வணக்கம் நண்பர்களே! இணையக் க் காப்பகத்தில் (Archive.org) என்னுடைய பல படைப்புகள் , பதிவுகள் இணைய இதழில் வெளியான படைப்புகளின் தொகுப்புகள் உட்பட மேலும் பல படைப்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Saturday, May 31, 2025
"இணையக் காப்பக'த்தில் எனது ஆக்கங்கள்!
வணக்கம் நண்பர்களே! இணையக் க் காப்பகத்தில் (Archive.org) என்னுடைய பல படைப்புகள் , பதிவுகள் இணைய இதழில் வெளியான படைப்புகளின் தொகுப்புகள் உட்பட மேலும் பல படைப்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
Friday, May 30, 2025
பிரவாதம்: எஸ்.வி.ராஜதுரையின் 'கூகியும் ஆபிரிக்க இலக்கியமும்'
பேராசிரியர் எம்.ஏ. நுஃமானை ஆசிரியராகவும், என்.சண்முகரத்தினம், சித்திரலேகா மெளனகுரு, செல்வி.திருச்சந்திரன் ஆகியோர் உள்ளடங்கிய ஆசிரியர் குழுவைக்கொண்டதாகவும் வெளியான சஞ்சிகையே 'பிரவாதம்'. அரையாண்டுச் சஞ்சிகையான இதன் தொகுதி 3 ஜனவரி - ஜூன் 2003இல் வெளிவந்தது. பிரவாதம் சமூக, விஞ்ஞானிகள் சங்கத்தால் வெளியிடப்பட்ட சஞ்சிகை.
மேற்படி தொகுதி 3 கூகி வா தியாங்கோ சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. சிறப்பிதழ் என்று பெயரிட்டிருக்காவிட்டாலும் அவ்விதமே அவரைப்பற்றிய கட்டுரைகள், அவரது எழுத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. கூகி வா தியாங்கோ பற்றியும், அவரது காலனியாதிக்கம், நவீன காலனியாதிக்கம் ஆகியவற்றுக்கான எதிர்ப்பிலக்கியம் பற்றியும், நவீன காலனியாதிக்கம் எவ்விதம் ஆபிரிக்காவைக் கூறு போட்டுத் தன் நலன்களைப் பேணுகின்றது என்பது பற்றியும், காலனியாதிக்க ஆதிக்கத்தின் மொழிகள் எவ்விதம் அடிமைப்படுத்தப்படும் நாடுகளின் மீதான ஆதிக்கத்தில் பங்காற்றுகின்றன என்பது பற்றியும் நல்லதோர் அறிமுகத்தைத் தரும் சிறப்பிதழாக மேற்படி தொகுதி 3 இதழ் வெளிவந்துள்ளது.
இக்கட்டுரையையும், கூகி வா தியாங்கோவின் எழுத்துகளையும் உள்ளடக்கிய மேற்படி இதழை வாசிக்க - https://noolaham.net/project/81/8021/8021.pdf
அஞ்சலி: எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்தார்.
எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்த செய்தியினை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். 'அழாதே, குழந்தாய்!' (Weep not Child), 'இடையிலுள்ள நதி' (The River Between) , 'ஒரு கோதுமைத் தானியமணி' ( a Grain of Wheat) , 'இரத்த இதழ்கள்" ( Petals of Blood), 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' (Devil on the Cross ) ஆகியவை இவரது முக்கியமான நாவல்கள்.
Thursday, May 29, 2025
சிறந்த குணசித்திர நடிகரான நடிகர் ராஜேஷ் மறைந்தார்!
நடிகர் ராஜேஷ் மறைந்த தகவலினை இணையம் தாங்கி வந்து அதிர்ச்சியைத் தந்தது. அண்மையில்தான் தற்செயலாக யு டியூப்பில் அவரது நேர்காணலொன்றைப் பார்த்தேன். அதில் அவர் நடிகையர் திலகம் சாவித்திரியின் இறுதி நாட்கள், அவரது 'ரியல் எஸ்டேட்' வர்த்தகம் மற்றும் அவர் கே.கே. நகரில் வாங்கிய வீட்டில் நடந்த திரைப்படங்களின் படப்பிடிப்புகள் போன்ற விபரங்களை விபரித்திருந்தார். முன்னாள் தமிழக முதல்வரும், நடிகருமான எம்ஜிஆர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர். கார்ல் மார்க்ஸ் இவருக்குப் பிடித்த ஆளுமைகளில் ஒருவர். இங்கிலாந்து சென்று அவரது சமாதியைப் பார்த்து வந்தவர். எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் ஜானகி அம்மையாரை ஆதரித்தவர்.
சின்னத்திரை,பெரிய திரை என்று தன் கலையுலகப் பங்களிப்பை வழங்கியவர் நடிகர் ராஜேஷ். சிறந்த குணச்சித்திர நடிகர். கன்னிப்பருவத்திலே, சிறை, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை ஆகியவை இவரை நினைத்ததுமே நினைவுக்கு வரும் திரைப்படங்கள். 'அச்சமில்லை, அச்சமில்லை' திரைப்படத்தில் உலகநாதன் என்னும் அரசியல்வாதியாக நடித்திருப்பார். மறக்க முடியாத பாத்திரம். கே.பாலச்சந்தரின் இயக்கத்திலும், அவரது குடும்பத்தினரின் 'கவிதாலயா' தயாரிப்பிலும் வெளியான 'அச்சமில்லை. அச்சமில்லை' திரைப்படம் சிறந்த தமிழ்ப்படத்துக்கான தேசிய விருதினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
Wednesday, May 28, 2025
புகழ்பெற்ற இலங்கை நடிகை மாலினி பொன்செகா மறைந்தார்!
இலங்கையின் புகழ்பெற்ற நடிகையான மாலினி பொன்செகாவின் மறைவுச் செய்தியைத்தாங்கி வந்தது முகநூல். ஆழ்ந்த இரங்கல்.
என்னைப் பொறுத்தவரையில் சிங்களத்திரையுலகின் புகழ் பெற்ற நடிகைகளில் முதலில் நினைவுக்கு வரும் நடிகை மாலினி பொன்செகா. நடிகர் காமினி பொன்செகா. நான் முதன் முதலில் அறிந்த சிங்களத்திரைப்பட நடிகர்கள் இவர்கள்தாம். அறிந்துகொண்ட அந்த நிகழ்வு என் வாழ்வின் அழியாத கோலங்களில் ஒன்றாக ஆழ்மனத்தில் படிந்து விட்டது. 'பாரா வலலு' என்னும் சிங்களத் திரைப்படம் அறுபதுகளின் இறுதியில் யாழ் மனோஹராவில் திரையிடப்பட்டபோது அதற்கு மிகுந்த விளம்பரம் பத்திரிகைகளில் கொடுக்கப்பட்டது.
