை நகர்த்துவதற்கான பொதுவான ஓர் உத்தியாகும். இங்கும் யு9 வழியே சென்று யாழப்பாணத்தை அடைந்து, பின்னர் நாகதீபம் சென்று, மீணடும் வந்து யாழ்ப்பாணம் வந்து தங்குகின்றனர். படத்தின் பெரும்பாலன பகுதி யாழப்பாணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. நாகதீபம் செல்லும் வழியில், சுபசிங்கவின் மகள், தனது முன்னால் பல்கலைக்கழக சகாவும், இந்நாள் அரசு சார்பற்ற நிறுவன அதிகாரியை சந்திக்கின்றார். இவரின் வேண்டுக்கோளுக்கினங்க யாழ்ப்பாணத்தில் இவர்கள் வீட்டில் தங்குகின்றனர். அந்த தமிழ்க் குடும்பத்தில், அவர்களது மகன் இயக்கத்தில் இருந்து விட்டு தங்கியுள்ளார். அரசு சார்பற்ற நிறுவன அதிகாரி நாவலப்பிட்டியிலிருந்து வந்து இந்த வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளார். சுபசிங்க குடும்பம் மீண்டும் கொழும்புவிற்கு செல்ல வெளிக்கிடும் பொழுது, பக்கத்து வீட்டு சிறுமி நிலக்கீழ் குண்டு வெடித்து ஓரு காலை இழந்து விடுகின்றார். இதனால் சுபசிங்கவிற்கு மாரடைப்பு வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். இதனால் இவர்கள் அதே வீட்டில் தங்குகின்றனர். ஆரம்பத்தில் இவர்களுக்கிடையிலிருந்த மனப்புகைச்சல், நம்பிக்கையின்மை பின்னர் நீங்கி விடுகின்றது.
யாழ்ப்பாணம் மீண்டும் வந்துள்ள, வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் படும் அவலங்கள் சிறப்பாக பதியப்பட்டுள்ளது. சொந்த மண்ணின்றி, அகதி முகாமிலேயே தஞ்சமாக இருக்கும் இந்த மக்கள் உண்மையில் இந்த போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள். தங்களது சொந்த வீட்டிலேயே நிலக்கீழ் குண்டுகள். இது வரை எந்த வித மீள் குடியேற்ற திட்டங்களும் இன்றி அவலப்படுகின்றார்கள்.
சுபசிங்கவும், முன்னால் சமசமாஜக் கட்சி உறுப்பினரும், முன்னால் ஆசிரியருமான குடும்பத்தலை வரும், அரசியல் பேசும் பொழுது எழும் விமர்சனங்களில் பண்டாரநாயக்கவையும், இடது சாரிகளையும் விமர்சித்தளவிற்கு, தமிழ் தேசியவாதிகளை, சிங்கள பேரினவாதிகளை விமர்சிக்கவில்லை. இந்த போரின் இன்றைய நிலை இரு இனங்களுக்குமிடையாலான புரிந்துணர்விற்கப்பால் பரந்து விரிந்துள்ளது. மக்களுக்கப்பால் இரு போர் இயந்திரங்களும், துணை இயந்திரங்களும் இயங்குகின்றன. இவை மக்கள் நலனில் அக்கறையின்றி சொந்த நலனில் அக்கறை காட்டுகின்றன. நவீன தேசியத்துக்கு, இனங்களுக்கிடையில் தொடர்ச்சியான கருத்துரையாடல்களும், புரிந்துணர்வும் அவசியம். அதனை இயக்குனர் இப்படத்தில் வலியுறுத்துகின்றார். போர் இயந்திரங்களுக்கு அப்பால் மக்கள் தனித்து இயங்குகின்றார்கள். இவர்கள் இணைவை இந்த இயந்திரங்கள் தடுக்கின்றன என்பதை பதிவாக்கியுள்ளார். போரைப்பற்றிய அறிவு சார் மதீப்பீடுகளை (Cognitive Values) இங்கு விவாதிக்கின்றார். (தர்மசேன பத்திராஜ, சொல்லாது உன்னகே என்ற படத்தில் விரிவாக சுதந்திரம் பற்றி விவாதிக்கின்றார்)
