Monday, July 8, 2024

பாரதியார் நான் பேசுகின்றேன்!

பாரதியாரின் 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்' கவிதையினை அவரே நம் முன் வந்து பாடினால் எப்படியிருக்கும்?


 

எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் எதிர்வினையும் அதற்கான என் பதிலும்... வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அவரது 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' என்னும் என் கட்டுரைத்தொகுதி பற்றி எழுதிய விமர்சனத்துக்கு நான் எழுதிய எதிர்வினைகளுக்குப் பதிலளித்து இன்னுமோர் எதிர்வினையொன்றினை ஆற்றியிருந்தார். நான் என் முதல் எதிர்வினையில் பாரதியாரை அவரது ஆன்மீகக் கருத்துகளூடு, அவரது வர்க்க விடுதலை, பெண் விடுதலை, வர்ண விடுதலை, மானுட விடுதலை, இருப்பு பற்றிய தேடல் போன்ற நிலைப்பாடுகளை அணுகுபவன் என்றும், அவனது முரண்பாடுகள் அவனது அறிவுத்தாகமெடுத்தலையும் விளைவுகள் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதனாலேயே என் நூலை என்னை மிகவும் பாதித்தவர்களில் ஒருவரான  அவருக்குச் சமர்ப்பித்தேன் என்பதையும் எடுத்துரைத்திருந்தேன்.

இதற்கான தனது இரண்டாவது எதிர்வினையில் அருண்மொழிவர்மன் பாரதியாரின் இன்னுமொரு கட்டுரையில் பின்வருமாறு கூறியிருப்பார்: "பாரதி “இந்தியா”வில் எழுதி பின்னர் பாரதி விஜயா கட்டுரைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள “காலாடியில் பிரதிஷ்டை” என்ற கட்டுரை பாரதியின் நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றது.  பெப்ரவரி 26, 1910 இல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் பாரதி குறிப்பிடும் "ஶ்ரீ சிருங்ககிரி ஸ்வாமி உபன்னியாசத்தில் கேட்டுக்கொண்டது போல் நாமெல்லாரும் ஸநாதன தர்மத்தை ஸ்தாபிக்க பெருமுயற்சி செய்யவேண்டும்.” என்னும் கூற்றை எடுத்துக்காட்டி 'சனாதனத்தைக் காக்கவேண்டும், ஆரிய தர்மத்தைக் காக்கவேண்டும் என்கிற வர்ண உணர்வு கொண்ட மதவாதியாகவே பாரதியை இந்தக் கட்டுரை வெளிப்படுத்துகின்றது.' என்று கூறுகின்றார்.

இங்கு தற்போது நாம் நடைமுறையில் இருக்கும் வர்ணப்பிரிவுகளைப்பின்பற்றும் , அதாவது பிறப்பால் ஒருவரது வர்ணம் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது என்னும் அடிப்படையில் போதிக்கும் மதவாதிகளில் ஒருவராக அருண்மொழிவர்மன் பாரதியாரை இனங்காண்கின்றார். இங்குதான் அருண்மொழிவர்மன் தவறி விடுவதாகக் கருதுகின்றேன்.

Friday, July 5, 2024

கவிதை: கண்ணம்மாவுடனோர் உரையாடல் காலவெளிப்புள் பற்றி... - வ.ந.கிரிதரன் -



கண்ணம்மா!
காலவெளிப்புள்!
ஆம்! நீ ஒரு புள்தான் என்றேன்.
காலவெளிபுள்தான் என்றேன்.
அதற்கு நீ
'கொல்'லென்று நகைத்தாய்.
'பல்'லென்று முறுவலித்தாய்.
புள்ளென்றெனை அழைத்தாய்.
கள்ளா உனக்கென்ன துணிவென்றாய்.
கள்ளா என்றெனை அழைப்பதில்
கண்ணம்மா எனக்கும் சம்மதம்
என்றேன்.
ஏன் என்றாய்.
உள்ளங் கவர் கள்ளன் அதனால்
என்றேன்.
யார் உள்ளம் என்றாய்.
கண்ணம்மா,
உன் உள்ளம் என்றேன்.
மீண்டுமொரு
பல் தெரியக்
கொல்.  

Thursday, July 4, 2024

'இறைவன் என்றொரு கவிஞன். அவன் படைத்த கவிஞன் மனிதன்' - கவிஞர் கண்ணதாசன்

'ஏன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இசை - டி.ஆர்.பாப்பா. பாடியவர் - எஸ்.பி.பி. நடிப்பு - ரவிச்சந்திரன் & லட்சுமி.
 

இறைவனைக் கவிஞனாகச் சித்திரித்திருக்கின்றார் கவிஞர். மகான்களை அக்கவிதைகளில் காவியங்கள் என்கின்றார். கவிஞரின் இக்கற்பனைச் சிறப்புக்காகவே எனக்குப் பிடித்த பாடலிது. பாடலுக்கு எஸ்.பி.பி.யின் குரலும், பாப்பாவின் இசையும், ரவிச்சந்திரனின் நிதானமான நடிப்பும் இப்பாடலின் மேலதிகச் சிறப்பம்சங்கள்.
 
'கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான். பெண்ணிடம் பிறந்ததை பெண்ணுக்கே அளித்தான்' என்னும் வரிகளை ரவிச்சந்திரன் பாடுகையில் லட்சுமி வெளிப்படுத்தும் நாணம் மறக்க முடியாதது.

கவிதை: ஜிம்மி - வ.ந.கிரிதரன் -


ஜிம்மி! முதலில் நினைவுக்கு வருவது
பபா வீட்டு ஞமலி!
பபா என் பால்ய காலத்து நண்பன்.
பபா பற்றி நினைத்ததும்
ஜிம்மி பற்றிய நினைவுகளும் வந்து விடும்.
உடும்பு
பிடிப்பதில் பிரியமும், வல்லமையும்
ஜிம்மிக்கு உண்டு.
எப்பொழுதும் பபாவின் முன்
வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும் ஜிம்மியின்
தோற்றம் இன்னும் நினைவில் மங்கிவிடவில்லை.
உடும்பின் ஈரலை அதன் மூக்கில் பபா பூசி விடுவான்.
அது ஒன்று போதும் ஜிம்மிக்கு.
காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து ஓடும்
ஜிம்மிக்குப் பின் நாமும் ஓடுவோம்.

Wednesday, July 3, 2024

கவிதை: மழை பொழியும் நள்ளிரவில் படுக்கையில் நான்! - வ.ந.கிரிதரன் -


வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவில்
படுக்கையில் புரண்டபடியும்,
சுவர்ப் பல்லிகளின் அசைவுகளைப்
பார்த்தபடியும், சிந்தித்தபடியும்,
நானிருக்கின்றேன்.
வெளிச்சம் நாடி வந்தமர்ந்து
இரையாகும் பூச்சிகளைப்
பார்க்கும்போதெழும் பல்வகை
சிந்தனைகளில் மூழ்கிக்கிடக்கின்றேன். 

நோக்கலில் இரக்கம்!

பல்லிகள்தம் பார்வையில்
நான் பார்க்கவில்லை.

இதனை நான் உணர்ந்துதானிருக்கின்றேன்.
உண்டு முடித்த ஏப்பம் மிக
அவை மீண்டும் அடுத்த இரைக்காய்த்
தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்கின்றன.
அவதானித்துக்கொண்டுதானிருக்கின்றேன்.

