Monday, July 22, 2019

கறுப்பு ஜூலை 1983 பற்றிய நினைவுக்குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -


ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் மே 2009, ஜூலை 1983 இரண்டு மாதங்களும் அவர்கள்தம் வரலாற்றைப் புரட்டிப்போட்டு வைத்த மாதங்கள். ஜூலை 1983 அதுவரை இலங்கைத்தமிழர்களுக்கெதிராக வெடித்த இனக்கலவரங்களில் மிகப்பெரிய அழிவுகளையும் , உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்திய கலவரம். ஜே.ஆர்.அரசின் முக்கிய அமைச்சர்கள் , அரசியல்வாதிகள் பலர் முன்னின்று நடாத்திய கலவரம். இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தைச் சுவாலை விட்டெரியச்செய்த கலவரம். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை முக்கிய உபகண்ட அரசியற் பிரச்சினைகளிலொன்றாக, சர்வதேச அரசியற் பிரச்சினைகளிலொன்றாக உருமாற்றிய கலவரம். இலட்சக்கணக்கில் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக உலகின் பல்வேறு பகுதிகளையும் நோக்கிப் படையெடுக்க வைத்திட்ட கலவரம். இவ்விதமுருவான இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை பேரழிவுகளுடன் முடிவுக்கு கொண்ட மாதம் மே 2009.

ஜூலை 1983 இனக்கலவரத்தைப்பற்றி கடந்த சில வருடங்களாக முகநூலில் பதிவுகளிட்டிருந்தேன். அவற்றுக்குப் பலர் எதிர்வினைகள் ஆற்றியிருந்தார்கள். தம் அனுபவங்களை, கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அவற்றை ஆவணப்படுத்த வேண்டுமென்று எண்ணினேன். அவற்றை முக்கியமான எதிர்வினைகளுடன் தொகுத்து என் வலைப்பதிவான 'வ.ந.கிரிதரன் பக்கம்' தளத்தில் இவ்வருட என் நினைவு கூர்தலாகப் பதிவு செய்துள்ளேன். அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

1. 83 'ஜூலை' இலங்கை இனக்கலவர நினைவுகள்.:  இந்தியா அனுப்பிய சிதம்பரம்! (July 22, 2018)

சிதம்பரம் கப்பலை கூகுளில் தேடிப்பார்த்தேன். கப்பலின் படம் வந்தது. இக்கப்பலைத்தான் இலங்கையின் 1983 இனக்கலவரத்தையடுத்து இந்தியா கொழும்பில் தங்கியிருந்த அகதிகளை யாழப்பாணம் கூட்டிச்செல்வதற்காக அனுப்பியிருந்தது. இக்கப்பல் பல நினைவுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிகள் முகாமில் ஆரம்பத்திலிருந்தே தொண்டர்களாக மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சேவையாற்றினர். தர்மகுலராஜா அவர்களும் அவர்களிலொருவர். இவர் எனக்கு ஒரு வருட 'சீனியர்'. அவர்களில் நானுமொருவனாக இணைந்திருந்தேன். ஏற்கனவே இலங்கை அரசு வழங்கியிருந்த லங்கா ரத்னா போன்ற சரக்குக் கப்பல்களில் அகதிகள் பலரை அனுப்பி வைத்தோம்.

Friday, July 12, 2019

'பதிவுகள்' வாசகர் கடிதங்கள் பகுதி ஒன்று (2000 -2006)



- 'பதிவுகள்' இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், பாவண்ணன், அ.முத்துலிங்கம், கந்தையா ரமணீதரன், நாகரத்தினம் கிருஷ்ணா, புதியமாதவி, மான்ரியால் மைக்கல், முத்துநிலவன், டிசெதமிழன், மருத்துவர் முருகானந்தன், கவிஞர் ஜெயபாலன் , சுமதி ரூபன்,  வெங்கட் சாமிநாதன் ,  லதா ராமகிருஷ்ணன், கே.எஸ்.சிவகுமாரன், என்று இவர்களைப் போன்ற  கலை, இலக்கிய ஆளுமைகள் பலரின்கருத்துகளை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களும் இவற்றிலுள்ளன. இவற்றில் சில பல முக்கியமான விவாதங்களையும் வெளிப்படுத்துகின்றன. இவற்றைப் பதிவு செய்வதன் அவசியம் கருதி இத்தொகுப்பு பதிவாகின்றது. ஏனைய கடிதங்கள் அடுத்த தொகுப்பில் இடம் பெறும். -

From: SANKAR SUBRAMANIAN
To:
Sent: Thursday, October 12, 2000 4:01 PM
Subject: வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

தேன் மதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிட பாரதி கண்ட கனவை மெய்ப்பிக்கும் அன்புத் தமிழ் ஆசிரியரே. "genom" சாத்தியப் பட்டால் வாழ்க நீவிர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள். உன்னை பெற்ற தமிழ்த்தாய் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பாள். 'வலை விரித்தேன்'. 'பதிவுகள்' கண்டேன். நெஞ்சம் வலையில் படிந்து விட்டது. 'பதிவுகள்' தொடர்ந்து படிப்பேனே. மனதில் பட்டதை சொல்வேனே. மீண்டும் அடுத்த பதிவுகள் பார்த்து எழுதுகிறேன். வாழ்த்துக்கள் ஐயா! வாழ்க நீவிர் பல்லாண்டுகள்.
அன்புடன்
சங்கரன்

Tuesday, July 2, 2019

'வடலி' பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான் ஜானின் நூற் தொகுதி!



இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டு ஆண்டுகள் பதினொன்றாகி விட்டன. இந்நிலையில் போராட்டம், அமைப்புகள், தத்துவங்கள் பற்றிய ரகுமான் ஜான் அவர்களின் நூற் தொகுதியொன்று விரைவில் 'வடலி' பதிப்பக வெளியீடாக வெளியாகவுள்ளது. இத்தொகுதியானது மூன்று நூல்களை உள்ளடக்கியதொன்றாகும்.

முன்னாட் போராளிகள் பலர் தம் அனுபவங்களின் அடிப்படையில் பல நூல்களை வெளியிட்டுள்ளனர். அவையெல்லாம் அவர்கள் பார்வையில் அவரவர் இயக்கம் பற்றிய அல்லது அவர்களின் தப்பிப்பிழைத்தல் பற்றிய அனுபவங்களாகும்.

இவ்வகையில் தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்', ஐயரின் 'ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்', செழியனின் 'ஒரு போராளியின் நாட்குறிப்பு' போன்றவை முக்கியமானவை. ஆனால் இவையெல்லாம் முன்னாட் போராளிகளின் அனுபவங்களை அதிகமாகக் கூறுபவை. நடந்த தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம், அமைப்புகள், அவற்றின் தத்துவங்கள் பற்றிய விரிவான ஆய்வு நூல்களல்ல. இந்நிலையில் ஈழத்தமிழர்தம் விடுதலைப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ரகுமான் ஜானின் மேற்படி நூற் தொகுதி வெளிவரவிருப்பது நல்லதொரு விடயம். ஏனெனில் இத்தொகுதிகள் பின்வரும் தலைப்புகளில் வெளியாகவுள்ளதாகவும் அறிகின்றேன்:

1. ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல் பிரச்சனைகள்.
2. ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள்
3. ஈழப்போராட்டத்தின் மூலோபாய, தந்திரோபாய பிரச்சனைகள்.

Sunday, June 30, 2019

டி.எம்.எஸ் பற்றிய காணொளி!

பாடகர் டி.எம்.எஸ் அவர்களின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அவர் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருக்காகக் குறிப்பாக எம்ஜிஆருக்காகப் பாடிய பாடல்கள். அன்று கேட்டோம்; இன்றும் கேட்கின்றோம். இனியும் கேட்போம். டி..எம்,எஸ் அவர்கள் எம்ஜிஆர்,, சிவாஜி படங்களில் பாடிய கருத்துள்ள பாடல்களாகட்டும், காதல் பாடல்களாகட்டும் அவை வரலாற்றில் நிலையாக நிலைத்து நிற்கப்போகும் பாடல்கள். அண்மையில் முனைவர் கெளசல்யா சுப்பிரமணியன் அவர்கள் தனது இசைத்தமிழ் பற்றிய ஆய்வு நூலொன்றில் திரைப்படப்பாடல்களையும் கவனத்திலெடுத்திருந்தது நினைவுக்கு வருகின்றது.

இங்கு பாடகர் டி.எம்.எஸ் அவர்கள் தான் எம்ஜிஆர் நடித்த 'அன்பே வா' திரைப்படத்தில் பாடிய தனது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார். அவ்வப்போது 'அன்பே வா' பாடல்கள் சிலவற்றையும் தெளிவு மிக்க காணொளிகளாக ஒ(லி)ளிப்பதிவு செய்திருக்கின்றார்கள். கேட்பதற்குச் சுகமாகவுள்ளது. கடந்த காலத்துக்கு எம்மையெல்லாம் இழுத்துச் செல்லும் காணொளி.

இக்காணொளியில் டி.எம்.எஸ் அவர்கள் அரிய தகவல்கள் பலவற்றை எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார். அவற்றில் என் கவனத்தை ஈர்த்த இரண்டினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

1. அக்காலகட்டத்தில் பாடல்களில் எதிரொலியினை உருவாக்குவதற்கான தொழில் நுட்பமில்லை. எவ்விதம் எம்ஜிஆர் மலைப்பிரதேசத்தில் பாடும் 'புதிய வானம். புதிய பூமி' பாடலுக்கு எதிரொலியைச் சேர்ப்பது என்பதில் அனைவருக்கும் குழப்பம். அப்பொழுது டி.எம்.எஸ் சிறு தந்திரம் மூலம் அக்குழப்பத்தை நிவர்த்தி செய்கின்றார். அது: பாடலைப்பாடும் பொழுது, எதிரொலியாக ஒலிக்க வேண்டிய சொல்லினைப் பாடுகையில் முதல் முறை ஒலிபெருக்கிக்கு அருகில் நின்றும், அடுத்தடுத்த தடவைகள் முறையே ஒலிபெருக்கிக்குத் தூரமாகவும், இன்னும் தூரமாகவும் நின்று பாடுவார். அது அப்பாடலில் அச்சொல் எதிரொலிப்பது போன்ற உணர்வினைத்தரும். அப்பாடலை மீண்டுமொரு முறை கேட்டுப்பாருங்கள் புரிந்து கொள்வீர்கள்.

அஞ்சலி: எழுத்தாளர் திருமலை ஷகி மறைவு.


எழுத்தாளர் திருமலை எம்.ஏ.ஷகியின் மரணச்செய்தியை முகநூல் வாயிலாக அறிந்தேன். கொடுநோயில் வாடி உதிர்ந்திருக்கின்றார். அண்மையில்தான் என் நட்பு வட்டத்தில் இணைந்திருந்ததால் அதிகம் இவரது கவிதைகளை வாசிக்கவில்லை. ஆனால் இவர் பங்கு பற்றும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை அவ்வப்போது பார்த்திருக்கின்றேன். பலரும் இவரது கவிதைகளை இவரது மறைவையொட்டி முகநூலில் பகிர்ந்துள்ளார்கள். இருப்பின் நிலையாமை பற்றி பல கவிதைகளை எழுதியிருப்பதை அறிய முடிகின்றது. கவிதைகளுக்கான இவரது செறிவான மொழி இவரது கவித்திறனை வெளிப்படுத்துகின்றது. இவரது இளவயது மறைவு துயர் தருவது. மின்னலைப்போல் ஒளி வீசி மறைந்திட்ட இலக்கிய ஆளுமைகள் வரிசையில் திருமலை ஷகியும் இணைந்துவிட்டார். இவர் தன் எழுத்துகளூடு இனியும் கலை, இலக்கியப் பரப்பில் நிலைத்து நிற்பார். இவரது இழப்பால் துயருறும் அனைவர்தம் துயரிலும் பங்குகொள்கின்றேன்.

அவர் நினைவாக அவரது கவிதையொன்று:

அஞ்சலி: முத்தையா சகாதேவன்


முத்தையா சகாதேவன் ஓர் அப்பாவி. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த இவர் , கடந்த 15 வருட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அண்மையில் விடுதலையைக் காணாமலே சிறையில் மரணமானார். நாட்டின் அரசில் அமைப்பானது எவ்விதம் தனி ஒரு மனிதனின் வாழ்வை ஆட்டிப் படைக்கின்றது; சீர்குலைக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் மரணம் இது. தனி மனிதரின் இருப்பானது இவ்விதமான அரசியல் அமைப்பொன்றினால் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் புனைவுகள் பல வெளியாகியுள்ளன. அவற்றில் காப்காவின் 'விசாரண' நாவலும் முக்கியமானது. முத்தையா சகாதேவனின் நிலையும் அத்தகையதுதான். சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணைகளேதுமற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான இவரது மரணம் தேவையற்றதொன்று. இவரைப்போன்ற பல முத்தையாக்கள் இலங்கைச் சிறைகளில் வாடுகின்றார்கள்.
அரசியல் கைதி எழுத்தாளர் சிவ. ஆரூரனின் 'யாழிசை'!