ஒரு சிங்கள படைப்பாளியாக, தனது குற்ற உணர்வின் கருத்தாக்கங்களை விசாரணைக்குட்படுத்தியுள்ளார். எதிர் முரண் பாத்திரங்களுக்கூடாக, விசாரணைகளை தொடர்கின்றார். இந்த யதார்த்த நிலை இவர்களை நேர் கோட்டில் நிறுத்துகின்றது. இவரது குற்ற உணர்வின் வெளிப்பாடாக இவர்கள் தங்கியுpருந்த வீட்டின் மகனை, இவர்களது வாகனஓட்டி தாக்க முற்படும் பொழுது, சுபசிங்கவின் மூத்த மகன் வாகனஓட்டியை அடிப்பது வெளிப்படுகின்றது. சுபசிங்கவுக்கும், குடும்பத்தலைவருக்குமான விவாதங்களில், குடும்பத்தலைவர் குரல், கருத்துக்கள் ஓங்கி இருப்பமை மற்றொரு உதாரணம். இப்படத்தின பெரும்பாலான பார்வையாளர்கள் சிங்களவர்கள். இவர்களையும் இந்த குற்ற உணர்வு தொற்ற வேண்டும் என்பதே இயக்குனரின் நோக்கம். (இந்த குற்றஉணர்வின் வெளிப்பாட்டை, இவரையும் விட சிறப்பாக பிரசன்ன விதானகே, தனது படங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.) ஆனாலும் புரிந்துணர்வில் சிங்களவர் மேலோங்கி நிற்பதாக காட்டியுள்ளார். படத்தில் வரும் அரசு சார்பற்ற அதிகாரி மலையகத்தை சோந்தவர். இவர் யாழ் வாழ் மக்களில் ஒருவரக கருதப்படுவதாக காட்டுகின்றார். இது கூட சற்று அதிகம் தான். யாழ் வாழ் சமூகம் இன்னமும் தங்களுக்கிடையில் சாதி, பிரதேச வேறு பாடுகளை முற்றாக
கழைந்துவிடவில்லை.
போரில் மனித வாழ்வின் நிச்சயமற்ற தன்மை, போர் வாழ்வின் தாக்கங்கள், இழப்புக்கள், பிரிவுகள் மனிதர்களை மாற்றிவிடுகின்றது. அவர்களது அக உணர்வின் அச்சங்களையும் மீறி அறிவுசார் முடிவுகளை, மொழி, மதங்களுக்கப்பால் எடுக்கவைக்கின்றது. எனக் கூறியுள்ளார். ஆனால் இன்னமும் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் பெரும்பாலோனோர் அறிவு சார் முடிவுகளை எடுப்பதில்லை.
ஏனைய வெகுசனத் தொடர்புசாதனங்களை விட சினிமா நவீன தேசியத்துக்;கான கற்பிதங்களை மக்கள் மத்தியில் வழங்கும் வல்லமை பெற்றது. அசோக கங்கமவும், நல்ல சினிமா மொழிக’கூடாக இதனை நெறிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் தேசிய, குற்ற விசாரணைக்களுக்கப்பால், வழமையான பொறாமை, குறிப்பாக எதிர் பால் உறவுகளது மீதான பொறாமை, போட்டி உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
கணித உயர் பட்டதாரியும், இஙகிலாந்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவருமான அசோக கங்கம தனது கற்புலத்திக்கூடாக சிங்கள மக்களை நோக்கி விசாரணைகளை முன்வைத்துள்ளார். இது நவீன தேசியத்துக்கான ஓர் விவாதத்தை உருவாக்குமா?
தமிழ்த் தேசியத்தை பொறுத்தவரை, இன்று அதனை கேள்விகளுக்கோ, அல்லது விசாரணைகளுக்கோ இட்டு செல்ல முடியாதுள்ளது. மரணம் வரவேற்கப்படவேண்டிய் ஓர் கலையாக, வாழ்வாக, இயல்பாக மாறப்பட்டுவிட்டது. எனவே இங்கு புதிய தேசியத்துக்கான எந்த கருத்தாடல்களையும் முன்வைக்க முடியாது. நாம் சார்ந்திருக்கும் நிலை சார்ந்து இயங்குகின்றோம்.. இது ஓர் வகையில் எமது அக உணர்வுகளின் வெளிப்பாடாகும். இதனால்தான் கொலைகளையும் எந்த வித விசாரணையும் இன்றி ஏற்றுக்கொள்கின்றோம். எமது அறிவுசார் கற்பிதங்கள் புத்தகங்களில் மாத்திரமே. திருநீறு அணிந்து, கூர்ப்பை போதித்தவர்கள் எமது ஆசிரியர்கள். சாதிகள் இல்லையடி பாப்பா எனக் கூறி சாதிக் கொலை புரிந்தவர்கள். எனவே எம்மிடம் எமது குற்றங்களுக்கான விசாரணைகளை படைப்புக்களாக எதிர்பார்க்க
முடியாது.
