Tuesday, September 16, 2025

'பதிவுக'ளில் அன்று - 'பெரியார்' வருகிறார்! & கலைப்படம் - தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம்! - தாஜ் (சீர்காழி) -


[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ] 

ஏப்ரில் 2007 இதழ் 88
'பெரியார்' வருகிறார்!

- தாஜ் (சீர்காழி) -
'பெரியார்' வருகிறார். சினிமாக்கோலமாக. பெரியாருக்கு நமது சினிமா ஆகாது. ஆனாலும் அதற்குள்தான் இன்றைக்கு அவரை வரவழைக்கிறார்கள். நமது சினிமாவின் போக்கில் முகம் சிவந்து, கடுமையாக அவர் சாடிய சாடலெல்லாம் இன்னும் அப்படியே பதிவாக இருக்கிறது. அன்றைக்கு அவருடன் இருந்தவர்கள் சிலர் தமிழ்ச்சினிமாவில் ஈடுபாடு கொண்டிருந்த போதும் தனது கருத்தை அவர் மாற்றிக் கொண்டவரில்லை. சமூகத்தை மடமையில் ஆழ்த்தும் முதன்மைகளில் ஒன்றாகவே அதை அவர் பார்த்தார். பக்தி, மூடத்தனம், விடாப்பிடியான பழமை, பெண்ணடிமைத்தனம், வெளிப்படையான இனக்கவர்ச்சி என்பனவைகள் நம் சினிமாவில் மலிந்து கிடந்ததில் முகம் சுழித்தவரவர். தமிழ்த் திரைப்படம் ஒன்றின்100வது நாள் விழாவிற்கு அவரை கலந்துக்கொள்ளவைக்க வற்புறுத்தி அழைத்து வந்தபோது, தமிழ்த் திரைப்படங்களினால் ஏற்படும் சமூகப் பாதிப்புகளையும், அதன் முரண்களையும் ஒளிமறைவில்லாமல் அந்த மேடையிலேயே பேசினவரவர்.

இன்னொருப் பக்கம் சமூக இழுக்குகளை சாடிய முற்போக்கான நாடகங்களுக்கு தடையில்லாமல் பலமுறை தலைமை ஏற்றிருக்கிறார், பலவற்றைப் பாராட்டியும் இருக்கிறார். அதில் நடித்த சில நடிகர்களுக்கு பட்டங்கள்கூட தந்திருக்கிறார். மேடை ஊடகங்கள் என்கிறவகையில் நாடகமும், சினிமாவும் ஒன்றின் இரண்டுப்பக்கங்களே. அந்த வகையில் பார்த்தால், முற்போக்கான அந்த மேடைநாடகங்கள் மாதிரி நமது சினிமாவும், மூடத்தனங்களிலிருந்து நம் மக்கள் விடுப்பட உதவக்கூடியதாக இருந்திருக்கும் பட்சம் அதை அவர் பாராட்டவே செய்திருப்பார்.

திரைப்படத்தில் பெரியார் என்பது புதிய செய்தியல்ல! 'இயக்குனர் ஞானசேகரின் பெரியார்' என்பதுதான் புதிய செய்தி. நடிகை ஜெயதேவியும், இயக்குனர் பிரபாகரனும் பெரியாரை திரையேற்றிக் காட்டியிருக்கிறார்கள். பெரியாருடைய பல்வேறு கருத்தாக்க ங்களைக்கூட கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தொடங்கி, இன்றைய சத்தியராஜ், மணிவண்ணன், விவேக் வரையிலான பல கலைஞர்கள் திரையில் மக்கள் வரவேற்புடன் வெளிப்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். கூட அந்தப் பட்டியலில் இருந்திருக்கிறார். நடிகர்வேல் எம்.ஆர்.ராதா அந்தவகையில் திரையில் புரட்சி செய்தவராக அறியப்படுகிறார். ஆனால் இந்த சமூகம் அவ்வளவையும் ரசித்து, சிரித்து, உள்வாங்கி ஜீரணித்துவிட்டு தன்போக்கில்தான் போய்கொண்டிருக் கிறது. 'இந்த' மகத்துவம் பொருந்தியச் சமூகத்திற்காகத்தான் இன்றைக்கு இந்த 'பெரியார்' படம்! நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.என் மாதிரியே பெரியாரின் பெரும்பான்மையான கருத்துகளில் மதிப்புக்கொண்ட என் நண்பர் ஒருவரிடம் 'பெரியார்' திரைப்படம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, ஞானசேகரின் திறமையின்மீது அபார நம்பிக்கைக் கொண்டவராகவே பேசினார்.'காந்தி' இய க்கிய ரிச்சட் அட்டன்பாரோ 'ரேன்ஞ்'ஜுக்கு அவரை பார்க்கிறமாதிரி தெரிந்தது. 'காந்தி' படத்தை நண்பர் பார்த்திருக்கக்கூடும். ஆனால் 'காந்தியில்' ரிச்சட் அட்டன் பாரோவை பார்த்திருப்பாரா? சந்தேகம்தான்.