பல்லிகளை அவதானித்தல் ஒருகாலத்தில்
ஆம்! படுக்கையில் படுத்திருந்தபடிதான்,
பல்லிகளை அவதானித்தல் ஒரு காலத்தில்
என் பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்தது.
நன்கு கவனிக்கவும் பொழுதுபோக்கு என்னும்
சொற்பதத்தை.

இன்று என் அவதானிப்பு
பொழுதுபோக்குக்கு உரியதல்ல.
இருப்புக்கான தப்பிப்பிழைத்தல் பற்றியது.
இருப்பென்னும் படைப்புத்திறனில்
பொதிந்துள்ள தவறு பற்றியது.
இவ்விதமான தருணங்களில்
இருப்பில் ஏன் துயரங்கள் கவிந்துள்ளன
என்பது புரிவது போல் தெரிந்தாலும்
உண்மையில் புரிவதில்லை.

இடையில் கோடிழுக்கும் மின்னலை
சன்னலூடு நோக்குகின்றேன்.
இடியெனத் தொடரும் பேரோசை
கேட்டு நான் படுத்திருக்கின்றேன்.
மாகவிஞர் பலரைப் பாதித்த இயற்கை நிகழ்வு!
அவர்கள்தம் வரிகளில் இளகியிருந்திருக்கின்றேன்.
அவற்றையும் கூடவே எண்ணிக்கொள்கின்றேன்.
வயற்புறத்து மண்டூகங்களின் வாய்ப்பாட்டு
தொடங்கி விட்டது.
விடிய விடிய நடக்கும் இசைக்கச்சேரி.
இந்த மழை பொழியும் நள்ளிரவில்
நான்
துஞ்சாதிருக்கின்றேன்.
நெஞ்சார மழை பற்றிய
நினைவுகளில் மூழ்கிக்கிடக்கின்றேன்.
நள்மழை இன்று
நீண்டநேரம் பெய்யப்போகுதென்ற
உணர்வு.

நெடுமழை!
கடுமழை!
அடைமழை!

மண்டூகங்களே! நீவிர் உம்
மழைக்கச்சேரியை நிறுத்திவிடாதீர்.
இரசிகன் நானிருக்கின்றேன்
நள்மழை பற்றிய நும் கச்சேரியை
நெஞ்சில் வைத்து இரசிப்பதற்கு.
ஆம்! நானிருக்கின்றேன்.
விடிய விடிய இரசிப்பதற்கு
விடியும்வரை நானிருப்பேன்
மண்டூகங்களே!

வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவில்
நான் படுக்கையில் புரண்டபடியும்,
சிந்தித்தபடியும்,
சுவர்ப் பல்லிகளின் அசைவுகளைப்
பார்த்தபடி நானிருக்கின்றேன்.

girinav@gmail.com

நன்றி: வ.ந.கிரிதரன் பக்கம் - https://vngiritharan230.blogspot.com/2024/07/blog-post_3.html#more


girinav@gmail.com

Tuesday, July 2, 2024

வ.ஐ.ச. ஜெயபாலனின் 'கள்ளிப்பலகையும், கண்ணீர்த்துளிகளும்'


சிறந்த கவிஞர்களிலொருவராக அறியப்படும் வ.ஐ.ச. ஜெயபாலன் நான் சந்தித்த காலகட்டத்தில் மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவராக, வாய்க்கு வாய் 'ராசா' என்று அழைக்குமொருவராக, ஈழத்துத் தமிழர்களின் சமூக, அரசியல் பற்றிய விடயங்களைச் சம்பாஷிப்பதில் மிகவும் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். இவ்விதமே அவர் என் நினைவினிலிருக்கின்றார்.

'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' பற்றிய ஆய்வுக்காக, ஈழத்தமிழர்களின் வரலாற்றினைக்கூறும் நூல்களிலொன்றான 'யாழ்ப்பாண வைபவமாலை'யினைப்பெறுவதற்காக இவரை முதன் முதலாகச்சந்தித்திருக்கின்றேன். அதன் பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகைக்கு இவரது கவிதை வேண்டிச் சந்தித்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில இவருடன் சைக்கிளில் யாழ்நகரில் திரிந்த நாள்கள் நினைவிலுள்ளன. அதன் பின்னர் கொழும்பில் சந்தித்திருக்கின்றேன். அப்பொழுது இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஏதோவொரு பாடத்திட்டத்தில் (அரசியல் சம்பந்தமானதாகவிருக்கலாம்) சேர்ந்து படித்துக்கொண்டிருந்தார்.

Friday, June 28, 2024

கவிதை; ஒண்டாரியோ அறிவியல் மையம்: கட்டடக்காட்டுக் குளிர் தென்றல்! - வ.ந.கிரிதரன் -


- அண்மையில் ஒண்டாரியோ உள்கட்டுமான அமைச்சர்  Kinga Surma திடீரென  ஒண்டாரியோ சயன்ஸ் சென்டரை, எவ்வித முன்னறிவித்தலுமின்றி, கூரைக் கட்டுமானத்ன் நிலை காரணமாக மூடினார். அதன் தாக்கம் இக்கவிதை. -


நீ வெறும் நில அடையாளம் மட்டுமல்ல.
நீ வெறும் கட்டடக்கலை அற்புதம் மட்டுமல்ல.
நீ
நகரத்து மக்களின்,
நாட்டு மக்களின்
வாழ்வுடன் பின்னிப் பிணைந்த
ஓர் அனுபவம்.
உணர்வுச்சித்திரம்.

நீ எங்களுக்கு ஆசானாக இருந்தாய்.
நீ எங்களுக்கு நண்பராக இருந்தாய்.
நீ எங்களுக்கு வித்தை காட்டும் மந்திரவாதியாகவிருந்தாய்.
நீ எங்களுக்கு இன்பத்தைத்தரும் கலைஞராக இருந்தாய்.

எனக்குப் பிடித்த கவிஞர் எம்.ஏ.நுஃமானின் 'நிலம் என்னும் நல்லாள்'



பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் சிறந்த திறனாய்வாளர் மட்டுமல்லர். சிறந்த கவிஞரும் கூட. இலங்கைத் தமிழ் இலக்கியத்தில், கவிதைத்துறையில் இவரது கவிதைகள் மிகுந்த பங்களிப்பை ஆற்றியுள்ளன.  இவரது கவிதைகள் பல எனக்குப் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்:

1. நடை. இனிய, நெஞ்சை அள்ளிச்செல்லும் நடை. சிலு சிலுவென்று வீசிச்செல்லும் தென்றலை அனுபவிப்பதுபோலிருக்கும் இவரது மொழியை வாசிக்கையில்.  ]

2. மரபுக் கவிதையின் அம்சங்கள், குறிப்பாக மோனை வெகு அழகாக இவரது கவிதைகளில் விரவிக் கிடக்கும். வலிந்து திணிக்காத வகையில் , தேவைக்குரியதாக அவை பாவிக்கப்பட்டிருப்பதால் வாசிக்கையில் திகட்டுவதில்லை. இன்பமே பொங்கி வழியும்.

என்னைக் கவர்ந்த அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) 'எதிர்காலச் சித்தன் பாடல்'


ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் பல்துறைகளிலும் சுடர்விட்டு அமரரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளில் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை என்னைக் கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று.  மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மீராவின் 'எனக்கும் உனக்கும் ஒரே ஊர். வாசுதேவ நல்லூர்' என்பதையே முதலாவது தமிழில் வெளிவந்த அறிவியற் கவிதையாகக் குறிப்பிடுவார். ஆனால் அதற்கும் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' கவிதையினையே தமிழின் முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுகின்றேன். சுஜாதாவுக்கும் அ.ந.க.வின் மேற்படி கவிதை பற்றி தெரிந்திருந்தால் அவரும் அவ்விதமே கூறியிருப்பார். மேற்படி கவிதை நிகழ்கால மனிதன் எதிர்கால மனிதன் ஒருவனைச் சந்தித்து, உரையாடித் திரும்புவதைப் பற்றி விபரிக்கிறது. இதனை கவிதையாக வெளிவந்த அறிவியற் புனைவாகவும் கருதலாம்.