Monday, May 26, 2025
எழுநா பதிப்பகம் வெளியிட்ட மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' (1621 - 1948)
நண்பரும்,கட்டடக்கலைஞருமான மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' (1621 - 1948) என்னும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு நூல் எழுநா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. இது பற்றிய நண்பரின் முகநூற் பதிவு கீழே:
"இலங்கையில் இந்நூலின் விலை 4,800 ரூபா. இலங்கைக்கு வெளியே தேவைப்படுவோர் பதிவிலுள்ள இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். எழுநாவின் மற்றுமொரு பதிப்பாக இ.மயூரநாதன் அவர்களின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' எனும் நூலினை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.
தொடர்புகளுக்கு : இல:63, சேர்.பொன்.இராமநாதன் வீதி, கலட்டிச் சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம். | +94 77 797 5029 "
![]() |
கட்டடக்கலைஞர் மயூரநாதன் |
வாழ்த்துகள் மயூரநாதனுக்கும், எழுநா பதிப்பகத்திற்கும்.
Sunday, May 25, 2025
'டொரோண்டோ'க் காட்சி!
'டொரொண்டோ' நகரை ஊடறுத்துச் செல்லும் உயர்த்தப்பட்ட , 'கார்டினர்' நெடுஞ்சாலையூடு செல்கையில் , என் மூத்த மகள் தமயந்தி எடுத்த புகைப்படம். இங்கு தெரிவது உலகப்புகழ் பெற்ற சி.என்.கோபுரம் (CN Tower). அதனருகில் தெரிவது ஆரம்பத்தில் 'ஸ்கை டோம்' (Sky Dome) என்றழைக்கப்பட்டு , தற்போது 'றோயர்ஸ் சென்டர்' (Rogers Centre) என்றழைக்கப்படும் , மூடித்திறக்கும் கூரை கொண்ட 'பேஸ்போல்' விளையாட்டரங்கு.
எடுக்கப்பட்ட இடத்திலிருந்து , கரு முகிற் பின்னணியில், மேல் நோக்கி விரியும் நகரத்துக் காட்சி எனக்குப் பிடித்திருந்தது. அதனால் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். 'டொரொண்டோ' நகரை ஊடறுத்துச் செல்லும் உயர்த்தப்பட்ட , 'கார்டினர்' நெடுஞ்சாலையூடு செல்கையில் , என் மூத்த மகள் எடுத்த புகைப்படம். இங்கு தெரிவது உலகப்புகழ் பெற்ற சி.என்.கோபுரம் (CN Tower). அதனருகில் தெரிவது ஆரம்பத்தில் 'ஸ்கை டோம்' (Sky Dome) என்றழைக்கப்பட்டு , தற்போது 'றோயர்ஸ் சென்டர்' (Rogers Centre) என்றழைக்கப்படும் , மூடித்திறக்கும் கூரை கொண்ட 'பேஸ்போல்' விளையாட்டரங்கு.
எடுக்கப்பட்ட இடத்திலிருந்து , கரு முகிற் பின்னணியில், மேல் நோக்கி விரியும் நகரத்துக் காட்சி எனக்குப் பிடித்திருந்தது. அதனால் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
அஞ்சலி: மறக்க முடியாத பேராசிரியர் நிமால் டி சில்வா!
பேராசிரியர் நிமால் டி சில்வா மறைந்த செய்தியினை என்னுடன் கட்டடக்கலை படித்த சக கட்டடக்கலை மாணவர்கள் அறியத்தந்திருந்தனர். ஆழ்ந்த இரங்கல். இவரை ஒரு விதத்தில் மறக்க முடியாது. அமைதியானவர். எப்போதும் மெல்லிய புன்னகையுடன் காணப்படுபவர். அன்பாக உரையாடுபவர். பாரம்பர்யக் கட்டடக்கலை என்னும் பாடத்தை எமக்குப் படிப்பித்தவர் இவர். நான் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வு நூலை எழுதுவதற்கு இவரும் ஒரு காரணம்.
இவர் றோலன்ட் சில்வா என்பவரின் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு என்னும் கட்டுரையை அறிமுகப்படுத்தியபோது அது என்னைப் பிரமிக்க வைத்தது. அநுராதபுர நகரம் பெளத்தர்களின் புனித நகர். இலங்கையின் ஆரம்ப ராஜதானிகளில் ஒன்று. பல புகழ்பெற்ற தாதுகோபங்களை உள்ளடக்கிய நகர். யாழ்தேவியில் கொழும்பு செல்லும் எவரும் அநுராதபுர நகரின் தாதுகோபங்களைக் காணாமல் செல்ல முடியாது. ரொலனட் டி சில்வாவின் ஆய்வின்படி பண்டைய அநுராதபுர நகரமானது நடுவில் சந்தையையும், நகரைச் சுற்றி வட்ட ஒழுங்கில் தாதுகோபங்களையும் கொண்டதாக விளங்கியது. என் கண் முன்னால் பண்டைய அநுராதபுர நகரம் விரிந்து பிரமிப்பைத்தந்தது.
பெளத்தர்களின் கட்டக்கலையில் வட்டம் முக்கிய பங்கினை ஆற்றுமொன்று. தாதுகோபங்கள் வட்ட வடிவமானவை. அது போல் நகரங்களின் நகர அமைப்பிலும் வட்ட வடிவம் ஆதிக்கம் செலுத்தியதை ரோரல்ன் சில்வாவின் அநுராதபுர நகர் அமைப்பு பற்றிய கட்டுரை புலப்படுத்தும். மாறாக, இந்துக்கள் கட்டடக்கலையில் சதுர (அல்லது செவ்வகம்) வடிவம் ஆதிக்கம் செலுததுவதை அவதானிக்கலாம்.
என் எழுத்தார்வத்தை ஊக்குவித்தவர் ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கம்! - வ.ந.கிரிதரன் -
- இன்று பாரிஸில் ஊடகவியலாளர் எஸ்.கே.ராஜென் ஏற்பாட்டில் நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் 'ஈழநாடு' எஸ்.கே. காசிலிங்கம் அவர்களின் அமுத விழாவினையொட்டி வெளியான மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை. -
என்னால் ஒருபோதுமே ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கத்தை மறக்க முடியாது. ஒரு வகையில் என் எழுத்துலக வாழ்க்கைக்குச் சுழி போட்டது ஈழநாடு மாணவர் மலர் என்றால், அதற்குக் காரணமானவர் அப்போது மாணவர் மலருக்குப் பொறுப்பாக் இருந்த 'காசி' அவர்கள். அண்மைக்காலம் வரையில் அவரைக் காசி என்னும் பெயரிலேயே அறிந்து வைத்திருந்தேன். எஸ்.கே.காசிலிங்கம்தான் அவர் என்பதை அறிந்திருக்கவில்லை.