ஞானசேகரின் முந்தையை மூன்றுப்படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். நம் திரைப்பட இயக்குனர்களுக்குள் கவனம் கொள் ளத்தக்கவர் என்பதில் உடன்பாடு உண்டு. அவருடைய 'முகம்' தமிழ்த் திரையில் அதுவரை காணாத முகம்தான். மேஜிக்கல் ரியலிஸத் தன்மைக் கொண்டப் பின்னல் அது. அதன் பிரமாண்ட தோல்வியினால், அவரே கூட இனியொருத்தரம் அப்படியொரு திரைப் படத்தை எடுக்க முனையமாட்டார். அவரது மற்றைய இரண்டுப் படங்களான மோகமுள்ளும், பாரதியும் பாராட்டவேண் டிய சாதனை வடிவங்கள். சந்தேகமில்லை.

திரு.ஜானகிராமனின் படைப்பான 'மோகமுள்' நாவலை, திரைக்கதையாக மாற்றியபோது ஞானசேகரன் அதிகம் சிரமம்பட்டிருக்க மாட்டார். பாலின மையமும், இசைப் பிரவாகமும் அந்த நாவலின் அடித்தளமாகிப்போனதினால், தமிழ்த் திரைப்படத்திற்கேற்ற சட்டைத் தைக்க அதுவே அனுகூலமாகக் கூடிவந்திருக்கும். ஆனால். 'பாரதி' படத்திற்கான திரைக்கதைக்கு அவர் அதிகம் அவஸ்த்தைப் பட்டிருப்பார். அந்தப்படத்தைப் பார்த்தபோதும் அப்படித்தான் உணர்ந்தேன். என்றாலும் கவிதையும், இசையும் 'பாரதி' திரைக்கதைக்கு ஓரளவிற்கு ஒத்திசைவாய் கூடிவந்திருக்கும்.

பெரியார்...பெரியாரின் எரிமலையான வரலாற்றை தமிழ் திரைப்படத்திற்கேற்ற சட்டையாகத்தைக்க இயக்குனருக்கு எந்தஅனுகூலமும் கிட்ட வாய்ப்பே இல்லை. என்றாலும் இன்றைக்கு பெரியார் படத்தின் பாடலொன 'இசை நயம்கூடியப் பாடல்களைக் கேட்கிறோம்! அந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள நடனக்காட்சிகளின் 'ஸ்டில்'களைக்கூடப் பார்க்கிறோம். இதெல்லாம் 'பெரியார்' திரைப்படத்தில் எந்த ரூபத்தில் திணிக்கப்பட்டிருக்கிறது என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. பெரியாரின் இளமைக்காலப் பரிமாணத்தில் இதற்கெல்லாம் இடமிருந்தது என்றாலும், 'பெரியாரை' இன்னொரு வியாபாரத் தமிழ்ப்படத்தின் வரம்புக்குள் கொண்டு வந்திருப்பதில், ஞானசேகரன் தன் அடையாளம் குறித்து தனித்து பெருமைப்பட முடியுமா? இந்தப் படத்திற்கும் தமிழ்த் திரைப்படத்திற் கேர்ப்ப திரைக்கதைச் சட்டையை அப்படி இப்படியென்கிற அளவில் தைக்க முனைந்திருப்பார்கள் என்றால்.... நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் அதையொட்டிய முரண்கள் நெருடவேச் செய்யும்.

Lion of the Desert / The Message போன்ற புரட்சி நாயகர்களின் படங்களை இயக்கிய 'முஸ்த்தஃபா அக்காட்'க்கு இப்படி சட்டைத் தைக்கும் தொல்லை இல்லாமல் போனதால்தான் அவரால் அப்படியொரு பிரமாண்டமான நிஜத்தை நிஜமாகவே சொல்ல முடிந்தது.

சென்ற மாத சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தபோது, அங்கே அன்றைக்கு நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு திரு.சத்தியராஜை வந்திருந்தார். அங்கேவைத்து அவரிடம் பேசமுடிந்தது. பேசியபோது 'பெரியார்' திரைப்படம் குறித்து மிகவும் திருப்திகரம் தெரிவித்தார். அந்தப்படத்தில் பங்கெடுத்துக் கொண்டதில் அவருக்கு ஏகத்திற்கும் சந்தேஷம்.

"தந்தைப் பெரியார் ஒரு நாய் வளர்த்தாரே... படத்தில் அதையெல்லாம் காட்டியிருக்கிறார்களா?" என்று ஒருவர் கேட்டார். "சீட்டா... சீட்டா......." என்றுவிட்டு, சீட்டா என்றப் பெயர்கொண்ட அந்த நாய் படத்தின் ஒரு காட்சியில் வருகிறது என்றார். மேடை யில் அவர் பேசியப் போது, "இந்தப் படத்தில் நடித்ததினால் எனக்கு பல திக்கில் இருந்தும் பாராட்டுதல்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறது" என்றார். பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் ஒருவர் மேடையருகில் வந்து, வள்ளலார் ராமலிங்க அடிகளாராக அடுத்து நீங்கள் நடிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். சத்தியராஜும் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டவராகத் தனது பேசைத் தொடர்ந்தார். என் மனக்கண்ணில், தலைவழிய வெள்ளை முக்காடுப் போற்றிக்கொண்டு, ஏழடி உயரத்திற்கு ஒரு பெரியவர் திரும்பத் திரும்ப "அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை" சொல்லிக்கொண்டிருந்தார்.

