Sunday, May 27, 2018

லக்பிமா.காம்: கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு ! 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு! - - கத்யானா அமரசிங்ஹ | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, 'மந்திரி மனை' என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய வீடுகளின் கட்டடக்கலையும் ஒருங்கே அமைந்திருந்த அந்த அரண்மனையை முதன்முதலாகக் கண்டபோது, இலங்கையின் தென்பகுதியில் காணக்கூடிய மழையும், வெயிலும், காலமும் பொலிவிழக்கச் செய்திருக்கும் பழங்கால, பாழடைந்த ‘வளவ்வ’ எனப்படும் பாரம்பரிய வீடுகளை அது நினைவுபடுத்திற்று. யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அந்த அரண்மனையானது, போர்த்துக்கேயர்களின் வருகையோடு ஆரம்பித்த காலனித்துவ யுகத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த மந்திரியொருவரின் இல்லமாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. அவ்வாறே யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர்கள் கைப்பற்ற முன்பு இம் மந்திரி மனை அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் யாழ்ப்பாண மன்னரொருவரின் அரண்மனையும் இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

முதன்முறையாக 'மந்திரி மனை'யைக் கண்ட எனது உள்ளத்தில் யாழ்ப்பாண வரலாறு குறித்த பல தரப்பட்ட எண்ணங்கள் கேள்வியெழுப்பின. எனினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கே இருந்திருக்கக் கூடிய தமிழ் மன்னரொருவரின் ராஜதானியைக் குறித்து கற்பனை செய்து பார்ப்பதைத் தவிர, அதைக் குறித்து மேலதிக விபரங்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பில்லை என்பதனால் அந்தக் கற்பனைகளும் கூட தோன்றிய இடத்திலேயே மரித்து விடவும் வாய்ப்பிருந்தது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ராஜதானிகள் குறித்து நாங்கள் பலதரப்பட்ட வரலாறுகளைப் படித்திருந்த போதிலும், ஆயிரக்கணக்கான வருடங்கள் யாழ்ப்பாணத்தில் நிலவியிருந்த ராஜதானிகளின் அமைவிடங்கள் மற்றும் வரலாறு குறித்த விரிவான குறிப்பொன்றை எங்கிருந்து தேடிப் படிப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

எனினும் அதற்கு சில வாரங்களின் பின்னர், ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’' எனும் ஆய்வு நூலொன்று எனக்குக் கிட்டியதானது, கோடையில் துவண்டிருக்கும் ஒருவர் மீது அகாலத்தில் பெய்த மழை போன்றிருந்தது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கட்டடவியல் பட்டதாரியும், தமிழ் எழுத்தாளருமான நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்) எழுதிய இந்த ஆய்வு நூலானது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த  யாழ்ப்பாண ராஜதானி நகர அமைப்பு  குறித்து எழுதப்பட்ட முதல் அறிவியல் ரீதியான ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட அந் நூலானது, இந்திய எழுத்தாளர்களில் ஒருவரான லதா ராமகிருஷ்ணனால்  ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நான் வாசித்தது ஆங்கில மொழிபெயர்ப்புப் பிரதியாகும்.
எனக்கு முதன்முதலாக கிரிதரன் அறிமுகமாவது ஒரு கவிஞராகவும், சிறுகதை மற்றும் நாவல் எழுத்தாளராகவும்தான். அதற்கும் மேலதிகமாக உலகம் முழுவதும் தமிழ் வாசகர்களிடையே பிரபலமான வலைத்தளமாகவுள்ள ‘பதிவுகள்’ இணைய இதழாசிரியர் அவர். ஆயிரக்கணக்கான வருடங்களாக யாழ்ப்பாணத்தில் திகழ்ந்த ராஜதானிகளின் வரலாறுகள் குறித்தும், அதன் இறுதி ராஜதானியாகக் கருதப்படும் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு  குறித்தும் மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை, பல வருடங்கள் பாடுபட்டு ஆய்வுகள் செய்து அவர் எழுதியிருக்கும் இச் சிறந்த ஆய்வு நூலிலிருந்து அறிந்து கொண்டேன்.

Saturday, April 21, 2018

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்! - வ.ந.கிரிதரன் -

"The Wanderers Of The Sky And Their Cry Of Melancholy " என்னும் தலைப்பில் நான் எழுதிய ஆங்கிலக் கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பு லக்பிம சிங்களத் தினசரியின் ஞாயிற்றுப் பதிப்பில்
http://e-paper.lakbima.lk/…/Apr…/last_22_04_18/manjusawa.pdf  (22.04.2018) வெளியாகியுள்ளது. அக்கவிதை தமிழில் கீழே:

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்! - வ.ந.கிரிதரன் -
"படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை எப்பொழுதுமே
என்னிதயத்தை ஆழமாகத் தொடுவன.

காலையிலிருந்து
மழை பலமாகப்
பெய்து கொண்டிருக்கிறது.

மழை.
அகதிகளின் கண்ணீர்.
நாடற்ற வான் நாடோடிகள்,
மேகங்களின்
கண்ணீர்,

வழக்கம்போல்
படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை என்னிதயத்தை
ஆழமாகத் தொடுகின்றன.

(பதிவுகள்.காம்) வாசிப்பும், யோசிப்பும் 281: சங்கக்கவிதைகளும், ஓசையும்.. - வ.ந.கிரிதரன் -


அண்மையில் கவிஞர் விக்ரமாதித்யனின் 'எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு' என்னும் நூலை வாசித்தேன். கவிஞர் தன் பால்ய காலம் பற்றி, தனது பிறந்த மண்ணான திருநெல்வேலி பற்றி, தன் கவிதைகள் பற்றி, கவிதைகள் பற்றி, தானறிந்த சக இலக்கிய ஆளுமைகள் பற்றி, திரைப்படப்பாடல்களை எழுதிய கவிஞர்களைப்பற்றி, அவர்களின் பாடல் வரிகள் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, திமுக அரசியல்வாதிகள் பற்றி, அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, சக கவிஞர்களின் கவிதைகளைப்பற்றி, .. இவ்விதம் பல்வேறு விடயங்களைச் சுவையான, நெஞ்சையள்ளும் நடையில் கூறியிருக்கின்றார். பொதுவாகவே எனக்கு கலை, இலக்கிய ஆளுமைகளின் நனவிடை தோய்தல்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுண்டு. கவிஞர் விக்ரமாதித்யனின் இந்நூலையும் அவ்விதமே வாசித்தேன்.

அவர் நேர்காணலொன்றில் சங்கக்கவிதைகள் பற்றிக் கூறியிருந்த பின்வரும் கூற்று என் கவனத்தைக் கவர்ந்தது: "சங்கக் கவிதைகள் இசை கருதிச் செய்யப்பட்டவையல்ல". இன்னுமோரிடத்தில் " தமிழில் திருத்தக்கதேவர், கம்பனிலிருந்துதான் ஓசை, சந்தம் கூடி வருகிறது" என்கின்றார்.

கவிஞரின் இக்கூற்றுகளை வாசித்துக்கொண்டிருந்த போது எனக்கு தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் முனைவர் கெளசல்யா சுப்பிரமணியனின் "இசைத்தமிழ்ச் சிந்தனைகள்" நூலின் ஞாபகம் வந்தது. அதிலவர் சங்க காலத்திலிருந்து தமிழ் இசைப் பாடல்களின் வரலாறு தொடங்குவதாகக் கூறுவதுடன் அதற்கான ஆதாரங்களையும் ஆய்வுரீதியாக முன் வைத்திருப்பது நினைவுக்கு வந்தது. நூலிலுள்ள 'கலிப்பாவும் தமிழரின் இசை மரபும்' என்னும் கட்டுரையில் சங்கத் தமிழ்ப்பாவினங்களில் ஒன்றான கலிப்பா எவ்விதம் பிற்காலத்தில் உருவான கீர்த்தனைகளின் உருவாக்கத்துக்கு முன்னொடியாக விளங்கியது என்றெல்லாம் கூறியிருப்பது நினைவுக்கு வந்தது. அதில் அவர் கீர்த்தனைகளில் வரும் பல்லவி , அநுபல்லவி மற்றும் சரணம் என்பன 'கலிப்பாவின் தரவு, தாழிசை. சுரிதகம் என்ற கட்டமைப்புடன் ஓரளவு ஒத்த காட்சியைத் தருவதை உணர முடியும்" என்று கூறுவார் (பக்கம் 61). மேலும் அவர் "கீர்த்தனையிலே சரணங்களே அவற்றின் உயிர்ப்பான உள்ளடக்கப் பகுதியாகத் திகழ்வன. கலிப்பாவில் தாழிசைகளும் அப்படியே. எனவே கீர்த்தனை என்னும் இசைப்பா வடிவத்துக்கு கலிப்பாவின் அமைப்பு - குறிப்பாக ஒத்தாழிசைக் கலிப்பாவின் தரவு, தாழிசை அமைப்பு - ஒரு முன்னோடி நிலை என்பதை நாம் உய்த்துணர முடியும்." (பக்கம் 61) என்றும் கூறுவார்

Monday, April 9, 2018

பால்ய காலத்து அழியாத கோலங்கள் - ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி' - வ.ந.கிரிதரன் -

என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களில் ராணிமுத்துப் பிரசுரங்களுக்கு முக்கியமானதோரிடமுண்டு. நான் ஆர்வமாக வாசிக்கத்தொடங்கியிருந்த காலகட்டத்தில்தான் ராணிமுத்து மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் அடிப்படையில் அக்காலகட்டத்தில் பிரபலமாக விளங்கிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வந்தது. அவ்வகையில் வெளியான முதலாவது நாவல் அகிலனின் 'பொன்மலர்'. ஆனால் அப்புத்தகத்தை அப்பா வாங்கவில்லை. அப்பா வாங்கத்தொடங்கியது ராணிமுத்து பிரசுரத்தின் இரண்டாவது வெளியீட்டில் இருந்துதான். இரண்டாவதாக வெளியான நாவல் அறிஞர் அண்ணாவின் 'பார்வதி பி.ஏ' இவ்விரண்டு நாவல்களும் முதலும் இரண்டும் என்று ஞாபகத்திலுள்ளது. இதன் பின் வெளியான நாவல்களில் எங்களிடம் இருந்ததாக இன்னும் என் நினைவிலுள்ளவை:

ஜெயகாந்தனின் 'காவல் தெய்வம்'.
ஜெயகாந்தனின் 'வாழ்க்கை அழைக்கிறது'.
மாயாவியின் 'வாடாமலர்'
ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'
சாண்டில்யனின் 'ஜீவபூமி'
சாண்டில்யனின் 'உதயபானு' & இளையராணி
நாரண துரைக்கண்ணனின் 'உயிரோவியம்'
அகிலனின் 'சிநேகிதி'
பானுமதி ராமகிருஷ்ணாவின் 'மாமியார் கதைகள்'
விந்தனின் 'பாலும் பாவையும்'
கலைஞர் கருணாநிதியின் 'வெள்ளிக்கிழமை'
அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா'
மு.வ.வின் 'அந்த நாள்'
சி.ஏ.பாலனின் 'தூக்குமர நிழலில்'
குரும்பூர் குப்புசாமியின் 'பார் பார் பட்டணம் பார்'
மாயாவியின் 'வாடாமலர்'
லக்சுமியின் 'காஞ்சனையின் கனவு' & 'பெண்மனம்'

இவை இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன. ஜெயராஜின் அட்டைப்படத்துடன் , நூலின் உள்ளேயும் நாலைந்து ஓவியங்கள் அவர் வரைந்திருப்பார்.

அக்காலகட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பிரசுரங்களாக ராணி முத்துப் பிரசுரங்கள் விளங்கின. என்னிடமிருந்தவற்றைப் பத்திரமாக ஏனைய நூல்களுடன் வைத்திருந்தேன். அவை அனைத்தையுமே நாட்டுச் சூழலில் தொலைத்து விட்டேன்.

Saturday, April 7, 2018

கவிதை: பருத்தித்துறைக் கடற்கரையில்... சிங்களக் கவிதையின் ஆங்கில வடிவம்: கத்யானா அமரசிங்ஹ | தமிழில் : வ.ந.கிரிதரன் -



சிங்கள மொழியில் தான்  எழுதிய இக்கவிதையினை  ஆங்கில வடிவில் அனுப்பியிருந்தார் கத்யானா அமரசிங்க. அதனைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளேன். அண்மையில் அவரது வடக்குக்கான பயணத்தில் பருத்தித்துறைக்கடற்கரையில் அவரடைந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை. தமிழ் மக்களின் உணர்வுகளை, பிரச்சினைகளை நன்கு உணர்ந்துகொண்ட சிங்கள எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்க. சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், கொழும்புப் பல்கலைக்கழக
விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe) தற்போது லக்பிம பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.  -



நான் அங்கிருந்தேன் கண்ணீர்த்துளியின் மறு முனையில்
துயரக் காற்றினால் தாக்கப்பட்ட மறுமுனை
ஆழமான நீலக் கடலும் கூட
நெஞ்சை வலிக்கும் கதையினை அமைதியாகக்
கூறும்.
வீசிக்கொண்டிருந்த புயல்கள்
இளம் பறவைகளை அவற்றின்
அன்னையரிடமிருந்து பிரித்திருந்த
நேரமொன்றிருந்தது.