தமிழ் தேசியம் பற்றி, இந்திய தமிழ் படைப்பாளிகளை விட, எமது படைப்பாளிகளை விட சிங்கள படைப்பாளிகளே அக்கறை காட்டியுள்ளார்கள். சர்வதேசத்துக்கு எமது நிலையை சொல்லும் வல்லமை பெற்றவை. இந்திய படைப்பாளிகளின் வியாபாரத் தன்மையே இப்படத்தை ரொரன்ரோவில் விநியோகிப்பதிலும் கையாளப்பட்டுள்ளது. ஏனோ தானோவாக, பத்தோடு, பத்தாக ரொரண்ரோ கடைகளில் விற்கப்படுகின்றன. இதனால் இப்படத்துக்கான முக்கியத்துவம் இழக்கப்படுகின்றது. கலையை வியாபாரமாக, தமது வாழ்விற்காக பயன்படுத்துவர்களின் திருவிளையாடல் இது. எது எப்படியிருப்பினும், மக்கள் மத்தியில் இப்படம் சென்றடையவேண்டும.;. இப்படத்தை 2 டொலர்களுக்கு பெரும்பாலான ரொரண்ரோ கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். .
2. ஜூலை 2007 இதழ் 91 - நான் நீ அவர்கள். ((Me You Them - Eu Tu Eles) போர்த்துக்கீஸ் பிரேசில்! - ரதன் (கனடா) -
சில மாதங்களின் முன் உங்களில் பலர் காதலர் தினத்தை கொண்டாடியிருப்பீர்கள். இது ஓர் காதலர் தின படமல்ல. பெண்ணியப்படமுமல்ல. இது ஓர் வாழ்க்கை. பிரேசிலின் வட மேற்குப்பிரதேசத்தில் ஓர் குக் கிராமம். Darlene தாயின் செத்த வீட்டிற்கு கிராமத்திற்கு வருகின்றாள். வயிற்றில் கருவுடன் கிராமத்தை விட்டுச் சென்ற னுயசடநநெஇ மீண்டும் வயிற்றில் கருவுடன், கையில் சிறுவனுடன் தாயின் முகத்தை இறுதியாக சந்திக்க வருகின்றாள். அவளது வறுமை, அவளுக்கு ஒசியஸ் சுடன் திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கின்றது. திருமணம் ஓர் ஒப்பந்தம். வெகு இலகுவானது. ஒசியஸ் தங்குவதற்கு வீடு தருகின்றான். டார்லின், ஓசியஸ்ற்கு சமைத்து போடவேண்டும்.. ஓசியஸ் வயது முதிர்ந்தவன். ஆடு மேய்ப்பவன். பிள்ளை பிறக்கின்றது. பிள்ளை கருப்பு நிறம். ஊட்டச் சத்து குறைவு என கருத்துக் கூறுகின்றாள். ஆனாலும் கருப்பு நிறம் நிரந்தரமாகிவிடுகின்றது. இவர்களது வீட்டில் தங்க, தனது வீட்டால் கலைக்கப்பட்ட, ஓசியஸின் ஒன்று விட்ட உறவினன் சிசின்கோ (Zezinho) வருகின்றான். இவனும் ஓசியஸின் வயதை ஒத்தவன். இவனுக்கும் டாhலினுக்கும் உறவு ஏற்படுகின்றது. டார்லின் மீண்டும் கர்ப்பமாகின்றாள். டார்லின் கரும்புத் தோட்டத்திற்கு வேலைக்கு செல்கின்றாள். மூன்றாவது பிள்ளை பிறக்கின்றது. சிசின்கோ நன்றாக சமைப்பான். இதனால் ஒசியஸ் எதுவும் கூறவில்லை. மீண்டும் கரும்புத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லும் டார்லின், இளைஞனான சைரோ வைச் சந்திக்கின்றாள். அவளது வீட்டில் தங்க வைக்கின்றாள். இவர்களுக்கு உறவு ஏற்பட்டு, மற்றொரு பிளளை பிறக்கின்றது. இப்பொழுது மூன்று கணவன்கள். நான்கு பிள்ளைகள் ஒரே வீட்மல். ஒரு நாள் காலை, புதிதாக பிறந்த பிள்ளையும், ஏனைய பிள்ளைகளையும் காணவில்லை. தேடிக்கொணடிருந்த பொழுது ஓசியஸ் இந்தப் பிள்ளைகளுடன் வந்து கொண்டிருக்கின்றான். ஓசியஸ் ஒரு பத்திரத்தை டார்லினிடம் நீட்டுகின்றான். அது பிள்ளைகளின் பிறப்பு அத்தாட்சி பத்திரம். அந்த பிள்ளைகள் அனைத்தும் தனது பிள்ளைகள் என ஓசியஸ் அதில் பதிந்துள்ளான்.