புதிய பார்வை இதழ்க்கு பேட்டி தந்திருக்கும் ஞானசேகரனும் தனது 'பெரியார்' படம் குறித்து திருப்தியையே தெரிவித்திருக்கிறார். அந்தப் படத்திற்காக, பெரியார் சம்மந்தப்பட்ட எழுத்திலிருந்து அவர் சேகரித்தக் குறிப்புகளை வைத்து பெரியார் பற்றி 10 படம் எடுக்கலாம் என்றிருக்கிறார். இன்னொரு பதிலில், "என்னுடைய பார்வையில் 1950க்கு முன்பு பெரியார் உலகளாவிய சிந்தனையாளராக உருவெடுத்திருகிற விதத்தைப் பற்றி இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். கடவுள் எதிர்ப்பாளராகவும், பார்ப்பன எதிர்ப்பாளராகவுமே அவர் பார்க்கப்பட்டிருந்தாலும் அவை மட்டுமே பெரியாரின் அடையாளங்கள் அல்ல. இவற்றிற்குப் பின்னால் அவர் பெரும் மனிதாபிமானி. சகமனிதர்கள் ஏற்றத் தாழ்வுக்குட்படுத்தப்பட்டுக் கீழான நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்களே என்று, அதற்கு எதிரான தார்மீகக்கோபம்தான் அவருடைய வாழ்வின் மையம். இந்தப் படத்தில் சொல்லப் பட்டிருப்பதும் அதுதான்" என்கிறார். "படம் பார்த்த பக்திகரமான பெண்மணி ஒருவர், ஒரு புதுப் பெரியாரைக் காட்டியிருக்கிறீர்கள்" என்று தன்னிடம் கூறியதாக இன்னொருயிடத்தில் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

ஆக, திரைக்கு வர இருக்கிற பெரியாரை நம்மால் ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது. பிரச்சனைகள் அற்ற முறையில் பெரியாரைக் காட்ட விரும்புகிறார்களோ என்றும் படுகிறது. 'டபுள் ஃபில்டர்' செய்யப்பட்ட பெரியாரைத்தான் நாம் காணமுடியும் போலிருக்கிறது. 'எதிர்ப்பிற்கு அஞ்சி அடக்கி வாசிப்பதென்பது' நமது பெரியார் அறியாத ஒன்று. இந்தத் திரைப்படப் பெரியார் எப்படி என்று முழுமையாகத் தெரிவில்லை. அனுமானத்திலான என் கணிப்பு தேற்கும் என்றால்... சந்தேஷப்படும் முதல் ஆளே நானாகத்தான் இருப்பேன். தவிர, ஞானசேகரன் பெரிதாக ஏமாற்றமாட்டார் என்கிற நம்பிக்கையும் இருக்கத்தான் செய்கிறது. விரைவில் 'பெரியார்' வரத்தானே இருக்கிறார்! வரட்டுமே. பின் பேசினால் போச்சு!

ஏப்ரில் 2007 இதழ் 88 -
கலைப்படம் - தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம்!

'பருத்தி வீரனி'ல் கார்த்திக் மற்றும் பிரியாமணி...கனவுகளைச் சுட்டு காசு பார்க்கும் வியாபாரத்தில் அதிஷ்டம் வாய்ந்தது சினிமா! இதில் அமெரிக்காவின் தாயாரிப்புகள் அமர்க்களப் படுத்தும் ரகமென்றால், அடுத்த கலக்கல் இந்திய தயாரிப்புகள்தான். படங்களின் எண்ணிக்கைகளில், தொழில் நுட்பத் திறமைகளில், இன்னும் மிதமிஞ்சிய அதன் கற்பனை வளத்திலும்கூட நம்ம பாலிவுட்டும் கோலிவுட்டும் ஹாலிவுட்டை விட்டேனாபார் என்ற ரீதியில் துரத்திக்கொண்டே இருக்கிறது.

'கோலிவுட்' என்று செல்லமாக அழைக்கப்படும் நம்ம கோடம்பாக்கத்தை, பார்க்க கிடைக்கிற போதெல்லாம் கட்டத்தெரியாமல் கட்டிய கட்டி வரிசைகளுக்கிடையேயான சாலைகளில், அதன் சந்துப்போந்துகளில் சதாநேரமும் திமிரி வழியும் மக்கள் கூட்டம் எப்பவும் மாறா காட்சி! முகம் சுழிக்கும் அளவுக்கு! ஆனால், அங்கேதான் உலக அளவில் ரசிகர்களைத் தேடிவைத்திருக் கும் தமிழ்த் திரைப்படங்கள் உருவாகி / வடிவுகொண்டு / வெளியாகிறது! வியப்புதான்!!

தமிழ்த் திரைப் படம் பேசத்துவங்கி சுமார் எழுபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் ஆரம்பப் படம்தொட்டு இன்றைய சினிமாவின் பிரமாண்ட வடிவம்வரை அது உருமாறிய எண்ணிக்கைகள் அதிகம். தனது பரிணாம வளர்ச்சியின் கூறாய் என்னென்னவோ வேஷமெல்லாம் காட்டியிருக்கிறது. ஆனால் யதார்த்தம் / கலைநுட்பம் என்பதைத் தவிர. என்றாலும், அதன் நீண்ட வரலாற்றில் அப்படியான சுவடுகள் இல்லையென்று சொல்லிவிட முடியாது.