அண்மையில் பதுளையைச் சேர்ந்த முத்தையா சடகோபன் என்னும் அப்பாவி, அரசியல் கைதி, எவ்விதக் குற்றங்களும் செய்யாத நிலையில், பதினான்கு வருடங்கள் சிறை வாசம் அனுபவித்து சிறையில் மரணமடைந்தது யாவரும் அறிந்ததே. இவரது மரணம் இதுவரை விடுதலையாகாமல் சிறைகளில் ஆண்டுக்கணக்காக வாடும் அரசியல் கைதிகள் விடயத்தை மீண்டும் அனைவரின் கவனத்துக்கும் கொண்டுவந்துள்ளது. இலங்கையின் அனைத்துப்பகுதி அரசியல்வாதிகளும், மானுட உரிமை அமைப்புகளும் ஓன்றிணைந்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த வேண்டிய தருணமிது.
அண்மையில் என்னுடன் முகநூலில் நட்பராக இணைந்ததன் பின்னரே இன்னுமோர் அரசியல் கைதியைப்பற்றி அறிந்துகொண்டேன். இவர் மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி, இவர் ஓர் எழுத்தாளர். சிறையிலிருந்தபடியே இவர் எழுதிய 'யாழிசை' என்னும் நாவலுக்கு இலங்கை அரசின் தேசிய சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது. இவர் மொறட்டுவைப்பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி. இவர்தான் எழுத்தாளர் சிவ. ஆரூரன். இவர் இன்னும் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரைப்பற்றி , இவரது நாவலான 'யாழிசை' நாவல் பற்றி அறிய வேண்டுபவை பல உள்ளன. இவரது நாவலான 'யாழிசை' பற்றி எழுத்தாளரான மருத்துவர் எம்.கே.முருனானந்தன் எழுதிய முகநூற் பதிவு கீழே:
************************************************************************************************************
அரசியற் கூண்டுப் பறவை சிவ ஆருரன் அவர்களின் நாவல். ‘யாழிசை’ ; போர் தின்ற வாழ்வின் ஒரு முகம்.  - எம்.கே.முருனானந்தன் -

எமது வாழ்வானது போர் தின்ற வாழ்வு. சிலரது வாழ்வு முற்று முழுதாக விழுங்கப்பட்டு காணாமலே போய்விட்டது. வேறு சிலரது கொத்தி குதறிச் சிதைக்கப்பட்டு அழிக்க முடியாத வடுக்களோடு நகர்கிறது. அந்த வாழ்வின் இழப்புகளால் மனம் சோர்ந்து அழுது புலம்பி முன்னகர முடியாது அழுந்தி மாய்பவர்கள் பலர். அவற்றைச் சவால்களாக கொண்டு அதி தீவிர முயற்சிகளுடாக மற்றவர்களுக்கு நாம் சளைத்தலர்கள் அல்ல என துணிச்சலோடு வாழ்ந்து காட்டுபவர்கள் சிலர். இந்த நாவல் அதற்கு ஒரு சான்று.

Wednesday, June 5, 2019

எழுத்தாளர் காத்யானா அமரசிங்கவின் யாழ் நூலகம் பற்றிய பத்தி பற்றி...

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நாளான மே 31 பற்றி முகநூலுட்படப் பல்வேறு ஊடகங்களில் அது பற்றிய பதிவுகள் பலவற்றைப்பார்த்தோம். இன, மத , மொழி வேறுபாடின்றிப் பல்லின மக்களும் நூலக எரிப்புக்காக மனம் வருந்துகின்றார்கள். சிங்கள எழுத்தாளர் காத்யானா அமரசிங்க அவர்களும் அவர்களிலொருவர். இலங்கைத் தமிழ் மக்களின் உணர்வுகளைப்புரிந்துகொண்ட சிங்கள மக்களில், எழுத்தாளர்களிலொருவர். அண்மையில் வெளியான அவரது நாவலும் கூட அவரது வடக்குப் பயணத்தின்போது அவர் கேட்டு, அறிந்த , அனுபவங்களை மையமாக வைத்து எழுதப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் இன்று புதன் கிழமை வெளியான (ஜூன் 5, 2019) 'ரச' பத்திரிகையின் புதன் கிழமைக்கான பதிப்பில் 'எரியும் இதயம்' என்னும் தலைப்பில் யாழ் நூலக எரிப்பு பற்றி எழுதியுள்ளார். இக்கட்டுரை ஏரிக்கரை நிறுவனம் வெளியிடும் இப்பத்திரிகையின் புதன் கிழமைக்கான பதிப்பில் வாரம் தோறும் அவர் எழுதும் பத்திக்கான இவ்வாரக் கட்டுரையாகும்.

இக்கட்டுரையில் அவர் நூலகம் எரியுண்டதன் பின் ஊடகங்களில் வெளியான நூலகர் ரூபாவதி நடராஜா அவர்கள் நூலகப் பணியாளர்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் பற்றிக் குறிப்பிடுகையில் 'நூலகர் ரூபாவதி நடராஜாவின் வெறுமையான பார்வை என் இதயத்தை வேதனையால் எரிக்கின்றது' என்று குறிப்பிட்டுள்ளார். இப்பந்தியில் நூலக எரிப்பு பற்றிய எனது கருத்துகளையும் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையில் வெளியான எனது கருத்துகளில் நூலகம் எவ்வாறு என் மாணவப்பருவத்தில் உதவியது என்பது பற்றியும், அங்கு நான் வாசித்த பல் துறை நூல்கள், மொழிபெயர்ப்புகள் பற்றியும் குறிப்பிட்டதுடன் 'நூலகங்களே எனது ஆலயங்கள்' என்ற எனது கருத்தினையும் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்பட இயக்குநர் 'புதியவன் ராசையா'வுடனோர் அந்திப் பொழுது!

இன்று மாலை (ஜூன் 4, 2019) ஸ்கார்பரோவில் மார்க்கம் & மக்னிகல் பகுதியில் 2901 மார்க்கம் றோட் என்னும் முகவரியில் அமைந்துள்ள , நட்பான பணியாளர்களைக் கொண்ட 'தோசா ராமா' உணவகத்தில் நண்பர் எல்லாளனுடன் ('ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' நூலாசிரியர்) திரைப்பட இயக்குநர் புதியவன் ராசையாவைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தனது திரைப்படங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவரான புதியவன் ராசையா அவர்கள் தற்போது அவரது திரைப்படமான 'ஒற்றைப் பனைமரம்' திரைப்படத்தினைக் கனடாவில் திரையிடுவதற்காகத் தற்சமயம் கனடாவுக்கு வருகை தந்துள்ளார். ஏற்கனவே இவர் 'மாற்று' (2001), 'கனவுகள் நிஜமானால்' (2003), 'மண்' (2005) & 'யாவும் வசப்ப்டும்' (2015) ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை RSSS என்னும் தமிழக நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்.  படத்துக்கு இசையமைத்துள்ளவர் அண்டாவக் காணோம், காஞ்சனா, சதுரங்க வேட்டை 2 போன்ற பல படங்களில் பணியாற்றிய அஷ்வமித்ரா. படத்தின் ஒளிப்பதிவாளர் இலங்கையைச் சேர்ந்த மகிந்த அபேசிங்க. இவர் சர்வதேச விருது பெற ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தைத் தொகுத்திருப்பவர் சுரேஷ் அர்ஸ். இத்திரைப்படத்தின் முக்கிய பாத்திரங்களில் புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன் மற்றும் தனுவன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 37 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் தேர்வாகி, இசை, ஒளிப்பதிவு , சிறந்த நடிப்பு போன்றவற்றுக்காக விருதுகளைப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Sunday, June 2, 2019

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஏழு (51 - 56)

51. தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவல் வெளியீட்டு நிகழ்வு குறித்து...

தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நூல் வெளியீடு சென்றிருந்தேன், கனடாத்தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தரப்பினரையும் காண முடிந்தது. நிகழ்வுக்குத் தலைமை தாங்கவென்று யாருமில்லை. இதற்கொரு காரணத்தைத்தனது ஏற்புரை/நன்றியுரையில் தமிழ்நதி தெரிவித்தார். அதாவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகளை ஆண்கள் ஆக்கிரமித்திருப்பார்கள். அதற்குப் பதிலாகவே தனது நூல் வெளியீடு எந்தவிதத்தலைமையுமற்று நடை[பெற்றதாக என்று. தலைமையில்லாத நிகழ்வினைச் சிறப்பாக்குவதற்காகத் தன்னுடன் இணைந்த தனது சிறு வயதுத்தோழியர்களிலொருவரான அன்பு-அன்பு நன்கு செயற்பட்டதாகக்குறிப்பிட்டார். ஏன் பெண் ஆளுமையொருவரின் தலைமையில் நிகழ்வினை நடாத்தியிருக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்படுவதைத்தவிர்க்க முடியவில்லை. வழக்கமாக ஆண்களின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறுவதால், பெண்களுக்குரிய இடம் கிடைக்கவில்லையென்று கருதும் தமிழ்நதி பெண்களின் தலைமையில் நிகழ்வினை நடத்த வந்த வாய்ப்பினைத் தவற விட்டுவிட்டாரே?

நிகழ்வு நடைபெற்ற மத்திய ஸ்கார்பரோ சமூக நிலையம் கலை, இலக்கிய ஆர்வலர்களால் நிரம்பி வழிந்தது.  எழுத்தாளர்களான அ.யேசுராசா, கவிஞர் கந்தவனம், கற்சுறா, ரதன், மா.சித்திவிநாயகம், வல்வை சகாறா, கவிஞர் அவ்வை, எஸ்.கே.விக்கினேஸ்வரன், கவிஞர் அ.கந்தசாமி, குரு அரவிந்தன் தம்பதியினர், முனைவர் பார்வதி கந்தசாமி, டானியல் ஜீவா, தீவகம் வே.ராஜலிங்கம், ந.முரளிதரன், தேவகாந்தன், பிரதிதீபா தில்லைநாதன் சகோதரிகள்,..,.. என்று பலரைக் காண முடிந்தது.

நிகழ்வில் ஜான் மாஸ்ட்டர், பொன்னையா விவேகானந்தன், முனைவர் அ.ராமசாமி, முனைவர் இ.பாலசுந்தரம், அருண்மொழிவர்மன், தமிழ்நதியின் தோழி அன்பு, தமிழ்நதி ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியினை எழுத்தாளர் கந்தசாமி கங்காதரன் தொகுத்து வழங்கினார்.

பொன்னையா விவேகானந்தன் நல்லதொரு பேச்சாளர். தமிழ்நதி கவிஞர் கலைவாணி ராஜகுமாரனாக அறியப்பட்ட காலகட்டத்திலிருந்து தான் அறிந்த கவிஞரின் கவிதைகளை உதாரணங்களாக்கித் தன் உரையினை ஆற்றித் தமிழ்நதி பற்றிய நல்லதோர் அறிமுகத்தை வழங்கினார். அவர் தனதுரையில் 'கவிஞர்கள் சிலரே மெட்டுக்குப் பாடல்களையும், நல்ல கவிதைகளையும் எழுத வல்லவர்கள். அவ்வகையான கவிஞர்கள் கவிஞர் சேரனும், கலைவாணி ராஜகுமாரனுமே' என்னும் கருத்துப்பட தன் கருத்துகளைத்தெரிவித்தார். அத்துடன் ஆரம்பத்தில் கலைவாணி ராஜகுமாரன் தேசியம் சார்ந்தவராக இருந்த காரணத்தால் ஏனைய இலக்கியவாதிகள் பலரால் புறக்கணிக்கப்பட்டதாகவும் குறைப்பட்டுக்கொண்டார்.

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஆறு : அறிவியற் கட்டுரைகள் (46 - 50)

46. ஆறுதலற்று விரையும் அண்டப் பொருட்கள்! பிரபஞ்ச வடிவம் பற்றிய புரிதல்கள்!

இரவு நேரங்களில் அண்ணாந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப் பாருங்கள். கோடிக் கணக்கில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, கிரகங்களை உபகிரகங்களைக் கவனியுங்கள். அதே சமயம் இன்னும் ஒன்றையும் மனதிலே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு செக்கனும் பிரமாண்டமானதொரு வேகத்தில் விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சமொன்றின் சிறியதொரு கோணத்தில் விரைந்து கொண்டிருக்கும் சிறியதொரு கோளொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதே அது. நெஞ்சினைப் பிரமிக்க வைத்து விடுகின்றதல்லவா! அப்படியானால் நம்மால் ஏனிந்த வேகத்தை உணர முடியவில்லை? மூடியதொரு புகையிரதத்தினுள் இருக்குமொருவருக்கு எவ்விதம் புகையிரதம் வேகமாகச் செல்வது தெரியாதோ அது போன்றதொரு நிலையில் தான் எம்முடைய நிலையும். பூமியைச் சுற்றிப் படர்ந்திருக்கும் வாயு மண்டலம்தான் எம்மை மூடிய புகையிரத்தைனைப் போல் இக்கோளினை வைத்திருக்கின்றது. அதனால் தான் எம்மால் எமது வேகத்தைக் கூட உணர முடியாமலிருக்கின்றது. இன்னும் ஒரு காரணம் - எம்மைச் சுற்றியுள்ள சுடர்களுக்கும், கிரகங்களுக்குமிடையிலான தொலைவு மிக மிக அதிகமானது. இத் தொலைவும் எமது வேகத்தினை உணரமுடியாதிருப்பதற்கு இன்னுமொரு காரணம். புகைவண்டியினுள் விரையும் ஒருவருக்கு அருகில் தெரியும் காட்சிகள் வேகமாகச் செல்வது போலும், மிகத் தொலைவிலுள்ள காட்சிகள் ஆறுதலாக அசைவது போலவும் தெரிவதற்கு அடிப்படைக் காரணம் தொலைவு தான்.

இவ்விதம் எல்லையற்றுப் பரந்து கிடக்கும் இப்பிரபஞ்சம் பற்றி அறிவதன மூலம் மனிதர்கள் தம் பிறப்பின் காரணத்தின் சூத்திரத்தை அறிவதற்கு முயன்று கொண்டிருக்கின்றார்கள். அரிஸ்டாட்டில், கலிலியோ, நியூட்டன் , ஐன்ஸ்டைனென்று பிரபஞ்சம் பற்றிய கோட்பாடுகள் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன.