இது உண்மைக்கதையை மையமாகக் கொண்டது. இந்த லத்தீன் அமெரிக்கப் படத்துக்கான திரைக்கதையை Elena Soarez என்ற பெண் எழுதியிருந்தார். சில வருடங்களுக்கு முன்னர் ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழாவில் இப்படம் திரையிட்ட போது பல மேற்கத்திய விமர்சகர்கள், இப்படம் படமாக்கப்பட்ட முறைக்காக பாராட்டினார்கள். திரைக் கதையை பெரிதாக வரவேற்கவிலலை. காரணம் மூன்று கணவன்மார். மேற்கத்திய முற்போக்கு கலாச்சாரம் என்று கூறிய போதும் இவர்கள் பெண்கள் விடயத்தில் பிற்போக்கானவர்களே.
இபபடத்திலும்; ஆணாதிக்க வெளிப்பாடுகள் சிறப்பாக வெளிப்படுகின்றன. ஆணாதிக்க சமுதாயத்தில் வளர்ந்த ஓசியஸ், தனது மனைவயின் உறவுகளை அங்கீகரிப்பதன் காரணம் என்ன? முதலில் டார்லினை வயிற்றில் கருவுடனும், கையில் குழந்தையுடனும் ஏற்றுக் கொள்கின்றான். தனது வீடு அவளது வீடு எனக் கூறுகின்றான். பின்னர் அதன் விளக்கத்தை கூறுகின்றான் “நீ எனக்கு சொந்தமானவள், எனவே உனது வீடும் என்னுடையதே”. சைரோ வீட்டினுள் வரும் பொழுது, ஓசியஸ் அழுத்தமாக கூறுகின்றான் “இது எனது வீடு, இவள் எனது மனைவி”. இவ்வளவு அழுத்தமுள்ள பாத்திரம், இறுதியாக தனது ஆணாதிக்க வெளிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது. சகல பிள்ளைகளையும் தனது பிள்ளைகளாக பதிவு செய்வதன் மூலம். இது தியாகமாக வெளிப்படலாம், ஆனால் உண்மையில் இதுவும் ஓர் ஆணாதிக்க வெளிப்பாடே. அனைத்தும் எனக்கே சொந்தம். கதாசிரியர், இவற்றையெல்லாம் மீறி டார்லினை தனது மூன்று கணவன்மாருடனும் தொடர்ந்து சேர்ந்து வாழவைக்கின்றார்.
பாலச்சந்தர் தனது படங்களில் மரபை மீறிய உறவுகளை காட்டிவிட்டு, மரபு கலாச்சாரம் மிக முக்கியமானது எனக் கூறி, இந்த உறவுகளை உடைத்துவிடுவார். மிக அண்மையில் வெளி வந்த “ பச்சைக்கிளி முத்துச்சரம்” என்ற படத்தில் வேறு பெண்ணுடன், கணவனுக்கு ஏற்படும் நட்புக்கு, சுகயீனமுற்ற பிள்ளைக்காக உடலுறவை மறுத்த மனைவி காரணம் எனக் காரணம் காட்டப்படுகின்றது. இவ்வாறு பெண்கள் மீது மரபையும் கலாச்சாரத்தையும் திணிக்கின்றார்கள் படைப்பாளிகள். ஜெயகாந்தன் “சினிமாக்குப் போன சித்தாளு” வில் பிரபல நடிகனை நினைத்து உறவுகொள்ளும் மனைவியைப்பற்றி கூறுகின்றார். எத்தனை கணவன்மார் நடிகைகளை நினைத்து மனைவிகளுடன் உறவு கொள்கின்றனர் அதனைப்பற்றிய பதிவு எதுவும் இல்லை
தர்மசிறி பண்டாரநாயக்கவின் “சுத்திலாகே கத்தாவ” (சுத்தியின் கதை) என்ற படத்தில் கணவன் சிறைக்குச் சென்ற பின்னர் தனது வயிற்றை நிரப்ப வேறு ஆண்களுடன் உறவு கொள்கினறாள் சுத்தி, பின்னால் தனது கணவனாலேயே கொலை செய்யப்படுகின்றாள். பிரசன்ன விதானகேயின் பௌரு வலலு படத்தில் வயலிட்டின் முதல் மகள் திருமணமாகி விடுகின்றாள், மற்றவளுக்கு திருமண வயது. இந்நிலையில் தனது முன்னால் காதலனுடன் உறவு ஏற்பட்டு வயிற்றில் கருவைச் சுமக்கும் வயலட், தனது கரு பாவத்தின் சுமை என நினைக்கும் அளவிற்கு, சமுதாயம் அவளை விமர்சிக்கின்றது. பிரசன்னா சமூகத்தை எள்ளி நகையாடுகின்றார். அபர்ணா சென் தனது பரோமா படத்தில் தனது காதலுனுக்காக காத்திருக்கும் மனைவியைக் காட்டுகின்றார். அபர்ணா பெண் படைப்பாளி. அதனால் பெண் மீதான அக்கறையுடனும் துணிச்சலுடனும் பரோமாவை படைத்துள்ளார். பிரசன்னா மிக வித்தியாசமான படைப்பாளி, துணிச்சலுடன் சமூகத்தை விமர்சித்துள்ளார்.