Thursday, May 22, 2025
இதய மருத்துவர் இராமசாமியின் ஆரோக்கியமான ஆலோசனைகள்!
இது என் மருத்துவ ஆலோசனை அல்ல. என் கருத்து மட்டுமே.
மருத்துவர் இராமசாமியின் ((Dr. ramasamy) அறிவுரைகளை உள்ளடக்கிய காணொளிகளை நான் பார்ப்பவன். இவரது இதய நோய் சம்பந்தமான அறிவுரைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. மிகவும் ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்கும் மருத்துவர்களில் ஒருவராக இவரை நான் அடையாளம் காண்கின்றேன்.
இருதய மருத்துவர்கள் பலர் கண்ணை மூடிக்கொண்டு பைபாஸ் சர்ஜரி, ஸ்டெண்ட் பொருத்துவதைப் பரிந்துரை செய்கின்றார்கள். இதயம் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு, இரத்த ஓட்டம் நன்கு ஓடும் நிலையிலுள்ளவர்களுக்கும் மருத்துவர்கள் பலர் ஹார்ட் அட்டாக் வருவதைத் தடுப்பதற்காக பை பாஸ், ஸ்டென்ட்டைப் பரிந்துரை செய்வது தவறானது என்பதை இக்காணொளி மூலம் அறிய முடிந்தது.
Saturday, May 17, 2025
அஞ்சலி: நாட்டியத்தாரகை 'குச்சுப்பிடி' ரங்கா விவேகானந்தன் ஆர்ஜண்டினாவில் மறைவு!
* புகைப்படம் - India Sublime Arts
நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன் அவ்ர்களின் மறைவை முகநூல் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல். எமக்கு பரதநாட்டியம் என்றால் நாட்டியப் பேரொளி பத்மினி நினைவுக்கு வருவார். வையந்திமாலா நினைவுக்கு வருவார். குமாரி கமலா நினைவுக்கு வருவார். பத்மா சுப்பிரமணியம் நினைவுக்கு வருவார். இவர்கள் எல்லாரும் அறுபதுகளில், எழுபதுகளில் நாடறிந்த நாட்டியத் தாரகைகள். இவர்களைப்போல் சிலரே இலங்கையில் அறியப்பட்டிருருந்தார்கள். அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் 'குச்சுப்பிடி' ரங்கா விவேகானந்தன். இவர் புகழ்பெற்ற நீச்சல் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் சகோதரி. இவரது சகோதரி கோகிலா வரதீஸ்வரன் கனடாவில் வசித்து வருகின்றார். ரங்கா விவேகானந்தன் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர்
Friday, May 16, 2025
வ.ந.கிரிதரனின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' - திருத்திய இரண்டாம் அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
வ.ந.கிரிதரனின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' - திருத்திய இரண்டாம் மின்னூற் பதிப்பு அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது. இதன் பிடிஃஃப் கோப்பினை இணையக் காப்பகத்திலிருந்து பதிவிறக்கி வாசிக்கலாம். இணைப்புகள் இறுதியில் தரப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதித்தலைநகர் நல்லூர். நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு எவ்வாறிருந்திருக்கும் என்பதை வெளிப்படுத்தும் ஆய்வு நூலிது. வரலாற்றுத் தகவல்கள், இடப்பெயர்கள் மற்றும் பழந்தமிழர்தம் கட்டடக்கலை, நகர அமைப்புக் கோட்பாடுகள் ஆகிவற்றின் அடிப்படையில் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு எவ்வாறிந்திருக்கும் என்பதை வெளிப்படுத்தும் ஆய்வு. இத்துறையில் வெளியாகியுள்ள முதனூல். இது மேலும் பல ஆய்வுகளுக்கு வழி வகுக்கும்.
இதன் முதற் பதிப்பு ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு), மங்கை பதிப்பகம் (கனடா) ஆகியவற்றின் வெளியீடாக 1996இல் வெளியானது. இதன் திருத்திய பதிப்பு தற்போது மின்னூலாக வெளிவருகின்றது. விரைவில் அச்சு வடிவிலும் வெளிவரவுள்ளது.
ஆய்வு: கோப்பாய்க் கோட்டை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -
- 'எழுநா' இணையத்தளத்தில் வெளியான கோப்பாய்க் கோட்டை பற்றிய எனது கட்டுரை. -
தமிழர்களின் இராஜதானியாக நல்லூர் விளங்கிய பதினாறாம் நூற்றாண்டில், இராஜதானியில் அமைந்திருந்த பிரதான கோட்டைக்குப் பாதுகாப்பாக மூன்று சிறு கோட்டைகள் கொழும்புத்துறை, பண்ணைத்துறை மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களில் அமைந்திருந்தன. இவற்றைப் பிரதான கோட்டையுடன் இணைக்கும் பிரதான வீதிகளில் காவலரண்களும் அமைக்கப்பட்டிருந்தன. கொழும்புத்துறை, பண்ணைத்துறை ஆகியவை துறைமுகங்களாகவும் விளங்கின. இவற்றில் கோப்பாயில் அமைந்திருந்த கோட்டை பற்றி விபரிக்கின்றது இந்தக் கட்டுரை.
எண்பதுகளில் இக்கட்டுரையாசிரியர் தனது ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ பற்றிய ஆய்வின்பொருட்டுப் பேராசிரியர் கா. இந்திரபாலாவை யாழ். பல்கலைக்கழகத்தில் சந்தித்தபோது அவர் , ’சுவாமி ஞானப்பிரகாசர் பல வருடங்களுக்கு முன்னரே கோப்பாய்க் கோட்டை பற்றியும், அது இருந்ததாகக் கருதப்படும் இடம் பற்றியுமொரு கட்டுரையொன்றினை ஆய்விதழொன்றில் எழுதியிருப்பதாகவும், அது யாழ். பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் இருப்பதாகவும் ’ குறிப்பிட்டிருந்தார். அந்தக் கட்டுரை ஜனவரி 1917 இல் வெளியான Ceylon Antiquary and Literary Register என்னும் வரலாற்றிதழின் 194, 195ஆம் பக்கங்களில் ‘Sankily’s Fortress at Kopay’ (சங்கிலியின் கோப்பாய்க் கோட்டை) என்னும் தலைப்பில் வெளியாகியிருந்த கட்டுரை. கோப்பாய்க் கோட்டை பற்றிய ஆய்வுகள் செய்யும் எவரும் அந்தக்கட்டுரையினைத் தவறவிட முடியாது. அத்துணை முக்கியத்துவம் மிக்க கட்டுரை அது. அதிலவர் போர்த்துகேய வரலாற்றாசிரியரான தியாகோ தோ கூத்தோ (Diego do Couto) கொன்ஸ்தந்தீனு த பிறகன்சா என்னும் போர்த்துகேயத் தளபதிக்கும், யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசன் செகராசசேகரனுக்கும் (இவனே முதலாம் சங்கிலி என்பது வரலாற்றாய்வாளர் கருத்து) நல்லூரில் நடந்த போரின் போது சங்கிலி கோப்பாயில் அமைந்திருந்த கோட்டைக்கு ஓடியது பற்றியும், அந்தக் கோட்டை பற்றியும் குறிப்பிட்டிருந்ததைச் சுவாமி ஞானப்பிரகாசர் பின்வருமாறு சுட்டிக்காட்டுவார்:
Thursday, May 15, 2025
நூலகத்தில் கிடைத்த புதையல்!