இந்த வகையில்தான் 'அலெக்ஸாண்டர் பிரிட்மென்'னுடைய (Alexander Friedman) (1920) பிரபஞ்சம் பற்றிய கருத்துகளையும் பார்க்க வேண்டும். ஐன்ஸ்டைனின் கணித சூத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்த பிரிட்மான் பிரபஞ்சத்தின் உருவ அமைப்பு பற்றிய கோட்பாடுகளை விபரித்தார். அலெக்ஸாண்டர் பிரிட்மான் பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அளவு பற்றி ஆராய்ந்தார். இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளானது வெளியை வளைக்கும் தன்மை படைத்தது. எனவே இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அளவு பற்றி ஆராய்ந்த பிரிட்மான் 'இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் மொத்த அளவானது இப்பிரபஞ்சத்திற்கு ஒரு வடிவினை, உருவ அமைப்பினை உருவாக்கும் அளவுக்குப் போதுமானது' என எடுத்துக் காட்டினார்.

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஐந்து: கட்டடக்கலை & நகர அமைப்பு பற்றிய கட்டுரைகள் _37 - 45 )

37. நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் நகரொன்றின் பிம்பக்' கோட்பாடு பற்றிய புரிதலும்!

நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம் வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றனவோ அவ்விதமே நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களையும் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நகர மாந்தரின் நகர் பற்றிய உளப்பதிவுகள் அவர்களது அந்நகரினுடான அனுபவங்கள். அதன் விளைவாக உருவான நினைவுகள், அந்நகரிலுள்ள கட்டடங்கள். முக்கியமான இடங்கள், அங்கு வாழும் ஏனைய மக்கள், அங்கு நிகழும் பலவேறு விதமான செயற்பாடுகள். நகரின் முக்கியமான அடையாளங்களாகத் திகழும் சின்னங்கள்,... ... என இவை போன்ற பல காரணிகளின் விளைவாக உருவாகுகின்றன. நகர அமைப்பு வல்லுநர்கள் நகர்களைப் புனர் நிர்மாணம் செயகையில் அல்லது புதியதொரு நகரமொன்றினை நிர்மாணித்திடும்போது அங்கு வாழும் மாந்தரின் மேற்படி மனப்பிம்பங்கள் அல்லது பதிவுகள் பற்றிய போதிய அறிவினைப் பெற்றிருப்பது அவர்களது பணிக்கு மிகவும் இன்றியமையாதது மட்டுமல்ல பயனுள்ளதுமாகும். இவ்விதமாக நகர மாந்தரின் அவர் வாழும் நகர் பற்றிய மனப்பிம்பங்களை மையமாக வைத்து அந்நகரினை அறிவதற்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முயனறவர்தான் பேராசிரியர் கெவின் லிஞ்ச் Professor Kevin Lynch).

நகரொன்றின் பெளதிக யதார்த்தத்திலிருந்து எவ்விதமான மனப்பிம்பங்களை அந்நகரத்து மாந்தர் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பது பற்றிய ஆய்வொன்றினை நகர மாந்தர்கள் பலருடனான நேர்காணல்கள் பலவற்றின் மூலம் கண்டறிந்த அவர் அவற்றின் பெறுபேறுகளை அடிப்படையாக வைத்து நகரின் பிம்பம்' (The Image Of the City) என்றொரு நல்லதொரு சிந்தைக்கு விருந்தளிக்கும், மேலும் அதனை விரிவடையவைக்கும் ஆய்வு நூலொன்றினை வெளியிட்டிருந்தார். மேற்படி அவரது ஆய்வானது நகர மாந்தரின் மேற்படி நகர் பற்றிய உளப்பதிவுகள் பற்றிய முக்கியமான பல நவீன கருதுகோள்களுக்கு அடிப்படையாக விளங்குகின்றது. மேலும் நகரொன்றின் உருவம் பற்றிய , அங்கு காணப்படும் கட்டடச் சூழல் அல்லது கட்டடக்கலை எவ்விதம் மேற்படி அந்நகர மாந்தரின் நகர் பற்றிய பிம்பத்திற்குக் காரணமாயிருக்கின்றது பற்றிய புரிதலுக்கு மிகவும் பங்களிப்புச் செய்துள்ளது என்று கூறினால் மிகையான கூற்றல்ல.

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி நான்கு (31 -36)

31. மக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்!

- இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் வித்துவான் வேந்தனாரின் எழுத்துலகப்பங்களிப்பு முக்கியமானது. அவரது நூற்றாண்டு விழாவையொட்டி நூற்றாண்டு விழாமலர் 548 பக்கங்கங்களைக் கொண்ட விரிவான நூலாக வெளியாகியுள்ளது. அம்மலரில் வெளியான எனது கட்டுரையிது. மலரைச் சிறப்பாக வெளியிட்ட அவரது மகனும், கவிஞரும் , நண்பருமான வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் இதன் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார். வாழ்த்துகிறேன். -

வித்துவான் வேந்தனாரைப் பற்றி எனது மாணவப் பருவத்திலேயே எனக்கு மிகுந்த மதிப்பிருந்தது. வித்துவான்களில் அவர்  சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞரான அவர் சிறந்த குழந்தைக்கவிஞர்களிலொருவராகவும் தென்பட்டார். அவரது மானுட விடுதலைக்  கவிதைகளில் தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான் எனக்கு எடுத்தியம்பின. பண்டிதர்கள் என்றாலே பழமைவாதிகள் என்றோர் எண்ணம் நிலவுவதுண்டு. ஆனால் இதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்த பண்டிதர்களில் வித்துவான் வேந்தனார், எழுத்தாளர் சொக்கன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். வித்துவான் வேந்தனார் அவர்கள் பழமையின் சிறப்பம்சங்களைப்பேணிய அதே சமயம், புதுமையின் சிறப்பம்சங்களையும் உள்வாங்கி இலக்கியம் படைத்தவர்; மக்கள் இலக்கியம் படைத்தவர்.

வேந்தனாரைப்பற்றி விரிவாக அறியும் சந்தர்ப்பம் என் வாழ்க்கையிலேற்பட்டதற்கு முக்கிய காரணம் அவரது புத்திரர்களிலொருவரான வேந்தனார் இளஞ்சேய். நான் யாழ் இந்துக்கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்த சமயம் என் வகுப்பில் என்னுடன் ஒன்றாகக் கல்வி பயின்ற மாணவர்களிலொருவர். என் பதின்ம வயதுகளில் இளஞ்சேயும், நானும் அடிக்கடி வாசிப்பதற்காக ஒருவருக்கொருவர் எம்மிடமுள்ள நூல்களை இரவல் கொடுப்பதுண்டு. பல சந்தர்ப்பங்களில் யாழ் இந்து  மகளிர் கல்லூரிக்கண்மையிலிருந்த அவரது இல்லத்துக்குச் சென்றதுண்டு. அக்காலகட்டத்தில் வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார்.  இன்று தந்தையைப்போல் எழுத்துலகிலும் தன் எழுத்தாற்றலைக் காட்டி வருகின்றார். தந்தையாரின் படைப்புகளைத் திரட்டி , நூல்களாகத்தொகுத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருகின்றார். வாழ்த்துகின்றேன்.

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி மூன்று (21 - 30)

21. ஞானம் சஞ்சிகையின் தலையங்கமும், மறுமலர்ச்சிச்சங்கமும், அ.ந.க.வும்...

அண்மையில் கோப்பாய் சிவம் , செல்லத்துரை சுதர்சன் ஆகியோரால் தொகுக்கப்பட்டு வெளியான 'மறுமலர்ச்சிச் சஞ்சிகைகளின் தொகுப்பு' பற்றிய ஞானம் சஞ்சிகை ஏபரல் மாத இதழின் தலையங்கத்தில் வாழ்த்தியிருக்கின்றது. மேற்படி ஞானம் சஞ்சிகையின் வாழ்த்துச்செய்தி வரவேற்கத்தக்கது. ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள , குறிப்பிடப்படாத விடயங்கள் பற்றிச் சுட்டுக்காட்டுவது முக்கியமென்று எனக்குத் தோன்றுகின்றது.  'அ.செ.மு , வரதர் போன்ற 'ஈழத்து நவீன எழுத்தாளர்களின் இரண்டாவது பரம்பரையினரில் பலர் மறுமலர்ச்சி உருவாக்கிய எழுத்தாளர்களே. என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அ.செ.மு போன்றவர்கள் மறுமலர்ச்சி  சஞ்சிகையின் வரவுக்கு முன்னரே ஈழகேசரி மூலம் எழுதத்தொடங்கி ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர்கள். அவர்களில் அ.செ.முருகானந்தன், தி.ச.வரதராசன், க.செ.நடராசா, அ.ந.கந்தசாமி, பஞ்சாட்சரசர்மா போன்ற ஐவருமே மறும்லர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியவர்கள். இதனால்தான் இவர்கள் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று கூறப்படுகின்றார்களே தவிர 'மறுமலர்ச்சி' சஞ்சிகையில் எழுதியதனால் அல்ல.

மறுமலர்ச்சிச் சங்கத்திற்குள் பஞ்சாட்சர சர்மாவை இழுத்தவர் அ.ந.கந்தசாமி. பஞ்சாட்சர சர்மாவே தனது கட்டுரைகள் பலவற்றில் தன்னை எழுத்துத்துறையில் ஊக்கப்படுத்தியவராகக் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் 'பஞ்சாட்சரம்' நூல் முன்னுரையிலும் தன்னை எழுதுமாறு தூண்டிய இருவர்களாக அ.ந.கந்தசாமியையும், பண்டிதர் பொ.கிருஷ்ணபிள்ளையையும் குறிப்பிட்டுள்ளார். அதிலவர் அவர்கள் தன்னை எழுதுமாறு தூண்டித் தன்னம்பிக்கையூட்டி எழுத வைத்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாட்சர சர்மா அவர்களின் மகனான கோப்பாய் சிவம் அவர்கள் தனது தந்தையின் எழுபதாண்டு வயதினையொட்டி வெளியிட்ட 'பஞ்சாட்ஷரம்' நூலில் , பஞ்சாட்சர சர்மா அவர்களுக்கு ஏனைய கலை, இலக்கியவாதிகள் எழுதிய கடிதங்களையும் இணைத்துள்ளார். மேற்படி நூலை நூலகம் இணையத்தளத்தில் எழுத்தாளர் கோப்பாய் சிவம் அவர்களின் படைப்புகளுக்கான பக்கத்தில் காணலாம்.

மேலும் மேற்படி நூலிலுள்ள பஞ்சாட்சர சர்மா அவர்களைப்பற்றிய கட்டுரையில் எழுத்தாளர் வரதர் அவர்கள் மறுமலர்ச்சிச்சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்கள் ஐவரென்றும், அவர்களிலொருவராக அ.ந.கந்தசாமியையும் குறிப்பிட்டிருப்பார்.

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி இரண்டு (11 - 20)

11. இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்ள 'தேசிய இலக்கியமும், மரபுப்போராட்டமும்' என்னும் நூல் பற்றியுமான பதிவு!.

இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றைப்பொறுத்தவரையில் முக்கியமான காலகட்டங்களாக 'மறுமலர்ச்சி'க் காலகட்டத்தையும், 'இலங்கை எழுத்தாளர் முற்போக்குக் கழகக்' காலகட்டத்தையும் குறிப்பிடலாம். இலங்கை மண்ணுக்கேயுரிய மண்வாசனை மிக்க தனித்துவம் மிக்க எழுத்துகளைப்படைக்க வேண்டுமென்று 'மறுமலர்ச்சிக்' குழு வழிவந்த இளைஞர்கள் எண்ணினார்கள். ஆனால் அந்நோக்கமே 'தேசிய இலக்கியம்' என்னும் கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் வழிச் செயற்பட்ட எழுத்தாளர்கள் , திறனாய்வாளர்கள். தேசிய இலக்கியம் பற்றிய புரிதலுக்காக எழுத்தாளர் இளங்கீரனின் 'மரகதசம்' சஞ்சிகையில் 'தேசிய இலக்கியம்' பற்றி 'மரகதம் ' சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் க.கைலாசபதி, ஏ.ஜே.கனகரட்னா, அ.ந.கந்தசாமி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.

இதனைத்தொடர்ந்து தினகரன் பத்திரிகையில் மரபினைப்பேணிய பண்டிதர்களுக்கும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களுக்குமிடையில் தலையெடுத்த 'மரபு' பற்றிய விவாதமும் முக்கியமானது. இரு சாராரும் தினகரன் பத்திரிகையில் நடாத்திய விவாதம் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வு.

'மரகதம்' சஞ்சிகையில் வெளியான 'தேசிய இலக்கியம்' பற்றிய கட்டுரைகளையும், தினகரன் பத்திரிகையில் நிகழ்ந்த மரபு பற்றிய விவாதக் கட்டுரைகள் சிலவற்றையும், வேறு சில கட்டுரைகளையும் தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கின்றனர் 'சவுத் ஏசியன் புக்ஸ்' (சென்னை) பதிப்பகத்தினர். தொகுத்தவர் எழுத்தாளர் சுபைர் இளங்கீரன். மிகவும் முக்கியமான தொகுப்பு.

