'வானம்பாடி' சஞ்சிகையின் இருபத்தோராவது இதழ் ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழாக வெளியிட்டிருந்தது. கவிதைகளைத் தொகுத்திருப்பவர்கள்: சேரன், நுஃமான் & அ.யேசுராசா,
ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழ் என்றுள்ளது, ஆனால் இச்சிறப்பிதழில் சேரன், மஹாகவி, நுஃமான், அ.யேசுராசா, தா.இராமலிங்கம், ஜெயபாலன், மு.பொன்னம்பலம், வில்வரத்தினம் எனப் பலரின் கவிதைகள் ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கின்றன. எதற்காக இந்தப்பாரபட்சம்?
இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த வேறு கவிஞர்கள் எவருமேயில்லையா? கவீந்திரன் (அ.ந.கந்தசாமி), அம்பி, பிரமிள், ஜீவா ஜீவரத்தினம், சத்தியசீலன், ஏ.இக்பால், இ.இரத்தினம், சில்லையூர் செல்வராசன், மருதூர்க்கொத்தன், சாரதா, நாவற்குழியூர் நடராசன், .. என்று என்னால் மேலும் கவிஞர்கள் பலரின் சிறந்த கவிதைகளை எடுத்துக்காட்ட முடியும். கவிஞர் ஒருவரின் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைத் தொகுப்பில் சேர்ப்பதற்குப் பதில் சிறந்த கவிஞர்கள் பலரின் கவிதைகளை நிச்சயம் சேர்த்திருக்க வேண்டும். ஒரு கவிஞரின் ஒரு கவிதை தொகுப்புக்குப் போதுமானது. ஏனென்றால் தொகுப்பானது ஈழத்துத் தமிழ்க்கவிதையின் வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாகவிருக்க வேண்டுமே தவிர கவிஞர்கள் சிலரைத் தூக்கிப்பிடிப்பதாக இருக்கக் கூடாது. அதிலும் தொகுப்பாளர்களைத் தூக்கிப்பிடிப்பதாக இருக்கக் கூடாது.