வழக்கம் போல் ஸ்கார்பரோ நூலகக் கிளைகளில் ஒன்றான , எக்ளின்டன் - கென்னடி சந்திக்கண்மையிலிருக்கும் கிளைக்கு நேற்று மாலை சென்றிருந்தேன். அங்கு நூல்கள் சிலவற்றை விற்பனைக்குப் வைத்திருந்தார்கள். அவற்றிலொன்று இந்த நூல். கற்பகம் பதிப்பக வெளியீடான (2023) பாரதியார் கவிதைகள். நூலக நூல்களில் ஒன்றல்ல. யாரோ ஒருவர் நூலகத்துக்கு இலவசமாக வழங்கியிருக்க வேண்டும். விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.
என் அபிமானக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் , ஆளுமைகளின் அல்லது அவர்கள் பற்றிய நூல்களை கண்டால் வாங்கி விடுவேன். இதனையும் அவ்விதம் வாங்கிக்கொண்டேன்.
பிழைத்த தென்னந்தோப்பு - மகாகவி பாரதியார்
வயலிடை யினிலே - செழுநீர்
மடுக் கரையினிலே
அயலெவரு மில்லை - தனியே
ஆறுதல் கொள்ள வந்தேன்.
காற்றடித்ததிலே - மரங்கள்
கணக்கிடத் தகுமோ?
நாற்றினைப் போலே - சிதறி
நாடெங்கும் வீழ்ந்தனவே!
Tuesday, May 13, 2025
யாழ்ப்பாணம் வேறு! நல்லூர் வேறு! மேலுமொரு முக்கிய வரலாற்றுத் தகவல்! - வ.ந.கிரிதரன் -
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு என்னும் எனது நூலின் இரண்டாவது அத்தியாயம் 'நல்லூரும் யாழ்ப்பாணமும்! இதில் நல்லூரும் ராஜதானியும் ஒன்று என்பார்கள் கலாநிதி சி.க.சிற்றம்பலம், சுவாமி ஞானப்பிரகாசர் என்பதைச் சுட்டிக்காட்டி, ஆனால் முதலியார் இராசநாயகம் , கலாநிதி க.செ.நடராசா ஆகியோர் அவை இரு வேறானவை என்பார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி, அவற்றில் தர்க்க நியாயங்களின் அடிப்படையில் முதலியார் இராசநாயகம் , கலாநிதி க.செ.நடராசா ஆகியோரின் கருத்தான நல்லூரும், யாழ்ப்பாணமும் வேறானவை என்னும் என் கருத்தை முன் வைத்திருப்பேன்.
நான் மீண்டும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வினை மீண்டும் கனடாவிலிருந்து எழுதிய காலகட்டடத்தில் என்னிடமும் இந்நூல் இருக்கவில்லை. ஏனயோர் எழுதிய குறிப்புகளின் அடிப்படையிலெயே என் தர்க்கத்தை முன் எடுத்திருந்தேன். அதன்படி முதலியார் செ.இராசநாயகம், கலாநிதி க.செ. நடராசா ஆகியோரின் கூற்றுக்களுக்கமையவும், அவர்களின் தர்க்கத்தின் அடிப்படையிலும், கைலையமாலையில் யாழ்ப்பாணம், நல்லூர் ஆகியவைத் தனித்தனியாகக் குறிப்பிடப்படுவதன் அடிப்படையிலும், நல்லூர் வேறு, யாழ்ப்பாணம் வேறு என்னும் முடிவுக்கு வந்திருந்தேன்.
Thursday, May 8, 2025
பயனுள்ள மருத்துவக் காணொளிகள் இரண்டு: இருதய மருத்துவ நிபுணர் எஸ். இராமசாமியுடனான (Dr. S Ramasamy) ஒரு நேர்காணல் மற்றும் Dr. Pradip Jamnadas, MD இன் காணொளி!
இக்காணொளியை அண்மையில் பார்த்தேன். இதில் இருதய மருத்துவ நிபுணர் இராமசாமி அவர்கள் மாரடைப்பு, அதற்கான சிகிச்சை முறைகளான 'ஆஞ்சியோ பிளாஸ்டி', 'ஸ்டென்ற்', 'பைபாஸ்' சத்திர சிகிச்சை , இரத்த அடைப்புகள் & அவற்றால் உருவாகும் இரத்தக் கட்டிகள் போன்றவற்றைப்பற்றித் தெளிவான விளக்கங்களைப் பகிர்ந்துகொள்கின்றார். இருதயத்த்யின் இரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவற்றுக்கான மருத்துவர்களின் ஆலோசனைகளை எவ்விதம் அணுக வேண்டும் என்பது பற்றிய அவரது கருத்துகளும் முக்கியமானவை. இப் பதிவு என் ஆலோசனை அல்ல. தகவலைப் பகிர்ந்து கொள்ளல் மட்டுமே. அவ்வப்போது என் கருத்துகளையும் கூறியிருக்கின்றேன். அவை மருத்துவ ஆலோசனைகள் அல்ல. என் கருத்துகள் மட்டுமே.
பொதுவாக இருதய மருத்துவர்கள் ஒருவருக்கு மூன்று இரத்தக் குழாய்களில் அடைப்புகள் 70% வீதத்திற்கு மேல் இருந்தால் , கண்ணை மூடிக்கொண்டு பைபாஸ் சத்திரசிகிச்சை க்குப் பரிந்துரை செய்வார்கள். இல்லாவிட்டால் ஆஞ்சியோபிளாஸ்டிக் முறை மூலம் ஸ்டென்ற் வைப்பதற்குப் பரிந்துரை செய்வார்கள்.
Wednesday, May 7, 2025
தனித்து வாழும் என் பாட்டி! - வ.ந.கிரிதரன் -
பாட்டியின் இல்லம் நீ!
இந்த இல்லத்திலிருந்துதான்
என் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
அவள் எதற்காக அங்கிருந்து
வடை சுட்டுக்கொண்டிருக்கின்றாள்
என்று அம்மாவைக் கேட்டேன்.