ஆரம்ப காலத்தில் எல்லா மொழிகளின் சினிமா மாதிரியே, நம் தமிழ்ப் படமும் புராணக் கதைகளையே சதமென நம்பித்தான் முகிழ்ந்து தவழ்ந்திருக்கிறது. அடுத்து, ராஜா ராணி கதை வட்டத்திற்குள் வெகுகாலம் சுற்றியப்படி, மூச்சுக்கு மூச்சு பாடிக்கொண்டு, தப்பிக்க வழி புரியாத ஓர் சஞ்சாரத்தில் 'நாட்டு சுதந்திரத்தாகப் பேர்வழியாக' தலையெடுத்தது. பின்னர் சமூகக் கதைக ளுக்குள் கால் வைத்தது 'கிளிசரின்' இல்லாமலே படம் அத்தனையிலும் அழுது தீர்த்தது அல்லது பாடித் தீர்த்தது. அதன் நீட்சி யாய் சமூதாய சீர்திருத்த வேகம்காட்டி நீண்ட வசனங்களைப் பேசவும் கைத்தட்டல் வாங்கி பெருமிதம் கொள்ள,அடுத்த யுக்தி யாக ஒருபக்கமும் தீவிர கதை சொல்லும் உந்தலோடும், இன்னொருப் பக்கம் பொழுதுபோக்கு அம்சங்களோடும் முகம் காட்டி அமோகமாக வாகைச் சூடியது.

தீவிர கதை சொல்லுதல் என்பது, தமிழ்ச் சினிமாவில் ஆதிதொட்டு தொடர்ந்த பழைய அழுகையின் புதிய பதிப்பு. பொழுது போக்கு அம்சமென்பது நாயகிகளின் அரைகுறை ஆடை மேனி / அவர்களின் திமிரிய வனப்புகள் / விகரதாப நெளிதல்கள் / ஆடல் பாடல்கள் / நியாயத்தை நிலைநாட்ட எதிரிகளை நாயகன் பந்தாடுவது என்பனவற்றை முதன்மைப் படுத்துவது. முன்னது சிவாஜியின் படங்கள் என்றால் பின்னது எம்.ஜி.ஆர். அவர்கள் இருவரும் இறந்து போய்விட்டார்கள் என்றாலும், அவர்களது ஃபார்முலா இன்னும் உயிரோடுதான்!! சரியாக சொல்வதானால் அது இன்னும்கூடுதலான மெருகுடனும், தொழில்நுட்பப் பின்னலு டனும் வெற்றிகரமாக ஜீவிக்கிறது!

சத்தியஜித்ரேஎம்.ஜி.ஆரும் சிவாஜியும் தங்களை தமிழ்ச் சினிமாவில் ஸ்திரபடுத்திக் கொள்ள முயன்றுக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தான் வங்கத்தில் திரு.சத்தியஜித்ரே தனது திரைப்பட மேன்மையை உலகிற்கு காட்டினார். கலையின் பரிமாணங்களுடன் நுட்பமான யதார்த்தங்களை அவர் காட்சிகளாக்கிக் காட்ட, சினிமாவின் அடுத்தக் கட்டத்தை விரும்பிய அனைவரும் அதில் லயித்து போனார்கள். தமிழைத்தவிற பிற மொழி தயாரிப்புகள் இந்த காலக்கட்டத்தில் விழித்துக் கொண்டார்கள். அடுத்தக்கட்ட சினிமா குறித்து குறைந்த பட்சமேனும் சிந்திக்கவாவது செய்தார்கள். இந்த சிந்திப்பையொட்டிய எழுச்சியின் கூறாகத்தான் 'பூனாஃபிலீம் இன்ஸிட்டியூட்'.

சத்தியஜித்ரேயின் எழுச்சியை தமிழ்த் திரையின் விசயஞான பெரிசுகள் கீச்குரலில் பாராட்டிக்கொண்டிருக்க, "உலகப்பார்வைக்கு இந்தியாவின் ஏழ்மையைப் படம்பிடித்துக் காட்டி பரிசுகள் பெறுவதா?" என்கிற விமர்சன கூக்குரலும் இங்கே எழுந்தது. இங்கே
மட்டுமல்ல எங்கேயும் எதிலும் அதிமேதாவிகள் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ள தயங்குவதே இல்லை. இவர்களின் விமர்சனக் குரல் வங்கத்திலிருந்த சத்தியஜித்ரேவுக்கு எட்டியதா என்று தெரியாது. எட்டியிருக்குமென்றால் அதை அவர் எப்படி எடுத்துக் கொண்டிருப்பார்? யோசிக்க கஷ்டமாகத்தான் இருக்கிறது.

தகழியின் 'செம்மீன்' திரைப்படத்தில் ஷீலா மற்றும் மது.சத்தியஜித்ரேவின் எழுச்சிக்குப்பிறகு விழித்துக் கொண்ட பிறமெழி தயாரிப்புகளில் மலையாளப் படங்கள் தங்களது புதிய ரூபங்களை காட்டத்துவங்கியது. 'செம்மீன்'/ 'துலாபாரம்'யென நகர்ந்து, 'காடு' எடுத்து எழுந்து தங்களது மேல்நோக்கியப் பயணத்தை உறுதிப்படுத்தியது. அந்தப் படங்கள் 'ஆர்ட்மூவி' இல்லையென்றாலும் நிச்சயம் அதை நோக்கி நகர்ந்தப்படங்கள். அந்த மூன்று படங்களுக்குமே இங்கே தமிழ் ரசிகர்களிடையும் மிகுந்த வரவேற்பு இருந்தது. இருந்தும், அதையொத்த தயாரிப்பை நிகழ்த்த இங்கே யாரும் தயாராக இல்லை. அதற்காக இங்கே உள்ளவர்களின் கபால மடிப்புகள் குறைந்த தென்றும் சொல்லிவிட முடியாது.