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஒன்று (1 - 10)

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'

['பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா?' என்னும் தலைப்பில் , அவனது 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையினை முன்வைத்துக் கட்டுரையொன்றினை மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ் சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையில் எழுதியிருக்கின்றேன். 1981 அல்லது 1982ஆம் ஆண்டு வெளிவந்ததாகவிருக்க வேண்டும். அப்பொழுது அதன் ஆசிரியராகவிருந்தவர் பொறியியலாளர் பிரேமச்சந்திரன். எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரனை நான் முதன் முதலில் அறிந்துகொள்ளக் காரணமாகவிருந்ததும் அக்கட்டுரையே. 'நுட்பத்தில்' வெளிவந்த அக்கட்டுரையினை வாசித்துவிட்டு என்னுடன் தொடர்புகொண்டார். அதன் பின்னர் அக்கட்டுரை கைவசமில்லாத காரணத்தால் மீண்டும் 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு' என்னும் தலைப்பில் 'டொராண்டோ'வில் வெளிவந்த 'தாயகம்' (சஞ்சிகை/ பத்திரிகை)யில் எழுதினேன். பின்னர் அக்கட்டுரை 'பதிவுகள்' இணைய இதழிலும், 'திண்ணை' இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது. அக்கட்டுரையினை எழுத்தாளர் (சீர்காழி) தாஜ் தனது வலைப்பதிவான 'தமிழ்ப்பூக்க'ளிலும் மீள்பிரசுரம் செய்து அது பற்றிய தனது கருத்தினையும் பதிவு செய்திருக்கின்றார். பாரதியின் பிறந்த நாளையொட்டி (டிசம்பர் 11) அக்கட்டுரை மீண்டும் பதிவுகளில் பாரதியின் நினைவுக்காகவும், ஒரு பதிவுக்காகவும் பிரசுரமாகின்றது. - வ.ந.கி]  தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சரியானதொரு தீர்வில்லை. 'இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள்,இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை' என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் 'கருத்து முதல்வாதிகள்'. இவர்கள் 'சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது' என்றும், 'இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு' என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல 'இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே' என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் 'பொருள் முதல்வாதம்' எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் 'பொருள்முதல்வாதிகள்' எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி 'ஆன்மா நிலையானது, அழிவற்றது என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே'. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் 'அப்படி எதுவுமில்லை' என்கின்றார்கள். 'இவ்வியற்கையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களே உயிரினங்கள் உருவாகக் காரணம்' என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியை ஆராய்வோமாகில் அவனும் இந்தப் பிரச்சினையை அசட்டை செய்து விடவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம். பாரதியின் கீழுள்ள கவிதை வரிகள் அவனை ஒரு கருத்து முதல்வாதியாகக் காட்டுகின்றன. 'அல்லா' என்ற கவிதையில் பாரதி பின்வருமாறு பாடுகின்றான்:

"..பல்லாயிரம் பல்லாயிரம் கோடியண்டங்கள்
எல்லாத்திசையிலுமோரெல்லையில்லா
வெளிவானிலே நில்லாது சுழன்றோட
நியமஞ் செய்தருள் நாயகன்.."

'மகாசக்தி வாழ்த்து' என்னும் கவிதையில் அவன் கூறுவதோ?

"..விண்டுரைக்க அரிய அரியதாய்
விரிந்த வானவெளியென நின்றனை.
அண்ட கோடிகள் வானிலமைத்தனை
அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை.
மண்டலத்தை அணு அணுவாக்கினால்
வருவதெத்தனை யோசனை கொண்ட
தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே!
நினைக் காளியென்றேத்துவேன்.."

மேலுள்ள பாடல் வரிகள், மற்றும் பாரதியின் அனேக தெய்வப் பாடல்கள் கூறுவதென்ன? இந்த உலகம், இந்தப் பிரபஞ்சம் யாவற்றையும் ஆக்கியது ஒரு சக்தி , அதுவே கடவுள் என்பதையல்லவா? ஆனால் இவ்விதம் இயற்கைக்கு வேறாக ஒரு கடவுளைப் படைக்கும் கருத்து முதல்வாதியாக விளங்கும் பாரதியால் , கண்ணெதிரே தெரியும் காட்சிகளை, அவற்றின் உண்மையினைக் கருத்து முதல்வாதிகளைப் போல் மாயை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை. பொருள் உண்மையென்ற பொருள்முதல்வாதத்தினையும் மறுத்து விட முடியவில்லை. பாரதியின் 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்ற கவிதையினைப் பார்த்தால்....

Monday, May 20, 2019

(பதிவுகள்.காம்) கனடாத் தமிழ் இலக்கியமும் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையும்! - வ.ந.கிரிதரன் -



கனடாத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 'புரட்சிப்பாதை' சஞ்சிகைக்குமோரிடமுண்டு.  இதுவொரு கையெழுத்துச் சஞ்சிகை. 'அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிவோம்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியான சஞ்சிகை.  'இப்பத்திரிகை வட  அமெரிக்கா வாழ் தமீழீழ மக்கள் விடுதலைக்கழக ஆதரவாளர்களினால் வெளியிடப்பட்டது' என்னும் குறிப்புடன் வெளியானாலும், இதன் அமைப்பின்படி இதனையொரு சஞ்சிகையாகவே கருதலாம் (செய்திக்கடிதமாகவும் கருதலாம். ஆனால் நாவல், கவிதை, கட்டுரை எனப்பல ஆக்கங்கள் வெளியானதால் சஞ்சிகையென்று கருதுவதே பொருத்தமானதென்பதென் கருத்து.). இதன் கனடாத் தொடர்புகளுக்கான முகவரி:  C.P.842, POST OFFICE - AHUNSTIC, MONTREAL, QUEBEC H3L 3P4 என்றும் குறிபிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பதினைந்தாம் திகதி வெளியான இச்சஞ்சிகை  15.09.1984 தொடக்கம் 15.06.1985 வரை பத்து இதழ்கள் வெளியாகியுள்ளன. வெளியான இதழ்கள் எவற்றிலும் ஆசிரியர் குழுவினரின் பெயர்கள் இல்லை.

இளைஞர்கள் பலரின் கூட்டு முயற்சி இது. எனக்குத் தெரிந்து சுந்தரி (கோண்டாவில்)  ,ஜெயந்தி (உரும்பிராய்), நவரஞ்சன், குணபாலன் போன்றோருடன் மேலும் சிலர் இணைந்து இச்சஞ்சிகையினை வெளியிட்டார்கள்.

இதுவோர் அரசிலமைப்பு சார்ந்து வெளியான கையெழுத்துச் சஞ்சிகையென்றாலும், கனடாவில் 1984இல் வெளியான தமிழ்ச் சஞ்சிகையென்றவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இச்சஞ்சிகை கவிதை, கட்டுரை மற்றம் நாவல் & கேலிச்சித்திரம் போன்றவற்றையும் பிரசுரித்ததன் மூலம் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கும் வளம் சேர்த்துள்ளது. கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவலான எனது 'மண்ணின் குரல்' இச்சஞ்சிகையிலேயே தொடராகவும் ஏழு அத்தியாயங்கள்  வரை வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

'புரட்சிப்பாதை'யில் வெளியான ஆக்கங்களின் விபரங்கள் வருமாறு (என்னிடம் இதழ் மூன்றிலிருந்தே  இருப்பதால் அதிலிருந்தே ஆரம்பிக்கின்றேன்) :

Sunday, May 19, 2019

கவிதை: ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -

'ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்!' என்னுமிக் கவிதை எனது வலைப்பதிவுக்காக நான் எழுதிய A Refugee’s Thoughts On Birds என்னும் ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கவிதை 'சிறிலங்கா கார்டியன்' (The Srilanka Guardian) இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது.

சிறியதிலிருந்து பெரியதுவரை,
மெதுவானதிலிருந்து
விரைவானதுவரை,
அவதானிப்புகள் பறவைகள்
பற்றிய,
அவை பறக்கும் வெளி-நேரம் பற்றிய
அதிக விபரங்களைக்
கற்றுத்தந்துள்ளன.

வித்தியாசமான பறவைகள்
வித்தியாசமாகப் பறக்கின்றன.
வித்தியாசமாக நடந்துகொள்கின்றன.
சில தமது அறிவினைப் பாவிப்பதன்
மூலம், காற்றினூடு வழுக்கிச் செல்கின்றன.
சில பெரிய பறவைகள் காற்றோட்டத்தினைப்
பாவத்து மேல் நோக்கிப் பறக்கின்றன.
பறவை அவதானிப்பு என்னைத்
தத்துவபூர்வமாகச் சிந்திக்குமாறு
உருவாக்கியுள்ளது.
இது என்னிதயத்தை இன்பத்தாலும்,
பேரானந்தத்தாலும் நிறைத்துள்ளது.
தூங்குதல், கூடு கட்டுதல், பெற்றோராகச் செயற்படுதல்,
இவையெல்லாம் என் சிந்தையில்
அவற்றைப் பெருமைக்குரியதாக
உருவாக்கியுள்ளன.
அவற்றின் வாழ்க்கை எளிமையானது; சில செயல்களே
செய்வதற்குள்ளன, ஆனால் அவற்றை
ஒழுங்காகச் செய்கின்றன.
சபதங்கள் மூலமும், உடல்ரீதியான
அசைவுகள் மூலமும்,
அவை சிறப்பாகத் தொடர்புகொள்கின்றன.
களைப்படையாமல், நம்பிக்கை இழக்காமல்,
இரைக்காக அமைதியுடன் காத்திருக்கும்
விலங்குள் நிறைந்த
கொந்தளிக்கும் சூழல்களுக்குள்
அவை தங்கள் இருப்பினைக்
களிப்புடனும் ஆரோக்கியமான
நம்பிக்கையுடனும்
கொண்டு செல்கின்றன.
இந்த அழுத்தங்கள் ,மிகுந்த
'காங்கிரீட்' காட்டினுள்
எங்கள் கூடுகளோ
பொருளியல்ரீதியிலான
ஆசைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும்
நிறைந்து கிடக்கின்றன.

அவை, பறவைகள், வாழுதல் பற்றி
நிறையவே எனக்குக்
கற்றுத்தந்துள்ளன.
மேலாகவும், கீழாகவும்,
இடமாகவும், வலமாகவும்,
ஆகாயத்தில் உயரமாக,
மிகவும் கீழேயுள்ள நிலத்தைப் பற்றி,
எல்லைகள் பற்றி எந்தவிதக்
கவலைகளுமில்லாமல்
பறக்கும் அவற்றின் ஆற்றல்
என் சிந்தனையை
ஆழமாகவும், அறிவுபூர்வமானதாகவும்
உருவாக்கியுள்ளது.

காலநிலைகள் அவற்றின் இடப்பெயர்தலை
மட்டுமே நிர்ணயிக்கின்றன.
தமது சிறகுகளின் வலிமையுடன்
அவை எங்கு செல்ல விரும்பினாலும்
செல்லலாம்.
ஒருநாள்,
எமது அறிவு அனுமதித்தால்
நாமும் அவைபோல் சிறகடிக்கலாம்.
அல்லது நாம் அவற்றைவிட இன்னும்
விரைவாகப்
பறக்கலாம், அலைகளைப் போல்,
மின்காந்த அலைகளைப் போல்.
அதுவரை,
அவற்றைப் போல் பறப்பதற்கு விரும்புகின்றேன்.
அவற்றைப் போல் காற்றினில் எனது சிறகுகளை
விரிப்பதற்கு விரும்புகின்றேன்.
மிகவும் கீழேயுள்ள பிளவுண்ட நிலங்களிலுள்ள
எல்லைகள பற்றிய, தடுப்புமுகாம்கள்
பற்றிய
எந்தவிதக் கவலைகளுமில்லாமல்,
வானில் உயரத்தில் சிறகடிக்க
விரும்புகின்றேன்.

Poem: A Refugee’s Thoughts On Birds

By V.N.Giritharan

'ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்!' என்னுமிக் கவிதை எனது வலைப்பதிவுக்காக நான் எழுதிய A Refugee’s Thoughts On Birds என்னும் ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கவிதை 'சிறிலங்கா கார்டியன்' (The Srilanka Guardian) இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது.
  
A Refugee’s Thoughts On Birds  By V.N.Giritharan -

From tiny to very large,
slow to fast,
observations taught me a lot
about birds,
about the space-time where
they gracefully fly.

Different birds fly uniquely;
behave distinctively.
Some use their knowledge to
glide through the air,
while larger ones employ air currents
to ascend skyward.

Bird observation inspires
philosophical thoughts,
filling my heart with happiness and bliss.

Roosting, nesting, and parenting
make them proud
in my thoughts.
Their lives are simple, with few tasks,
done regularly.
Through sounds and physical movements,
they communicate efficiently,
unfazed, tireless,
amid turbulent environments,
where predators wait patiently.

They carry on their existence
happily and optimistically.

In this tension-filled,
stress-filled
concrete jungle,
our nests are filled with materialistic aspirations.

Birds teach me about living.
Their ability to soar up and down,
right and left,
in the vast sky,
without worrying about borders
on lands far below,
expands my thinking, making it broad and wise.

Seasons determine only their migrations.
With the strength of their wings,
they can fly anywhere
they desire.

One day, if our knowledge permits,
we may fly like them;
we may even soar faster than them,
like waves, electromagnetic waves.

Until then,
I wish I could fly like them;
I wish I could spread my wings in the air
like them,
without worrying about borders, detentions
on divided lands far below.

I wish I could fly like them high in the sky.

Courtesy: srilankaguardian.org

எனது குறிப்பேட்டுப் பதிவுகள்.. (ஓர் ஆவணப்பதிவு) - 1 - வ.ந.கிரிதரன் -

எண்பதுகளின் ஆரம்பத்தில் மார்க்சிய நூல்களை வாங்கிப்படிக்கத்தொடங்கிய காலகட்டம். அதுவரை தமிழ், இனம், பழம் பெருமை என்று உணர்வுகளின் அடிப்படையில் சமுதாய அரசியற் பிரச்சினைகளை அணுகிக்கொண்டிருந்தவனை , தர்க்கரீதியாக, அறிவு பூர்வமாக அணுகத்தூண்டியவை மேற்படி மார்க்சிய நூல்களே. 'சி.ஆர்.கொப்பி' என்று அழைக்கப்படும் நீண்ட தாள்களை உள்ளடக்கிய பேரேட்டில் (பொதுவாகக் கணக்கு வழக்குகளை எழுதக் கடை வியாபாரிகள் பாவிக்கும் குறிப்புப் புத்தகம் என்று நினைக்கின்றேன்) நேரம் கிடைத்தபோதெல்லாம் பல் வேறு விடயங்களைப்பற்றிய என் எண்ணங்களை எழுதிவரத்தொடங்கினேன். முகப்பு அட்டையில் எனக்குப் பிடித்த பாரதியாரின் , அறிஞர்களின் கருத்துகளை எழுதி, உள்ளட்டை மற்றும் முதற் பக்கத்தில் எனக்குப் பிடித்த ஆளுமைகளின் படங்களை ஒட்டி அக்குறிப்புப்புத்தகங்களை அலங்கரித்தேன்.