அதற்கு அம்மா சொன்னாள்:
'அவள் முன்பெல்லாம் இங்கிருந்துதான்
வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
காகங்களின் தொல்லை அதிகமாகி விட்டதால்
அங்கிருந்து சுடுகின்றாள். இப்போது
அவளுக்குக் காகங்களின் தொல்லை
இல்லையல்லவா கண்ணே!'
அம்மா சொன்னதில் உள்ள நியாயத்தை
அப்போது நானுணர்ந்தேன்.
தர்க்கரீதியாகவும் அது சரியாகத்தானிருந்தது.
புத்திசாலிப் பாட்டி என்றேன்.
'உன்னைப்போல் ' என்றாள் அம்மா.
எனக்கு அது மகிழ்ச்சியைத் தந்தது.
என் செல்ல அம்மா என்று கொஞ்சினேன்.
என் அம்மாவுக்கோ கொள்ளை மகிழ்ச்சி.
அப்பொழுதெல்லாம் நான் நினைத்துக்கொள்வேன்
அங்கிருந்த பாட்டியின் தனிமையைப் பற்றி.
பாட்டிக்குத் துணையாக நானும் அங்கு செல்வேன்.
பாட்டியின் கதை கேட்டு நானும் அங்கு தூங்குவேன்.
இவ்விதமெல்லாம் அப்போது நான் எண்ணிக்கொள்வேன்.
Monday, May 5, 2025
கவிதை: குருமண்காடு! - வ.ந.கிரிதரன் -
* ஓவியம் - AI
நான் நினைவில் வைத்திருப்பது இன்றுள்ள
குருமண்காடு அல்ல.
அது ஒரு கனவுலகம் போல்தான்
இப்போது தோன்றுகின்றது.
உண்மையில் அது இருந்ததா என்றும்
சில வேளைகளில் நான் ஐயுறுகின்றேன்.
ஆனால் அவ்விதமான சந்தேகங்களுக்கான
தேவை இல்லையென்பதையும் கூடவே
நான் உணர்கின்றேன்.
அது இருந்ததா அல்லது இருக்கவில்லையா
என்பது எனக்கு முக்கியமல்ல.
அது பற்றிய நினைவுகள் இன்றும்
என் உணர்வுகளில் விரவிக்கிடக்கின்றன.
அவை முக்கியமானவை.
மாபெரும் டைனோசர்கள் ஒரு காலத்தில்
இப்புவியுலகை ஆட்சி செய்தன அல்லவா.
அவற்றை நாம் பார்த்ததில்லை.
பார்க்கப்போவதுமில்லை அல்லவா.
ஆனால் அவற்றின் தடங்கள் இன்னும்
இம்மண்ணில் புதைந்து கிடக்கின்றன.
என் நினைவுத் தடங்களில் குருமண்காடும்
புதைந்துதான் கிடக்கின்றது.
அத்தடங்களிலிருந்து அவ்வப்போது அது
உயிர் பெறுகிறது. அவ்வளவுதான்.
அது போதுமெனக்கு.
Sunday, May 4, 2025
வெகுசனப் படைப்புகளின் முக்கியத்துவம் பற்றி....
ஒருவரின் வாசிப்புப் படிக்கட்டில் அம்புலிமாமாக் கதைகளுக்கும் ஒரு தேவையுண்டு. அது போன்றதுதான் வெகுசனப் படைப்புகளின் முக்கியத்துவமும். யாரும் நேரடியாகத் தீவிர வாசிப்புக்குள் குதித்து விடுவதில்லை. எல்லோருமே திருஞானசம்பந்தராக இருந்து விடுவதில்லை.
சுஜாதாவின் முக்கியத்துவம் அவரது மொழி, அறிவியலை எளிய மொழியில் தமிழுக்குள் கொண்டு வந்தது, தமிழில் மர்மக்கதை இலக்கியப் பிரிவுக்கான அவரது பங்களிப்பு எனக் கூறலாம். வெவ்வேறு வாசிப்புப் படிக்கட்டுகளில் உள்ள வாசகர்களுக்கான தேவைகளை இவ்விதமான வெகுசனப் படைப்புகள் பூர்த்தி செய்கின்றன.
நம் படைப்பாளிகள் பலருக்கு ஒரு குணம் உண்டு. அவர்கள் தம் பால்ய, பதின்மப் பருவங்களில் வெகுசனப் படைப்புகளில் மூழ்கிக் கிடப்பார்கள். அவற்றினூடு வளர்ந்து வந்திருப்பார்கள். வாசிப்பின் அடுத்த கட்டத்துக்கு வந்ததும் , தம்மை வளர்த்த இவ்வகையான வெகுசனப் படைப்புகளைப் பற்றிக் கூறுவதைத்தவிர்த்து விடுவார்கள். பதிலாக இவ்வகையான படைப்புகளைப் பற்றி இளக்காரமாகப் பேசத்தொடங்கி விடுவார்கள். அது அவர்களது பெருமை அல்ல சிறுமை என்பேன்.
Monday, April 28, 2025
வானியலில் ஆர்வம் மிக்க வழக்கறிஞர் செந்தில்நாதனும், அவரது வானியல் பற்றிய நூலும்!
எனக்கு இவருடன் நேரில் பழக்கமில்லை. ஆனால் என் பதின்ம வயதுகளில் என் கவனத்தை ஈர்த்த ஆளுமைகளில் இவரும் ஒருவர். அதற்குக் காரணம் இவரது வானியல் மீதான ஆர்வம்தான்.
இவரது வீடு கஸ்தூரியார் வீதியில், நாவலர் வீதிக்குச் சிறிது தெற்காக இருந்தது. மாடி வீடு. மொட்டை மாடியில் ஒரு தொலைக்காட்டி எப்பொழுதும் விண்ணை ஆராய்வதற்குரிய் வகையில் தயாராகவிருக்கும். அதுதான் என் கவனத்தை இவர் ஈர்க்கக் காரணம். அதனால் அந்த வீடு அக்காலகட்டத்தில் யாழ்ப்பாண நகரில் முக்கியமானதொரு நில அடையாளமாக விளங்கியது.
Saturday, April 26, 2025
கிடைக்கப்பெற்றோம் - எழுத்தாளர் ஜோதிகுமாரின் 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்'
பதிவுகள் இணைய இதழில் வெளியான 'நந்தலாலா' ஜோதிகுமாரின் கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டு, 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் தொகுப்பு வெளிவந்துள்ளது. இத்தொகுப்பினை சவுத் விஷன் புக்ஸ் (சென்னை) , நந்தலாலா (இலங்கை) ஆகிய பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. நூலின் அட்டை ஓவியத்தை வரைந்திருப்பவர் சதானந்தன். நந்தாலா படைப்புகளை வெளிவர் உதவி செய்யும் திரு.சி.ராதாகிருஷ்ணன் இந்நூல் வெளிவருவதற்கும் உதவியுள்ள விபரத்தை ஜோதிகுமார் முன்னுரையில் தெரிவித்துள்ளார். ஜோதிகுமார் தனது முன்னுரையில் கட்டுரைகளை வெளியிட்ட பதிவுகள் இணைய இதழுக்கு மறக்காமல் நன்றி தெரிவித்துள்ளார். அதற்காக பதிவுகள் சார்பில் நன்றி.