ஓ! நான் இப்பொழுது தனிமையை உணர்கின்றேன்.
இந்த வெறுமையான வானத்தின் கீழ்
நான் கனத்த இதயத்துடன் காத்திருக்கின்றேன்.
தூரத்துக் கனவினில்
தமது தாய் மண்ணிலிருந்து பறந்து சென்ற
எனது வடக்குப் பறவை நண்பர்களின்
சிறகடிப்பினை நான் கேட்கின்றேன்.
அவர்கள் திரும்பி வருவதைக் காண்கின்றேன்
இந்த இனிய ஆனால் இன்னும் தூரத்துக் கனவினில்

புகைப்படம் உதவி: கத்யானா அமரசிங்க

Kathyana Amarasinghe: kathaish@gmail.com

ngiri2704@rogers.com
[- இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஞானம் கலை, இலக்கியச் சஞ்சிகையின் ஏப்ரில் 20018 இதழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அறுபதாண்டு இலக்கியப்பங்களிப்பினைச் சிறப்பிக்கும் மலராக வெளிவந்திருக்கின்றது. அதில் வெளியாகியுள்ள எனது கட்டுரையான 'அ.முத்துலிங்கத்தின் இலக்கியப்பங்களிப்பு பற்றிய குறிப்புகள் சில' என்னுமிக் கட்டுரை ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. - ]

இலங்கைத்தமிழ் இலக்கியத்தில், புலம் பெயர்தமிழ் இலக்கியத்தில் காத்திரமாகத் தடம் பதித்தவை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துகள். இவரது எழுத்துலகக் கால கட்டத்தை  புலம்பெயர்வதற்கு முன், புலம் பெயர்ந்ததற்கு பின் என இருவேறு காலகட்டங்களில் வைத்து ஆராய்வது சரியான நிலைப்பாடாகவிருக்கும். இவர் பரவலாக , உலகளாவியரீதியில், குறிப்பாகத் தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட காலகட்டம் இவரது புலம்பெயர் எழுத்துக் காலகட்டம். அதற்காக இவரது ஆரம்ப எழுத்துலகக்காலகட்டம் ஒன்றும் குறைவானதல்ல. தனது ஆரம்பக் காலகட்ட எழுத்துகள் வாயிலாகவும் இவர் கலை, இலக்கியத்திறனாய்வாளர்களின் கவனத்தைப்பெற்று, அக்காலகட்டத்துப் படைப்புகள் மூலம் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் கால் பதித்தவர்தான். அந்த வகையிலும் இவர் புறக்கணிக்கப்பட முடியாதவரே. இச்சிறுகட்டுரையில் இயலுமானவரையில் இவரது இலக்கியப்பங்களிப்பினைச் சுருக்கமாக நோக்குவதற்கு முயற்சி செய்கின்றேன். இதன் மூலம் என் பார்வையில் இவரது இலக்கியப்பங்களிப்பினை இவரது படைப்புகளை நான் அறிந்த வரையில், வாசித்த வரையில் நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இவரது படைப்புகளை இவர் நாட்டிலிருந்து புலம்பெயர்வதற்கு முற்பட்ட  காலகட்டத்தை வைத்து நோக்கினால் ஒன்றினை அவதானிக்கலாம். இக்காலகட்டத்தில் அ.முத்துலிங்கம் அவர்களின் இலக்கியப்பங்களிப்பு சிறுகதை வடிவிலேயே அதிகமாகவிருந்திருக்கின்றது. இவரது புகழ்பெற்ற முதற் கதையான 'அக்கா' தினகரன் பத்திரிகை நடாத்திய சிறுகதைப்போட்டியில் முதற் பரிசினைப்பெற்றிருக்கின்றது. 1964இல் வெளியான இவரது முதலாவது சிறுகதைத்தொகுதியிலும் இடம் பெற்றுள்ளதுடன் அதன் பெயராகவும் விளங்குகின்றது. இவரது எழுத்தார்வத்திற்கு ஆரம்பத்தில் ஊக்குசக்தியாக விளங்கியவர் பேராசிரியர் க.கைலாசபதி என்பதை 'அக்கா' நூலுக்கான முன்னுரையில் இவர் எழுதிய முன்னுரையிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. பேராசிரியர் கைலாசபதி அவர்களும், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுமே இவரது ஆரம்ப எழுத்துலகச் செயற்பாடுகளை ஊக்குவிப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதை அ.மு.அவர்கள் அம்முன்னுரையில் பதிவு செய்திருக்கின்றார். இவர் எழுத்துலகில் புகுந்த காலகட்டத்தில் இலங்கைத்தமிழ் இலக்கியச் சூழலில் பல் வகையான இலக்கியப்போக்குகள் நிலவி வந்தன. கலை மக்களுக்காக என்னும் கோட்பாட்டுடன் இயங்கிய முற்போக்கு இலக்கியச் சூழல், பாலியல் சார்ந்த எழுத்தை மையமாக வைத்து எஸ்.பொ. இயங்கிக்கொண்டிருந்த 'நற்போக்குச் சூழல்' (முற்போக்கு எழுத்தாளர்களின் கூடாரத்துடன் எழுந்த பிணக்குகள் காரணமாகத் தனித்தியங்கிய எழுத்தாளர்கள் தம்மை அழைக்கப் பாவித்த பதமாகவே இதனை நான் கருதுகின்றேன்), கலை, கலைக்காகவே என்னும் நோக்கில் இயங்கிய எழுத்துக்குக் கலை என்னும் ரீதியில் முக்கியத்துவம் கொடுத்த எழுத்துலகச் சூழல், இவற்றுக்கு இடைப்பட்ட , அனைத்தையும் உள்ளடக்கிய , பிரபஞ்ச யதார்த்தவாதம் என்னும் நோக்கில் இயங்கிய மு.தளையசிங்கம் அவர்களின் சிந்தனைகளை மையமாகக்கொண்ட எழுத்துலகச் சூழல் எனப்பல்வேறு சிந்தனைகளைக்கொண்டதாக விளங்கிய இலங்கைத்தமிழ் இலக்கியச்சூழலுக்குள் அ.மு. அவர்கள் நுழைந்தபோது அவரது எழுத்தானது இவ்வகையான சூழல்கள் அனைத்திலிருந்தும் தனித்து, தனித்தன்மையுடன் விளங்கியதை அவதானிக்க முடிகின்றது.

Tuesday, April 3, 2018

(பதிவுகள்.காம்) நேர்காணல்: பிரபல தமிழ் -சிங்கள் மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான திரு.ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்களுடனான கலந்துரையாடல். நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரன்.

பிரபல தமிழ் -> சிங்கள் மொழிபெயர்ப்பாளரும், சிங்கள எழுத்தாளருமான திரு.ஜி.ஜி.சரத் ஆனந்த , Nadigamvila Ggs Ananda , அவர்களுடன் அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழானது மின்னஞ்சல் வாயிலாக நேர்காணலொன்றினை நடாத்தியது. மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு சரத் ஆன்ந்த அவர்கள் விரிவான பதில்களை அளித்துள்ளார். அதற்காக அவருக்கு எமது முதற்கண் நன்றி. இந்நேர்காணலில் அவர் தன்னைப்பற்றி, தான் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்துள்ள தமிழ்ப்படைப்புகள் பற்றி, மொழிபெயர்க்க எண்ணியுள்ள தமிழ்ப்படைப்புகள் பற்றி, இவ்வகையான மொழிபெயர்ப்புகள் இனங்களுக்கிடையிலான நல்லுணர்வுக்கும், புரிந்துணர்வுக்கும் ஏன் அவசியமானவை என்பது பற்றி, சமகாலச் சிங்கள கலை, இலக்கியச் செயற்பாடுகள் பற்றி, தான் ஏன் மொழிபெயர்ப்புத் துறைக்கு வந்தார் என்பது பற்றி, தற்போதுள்ள நாட்டின் அரசியற் சூழல் பற்றி, நாட்டின் எதிர்காலம் பற்றி.. இவ்விதம் பல்வேறு விடயங்களைப்பற்றியும் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார். இவ்விதமான நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகளின் தேவை தற்காலச்சூழலில் மிகவும் அவசியமென்று 'பதிவுகள்' கருதுகின்றது. அதனால் இந்நேர்காணலை வெளியிடுவதில் பெருமையுமடைகின்றது.

இணையம் மூலம், குறிப்பாக முகநூல் வாயிலாக நாம் அடைந்த பயன்கள் ஆரோக்கியமானவை என்பதற்கு இவரைப்போன்ற கலை, இலக்கியவாதிகளுடனான தொடர்புகள், கருத்துப்பரிமாறல்களே பிரதான சான்றுகள். இவரது மொழிபெயர்ப்பில் எனது சிறுகதைகளான  'உடைந்த காலும், உடைந்த மனிதனும்', மற்றும் 'நடு வழ்யில் ஒரு பயணம்' ஆகியன லக்பிமா' சிங்களப் பத்திரிகையின் வாரவெளியீட்டில் வெளியாகியுள்ளன. எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலினையும் மொழிபெயர்ப்பதில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

1. முதலில் உங்களைப்பற்றிய அறிமுகமொன்றினைத் தாருங்கள். உங்களது எழுத்துப்பணியின் ஆரம்பம், குடும்பம் போன்ற விடயங்கள்..?

நான் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தில் திஸ்ஸமஹாராம (Tissamaharama) நகரத்தில் பிறந்தேன். பிறந்த திகதி 20/06/1972. அப்பா ஒரு விவசாயி. அம்மாவுக்குத் தொழில் இல்லை. (ஒரு குடும்பப் பெண்.) இப்போது அவர்கள் உயிருடனில்லை. மறைந்து விட்டார்கள். எனக்கு எட்டு சகோதர, சகோதரிகள். நான் தான் கடைக்குட்டி. இளையவன். நெதிகம்வில (Nadigamwila) என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகின்றேன். திஸ்ஸமஹாராம – தெபரவெவ (Debarawewa) தேசீய கல்லூரியில் படித்தேன். பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிப்புற மாணவனாக இளங்கலைப் (B.A) பட்டமும், களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் (M.A) பட்டமும் பெற்றுள்ளேன். திருமணமாகிவிட்டது. மனைவியின் பெயர் ஸுமித்ரா. ஆரம்பத்தில் ‘லக்பிம’ சிங்கள பத்திரிகையின் நிருபராகப்பணியாற்றினேன். அதுவே என் முதற் தொழில்.

சிறிது காலம் திஸ்ஸமஹாராம பிரிவேனாவில் ஓர் ஆசிரியராகவும் வேலை பார்த்தேன். 2005 ஆண்டிலிருந்து) 'காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தில்' (Department of Land Title Settlement)  ஓர் அபிவிருத்தி உத்தியோகத்தராக (Development officer)  வேலை பார்த்து வருகின்றேன்.

பாடசாலைக் காலத்திலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகின்றேன். அவை பல பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. அவற்றில் சில இலக்கிய போட்டிகளில், சான்றிதழ்கள், பரிசுகள் பெற்றுள்ளன. ஆதலால் ஆர்வம் அதிகரித்தது. அப்படி தான் நான் இலக்கியத் துறைக்கு வந்தேன்.

2. தமிழ்ப்படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டுமென்ற ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? தமிழ் மொழியைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? இவ்வகையான ஆர்வம் ஏற்படுவதற்கு உங்களைத் தூண்டிய விடயங்கள் யாவை?

 நான் வாழும் பகுதியில் தமிழ் மொழி பாவனையிலில்லை . கல்விப்பொதுத்தராதர உயர்தரப் (G.C.E - A/L)  பரீட்சைக்காக விஞ்ஞான பாடங்களை படிக்கும் காலத்தில் நல்லோர் ஆசிரியரைச் சந்தித்தேன். அந்த ஆசிரியரின் பெயர் M.H.M. நவாஸ். அவர் மூலம் தமிழ் மொழியைப் படித்தேன். A/L முடித்தவுடன்  றுஹுண பல்கலைக்கழகத்தில் ‘Certificate course in Tamil language’ படித்து சான்றிதழைP பெற்றுள்ளேன். மற்றும் ‘மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்’ (Centre for policy alternatives) மூலம் நடாத்திய ‘விபாஷா மொழிபெயர்ப்பு நிகழ்ச்சி திட்டத்தி'ல்  திறமைச் சித்தி பெற்று,  'டிப்ளோமா' சான்றிதலைப் பெற்றுள்ளேன். அப்பாட நெறியைக் கற்கும்போது பிரபல உரை மொழிபெயர்ப்பாளரான எஸ்.சிவகுருநாதன் அவர்களை சந்திக்கும் சந்தர்பம் கிடைத்தது. தமிழ்ப் படைப்புகளை சிங்களத்துக்கு மொழிபெயர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி அவர்தான் எனக்கு எடுத்துரைத்தார். இந்தப் பாதைக்கு என்னைக் கொண்டு வந்தவர் அவர். அது மட்டுமல்ல. இலங்கையில் பிரபல தமிழ் எழுத்தாளர்களின் நூல்களையும் அவர் எனக்குத் தந்தார். அவற்றை வாசிக்கும்போது அந்த அனுபவங்களை எனது சிங்கள சமூகத்துக்கும் தர வேண்டும் என நினைத்தேன்.

முதலாவதாக நான் தமிழ்ச் சிறுகதைகளை மொழிபெயர்த்து சிங்கள பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலம் வெளியிட்டேன். பிறகு தான் நூல்களாக வெளியிட ஆரம்பித்தேன். என் முதலாம் நூல் தான் ‘பேத நெத்தி ஹதவத்’ (பேதமில்லா நெஞ்சங்கள்) என்ற சிறுகதைத் தொகுப்பு. அது 2003ஆம் ஆண்டில் வெளியானது. 2004ஆம் ஆண்டில் அரசகரும மொழிகள் திணைக்களம் (Department of official languages)  நடாத்திய ‘எழுத்துக்கலை மூலம் மொழி அபிவிருத்திக்கும், இன ஒற்றுமைக்கும் வழங்கும் பங்களிப்புக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூலைத் தெரிவு செய்வதற்கான போட்டியில்’ முதலாம் இடத்தை அந்த நூல் பெற்றது. அதற்கான பரிசாக 10,000 ரூபாய் பெறுமதியுள்ள ஒரு காசோலையும் கிடைத்தது. என் ஆர்வமும் அதிகரித்த்து.     அவ்வாறு தான் இத்துறைக்கு பிரவேசித்தேன்.

Friday, March 23, 2018

காலத்தால் அழியாத கானங்கள்: "மல்லிகைக்கா மல்லிகைக்கா எங்கடி போறே". சாஜிசுப்புலக்சுமி இரட்டையரின் அபார நடனம்! உலக சமாதானத்தை வலியுறுத்தும் பட்டுக்கோட்டையாரின் கருத்துமிக்க பாடல்! - வ.ந.கிரிதரன் -



இப்பாடலில் தற்செயலாகத்தான் தடுக்கி விழுந்தேன். ஆனால் நான் விழுந்ததோ பெரும் புதையல் ஒன்றின் மீது என்பதை இக்கானத்தைக் கேட்டதும், பார்த்ததும்தாம் உணர்ந்துகொண்டேன்.  கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கருத்தாழம் மிக்க, கற்பனையாற்றல் மிக்க பாடலில், அப்பாடலைப் பாடி ஆடும் அக்குழந்தைகளின் நடனத்தில், பாடலைப்பாடும் பாடகர்களின் குரலினிமையில் நான் என்னையே மறந்தேன். மேலுமோர் அரிய தகவலையும் இப்பாடலைப் பாடி ஆடும் அக்குழந்தை நடனமணிகளைப்பற்றி அறிந்து கொண்டேன்.

முதலில் கவிஞரின் கற்பனைச்சிறப்பினைச் சிறிது பார்ப்போம். மல்லிகைக்கும், ரோஜாவுக்குமிடையில் சிறு தர்க்கம் முகிழ்க்கிறது. ரோஜா மல்லிகையைப்பார்த்து கேட்கிறாள்:

 "மல்லிகைக்கா மல்லிகைக்கா எங்கடி போறே
கொஞ்சம் சொல்லடியக்கா
எதுக்கு இப்படி குலுக்கி நடக்குறே?".

அதற்கு மல்லிகை பதிலளிக்கின்றாள் இவ்விதம்:

"நான் மணவறையை சிங்காரிச்சு
வாசனைய அள்ளித் தெளிச்சு
வாறவங்க எல்லாரையும் மயக்கப் போறேன்
நான் மயக்கப் போறேன்
புது மணப் பொண்ணு கூந்தலிலே
மணக்கப் போறேன்"

பதிலுக்கு ரோஜா மல்லிகையைப்பார்த்து சீண்டுகிறாள் இவ்விதம்:

Thursday, March 22, 2018

அ.ந.க.வின் 'குருட்டு வாழ்க்கை' சிறுகதையும், 'மனக்கண்' நாவலும் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -


அறிஞர் அ.ந.கந்தசாமியின் முதலாவது சிறுகதையினை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. எழுத்தாளர் செங்கை ஆழியான் தொகுத்து பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு - கிழக்கு மாகாணம், திருகோணமலை) வெளியிட்டிருந்த 'ஈழகேசரிச் சிறுகதைகள்' தொகுப்பு நூல் உள்ளடக்கியுள்ள 'குருட்டு வாழ்க்கை' என்னும் சிறுகதைதான் அது. 17.5.1942 ஈழகேசரிப்பிரதியில் வெளியான சிறுகதை இது. இதனை எழுதியபோது அ.ந.க.வுக்கு வயது பதினேழு. இதுவே அவரது முதலாவது சிறுகதை என்று செங்கை ஆழியான நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் சிறுகதை வெளியாகியுள்ள பக்கத்தில் அ.ந.க 'சிப்பி' என்னும் புனைபெயரில் 'பகல் வெள்ளி' (1941) என்னுமொரு சிறுகதையினையும் ஈழகேசரியில் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி 'பகல்வெள்ளி'யே அ.ந.க.வின் முதலாவது சிறுகதையாகவிருக்க வேண்டும். 'குருட்டு வாழ்க்கை' வெளியான ஆண்டு 1942. 'பகல் வெள்ளி' வெளியான ஆண்டு 1941. அ.ந.க.வின் பிறந்த ஆண்டு 1924 என்பதால் (ஆகஸ்ட் 8, 1924) இச்சிறுகதை வெளியானபோது அவருக்கு வயது பதினேழு.