இங்கும் டார்லினின் வாழ்க்கை நேரடியாக காட்டப்படுகின்றது. எதுவும் ஒளித்து வைக்கப்படவில்லை. டார்லினுக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை. இயல்பாகவே உள்ளாள். சிசின்கோ விடம் (இரண்டாவது கணவன்) சென்று சைரோ தங்குவதற்கு அறை கட்டி தருமாறு கேட்கின்றாள். அத்துடன் தனக்கும் சைரோவுக்கும் உள்ள உறவைப்பற்றியும் கூறுகின்றாள். பார்வையாளரிடம் இந்த தன்மை உணர்வு வெகு யதார்த்தமாக கொண்டு செல்லப்படுகின்றது. இது ஓர் பெண் கதாசிரியரால் தான் முடியும். அவளது பாத்திரக் கூறுகள் முக்கியமானவை. திருமணம் தனது வறுமைக்கே. குறிப்பாக தனது இரு கருக்களுக்காக. பின்னால் குடும்பத்துக்காக உழைக்கின்றாள். பின்னர், தனது புதிய கணவனுக்காக தங்குவதற்கு இடமும் குடும்பமும் ஏற்படுத்துகின்றாள். இவள் ஓர் சுமை தாங்கியாக செயற்படுகின்றாள். ஒவ்வொரு கணவனிடமும் ஒவ்வொன்று உண்டு ஒருவனிடம் காசு, மற்றவனிடம் பாசம், உழைப்பு, மற்றவனிடம் நவீனத்துவம். டார்லின் ஓசியஸ் எனது கணவன் என அழுத்திக் கூறுகின்றாள். ஓசியஸ் அவளுக்கு சொந்தமானவன். அதே போல் தனது மற்றைய இரு கணவன்மாருக்கும் “குஞ்சை அடை காப்பது போல்” தனது மற்றைய இரு கணவன்மாரையும் காக்கின்றாள். மீண்டும் தாய்வழி சமுதாய முறைக்கு சென்று விட்டோம் என நினைக்கத் தோன்றுகிறது. வெகு தூரத்தில் இல்லை தாய்வழி சமுதாய முறை.
டார்லினாக நடித்த சுநபiயெ ஊயளé பிரேசிலின் பிரபல அழகி. படத்தில் அவரது அழகை பார்க்க முடியாது. அவரது சுமையைத்தான் பார்க்க முடியும். அவளது மன அழுத்தங்களின் வித்தியாசமான பரிமாணங்களைத்தான் காணலாம். படத்தின் மையமாக இவர் இருந்த பொழுதிலும், இவர் படைப்பு எந்த வணிக தன்மைகளையும் கொண்டிருக்கவில்லை.
லத்தீன் அமெரிக்க படங்கள் இன்று உலகின் சிறந்த படங்களுக்கு வழிகாட்டி. தனி நபர், சமூக மரபுகள், ஒழுக்கங்கள் மீதான விமர்சனங்களை விமர்சிக்கின்றன. கேள்வி கேட்கின்றன. ஆண்களின் உடல் உறவுக்கும், அதிகாரத்துக்குமான தொடர்புகள், அரசியவ் சக்திகளுக்கு சமூகத்தின் மீதான அக்கறை போன்றவற்றின் மீதான தொடர்ச்சியான விமர்சனங்கள், எதிர்-முரண் நிலை மீதான கருத்தியல்கள்.குற்ற உணர்வுகள் மிதான பார்வைகள் இவற்றையெல்லாம் தாங்கி படைப்புக்கள் வெளிவருகின்றன. இந்த விமர்சனவியலே இன்றைய சினிமாவின் தேவை.
இறுதியாக இப்படத்தின் இயக்குனர் Andrucha Waddington டம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்யிக்கு அவர் அளித்த பதில் இது. If you were given $10 million to be used for moviemaking, how would you spend it? First I would need a great script and then the money.
இதுவே இப்படத்தின் சிறப்புக்கு காரணம்.