இந்நூலில் ஜோதிகுமார் தான் சந்தித்த முக்கிய ஆளுமைகள் சிலரைப்பற்றிய அனுபவங்களை விபரித்துள்ளார். தான் வாசித்த நூல்கள் சிலவற்றைப்பற்றி, அவற்றுக்குப்பின்னால் மறைந்துள்ள அரசியல் பற்றிய தன் பார்வைகளை வெளிப்படுத்தியுள்ளார். இலக்கியவாதிகளைப்பற்றி எழுதியிருக்கின்றார். மலையகம் தந்த முக்கிய இலக்கியவாதியான ஸி.வி.வேலுப்பிள்ளையின் சமரசமற்ற போக்கினைப்பற்றி எடுத்துரைத்திருக்கின்றார்.
குறிப்பேடாக விளங்கிய 'சி.ஆர்.கொப்பி' (CR)
எண்பதுகளில் என் உணர்வுகளின் வடிகால்களாக இருந்தவை எழுத்துகளே. அப்பொழுதுதான் மார்க்சிய நூல்களை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஒரு வித வெறியுடன் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அதுவரை சமூகம், அரசியல், தேசியம் , மதம் என்பவற்றை நான் பார்த்த பார்வையை மாற்றி அமைத்தன மார்க்சிய நூல்கள். சிந்தனை அதுவரை அடைத்திருந்த வேலிகளை உடைத்துக்கொண்டு வெளியேறிய காலமது. அப்போது என் உணர்வுகளைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதிக்கொட்டினேன். அவற்றுக்கு வடிகால்களாக இருந்தவை இங்கு நீங்கள் காணும் சி.ஆர் கொப்பிகளே.
நீண்ட பக்கங்களைக் கொண்ட 'கொப்பி'களாக இவை இருந்ததால் அதிக விபரங்களை ஒரு பக்கத்தில் எழுதுவதற்கு உதவியாக இருந்தன. அதனால் என் பிரியத்துக்குரிய குறிப்பேடுகளாக இவை விளங்கின.
Friday, April 25, 2025
வாழ்த்துகள்: அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான விருது பெறுகின்றார் பேராசிரியர் கந்தையா இரமணிதரன்!
வாழ்த்துகள்: அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான விருது பெறுகின்றார் பேராசிரியர் கந்தையா இரமணிதரன்!
அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான விருதினைப் பேராசிரியர் கந்தையா இரமணிதரன் பெற்றுள்ளார். வாழ்த்துகள் இரமணி! இவ்விருதினைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு -
https://www.aaees.org/e4saward
தற்போது ஒஹியோ மாநிலத்திலுள்ள 'சென்ரல் ஸ்டேட் 'யுனிவேர்சிடி' (Central State University) இல் சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இரமணிதரன் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் குடிசார்ப் பொறியியற் துறையில் இளமானிப் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் சீனாவிலுள்ள Hohai University இல் நீர்வள மற்றும் சுற்றுச்சூழல் பொறியியற் துறையில் முதுமானிப்பட்டம் பெற்றவர். Tulane University இல் குடிசார்ப்பொறியியலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.
திருகோணமலையைச் சேர்ந்த இவர் எனக்கு அறிமுகமானது எழுத்தாளராகத்தான். பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் அதில் நடைபெற்ற விவாதங்களில் திண்ணைதூங்கி என்னும் பெயரில் அறிமுகமானார். பதிவுகள் விவாத அரங்கின் இறுதிக்காலத்தில் அதனை என்னுடன் சேர்ந்து நிர்வகிப்பவர்களில் ஒருவராகவும் இருந்தார். திண்ணைதூங்கி, சித்தார்த்த சேகுவேரா என்னும் புனைபெயர்களில் இவர் எழுதிய கவிதைகள், சிறுகதைகள் பதிவுகள் உட்படப் பல்வேறு இலக்கியச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. தொண்ணூறுகளில் வீரகேசரி நடத்திய இரசிகமணி கனக செந்திநாதன் குறுநாவல் போட்டியிலும் இவரது குறுநாவல் விருதினைப்பெற்றதாக ஞாபகம். பதிவுகளின் படைப்பாளிகளில் ஒருவர் என்னும் ரீதியில் பதிவுகள் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
Thursday, April 24, 2025
கவிதை: ஏ! விரிவானே! உன்னைத்தான் விரிவானே! - வ.ந.கிரிதரன் -
* ஓவியம் AI |
ஏ! விரிந்திருக்கும் விரிவானே!
நீ எப்போதும் போல் இப்போதும்
என் சிந்தையை விரிய வைக்கின்றாய்.
என் தேடலைப் பெருக வைக்கின்றாய்.
உன்னைப் புரிதல் என் தேடலின் ஊற்று.
உன் விரிவு , ஆழம், தொலைவு
என்னை எப்போதும் வியப்பிலாழ்த்துகின்றன.
வியப்பினூடு விடைகள் எவையும் கிடைக்குமா
என்று முயற்சி செய்கின்றது மனது.
விடைகள் கிடைக்கப்போவதில்லை என்பது
அயர்வினைத் தந்தாலும் உனை, உன் வனப்பை
அயராது இரசிப்பதில் ஒருபோதும் எனக்கு
அயர்வில்லை. அயர்வற்ற இரசிப்புத்தான்.
இருப்பின் இருப்பறிய இருப்பது நீ ஒன்றுதான்
என்கின்றது எப்போதும் தேடிக்கொண்டிருக்கும்
என் நெஞ்சம்.
உன்னில், உன் விரிவில் சஞ்சரித்தவாறு
கீழே பார்க்கின்றேன்.
விண்ணிலிருந்து மண்ணைப் பார்க்கின்றேன்.
எத்துணை அற்பம்! அற்பத்துக்குள்
எத்துணை அதிசயம்! படைப்பில்
எத்துணை அற்புதம்!
எத்துணை நேர்த்தி!
எத்துணை ஞானம்!
எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவாக....
பொதுவாக ஒருவரின் வாசிப்பனுபவத்தில் பால்ய பருவம், பதின்மப் பருவம், இளமைப்பருவமென்று பருவங்களுக்கேற்ப வாசிப்பனுபவமும் வளர்ந்துகொண்டே செல்லும். சிலரின் எழுத்துகள் மட்டும் அனைத்துப் பருவத்தினரையும் கவரும் தன்மை மிக்கவை. ஆனால் அவற்றின் அர்த்தங்கள் பருவங்களின் மாறுதல்களுக்கேற்ப மாறிக்கொண்டே செல்லும். உதாரணத்துக்கு மகாகவி பாரதியாரின் எழுத்துகளைக் குறிப்பிடலாம்.