இச்சிறுகதையை வாசித்த போது இன்னுமொர் உண்மையினையும் அவதானிக்க முடிந்தது. அ.ந.க எழுதி தினகரனில் தொடராக வெளியான ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. இந்நாவலின் கதையமைப்பும், 'குருட்டு வாழ்க்கை' சிறுகதையின் கதையமைப்பூம் ஒரே மாதிரியானவை. குருட்டு வாழ்க்கை சிறுகதையில் வரும் நாயகன் அம்மை நோயினால் கண் பார்வையினை இழக்கின்றான். இது போலவே மனக்கண் நாவலிலும் நாயகன் ஶ்ரீதர் கண் நோயினால் கண் பார்வையினை இழக்கின்றான். இரண்டிலுமே கண் பார்வை இழந்த நாயகர்களின காதலிகள் நாயகர்களை ஒதுக்கி விடுகின்றார்கள். இரண்டிலுமே நாயகர்களின் பெற்றோர்கள் அவர்களது காதலிகள் என்று கூறி வேறு பெண்களை அவர்களுக்கு மணம் முடித்து வைத்து விடுகின்றார்கள். இரண்டிலுமே நாயகர்களுக்கு கண் சத்திர சிகிச்சை செய்து பார்வை திரும்புகின்றது. இரண்டிலுமே உண்மை அறிந்த நாயகர்கள் தாம் பெற்ற பார்வையினைத் தாமே பறித்து விடுகின்றார்கள். அவ்விதம் செய்வதன் மூலம் காதலிகள் அல்லாத மனைவியர்களுடன் குடும்பத்தை நடாத்த அவர்களால் முடிகின்றது. ஆனால் குருட்டு வாழ்க்கை சிறுகதை இந்நிலையுடன் நின்று விடுகின்றது. மனக்கண் நாவலிலோ கதை மேலும் தொடர்கின்றது. மனக்கண் நாவலில் நாயகன் தன்னை மணந்து கொண்ட பெண்ணைப்பற்றி மேலும் சிந்திக்கின்றான். அவளது தியாகத்தின் அளவை உணர்ந்துகொள்கின்றான். மீண்டும் கண் பார்வையைப் பெற விரும்புகின்றான். செல்வந்தரும், செருக்கும் மிக்க அவனது தந்தையார் இறுதியில் தன் கண்களைக் கொடுத்து அவனைக் காப்பாற்றி மறைந்து விடுகின்றார்.

Wednesday, March 21, 2018


அண்மையில் மறைந்த 'புதிய பார்வை' சஞ்சிகையின் ஆசிரியரான ம.நடராஜனுக்கு இலக்கியம், அரசியல் என இரு முகங்கள். கலை, இலக்கியரீதியில் அவரது 'புதிய பார்வை' சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. அந்த வகையில் அதன் ஆசிரியரான ம.நடராஜனும் தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்தவர்களிலொருவராகின்றார். முனைவர் ம.நடராஜன் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளிலும் அப்பிமானம் பெற்றவர். 'மகளிர் முன்னேற்றத்தில் இதழ்களின் பங்கு' என்னும் தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். அரசியலைக் கடந்து கலை, இலக்கியவாதிகள் மத்தியிலும் நட்பினைப் பேணியவர். 1967இல் தமிழகத்தில் நடைபெற்ற தனது மாணவப்பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு 'சுபமங்களா' வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் , அதே சாயல் மிக்க வடிவமைப்புடன் வெளியான சஞ்சிகை 'புதிய பார்வை'. அக்காலகட்டத்தில் அதன் இணை ஆசிரியரான பாவை சந்திரனின் 'நல்ல நிலம்' நாவல் தொடராக வெளியாகிக்கொண்டிருந்தது.

புதிய பார்வை சஞ்சிகை விடயத்திலும், அதன் ஆசிரியர் ம.நடராஜன் மீதும் என் மனத்தில் மென்மையான உணர்வுமுண்டு. அதற்குக் காரணமுமுண்டு. 1996இல் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம் மங்கை பதிப்பகத்துடன் (கனடா) இணைந்து வெளியிட்ட எனது நூலான 'அமெரிக்கா' (அமெரிக்கா சிறு நாவல் மற்றும் சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு) வெளியானபோது புதிய பார்வை அதற்கு புத்தக மதிப்புரையொன்றினை எழுதி தனது மே 1997 இதழில் வெளியிட்டிருந்தது. அதனை ஜி.சுவாமிநாதன் என்பவர் எழுதியிருந்தார். 'அமெரிக்கா'தான் தமிழகத்தில் வெளியான எனது முதலாவது நூல். ஆனால் அந்த நூலுக்கு மதிப்புரை எழுதி என் நூலுக்கு வரவேற்பு கொடுத்திருந்த 'புதிய பார்வை' சஞ்சிகை மீது அந்த விடயத்தில் எனக்கு எப்பொழுதுமே மதிப்புண்டு. குறை நிறைகளுடன் அமைந்திருந்த அந்த விமர்சனம் வெளியான 'புதிய பார்வை' சஞ்சிகைப்பக்கத்தினையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள்.

கவிதை: பரிணாமம் - வ.ந.கிரிதரன் -















ஒரு காலத்தில் நான் தேசியவாதியாகவிருந்தேன்.
ஆண்ட பரம்பரையின் பெருமைகளில் மனதொன்றிக்
கற்பனைகளில் மூழ்கியிருந்தேன்.
பின்னுமோர் சமயம் நான் இடதுசாரித்தேசியவாதியானேன்.
தேசியம் கலந்த புரட்சியில் மனதொன்றியிருந்தேன்.
பின்னர் நான் மானுட வாதியானேன்.
'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' என்னும்
என் மூதாதையின் அன்றைய நோக்கில்
வியந்து கிடந்தேன்.
இன்று நானோர் பிரபஞ்சவாதி.
எதனையும் பிரபஞ்ச நோக்கில் வைத்து
அணுகுகின்றேன்.
தேசியத்தை, மார்க்சியத்தை, மானுடநோக்கினை
அவற்றின் நிலையில் வைத்து அணுகுகின்றேன்.
பிரபஞ்ச நோக்கில், மானுட நோக்கில்,
வைத்து அனைத்தையும் அணுகுகின்றேன்.
ஒரு சமயம் முரண்பாடுகளைப் பகை முரண்பாடுகளாக
அணுகினேன். இன்றோ?
நட்புரீதியில் அவற்றைக் கையாள்கின்றேன்.
இன்னும் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டாதீர்கள்!
கிணற்றுக்குள்ளிருந்து கத்தும் நுணல்களாக இருக்காதீர்கள்.
வெளியில் வாருங்கள்!
விரிந்து கிடக்கும் நீல வானைப் பாருங்கள். ஆங்கு
கொட்டிக் கிடக்கும் நட்சத்திரக் குவியல்களைப் பாருங்கள்.
வெளியினூடு அதி வேகங்களில் விரையும்
சுடர்க்கூட்டங்களைப் பாருங்கள்.
'காலவெளி'யின் மாயா ஜாலங்களைப் பாருங்கள். அவற்றில்
மனத்தைப் பறிகொடுங்கள்.
பிரமாண்டமானதொரு வெளியில் விரையுமொரு வாயுக் குமிழிக்குள்
வளைய வரும் இருப்பைப் பாருங்கள்.
வெளியில் வாருங்கள். விரிந்து கிடக்கும் வானைத்தைப்போல
உங்கள் மனமும் விரிவதை அறிவீர்கள்.
புரிந்துகொள்வீர்கள்.

















ngiri2704@rogers.com

Monday, March 19, 2018

எனது சிறுகதையான 'நடு வழியில் ஒரு பயணம்' சிங்கள மொழியில்.... வ.ந. கிரிதரன் -


இலங்கையிலிருந்து வெளியாகும் லக்பிமா சிங்களத் தினசரிப்பத்திரிகையின் 18.03.2018 ஞாயிறு பதிப்பில் எனது சிறுகதையான 'நடுவழியில் ஒரு பயணம்' சிறுகதையின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. இச்சிறுகதை டிசம்பர் 2006இல் 'பதிவுகள்' மற்றும் 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியாகிய சிறுகதை. இச்சிறுகதையினைத் தமிழிலிருந்து சிங்கள  மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவர் எனது முகநூல் நண்பரும், பல தமிழ்ப் படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவருமான எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த. அவருக்கும், லக்பிமாவில் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பானவருமான எழுத்தாளர் கத்யான அமரசிங்க (Kathyana Amarasinghe)  அவர்களுக்கும் நன்றி.

இச்சிறுகதை வெளியான 'லக்பிமா' :  http://epaper.lakbima.lk/last_18_03_18/manjusawa.pdf

ஏற்கனவே எனது இன்னுமொரு சிறுகதையான 'உடைந்த காலும், உடைந்த மனிதனும்' சிறுகதையினை ஜி.ஜி.சரத் ஆனந்த சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்து 'லங்கஇரிடா' (Lankairida)) பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். அச்சிறுகதை 'லங்கஇரிடா'வின் பெப்ருவரி 18, 2018 பதிப்பில் வெளியாகியுள்ளது.

'நடுவழியில் ஒரு பயணம்' சிறுகதையினை முழுமையாகக் கீழே வாசிக்கலாம்:

'நடுவழியில் ஒரு பயணம்' - வ.ந.கிரிதரன் -


பார்வைக்கு சோமாலியனைப் போலிருந்தான். 'டவரின்' வீதியும் 'புளோர்' வீதியும் சந்திக்குமிடத்தில் , தென்மேற்குத் திசையில் (இங்கு 'தொராண்டோ' நகரில் வீதிகளெல்லாமே கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் திசைகளை மையமாக வைத்து முகவரிகளைக் கண்டுபிடிப்பதோ அல்லது இருப்பிடங்களை அறிந்து கொள்வதோ மிகவும் இலகுவானது). 'பஸ்'சை எதிர்பார்த்து நின்றிருந்தான். காலம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவு பாதுகாவற் பணியினை முடித்துக் கொண்டு என்னிருப்பிடம் திரும்புவதற்காக 'பஸ்' தரிப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயத்தில்தான் அவனை நோக்கினேன். நள்ளிரவில் பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் சமயங்களில் இவ்விதம் 'பஸ்'சினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சந்தர்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகள். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, இரவை, இரவு வானை எல்லாமே இரசித்துக் கோண்டிருப்பது என் ஆர்வங்களிலொன்று. இவ்விதமான இரசித்தல் மூலம் நான் அறிந்து கொண்டவை ஏராளம். ஏராளம். நூல்கள், பத்திரிகைகள் போன்ற வெகுசன ஊடகங்கள் மூலம் நான் அறிந்தவற்றை விட இவ்விதமான பொழுதுகளில் நான் அறிந்து கொண்டவை, உணர்ந்து கொண்டவை மிக மிக அதிகம். 'லாண்ட்ஸ்டவு'னுக்கருகிலிருந்த கேளிக்கை விடுதியான 'ஹவுஸ் ஆவ் லங்காஸ்டர்'இலிருந்து  நிர்வாண நடனமாதர் சிலர் வெளியில் வந்திருந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி மல்லர்களைப் போன்ற தோற்றமுடைய இரு வெள்ளையர்கள் , பார்வைக்கு இத்தாலியர்களைப் போலிருந்தார்கள், அப்பெண்களுடன் அளவளாவியபடி கவசங்களாக நின்றார்கள். வீதியின் அடுத்த பக்கத்தில், வடபுறத்தில், சில கறுப்பின போதை மருந்து விற்றுப் பிழைக்கும் சுய வியாபாரிகள் சிலர் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தபடியிருந்தார்கள். மேலும் சிலர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள் என்னைப் போல். இததகையதொரு சந்தர்ப்பத்தில்தான் நான் அவனை அந்த பஸ் தரிப்பிடத்தில் சந்தித்தேன்.

அமரர் செங்கை ஆழியான் நினைவாக.... வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் செங்கை ஆழியான் இன்று மறைந்ததாக முகநூல் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். அண்மையில் எழுத்தாளர் முருகபூபதியின் பதிவொன்றில் செங்கை ஆழியான் உடல்நலமிழந்து இருந்த விபரத்தை அறிந்தபோது அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுமென வேண்டி முகநூலில் பதிவொன்றினையிட்டிருந்தேன். அது தவிர அவர் பற்றி அவ்வப்போது வேறு சில பதிவுகளையும் முகநூலில் இட்டிருக்கின்றேன். அப்பதிவுகள் செங்கை ஆழியான் எவ்விதம் என் இளம் பருவத்தில் என்னைப்பாதித்தார் என்பதை வெளிப்படுத்தும் பதிவுகள் என்பதாலும், அவை அவரது பன்முக இலக்கியப்பங்களிப்பினைப் புலப்படுத்துவதாலும், அவற்றைத்தொகுத்து என் அஞ்சலியாக இங்கு பதிவிடுகின்றேன்.

ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் செங்கை ஆழியானுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. ஈழநாடு சிறுகதைகள், மறுமலர்ச்சி சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள் போன்ற தொகுப்புகளை வெளியிட்டதன் மூலம், ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகினை ஆவணப்படுத்தி மிகுந்த பயனுள்ள பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

புனைவு, அபுனைவு என இவரது பங்களிப்பு பரந்தது. ஈழத்தமிழர்தம் வரலாறு பற்றி இவர் எழுதிய கட்டுரைகளும், நூல்களும் முக்கியமானவை. புனைவுகளிலும் சமுகக்கதைகளுடன், வரலாற்றுக்கதைகளையும் எழுதியுள்ளார். அத்துடன் 'ஆச்சி பயணம் போகின்றாள்', 'நடந்தாய் ஆறு வழுக்கியாறு!' மற்றும் 'கொத்தியின் காதல்' ஆகிய நகைச்சுவைப்புனைவுகளையும் எழுதியிருக்கின்றார்.

இலங்கை அரச படைகளினால் யாழ்ப்பாணம் எரியுண்டபோது நீலவண்ணன் என்னும் பெயரில் அவற்றை ஆவணப்படுத்தும் அபுனைவுகளை எழுத்தாளர் அமரர் வரதர் அவர்களின் வேண்டுகோளின்பேரில் எழுதியிருக்கின்றார்.

செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' - வ.ந.கிரிதரன் -

'செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' நாவல் அவரது முதலாவது நாவல். 'கலைச்செல்வி' நாவல் போட்டியில் பாராட்டுப்பெற்ற நாவல். பின்னர் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக நூலாக வெளிவந்த நூல். என் மாணவப்பருவத்தில் நான் வாங்கி வைத்திருந்த இலங்கையைச்சேர்ந்த வரலாற்று நாவல்களிலொன்று 'நந்திக்கடல்' . அதனை செங்கை ஆழியானின் தமையனாரான புதுமைலோலனின் 'அன்பு புத்தகசாலை'யில் வாங்கியிருந்தேன். அடுத்த வரலாற்று நாவல் வ.அ.இராசரத்தினத்தின் 'கிரெளஞ்சப்பறவைகள்'. ஒரு ஞாபகத்துக்காக இந்த நந்திக்கடல் நாவலைத் தேடிக்கொண்டிருந்தேன். இந்த நாவல் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பின்னணியாகக் கொண்டு , சங்கிலிகுமாரனை நாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.