ஒவ்வொரு குறிப்புப் புத்தகத்தையும் தனி நூலாக, தலைப்புக்கொடுத்து வடிவமைத்தேன். இவ்விதம் எழுதிய நூல்களில் ஒரு சில இன்னும் என் கை வசமுள்ளன. ஏனையவை 83 இனக்கலவரத்துக்குப் பின் தோன்றிய அரசியற் சூழலில் தொலைந்து போய்விட்டன. அல்லது யார் கைகளிளாவது அவை இன்னுமுள்ளனவா தெரியவில்லை.

1. நூல் 1 : இயற்கையும், மனிதனும் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
2. நூல் 2: பிரபஞ்சமும் , மனிதனும் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
3. நூல் 3: தத்துவம், அரசியல், காதல் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
4. நூல் 4: கதை, கட்டுரை, கவிதைகள், எண்ண உருவகங்கள்

தற்போது இந்நூல்களின் அட்டைகள் கழன்று, தாள்களெல்லாம் ஒழுங்குமாறிக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் இயலுமானவரையில் ஒழுங்குபடுத்தி, இவற்றிலுள்ளவற்றை அப்படியே எவ்வித மாற்றமும் இல்லாமல் மீண்டும் ஒரு பதிவுக்காகப் பிரசுரிப்பதா அல்லது பிழை, திருத்தம் செய்து பிரசுரிப்பதா என்றொரு சிந்தனை வளையவருகின்றது. ஏனெனில் அக்காலகட்டத்திலிருந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்நூல்களிலுள்ள ஆக்கங்களில் பாவிக்கப்பட்டுள்ள சொற்கள், கருத்துகள் சிலவற்றை இக்காலகட்டத்தில் நான் பாவிப்பதில்லை. ஆனால் ஆக்கங்களின் அடிப்படைக்கருத்துகளில் பெரிதாக மாற்றமேதுமில்லையென்றே தோன்றுகின்றது. பிழை, திருத்தி எழுதினால் ஒரு காலகட்டப்பதிவுகளின் உண்மைத்தன்மை தொலைந்துபோகும் அபாயமுள்ளது. இது விடயத்தில் இன்னும் தெளிவான முடிவெதுவும் எடுக்கவில்லை.

Saturday, May 18, 2019

மக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்! - வ.ந.கிரிதரன் -

- - இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் வித்துவான் வேந்தனாரின் எழுத்துலகப்பங்களிப்பு முக்கியமானது. அவரது நூற்றாண்டு விழாவையொட்டி நூற்றாண்டு விழாமலர் 548 பக்கங்கங்களைக் கொண்ட விரிவான நூலாக வெளியாகியுள்ளது. அம்மலரில் வெளியான எனது கட்டுரையிது. மலரைச் சிறப்பாக வெளியிட்ட அவரது மகனும், கவிஞரும் , நண்பருமான வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் இதன் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார். வாழ்த்துகிறேன். -

வித்துவான் வேந்தனாரைப் பற்றி எனது மாணவப் பருவத்திலேயே எனக்கு மிகுந்த மதிப்பிருந்தது. வித்துவான்களில் அவர்  சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞரான அவர் சிறந்த குழந்தைக்கவிஞர்களிலொருவராகவும் தென்பட்டார். அவரது மானுட விடுதலைக்  கவிதைகளில் தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான் எனக்கு எடுத்தியம்பின. பண்டிதர்கள் என்றாலே பழமைவாதிகள் என்றோர் எண்ணம் நிலவுவதுண்டு. ஆனால் இதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்த பண்டிதர்களில் வித்துவான் வேந்தனார், எழுத்தாளர் சொக்கன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். வித்துவான் வேந்தனார் அவர்கள் பழமையின் சிறப்பம்சங்களைப்பேணிய அதே சமயம், புதுமையின் சிறப்பம்சங்களையும் உள்வாங்கி இலக்கியம் படைத்தவர்; மக்கள் இலக்கியம் படைத்தவர்.

வேந்தனாரைப்பற்றி விரிவாக அறியும் சந்தர்ப்பம் என் வாழ்க்கையிலேற்பட்டதற்கு முக்கிய காரணம் அவரது புத்திரர்களிலொருவரான வேந்தனார் இளஞ்சேய். நான் யாழ் இந்துக்கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்த சமயம் என் வகுப்பில் என்னுடன் ஒன்றாகக் கல்வி பயின்ற மாணவர்களிலொருவர். என் பதின்ம வயதுகளில் இளஞ்சேயும், நானும் அடிக்கடி வாசிப்பதற்காக ஒருவருக்கொருவர் எம்மிடமுள்ள நூல்களை இரவல் கொடுப்பதுண்டு. பல சந்தர்ப்பங்களில் யாழ் இந்து  மகளிர் கல்லூரிக்கண்மையிலிருந்த அவரது இல்லத்துக்குச் சென்றதுண்டு. அக்காலகட்டத்தில் வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார்.  இன்று தந்தையைப்போல் எழுத்துலகிலும் தன் எழுத்தாற்றலைக் காட்டி வருகின்றார். தந்தையாரின் படைப்புகளைத் திரட்டி , நூல்களாகத்தொகுத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருகின்றார். வாழ்த்துகின்றேன்.

தமிழ்க்கவிதைகளில் 'நகரம்' - வ.ந.கிரிதரன் -

தமிழ்க்கவிதைகள் சங்ககாலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு விடயங்களைப்பற்றி விபரித்திருக்கின்றன. சங்காலக்கவிதைகள் , காப்பியங்கள் பல அக்காலகட்டத்து நகர்களைப்பற்றிய  தகவல்கள் பலவற்றைத்தருகின்றன. குறிப்பாக சிலப்பதிகாரம் அக்காலகட்டத்தில் புகழ்மிக்க கோநகர்களாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம், மதுரை மற்றும் வஞ்சி பற்றி, அந்நகர்களில்  வாழ்ந்த மக்கள் பற்றி, அவர்கள் ஆற்றிய பல்வேறு தொழில்கள் பற்றியெல்லாம் விரிவாகவே தகவல்களைத்தருகின்றது. அக்கால நகரங்களின் நகர வடிவமைப்பு பற்றி, வாழ்ந்த மக்கள்  புரிந்த தொழில்கள் பற்றி, நடைபெற்ற விழாக்கள் பற்றி, பிற நாடுகளுடன் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகள் பற்றி.. என்று பல்வேறு வகைப்பட்ட தகவல்களை அவற்றின் மூலம்  அறிந்துகொள்ளலாம். இதனைப்போல் அண்மைக்காலத் தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளில் நகரம் கூறு பொருளாக அமைந்துள்ளதா என்று சிறிது சிந்தனையையோட்டியதன் விளைவுதான்  இக்கட்டுரை. இதுவொரு விரிவான ஆய்வல்ல. எதிர்காலத்தில் மேலும் பல படைப்புகளை ஆராய்ந்து  காலத்துக்குக்காலம் விரிவுபடுததப்படுத்தக்கூடியதொரு ஆரம்பக்கட்டுரையே.

இக்கட்டுரைக்காக ஆராய்ந்த  கவிஞர்களின் கவிதைகள் நகரங்களைப்பற்றி விபரிக்கையில் அங்கு வாழ்ந்த பல்வகைப்பட்ட மக்களைப்பற்றி, சமூக வாழ்க்கை முறைபற்றி, நகரங்கள் சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்பு பற்றி,  நகரங்களில் நிலவிய சமூக வாழ்வின் இயல்பினால் மனிதர்களின் உளவியலில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி, அங்கு நிலவிய வர்க்கங்கள் மானுட வாழ்விலேற்படுத்தும் பாதிப்புகள் பற்றி,  நகரச்சூழல் ஏற்படுத்தும் உடல் உபாதைகள் பற்றி, மானுட சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நகரத்தில் ஏற்படுத்திய போர்ப்பாதிப்புகளைப்பற்றி.... எனப்பல்வேறு விடயங்களை  வெளிப்படுத்தி நிற்கின்றன. இவற்றை எடுத்துக்கொண்ட படைப்புகளினூடு இனங்காணுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

ஆவணப்பதிவு- எழுக அதிமானுடா! (கவிதைகள்) - வ.ந.கிரிதரன்

நூல்: எழுக அதிமானுடா! (கவிதைகள்) - வ.ந.கிரிதரன்
முதற்பதிப்பு: தை 1994
புத்தக வடிவமைப்பு: ஜோர்ஜ் இ.குருஷேவ்
அட்டை வடிவமைப்பு: பாலா ஆர்ட்ஸ்
வெளியீடு: மங்கை பதிப்பகம் ( 'டொரோண்டோ', கனடா)


எண்பதுகளில், தொண்ணூறுகளில் வீரகேசரி, தினகரன், நுட்பம், தாயகம் (கனடா) , குரல் (கையெழுத்துப்பிரதி, கனடா) ஆகிய ஊடகங்களில் வெளியான மற்றும் ஊடகங்களில் வெளிவராத எனது ஆரம்பகாலத்துக் கவிதைகளின் தொகுப்பிது. இத்தொகுப்பில் 30 கவிதைகளுள்ளன. இவை பிறந்த மண்ணின் அரசியலை, புகலிடத்திருப்பினை, ஆசிரியருக்குப் பிடித்த ஆளுமைகளைப் பற்றிய எண்ணங்களை மற்றும் சூழற் பாதுகாப்பினை விபரிக்கின்றன. இக்கவிதைகளில் சிலவற்றில் அதிமானுடா போன்ற ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் சொற்களுள்ளன. இவை அக்காலத்தின் என் எண்ணங்களின் வெளிப்பாடு. இப்பொழுது எழுதுவதாயின் மானுடம், மானிடர் போன்ற சொற்களையே பாவிப்பேன். ஆயினும் ஏற்கனவே வெளிவந்த பதிப்பிலுள்ளவற்றை மாற்ற முடியாத காரணத்தால் , அடுத்து வரும் பதிப்புகளில் இவ்விதமான சொற்கள் மாற்றப்படும். இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் சிலவற்றைத்தவிர ஏனையவற்றை கவிதை ஆர்வத்தின் வெளிப்பாடுகள் என்று கூறுவேன். என் அக்காலத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதையே முக்கியமாகக்கொண்டு உருவான சொற்களின் வெளிப்பாடுகள் என்றும் கூறுவேன். விடுதலை அமைப்புகளின் அக, புற முரண்பாடுகளை, முஸ்லீம் மக்களின் பலவந்த  வெளியேற்றத்தினை, மலையக மக்களின் துயரினையெல்லாம் கவிதைகள் தம்பொருளாகக்கொண்டுள்ளன. கனடாப்பூர்வீகக்குடியினரின் சோகங்களையும் கவிதைகள் விபரிக்கின்றன.

'மண்ணில் குரல்' தொகுப்புக் கவிதைகள்!

கனடாவின் முதல் தமிழ் நாவலாக 1987 தை மாதத்தில் வெளிவந்த  நூல் எனது 'மண்ணின் குரல்' . இந்த நூலுக்கு இன்னுமொரு முக்கியத்துவமும் உண்டு. இந்நூல் 'மண்ணின் குரல்' நாவலையும் 8 கவிதைகளையும் மற்றும் 2 கட்டுரைகளையும் கொண்ட சிறு தொகுப்பாக வெளிவந்தது.  அந்த வகையில் இதனை முதலாவது நாவலாகவும் கருதலாம். அதே சமயம் கவிதைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம். கட்டுரைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம்.

இத்தொகுப்பிலுள்ள நாவலின் பெயர் 'மண்ணின் குரல்'. அதனால் இத்தொகுப்புக்கு இந்தப்பெயர் மிகவும் பொருத்தம். அதே சமயம் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியவையும் மண்ணின் குரல்களாகத்தாம் ஒலிக்கின்றன. அந்த வகையில் மண்ணின் குரல் என்னும் நூலின் பெயர் நூலின் படைப்புகள் அனைத்துக்கும் பொருத்தமான தலைப்பென்பேன். இக்கவிதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல் அனைத்தும் ,மான்ரியால் நகரில் அக்காலகட்டத்தில் (1984 - 1986)  வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானவை. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக் கிளையினர் வெளியிட்ட கையெழுத்துச் சஞ்சிகை 'புரட்சிப்பாதை'

இந்நூலில் அட்டையினை வடிவமைத்தவர் தற்போது மான்ரியாலில் வசிக்கும் கட்டடக்கலைஞர் பெ.பாலேந்திரா அவர்கள்.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளின் விபரங்கள் வருமாறு:

1. மாற்றமும் , ஏற்றமும்
2. அர்த்தமுண்டே..
3. விடிவிற்காய்..
4. புல்லின் கதை இது..
5. ஒரு காதலிக்கு...
6. மண்ணின் மைந்தர்கள்..
7. புதுமைப்பெண்
8. பொங்கட்டும்! பொங்கட்டும்!

வ.ந.கிரிதரன் கவிதைகள் 39: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!

எனது கவிதைகளில் 39 கவிதைகளின் தொகுப்பிது. எதிர்காலத்தில் என் கவிதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணமுண்டு. 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் தலைப்பில் அத்தொகுப்பு வெளியாகும்.

1. ஆசை!

அர்த்த ராத்திரியில் அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும் ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல் அடியேனின்
வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளிலே கண் சிமிட்டும்
சுடர்ப் பெண்கள் பேரழகில் மனதொன்றிப் பித்தனாகிக்
கிடந்திடுவேன்.

நத்துக்கள் கத்தி விடும் நள்ளிரவில்
சித்தம் மறந்து
சொக்கிடுவேன்.