என் பால்ய பருவத்தில் என் அப்பா வாங்கித் தந்த பாரதியாரின் கவிதைகள் பிடிக்கும். ஆனால் அப்போது நான் இரசித்த அவரது எழுத்துகளை நான் புரிந்து கொண்டதற்கும், பின்னர் வளர்ந்த பின் வாசித்தபோது அடைந்த இன்பத்திற்கும், புரிதலுக்கும் இடையில் மிகுந்த வித்தியாசமுண்டு. அப்போது அவரது சொற்களின் நேரடி அர்த்தம் , இனிமையில் மயங்கிய மனது, பின்னர் வளர்ந்ததும் அவற்றின் பின்னால் மறைந்து கிடக்கும் அர்த்தங்கள் கண்டு பிரமித்துப்போனது.
Sunday, April 20, 2025
கவிதை: துதியைத் துதிப்போரை மதிப்பேனா? மிதிப்பேனா?. - வ.ந.கிரிதரன் - (ஓவியம் -AI)
துதிபாடல், துதி நாடலால்
துவண்டு கிடக்கிறது
உலகு.
இருப்பின் தன்மை தெரிந்தால்
இதற்கொரு தேவை உண்டா?
இல்லை என்பதை உணரார்
இவர்.
பாதிப்பின் உணர்வுதனை
பரிசுத்தம் கெடாமல் பகர்வீர்.
பண்பாக்கி நடை பயில்வீர்.
பார் போற்றும். ஊர் போற்றும்.
யார்தாம் போற்றார்?
Friday, April 18, 2025
இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான புஸ்பராணி சிதம்பரி மறைந்தார்!
இலங்கைத் தமிழர்தம் அரசியல் வரலாற்றில் புஷ்பராணி அவர்களுக்கு முக்கிய பங்குண்டு. எழுபதுகளில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நன்கறியப்பட்ட பெயர் அவருடையது. தமிழ் மகளிர் பேரவையில் செயற்பட்ட முக்கியமானவர்களில் ஒருவர். தமிழர் உரிமைப்போராட்டத்தில் பல இன்னல்களை அனுபவித்தவர்களில் ஒருவர். அவரது போராட்ட அனுபவங்களை விபரிக்கும் 'அகாலம்' முக்கியமானதோர் ஆவணம். அவரது மறைவை முகநூல் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல். அவரது நினைவாக அவரது 'அகாலம்' நூல் பற்றி நான் எழுதியிருந்த கட்டுரையினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
Tuesday, April 15, 2025
கவிதை: சோக்க்ரடீசின் ஆரவாரம்! - வ.ந.கிரிதரன் -
நாம் மந்தைகள்.
மேய்ப்பர்களை எந்நேரமும் எதிர்பார்த்திருக்கும்
மந்தைகள்.
சொந்தமாகச் சிந்திக்க,
சீர்தூக்கி முடிவுகளை எடுக்க
எமக்குத் திராணியில்லை.
திராணியில்லையா
அல்லது
விருப்பு இல்லையா?
எப்பொழுதும் எமக்காக
யாரோ ஒருவர் எடுக்கும் முடிவுகளை
ஏற்றுக்கொள்வதில் எமக்கும்
தயக்கமெதுவுமில்லை.
தாராளமாக அவற்றை ஏற்றுக்கொள்ளும்
தாராளவாதிகள்
நாம் தாம், வேறு எவர்தாம்?
கருத்துகள் , மேய்ப்பர்களின் கூற்றுகள்
எம்மை உணர்ச்சி வெறியில்
துள்ளிக் குதிக்க வைக்கின்றன.
துள்ளிக் குதிக்கின்றோம்.
இன்பவெறியில் கூத்தாடுகின்றோம்.
ஆயிரம் வருடங்களுக்கு
முன்
சோக்கிரடீசு சொன்னான்:
'சுயமாகச் சிந்தியுங்கள்.
சீர்தூக்கிப் பாருங்கள்.
ஏன் என்று எதிர்க்கேள்வி கேளுங்கள்'
நாம் சிந்தித்தலை இழந்ததை
சோக்கிரடீசு இருந்திருந்தால்
அறிந்திருப்பான்.
அறியாமை கண்டு
ஆரவாரம் செய்திருப்பான்.
எழுத்தாளரும், நடிகருமான சோபாசக்தி மீதான பெண்ணிய அமைப்பின் அறிக்கை பற்றி...
'அதற்கமை பெண்ணியக் குழு / Adhoc Feminist Collective' வெளியிட்ட 'ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை' அறிக்கை பார்த்தேன். அதன் கீழ் நன்கறியப்பட்ட ஆளுமையாளர்கள் பலர் கையொப்பமிட்டிருந்ததையும் பார்த்தேன். இவ்வறிக்கை பற்றிச் சமூக ஊடகங்களில் பலர் காரசாரமாக விவாதிப்பதையும் பார்க்கின்றென். பெண்ணியக் குழு / Adhoc Feminist Collective வெளியிட்ட 'ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை - https://adhocfeministcollective.blogspot.com/2025/04/blog-post.html
இது முக்கியமான பல குற்றச்சாட்டுகளை எழுத்தாளரும் , நடிகருமான சோபாசக்தி மீது முன் வைக்கும் அறிக்கை. அவர் சொன்னார், இவ்வறிக்கை பற்றிப் பலரும் தம் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றார்கள். சிலர் இதிலுள்ள குற்றச்சாட்டுகளை அப்படியே உண்மைகளாக ஏற்றுக்கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இவ்விதமாக ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை அணுகும் மனப்பான்மை பல மனித உரிமை மீறல்களை உருவாக்க வல்லது. போராட்டக் காலத்தில் துரோகிகளாக்கப்பட்ட பலர் மீது, அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவற்றின் விளைவுகளை நாம் அறிவோம்.
Sunday, April 13, 2025
கனடாவில் வெளியான முதலாவது தமிழ்ச் சஞ்சிகை 'நிழல்'!
கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவிலிருந்து வெளியான முதலாவது சஞ்சிகை பற்றிப் பலரும் பலவாறு எழுதி வருகின்றார்கள். இவ்விதமான தவறான தகவல்கள் காலப்போக்கில் உண்மையான தகவல்களாகக் கருதப்பட்டு வரலாறு தவறாக எழுதப்பட்டு விடும் அபாயமும் உண்டு.
நானறிந்தவரை கனடாவில் வெளியான சஞ்சிகைகளைக் கையெழுத்துச் சஞ்சிகைகள், அச்சு வடிவில் வெளியான சஞ்சிகைகள், இரண்டையும் உள்ளடக்கி, வெட்டி ஒட்டல்களுடன் வெளியான சஞ்சிகைகள் எனப் பிரிக்கலாமென்று கருதுகின்றேன்.