எது ஒன்றையும் எளிமைப்படுத்தி, இரட்டிப்பு லாபநோக்குடன் அனுகுவதே நம் சினிமாகாரர்களின் தீர்மானமான குறி. செம்மீன் இங்கே படகோட்டியானது, துலாபாரம் அதே பெயரில் ஆனால் வியாபார மாற்றங்களுடன் மறுபதிவு கண்டது.காடுவை இங்கே எப்படி சிதைத்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் சொய்திருப்பார்கள். ஆனாலும், சத்தியஜித்ரேயின் எதிரொலி அதிர்வு இங்கே இல்லாமல் இல்லை. ஜெயகாந்தன் 'பாதை தெரியுது பார்' என்று முயன்றதெல்லாம் அந்த எதிரொலியின் அதிர்வுதான்.

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் தங்களது ஃபார்முலாவின் முழுவெற்றியால், தமிழ்த் திரையரங்குகளை ரொம்பி வழியவிட்டுக் காட்டிய போது, அவர்களின் நகலாக இங்கே இன்னும்பல சூப்பர்ஸ்டார்களும், நவரச நாயகர்களும் கிளைத்துக் கிளம்பி தனி கடைகள் திறந்தார்கள். பெருசுகளின் வெற்றி ஃபார்முலாவுக்கு இன்னும் கூடுதலான பூச்சுவேலைகளை செய்துகொண்டார்கள். இப்படி அவர்களும் பணத்தை அள்ளத் துவங்கிய நேரத்தில் பெங்கால், மலையாளம், இந்தி, கன்னடம், மராட்டி, துளு போன்ற மொழிகளில் சத்தியஜித்ரேயின் கலைவடி வத்திற்கு நிகரானப் படைப்புகளை திரையேறத் தொடங்கியது.. ஒவ்வொரு மொழியிலும், இன் றும் வருடத்திற்கு ஐந்து கலைப்
படங்களேனும் நிச்சயம் என்கிற நிலை.

சத்தியஜித்ரே, அபர்ணாசென், ஸியாம் பெனகல், கோவிந்த் நிஹலானி, மீரா நாயர், சேகர் கபூர், தீபாமேத்தா, ரிக்விக்கடக், கிரி ஷ்கர்னாட், காசரவல்லி, ஆடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், கே.ஜி. ஜார்ஜ், வாசுதேவன் நாயர், ஜான் ஆபரஹாம், ராஜீவ் அஞ்சல், டி.வி.சந்திரன், சித்திக் போன்ற கலை ஆர்வம் கொண்ட இயக்குனர்களின் சீரிய முயர்ச்சிகளால் நமக்கு உன்னதமான படங்கள் பார்க்க கிடைத்தது அல்லது கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதில் மகிழ்ச்சியுண்டு என்றால் இவர்களால் இந்தியத் திரைப்படங்கள் உலக அளவில் பேசப்படுவதிலும் பெருமை சேர்ப்பதிலும் அந்த மகிழ்ச்சி கிளைத்து விண்னைத் தொடுகிறது.

பணம்கொட்டும் சினிமாமாதிரியான மீடியாக்களில் ஈடுபடுகிறவர்கள் தங்களது உழைப்புக்கு மீறிய வகையில் பன்மடங்கு பணம் ஈட்டுவதை குறியாகவே கொண்டிருக்கிறார்கள். சம்பாத்திய இலக்கணமெல்லாம் இவர்களுக்கு எப்பவும் ஆகாது. மக்களின் நாடித்துடிப்பை துள்ளியமாக கணித்து, திரையை வண்ணமயமாக்கி மக்களை கவர்ந்திழுத்து சுரண்டுவதில் வல்லவர்கள். இதனாலேயே இவர்களுக்கு சினிமாவை, 'வாழ்வின் யதார்த்தத்தை பதிவாக்கிப் பார்க்கும்' பார்வையே இல்லாமல் போய்விட்டது. இவர் களுக்குள் தவறி யாரேனும் ஒருவர் கலைப்படம் என்பதாக முயன்றல், அவர் இங்கே பைத்தியகாரன்! பணம் பண்ணவேண்டிய இடத்தில் கலை என்பது இவர்களுக்கு
ஆவதேயில்லை. கோடிகளில் புரளும் தகிப்பில் உலகில் மிகச்சிறந்த பூஷ்வாக்களையெ ல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுபவர்கள் இவர்கள்.

ஆடூர் கோபாலகிருஷ்ணனை ஒரு பத்திரிகை நிருபர் பேட்டிக் காணுகையில், "உங்கள் படங்கள் பெரிய அளவில் ஓடுவதில்லை யே? பின் எப்படி சமாளிக்கிறீர்கள்?" என்று கேட்டப்போது, "என் படங்கள் லாபம் தராமலா நான் தொடர்ந்து படம் எடுக்கி றேன். நான் திட்டமிட்டு குறைந்த முதலீட்டில் படம் தயாரிக்கிறேன். அதை என் ரசிகர்களும் பார்க்கிறார்கள். எனக்கொன்று நான் நிர்ணயித்துக் கொள்ளும் மாதாந்திர சம்பளம் அதன் வழியே கிடைக்கத்தான் செய்கிறது. பிறகு இதில் என்ன பிரச்சனையி ருக்கிறது!" என்றார்.