3. மே 2008 இதழ் 101 நாயைப் போல் எனது வாழ்க்கை - My life as a dog! - ரதன் -
தனி தாய்மாரது வாழ்க்கை பல கடினங்களைக் கொண்டது. தந்தை-கணவன் அற்ற இவர்களது வாழ்க்கை பணத்திற்கு அப்பால் பள்ளங்களைக் கொண்டது. எங்களது சமூகத்தில் தனித் தாய்மாரை பல சமயங்களில் பணம் காய்க்கும் மரமாக பார்ப்போர் அதிகம். ஏனெனில் சமூகக் கொடுப்பணவுகள் அதிகம். இதற்காகவே சேர்ந்து வாழும் குடும்பங்களும்இ பிரிந்து வாழ்வதாக காட்டிக் கொள்வது இன்று எமது சமூகத்தில் இயல்பு வாழ்வாக மாறிவிட்டது. பொதுவாக போரின் பின்னால் பல சமூக கொடூரங்களை இயல்பாக ஏற்றுக் கொண்டுவிட்டோம். வங்கிக் கொள்ளைகள் போருக்காக என்ற சமாதானத்துடன் தொடங்கி, இன்று கிரடிட் காட்இ வங்கி அட்டைகள் கொள்ளை என்பனவற்றையும், எமது இயல்பு வாழ்விற்கான காரணிகளாக ஏற்றுக் கொண்டு விட்டோம். இவற்றிக்கான எதிர் நிலைகளை இது வரை நாம் வெளிப்படுத்தவில்லை. இதன் வெளிப்பாடு எமது அடுத்த சந்ததியையே சென்றடைகின்றது. அவர்கள் தான் இதன் பலாபலன்களை அனுபவிக்கின்றார்கள். வட அமெரிக்காவில் குற்றம் புரியும் இளைஞர்கள்இ இளைஞிகளில் குறிப்பிடத்தக்க விகிதத்தினர் தனித் தாய்மார்களால் வளர்க்கப்பட்டவர்கள் என்ற கருத்து நிலைக்கு சாதகமான சூழலே இன்றுள்ளது. இவ்வாறான இச்சூழலில் தனித்தாயால் வளர்க்கப்படும் இரு சிறுவர்களைப் பற்றிய சுவீடன் நாட்டுப் படமே “நாயைப் போல் எனது வாழ்க்கை”. 1987 ல் வெளிவந்த இப்படம் உலக சினிமாவில் குறிப்பிடத்தக்க படம். இதனை சிறுவர்களுக்கான பிரச்சினையாக பார்க்காது ஓர் சீரிய பிரச்சினையாக இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இரயில் தனித்துப் பயணிக்கும் இக்மரின் கேள்விகள் எல்லாம் “சந்திர மண்டலத்திற்குஇ தனித்து அனுப்பப்பட்ட நாயைப்பற்றியது. நாயின் அனுமதியின்றி போதிய உணவின்றி நாயை அனுப்பியுள்ளார்கள்” . இவன் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கின்றான்? அவனது நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன..
தந்தை வாழைப்பழ ஏற்றுமதி வியாபாரி. கப்பலில் வாழ்க்கை. இவர்களுடன் இல்லை. பிர்ந்து சென்று விட்டார். தாய் இக்மரையும், அவனது அண்ணணையும் வளர்க்கின்றார். இயல்பான குறும்புகள். ஒரு தடவை தனது நண்பர்களுக்கு பிள்ளை உருவாக்கம் பற்றி விளக்கமளித்துக் கொண்டிருக்கும் அண்ணனின் பரிசோதனைக் கருவியாக, இக்மர் செயல்பட போத்தலை தனது ஆண் குறிக்குள் புகுத்தி போத்தலை வெளியே எடுக்க முடியாமல் திணற, தாயால் காப்பாற்றப்படுகின்றான். தாய்க்கும் இவனுக்குமான நெருக்கம் அதிகம். தாய்க்கு கச நோய் வந்துவிடுகின்றது. தாய்க்கு ஓய்வும் அமைதியும் அவசியம். தாய் தனது இரு பிள்ளைகளையும் திசைக்கு ஒன்றாக, இக்மரை தனது ஒரு சகோதரனிடமும், எரிக்கை மற்றொரு உறவினரிடமும் அனுப்புகின்றாள். இக்மரின் புது வாழ்வு ஆரம்பம் சிறப்பானது. புது உறவு, நம்பிக்கை உற்சாகம் தருகின்றது.