ஒருமுறை நூலகம் கோபி நூலகம் பற்றிய பதிவினையிட்டிருந்தபோது அந்நூலைப்பற்றியும் தெரிவித்திருந்தேன். உடனேயே 'நந்திக்கடல்' யாரிடமாவது இருந்தால் நூலகத்துக்குத் தந்து உதவவும் என்று அவர் முகநூலில் அறிவித்திருந்தார். அண்மையில் அவரிடமிருந்து வந்த தகவலில் மகிழ்ச்சிக்குரிய விடமொன்றிருந்தது. அது: 'தற்போது நூலகத்தில் 'நந்திக்கடல்' நூல் வாசிக்கக் கிடைக்கிறது என்பதுதான்.

ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் இன்னும் நூலுருப்பெறாமல் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் படிப்படியாக 'நூலகம்' தளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன ( 'மறுமலர்ச்சி', 'கலைச்செல்வி' இதழ்கள் உட்பட).

ழகரம் 5 இலக்கிய இதழ் (மலர்) பற்றி... வ.நகிரிதரன் -

ழகரம் 5 இலக்கிய மலரின் வடிவமைப்பைப் பொறுத்த அளவில் ஓரிரு புறக்கணிக்கத்தக்க குறைபாடுகள் இருந்தாலும், மொத்தத்தில் நிறைவான வடிவமைப்பு. இதுவரை கனடாவில் வெளியான இலக்கிய இதழ்களில் தரத்தில் இதனை முதல் நிலையில் வைப்பதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை. சிறிய குறைபாடுகள் என்றால்.. அதற்கு உதாரணமாக இதழில் வெளியான எனது கட்டுரையான அ.ந.க.வின் 'மனக்கண்' கட்டுரையைக் குறிப்பிடலாம். இந்தக் கட்டுரைக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. அது: இதுவரையில் அ.ந.க.வின் ஒரே நாவலான 'மனக்கண்' நாவலுக்கு யாருமே விமர்சனம் எழுதவில்லை என்னைத்தவிர. அதற்கு நாவல் தொடராக வெளிவந்தபோதும் இதுவரையில் நூலாக வெளிவராததும் காரணங்களிலொன்றாக இருக்கலாம்.

இதழில் கட்டுரையில் எனக்கு நாவல் பிடித்திருப்பதற்கு நான்கு காரணங்களைக் குறிப்பிட்டிருப்பேன். அதில் முதல் மூன்று காரணங்களையும் உரிய சிறிது பெரிய , தடித்த எழுத்துருக்களைப்பாவித்து வடிவமைத்திருக்கின்றார்கள். நான்காவது காரணமான 'நாவல் கூறும் பொருள்' என்பதற்கும் அவ்விதம் பாவிக்க மறந்து விட்டார்கள். மேலும் கட்டுரையில் 'மனக்கண்' நாவலிலிருந்து சில பகுதிகளை உதாரணத்துக்காகப் பாவித்திருக்கிறேன். அப்பகுதிகளை ஏனைய பகுதிகளிலிருந்து சிறிது வேறுபடுத்திக்காட்டியிருக்க வேண்டும். அதனைச்செய்யத்தவறி விட்டார்கள். ஆனால் இந்தக் குறைகள் முன்பே கூறியுள்ளதுபோல் புறக்கணிக்கத்தக்கவை.

மலரின் முதலாவது கட்டுரையான 'தமிழ்நதி'யின் 'எழுத்தின் பாலினம்' இதழின் முக்கியமான கட்டுரைகளிலொன்று. மேனாட்டு இலக்கியத்தில் அன்றிலிருந்து இன்றுவரை, எவ்விதம் பெண் எழுத்தாளர்கள் அவர்கள் பெண்களாக இருக்கின்ற காரணத்தினால் ஆண் பெயர்களில் மறைந்திருந்து எழுதினார்கள், எழுதி வருகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் நல்லதொரு கட்டுரை. கட்டுரை புகழ் பெற்ற ஆண் எழுத்தாளர்கள் பலரால் காலத்துக்குக் காலம் பெண் எழுத்தாளர்கள் எவ்வளவுதூரம் அவர்களது பால் (Gender)  காரணமாகக் கீழத்தரமாக எள்ளி நகையாடப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கட்டுரை உதாரணங்களுடன் வெளிப்படுத்துகிறது.

'தோழர் பால'னின் 'இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு' பற்றி.... வ.ந.கிரிதரன் -

தோழர் பாலனின் 'இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு' என்னும் சிறிய நூல் தோழர் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. 'கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது ' என்பார்கள். அதற்கொப்ப அளவில் சிறியதானாலும், கூறும் பொருளில் காத்திரமானதாக, புரட்சிகரமானதாக அமைந்துள்ள நூலிது. இலங்கை மீதான இந்தியாவின் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவரீதியிலான தலையீடுகளை விபரிப்பதும், இவற்றால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்களை வெளிப்படுத்துவதும், எவ்விதம் இந்தியத்தலையீட்டிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கு இலங்கையின் மக்கள் அனைவரும் இன, மத , மொழி ரீதியிலான பிரிவுகள் ஏதுமற்று , ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதையும் தர்க்கரீதியாக விபரிப்பதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். இது தன் நோக்கத்தில் வெற்றியே அடைந்திருக்கின்றது என்பதை இதனை வாசிக்கும்போது உணர முடிகின்றது.

பொதுவாக இந்தியாவின் தலையீடு இலங்கையிலுள்ளது என்பது யாவரும் அறிந்ததே. இந்தியாவை மீறி இலங்கையால் எதுவுமே செய்ய முடியாது என்பதும் யாவரும் அறிந்ததே. இந்தியாவைப்பொறுத்தவரையில் அதன் அயல் நாடுகளுடனான வெளிநாட்டுக்கொள்கை அதன் தேசிய நலன்களுக்கு அமையவே அமைந்துள்ளது. அயல் நாடுகள் அதன் தேசிய நலன்களுக்கு முரணாகச் செயற்படும்போது அது அந்நாடுகளை ஆக்கிரமிக்கவும் தயங்காது என்பதை வரலாறு காட்டி நிற்கிறது. அயல் நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தனது நலன்களுக்குச் சார்பாகப் பயன்படுத்துவதில் இந்தியா ஒருபோதுமே தயங்கியதில்லை. இதனை இந்நூல் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இதுவரை காலம் இலங்கையின் மீதான இந்தியத்தலையீட்டினை வரலாற்றுக்கண் கொண்டு , சுருக்கமாக ஆராயும் இந்நூல், , இந்தியா எவ்விதம் தன் அயல்நாடுகளில் தன் நலன்களுக்காகத்தலையிடுகின்றது என்பதையும் புள்ளி விபரங்களுடன் வெளிப்படுத்துகிறது.

ராஜாஜி ராஜகோபாலனின் 'குதிரையில்லாத ராஜகுமாரன்' பற்றிச்சில குறிப்புகள்... வ.ந.கிரிதரன் -

ராஜாஜி ராஜகோபாலனின் சிறுகதைத்தொகுப்பான 'குதிரையில்லாத ராஜகுமாரன்'  படித்தேன்.  தொகுப்பில் நான் வாசித்த கதைகளின் அடிப்படையில் என் கருத்துகளை இங்கு பதிவு செய்கின்றேன்.

நான் வாசித்த கதைகளில்  மிகச்சிறந்த சிறுகதைகளாக நான் கருதுவது 'பத்தியம்' மற்றும் 'கடவுளும் கோபாலபிள்ளையும்' ஆகிய கதைகளைத்தாம். 'பத்தியம்'  ஆயுர்வேத வைத்தியர் மயில்வாகனம் அவர்களைப்பற்றியது. கதையில் ஒன்றிற்கும் அதிகமான இடங்களில் ஆயுள்வேத வைத்தியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பரியாரியார் அல்லது வைத்தியர் மயில்வாகனம் என்றழைக்கப்படும் ஆயுர்வேத வைத்தியரின் இன்றைய நிலை 'மேனாட்டு' வைத்திய முறையின் காரணமாகப்பாதிக்கப்பட்ட நிலையில் , வறுமையில் அவர் வாடுகின்றார். அவ்விதம் வாடும் நிலையில், அவரிடம் அவரது ஊரைச்சேர்ந்த இரு இளைஞர்கள் வருகின்றார்கள். எதற்கு? கொழும்பில் வேலை பார்க்கும் அவர்கள் , விடுமுறைக்காக ஊருக்கு வருகின்றார்கள். வந்தவர்கள் விடுமுறைக்காலத்தைச்சிறிதி நீட்டி விட்டார்கள். அதற்குக்காரணத்தைக்கூற வேண்டுமே? அதற்காக ஆயுர்வேத வைத்தியரிடம் ஒரு 'மெடிக்கல் ரிபோர்ட்' காசு கொடுத்து வாங்க வருகின்றார்கள். ஆனால் அவர்களோ தமது நோய்களுக்காக ஆங்கில வைத்தியத்தை நாடுபவர்கள் என்பதை அறிந்ததும் மயில்வாகனத்தார் ' சேர்ட்டிபிக்கட்டை நம்பி வந்தால் போதுமோ? வைத்தியத்தை நம்பியல்லோ வரவேணும்" என்கின்றார். அதற்கு அவர்கள் காசு எவ்வளவென்றாலும் தரத்தயார் என்கின்றார்கள். அதற்கு அவரோ "அது எனக்குத்தேவையில்லை. நான் வைத்தியத்துக்கு மாத்திரம் காசு வாங்குவன். போட்டு வாருங்கோ" என்று கூறி அனுப்பி விடுகின்றார். ஒரு சிறுகதைக்குரிய அம்சங்களுடன் , நவீனத்தொழில் நுட்பம் எவ்விதம் பாரம்பரியத்தொழில் நுட்பத்தினைப் பாதிக்கின்றது என்பதை எடுத்தியம்பும் 'பத்தியம்' அதே சமயம் வைத்தியர் மயில்வாகனத்தாரின் தன் தொழில் மீதான பக்தியினையும், கொள்கைப்பிடிப்பினையும் எடுத்துக்காட்டுகிறது. வறுமைப்பிடியில் வாடும் சமயத்தில் கூட அவர் பணத்துக்காகத் தன் னை விற்றுவிடவில்லை. கதை 'டாக்டர் மயில்வாகனம் புரண்டு படுத்தார்' என்று ஆரம்பமாகின்றது. ஆயுர்வேத வைத்தியரான, பரியாரியான மயில்வாகனத்தாரை வைத்தியர் மயில்வாகனத்தார் புரண்டு படுத்தார் என்று ஆரம்பித்திருக்கலாமென்று தோன்றியது. ஆங்கில வைத்திய முறையினை எதிர்ப்பவர் அவர். அவரை அறிமுகப்படுத்தும்போது ஆங்கிலத்தைத்தவிர்த்திருக்கலாமே.

பொன் குலேந்திரனின் 'முகங்கள்' - வ.ந.கிரிதரன் -

கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் பொன்.குலேந்திரனின் 'முகங்கள்' சிறுகதைத்தொகுதியினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. 'ஓவியா பதிப்பகம்' (தமிழகம்) வெளியீடாக , அழகான அட்டையுடன் வெளிவந்திருக்கின்றது. தான் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களை மையமாக வைத்து அவரால் எழுதப்பட்ட 21 சிறுகதைகளின் தொகுப்பிது.

இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளை பின்வருமாறு வகைப்படுத்த முடிகிறது: குறிப்பிட்ட ஆளுமை மிக்க ஒருவர் பற்றிய விவரணச்சித்திரங்களாச் சில கதைகள் அமைந்துள்ளன. சந்திக்கடை சங்கரப்பிள்ளை, வைத்தியர் வைத்திலிங்கம், சண்டியன் சங்கிலி இஸ்மாயில், நாட்டாண்மை நாச்சிமுத்து, நாவிதர் நாகலிங்கம், பியூன் பிரேமதாசா, அரசாங்க அதிபர அபயசேகரா, சின்னமேளக்காரி சிந்தாமணி போன்ற சிறுகதைகளை இவ்வகையில் அடக்கலாம். இவ்விதமான சிறுகதைகள் பொதுவாக ஒருவரைப்பற்றி அல்லது ஒரு பிரதேசமொன்றினைப்பற்றிய விவரணைகளாக, ஆரம்பம் , முடிவு போன்ற அம்சங்களற்று அமைந்திருக்கும். இதற்கு நல்லதோர் உதாரணமாகப் 'புதுமைப்பித்தனின்' புகழ் பெற்ற சிறுகதைகளிலொன்றான 'பொன்னகரம்' சிறுகதையினைக் குறிப்பிடலாம்.

இன்னும் சில சிறுகதைகள் குறிப்பிட்ட ஆளுமை மிக்க ஒருவரைபற்றிய விவரணையாக இருக்கும் அதே சமயம், எதிர்பாராத திருப்பமொன்றுடன், அல்லது முக்கியமானதொரு நீதியினைப் புகட்டும் கருவினைக்கொண்டதாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

Sunday, March 18, 2018

'பதிவுகள்' இணைய இதழில் வெளியான நூல் மதிப்புரைகள் சில! - வ.ந.கிரிதரன் -

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்ப காலகட்டத்தில் நூல் மதிப்பரைகளை வெளியிட்டு வந்தது. நூல் மதிஉப்புரைக்காக தமது படைப்புகளின் இரு பிரதிகளை அனுப்பி வைககவும் என்ற எமது வேண்டுகோளினையேற்று, எழுத்தாளர்கள் தமது படைப்புகளைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைத்தார்கள். நூல் மதிப்புரை பகுதிக்காக அவ்வப்போது பல்வேறு புனைபெயர்களில் மதிப்புரைகள் எழுதுவதுண்டு. அவ்விதம் அவதானி, திருமூலம், மார்க்சியன், ஊர்க்குருவி, வானதி  போன்ற புனைபெயர்களில் எழுதிய நூல் மதிப்புரைககளில் சில  மீள்பிரசுரமாகின்றன ஒரு பதிவுக்காக.

பின்வரும் நூல்களுக்கான மதிப்புரைகளை இங்கு நீங்கள் வாசிக்கலாம்: கே.எஸ்.சிவகுமாரனின் 'அசையும் படிமங்கள் , ஆழியாளின் 'உரத்துப் பேச..., ' நடேசனின் 'வாழும் சுவடுகள்', பாரிஸிலிருந்து வெளிவரும் உயிர் நிழல்!,  அசை அரையாண்டிதழ், ஊடறு: பெண்படைப்பாளிகளின் தொகுப்பு, திலகபாமாவின் கவிதைகள்!, பா.அ. ஜயகரனின் 'எல்லாப் பக்கமும் வாசல்'! , ஆசி. கந்தராஜாவின் 'பாவனை பேசலன்றி..', செ.க.வின் 'சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை', நடேசனின் வண்ணத்திக்குளம்: சில குறிப்புகள்! & காஞ்சனா தாமோதரனின் 'இக்கரையில்..'