அ.ந.க இலக்கியத்தின் பன்முகப்பிரிவுகளிலும் தடம் பதித்தவர். குறைவாக எழுதியிருந்தாலும் அவரது கவிதைகள் இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்புகள். எழுத்தாளர் இ.முருகையன் அ.ந.க.வின் இக்கவிதை பற்றிக்குறிப்பிடுகையில் "அ.ந.கந்தசாமியின் எதிர்காலச்சித்தன் பாடலைவிடக் கருத்தும் சிந்தனையும் பொதிந்த கவிதைகள் தமிழகத்தில் உள்ளனவா? இருந்தால் எடுத்துக் காட்டட்டும்" என்று கூறியிருந்தது நினைவுக்கு வருகின்றது.

அ.ந.க மார்க்சியத்தத்துவங்களின் அடிப்படையில் இயங்கிய சமூக,அரசியற் செயற்பாட்டாளரும் கூட. அதே சமயம் அவரது கவிதைகளில் இது போன்ற சிந்தனையாற்றலையும், தேடல்களையும் உள்ளடக்கிய கருத்துகளையும் காணலாம். இலங்கைத்தமிழ்க் கவிதைகள் மட்டுமல்ல உலகத்தமிழ்க் கவிதைகளை உள்ளடக்கிய ஒவ்வொரு தொகுப்பிலும் நிச்சயம் இடம் பெற வேண்டிய கவிதை இது.  

Thursday, June 27, 2024

குதிக்க வைக்கும் வான் கேலன் இசைக்குழுவின் 'குதி' (Jump)!


வான் கேலன் இசைக்குழுவைப் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது அவர்களது புகழ்பெற்ற 'Jump' பாடல்தான். குழுவின் பிரதான பாடகர், கிட்டார் கலைஞர் இவர்களுடன் ஏனைய இசைக் கலைஞர்களும் சிறப்பாக இணைந்து அப்பாடலை உருவாக்கியிருப்பார்கள். 
 
எண்பதுகளில் கனடா வந்த சமயம் ஆரம்பத்தில் சிறிது காலம் என் மச்சான் குட்டியின் அப்பார்ட்மென்டில் தங்கியிருந்தேன். அவனுடன் வேறு நண்பர்களும் தங்கியிருந்தார்கள். அவர்க்ளில் ஒருவன் அசோக். இவன தாய், தந்தையர் இருவரும் யாழ் வைத்தியசாலையில் குழந்தை நல வைத்தியர்களாகப் பணியாற்றியவர்கள். அவர்கள் Toyota காரொன்றில் திரிவதைக் கண்டிருக்கின்றேன். அறிந்திருக்கின்றேன். ஆனால் அசோக்கை நான் சந்தித்தது இங்குதான். ஆரம்பத்தில் பல்வேறு தொழில்களையும் செய்து தனது துறையான கணக்கியல் துறையில் உரிய சான்றிதழ்கள் பெற்று கனடிய அரச நிறுவனமொன்றில் பணியாற்றியவன். 

Tuesday, June 25, 2024

'கிட்டார்க் கடவுள்' எரிக் கிளாப்டனின் ' 'I shot the sheriff, but I did not shoot the deputy' ( நான் காவல் அதிகாரியைச் சுட்டேன். ஆனால் துணைக்காவல் அதிகாரியைச் சுடவில்லை')


எனது இசை பற்றிய பதிவுக்கு எதிர்வினையாற்றிய நண்பரும் , எழுத்தாளருமான ஜோர்ஜ்.இ.குருஷேவ் பிரபல 'கிட்டார்' கலைஞரும், பாடகருமான எரிக் கிளாப்டனின் 'I shot the sheriff, but I did not shoot the deputy' ( நான் காவல் அதிகாரியைச் சுட்டேன். ஆனால் துணைக்காவல் அதிகாரியைச் சுடவில்லை') என்னும் பாடலுக்கான 'யு டியூப்' இணைப்பினைச் சுட்டிக்காட்டினார். டியூன், ரிதம், பீட் பற்றிய புரிதலுக்காக அவ்விணைப்பினைச் சுட்டிக் காட்டினார். அதற்காக அவருக்கு நன்றி. 
 
'I shot the sheriff, but I did not shoot the deputy' ( நான் காவல் அதிகாரியைச் சுட்டேன். ஆனால் துணைக்காவல் அதிகாரியைச் சுடவில்லை') பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் ரேகே பாடகர் பாப் மார்லி. 

Monday, June 24, 2024

எனக்குப் பிடித்த கவிஞர் நீலாவணனின் 'விளக்கு'


ஈழத்துத் தமிழ்க் கவிஞர்களில் முக்கியமான ஒருவர் கிழக்கிலங்கை தந்த கவிஞர் நீலாவணன். அவரைப்பற்றி நல்லதொரு சுருக்கமான கட்டுரை 'கிழக்கின் கவித்துவ ஆளுமை நீலாவணன்'. எழுதியவர் மோகனதாஸ். அதற்கான இணைய இணைப்பினை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அவரது கவிதைத்தொகுப்புகள் பலவற்றை 'நூலகம்' இணையத்தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். இவரது 'விளக்கு' கவிதை எனக்கு பிடித்த கவிதைகளிலொன்று.  தினகரன் பத்திரிகையில்  31.5.69  அன்று வெளியான இக்கவிதை அவரது 'ஒத்திகை' கவிதைத்தொகுப்பிலும் உள்ளடங்கியுள்ளது.  தொகுப்பு நூலகம் இணையத்தளத்திலுள்ளது. இணைப்பை இப்பதிவில் இறுதியில் தந்துள்ளேன். வாசிக்கவும்.

இருண்டு கிடக்கிறது வீடு. காடுகளூடு அலைந்து திரியும் கவிஞன் இருண்டிருக்கும் வீடு பற்றியும்  அதற்கு விளக்கேற்ற் வேண்டுமென்றும்  எண்ணித்திரும்புகின்றான்.  திரும்பியவன்  சாவி கொண்டு வீடு திறந்து உட்செல்கின்றான். உள்ளறையில் இருக்கும் தீப்பெட்டி எடுத்து விளகேற்றுகின்றான்.  'வீடிருண்டு கிடக்கிறது - விளக்கேற்றல் வேண்டும்' என்று தொடங்கும் கவிதை 'வீடிருண்டு கிடக்கவில்லை - விளக்கேற்றிவிட்டேன் வீதியிலே போவார்க்கும் ஒளிவிழுதல் கண்டேன்!' என்று முடிகின்றது.

இசையில் பாண்டித்தியம் மிக்கவர்களே! சில கேள்விகள்!


இசை அறிஞர்களே! இசை பற்றி அறிந்த முகநூல் நண்பர்களே! இசையில் பாண்டித்தியம் மிக்கவர்களே. உங்களிடம் சில கேள்விகள். நான் சுருதி, தாளம், Notes, Beats, சுரம் , இராகம் போன்றவற்றைப் பற்றி புரிந்துகொண்டிருப்பதை இங்கு எடுத்துக் கூறுவேன். அதில் தவறேதுமிருப்பின் அறியத்தாருங்கள்.
 
