![]() |
- எழுத்தாளர் தேவகாந்தன் - |
ஒரு காலத்தில் ஊர் என்றால் அங்கு நிலவிய சமூகப் பிணைப்புகள் நினைவுக்கு வரும், ஊர் பற்றிய நினைவுகளுடன் யுத்தம் முடிந்தபின் செல்லும் ஒருவரின் ஊர் பற்றிய மனச்சித்திரம் எவ்விதம் சீர்குலைகிறது என்பதை விபரிக்கும் தேவகாந்தனின் சிறுகதையான ஊர் நல்லதொரு சிறுகதை. நீண்ட சிறுகதையல்ல. ஆனால் கச்சிதமாக எழுதப்பட்ட சிறுகதை. போர்ச்சூழல் புதியவர்களை ஊருக்குப் புலம்பெயர வைத்திருக்கின்றது. அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளைக்கூட கவனிக்காத ஊர் அவருக்கு ஊர்பற்றிய மனச்சித்திரத்தைச் சிதைக்கப் போதுமானது. இங்கு இருவிதமான புலம்பெயர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஒன்று புகலிடம் நாடிய வெளிநாட்டுப் புலம்பெயர்வு. இன்னுமொன்று உள்நாட்டுப் புலம்பெயர்வு. ஒரு காலத்தில் ஊரில் சமூக வாழ்வு சிறப்பாக இருந்தது. ஒருவருக்கொன்றென்றால் அது எல்லோருக்கும் தெரியும். ஓடிச்சென்று உதவுவார்கள். அதை ஊர் திரும்பும் அவரால் காண முடியவில்லை. யுத்தம் அதனைச் சிதைத்து விட்டிருந்தது. இதனை விபரிக்கும் கதைதான் 'ஊர்'.
சதுரக்கள்ளி சிறுகதையும் புலம்பெயர் தமிழர் ஓருவரின் ஊர் திரும்பலையும், அச்சமயம் அடையாளங்கள் இழந்து இருக்கும் அவரது வீட்டையும், அயலவரான பெண் ஒருத்தியுடன் ஏற்பட்ட பிணக்கு பற்றியும், அதன் விளைவாக குடும்பங்கள் பிரிபட்டதையும், வசியம் செய்து விட்டாலுமென்ற பயத்தால் அவரின் தந்தையார் வேலிக்கருகில் வளர்த்த சதுரக்கள்ளி பற்றியும், தந்தையின் இறப்பு பற்றியும், விபரிக்கும். வீட்டின் ஜன்னல், நிலை பாகங்களையெல்லாம் திருடிச் சென்றுவிட்டார்கள். வீடு சென்றவர் அமைதி திரும்பட்டும் வீட்டை என்ன செய்வது என்பது பற்றிச் சிந்திக்கலாம் என்று திரும்புகின்றார்.