மதிப்புரைகளுக்காக நூல்கள் அதிக அளவில் வரத்தொடங்கியதால் அப்பகுதியினை நிறுத்தி வைத்தோம். அதற்குப்பதிலாகத் தற்பொழுது பதிவுகள் இணைய இதழுக்கு நூல்கள் பற்றி அனுப்பப்படும் மதிப்புரைகளை 'நூல் அறிமுகம்' என்னும் பகுதியில் வெளியிட்டு வருகின்றோம். ஏற்கனவே 'பதிவுகளி'ல் வெளியான மதிப்புரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு பதிவுக்காக அவ்வப்போது மீள்பிரசுரமாகும்.


1. . கே.எஸ்.சிவகுமாரனின் 'அசையும் படிமங்கள்'
வெளியீடு: மீரா பதிப்பகம், 191/23 ஹைலெவல் வீதி, கொழும்பு -06, இலங்கை. தொலைபேசி: 826336. விலை: 150 ரூபா | ஆசிரியரின் மின்னஞ்சல்: kssivan.1@juno.com. - பதிவுகள், ஜூன் 2003 இதழ் 42 -

தமிழில் திரைப்படங்கள் பற்றி அண்மைக் காலமாகத் தான் மிகவும் விரிவாக யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் எழுதி வருகின்றார்களெனெ நினைத்தேன். ஆனால் அண்மையில் கே.எஸ்.சிவகுமாரனின் 'அசையும் படிமங்கள்' நூலினை வாசித்த பொழுதுதான் புரிகின்றது சிவகுமாரன் அறுபதுகளிலிருந்தே திரைப்படக் கலை பற்றி அவ்வப்போது தமிழில் எழுதி வந்துள்ள விடயம். இதுவரை காலமும் இலக்கியப் படைப்புகள் பற்றியே இவர் அவ்வப்போது தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருவதாகக் கருதியிருந்த எனக்கு 'அசையும் படிமங்கள்' வியப்பினையே தந்தது.

கொழும்பிலிருந்து மீரா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'அசையும் படிமங்கள்' நூலில் திரைப்படக் கலை மற்றுந் திரைப்படத் திறனாய்வு பற்றிய கட்டுரைகள் காணப்படுகின்றன. மிகவும் எளிமையான தமிழில் சாதாரண ஒரு வாசகருக்குப் புரியக் கூடிய வகையில் எழுதப்பட்டுள்ள ஆரம்பக் கட்டுரைகளாக இவற்றைக் கொள்ளலாம். மிகவும் நுணுக்கமான ஆய்வுக் கட்டுரைகளல்ல இவை. ஆனால் திரைப்படக் கலை, திரைப்படத் திறனாய்வு பற்றி அறிய மற்றும் புரிய விரும்புவோருக்கு வழிகாட்டக் கூடியதொரு முதனூலாக 'அசையும் படிமங்கள்' நூலினக் கூறுவதில் எனக்கு எந்தவித தயக்கமுமில்லை.

அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'வில்லூன்றி மயானம்' - வ.ந.கிரிதரன் -

நூலகம் தளத்தினை மேய்ந்து கொண்டிருந்தபொழுது 'மல்லிகை' சஞ்சிகையின் 15.10.67 இதழ் ஆண்டு மலராக வெளிவந்திருந்தது கண்டேன். உள்ளடக்கத்தினைப் பார்த்தபொழுது அதில் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் (கட்டுரைகள், கவிதைகள் என) வெளிவந்திருந்ததை அறிய முடிந்தது. மேலும் மலரின் சிறப்பினை அதில் வெளிவந்திருந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'வில்லூன்றி மயானம்' என்னும் கட்டுரை அதிகரித்துள்ளது என்றே கூறுவேன். அ.ந.க மறைந்தது 14.02.1968இல். ஆனால் இக்கட்டுரை அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் அவர் எழுதிய கட்டுரை. அந்த வகையில் அவரது கடைசிக்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகளிலொன்றாக நான் இதனைக் கருதுகின்றேன். அ.ந.க.வின் இக்கட்டுரையை இப்பொழுதுதான் முதன் முறையாக அறிகின்றேன். அவரது படைப்புகளைச் சேகரித்துக்கொண்டிருக்கும் எனக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சி. நூலகத்துக்கும், மல்லிகைக்கும் நன்றி நன்றி.

1944இல் சாதியின் பெயரால் நடாத்தப்பட்ட 'வில்லூன்றி மயானப்படுகொலை' பற்றி 1944 நவம்பர் 9ந் தேதி 'தினகரன்' தினசரியில் அ.ந.க வில்லூன்றி மயானம் என்றொரு கவிதையை எழுதியிருக்கின்றார். அப்பொழுது அ.ந.க.வுக்கு வயது இருபது. அதன் பின்னர் மல்லிகையில் இக்கட்டுரையை எழுதும்போது அவருக்கு வயது 43.

அ.ந.க.வின் இக்கட்டுரை 'வில்லூன்றி மயானம்' மிகவும் முக்கியமானது பல விடயங்களில். அவரது அந்திமக் காலத்தில் வெளியான அவரது படைப்புகளில் ஒன்று என்ற வகையில், வில்லூன்றி மயானப் படுகொலையைப்பற்றிக் கவிதை எழுதிய அவர் அப்படுகொலை பற்றி எழுதிய கட்டுரை என்னும் வகையில் .. இவ்விதம் முக்கியம் வாய்ந்த கட்டுரை இது. இக்கட்டுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார்: 

'தேன்மொழி'க் கவிதைகள் - 1 - வ.ந.கிரிதரன் -

 நூலகம்' தளம் பல்வேறு வழிகளிலும் உதவி வருகின்றது. மிகவும் பயனுள்ள அரியதோர் ஆவணத்தளமாக 'நூலகம்' உருமாறி வந்திருக்கின்றது. அத்துடன் 'தேன்மொழி' சஞ்சிகையின் 'நூலகத்தில்' இதுவரை வலையேற்றப்படாத பிரதிகளையும் தந்துதவிய 'நூலகம்' கோபி அவர்களுக்கு நன்றி. 'தேன்மொழிக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைத்தொடரினை எழுதுவதற்கு அவரது இந்த உதவியே முக்கிய காரணம்.

தேன்மொழி சஞ்சிகை கவிதைக்காக வெளிவந்த முதலாவது சஞ்சிகை. மறுமலர்ச்சிக்காலப்படைப்பாளிகளே இச்சஞ்சிகைக்கும் தோற்றுவாய். மறுமலர்ச்சி சஞ்சிகையினை வெளியிட்ட எழுத்தாளர் தி.ச.வரதராஜனே தேன்மொழியின் நிர்வாக ஆசிரியராக விளங்கியவர். இணையாசிரியராக இருந்தவர் கவிஞர் மஹாகவி. 1955இல் நான்கு இதழ்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதழ்கள் வெளியாகியுள்ளனவா என்பது ஆய்வுக்குரிய விடயம். அத்துடன் 'நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நினைவுச்சின்னம்' என்னும் தாரக மந்திரத்துடன் எழுத்தாளர் தி.ச.வரதராஜனை நிர்வாக ஆசிரியராகவும், கவிஞர் மஹாகவியை இணை ஆசிரியராகவும் கொண்டு வெளியான சஞ்சிகை. சஞ்சிகையின் அட்டைப்படம் ஒவ்வொன்றும்  'தங்கத்தாத்தா' சோமசுந்தரப்புலவரின் கவிதை வரிகளைத் தாங்கி வெளியாகியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. சஞ்சிகையின் கடைசிப்பக்கத்தில் தேன்மொழியில் எழுதும் படைப்பாளிகளில் ஒருவரைப்பற்றியச் சுருக்கமான குறிப்பும் காணப்படுகின்றது. மேலதிக விபரங்கள்: அச்சு - ஆனந்தா அச்சகம். தேன்மொழி அலுவலகம்: 226 , காங்கேசன் துறை வீதி, யாழ்ப்பாணம், இலங்கை.  ஆண்டுக்கட்டணம் - ரூ. 3.00. தனிப்பிரதி 23 சதம்.

மறுமலர்ச்சி இதழ் மூலம் ஈழத்தமிழ் இலக்கியத்தில் கால்பதித்த தி.ச.வரதராஜன் (வரதர்) அவர்கள் முதலாவது கவிதைகளுக்காக மட்டும் வெளிவந்த முதலாவது சஞ்சிகையான தேன்மொழியினையும்  வெளியிட்டவர் என்னும் பெருமைக்குள்ளாகின்றார்.

கே.எஸ்.சுதாகரின் 'சேர்ப்பிறைஸ் விசிட்' - வ.ந.கிரிதரன் -



புகலிட எழுத்தாளர்களில் நகைச்சுவை உணர்வு ததும்ப முக்கியமான பிரச்சினைகளைப்பற்றி எழுதுவதில் வல்லவர் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர். வாசிக்கும்போது அவ்வப்போது இதழ்க்கோடியில் புன்னகையை வரவழைக்கும் எழுத்து அவருடையது. நான் வாசிக்கும்போது அனுபவித்து வாசிப்பது வழக்கம். அவருடைய சிறுகதைகளிலொன்று புகலிடத்தமிழ்க் குடும்பமொன்றின் உளவியலை நகைச்சுவை உணர்வு ததும்பச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றது. வாசிக்கும்போதும், வாசித்து முடித்த பின்பும் சிறிது நேரம் என்னால் எழுந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

கதை இதுதான். 'சேர்ப்பிறைஸ் விசிட்' என்பதுதான் கதையின் தலைப்பு. நீண்ட நாட்களாக வருகை தராமலிருந்த இராசலிங்கம்/சுலோசனா தம்பதியினர் திடீரென் சிறீதரன்/பவானி தம்பதியினர் இல்லத்துக்குச் 'சேர்ப்பிறைஸ் விசிட்' அடிக்கின்றனர் :-)

"கனகாலமா வரேல்லைத்தானே! அதுதான் சும்மா ஒருக்கா வந்திட்டுப் போவம் எண்டு" என்று 'சும்மா'வைச் சற்றே அழுத்திச்சொன்னான் இராசலிங்கம். தொடர்ந்து , "அப்பிடியெண்டில்லை. இனி ஈஸ்வரன் சபேப்பிலையிருந்து வெஸ்டேர்ண் சபேப்பிற்கு வாறதுக்கு பத்துப்பதினைந்து டொலர் பெற்றோலுமில்லே செல்வாகுது" காசைக் காரணம் காட்டினாள் சுலோசனா.

"நாங்கள் நினைச்சோம்.. உங்களிலை ஆரோ ஒருத்தருக்கு வேலை பறிபோட்டுதோ எண்டு" உதட்டுக்குள் சிரித்தாள் பவானி."

இவ்விதம் கதை செல்கின்றது. 'உதட்டுக்குள்' சிரித்தாள் என்னும் சொற்பதம் அழகாக பவானியின் உளவியற் போக்கினை வெளிப்படுத்துகின்றது.

வரதபாக்கியானின் (புதுவை இரத்தினதுரை) கவிதை ஒன்று: 'புலிகள் ஆவோம்' - வ.ந.கிரிதரன் -

ஈழத்துக் கவிஞர்களில் கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவரது கவிதைகள் ஈட்டி போல் நெஞ்சினைக் குற்றுபவை. உணர்ச்சிமிக்க உரிமைக் குரலாக ஒலிப்பவை. அவரது எழுத்துப் பங்களிப்புக்கான காலகட்டத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். வர்க்க விடுதலைப்போராட்டக் காலகட்டம். தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டம். ஆரம்பத்தில் இடதுசாரிக் கருத்துகளால், மார்க்சியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுக் கவிதைகள் படைத்தவர் புதுவை. பின்னர் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். முள்ளிவாய்க்காலில் சரணடைந்து காணாமல் போனவர்களில் அவருமொருவர். அவரது அரசியற் கருத்துகளுக்கு அப்பால் ஈழத்துத தமிழ்க் கவிதையுலகில் தடம் பதித்த முக்கியமான கவிஞர்களில் அவருமொருவர். முக்கியமான கவிஞர் ஒருவர் சரணடைந்திருக்கின்றார். அவரைப்பற்றிய எவ்விதத்தகவல்களும் இதுவரை இல்லை. இலங்கை அரசாங்கம் இறுதியில் காணாமல் போனவர்கள் பற்றி வாய் திறப்பதற்கு இறுதியில் புதுவை இரத்தினதுரையின் காணாமல் போதல் வழி வகுக்கலாம். புதுவை இரத்தினதுரையை ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகம் அவ்வளவு இலேசாக மறந்து விடப்போவதில்லை. தேசிய அரசியலுக்கு அப்பால் ஈழத்தின் வர்க்க விடுதலைக்காகப்போர்க்குரலாக ஒலித்த அவரது குரலை ஈழத்து முற்போக்கு இலக்கியம் அவ்வளவு இலேசில் மறந்து விடாது.

எழுபதுகளில் இலங்கையிலிருந்து வெளிவந்த எழுத்தாளர் செ.கணேசலிங்கன் வெளியிட்ட 'குமரன்' இதழில் நிறைய கவிதைகளை வரதபாக்கியான் என்னும் பெயரில் எழுதியிருக்கின்றார். அவரது அக்காலகட்டத்துக் கவிதைகளினூடாக அவரை அணுகுவது அவரது கவிதைகள் பற்றிய திறனாய்வுக்கு , அவரது போர்ச்சுவாலைகளாகத் திகழ்ந்த கவிதைகளை அறிந்து கொள்வதற்குரிய நல்லதோர் அணுகுமுறை.

நான் மதிக்கும் இலக்கிய ஆளுமைகள்: எழுத்தாளர் நந்தினி சேவியர் - வ.ந.கிரிதரன் -

அண்மைக்காலமாக எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூற் பதிவுகளை ஆர்வத்துடன் படித்து வருகின்றேன். அதிகமான இவரது முகநூல் பதிவுகள் இவரது கலை, இலக்கியம் மற்றும் சமூக நீதி, பொதுவுடமை சமுதாய அமைப்பு ஆகியவை பற்றிய, ஆளுமைகள் பற்றிய விமர்சனக் குறுங்குறிப்புகளாக அமைந்திருக்கின்றன. இலங்கை அரசின் சாகித்திய விருது, கொடகே அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்ற ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகளிலொருவர்.

இவரது படைப்புகள் பலவற்றை நான் இன்னும் விரிவாக வாசிக்கவில்லை. ஆயினும் அவற்றை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன இவரது முகநூற் குறிப்புகள். இவரது முகநூற் குறிப்புகள் மூலம் நான் இவரைப்பற்றி அறிந்து கொண்ட இவரது ஆளுமை பற்றிய பிரதான அம்சங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்:

1. மானுட சமூக விடுதலைக்காக இவர் வரித்துக்கொண்ட கோட்பாடு மாரக்சியக் கோட்பாடு. இலங்கையில் சீனசார்புக் கம்யூனிச அமைப்பினூடு, மானுட சமூக, பொருளாதார விடுதலைக்காக, கட்சியில் இணைந்து செயற்பட்ட இலக்கியப்போராளிகளிலொருவர் இவர். இவ்விடயத்தில் , தான் பின்பற்றும் கோட்பாடு விடயத்தில் இவர் மிகவும் தெளிவாக இருக்கின்றார். தீண்டாமை போன்ற சமூகப்பிரச்சினைகளுக்கு மார்க்சியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட கட்சியொன்றினூடு இணைந்து போராடுவதே ஒரே வழி என்பதில், வர்க்கப்போராட்டமே ஒரே வழி என்பதில் உறுதியாக இருக்கின்றார். இந்த அடிப்படையில் இவர் அரசியல் ஸ்தாபனங்களைப்பற்றி, ஆளுமைகளைப்பற்றித் தன் விமர்சனங்களை முன் வைக்கின்றார்.

எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவின் தாயகம் (கனடா) புகலிடத்தமிழர்களின் முக்கியமான பத்திரிகை / சஞ்சிகைகளிலொன்று. - வ.ந.கிரிதரன்


புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை / சஞ்சிகைகளில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. இந்தப்பத்திரிகை /சஞ்சிகையினை நடத்தியவர் எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ். விடுதலைப்புலிகள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், விடுதலைப்புலிகளை விமர்சித்து எழுதியவர். இன்று பலர் விடுதலைப்புலிகளின் ஆயுதபோராட்டம் முடிந்து, மெளனித்ததன் பின்பு ஆக்ரோஷமாக விமர்சித்து வருவதைப்போல் அல்லாமல் , விடுதலைப்புலிகளின் காலகட்டத்திலேயே விடுதலைப் புலிகளை விமர்சித்து எழுதியவர். அதேசமயம் தான் ஆசிரியராக, பதிப்பாளராகவிருந்து வெளியிட்ட தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் அனைத்து அரசியல் கருத்துகளைக் கொண்டவர்களுக்கும் இடம் கொடுத்தார். அவர்கள்தம் படைப்புகளைப் பிரசுரித்தார். தாயகம் (கனடா) ஆரம்பத்தில் வாரப்பத்திரிகையாக வெளியானது. பின்னர் தனது வடிவமைப்பை மாற்றி வார சஞ்சிகையாக வெளிவந்தது.

தானே ஆசிரியராகவிருந்து, பதிப்பாளராகவிருந்து, தட்டச்சு செய்பவராகவிருந்து, அச்சடிப்பவராகவுமிருந்து (இதற்காக சிறியதொரு அச்சியந்திரத்தையும் தன்னிருப்பிடத்தில் வைத்திருந்தார். ஒருவரே கைகளால் இயக்கக்கூடிய அச்சியந்திரம். வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பான 'எழுக அதிமானுடா!' தொகுப்பினை அச்சிட்ட அச்சியந்திரமும் அதுவே. அந்த அச்சியந்திரம் இன்னும் அவரிடம் ஞாபகச்சின்னமாக இருக்கக்க்கூடும்) )சுமார் ஐந்து வருடங்கள் வரையில் 'தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையினைக் கொண்டு வந்தார். முப்பது வருடங்களில் ஐம்பது இதழ்களைக்கொண்டு வருவதைப்பார்த்து மூக்கில் விரலை வைத்து வியக்கும் நம்மவர்கள் , ஐந்து வருடங்களில் இருநூறுக்கும் அதிகமாகச் தாயகம்(கனடா)வினைத் தனியொருவராக வெளிக்கொணர்ந்தவர் இவர் என்பதை அறிந்தால் வியப்பின் எல்லைக்கே சென்று விடுவார்கள்.

ஆனந்த் பிரசாத்தின் 'ஒரு சுயதரிசனம்' - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் ஆனந்த் பிரசாத் கவிதைகள் புனைவதிலும் வல்லவர். இவர் எழுதிய 21 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்று 'ஒரு சுயதரிசனம்' என்னும் பெயரில் 1992இல் கனடாவில் 'காலம்' சஞ்சிகையின் வெளியீடாக வெளிவந்துள்ளது. அக்காலகட்டத்தில் 'காலம்' சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும், 'காலம்' சஞ்சிகை வெளிவருவதற்கு முக்கிய காரணகர்த்தாக்களிலொருவராகவும் இவர் விளங்கியிருப்பதை நூலின் ஆரம்பத்தில் 'காலம்' சஞ்சிகை ஆசிரியர் செல்வம் எழுதிய குறிப்பிலிருந்து அறிய முடிகின்றது.

மேற்படி நூலினை அவர் சமர்ப்பித்துள்ள பாங்கு நினைவிலெப்போதும் நிற்க வைத்துவிடும் தன்மை மிக்கது. நூலுக்கான சமர்ப்பணத்தில் அவர் "அதிருஷ்ட்டங்கள் வந்து நான் அறியாமைக்குள் அமிழ்ந்து போகாது என்னைத்தடுத்தாட்கொண்ட துரதிருஷ்ட்டங்களுக்கு' என்று நூலினைத்தனக்கேற்பட்ட துரதிருஷ்ட்டங்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். நான் அறிந்த வரையில் இவ்விதம் துரதிருஷ்ட்டங்களு நூலொன்றைச் சமர்ப்பணம் செய்த எழுத்தாளரென்றால் அவர் இவராக மட்டுமேயிருப்பாரென்று எண்ணுகின்றேன்.

இக்கவிதைத்தொகுதியிலுள்ள் இவரது கவிதைகள் பல புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வு பற்றிப்பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக 'பொறியியலாளன்',  'அகதி', 'ஒரு சுயதரிசனம்', மற்றும் 'ஒரு Academic இன் ஆதங்கம்'(நூலில் acadamic என்று அச்சுப்பிழையேற்பட்டுள்ளது) ஆகிய கவிதைகளைச்சுட்டிக்காட்டலாம். கவிஞர் கனடாவுக்கு வந்த புதிதில் எழுதப்பட்ட கவிதைகள் என்பதால் அக்காலகட்டத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவுமிவற்றைக்கொள்ளலாம்.

'பொறியியலாளன்' தொழிற்சாலையொன்றில், இயந்திரங்களுடன் மல்லுக்கட்டும் அனுபவங்களை விபரிப்பது. அவன் தொழிற்சாலையொன்றில் வேலை செய்கின்றான். பலவடிவங்களில் விளங்கும் இயந்திரங்களால் உருவாக்கப்படும் உற்பத்திப்பொருள்களை எண்ணி அடுக்குவதுதான் அவனது வேலை. ஆரம்பத்தில் ஐந்து டாலர்களுக்கு ஆரம்பித்தவனின் சம்பளம் எட்டு டாலர்களை எட்டிப்பிடித்துவிட்டது. தொழிற்சாலையில் எந்நேரமும் எண்ணி எண்ணி அடுக்குவதால் வீட்டிலும்  சமையலுக்காக வெங்காயத்தை உரிக்கும்போதும், நறுக்கும்போதும், சாப்பிடும்போதும், தூங்கும்போதும், கனவிலும், நனவிலும் அவன் என்ணுவதை மட்டும் நிறுத்துவதில்லை. எண்ணுவதே அவன் வாழ்வாகி விடுகிறது.

வேலணையூர் தாஸின் 'மழைக்காலக்குறிப்புகள்' பற்றி.... வ.ந.கிரிதரன் -

வேலணையூர் தாஸின் 'மழைக்காலக் குறிப்புக்கள்' நூலினை அண்மையில் பெற்றுக்கொண்டேன். வேலணையூர் தாஸ் 'யாழ் இலக்கியக் குவியம்' அமைப்பின் ஸ்தாபகர். இணைய இதழ்கள், அச்சிதழ்கள் பலவற்றில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. 'யாழ் இலக்கியக் குவியம்' அமைப்பின் அழகிய வெளியீடாக மேற்படி நூல் வெளியாகியிருப்பது திருப்தியைத்தருவது. நூலின் ஆரம்பத்தில் 'பதிவுகள்' இணைய இதழுட்பட தனது படைப்புகள் வெளிவந்த ஊடகங்களுக்கு நன்றியினை நூலாசிரியர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பல,விடயங்களை பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன. யுத்தத்தில் தந்தையை இழந்த, மகனை இழந்த, கணவனைஇழந்த எனப் பல்வேறு இழப்புகளைப் பற்றிக் கவிதைகள் விபரிகின்றன. காதல், மழைக்காலத்து அனுபவங்கள், இழந்த நிலம், அன்னை மீதான அன்பு, மழை அனுபவங்கள் எனக் கவிதைகள் பன்முகத்தன்மை மிக்கவை. கவிதைகளும் சொற் சிக்கனம் மிகுந்தவை, சொற்சிக்கனம் சிறிது தளர்ந்தவை எனப்பன்முகமானவை.

நூலின் முதற் கவிதையான 'என் நிலம்' போரினால் இழந்த நிலத்துக்குத் தன் இறுதிக்காலத்தில் மீண்டவரின் அனுபவத்தை விவரிக்கும்.

'காலப் பிரளயமோ
கண்பட்டுப் போனதுவோ
போர் வந்துதான் துரத்த
பிரிந்தேன் தாய் நிலத்தை'

என்று போரின் விளைவினை விபரிக்கும் கவிதை போரின் முடிவுக்குப் பின்னர் தனது சொந்த மண்ணுக்குத் திரும்பும் ஒருவரை

'சுற்றிவர முட்கம்பி
இரும்புத்தூண் அரண்கள்,
விளங்கா மொழியினிலே
பெயர்ப்பலகை'

எனச்சொந்த மண் வரவேற்கும். சொந்த மண்ணே அந்நியமாகிப்போன சோகத்தின் பதிவு இக்கவிதை.

மேலும் இத்தொகுப்பு காணாமல் போனவர்கள் பலரைப்பற்றிய குறிப்புகளை வெளிக்கொணர்கின்றது, உதாரணமாகக் 'காலம் அவளைத்தேடிக்கொண்டிருக்கிறது' கவிதை காதல் உணர்வுகள் பொங்கும் பருவத்தினளான இளம் பெண்ணொருத்தியின் கனவுகள் எவ்விதம் சிதைக்கப்பட்டன என்பது பற்றி விபரிக்கும். ஊற்றெடுக்கத்தொடங்கிய காதல் இசையில் அவள் மிதந்து கிடக்கின்றாள். இந்நிலையில்

'வானமும் நதியும் பறவைகளும்
காடும் அவள் பாடலை மீளவும் பாடின..
அந்த இசையில் மிதந்து கொண்டிருந்த

ஓர் நாளில் அவள் காணாமல் போகின்றாள். '. இங்கு 'ஒரு நாளில்' என்று வந்திருக்க வேண்டும். ஆயினும் கவிஞர் காரணத்துடன் 'ஓர் நாளில்' என்றுபாவித்திருப்பதற்குத் தர்க்கரீதியிலான காரணம் இருப்பின் அது என்னவென்று யான் அறியேன், அவர்தான் கூற வேண்டும்.

எம்.வி.வி'யின் 'வேள்வித் தீ' பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்.... வ.ந.கிரிதரன் -

- எம்.வி.வெங்கட்ராம் -
அண்மையில் எம்.வி.வெங்கட்ராமின் 'வேள்வித் தீ' வாசித்தேன். காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ள நாவலிது. மணிக்கொடி எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராம் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய படைப்பாளிகளிலொருவர். எம்.வி.வெங்கட்ராம் அப்பாவுக்குப் பிடித்த எழுத்தாளர்களிலொருவர். எழுபதுகளில் ஆனந்த விகடனில் மாத நாவலென்றொரு தொடர் வெளிவந்துகொண்டிருந்தது.  அதில் பல எழுத்தாளர்களின் மாத நாவல்கள் தொடராக வெளிவந்தன. நான்கு அல்லது ஐந்து அத்தியாயங்களில் முடியும் தொடர்களவை. அம்மாத நாவல்களிலொன்றினை எம்.வி.வெங்கட்ராம் எழுதியிருந்ததாக நினைவு. அத்தொடர் கோபுலுவின் ஓவியங்களுடன் வந்ததாகவும் நினைவு. அம்மாத நாவலின் பெயர் 'தேவி மகாத்மியம்' என்றிருந்ததாகவும் ஞாபகம். அந்நாவலினை அப்பா விரும்பி வாசித்ததாகவும் ஞாபகம். ஆனால் நான் அந்நாவலை வாசித்ததாக ஞாபகமில்லை என்றுமொரு ஞாபகம். அவ்விதம்தான் எனக்கு எம்.வி.வெ'யின் அறிமுகம் ஏற்பட்டதாகவும் ஞாபகம். அண்மையில் எம்.வி.வெ'யின் 'வேள்வித்தீ' நாவலை வாசித்தபொழுது எம்.வி.வெ பற்றிய , ஆழ்மனதில் ஆழ்ந்து கிடந்த மேற்படி ஞாபகப்பறவைகளெல்லாம் மெல்ல மெல்லச் சிறகடித்து மன வானில் பறக்க ஆரம்பித்தன.

இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடும் அனைவரும் இந்நாவல் செளராஷ்டிரப் பிராமணர் சமூகம பற்றியும், அவர்களது நெசவுத் தொழில் பற்றியும், அவர்களது வரலாறு பற்றியும் பல விபரங்களைப் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிடுவார்கள். அவையே இந்நாவலின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதாகவும் குறிப்பிடுவார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி இந்நாவல் முக்கியத்துவம் பெற்றிருப்பது மானுட உறவுகளின் உளவியலை அற்புதமாகப் பதிவு செய்திருப்பதில்தான் என்று எனக்குத்தோன்றுகிறது. இருப்புக்காகப் போராடும் மானுட வாழ்வை, அவர்கள் மத்தியில் நிலவும் உறவுகளை, அவற்றாலேற்படும் உளவியல் பாதிப்புகளை இவையெல்லாவற்றையும் அழகாக, கலைத்துவம் மிக்கதாக வெளிப்படுத்தியிருப்பதுதான் இந்நாவலின் வெற்றியாக எனக்குப் படுகிறது.

தாமரைச்செல்வியின் படைப்புகள் பற்றி..... வ.ந.கிரிதரன் -

ஈழத்துப்பெண் எழுத்தாளர்களில் தாமரைச்செல்வியின் கதைகளுக்கு முக்கிமானதோரிடமுண்டு. அந்த இடத்துக்கு முக்கிய காரணங்களிலொன்று இவர் தான் வாழ்ந்த காலகட்டத்து சமூக, அரசியல் பின்புலத்தில் தன் கதைகளைப்புனைந்திருப்பதுதான். இவரது கதைகள் பலவற்றில் தொண்ணூறுகளில் ஏற்பட்ட ஈழத்துத்தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள், நிலவிய போர்க்காலச்சூழல் மற்றும் இயற்கை அழிவுகள் அதிக அளவில் விபரிக்கப்படுகின்றன. இவரது கதைகள் பொதுவாக பரந்தன், கிளிநொச்சி மட்டும் வன்னிபிரதேசத்தை மையமாக வைத்துப்பின்னப்பட்டவை. போர்ச்சூழல் மக்களுக்கு, பல்வேறு வயதினருக்கும் ஏற்படுத்திய பாதிப்புகள், குறிப்பாக உளவியற் பாதிப்புகள் பற்றியெல்லாம் வெளிப்படுத்துபவை. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து , ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துத் தமிழ் மக்களின் இருப்பினை, அவர்கள காலகட்டத்துச் சமூக, அரசியற் சூழல் ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவும் இவரது படைப்புகள் இருக்கின்றனவென்றும் கூறலாம்.

அண்மையில் என் சேகரிப்பிலிருந்த புத்தகங்கள் மத்தியில் தேடிக்கொண்டிருந்தபொழுது இவரது 'வீதியெல்லாம் தோரணங்கள்' குறுநாவல் மற்றும் 'வன்னியாச்சி' (சிறுகதைத்தொகுப்பு) ஆகியவை மீள அகப்பட்டன. அவற்றை வாசித்தபொழுதே மேற்படி எண்ணங்கள் முகிழ்த்தன. மேற்படி 'வீதியெல்லாம் தோரணங்கள்' குறுநாவல் வீரகேசரி நிறுவனம் யாழ் இலக்கிய வட்டத்துடன் இணைந்து நடாத்திய கனகசெந்திநாதன் குறுநாவல் போட்டியில் இரண்டாவது இடத்தைப்பெற்ற குறுநாவல்.