தாயைப் பார்ப்பதற்கு திரும்புகின்றனர் சகோதரர்கள். தாயுடன் இருந்த ஒரு சில நாட்களிலேயே தாய்க்கு நோய் முற்றிவிடுகின்றது. வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றாள். தாயை வைத்தியசாலையில் பார்க்கும் இக்மர் கிறிஸமசுக்கு என்ன வேண்டும் எனக் கேட்கின்றான். அவனுக்கு தாய் மரணத்தை நோக்கி செல்வது தெரியாது. மீண்டும் சகோதரர்கள் பிரிந்து செல்கின்றனர். இப்பொழுது இக்மருக்கு புதிய பிரச்சினைனகள். இகமர் தங்கியிருந்த மாமாவின் வீடு, மாமாவின் தொழிற்சாலைக்கு சொந்தமானது. அங்கு வேறு தொழிற்சாலை விருந்தினர்கள் தங்கியிருக்கின்றனர். பகலில் மாமாவுடனும், இரவில் மாமியின் தாய் தங்கியிருக்கும் சிறு வீட்டிற்குமாக அழைகின்றான். மாமா தங்கியிருந்த வீட்டு பின் புறத்தில் நாய்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட வீடு ஒன்றுள்ளது. இப்பொழுது இக்மரின் புது வீடாக அது மாறிவிட்டது. ஒரு நாயைப் போல் அவனது வாழ்வும் அந்தரத்தில் தொங்குகின்றது. எதுவும் நிரந்தரமற்று அழைகின்றான். தாயின் இறப்புச் செய்தி அவனை உழுக்கிவிடுகின்றது. இப்பொழுது முதன் முறையாக தாயின் இழப்பின் கொடூரத்தை உணர்கின்றான். தாயுடன் கழித்த காலங்களை நினைத்துப் பார்க்கின்றான். அவனது நினைவுகளில் வெளிப்படுவது, “தாயை தான் கொடுமைப்படுத்திவிட்டேனோ” என்பது. நினைவுகள் பசுமைக்குப் பதிலாக கேள்விகளையே எழுப்புகின்றன. எனது வாழ்வு எப்படிப்பட்டது.? சந்திரமண்டலத்திற்கு செல்லும் நாயுடன் ஒப்பிட்டு சமாதானம் காண்கின்றான். இப் படத்தின் கதை 1950களை மையமாகக் கொண்டது. 57ல் சோவியத் யனியன் லைக்கா என்ற நாயை ஸ்புடினிக் என்ற விண்கலத்தில் அனுப்பியது.
படம் இக்மரின் வாழ்வு ஒரு நிரந்தரமற்ற வாழ்க்கையுடன், அவனது வயதில் ஏற்படும் பருவ மாற்றங்களுக்கான தேடலையும், அது ஜரோப்பிய சூழலில் பெரியோரால் மாசுபடுத்தப்பட்ட பிம்பங்களாக இச் சிறுவர்களை சென்றடவதையும் பதிவு செய்துள்ளது. மிக முக்கியமான விடயம் படமாக்கப்பட்ட முறை பார்வையாளர்களையோ இப் படத்தை பார்க்கும் சிறுவர்களையோ பரவசப்படுத்தவோ, உணர்வுகளை தூண்டும் விதத்திலோ படமாக்காப்டவில்லை. இது தளத்திலும்இ இந்திய தளத்திலும் இருந்து மாறுபட்டுள்ளது. தேவையற்ற குளோசப் காட்சிகள் இல்லை. பாத்திரங்களுக்கும், சூழலுக்குமான இடைவெளி மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்ட்டுள்ளது. இது காட்சிகள் மீதான பார்வையாளார்களுக்கான நெருக்கத்தை அதிகரித்துள்ளது.
இக்மரின் தாய் புத்தகங்களுக்குள் தனது நோயை மறைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார். நீண்ட வாசிப்பு அனுபவம் கொண்டவர். நோயின் உச்சத்தில் தாயின் புத்தகங்களை தட்டும் இக்மருக்கு கிடைப்பதெல்லாம் தூசியே. மற்றொரு காட்சியில் தாயின் கட்டிலில், தாய் புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருப்பார். இக்மர் கட்டிலில் குத்துக் கரணம் அடித்துக் கொண்டிருப்பார். இயல்பான காட்சிப் படிமங்கள். இக்மரின் உளவியலையும்இ தாயின் அக உளைச்சலையும் அழகாக பதிவுசெய்துள்ளது. படம் 50 களில் உள்ள சுவீடன் புற நகர்ஊடாக பயணிக்கின்றது. உதைபந்தாட்ட வீரர்கள், தொழிற்சாலை, நிர்வாண மொடல்கள், குளிரில் நீந்துபவர்கள் என்ற மத்திய வர்க்க சமூகத்திற் ஊடாக இக்மரை காவிச் செல்கின்றது. இங்கு தான் இக்மர், தான் ஓர் அனாதையாக்கப்பட்டவன் என்பதை தெரிந்து கொள்கின்றான். அதனை உணர்கின்றான். அதே சமூகத்தில் தான் மரணத்தின் விளைவுகளையும், செக்சின் பரிமாணங்களையும் கற்றுக் கொள்கின்றான். லைலா நாயுடன் தன்னை ஒப்பிட்டு அமைதி காணும் இக்மர், நாய்க்கும், தனக்குமான சுதந்திரம் ஒன்று தான் என்பதன கண்டு கொள்கின்றான். சிறுவர்களிடம் அவர்களது விருப்பு வெறுப்புக்களை நாம் கேட்பதில்லை.