இசை நிகழ்ச்சிகளில் நடுவர்கள் எப்போதும் சுருதி பற்றிக் கூறுவார்கள். நான் புரிந்து கொண்ட அளவில் சுருதி அல்லது சந்தம் அல்லது ஆங்கிலத்தில் Rhythm அல்லது Tune இவையெல்லாம் ஒன்றே. இந்த என் புரிதல் தவறா?
சுருதி பிசகாமல் பாடுவது என்பது மேற்படி இசை அமைப்பாளர்கள் உருவாக்கிய சந்தம் அல்லது 'டியூனை' விளங்கி , அதற்கேற்பப் பாடுவது. இல்லையா?
 
ஆங்கிலத்தில் நோட்ஸ் என்பது சுரங்களே. 'பீட்' என்பது தாளமே.
இசை அமைப்பாளர்களின் டியூன் அல்லது சந்தம் , தாளாத்துக்கு அமைவாக இருக்கும். சுரங்களைக் கொண்டு உருவாகும் இராகங்களின் அடிப்படையில் அவை இருக்கும். பாடுபவர் தாளம் போட்டுக்கொண்டே பாடுவது அந்தச் சந்தம் அல்லது சுருதி விலகாமல் பாடுவதற்கே.

Sunday, June 23, 2024

'மரணத்துள் வாழ்வோம்' பற்றி...


தமிழ்க் கவிதைப் பரப்பில். குறிப்பாக இலங்கைத் தமிழ்க் கவிதைப்  பரப்பில் வெளியான முக்கியமான கவிதைத்தொகுப்பு 'மரணத்துள் வாழ்வோம்' . இதனைத் தொகுத்திருப்பவர்கள் மயிலங்கூடலூர் பி. நடராசன், இ.பத்மநாப ஐயர், அ.யேசுராசா & உ.சேரன்.  முதற் பதிப்பு 1985இல் 'தமிழியல்' வெளியீடாக இலங்கையிலும், இரண்டாவது பதிப்பு 1996இல் தமிழகத்தில் விடியல் பதிப்பக வெளியீடாகவும் வெளியானது.

நூலில் 31 கவிஞர்களின் 82 அரசியல் கவிதைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போர்ச்சூழற் காலத்தில் வெளியான கவிதைகள்  என்பதால் அரசியல் கவிதைகள் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள் போலும், இதில் எனக்கு உடன்பாடில்லை. இவை அரசியல் கவிதைகள் அல்ல. இவை போர்ச்சூழலில் வாழ்ந்த மக்களின் உணர்வுகளை, இருப்பின் யதார்த்தத்தை, வலியினைப் பதிவு செய்யும் கவிதைகள். அரசியல் கவிதைகள் என்னும் சொற்பதம் இக்கவிதைகளைப் பற்றிய தவறான புரிதலை வாசிப்பவர்கள் உள்ளங்களில் ஏற்றிவிடக் கூடும். ஒரு வகையில் அரசியற் பிரச்சாரக் கவிதைகளோ என்று அவர்களை ஒரு கணமாவது , கவிதைகளை வாசிக்கும் வரையிலாவது சிந்திக்க வைத்து விடும் அபாயம் அச்சொற்பதத்தில் உண்டு. இது என் கருத்து. 

Friday, June 21, 2024

எழுத்தாளர் பா, ராகவனின் கூற்றொன்று பற்றி...


எழுத்தாளர் பா.ராகவன் பின்வரும் முகநூல் பதிவினை இட்டிருந்தார்: 
 
"கள்ளச்சாராய மரணங்களின் தொடர்ச்சியாகக் குடிகாரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை சாகித்ய அகடமி, ஞானபீடம் போன்ற விருதுகளுடன் வழங்கப்படும் தொகையைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. ஒரு சிறந்த எழுத்தாளனைவிட ஒரு சிறந்த குடிகாரன் குடும்பத்துக்கு நிறைய நல்லது செய்ய முடியும் போலிருக்கிறது."
 
உண்மையில் அதிர்ச்சியாகவிருந்தது. கலை, இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்கள் முகநூலில் சுட்டிக்காட்டிய பின்பே இதனை அறிந்தேன். எழுத்தாளர் ஒருவர் குறிப்பாகப் புனைகதை எழுத்தாளர் என்பவர் மானுடரின் அனைத்துப் பக்கங்களையும் நன்கறிந்தவராக இருப்பது அவசியம். ராகவனின் இக்கூற்று அவர் இவ்விதம் பரந்த மனப்பான்மையுடன் மானுடரை அணுகாமல் , குறுகிய பார்வையுடன் அணுகுகின்றாரோ என்று எண்ண வைக்கிறது. 

பாப் மார்லி: 'உங்கள் உரிமைகளுக்காக எழுந்து நில்லுங்கள்'

ரெகே (Reggae) இசையென்றதும் முதலில் நினைவுக்கு வரும் பாடகர் பாப் மார்லி (Bob Marley) . அறுபதுகளின் இறுதியில் ஜமைக்காவில் உருவான இசை வடிவம் இது. தனித்துவமான 'ரிதம்' கொண்ட இசை. சம உரிமை, சமூக நீதி, அடக்குமுறைகளுக்கெதிராக ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகக் குரல் கொடுத்தல் போன்றவை ரெகே இசையின் சமுதாயப் பிரக்ஞையினை வெளிப்படுத்தினாலும் காதல், ஆன்மீகம், உறவுகள் பற்றியுமிருக்கும், 

Monday, June 17, 2024

தி ரோலிங் ஸ்டோன்ஸ்ஸின் 'பூதம் அல்லது சாத்தான் மீதான இரக்கம்' (Sympathy For The Devil)


எனக்குப் பிடித்த மேனாட்டுப் பாடகர்களில் ஒருவர் மிக ஜகர் (Mike Jagger) . 'ரொக்' இசையில் புகழ்பெற்ற இசைக்குழுவான 'தி ரோலிங் ஸ்டோன்ஸ்' குழுவை உருவாக்கியர்களில் ஒருவர்.
 
அவரது தி ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழுவின் முக்கிய பாடல்களில் ஒன்று 'Sympathy For The Devil' (சாத்தான் அல்லது பூதம் மீதான இரக்கம்).
தி ரோலிங் ஸ்டோன்ஸின் ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று இப்பாடல். 1968இல் லண்டனின் பார்வையாளர்களின் ஒலி/ஒளிப்பதிவு செய்யப்பட்ட பாடல்.

Sunday, June 16, 2024

அப்பா!


அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.  இந்நாளில் எந்தையும் தாயும் மகிழ்ந்து  குலாவி இருந்த மண்ணின் நினைவுகள் எழுகின்றன. எந்தை, தாயுடன்  கழித்த இனிய தருணங்கள் நினைவுக்கு வருகின்றன.

என் வாசிப்பு, எழுத்தார்வத்துக்கு முக்கிய காரணமே அப்பாதான். வீடு முழுவதும் புத்தகங்கள் , சஞ்சிகைகளால் நிறைந்திருந்த சூழலுக்குக் காரணம் அப்பா (நடராஜா நவரத்தினம் - நில அளவையாளராகப் பணி புரிந்த காலத்தில்  அவரைப் பலர் 'Tall Nava' என்று  அறிந்திருக்கின்றார்கள்).  தமிழகச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், இலங்கைப்பத்திரிகைகள் என்று அவற்றை வாங்கிக் குவித்தார். இவற்றுடன் அவர் தனது ஆங்கில நூல்களுக்காக புத்தக 'ஷெல்ஃப்' ஒன்றும் வைத்திருந்தார். அவற்றிலிருந்த நூல்களின் ஆசிரியர்களில் முக்கியமானவர் கிறகாம் கிறீன். அவரது நாவல்கள் பல அவரிடமிருந்தன. ஆர்.கே.நாராயணன், பி.ஜி வூட்ஹவுஸ்,  டி.இ.லாரண்ஸ் ('லாரண்ஸ் ஒஃப் அராபியா' (Lawrence of Arabia), டால்ஸ்டாய் என்று பலரின் நூல்கள் அவரது 'புக் ஷெல்வ்'வில்  இருந்தன.