இந்தக் குறுநாவல் கூறும் கதை இதுதான்: வெளிநாட்டில் வாழும் தமிழ் இளைஞனொருவனுக்கு ஊரில் தாயார் சீதனத்துடன் திருமணம் பேசுகின்றார். இரு குடும்பத்தாரும் சம்மதிக்கின்றார்கள். மணப்பெண்ணின் சகோதரன் வெளிநாட்டு இளைஞனின் நண்பன் கூட. யாழ்நகரில் நடைபெற்ற இராணுவத்தாக்குதலொன்றில் அந்த நண்பன் இறந்து விடுகின்றான். அவன் இறந்ததால் இனி யாரும் அந்த மணப்பெண்ணுக்குரிய சீதனத்தைத்தரமாட்டார்கள் என்பதால் வெளிநாட்டு இளைஞனின் தாயார் அந்தத்திருமணத்தை நிறுத்திவிடத்திட்டமிடுகின்றார். இன்னுமொரு காரணமும் உண்டு. படையினரின் தேடுதல்கள் அந்த மணப்பெண்ணிருந்த பகுதியில் நடைபெற்றதால் அந்த மணப்பெண்ணுக்கு என்னவெல்லாமோ நடந்திருக்கலாம் என்று வேறு சந்தேகத்தைக்கிளப்பி விடுகின்றாள் அந்தத்தாயார். ஆனால் ஊர் திரும்பும் வெளிநாட்டு இளைஞனோ இவ்விதமான சூழலில்தான் நண்பனின் குடும்பத்துக்குக் கை கொடுக்க வேண்டுமென்று கைவிடக்கூறிய தாயாரிடம் கூறிவிட்டு, நண்பனின் வீடு செல்வதுடன் குறுநாவல் முடிவடைகின்றது.

மணி வேலுப்பிள்ளையின் 'மொழியினால் அமைந்த வீடு' - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான மணி வேலுப்பிள்ளை தற்போது டொராண்டோவில் வசித்து வருகின்றார். எழுத்தாளர் மணி வேலுப்பிள்ளை நல்லதொரு மொழிபெயர்ப்பாளரும், கட்டுரையாளருமாவார். சிலிய ஜனாதிபதி அலந்தே, டெங் சியாவோ பிங், அம்மாவின் காதலன் மாயாகோவஸ்கி மற்றும் ரோசா லக்சம்பேர்க் போன்ற கட்டுரைகளும், தமிழ் மொழிபெயர்ப்பு (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு..) பற்றிய மொழிபெயரியல்பு, மொழியினால் அமைந்த வீடு, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, விபுலானந்த அடிகளின் கலைச்சொல்லாக்க வழிமுறைகள் போன்ற கட்டுரைகள் அதனையே வெளிப்படுத்துகின்றன.

மொழிபெயர்ப்பாளர்கள் பலர் மொழிபெயர்ப்புகளுடன் நின்று விடுகையில், இவர் மொழிபெயர்ப்பு பற்றிய ஆழமான கட்டுரைகளைத் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இவை படைப்புகளை மொழிபெயர்க்க விரும்பும் எழுத்தாளர்களுக்கு பயன் மிக்க ஆலோசனைகளை வழங்குகின்றன.

ஆழமான கட்டுரைகளைச் சுவையாக எழுதுவதில் வல்லவர் இவர். உதாரணத்துக்கு 'மொழியினால் அமைந்த வீடு' கட்டுரை கீழுள்ளவாறு முடிவதைப்பாருங்கள்:

"உள்ளதை உள்ளபடி உரைப்பதற்கு மொழி ஒரு போதும் தடையாய் இருக்கப் போவதில்லை. உள்ளதை உள்ளபடி உரைக்க முற்படாதவர்களுக்கே மொழி தடங்கல் விளைவிக்கும். ஆதலால்தான் ஆட்சியாளரும், அரசியல்வாதிகளும் , விமர்சகர்களும், அவர்களுக்கு உடந்தையாய் விளங்கும் செய்திமான்களும் மொழியைத் திரித்து வருகின்றார்கள். மொழித் திரிபுவாதிகள் கட்டியெழுப்பிய வீட்டிலேயே பரந்துபட்ட பாமர மக்கள் வாடகைக் குடிகளாய் வாழ்ந்து வருகின்றார்கள்."

றியாஸ் குரானாவின் தமயந்தி பற்றிய குறிப்பு பற்றி.... - வ.ந.கிரிதரன் -

அண்மையில் றியாஸ் குரானா தமயந்தியின் படைப்புகளைப்பற்றிப்பின்வருமாறு தன் முகநூல் குறிப்பொன்றில் கூறியிருந்தார்:

"சில விசயங்கள் ஆச்சரியமானதுதான். அவ்வப்போது உதிரியாக இதழ்களில் சில கதைகளைப் படித்திருக்கிறேன். ஓரிண்டு கவிதைகளும் அதிலடங்கும். ஆனால், அவர் ஈழத்து இலக்கியப் பரப்பில் முக்கியமானவர்தான். ஆர்வமூட்டும் கதைசொல்லி. அவருடைய கதைகள், கவிதைகள் தொகுப்பாக்கம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஈழத்து இலக்கிய வெளியில் தொகுப்பாக்கம் செய்வதே பெரும் சவாலான விசயம். சிலர் அதை அவ்வளவாக பொருட்படுத்துவதே இல்லை. "

இங்கு விமர்சகர்கள் என்ற பெயரில் உலா வருபவர்களில் பலர் தம் அங்கீகாரத்துக்காக தம் சிஷ்யகோடிகளாகச்சிலரைத்தூக்கிப் பிடிப்பார்கள். சிஷ்யகோடிகளும் அவர்களைத்தூக்கிப்பிடிப்பார்கள். ஒருவரையொருவர் முதுகு சொறிந்து கொள்வதில் குளிர்காய்வார்கள். இவர்கள் வெளியிடும் தொகுப்புகளும் அவ்விதமாகவே இருப்பதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் யாருக்கும் அடி பணியாத, வளைந்து கொடுக்காதவர்களை இந்த முதுகு சொறியும் கூட்டம் கண்டு கொள்வதில்லை. மேலும் அவர்களும் இவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதில்லை. மேலும் வளைந்து கொடுக்காதவர்களைப்பற்றி அங்கீகாரத்தை நாடுமொரு விமர்சகர்  தூக்கி வைத்து எழுதினாலும், தம்மை அவ்விதம் எழுதி விட்டார்களே என்று வளையாதவர்கள் பதிலுக்கு அவர்களைத்தூக்கி வைப்பதில்லை வழக்கமான சிஷ்யகோடிகளைப்போல். இதனால் அவ்வகை விமர்சகர்களுக்கு எந்தவித ஆதாயமுமில்லை. ஆனால் உண்மையான படைப்பாளிகளை அவர்களது படைப்புகளினூடு தரமான வாசகர்கள் கண்டு கொள்வார்கள். இன்று நீங்கள் கண்டு கொண்டதைப்போல. அவ்விதமான படைப்புகள் கால ஓட்டத்தில் நின்று பிடிக்கும்.

விஷ்ணுபுரம் சில குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' பற்றிப் பலர் பலவாறு கூறியுள்ளார்கள். இவர்களது குறிப்புகளெல்லாவற்றையும் பார்க்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது. இவர்களில் பலர் யானை பார்த்த குருடர்கள். நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி. ஹேமந்தன் என்னும் பாணன் விஷ்ணுபுரம் பற்றிய கதையினைக் கூறி முடித்ததும் வசந்தன் என்னும் பாணன் கூறத்தொடங்குவதுடன் ஆரம்பமாகும் நாவல் மூன்று பாகங்களாக விரிவடைந்து வசந்தன் கதையை முடித்ததும் இன்னுமொரு பாணனான கிரிஷ்மன் மீண்டுமொருமுறை விஷ்ணுபுரம் கதையினைக் கூறத்தொடங்குவதுடன் தொடர்கிறது. நாவலைப் பற்றிப் பின் அட்டையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: ' இந்நாவலில் விஷ்ணு ஒருமுறை புரண்டு படுக்கிறார். தருக்கம், தியானம்,கற்பனை என்ற மூன்று அடிப்படையான அறிதல் முறைகளில் கற்பனையின் துணை கொண்டு , பிற இரண்டின் சாத்தியங்களை பயன்படுத்தியபடி, மானுடனின் ஞானத்தேடலின் பயணத்தைச் சித்தரிக்கிறது (சித்திரிக்கிறது). கலையும், தருக்கமும், ஆன்மீகமும், மானுட உணர்வுகளுடன் கலந்து பௌராணிகமான மாய உலகமொன்றைப் படைக்கின்றன.'

ஜெயமோகனின் ஞானத் தேடலே நாவலாக உருப்பெற்றிருக்கின்றது. இந்து, பௌத்த தத்துவங்களினூடு மனித வாழ்வு, பிரபஞ்சத்தின் தோற்றம், காலம் பற்றி தர்க்கரீதியாகக் கற்பனையைப் படரவிட்டு இந்நாவலைப் படைத்திருக்கின்றார் ஜெயமோகன். தான் அறிந்ததை, உணர்ந்ததை அவ்விதமே கூறவேண்டுமென்ற ஆவல் ஜெயமோகனுக்கு அதிகமாக இருப்பதை நாவல் முழுவதிலும் காண முடிகிறது. விஷ்ணுபுரம் பற்றிய வர்ணணைகளில் நாவலாசிரியர் மிக அதிகளவில் கவனமெடுத்திருக்கின்றாரென்பதை விஷ்ணுபுரம் பற்றிய வர்ணனைகள் வெளிக்காட்டுகின்றன.ஜெயமோகனின் ஞானத்தேடலே நாவல் முழுக்கப் பல்வேறு பாத்திரங்களாக, பிங்கலன், சங்கர்ஷணன்.. என உலாவருகின்றது. நாவல் முழுக்க எண்ணமுடியாத அளவிற்குப் பாத்திரங்கள். அத்தியாயத்திற்கு அத்தியாயம் புதிய புதிய பாத்திரங்களின் வருகையுடன் நாவல் நடை போடுகிறது. வழக்கமாக அத்தியாயங்களிற்கிடையில் ஒருவித தொடர்ச்சியினை ( Linearity) எதிர்பார்த்துப் பழக்கப் பட்டு விட்ட பெரும்பாலான தமிழ் வாசகர்களுக்கு இந்தத் தொடர்ச்சியற்ற தன்மை நாவலைப் புரிதலில் சிரமத்தினை ஏற்படுத்தி விடுகின்றது. இது இந்நாவலை வாசிக்க விளைபவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுமையினையும் , பாத்திரங்களைச் சம்பவங்களைக் கிரகிக்க வேண்டிய திறமையினையும் மிக அதிகமாகவே வேண்டி நிற்கிறது. ஆனால் இந்த நாவலின் அடிப்படையே ஒரு மனித உயிரின் ஞானத் தேடல் என்ற அளவில், நாவல் பாத்திரங்களினூடு, நகர அமைப்பினூடு, காட்சிகளினூடு, கூறி விவாதிக்கும் இருத்தல் பற்றிய விசாரத்தைத் தொடர்ந்து கொண்டு போவதன் மூலம் இந்நாவல் பிரதியின் வாசிப்பை இலகுவாக்கலாம். பலருக்கு இந்நாவல் புரிபடுவதிலுள்ள குழப்பம் காரணமாகத் தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கருத்துகளை வைக்கின்றார்கள். (அண்மையில் ஜெயமோகனின் நூல் விழாவில் பேசிய ஜெயகாந்தன் தன்னாலேயே நாவலின் உள்ளே புக முடியவில்லை என்று குறிப்பிட்டதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது). நாவல் பற்றி ஈழத்தின் முற்போக்கு முகாமைச் சேர்ந்த அறிஞர் அ.ந.கந்தசாமி தனது 'மனக்கண்' என்ற நாவலின் முடிவுரையில் 'என்னைப் பொறுத்தவரையில் பாரகாவியமும் நாவலும் ஒன்றென்றே நான் கருதுகிறேன். ஒன்று வசனம், மற்றது கவிதை என்ற வித்தியாசத்தைத்தவிர பாரகாவியம் எப்பொழுதுமே அவசரமாகக் கதையைச் சொல்லத் தொடங்குவதில்லை. நாட்டு வர்ணனை, நகர வர்ணனை, பருவ வர்ணனை என்று மெதுவாகவே அது கிளம்பும். காரின் வேகம் அதற்கில்லை. தேரின் வேகமே அதற்குரியது. வழியிலே ஒரு யுத்தக் காட்சி வந்ததென்று வைப்போம். உதாரணத்துக்கு வியாச பாரதத்தை எடுத்தால் பதினேழு நாள் யுத்தம் நடந்தது. பாண்டவர் வென்றனர், கௌரவர் தோற்றனர் என்று மிகச்சுருக்கமாகவே அதனைக் கூறியிருக்கலாமல்லவா? ஆனால் அவ்வாறு எழுதினால் கதா நிகழ்ச்சியை நாம் புரிந்து கொண்டாலும் யுத்தத்தின் அவலத்தையும் வெற்றி தோல்வியையும் நேரில் பார்த்தது போன்ற உணைச்சி நமக்கு ஏற்படாது. அந்த உணர்ச்சி நமக்கு ஏற்படும்வரை பொறுமையாக விவரங்களை ஒன்றின் பின்னொன்றாகச் சலிப்பின்றி எடுத்துக் கூறி நிற்கும் ஆற்றல் பெற்றவனே பாரகாவியஞ் செய்யும் தகுதியுடையவன். நல்ல நாவலாசிரியனுக்கும் இப்பண்பு இருக்கவேண்டும்.' என்று கூறியுள்ளதுதான் நினைவுக்கு வருகின்றது.ஜெயமோகனுக்கு இப்பண்பு நிறையவேயுண்டு. விஷ்ணுபுரம் பற்றிய அவரது வர்ணனைகள் வாசிப்பவரிடத்தில் அதன் பிரமாண்டம் பற்றியதொரு பிரமிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. இருத்தல் பற்றிய மானுடத்தின் ஞானத் தேடல் என்ற சிறியதொரு கருவுக்கு விஷ்ணுபுரம் என்றொரு பிரமாண்டமான நகரினைப் பல்வேறு பாத்திரங்களினூடு படைத்து, நமது காவியங்களில் கையாளப் பட்டதொரு உத்தியினைப் ( பாணன் கதை சொல்லல்) பாவித்துக் கதை சொல்லியிருக்கின்றார் ஜெயமோகன்.ஆனால் மெய்ஞானம் மட்டுமின்றி நவீன விஞ்ஞானத்தினூடும் இருப்பு பற்றிய தேடலில் மூழ்கிக் கிடப்பவர்களை இந்த நாவல் கவருமா என்பது சந்தேகத்திற்கிடமானதே.எல்லாக் கதாப் பாத்திரங்களும் கதைகளாக மாறிவிடுகின்றதொரு உண்மையில் முழு நாவலுமேயொரு கதைதான். புராணக் கதை.திரிசாகரம் திரிவிக்கிரமர் இயற்றிய மகாபத்மபுராணம். பாணர்கள் கதைசொல்வதிலுள்ள ஒழுங்கு மாறியிருப்பதாகவும் கருத இடமுண்டு. பொதுவாகக் கதைகூறும்பொழுது சில சமயங்களில் ஒழுங்குகள் மாறிக் கதை சொல்வதுமுண்டு. ஆனால் விஷ்ணுபுரத்தில் வரும் விளக்கங்களும் இந்நாவலினூடு விரவிக் கிடக்கும் இருப்பு பற்றிய தேடலும் விரைவாக இந்நாவல் கூறும் பொருள் பற்றி நம்மை வந்தடைவதைத் தடுத்து விடுகின்றன. வாசிப்பவர்களைச் சிந்திக்க, தர்க்க ரீதியாகச்சிந்திக்கப் பெரிதும் தூண்டும் படியாக நாவலின் சம்பவங்களை நடத்திச் செல்லும் தொடர்ச்சி (Plot) இருந்து விடுவது இதன் காரணம். அதே சமயம் எல்லோராலும் இந்நாவலைப் படிக்கவும் முடியாது. ஏற்கனவே ஓரளவு பிரபஞ்சத் தேடல் மிக்க அல்லது தீவிர வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே இந்நாவலின் வாசகர்களாகவும் வரமுடியும்.