பரந்திருக்கும் அமைதியிலே பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்டபடி பைத்தியமாய்ப்
படுத்திடுவேன்.

இயற்கையின் பேரழகில் இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால் அடியேனின்
இஷ்ட்டமாகும்.

Wednesday, May 8, 2019

(பதிவுகள்.காம்) குறுநாவல்: சுமணதாஸ பாஸ் - வ.ந.கிரிதரன் -


(பதிவுகள்.காம்) குறுநாவல்: சுமணதாஸ பாஸ் - வ.ந.கிரிதரன் -

- என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. சுமணதாஸ் பாஸைப் பொறுத்தவரையில் ஒரு முக்கிய உண்மையைக் கூறத்தான் வேண்டும். வன்னிமண்ணில் நாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் எங்கள் வீட்டிற்கருகில் ஒரு சிங்கள பாஸ் குடும்பம் இருக்கத்தான் செய்தது. அந்த பாஸ் குடும்பத்தவர்கள் நாங்கள் அம்மண்ணிற்குப் போவதற்கு முன்பிருந்தே அம்மண்ணுடன் பிணைந்து வாழ்ந்து வந்தவர்கள். எங்களுடன் நெருங்கிப் பழகியவர்கள். சுக துக்கங்களில் பங்கு பற்றியவர்கள் ஒருமுறை எங்கள் வீட்டிற்கருகிலிருந்த குளமொன்றில் மூழ்கும் தறுவாயில் தத்தளித்துக் கொண்டிருந்த என்னையும், சாந்தா என்ற சிங்கள இளைஞனையும் துணிச்சலுடன் காப்பாற்றியவர் அந்த சிங்கள் பாஸ்தான். நாங்கள் 70களில் யாழ்ப்பாணம் திரும்பி விட்டோம் அதன்பிறகு எங்களிற்கும் அவர்களிற்குமிடையிலிருந்த தொடர்பு விடுபட்டுப்போனது. 1983 இலிருந்து மாறிவிட்ட நாட்டு நிலைமையைத் தொடர்ந்து, தமிழ் மக்களின் போராட்டம் கனன்றெரியத் தொடங்கி விட்டது. இந்தக் காலகட்டத்தில் விடுதலைக்காகப் போராடும் அமைப்பொன்றினால் அந்தச் சிங்கள பாஸ் குடும்பமே முற்றாக அழிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? வழக்கம்போல் பலவிதமான வதந்திகள், ஊகங்கள். அந்த சிங்கள பாஸ்தான் 'சுமணதாஸ் பாஸாக' இக்கதையில் உருப்பெற்றிருக்கின்றார். நான் இன்று உயிருடன் இருப்பதற்குக் காரணமானவர் அந்தச் சிங்கள பாஸ். அதனை என்னால் ஒரு போதுமே மறக்க முடியாது.

என் பால்ய காலத்து வன்னி மண் அனுபவங்களை மையமாக வைத்து நாவலொன்றினை 'வன்னி மண்' என்னும் பெயரில் எழுதியிருந்தேன். என் வன்னி மண் அனுபவங்களை விபரிக்கும் 'வன்னி மண்' நாவலில் எம் அயலவரான சிங்கள பாஸுடனான அனுபவங்களையும் விபரித்திருந்தேன். அது 'தாயகம்' (கனடா) சஞ்சிகையில் தொடராக தொண்ணூறுகளில் வெளியானது. அந்நாவல் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளியான 'மண்ணின் குரல்' நாவற் தொகுப்பிலுமுள்ளது. அண்மையில் 'வன்னி மண்' நாவலை வாசித்தபோது அதிலுள்ள பகுதிகள் சிலவற்றைத் தனியாகப்பிரித்தெடுத்துச் சிறுகதையாக, குறுநாவலாக ஆக்கலாமென்று தோன்றியது. அதன் விளைவே 'சுமணதாஸ பாஸ்' என்னும் இக்குறுநாவல். சிறுகதைகள் , குறுநாவல்கள் நாவல்களாக உருப்பெற்றுள்ளதை அறிந்திருக்கின்றோம். ஆனால் இங்கே நாவலொன்றிலிருந்து குறுநாவலொன்று தோன்றியுள்ளதைக் காண்பீர்கள்.

இந்நாவல் தொடராக வெளியான காலகட்டத்தில் எழுத்தாளர் மாலன் அவர்கள் கனடா வந்திருந்தார். அச்சமயம் அவருடன் உரையாடியிருக்கின்றேன். அப்பொழுது அவர் கூறிய கூற்றொன்று இன்னும் நினைவிலுள்ளது. அது ' தமிழ் எழுத்தாளர் எவராவது தமிழர் அமைப்புகளால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களைப்பற்றி எழுதியிருக்கின்றார்களா?' அப்பொழுது அவ்விதமான எனது நாவலொன்று 'தாயகம் (கனடா)' சஞ்சிகையில் வெளியாகிக்கொண்டிருக்கின்றது என்று கூற நினைத்தேன். ஆனால் கூறவில்லை. உண்மையில் இவ்விதம் வேறு தமிழ் எழுத்தாளர்கள் யாராவது எழுதியுள்ளார்களா என்பது தெரியவில்லை. அவ்விதம் எழுதா விட்டால் எனது 'வன்னி மண்' நாவலே போராட்டச் சூழலில் பாதிக்கப்பட்ட சிங்களக் குடும்பமொன்று பற்றியும் முதன் முதலாக விபரிக்கும் நாவலென்ற முக்கியத்துவத்தையும் பெறுகின்றது. - வ.ந.கிரிதரன் -
 
*****************************************************************************
குறுநாவல்: சுமணதாஸ் பாஸ் - வ.ந.கிரிதரன் -

1.

சிந்தனையில் மூழ்கிவிடும் போதுதான் எவ்வளவு இனிமையாக, இதமாக விருக்கின்றது. மெல்ல இலேசாகப் பறப்பதுபோல் ஒரு வித சுகமாகக் கூடவிருக்கின்றது. எனக்கு இன்னமும் சரியாக ஞாபகமிருக்கின்றது. மாரிகாலம் தொடங்கி விட்டிருந்தது. என் பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். அப்பா ஆங்கில வாத்தி, அம்மா தமிழ் டீச்சர். இருவரிற்குமே வவுனியாவிற்கு மாற்றலாகியிருந்தது. அம்மாவிற்கு வவுனியா மகாவித்தியாலயத்திற்கும் அப்பாவிற்கு நகரிலிருந்த இன்னுமொரு பாடசாலைக்கும் மாற்றல் உத்தரவு கிடைத்ததுமே அப்பா முன்னதாக வவுனியா சென்று, வாடகைக்கு வீடு அமர்த்திவிட்டு வந்திருந்தார். வீட்டுச் சாமான்களையெல்லாம் ஏற்றி வர ஒரு லொறியை ஏற்பாடு செய்துவிட்டு அப்பா லொறியுடன் வர, நானும் அம்மாவும் அக்காவும் தம்பியும் மாமாவுடன் சோமர் செட் காரொன்றில் வன்னி நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது எனக்கு வயது ஐந்துதான். அந்தப் பயண அனுபவம் இன்னமும் பசுமையாக நெஞ்சில் பதிந்து கிடக்கின்றது. முதன் முதலாக பிறந்த இடத்தை விட்டு இன்னுமொரு இடத்திற்கான பயணம். நெஞ்சில் ஒருவித மகிழ்ச்சி, ஆர்வம் செறிந்து கிடந்தது. கார் பரந்தன் தாண்டியதுமே வெளியும், வானுமாகத் தெரிந்த காட்சி மாறிவிட்டது. சுற்றிவரப் படர்ந்திருந்த கானகத்தின் மத்தியில் பயணம் தொடங்கியது.

வன்னி மண்ணின் அழகு மெல்ல மெல்ல தலைகாட்டத் தொடங்கிவிட்டது. மரங்களிலிருந்து செங்குரங்குகளும், கறுத்த முகமுடைய மந்திகளும் எட்டிப் பார்க்கத் தொடங்கி விட்டன. பல்வேறு விதமான பட்சிகள் ஆங்காங்கே தென்படத் தொடங்கி புதிய சூழலும், காட்சியும் என நெஞ்சில் கிளர்ச்சியை ஒருவித ஆவலை ஏற்படுத்தின. பயணத்தை ஆரம்பித்த பொழுது இருண்டு கொண்டிருந்த வானம், இடையிடையே உறுமிக் கொண்டிருந்த வானம், நாங்கள் மாங்குளத்தைத் தாண்டியபொழுது கொட்டத் தொடங்கிவிட்டது. பேய் மழை அடை மழை என்பார்களே அப்படியொரு மழை, சூழல் எங்கும் இருண்டு, 'சோ' வென்று கொட்டிக்கொண்டிருந்த மழையில் பயணம் செய்வதே பெரும் களிப்பைத் தந்தது. அன்றிலிருந்து கொட்டும் மழையும் அடர்ந்த கானகமும் பட்சிகளும் எனக்குப் பிடித்த விடயங்களாகிவிட்டன. ஒவ்வொரு முறை மழை பொத்துக் கொண்டு பெய்யும் போது, விரிந்திருக்கும் கானகத்தைப் பார்க்கும்போதும், அன்று முதன்முறையாக வன்னி நோக்கிப் பயணம் செய்த பொழுது ஏற்பட்ட அதேவிதமான கிளர்ச்சி, களிப்பு கலந்த உணர்வு நெஞ்சு முழுக்கப் படர்ந்து வருகின்றது. பேரானந்தத்தைத் தந்து விடுகின்றது.

நாங்கள் வவுனியாவை அடைந்த பொழுது பேயாட்டம் போட்டுக் கொட்டிக் கொண்டிருந்த வானத்தின் கோரம் குறைந்து விட்டிருந்தது. நாங்கள் செல்லவேண்டிய பகுதிக்கு பெயர் 'குருமண் காடு'. வவுனியா நகரிலிருந்து, ஒன்றரை மைல் தொலைவில் மன்னார் வீதியில் அமைந்திருந்தது. இன்று அபிவிருத்தியடைந்துவிட்ட பகுதி ஆனால் அன்றோ நாலைந்து வீடுகளையும், ஒரு பெரிய 'பண்ணையையும் கொண்ட காடு. படர்ந்த பகுதி. கண்டுபிடிப்பதுதான் கஷ்டமாகவிருந்தது. காரை மன்னார் றோட்டின் கரையோரம் நிறுத்திவிட்டு, யாரும் தென்படுகின்றார்களா என்று பார்ப்பதற்காக மாமா காரை விட்டிறங்கினார். சிறிது நேரம் ஒருவரையுமே காணவில்லை.

Sunday, May 5, 2019

ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!

ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது

அ.ந.க. ஒரு செயல் வீரர். ஏனையவர்களைப் போல் வாயளவில் நின்று விட்டவரல்லர். தான் நம்பிய கொள்கைகளுக்காக இறுதிவரை பாடுபட்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்களிலொருவர். மேற்படி சங்கத்தின் கீதமாகவும் இவரது கவிதையே விளங்குகின்றது. அவரது கவிதைகளின் கருப்பொருட்களாகத் தீண்டாமை, தோட்டத்தொழிலாளர் இழிநிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள், சமுதாயச் சீரமைப்பு, இயற்கை, காதல், தத்துவம், வர்க்க விடுதலை, பிடித்த ஆளுமைகள் போன்றவை விளங்குகின்றன. இவரது கவிதைகள் தமிழமுது, தேன்மொழி, ஈழகேசரி, வசந்தம், வீரகேசரி, பாரதி, தினகரன், ம்ல்லிகை, நோக்கு, இளவேனில், சுதந்திரன், ஸ்ரீலங்கா போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன [அ.ந.க.வின் கவிதைகள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அவர் பங்கு பற்றிய கவியரங்குகள் பற்றிய விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவேண்டியதவசியம்.]. இவரது ஆரம்ப காலத்துக் க்விதைகளிலொன்றான , ஈழகேசரியில் வெளிவந்த, 'சிந்தனையும், மின்னொளியும்' என்ற கவிதை முக்கியமான கவிதைகளிலொன்று. 'அர்த்த இராத்திரியில் கொட்டுமிடித்தாளத்துடனும், மின்னலுடனும் பெய்யும் மழையைப் பற்றிப் பாடப்படும் இக்கவிதையில் , அந்த இயறகை நிகழ்வு கூடக் கவிஞரிடம் சிந்தனையோட்டமொன்றினை ஏற்படுத்தி விடுகின்றது. கணப்பொழுதில் தோன்றி அழியும் மின்னல் கூட ஒரு சேதியைக் கூறிவிடுகிறது. அது என்ன?

'தேன்மொழி'க் கவிதைகள் - 1 - வ.ந.கிரிதரன் -


நூலகம்' தளம் பல்வேறு வழிகளிலும் உதவி வருகின்றது. மிகவும் பயனுள்ள அரியதோர் ஆவணத்தளமாக 'நூலகம்' உருமாறி வந்திருக்கின்றது. அத்துடன் 'தேன்மொழி' சஞ்சிகையின் 'நூலகத்தில்' இதுவரை வலையேற்றப்படாத பிரதிகளையும் தந்துதவிய 'நூலகம்' கோபி அவர்களுக்கு நன்றி. 'தேன்மொழிக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைத்தொடரினை எழுதுவதற்கு அவரது இந்த உதவியே முக்கிய காரணம்.