கல்கி, குமுதம், விகடன், ராணி, ராணி முத்து, பொன்மலர், பால்கன், சுதந்திரன்ம், ஈழநாடு, தினமணி, The Hidnu, கலைமகள், மஞ்சரி, பொம்மை, பேசும்படம், தினமணி, தினமணிக்கதிர் என்று தமிழில் வெளியான வெகுசன சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளால் வீடு நிறைந்து கிடந்தது. ஒரு தடவையாவது வாசி என்று அவர் கூறியது இல்லை. சூழல் எம்மை வாசிக்க வைத்தது. போட்டி போட்டு வாசித்தோம்.

Thursday, June 13, 2024

பேராசிரியர் சி.மெளனகுருவின் 'பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திரவும் ஈழத்து நாடக மரபும்'


எழுத்தாளர் ஜெயமோகனின் கேள்வி: "சரத்சந்திர எதிரிவீர அல்லது பிரசன்ன விதானகே பற்றி தமிழில் எவரேனும் எழுதியுள்ளனரா?"
 
இதற்கான பதில்: ஆம்! பேராசிரியர் சி.மெளனகுரு 'பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திரவும் ஈழத்து நாடக மரபும்' என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதியுள்ளார். அது ஒரு விபவி வெளியீடு.

நுட்பம் (1980/1981): 'பேராசிரியர் சரத்சந்திராவும் தேசிய நாடகமும்' - எம்.எஸ்.எம்.அனஸ்


" சரத்சந்திர எதிரிவீர அல்லது பிரசன்ன விதானகே பற்றி தமிழில் எவரேனும் எழுதியுள்ளனரா?" என்னும் எழுத்தாளர் அண்மையில் எழுப்பிய கேள்விக்கான பதிலொன்று: ஆம். எம்.எஸ.எம். அனஸ் 1981/1982இல் எழுதியிருக்கின்றார்.
 
பேராசிரியர் எதிரிவீர  சரத் சந்திரா பற்றிய எம்.எஸ்.எம்.அனஸின் கட்டுரையொன்று, 'பேராசிரியர் சரத்சந்திராவும் தேசிய நாடகமும்' என்னும் தலைப்பில் நான் இதழாசிரியராகவிருந்த நுட்பம் சஞ்சிகையில் (!980/1981) பிரசுரமாகியுள்ளது.
 
கட்டுரை வெளியான நுட்பம் இதழுக்கான இணையத்தள முகவரி - https://noolaham.net/project/1049/104833/104833.pdf

Tuesday, June 11, 2024

எழுத்தாளர் ஜெயமோகனும் , இலங்கை இலக்கியச் சூழலும்!


"ஈழ இலக்கியச் சூழலை எடுத்துப் பாருங்கள். சிங்கள இலக்கியம் உலக அளவில் கவனிக்கப்படுவது. சிங்கள நாடகமும் சினிமாவும் கலைமதிப்பு கொண்டவை. நமக்கு அங்குள்ள ஈழ இலக்கிய ஆளுமைகள் எவரேனும் சிங்கள இலக்கியம், சினிமா, நாடகத்தை அறிமுகம் செய்தார்களா? சரத்சந்திர எதிரிவீர அல்லது பிரசன்ன விதானகே பற்றி தமிழில் எவரேனும் எழுதியுள்ளனரா?"

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இவ்விதம் கூறியதாக அறிந்தேன். ஆச்சரியம் தரவில்லை. உண்மையில் ஜெயமோகனை அறிந்தவர்களுக்கு இக்கூற்று ஆச்சரியம் எதனையும் தராது. ஜெயமோகனைப் பொறுத்தவரையில் தன்னைத் தன் துதிபாடிகள் மட்டும் கதைத்தால் போதாது. தன் எதிரிகளும் கதைக்க வேண்டும். அதற்கு அவர் கையாளும் தந்திரங்களில் ஒன்று தான் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவது. ஜெயமோகனைக் கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு  மெல்ல அவல் கிடைத்த மாதிரி இச்சர்சைக்குரிய கருத்துகள் ஆகிவிடுகின்றன. ஆளுக்கு ஆள் கொதித்தெழுந்து துள்ளிக் குதிக்கத் தொடங்கி விடுவார்கள். ஜெயமோகனுக்குத் தேவை அதுதான். இதைப்பார்த்து ஆனந்தமடைவதில் அவருக்குப் பெரு விருப்புண்டு. தன் துதிபாடிகளின் பாராட்டுரைகளை விட எதிரிகளின் வசவுகளில் குளிர் காய்பவர் ஜெயமோகன்.

உலக மகாகவி சேக்ஸ்பியரைப் பாதித்த கவிஞன் கிறிஸ்தோபர் மார்லோ ( Christopher Marlowe)


Christopher Marlowe சேக்ஸ்பியர் காலத்தில் வாழ்ந்த கவிஞர். இவரது புகழ்பெற்ற கவிதை  Hero and Leander!  ஹீரோ என்னும் பெண்ணுக்கும், லியான்டெர் என்னும் ஆணுக்குமிடையிலான காதலை விபரிப்பது. இக்கவிதை தூய  காதல், விதி, மானுட உணர்வுகளில் விதியின் பங்கு ஆகியவற்றை ஆராய்கின்றது.

இதில் கவிஞர் காதல் , வெறுப்பு போன்ற உணர்வுகள் தன்னிச்சையாகத்  தோன்றுகின்றன.  சிந்தித்துச் சீர்தூக்கி வருவதில்லை. பார்த்த மாத்திரத்தில் உருவாகின்றன. பின்னால் விதியிருந்து ஆட்டி வைக்கின்றது என்பது இவரது கருத்து.

இக்கவிதையின் காதலைப்பற்றிய  கடைசி இரு வரிகள் முக்கியமானவை. அவை:

Where both deliberate, the love is slight:
Who ever loved, that loved not at first sight?


Where both deliberate, the love is slight - காதல் சீர்தூக்கி, சிந்தித்துப் பார்த்து உருவாவதில்லை. அப்படி உருவானால்  the love is slight. அது முழுமையானதல்ல. 

Friday, June 7, 2024

படித்தோம் சொல்கின்றோம்: கனடா தேசத்தின் நிலக்காட்சியையும் பல்லின மக்களின் ஆத்மாவையும் சித்திரிக்கும் வ. ந. கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் கதைத் தொகுதி ! - முருகபூபதி -


- பதிவுகள் இணைய இதழில் வெளியான எழுத்தாளர் முருகபூபதியின் விமர்சனக் கட்டுரை. -

வாசிப்பு அனுபவம், ஆளாளுக்கு வேறுபடும். ஒரு எழுத்தாளரின் புனைவு இலக்கியப் படைப்பினைப் பற்றி, சாதாரண வாசகர் கொண்டிருக்கும் ரசனைக்கும், மற்றும் ஒரு எழுத்தாளர் வைத்திருக்கும் பார்வைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. கனடாவில் வதியும் வ. ந. கிரிதரனின் கதைத் தொகுதியான கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் நூலை நான் படித்தபோது, வாசகர் மனநிலையிலும், படைப்பாளி மனவுணர்வுடனும்தான் படிக்க நேர்ந்தது.