திட்டமிட்டு தயாரிக்கும் முயர்ச்சியும், குறைந்த லாபத்தின் அளவில் திருப்தியும் இருக்கும் பட்சம் கலைப்படம் எடுப்பதில் பிரச் சனை எழாது என்பதாக அவரது பதிலை நாம் புரிந்து கொள்ளலாம். திரைப்பட தயாரிப்பின் வழியே, கோடிகளிலான வரவு செலவு தரும் ஆனந்தம், போதை தரும் சுகம், தேடிவந்து மடியும் பெண்களின் வாசனை, எளிதில் வாய்க்கும் பேர்/ புகழ்/ பந்தா, வருங்கால முதலமைச்சருக்கான கனவு போன்ற நட்சத்திர சங்கதிகளோடு சஞ்சரிக்கும் நம் சினிமாகாரர்களுக்கு ஆடூர் கோபாலக்கிருஷ்ணனின் இந்த பதில் இஸ்டப்படாது.

தமிழ்ச் சினிமா போச ஆரம்பித்து, வெற்றிகரமான வியாபார ஸ்தலமாக உருவெடுத்தத் தருணத்தில், ஊர் ஊராய் தெருகூத்தும் நாடகம் போட்டுக்கொண்டிருந்த அத்தனை கலைஞர்களும் தங்களது ஜாகையை சினிமாவின் பக்கம் மாற்றிக்கொள்ளத் துவங்கி னார்கள். அந்த நடிகர்கள் அங்கே நடிக்கும்போது என்னென்ன குணச்சேட்டைகள் செய்தும், விடிய விடியப் பாடியும் கைத்தட் டல்கள் வாங்கினார்களோ, அது அத்தனையையும் சினிமாவிலும் செய்தார்கள். இங்கேயும் அதற்கு அதே கைத்தட்டல் கிடைத் தது. நாடகத்தையும் சினிமாவையும் பிரித்துப்பார்க்க யாரும் முயலவேயில்லை. தமிழ்ச்சினிமா வெகுகாலம் தன்வளர்ச்சிப் பாதை யில் இப்படிதான் சறுக்கத் தொடங்கியது.

இந்த சறுக்கலின் தொடர்ச்சி கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்வரைகூட இருந்தது. கத்திப் போசுவது, கர்ஜிப்பது, கதறி அழுவது, தனக்குத்தான் பேசிக்கொள்வது, விழிகளை உருட்டி மிரட்டுவது, புருவங்களை வளைத்து நெளிப்பது, பேச்சில் ஏத்த இறக்க மேனரிஸங்கள் செய்வது, நடையில் அபிநயம் காட்டுவது போன்றவற்றத்தை நடிப்பின்பேரால் தாராளமாக நிகழ்த்தினார் கள். இதில் நம் நடிகர்திலகம் ரொம்பவும் கெட்டி. கடைசிவரை அதில் அவர் பிசகவே இல்லை. வட்டத்தைத் தாண்டாத நடிகர். இன்றைக்கு அவரது கீர்த்திகள் வாழ்வது மாதிரி, அவரது நடிப்புக் குறித்த வியப்புகளும் வாழ்கிறது.

நடிகர்கள் மட்டுமல்ல, அரங்க அமைப்பாளர்களில் இருந்து இயக்குனர்கள்வரை தமிழ்ச் சினிமாவில் ஆதிக்கம் புரிந்த பலரும் மேடைவழி வந்தவர்கள். இவர்கள் எல்லோராலுமே நம் சினிமா விஸ்தீரணமாகப் பாதிக்கப்பட்டது. நம் 'இயக்குனர் சிகரம்' மும் நாடகவழி வந்தவர்தான். அவர் தனது கட்டுரை ஒன்றில், "இயக்குனராக இயங்க ஆரம்பித்து நாலைந்து படங்கள்வரை எனக்கு நாடக இயக்கத்திற்கும், சினிமா இயக்கத்திற்கும் வித்தியாசமே தெரியாமல்தான் இருந்தது" என்றிருந்தார். எப்படி இருக்கிறது கதை! தமிழ்ச் சினிமா இன்றைக்கு தன்பாதையில் கொஞ்சமேனும் முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்றால், அதெல்லாம் இந்த மாதிரியான சிகரங்களின் மீதேறித் தாண்டியதால்தான்.

சினிமா என்கிற வீசுவல்மீடியாவை பற்றி வழிமுறையாகப் பாடம் போதிக்க பூனாவில் ஃபிலீம் இன்ஸிட்டியூட் ஏற்பட்டது மாதிரி, பிற்காலத்தில் சென்னையிலும் அப்படியொன்று ஏற்பட்டது. அதன் வழியாவது தமிழ்ச் சினிமாத்துறைக்கு விமோச்சனம் கிட்டும் என்றும், வருடத்திற்கு ஐந்தாறு கலைப் படங்களாவது வர வாய்ப்பிருக்கிறது என்றும், நம்பிய சிலரில் நானும் ஒருவன். அதன் ஆரம்ப அறிகுறியும் அப்படித்தான் இருந்தது. அதில் படித்து வெளிவந்த ருத்ரய்யா 'அவள் அப்படித்தான்' தந்தபோது துளிர் த்த நம்பிக்கை அது. ஆனால் அதன் பிறகு வந்த அந்த இன்ஸிட்டியூட் மாணவர்களில் எவர் ஒருவரும் அப்படி நம்பிக்கை தரும் படம் தந்தார்கள் இல்லை. இன்றுவரையிலும்கூட அதுதான் நிலை. மாறாய், சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாணவர்கள் நடிகர் விஜயகாந்திற்கு பின்புலமாக நின்று தயாரித்து காட்டிய 'வன்முறையும், இரைச்சலும், பிரமாண்டப் பவிசும்' கூடியப் படங்கள் நம் ரசிப்பின் விதியை நிர்ணயப்பதாக ஆகிப்போனது. அதுதான் இன்றுவரை நம்மை மாறிமாறி துரத்திக் கொண்டு இருக்கிறது. விடாது கருப்பு!