தேன்மொழி சஞ்சிகை கவிதைக்காக வெளிவந்த முதலாவது சஞ்சிகை. மறுமலர்ச்சிக்காலப்படைப்பாளிகளே இச்சஞ்சிகைக்கும் தோற்றுவாய். மறுமலர்ச்சி சஞ்சிகையினை வெளியிட்ட எழுத்தாளர் தி.ச.வரதராஜனே தேன்மொழியின் நிர்வாக ஆசிரியராக விளங்கியவர். இணையாசிரியராக இருந்தவர் கவிஞர் மஹாகவி. 1955இல் நான்கு இதழ்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதழ்கள் வெளியாகியுள்ளனவா என்பது ஆய்வுக்குரிய விடயம். அத்துடன் 'நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நினைவுச்சின்னம்' என்னும் தாரக மந்திரத்துடன் எழுத்தாளர் தி.ச.வரதராஜனை நிர்வாக ஆசிரியராகவும், கவிஞர் மஹாகவியை இணை ஆசிரியராகவும் கொண்டு வெளியான சஞ்சிகை. சஞ்சிகையின் அட்டைப்படம் ஒவ்வொன்றும்  'தங்கத்தாத்தா' சோமசுந்தரப்புலவரின் கவிதை வரிகளைத் தாங்கி வெளியாகியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. சஞ்சிகையின் கடைசிப்பக்கத்தில் தேன்மொழியில் எழுதும் படைப்பாளிகளில் ஒருவரைப்பற்றியச் சுருக்கமான குறிப்பும் காணப்படுகின்றது. மேலதிக விபரங்கள்: அச்சு - ஆனந்தா அச்சகம். தேன்மொழி அலுவலகம்: 226 , காங்கேசன் துறை வீதி, யாழ்ப்பாணம், இலங்கை.  ஆண்டுக்கட்டணம் - ரூ. 3.00. தனிப்பிரதி 23 சதம்.

மறுமலர்ச்சி இதழ் மூலம் ஈழத்தமிழ் இலக்கியத்தில் கால்பதித்த தி.ச.வரதராஜன் (வரதர்) அவர்கள் முதலாவது கவிதைகளுக்காக மட்டும் வெளிவந்த முதலாவது சஞ்சிகையான தேன்மொழியினையும்  வெளியிட்டவர் என்னும் பெருமைக்குள்ளாகின்றார்.

பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி...- வ.ந.கிரிதரன் -

மகாகவி பாரதியார் 'சுயசரிதை' என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார். பாரதியாரின் ஆளுமையை அறிந்து கொள்வதற்கு உதவும் கவிதைகளிலொன்று அவரது இந்தக்கவிதை. இதுவொரு நீண்ட கவிதை. கவிதையின் ஆரம்பம் "பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே." என்ற பட்டினத்துப்பிள்ளையாரின் கவிதை வரிகளுடன் ஆரம்பமாகின்றது. பாரதியார் தன்னைச் சித்தர்களிலொருவராகக்கருதுபவர். சித்தர்களிலொருவரான பட்டினத்தாரின் இருப்பு பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பமாகியிருப்பது ஒன்றினை நன்கு புலப்படுத்துகின்றது. அது பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனையினைத்தான். 'பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்னும் கூற்றுக்கேற்ப அவரது வாழ்வில் கடந்து போன இழப்புகளைப்பற்றிச் சுயசரிதை விபரிக்கின்றது. நிறைவேறாத பிள்ளைக்காதல் அதாவது மானுடரின் முதற் காதல், அவரது ஆங்கிலக்கல்வி கற்றல், அவரது திருமணம் மற்றும் அவரது தந்தை வியாபாரத்தில் நொடிந்துபோய் வறுமையுறல்போன்ற விடயங்களைக்கவிதை விபரிக்கின்றது ஆனால் இந்த வாழ்வே இவ்விதமானதொரு கனவுதான் என்பதை அவர் நன்கு புரிந்திருக்கின்றார். ஆனால் அதற்காக அவர் வாழ்விலிருந்து ஓடி, ஒதுங்கிப்போய் விட்டவரா?

இவ்விதமாக இழந்தவை பற்றியெல்லாம் விபரிக்கும் அவர், ஆரம்பத்தில் 'உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி லுங்கன வாகும்' என்று கூறும் அவர்,  தன் கவிதையின் இறுதியில் உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி னுங்கன வாகும்' என்று மானுட வாழ்வே ஒரு கனவு என்பார். ஆனால் அதற்காக , அதனை நினைத்து , நினைத்து வருந்துவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'இதற்குநான் பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்? பண்டு போனதை எண்ணி யென்னாவது? சிலதி னங்கள் இருந்து மறைவதில் சிந்தை செய்தெவன் செத்திடு வானடா' என்று கூறித் தன் சுயசரிதையினை முடிப்பார்.

அமரர் வெங்கட் சாமிநாதன் நினைவாக.. - வ.ந.கிரிதரன் -

அக்டோபர் 20 அமரர் வெங்கட் சாமிநாதனின் நினைவுதினம். தமிழகத்தைச்சேர்ந்த கலை, இலக்கிய ஆளுமைகளில் என்னுடன் மிகவும் அதிகமாகத் தொடர்பு வைத்திருந்தவராக நான் கருதுவது அமரர் வெங்கட் சாமிநாதனைத்தான். இவ்வளவுக்கும் நான் அவரை ஒருபோதுமே நேரில் சந்தித்ததில்லை. அவர் இயல் விருது பெறுவதற்காகத் 'டொராண்டோ' வந்திருந்தபோதுகூட நான் அவரைச் சந்திக்கவில்லை. அவர் அப்பொழுது அவரை அழைத்தவர்களுடன் மிகவும் நேரமின்றி அலைந்துகொண்டிருப்பாரென்று எண்ணி நானும் அவரைச் சந்திக்கும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதன் பின்னரே அவர் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அதிகமாக அனுப்பத்தொடங்கினார். அவரது மறைவுக்கு முதல் நாள் வரையில் அவர் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அவ்வப்போது தன் மின்னஞ்சல்களில் தான் என்னை நேரில் சந்திக்காததையிட்டு வருந்தியிருப்பார். நான் தமிழகம் வரும்போது நிச்சயம் அவரைச் சந்திப்பேனென்று ஆறுதலாக அப்போதெல்லாம் பதில் அளிப்பதுண்டு. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை. அது என் துரதிருஷ்ட்டம்.

அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த குணங்களிலொன்று: இறுதி வரையில் தன் நிலை தளராமல், தனக்குச் சரியென்று பட்டதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் அந்தப்பண்புதான். நிறைய வாசித்தார். நிறையவே சிந்தித்தார். கலை, இலக்கியத்துறையில் அவர் தனக்கென்றோரிடத்தை ஏற்படுத்தி விட்டு அமரராகி விட்டார். அவர் இருந்தபோதே அவரைக்கெளரவிக்கும் முகமாக எழுத்தாளர்கள் திலிப்குமார், பா.அகிலன் போன்றவர்கள் 'வெங்கட் சாமிநாதன் வாதங்களும், விவாதங்களும்' என்னும் அரியதொரு தொகுப்பு நூலினை வெளியிட்டார்கள். மிகவும் பாராட்டுதற்குரிய பணி அது. அதில் என் கட்டுரையொன்றும் அடங்கியுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியைத் தருவது. அதன் மூலம் அவரைச் சந்தித்திருக்காவிட்டாலும், சந்தித்துப் பழகியதோர் உணர்வே எனக்கு எப்பொழுதுமுண்டு.

சிங்கள மொழியில் எனது (வ.ந.கிரிதரன்) 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு'

இன்று 'அகாசா மீடியா வேர்க்ஸ்' மூலம் பல சிங்கள நூல்கள் இலங்கையில் வெளியாகின்றன. அவற்றிலொன்று எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு. சிங்கள மொழிபெயர்ப்பைச் செய்திருப்பவர் எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த (G.G.Sarath Ananda). இந்நூலுக்கான பதிப்பகத்தைத் தேர்வு செய்து நூல் வெளிவரக் காரணமாகவிருந்தவர் எழுத்தாளர் காத்யானா அமரசிங்க (Kathyana Amarasinghe) . இவர்களுக்கும், இந்நூலினைச் சிறப்பாக வெளியிட்டிருக்கும் 'அகாசா மீடியா வேர்க்ஸ்' (AHASA Media Works) உரிமையாளர் அசங்க சாயக்கார ( Asanka Sayakkara) அவர்களுக்கும் நன்றி. நூல் வெளியீடு நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற என் மனம் நிறைந்த வாழ்த்துகளை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். 

இணையத்தில் வெளியான இந்நூலினை வாசித்து மொழி பெயர்க்க ஆர்வம் கொண்டு என்னிடம் அதற்கான அனுமதியைக்கேட்ட ஜி.ஜி.சரத் ஆனந்தவின் ஆர்வமும், மொழிபெயர்ப்பிலுள்ள ஈடுபாடுமே இந்நூல் வெளிவருவதற்கு முக்கிய காரணம். அவர் எனது சிறுகதைகள் இரண்டினையும் ஏற்கனவே சிங்கள் மொழிக்கு மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காத்யான அமரசிங்கவும் எனது கவிதைகளிரண்டினைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்தவர் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.
இதனைச் சாத்தியமாக்கிய இணையத்துக்கும் எனது நன்றி.

இத்தருணத்தில் இதன் தமிழ் நூலினைத் தம் செலவில் சிறப்பாக வெளியிட்ட ஸ்நேகா (தமிழ்நாடு) பதிப்பகத்தாருக்கும் எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஶ்ரீலங்கா சஞ்சிகையின் கலை, இலக்கியப்பங்களிப்பும், அ.ந.கந்தசாமியின் படைப்புகளும்! - வ.ந.கிரிதரன் -


'ஸ்ரீலங்கா' சஞ்சிகை இலங்கைத் தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தமிழ்ச் சஞ்சிகை. ஆகஸ்ட் 1950 - டிசம்பர் 1963 காலகட்ட இதழ்கள் பல (தொடர்ச்சியாக அல்ல) நூலகம் இணையத்தளத்திலுள்ளன. இவற்றைப் பார்த்தபோதுதான் ஈழத்தமிழ்இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பினைச் செய்த சஞ்சிகைகளிலொன்றாக இச்சஞ்சிகையையும் காண முடிந்தது.

அறிஞர் அ.ந.கந்தசாமி, திரு.குல சபாநாதன் போன்றவர்கள் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணி புரிந்த காலகட்டத்தில் , அவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த சஞ்சிகை இச்சஞ்சிகையென்று அறிந்திருக்கின்றேன்.ஆனால் சஞ்சிகையின் முன் அட்டையில் அரசாங்க சமாச்சாரப் பகுதியால் வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசிப்பக்கத்தின் அடியில் தகவற் பகுதியினருக்காக இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பெற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றிய விபரமெதனையும் காணவில்லை. ஆனால் இச்சஞ்சிகையின் உருவாக்கத்தில் அறிஞர் அ.ந.கந்தசாமி, திரு.குல சபாநாதன் ஆகியோரின் பங்களிப்பினை சஞ்சிகையில் வெளியான படைப்புகள் வாயிலாக அறிய முடிகின்றது. இருவருமே இச்சஞ்சிகை வெளிவந்த காலகட்டத்தில் இலங்கைத் தகவற் திணைக்களத்தில் பணி புரிந்து கொண்டிருந்ததாலும், இருவருமே நாடறிந்த எழுத்தாளர்கள் என்பதாலும் 'ஶ்ரீலங்கா' சஞ்சிகையின் ஆசிரிய பீடத்தினை அலங்கரித்தவர்களாக அறிந்த தகவல் உண்மையென்றே தோன்றுகின்றது.

 இலங்கைத் தகவற் திணைக்கள வெளியீடு என்பதால் அரசு பற்றிய , அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய சஞ்சிகையாக இச்சஞ்சிகை விளங்கினாலும், ஈழத்தமிழ்க் கலை, இலக்கியத்துக்குக் காத்திரமான படைப்புகளையும் கூடவே வெளியிட்டுள்ளதால் , ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் முக்கிய சஞ்சிகைகளிலொன்றாக இச்சஞ்சிகை விளங்குகின்றது எனலாம்.

மனவெளிக்கலையாற்றுக் குழுவினரின் இப்சனின் ஒரு பொம்மை வீடு ! - வ.ந.கிரிதரன் -

நேற்று (30.6.2018) நண்பர் தேவகாந்தனுடன் மனவெளி அமைப்பின் பத்தொன்பதாவது அரங்காடல் நாடக நிகழ்வுக்கு இப்சனின் 'ஒரு பொம்மை வீடு ' பார்க்கச்சென்றிருந்தேன். நண்பகற் காட்சி, மாலைக் காட்சி என்று இரு காட்சிகள் அரங்கு நிறைந்த மக்கள் ஆதரவுடன் நடைபெற்றன. மனவெளி கலையாற்றுக் குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.

ஏற்கனவே பலமுறை படித்திருந்த நாடகமாதலால் நாடகம் பற்றிய புரிதலுடனேயே சென்றிருந்தேன். நாடகம் எவ்விதம் மேடையேற்றப்படுகின்றது, எவ்விதம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது, எவ்விதம் இயக்கப்பட்டிருக்கின்றது, எவ்விதம் மேடை அலங்காரங்கள், ஒலி, ஒளி அமைப்புகள் இருக்கப்போகின்றன , எவ்விதம் நடிகர்களின் நடிப்பு இருக்கப்போகின்றது எனப் பல்வகை எதிர்பார்ப்புகளுடன் சென்றிருந்தேன். எதிர்பார்ப்புகள் எவையும் பொய்த்துப்போய் விடவில்லை. நாடகத்தைச் சிறப்பாக மேடையேற்றியிருந்தார்கள். அதற்காக மனவெளி அமைப்புக்கும், மொழிபெயர்த்து இயக்கிய பி.விக்னேஸ்வரனுக்கும் மற்றும் நாடகத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறையே அரசி விக்னேஸ்வரன், ஜெயப்பிரகாஷ் ஜெகவன் , எஸ்.ரி. செந்தில்நாதன் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஏனைய பாத்திரங்களான டாக்டர் ராங், திருமதி லிண்டே, அன்னா மரியா மற்றும் ஹெலெனா ஆகிய பாத்திரங்களில் குரும்பச்சிட்டி ஆர்.ராசரத்தினம், பவானி சத்தியசீலன், மாலினி பரராஜசிங்கம், கனித்தா உதயகுமார் ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர்களில் கனித்தா உதயகுமார் தவிர ஏனையோர் ஏற்கனவே நாடகத்துறையில் அனுபவம் பெற்ற தேர்ந்த நடிகர்கள். பல்கலைக்கழக மாணவியான கனித்தா உதயகுமார் அண்மையிலேயே தன்னை இத்துறையில் ஈடுபடுத்திக்கொண்டவர். நடிப்பில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்.