சரியாக ஓராண்டுக்கு முன்னர், 07-06-2023 ஆம் திகதி கனடா ஸ்காபரோவில் என்னைச் சந்தித்து விருந்துபசாரம் வழங்கியபோது, அவர் என்னை வாழ்த்தி தனது கையொப்பத்துடன் தந்த இந்த நூல் பற்றி, ஒரு வருடம் கழித்து எழுது நேர்ந்தமைக்கு, இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கிருந்த பணிச்சுமைகள்தான் அடிப்படைக் காரணம். எனக்கிருக்கும் பணிச்சுமைகளுக்கு மத்தியில்தான் கிடைக்கும் நூல்களைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை படிப்படியாக பதிவுசெய்வதற்கும் நேரம் தேட வேண்டியிருக்கிறது ! யாழ்ப்பாணம் ஜீவநதியின் 194 ஆவது வெளியீடாக வந்திருக்கும் கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பதிப்பினைக் கண்டுள்ளது.

Monday, May 27, 2024

சுதந்திரன்: 'கண்டி இராச்சியத்தில் அரசோச்சியது தமிழ். பெளத்தத்தோடு இந்து மதத்துக்கும் சிறப்பான இடம் இருந்தது'


12.6.1960 சுதந்திரனில் தமிழின்பம் என்னும் புனைபெயரில் ஒருவர் 'கண்டி இராச்சியத்தில் அரசோச்சியது தமிழ்.  பெளத்தத்தோடு இந்து  மதத்துக்கும் சிறப்பான இடம் இருந்தது' என்னும் கட்டுரையொன்றினை எழுதியிருக்கின்றார்.

அதில் நாயக்க மன்னர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பையும் குறிப்பிட்டிருக்கின்றார்.

உதாரணத்துக்கு அக்கட்டுரையிலிருந்து கீழ்வரும் பகுதிகளைப் பகிர்ந்துகொள்கின்றேன். வாசித்துப் பாருங்கள்:

"இந்த நாயக்க மன்னர்கள் தமிழ் மொழிக்குப் பெரும் சேவை செய்துள்ளனர். ஆந்திர, சமஸ்கிருதப் பண்ண்டிதர்களுடன் தமிழ் வித்துவான்களும் சரிசமமான இடம் பெற்றிருந்தார்கள். இவர்களது தமிழ் சேவையிலான வேலைகளை இன்றும் தஞ்சையிலுள்ள சரஸ்வதி மகாலிலும், மதுரை திருமலை நாயக்கர் மகாலிலும் காணலாம். "

Sunday, May 26, 2024

காலத்தால் அழியாத கானம்: 'சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்'


'நல்லவன் வாழ்வான்' திரைப்படத்தின் மூலக்கதை நா.பாண்டுரங்கனுடையது. திரைக்கதை வசனம் எழுதியிருப்பவர் அறிஞர் அண்ணா. டி.ஆர்.பாப்பாவின் இசையில் ஒலிக்கும் இப்பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் வாலி. இதுதான் அவர் எம்ஜிஆரின் படத்துக்கு எழுதிய முதலாவது பாடலென்று அறிகின்றேன்.
 
கவிஞர் வாலி எம்ஜிஆருக்குப் பொருத்தமாக வரிகளை எழுதுவதில் வல்லவர். அதனால் எம்ஜிஆர் இதயத்தில் நல்லவராக இடம் பிடித்தவர். இப்பாடலில் வரும் பின்வரும் வரிகள் எவ்வளவு அழகாகக் காதல் வரிகளுக்குள் கட்சிப் பிரச்சாரத்தைச் செய்கின்றன;
 
"அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?
உள்ளத்தாமரை மலராதோ ?
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இருண்ட பொழுதும் புலராதோ ?"

Saturday, May 25, 2024

எழுத்தாளர் நந்தினி சேவியர் நினைவாக..


முகநூல் என்னைத் தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான ஆளுமைகளுடன் பிணைத்து வைத்தது. அவர்களில் ஒருவர் எழுத்தாளர் அமரர் நந்தினி சேவியர். மறக்க முடியாத இலக்கிய ஆளுமை.
 
என் முகநூல் பதிவுகளுக்கு அவர் இட்ட எதிர்வினைகளை, மெசஞ்சர் மூலம் பரிமாறிக்கொண்ட உரையாடல்களை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கின்றேன். அவர் இருந்திருந்தால் இன்று அவருக்கு வயது 75.
எனக்கு மிகவும் பிடித்த அவரது பண்பு: தான் ஏற்றுக்கொண்ட மார்க்சியக் கோட்பாடுகளூடு , சமூக, வர்க்க, அரசியல் விடுதலையினை நாடிய அவர் இறுதிவரை அவ்வழியே தளும்பாமல் வாழ்ந்து வந்தவர். அதில் அவர் மிகவும் தெளிவாகவிருந்தார்.

Friday, May 24, 2024

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ் இலக்கிய மன்றம்!


மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கம் தற்போது 'மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ் இலக்கிய மன்றம்' என்றழைக்கப்படுகின்றது.
இத்தமிழ் மன்றத்தின் இணைய இணைப்பு - https://tlauom.com
இத்தளத்தில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான நுட்பம், தமிழருவி இதழ்களின் கடந்த கால இதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

(மீள்பிரசுரம்) மோகத்தின் நிழல் - சுகுமாரன் -


'அம்மா வந்தாள்'  ஒன்றைத் தவிர தி. ஜானகிராமன் எழுதிய பிற நாவல்கள் எல்லாமும் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்தவை. 'ஆனந்த விகடன்' போன்ற வெகுஜன இதழ்களிலும் 'கணையாழி' போன்ற சிறு பத்திரிகை களிலுமே அவை தொடராக வெளியாகியிருக்கின்றன. பிற்காலத்தில் வெகு ஜனப் பிரபலமுள்ள எழுத்தாளர்கள் உருவாக்கிய தொடர் கதை இலக்கணம் எதற்கும் தி.ஜாவின் நாவல்கள் உட்படாதவை. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வாசக எதிர்பார்ப்புக்காக ஏற்படுத்திய திடீர் திருப்பங்களோ சுவாரசியச் சிக்கல்களோ இல்லாமல் எழுதப்பட்டவை.  எனவே தான் இந்த நாவல்களைத் தொடர்கதைகள் என்று சொல்லாமல், தொடர்கள் என்று குறிப்பிடுகிறேன்.

Saturday, May 18, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (6) - அத்தியாயம் ஆறு: எதிர்காலத்திட்டங்கள் பற்றிய உரையாடலொன்று.



ஒரு சில  மாதங்கள் ஓடி  மறைந்தன. இதற்கிடையில் பானுமதியும் மாதவனும் நெருங்கிய நண்பர்களாகி விட்டிருந்தனர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் அருகிலிருந்த  பூங்காவுக்குச் சென்று உரையாடுவதும், குரோசரி ஷொப்பிங் செய்வதற்காக இரு வாரத்துக்கொருமுறை செல்வதும், நூலகங்கள்செல்வதும்,  அவரவர் இருப்பிடங்களில் சந்தித்துக்கொள்வதும், இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடுவதுமெனப் பொழுதுகள் கழிந்துகொண்டிருந்தன.  இவ்விதமானதொரு நாளில் அன்று அவள் அவனது அப்பார்ட்மென்ட்டிற்கு வேலை முடிந்ததும் வந்திருந்தாள். சிறிது களைப்பாகவிருந்தாள்.