இன்றைக்கு, உலகச் சினிமாவின் பிரமாண்டத்தோடு நேர் நிற்கும் வல்லமை கொண்டதாக தமிழ்ச் சினிமா உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. இத்தொழிலில் வளர்ந்துள்ள தொழில் நுட்பம் அத்தனையையும் நமது சினிமா உள்வாங்கி பெருத்துவிட்டது.
இசையின் பதிவில், காட்சிகளின் லாவகத்தில், அதன் தெளிவில், கிராஃபிக் யுக்தியில் என்று கிடுகிடு வளர்ச்சி. இன்றைய ரசிகர் களும் தாங்கள் கொடுக்கும் காசுக்கு அத்தகைய வித்தைகளை எல்லாம் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்ச்சினிமாவின் நிலை இப்படி கிளைத்துவிட்ட இந்த காலத்தில், இங்கே கலைப்படம் எடுக்க நினைப்பவர்கள் நியாயமாக யோசிப்பார்கள். அவர்கள் அருகிப் போக வாய்ப்புகள் அதிகம். எங்கும் எப்பொழுதும் யதார்த்தத்திற்கு பிரமாண்டம் சத்ரு.

வியாபாரப்படம், கலைப்படம் என்றிருந்த நிலைபோய், வியாபாரப்படம் மட்டுமே என்கிற நிலை இங்கே மெல்ல மெல்ல ஸ்திரப் பட்டுவிட்டது. இப்பொழுது வியாபாரப் படங்களிலேயே நல்லப்படம் / நல்லா இல்லாதப்படம் என்கிற ரீதியில் இருகூராகப் பார்க்கச் சொல்கிறார்கள். அதாவது மசாலத்தனம் நிறைந்த, சொதப்பல் கூடியப் படத்தை நல்லா இல்லாதப் படமென்றும், மசாலத்தனம் கொஞ்சம், சொதப்பல் கொஞ்சம், கலைநேர்த்தி செய்நேர்த்தி என்பதும் கொஞ்சம் யென்று கலந்துப்பட்ட படத்தை நல்லப் படம் என்றும் குறிப்பிடுகிறார்கள். எல்லாத்தரப்பிலும் அதை ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்கள். ஆக, பிறமொழிகளின் சினிமா ரசிகர்களுக்கு கிட்டிய கலைப் படங்களிலான பேரானந்தம், தமிழ்ப்படங்கள் மட்டுமே பார்க்கவாய்த்த தமிழ் ரசிகர்களுக்கு இனி இல்லையென்று ஆகிவிட்டது. இங்கே நேற்றைக்கது இல்லை. நாளைக்கும் அது இல்லவே இல்லை. இதில் பெருவாரியான தமிழ் ரசிகர்களுக்கு எந்தவொரு வருத்தமுமில்லை என்பது இங்கே முக்கியச் செய்தி.

எழுபத்தி ஐந்து வருட தமிழ்ச் சினிமா வரலாற்றில் ஜெயகாந்தனின் 'யாருக்காக அழுதான்' தொடங்கி, ஜெயபாரதியின் 'குடிசை' பாலு மகேந்திராவின் 'அழியாத கோலங்கள், வீடு' ருத்திரய்யாவின் 'அவள் அப்படிதான்' துரையின் 'பசி' சேதுமாதவனின் 'மறுப க்கம்' ஜானகி விஸ்வநாதனின் 'குட்டி' பலசந்தரின் 'ஒரு வீடு இருவாசல்' பிரதாப்போத்தனின் 'மீண்டும் ஒரு காதல் கதை'மணிர த்தினத்தின் 'இருவர்' பார்த்திபனின் 'ஹவுஸ் ஃபுல்' ஞானசேகரனின் 'மோகமுள், முகம், பாரதி' ஜெகன்ஜியின் 'கோடம்பாக் கம்' கமலின் 'ஹேராம், அன்பே சிவம்' முடிய தமிழில் வந்த கலைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சிலருக்கு இந்த பட்டியல் சலுகை கூடியதாக தெரியும் வாய்ப்புண்டு. ஒருவகையில் அதுவும் நிஜம்தான். நீண்ட சரித்திரமும், பெரிய ஆகி ருதியும் கொண்ட தமிழ்ச் சினிமாவை முன் நிறுத்திப் பார்க்கிறபோது மேற்கண்டப் பட்டியலின் எண்ணிக்கை என்பது ஒன்றுமி ல்லை.

