எனது (வ.ந.கிரிதரன்) நாவலான 'குடிவரவாளன்' நாவல் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் அகதியொருவனின் நியூயார்க் மாநகரத்து வாழ்க்கையை விபரிப்பது. சட்டவிரோதக் குடியாகச் சுமார் ஒருவருடன் வரையில் அம்மாநகரில் தப்பிப்பிழைத்தலுக்காக அலைந்து திரிந்த வாழ்வை விபரிக்கும் நாவல். புகலிடத்தமிழர்கள் மத்தியிலிருந்து வெளியான , புகலிட வாழ்வை விபரிக்கும் நாவல்களில் 'குடிவரவாளன்' நாவலுமொன்று. தமிழகத்தில் ஓவியா பதிப்பாக வெளியான நாவலிது.
இந்நாவல் ஏற்கனவே வெளியான எனது சிறுநாவலான 'அமெரிக்கா' வின் தொடர்ச்சி. 'அமெரிக்கா' அமெரிக்காவில் புகலிடம் தேடி அரசியல் அடைக்கலம் நாடிய இலங்கைத்தமிழ் அகதி ஒருவனின் சுமார் மூன்று மாதம் வரையியிலான நியூயார்க் மாநகரத்தின் ஒரு பகுதியான புரூக்லின் நகரில் அமைந்துள்ள தடுப்பு முகாம் வாழ்வை விபரிப்பது. 'அமெரிக்கா' தடுப்பு முகாம் சட்டவிரோதக் குடிவரவாளன் ஒருவனின் தடுப்பு முகாம் வாழ்வை விபரித்தால், 'குடிவரவாளன்' நாவல் நியூயார்க் மாநகரின் அச்சட்டவிரோதக் குடிவரவாளனின் தப்பிப்பிழைத்தலுக்கான அலைதலை விபரிக்கும்.