"ஏன்ன பானுமதி, களைப்பாகவிருக்கிறீர்கள்? ' என்றான் மாதவன்.

"இன்று நாள் முழுவதும் ஒரே பிஸி. மீட்டிங், செர்வர் அப் கிரேடிங்  என்று சரியான வேலை.  அதுதான். வேறொன்றுமில்லை. " என்றாள் பானுமதி பதிலுக்கு. அத்துடன் அவள் ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவனை நோக்கிக் கேட்டாள்: "இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது. மாது, உனக்கு லினக்ஸ் செர்வர் பற்றி நல்லாத்தெரியும்தானே. "

Friday, May 17, 2024

முள்ளிவாய்க்கால் கஞ்சி!


இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரும் மனித அழிவைத் தந்த யுத்தம் முடிவுக்கு வந்த தினம் மே 18. யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் இதுவரை இந்த யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் ஆறவில்லை. யுத்தத்துக்குப் பிரதான காரனமாக அமைந்த இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிட்டவில்லை.  யுத்தக்குற்றங்களுக்குக் காரணமானவர்களின் மீதான சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காணாமல்போனவர்களுக்கான நீதி இன்னும் கிட்டவில்லை.  இன்றும் மக்களின் காணிகள் முற்றாக விடுபடாத நிலைதான் காணப்படுகின்றது. இவற்றுக்கான தீர்வு இனங்களுக்கான நல்லிணக்கத்துக்கு மிகவும் அடிப்படை.

அண்மையில் தமிழ்த் தேடியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் 'போர் முடிவடைந்து எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் 15 வருடங்கள் ஆகின்றன. ஆனால் போருக்கு வழிசமைத்த பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. நல்லிணக்கமும் பிறக்கவில்லை. தாம் இன்னும் வலியுடனேயே வாழ்கின்றனர் என்ற தகவலையும், தமக்கு அரசியல் தீர்வு அவசியம் என்ற செய்தியையுமே இந்த கஞ்சி சிரட்டை ஊடாக தமிழ் மக்கள் வழங்குகின்றனர்.' என்று கூறியிருந்தார். உண்மைதான். இலங்கையில் நிரந்தரமான சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்பட வேண்டுமானால் நிரந்தர அரசியல் தீர்வும், நல்லிணக்கச் செயற்பாடுகளும் அவசியம்.

Wednesday, May 15, 2024

"சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார்" - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்கிருஷ்ணா


'சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார். சொந்தப் புத்தியை கொண்டே சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார்.' என்று பாடுபவர் பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.எம்கிருஷ்ணா.
 
 
ஓரு படைப்பைப்பற்றி ஒருவருக்குப் பல்வேறு காரணங்களுக்காக விமர்சனங்கள் இருக்கும், பெரியாரின் அன்றைய காலகட்டடத்தில் அவர் சமூக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, ஆரியரின் ஆதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். போராடியவர். அவருக்குத் தமிழ்க் காப்பியங்கள் மீது ஆரியரின் தாக்கம் அவற்றில் இருக்கும் காரணத்துகாக எதிர்ப்பு இருந்தால் அவற்றை அவர் தர்க்கரீதியாக எடுத்துரைத்திருந்தால் அவை அவரது கருத்துரிமை. அவற்றைத் தர்க்கரீதியாக எதிர்கொள்ள வேண்டும். உணர்ச்சியின் அடிப்படையில் குரல் எழுப்புவதால் அர்த்தமில்லை. கம்பரைப்பற்றி, தொல்காப்பியரைப் பற்றியெல்லாம் அவருக்கு விமர்சனங்கள் இருந்தால் அவற்றைத் தர்க்கரீதியாக எதிர்கொள்ள வேண்டும். அண்ணா கம்பரசம் எழுதியவர். அக்காலகட்டப் பின்னணியில் வைத்து அவர்கள் அன்று தெரிவித்த கருத்துகள் ஆராயப்பட வேண்டும்.

வாழ்த்துகள்: வாசுகி கணேசானந்தனின் (V. V. Ganeshananthan) Brotherless Night (சகோதரனற்ற இரவு) நாவலுக்கு 2023ற்குரிய புனைவுக்கான Carol Shields Prize இலக்கிய விருது $150,000


வாசுகி கணேசானந்தனின் (ஆங்கில இலக்கிய உலகில் V. V. Ganeshananthan என்றறியப்பட்டவர்)  Brotherless Night (சகோதரனற்ற இரவு)  நாவலுக்குப் புனைவுக்கான , 2023ஆம் ஆண்டுக்குரிய,   $150,000 (US) மதிப்புள்ள  Carol Shields Prize என்னும்  இலக்கிய விருது கிடைத்துள்ளது. வாழ்த்துகள்.  

இவர் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்.   ஏற்கனவே  Love Marriage  என்னும் நாவலையும் எழுதியுள்ளார். இரு நாவல்களுமே இலங்கையில் நிலவிய போர்ச்சூழலை மையமாகக் கொண்டவை.  இதுவரை நான் வாசிக்கவில்லை. இணையத்தில் இவை பற்றிக் கிடைக்கும் குறிப்புகள் அடிப்படையில் இவ்விதம் கூறுகின்றேன்.

Monday, May 13, 2024

புகலிட இலக்கியமும் - வ.ந.கிரிதரனின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்களும் - ஈழக்கவி -


- எழுத்தாளரும், திறனாய்வாளருமான ஈழக்கவி  ஜீவநதி பதிப்பகம் வெளியிட்ட எனது சிறுகதைத்தொகுதியான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' பற்றி நல்லதொரு திறனாய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். பதிவுகள் இணைய இதழில் வெளியான அக்கட்டுரையை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். - வ.ந.கி -


‘டயஸ்போர’ (Diaspora) என்பது ஒரு பயங்கரவாத/ தீவிரவாத அமைப்பு என்ற மாயை பெரும்பான்மை மக்களிடையே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்து அரசியல் நிலவரங்களும் இனவாத ஊடகங்களும் இந்த பிம்பத்தை உருவாக்கியுள்ளன. அண்மையில் சியத டிவி (Siyatha TV) இன் ‘டெலிவகிய’ (Telewakiya) நிகழ்ச்சியில் ஊடகவிலாளர் லால் மாவலகே (Lal Mawalage) இந்த மாயத்தை அல்லது பிம்பத்தை சுட்டிக் காட்டி, ‘டயஸ்போர’ என்பது புலம்பெயர் மக்களை குறிக்கின்ற ஒரு சொற்றொடர் என்றும் குறிப்பாக, ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சர்வதேசமெங்கும் வாழும் தமிழ் மக்களையும் சுட்டுகின்றது - போன்ற கருத்துக்களை நேர்மையாகவும் வரலாற்று ரீதியான கருத்தியல்களோடும் உலகலாவிய விவரணங்க ளோடும் மிகத்தெளிவாக முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. புலம் பெயர்ந்தவர்களைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான டயஸ்போரா என்பது யூதர்களில் புலம் பெயர்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகத்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. யூதர்கள்தான் பல காலமாகவே உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின் இஸ்லாமியர் வாழ்ந்த நாடுகளிலிருந்து சில பகுதிகள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டு அவர்களுக்கென ஒரு நாடு ஏற்படுத்தப்பட்டது, இதுவே உலகத்திற்கு சாபக்கேடாகிவிட்டது. உலகில் பல சமூகங்கள் புலம் பெயர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சான்றாக ஆப்பிரிக்க மக்கள் பலநாடுகளுக்குப் புலம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. உலகில் அதிகமாகப் புலம்பெயர்ந்தது ஈழத்தமிழர்கள்தான். அரசியல் அடாவடித்தனம் காரணமாக சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய நாடுகளில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஈழத்தமிழர்களுக்கு உருவானது. குடிபெயர் தலைக்குறிக்க மைக்ரேஷன் (Migation) டிஸ்ப்ளேஸ்மெண்ட் (Displacement) என்னும் இரு சொற்களும் ஆளப்படுகின்றன. மைக்ரேசன் என்பது ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்குப் பெயர்தல். டிஸ்ப்ளேஸ்மெண்ட் என்பது ஒரே நாட்டுக்குள் நிகழும் இடப்பெயர்ச்சி. இடப்பெயர்ச்சியைப் புலம்பெயர்த லாகக் காணக்கூடாது என்பது பன்னாட்டு வரையறை ஆகும்.