மானுட விடுதலைப்போராளியான தோழர் தமிழரசன் பற்றிய தோழர் பாலனின் எண்ணங்களே 'ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' . - வ்.ந.கிரிதரன் -

- * தோழர் பாலன் எழுதிய 'ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' என்னும் மின்னூல் பற்றிய எண்ணத்துளிகள் சில.

தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியை உருவாக்கி, அக்கட்சியின் படைப்பிரிவாகத் தமிழ்நாடு விடுதலைப்படையினை நிறுவி , தமிழ்நாட்டில் மாவோயிச, லெனிசிச அடிப்படையிலான பொதுவுடமை அமைப்பொன்று அமைக்கப்பட வேண்டுமென்பது தோழர் தமிழரசனின் எண்ணம், செயற்பாடு எல்லாம். 1987இல் தோழர் தமிழரசன் பொன்பரப்பிலிருந்த வங்கியொன்றினை இயக்கத்தேவைகளுக்காகக் கொள்ளையிட முயன்றபோது பொது மக்களால் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவர் அவ்விதம் கொல்லப்பட்டது இந்திய மத்திய அரசின் திட்டமிட்ட சதியால் என்று உறுதியாக எடுத்துரைக்கின்றது தோழர் பாலனின் தோழர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' என்னும் இந்த நூல்.

'தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை' என்னும் இயக்கம் புலிகள் இயக்கத்தில் ஆரம்பத்தில் ஏற்பட்ட பிளவின்போது உருவான புதியபாதைப்பிரிவில் இயங்கிப்பின்னர் அதிலிருந்து பிரிந்து தோழர் பாலன், தோழர் நெப்போலியன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட மாவோயிச, லெனிசிசத்தைத் தம் கோட்பாடாகக் கொண்ட, மக்களின் சமூக அரசிய பிரச்சினைகளுக்கு ஒருபோதுமே முதலாளித்துவ பாராளுமன்ற அரசியல் சாதகமாக இருக்கப்போவதில்லை என்பதைத் திடமாக நம்பும் புரட்சிகர அமைப்பாகும். அந்த அமைப்பினைச்சேர்ந்த தோழர் பாலனின் பார்வையில் தோழர் தமிழரசனை வைத்து எடை போடுவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். தோழர் தமிழரசன் பயங்கரவாதியா அல்லது புரட்சிவாதியா என்பதை தோழர் தமிழரசனின் வாழ்க்கையினூடு, அவரது சமூக, அரசியற் செயற்பாடுகளினூடு, அவர் நம்பிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் தத்துவங்களினூடு , உணர்ச்சிவசப்படாமல், நிதானமாகத் தர்க்கரீதியாக ஆராய்ந்து தோழர் தமிழரசன் பயங்கரவாதி அல்லர். பொதுவுடமையினை நிறுவுவதாகச் செயற்பட்ட புரட்சிவாதி என்று நிறுவுவதுதான் நூலின் பிரதான நோக்கம். அந்த நோக்கத்தில் இந்நூல் வெற்றியடைந்துள்ளதா என்பதைச் சிறிது நோக்குவோம்.

கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' பற்றிய குறிப்புகள் சில! - வ.ந.கிரிதரன் -


2012 ஆம் ஆண்டு இலங்கை சென்ற நண்பர் ஒருவரிடம் என்னிடம் கொடுத்து விடும்படி திரு.கே.எஸ்.சிவகுமாரனால் கொடுத்து விடப்பட்டிருந்த 'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' நூல் அண்மையில்தான் என் கைகளை வந்தடைந்தது. :-) மறக்காமல் நினைவில் வைத்திருந்து நூலை என்னிடம் சேர்ப்பித்த  நண்பருக்கு நன்றி. :-) இது போல் இன்னுமொருவரிடமும் திரு.கே.எஸ்.சிவகுமாரன் நூல்கள் சிலவற்றைக் கொடுத்திருந்த விபரத்தை நண்பர் சில வருடங்களுக்கு முன்னர் அறியத்தந்திருந்தார். ஆனால் நூல்கள் இன்னும் என் கைகளுக்கு வந்து சேரவில்லை. :-)
இன்னுமொருவரிடம் கொடுத்திருந்த நூல் பொதி பெற்றவர் இன்னுமொருவரிடம்  கொடுத்து சிறிது காலம் தாழ்த்தியென்றாலும் வந்து சேர்ந்து விட்டது.

'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' நூல் கைக்கடக்கமானது. கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பதற்கொப்ப மிகுந்த பயன் மிக்கது. குறிப்பாக ஆவணச்சிறப்பு மிக்கது. இந்நூலில் கே.எஸ்.எஸ் அவர்கள் எழுத்தாளர்களைபற்றி, வெளிவந்த நூல்கள் பற்றி, தன்னைப் பாதித்த அண்மைக்கால நாடகங்கள், சிங்களத்திரைப்படம் பற்றி, என்று பல விடயங்களைப்பற்றி , எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

அமரர் சோமகாந்தன் தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய 'காந்தன் கண்ணோட்டம்' என்னும் பத்தி எழுத்துகள் பற்றியொரு கட்டுரை தொகுப்பிலுள்ளது. இச்சிறு கட்டுரை சோமகாந்தனின் பத்தி எழுத்துகளை விபரிப்பதுடன், பத்தி எழுத்துகள் பற்றிய கே.எஸ்.எஸ் அவர்களின் கருத்துகளையும் உள்ளடக்கியிருப்பது இதன் சிறப்பு.

கலாப்ரியாவின் 'உருள் பெருந்தேர்' ஓடிய என் மனப்பாதையில் அது பதித்த தடங்கள்.... வ.ந.கிரிதரன் -


  எழுத்தாளர்களின் பால்ய காலத்து அனுபவங்களை, வாசிப்பு அனுபவங்களை, மொத்தத்தில் அவர்கள்தம் வாழ்க்கை அனுபவங்களை வாசிப்பதில் எனக்கு எப்பொழுதுமே ஆர்வமுண்டு. முக்கிய காரணம் எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்கள் வெறும் அபுனவுகளாக  மட்டும் இருந்து விடாமல் இலக்கியச்சிறப்பு மிக்கதாக, கலைத்துவம் மிக்கதாகவும் இருக்கும். ஒளிவு, மறைவு இல்லாமல் அவர்கள் எழுத்தில் வெளிப்படும் நேர்மை நெஞ்சினைத்தொடும்.

எழுத்தாளர்களின் அபுனைவுகளில் மட்டுமல்ல அவர்கள்தம் புனைவுகள் கூட சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாக அப்புனைவுகள் இருந்து விடுவதுதான். புகழ் பெற்ற உலகப்பெரும் எழுத்தாளர்களின் சிறப்பான படைப்புகள் அவர்கள் சிந்தனைகளின், வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாகவே அமைந்திருப்பதை அவர்களது படைப்புகளை வாசிக்கும்போது அறிய முடிகின்றது.

மேலும் அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் தெரிவிக்கும் புதுத்தகவல்கள் ஒரு காலகட்ட வரலாற்றுச்சின்னங்களாக விளங்கும். காலமாற்றத்தில் காணாமல் போனவற்றையெல்லாம் அவர்கள்தம் எழுத்துகளில் வாசிக்கும்போது வாசிப்பின்பத்துடன் எம்மையும் எம் கடந்த காலத்துக்கே அழைத்துச்சென்று விடுகின்றன.

அண்மையில் என் நெஞ்சினைத்தொட்டதொரு எழுத்தாளரின் வாழ்க்கை அனுபவங்களினை வெளிப்படுத்தும் புத்தகமொன்றாக எழுத்தாளர் கலாப்ரியாவின் வாழ்வு அனுபவங்களின் தொகுப்பான '  ' என்னும் நூலினைக் குறிப்பிடலாம். இன்றுதான் டொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் அதனை இரவல் பெற்றேன். வாசித்துக் கொண்டிருக்கின்றேன். இதுவரை வாசித்த நூலில் வரும் அவர் வாழ்வில் வந்து போன மனிதர்கள் பற்றிய அனுபவங்கள் நெஞ்சினைத்தொட்டன என்று மட்டும் கூறிவிடமுடியாது. வாசித்த பின்னரும் நெஞ்சினை வாட்டும் வகையில் கலாப்ரியாவின் அனுபவங்கள் நெஞ்சினை உலுக்கு விட்டன என்றே கூற வேண்டும். உதாரணத்துக்கு அவர் வாழ்வில் வந்து போன குடும்பமொன்று பற்றிய விபரிப்பினைக் கூறலாம்.

'நிலக்கிளி' நாவல் பற்றிய சிந்தனைத்துளிகள்..... வ.ந.கிரிதரன் -

ஈழத்துத்தமிழ் நாவல்களில் அனைத்துக்குழுக்களாலும் தவிர்க்க முடியாததொரு படைப்பாகக்கருதக்கூடிய படைப்பு அ.பாலமனோரகனின் 'நிலக்கிளி'. அந்த ஒரு படைப்பின் மூலம் ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் தனக்கென்றோரிடத்தைப்பிடித்துக்கொண்டவர் அவர். வன்னி மண்ணின் மணம் கமழும் நல்லதொரு நாவல். நிலக்கிளி நல்லதொரு படிமம். நிலத்தில் பொந்துகள் அமைத்து கூடுகட்டி வாழும் அழகிய பறவைகள் நிலக்கிளிகள். இவை தாம் வசிக்கும் வளைகளை விட்டு அதிக உயரம் பறப்பதில்லை. இவ்விதம் நிலக்கிளிகளைப்பற்றிக்குறிப்பிடும் ஆசிரியர் பதஞ்சலியையும் அவ்விதமானதொரு நிலக்கிளியாக நாவலில் உருவகித்திருக்கின்றார். இந்த நாவல் என்னைக்கவர்ந்ததற்கு முக்கிய காரணங்கள்: வன்னி மண் வாசனை தவழும் எழுத்து மற்றும்பாத்திரப்படைப்பு (நாவலின் பாத்திரங்கள் அனைத்துமே உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றன).

இந்த நிலக்கிளிகளைப்பற்றி நான் இந்நாவலைப்படிப்பதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. எனது பால்ய காலம் வன்னியின் ஒரு பகுதியாக வவுனியாவில் கழிந்திருந்தாலும் அங்கு நான் வாழ்ந்திருந்த காலத்தில் இவ்விதமானதொரு பறவையைப்பற்றிக்கேட்டதேயில்லை. நிலக்கிளி என்பது இன்னுமொரு பறவைக்கு பால மனோகரன் வைத்த பெயரா அல்லது உண்மையிலேயே அப்பெயரில் அழைக்கப்படுமொரு பறவை உள்ளதா? ஏனெனில் இன்று வரை எனக்கு 'நிலக்கிளி' என்னும் பறவை பற்றி 'நிலக்கிளி' நாவலில் வருவதை விட மேலதிகமான தகவல்களெதுவும் கிடைக்கவில்லை. 'நிலக்கிளி' பற்றி வன்னி நண்பர்கள் யாராவது மேலதிகத்தகவல்களிருப்பின் பகிர்ந்து கொள்ளவும்.

இந்த நாவலின் ஆரம்பம் முரலிப்பழம் பற்றிய வர்ணனையுடன் 'கார்த்திகை மாதத்தின் கடைசி நாட்கள்! அடிக்கடி பெய்த பெரு மழையில் குளித்த தண்ணிமுறிப்புக் காடுகள் பளிச்சென்றிருந்தன. ஈரலிப்பைச் சுமந்துவந்த காலையிளங் காற்றில் முரலிப் பழங்களின் இனிய மணம் தவழ்ந்து வந்தது' என்று ஆரம்பிக்கின்றது. நல்லதோர் ஆரம்பம். அந்த ஆரம்பமே நாவல் இயற்கை எழில் ததும்பும் வன்னி மண்ணின் மணம் கமழும் நாவலென்பதை எடுத்துக்காட்டி விடுகிறது. தொடர்ந்து வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

நா.பா.வின் 'நித்திலவல்லி' தந்த நினைவுகள்... வ.ந.கிரிதரன் -


கடந்த சில வருடங்களில் கல்கி, நா.பார்த்தசாரதி போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழக அரசினால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதால் அவை தமிழகத்தின் பல பதிப்பகங்களுக்கும் அவர்களது வியாபாரத்துக்கு உதவி வருகின்றன. அண்மையில் டொராண்டோ நூலகத்தில் நா.பார்த்தசாரதியின் 'நித்திலவல்லி' 'கபாடபுரம்' போன்ற நாவல்களின் கவிதா பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்த புதிய பதிப்புகளைப் பார்த்தேன். அழகாக அச்சிட்டு, வெளியிட்டிருக்கின்றார்கள். இவற்றில் 'நித்திலவல்லி'  நாவலை, ஓவியர் கோபுலுவின் அழகான ஓவியங்களுடன் எனது மாணவப் பருவத்தில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது வாசித்திருக்கின்றேன். வெகுசன படைப்புகளைத் தந்த எழுத்தாளர்களில் எனக்கு நா.பார்த்தசாரதியும் பிடித்த எழுத்தாளர்களிலொருவர். அவரது சமூக மற்றும் சரித்திர நாவல்களான குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம், நித்திலவல்லி போன்ற நூல்களை நான் அன்று விரும்பி வாசித்திருக்கின்றேன். நா.பா.வின் எழுத்து வாசிப்பதற்கு இனிமையானது. அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர் என்பதால் நெஞ்சைனையள்ளும் இனிய தமிழில் அவரது படைப்புகள் விளங்கும். அந்தத்தமிழுக்காகவே வாசிக்கலாம். உதாரணமாக 'நித்திலவல்லி' பின்வருமாறு தொடங்குகின்றது:

".. வாதவூர் எல்லையைக் கடக்கும்போதே கதிரவன் மலைவாயில் விழுந்தாயிற்று.  மருத நிலத்தின் அழகுகள் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தன. சாலையின் இருபுறமும் பசுமையான  நெல் வயல்களும், தாமரைப் பொய்கைகளும்,  சோலைகளும், நந்தவனங்களும்,  மூங்கில்கள் சிலிர்த்தெழுந்து  வளர்ந்த மேடுகளுமாக  நிறைந்திருந்தன.  கூடடையும் பறவைகளின்  பல்வேறு  விதமான ஒலிகளும், மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று  காற்றில் உராயும் ஓசையும், செம்மண் இட்டு மெழுகினாற் போன்ற  மேற்கு வானமும் அந்த இளம் வழிப்போக்கனுக்கு உள்ளக் கிளர்ச்சி அளித்தன."

'மணிக்கொடி' தந்த ஜோதிர்லதா கிரிஜா!

கடந்த 18.04-2024 அன்று மறைந்த எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜாவின் முக்கியமான நாவல் 'மணிக்கொடி'.  இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையமாக வை...

பிரபலமான பதிவுகள்