இன்றைக்கு குறிப்பிடப்படுகிற நல்லப்படம் அல்லது இடைநிலைப்படம் என்பது இன்றைக்குத்தான் என்றில்லை அது இயக்குனர் ஸ்ரீதர் காலத்திலேயே உருகொள்ளத் தொடங்கிவிட்டது. அவரது 'நெஞ்சி ஓர் ஆலயம்' 'வெண்ணிற ஆடை' என்பதெல்லாம் அப்படிப்பட்ட படங்கள்தான். இந்த வரிசையில் தமிழில் சொல்லி கொள்ளத் தகுந்தப் படங்கள் உண்டு. பாலுமகேந்திரா / மகே ந்திரன் / மணிரத்தினம் / ஃபாசில் போன்றோர் பெரும்பாலும் இந்த வரிசைப் படங்களையே எடுப்பவர்களாக இருந்தார்கள். தவிர, அதன் கூறுகளை புதிப்பிக்கவும் செய்தார்கள். கமலும் தன்னுடையப் படங்களை இந்த வரிசையில் நிறுத்த பலத்த முயற்சி கள் எடுத்துக் கொள்வார். 'ராஜப்பார்வை' யில் தொடங்கிய அவரது அந்த முயற்சி இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதில், அவர் தேரினதும் உண்டு தேராததும் உண்டு.

மேலே குறிப்பிட்டிருக்கிற தமிழ் இயக்குனர்களின் இடைநிலைப் படங்கள் அல்லது நல்லப்படங்கள் நமது ரசனையை உரசி கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்பது வாஸ்த்தவம்தான். என்றாலும், கேரளச் சினிமாவில் இப்படியான இடைநிலைப் படங்களை இயக்கிய அல்லது இயக்கிக்கொண்டிருக்கும் பரதன், சத்தியன் அந்திகாடு, சீனிவாசன், சிபிமலயில், ஃபாசில்,கமால், பாலச்சந்திர மேனோன், லெனின் ராஜேந்திரன், மேகந்தாஸ் போன்றவர்களிடம் காணும் கதைச்சொல்லும் முறை, காட்சிகளின் எளிமை, உள் ளார்ந்த அழகை வெளிப்படுத்தும் பாங்கு, காட்சிக்கு காட்சி பின்னிக் கொண்டு நெளியும் நகைச்சுவை, கதாபாத்திரங்களின் சகஜம், நடிகர்களின் செயர்கைத்தனமில்லா ஒத்துழைப்பு போன்ற அம்சங்கள் அலாதியான ரசனைக்கொண்டது. மலையாள மொழியில் வெளிவரும் படங்களில் பாதிக்குப்பாதி இப்படியானதே என்பது இன்னொரு உபசெய்தி.

சமீபகாலத்து தமிழ் இயக்குனர்களான தங்கர்பச்சன், பாலா, செல்வராகவன், எஸ்.ஜெனநாதன், அமீர் ஆகியோரது இடைநிலைப் படங்கள் மெச்சத் தகுந்ததாக இருக்கிறது. தங்கர் பச்சனின் 'அழகியும், சொல்ல மறந்தக் கதையும் கலைப்படத்தின் நெருக்கம் கொண்டது. பாலாவின் 'பிதாமகன்' ஓர் சாத்திய முயற்ச்சி என்றால் அமீரின் 'பருத்தி வீரன்' விசாலமான கற்பனை வளம் முகிழ்ந்த நிஜத்தின் அழகியப் பதிவு. அதன் பரிமாணத்தின் எந்தப் பக்கம் நின்று பார்த்தாலும் உச்சம் தெளிவாகத் தெரிகிற இடைநிலைப்படமிது. அர்த்தமற்ற வாழ்வேடு காலத்தின் போக்கில் கரைகிற மக்கள் நம்மில் ஏராளம். உள்ளார்ந்த கிராமப் புறங் களில் அந்த தொகை அதிகம். அவர்களில் சிலரை மையப் புள்ளியாக்கியிருக்கிறது இந்தப் படம். தமிழில் நாம் வாசிக்கும் நவ இலக்கியங்களில் கூட இப்படியானப் பாத்திரப் படைப்பு என்பது அரிது.

இடைநிலைப் படங்களினால் கிட்டும் திருப்தி என்பது வியாபாரப்படத்தை சரியான கோணத்தில், பிசிரில்லாமல் கொண்டு செலுத்தி இருப்பதிலான நிறைவும் மகிழ்ச்சியும்தான். ஆனால், கலைப்படம் தரும் அனுபவம் முற்றிலும் வித்தியாசமானது. தீர்க்க மான கவிதையை தீர வாசித்து, உள்வாங்கி, ரசிப்பதுமாதிரி. ஆங்கூர், நிஷாந், சக்கரா, அபிலாஷ், கிர்த், மண்டி, சலாம் பம்பே, குரு (மலையாள கலைப் படம்) மகரிப், கொடியேற்றம், மேளா, லேகாவோட மரணம் ஓர் ஃபிளஸ்பேக், சிதம்பரம், போன்ற கலைப்படங்கள் பார்க்கக் கிடைத்த தருணத்தில் அவைகள் எனக்குத் தந்த அனுபவம் அப்படிப்பட்டதுதான். தமிழ்த் திரைப் படதையே சதமென நம்பிய ரசிகர்களுக்கு அப்படி ஒரு தீவிர அனுபவத்தை அது வழங்கத் தவறிவிட்டது. திரைப்பட வடிவத்தின் ஓர் உன்னதமான அத்தியாயத்தை தரிசிக்காமலே நம் ரசிகர்கள் தாண்டி வந்து விட்டார்கள்.

satajdeen@gmail.com

No comments:

'பதிவுக'ளில் அன்று - ''காதல் கடிதம்'' - உலகத் தமிழருக்கான திரைப்பொங்கல்! - வசீகரன் (ஒஸ்லோ,நோர்வே) -

பெப்ருவரி 2008 இதழ் 98   [பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும்...

பிரபலமான பதிவுகள்