Saturday, May 11, 2024

காலத்தால் அழியாத கானம் - எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா?


மானுடரின் முதற் காதல் அனுபவமென்பது வளர்ச்சியின் ஒரு படிக்கட்டு.  பெரும்பாலும் நிறைவேறுவதில்லை. காரணம் முதிர்ச்சியடையாத மானுடப் பருவத்தில் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை மையமாக வைத்து உருவாகும் அனுபவம் அது. ஆனால் அதுவே அதன் சிறப்பம்சமும் கூட. அவ்வனுபவத்தில் உள்ளங்கள் உணர்வை மட்டுமே மையமாக வைத்துச் செயற்படுகின்றன.அதற்குப் பின் வளர்கையில் இலாப, நட்டங்களைச் சீர் தூக்கிப் பார்க்கும் பக்குவத்துக்கு அவை மாறி விடுகின்றன. இதுவே பெரும்பாலும் முதற் காதல் நிறைவேறாமல் போவதற்கு முக்கிய காரணம்.

காலத்தால் அழியாத கானம் - 'பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்'


சங்ககாலப்பாடலான 'குறுந்தொகை'யில் பதுமனார் என்னும் புலவர் ஒருவரின் பாடலொன்று பெண்ணொருத்தியின் காதல் உணர்வுகளை அழகாகப் படம் பிடிக்கும். ஓசைகள் யாவுமடங்கி ஊரே உறங்கும் நள்ளிரவில் அவள் மட்டும் உறங்காமல் விழித்திருக்கின்றாள். இதனை அழகாகப்படம் பிடிக்கும் குறுந்தொகைப்பாடல்:

"நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே"


நள் என்னும் சொல்லுக்குப் பல அர்த்தங்களை உரையாசிரியர்கள் வழங்கியிருக்கின்றார்கள். செறிவு, ஒலி, நடு என அர்த்தங்கள் பல. இங்கு நள் என்றது செறிவு மிக்க யாமம் என்பதற்கும் பொருந்தும், இரவின் நடுப்பகுதி என்பதற்கும் பொருந்தும்.  இங்கு தலைவனின் பிரிவைத் தாங்க மாட்டாதவளான தலைவி, உலகத்து மாந்தரெல்லாரும் தூங்குகையில், தலைவியின் தோழியுட்பட,  தூக்கமின்றித் தவிக்கின்றாள். அவள் தோழியை எழுப்பித் தன் நிலையை எடுத்துரைக்கின்றாள்.  'உலகமும் துஞ்சுகையில் தான் மட்டும் துஞ்சாமல் இருக்கின்றேன்' என்கின்றாள்.

Tuesday, May 7, 2024

கனவுக் காளை மோகன்!


'மைக்' மோகன் என்று இவரை அழைப்பார்கள். ஒரு காலத்தில்  யுவதிகளின் கனவுக் காளையாக விளங்கியவர்  மோகன். இதற்கு முன்னர் இவ்விதம் கருதப்பட்ட நடிகர் ஜெய்சங்கர். இவரது வெற்றி ரஜனி, கமல் போன்றவர்களின் பட வெற்றிகளை ஓரங்கட்டும் வகையில் அமைந்திருந்தன. இவர் படங்கள் வெளியாகும் நாட்களில் அவர்கள் தம் வெளியீடுகளைத்  தவிர்க்கும் அளவுக்கு இவரது வெற்றி அமைந்திருந்தது.  ஒரு சாயலில் கமலைப்போலிருக்கும் இவரது தோற்றத்தில் கமலிடம் இல்லாத அப்பாவித்தனம் கலந்த அழகு மிளிர்ந்திருக்கும்.

இவ்விதம் வெற்றிப்பட நாயகான விளங்கிய இவர் தமிழ்த்திரையுலகிலிருந்து காணாமல் போனது ஒரு துரதிருஷ்ட்டமே. இதற்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:

சந்தியாப்பிள்ளை மாஸ்டர் என்னும் இளைஞர்!

 

சந்தியாப்பிள்ளை மாஸ்டரைப்பற்றி நினைத்தால் எனக்கு முதலில் தோன்றுவது அவரது திடகாத்திரமான உடம்பும், மீசையும், சிரித்த முகமும்தாம்.  அவருடன் சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தால் சில கேள்விகள் கேட்கவேண்டுமென்று நினைப்பதுண்டு.அதற்குக் காரணம் அவரது வயதும், தோற்றமும்தாம். எண்பத்தைந்து வயது, ஆனால் தோற்றமோ நாற்பதுகளின் நடுப்பகுதிதான். எப்படி இவரால் இவ்விதமிருக்க, தோன்ற முடிகின்றது என்று வியப்பதுண்டு. அதனால்தான் அவரைச் சந்திக்கையில்  அவ்விதம் சில கேள்விகள் கேட்கவேண்டுமென்று நினைப்பதுண்டு.

இன்று அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது இளமையின் இரகசியம் பற்றிச் சில கேள்விகள் கேட்டேன். அதற்கு அவர் தந்த பதில்கள் பலருக்கும் உதவக்கூடும் என்பதால் அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

Thursday, May 2, 2024

எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் என்பதும் சார்பானது!


எழுத்தாளர் சுவிஸ் பா.ரவி தன் முகநூற் பதிவொன்றில் 'எழுத்தாளரைக் கொண்டாட வேண்டும் என சொல்லப்படுவதை எப்படி அணுகுவது என குழப்பமாக இருக்கிறது' எனக் கூறியிருந்தார்.
 
இதற்கான என் இதுவாக இருக்கும்: 
 
எழுத்து மீதான அணுகுமுறை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானது. உங்கள் எழுத்து பற்றிய கருதுகோளின்படி உங்களுக்கு யார் எல்லாரும் தரமான எழுத்தாளர்களாகத் தெரிகின்றார்களோ அவர்களைக் கொண்டாடுங்கள். 

Tuesday, April 30, 2024

'மணிக்கொடி' தந்த ஜோதிர்லதா கிரிஜா!


கடந்த 18.04-2024 அன்று மறைந்த எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜாவின் முக்கியமான நாவல் 'மணிக்கொடி'.  இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து கல்கியின்  'அலை ஓசை' , ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்' ஆகியவை ஏற்கனவே வெளியாகியுள்ளன. அவ்வரிசையில் வெளியான இன்னுமொரு நாவல்தான் ஜோதிர்லதா கிரிஜாவின் 'மணிக்கொடி'.  

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல். கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல் வாழும் வாழ்வுதனை வாழவிடு இய...

பிரபலமான பதிவுகள்