80களில் வெளிவந்த பாலுமகேந்திராவின் “அழியாத கோலங்கள்” என்ற படமும் பரதனின் ரதிநிர்வேதம் படமும் சிறுவர்களின் செக்ஸ் தேடலை பதிவு செய்துள்ளது இப் படத்தை பார்த்த பின்னர் பாலுவின் படத்தை மீண்டும் விடியோவில் பார்த்த பொழுது. பாலு செக்சினால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள் பார்வையாளர்களிடம் தோன்றவேண்டும் என்ற நோக்கத்துடனேயே காட்சிகளை பதிவு செய்துள்ளார். இதனை ஒரு வியாபாரயுக்தியாகவே பார்க்கக்கூடியதாகவுள்ளது. பாலுவிடம் சமூக நோக்கம் இல்லை என்று கூறவில்லை. ஆனால் அது வெளிப்படுத்தப்படவில்லை. இக்மருக்கு தனது மாமாவின் தொழிற்சாலையில் வேலை பார்க்கும், அதேசமயம் பகுதி நேர நிர்வாண மொடலின் நட்புக்கிடைக்கின்றது. அப் பெண்மணி மொடலாக வேலை செய்யும் இடத்திற்கும் செல்கின்றான். அவன் தள்ளியே வைக்கப்பட்டுள்ளான். ஒரு மனித உந்தலில் கூரையுடாக பார்க்க முற்படுகின்றான். கீழே விழுந்து காயங்களுக்குள்ளாகின்றான். மொடலின் உடல் காட்டப்பட்டவில்லை. வெகு தூரத்தில் இருந்து அவளது வெளிப்பிம்மம் ஒரு மெழுகுச் சிலையின் வெளிக் கோடுகள் போலவே காட்டப்படுகின்றன. இவ்வாறான காட்சிகளை தமிழ்த்திரைப்படமோ, Hollywood எடுத்திருந்தால் வேறுவிதமான விளைவுகளை நுகர்வோர் மீது ஏற்படுத்தியிருப்பார்கள்.
படத்தில் இறுதி வரை அவர்களது தந்தை காட்டப்படவில்லை. இப்படத்தின் மூல நூலில் தந்தை பற்றிய குறிப்புக்கள் இறுதியில் உள்ளன. ஆனால் இயக்குனர் நூலின் தழுவலாகவே இதனை பதிவு செய்துள்ளார். தந்தைகள், ஆண்களுக்கும் குடும்பத்துக்குமான உறவுகள் மீதான விமர்சனமாகவே தான் இதனை கருதுவதாக இயக்குனர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இன்றைய குடும்பத்தில் ஆண்கள் ஓர் காட்சிப் பொருளாகவே காணப்படுகின்றனர். ஆண்கள் குடும்பத்தை ஒரு சமூக அந்தஸ்துக்குரிய பொருளாகவும், பாலியல் தேவைக்குரிய பொருளாகவுமே கொள்கின்றனர். இது ஜமேக்காவில் இருந்து யாழ்ப்பாணம் வரை வேறுபடவில்லை.
படத்தின் இறுதியில் இக்மர் “Why did you not want me, Mama?” எனக் கேட்டு தலையணையுள் முகம் புதைத்து அழுகின்றான். இது மிகவும் பயங்கரமான கேள்வி. இக்மரின் அகத் தேடலில் மரணம் பற்றிய கருத்துக்களுடன், இயக்குனரும் இந்த கேள்வியை எமது அகத்திலும் தேடவைக்கின்றார். விடை இலகுவானது எனினும், அது எழுப்பியுள்ள பாதிப்புக்கள் அதிகம். இதனால் தான் இப் படம் இதுவரை வெளிவந்த சிறுவர் பற்றிய படங்களில் மிக முக்கியமானது என விமர்சகர்கள் கருதுகின்றனர். இப் படத்துக்காக இயக்குனர் Lasse Hallstromக்கு ஒஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. Anton Glanzelius இக்மராக சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தின் மூல நூல் Mitt Liv Som Hund - My Life as a Dog இதனை எழுதியிருப்பவர் Reidar Jonsson. ஒரு குழந்தைப் பருவத்தின் கொடுமையான
நினைவுகளின் இயல்பான பதிவு இது.
raguragu100@hotmail.com, rathan@rogers.com
Subscribe to:
Post Comments (Atom)
'பதிவு'களில் அன்று - எழுத்தாளர் ரதனின் சினிமா விமர்சனக் குறிப்புகள்!
- எழுத்தாளர் ரதன் - [பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவ...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
No comments:
Post a Comment