'ஒரு பொம்மை வீடு' இன்றைய பெண்ணியச் சிந்தனைகளுக்கெல்லாம் முன்னோடியான நாடகம் நாடகத்தின் முக்கிய ஆளுமை நோரா. வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட சிறப்பான பாத்திரம். குழந்தைகளுடன் தன் அன்புக் கணவனுடன் வாழுமொரு பெண் , அவனது நலன்களுக்காகவே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அவனுக்கு உண்மை கூறாது மறைத்த பெண், அவனுடன் வாழ்ந்த காலகட்டத்தில் , அதற்கு முற்பட்ட காலத்தில் தன் தந்தையுடன் வாழ்ந்த காலகட்டங்களிலெல்லாம் தான் ஒரு பொம்மையாகவே தான் வாழ்ந்த சமுதாயத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததை உணர்ந்து , தன் சுயமரியாதையுடன், சுய சிந்தனையுடன், சுதந்திரமாகத் தன்மீது பிணைக்கப்பட்டிருந்த தளைகளையெல்லாம் உடைத்து (திருமண பந்தமுட்பட) வாழப்புறப்படுவதுதான் நாடகத்தின் மையக்கரு.

நாடகத்தின் இடைவேளையில் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தபோது எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரன் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். அது என் கவனத்தை ஈர்த்தது. சீனாவில் ஒரு காலகட்டத்தில் பெண்ணுரிமைக்காக நோராயிசம் என்றொரு சிந்தனைப்போக்கே உருவானதாம் மேற்படி இப்சனின் நோரா பாத்திரத்தால் என்று அவர் குறிப்பிட்டதையே குறிப்பிட்டேன். இப்பாத்திரமே நாடகம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ள பாத்திரம். இதனைச் செய்வதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அதனை அரசி விக்னேஸ்வரன் மிகவும் சிறப்பாக, அநாயசமாகச் செய்திருந்தார். சுமார் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற நாடகத்தில் ஒரு கட்டத்தில் கூடத் தளர்ச்சியேதுமற்ற நிலையில், நாடக வசனங்களை நினைவில் வைத்துச் சிறப்பாகத் தன் நடிப்புத்திறமையினால் நாடகத்தைக் கண்டு களிக்க வந்திருந்த அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருந்தார் அவர். அதற்காக அவருக்குப் பாராட்டுகள். இந்நாடகத்தின் வெற்றிக்கு அவரது நடிப்பு முக்கியமானதொரு காரணம். நண்பர் எழுத்தாளர் தேவகாந்தனும் அரசி விக்னேஸ்வரனின் நடிப்பை விதந்து தன் கருத்துகளை நாடகத்தின் முடிவிலான அவருடனான உரையாடலின்போது குறிப்பிட்டார்.

ஏனைய பாத்திரங்களில் அவரது கணவராக நடித்திருந்த ஜெயப்பிரகாஷ் ஜெகவன் மற்றும் அவரது கணவரின் உடல்நலப்பயணச் செலவுகளுக்காக, டோராவின் கள்ளக்கையெழுத்துடன் பணம் கொடுத்து உதவியவராக நடித்திருக்கும் எஸ்.ரி. செந்தில்நாதன் ஆகியோருக்கு நாடகத்தில் தம் நடிப்பாற்றலை வெளிப்படுத்த நிறைய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவற்றை அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்தியிருந்தார்கள்.

இவர்களுடன் மேடையின் பின்னணியிலிருந்து உழைத்த கலைஞர்கள் அனைவரும் (இசை, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, ஒளி, ஒலி , மேடையமைப்பு போன்றவற்றுக்காக உழைத்தவர்கள்) பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பல வருடங்களுக்குப் பின்னர் நல்லதொரு நாடக நிகழ்வைக் கண்டு களித்த திருப்தியான உணர்வே நாடகத்தின் முடிவிலேற்பட்டது. அதுவே நாடகத்தின் வெற்றியும் கூட.

ngiri2704@rogers.com

நன்றி: பதிவுகள்.காம்

Saturday, May 4, 2019

எனது , வ.ந.கிரிதரனின், மூன்று கவிதைகள் பற்றி...

எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். அத்தொகுப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. அது பற்றி அறியத் தந்த மாலன் " அன்புள்ள கிரிதரன், தேர் ஒருவழியாக புறப்பட்டுவிட்டது. உங்களது கவிதை இடம்பெற்றுள்ள அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு-புவி எங்கும் தமிழ்க் கவிதை- சாகித்திய அகாதெமியின் வெளியீடாக வந்துள்ளது. 22 நாடுகளில் வசிக்கும்  தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது  தமிழ்க் கவிதைகளின் விரிவிற்கும் ஆழத்திற்கும் சான்றளிக்கும் ஓர் அரிய நூல்" என்றும் தனது மின்னஞ்சலில் குறிப்ப்ட்டுள்ளார். முதலில் இத்தொகுப்பு நூலிலுள்ள கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளதற்காக அவருக்கு நன்றி. அத்தொகுப்பினை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினை மாலனின் கடிதம் ஏற்படுத்துகின்றது.

மேற்படி தொகுப்பில் எனது கவிதையொன்றும் இடம் பெற்றுள்ளது. "நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'" என்பது அக்கவிதையின் தலைப்பு, அக்கவிதையினையே கீழே காண்கின்றீர்கள்:

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்த சமகால இருமொழிக்கவிதைத்தொகுப்பான 'Fleeting Infinity (VOL 1) ((கணநேர எல்லையின்மை) அநாமிகா அல்ஃபபெட்ஸ் (Anaaamikaa alphabets) பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. அத்தொகுப்பிலுள்ள எனது கவிதையான "கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி."

சிறப்பான தொகுதியொன்றினைத்தந்ததற்காகவும், இதற்கான அவரது கடுமையான உழைப்பிற்காகவும் லதா ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கூடவே இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

தமிழில் வெளியான கவிதைத்தொகுதிகளில் முக்கியமானதோர் கவிதைத்தொகுதியாக இக்கவிதைத்தொகுதி விளங்கும் என்பதை இத்தொகுதியின் கவிதைகள் புலப்படுத்துகின்றன.

இத்தொகுப்பிலுள்ள எனது கவிதையினையே இங்கு காண்கின்றீர்கள்.

இலங்கைத் தமிழ் இலக்கியமும் , 'இன்ஸான்' பத்திரிகையும்.


எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் 'இன்ஸான்' பத்திரிகை பற்றிப்பின்வருமாறு பதிவு செய்திருந்தார்:

"1965-1970 காலப் பகுதியில் ' இன்ஸான்'( மனிதன்) என்ற வாராந்தரி பத்திரிகை ஏ.ஏ.லத்தீஃபை ஆசிரியராக கொண்டு வெளியாகியது. முஸ்லிம் வாழ்வியலை,சமூகப் பார்வையுடன் இலக்கியமாக்கும் வாய்ப்பை வழங்கி வழிகாட்டியது. இதனூடாக வெளிப்பட்ட சிறுகதையாளர்களில குறிப்பிடத்தக்க ஒருவர் எம்.பி.எம. நிஸ்வான். ஐம்பது ஆண்டுகள் கழிந்தும் ஒரு பத்தோ இருபதோ இன்ஸான் கதைகளை தொகுத்து வெளியிடும் முயற்சி கைகூடவில்லை.இன்ஸானோடு சம்பந்தப்பட்ட ஒருசிலரே இன்று எம்மத்தியில் உள்ளனர்.அவர்கள் சந்திக்கும்போது பேசிக் கலைவதைத்தவிர வேறொன்றும் ஆகவில்லை. முஸ்லிம்களின் இலக்கியம் என்பது அனாதை இலக்கியமே என்பதற்கு இதைத்தவிர வேறென்ன அத்தாட்சி வேண்டும்? பாணந்துறை எம்.பி.எம்.நிஸ்வானின் இரு நூல்களின் வெளியீடு கடந்த 07.04.2018ல் உம்முல் மலீஹா மண்டபத்தில் நடைபெற்றபோது கருத்துரை வழங்குகையில் மேற்படி விடயங்களை எடுத்துக் கூறினேன்."

எழுத்தாளர் அந்தனி ஜீவா 'தினகரன்' (இலங்கை) பத்திரிகையில் எழுத்தாளர்ர் அ.ந.கந்தசாமி பற்றி எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடரில் பின்வருமாறு கூறுவார்:

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்து, மொழிபெயர்த்து அதனைத் தனது 'அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்' பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ள இருமொழிக் கவிதைத்தொகுப்பான 'Fleeting Infinity ( கணநேர எல்லையின்மை )

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்து, மொழிபெயர்த்து அதனைத் தனது 'அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்' பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ள இருமொழிக் கவிதைத்தொகுப்பான 'Fleeting Infinity ( கணநேர எல்லையின்மை ) நேற்று என்னை வந்தடைந்தது. உடனடியாகவே இரு பிரதிகளை அத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிஞர் ராஜாஜி ராஜகோபாலனிடம் சேர்ப்பித்து விட்டேன்.

தொகுப்பு சிறப்பாக வந்துள்ளதற்காக லதா ராமகிருஷ்ணன் பெருமைப்படலாம். தனியொருவராக அவர் மிகவும் அநாயாசமாக இதனைச் சாதித்திருக்கின்றார். அவரது கடும் உழைப்புக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

இத்தொகுப்பு சிறப்பாக வந்திருப்பதற்கு முக்கிய காரணங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம்: பொதுவாக இலக்கிய ஆளுமைகள் தம் விருப்பு, வெறுப்புகளுக்கேற்பச் சிலரின் கவிதைகளையே தேர்ந்தெடுத்து அக்கவிஞர்களின் கவிதைகளையே மொழிபெயர்த்துத் தொகுத்து வெளியிடுவார்கள். ஆனால் அவ்விதமில்லாது கவிதைகளை லதா ராமகிருஷ்ணன் தன் வாசிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துள்ளார்.

நீண்ட தேடுதல் முடிவுக்கு வந்தது: அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் முப்பது கிடைத்தது!


அறிஞர் அ.ந.கந்தசாமியின் பத்திரிகையில் வெளியான ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. தொடராகத் தினகரனில் வெளியானபோது வாசகர்களின் அமோக ஆதரவினைப்பெற்ற நாவலிது. அ.ந.க.வின் துள்ளு தமிழ் நடையில் நாவலை வாசிப்பதே பேரின்பம்.  அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் வானொலியில் அவரது 'தணியாத தாக'த்தைத் தொடர்ந்து, அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலையும் வானொலி நாடகமாக ஒலிபரப்பினார். இந்நாவல் தவிர அ.ந.க அவர்கள் தன் இறுதிக் காலத்தில் இன்னுமொரு நாவலையும் , மலையக மக்களை மையமாக வைத்துக் 'களனி வெள்ளம்' என்னும் பெயரில் எழுதியதாகவும், அந்நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 83கலவரத்தில் செ.க.வின் கொழும்பு இருப்பிடம் எரியுண்டபோது அந்நாவலும் எரியுண்டு போனதாகவும் அறிகின்றேன்.

இவ்விதமானதொரு சூழலில் 'மனக்கண்' நாவலைத் தேடிக்கொண்டிருந்தபோது செ.கணேசலிங்கன் அவர்கள் கமலினி செல்வராசனிடம் இருக்கும் என்றும் , அவரது முகவரியைத்தந்து அவருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியிருந்தார். அவருடன் தொடர்பு கொண்டபோது அவர் அதைத்தருவதற்கு இலட்சங்களில் பணம் கேட்டார். எனவே அம்முயற்சியைக் கை விட வேண்டியதாயிற்று. பின்னர் எழுத்தாளர்கள் பலருக்கு எழுதிப்பார்த்தேன். தினகரன் ஆசிரியருக்கும் எழுதிப்பார்த்தேன். எதுவுமே கிடைக்கவில்லை. பின்னர் இலங்கைச்சுவடிகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அப்போது  அதன் இயக்குநராகவிருந்த விமலரட்னவுக்குக் கடிதமொன்று எழுதினேன். அதில் மனக்கண் நாவல் வெளியான காலகட்டத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கான பதிலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று எழுதினேன். என்ன ஆச்சரியம்.. அவரிடமிருந்து பதிற் கடிதம் வந்திருந்தது. அதில் மனக்கண் நாவல் வெளியான தினகரன் பிரதிகள் இருப்பதாகவும், அதனை அனுப்புவதாயின் போட்டோப்பிரதிகள் மற்றும் தேடுதலுக்கான கட்டணத்தை அனுப்பும்படி கூறியிருந்தார். கட்டணம் ஐம்பது கனேடிய டொலர்களுக்கும் குறைவானது. அனுப்பினேன். அவர் நாவலை 'லீகல் சைஸ்' அளவில் அனுப்பியிருந்தார். ஆனால் சுவடிகள் திணைக்களத்திடம் அத்தியாயம் 30 இருக்கவில்லை.

கனடாவில் வெளியான முதலாவது நாவல் , கவிதைத்தொகுப்புகள் பற்றி...

அண்மையில் 'டொராண்டோ'வில் ஊடறு மற்றும் தேடகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையகா நிகழ்வினை நெறிப்படுத்திய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் சமூகச் செய...

பிரபலமான பதிவுகள்