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் கனடாக் கிளை மொன்ரியாலிலிருந்து வெளியிட்ட 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகை 15.09.1984 தொடக்கம் 15.06.1985 வரை பத்து இதழ்கள் வெளியாகியுள்ளன. ஓரிரு இதழ்களில் பத்திரிகைச் செய்திகள் வெட்டி ஒட்டப்பட்டிருந்தாலும், சஞ்சிகை பெரும்பாலும் கையெழுத்துச் சஞ்சிகையாகவே வெளிவந்தது. எனது மண்ணின் குரல் நாவல், கவிதைகள் சில, கட்டுரைகள் சிலவும் இச்சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. ரவி அமிர்தன், கோமகன், செங்கோடன் எனப் பலரின் படைப்புகளும் இச்சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன. அடிப்படையில் இது ஒரு போராட்ட அமைப்பின் சஞ்சிகை என்றாலும் தமிழ் இலக்கியத்துக்கும் நாவல், கவிதை, கட்டுரை & கேலிச்சித்திரமெனப் பங்களிப்பு செய்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.
Friday, April 11, 2025
கவிதை: முகநூல்! - வ.ந.கிரிதரன் -
முகநூல் எனக்குப் பலரின் ஆளுமையினைத்
தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.
புரட்சிகரமான கருத்துள்ளவர்கள் என்று
நான் நம்பிய பலரின் உண்மைச் சொரூபத்தினை
வெளிப்படுத்தியிருக்கின்றது.
சமூகத்தையே மாற்றிவிடப் போவதாகக்
கூக்குரல் இட்டவர்கள்
அவர்கள்தம் உண்மைச் சொரூபத்தை
முகநூல் வெளிப்படுத்தியபோதும்
நாணவில்லை. ஓடி ஒளியவில்லை.
இன்னும் அவ்வாறே கூக்குரல் இட்டுக்
கொண்டுதானிருக்கின்றார்கள்.
பலர் அற்ப ஆசைகளுக்குள்,
போலிப் பெருமைக்குள்,
மூழ்கிக் கிடப்பதையும் முகநூல்
முற்றாக வெளிப்படுத்தியிருக்கின்றது.
கோழைகள் அடையாளங்களை மறைத்து
வீரராக ஆட்டம் போடுகின்றார்கள்.
முகத்தைக் காட்டுவதற்கு அஞ்சும் கோழைகளை
முகநூல் வெளிப்படுத்தியிருக்கின்றது.
நண்பர் என்ற போர்வையில் உலா வந்த பலரை
நட்பின் ஆழத்தைப் புரிய வைத்திருக்கின்றது
முகநூல்.
உள்ளே விடத்தையும்
வெளியில் இனிக்கும் புன்னகையையும்
காட்டும் நல்ல பாம்புகளையும்
முகநூல் சுட்டிக் காட்டியிருக்கின்றது.
கவிதை: ஒரு நூலகத்தின் கனவும், எண்ணத்தோய்தலும்! - வ.ந.கிரிதரன் -
மோதல்களினால் பற்றி எரிகின்றதைப் பார்க்கின்றேன்.
நீங்கள் வெளியில் ஒருவருக்கொருவர்
முட்டி மோதிக்கொண்டிருக்கின்றீர்கள்.
இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுகிறதைப்
பார்க்கின்றேன்.
குழந்தைகள், பெண்கள், முதியவர் எவருமே
உங்களுக்கு ஒரு பொருட்டல்ல
என்பதையும் உணர்ந்து கொள்ள வைக்கின்றது
வெளியில் நீங்கள் போடும் வெறியாட்டம்.
உங்களை நினைத்து நான் வெட்கப்படுகின்றேன்.
நீங்கள்தான் இப்பிரபஞ்சத்தின் தலைவர் என்பதுபோல்
உங்கள் கூத்திருக்கின்றதைப் பார்த்து நகைக்கின்றேன்.
உங்களுக்கு வெளியில் விரிந்து கிடக்கின்றது
பெரு வெளி.
விரி பெரு மெளனத்தில் புதைந்து கிடக்கும்
உங்களைப் பார்க்கையில்
உங்கள் தனிமையைக் கவனிக்கையில்
எனக்கு உங்கள் மேல் பரிதாபம்தான் வருகின்றது.
வெளியில் பேயாட்டம் ஆடும் நீங்கள்
எவ்விதம் இங்கே மெளனமாக,
எவ்வித மோதல்களுமற்று
அருகருகே அமர்ந்திருக்கின்றீர்கள்?
ஆச்சரியம்தான்.
தாமரைச்செல்வியின் முதல் நாவல் 'சுமைகள்'
எழுத்தாளர் தாமரைச்செல்வியின் முதல் நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளியான 'சுமைகள்'. தற்போது அந்நாவலும் நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
வேலை வெட்டி இல்லாமல், இளமைக் கனவுகள் பல நிறைவேறாத நிலையில் வாழும் செந்தில் என்னும் இளைஞன், தன்னை நம்பி வந்திருக்கும் தீபா என்னும் பெண்ணையும் தன்னுடன் அழைத்து வீட்டுக்கு வருகின்றான். அவ்விதம் வருபவன் அச்சுமையுடன் , வீட்டுச் சுமைகளையும் துணிவுடன் ஏற்றுக்கொள்கின்றான். வீட்டுச் சுமைகளைத் தீர்த்தவுடனேயே தீபாவுடனான வாழ்க்கை ஆரம்பமாகுமென்று உறுதி செய்துகொள்கின்றான்.
புலமும், நிலமும் பற்றி..
"எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்.
யானும் நீயும் எவ்வழி அறிதும்.
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."
(இக்காட்சியினைப் பிரதிபலிக்கும் ஓவியத்தை வரைந்தது AI)
எழுத்தாளர் அருண் செல்லப்பா தன் முகநூற் பதிவில் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். "புலம் பெயர்தல் இதன் எதிர்ப் பதம் எதுவாக இருக்கும்.?"
இதற்கு நான் பதிலளித்திருந்தேன்: "புலம் திரும்புதல்."
புலம் மீளல் என்றும் கூறலாம்.
அதற்கு அவர் எதிர்வினையாற்றியிருந்தார் : "நான் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தேன்;; எனவே கனடாதான் எனக்குப் புலம். இதன் மறுவளம் என்ன என்பதே கேள்வி."]
இதற்கு நான் இவ்வாறு பதிலளித்திருந்தேன்: 'புலம் என்றால் அர்த்தம் நிலம். தன் நிலத்தை விட்டுப் பெயர்தலே புலம் பெயர்தல். சங்கப் பாடல்களில் புலம் என்பது நிலம் என்னும் அர்த்தத்திலேயே கையாளப்பட்டுள்ளது.'
அதனை ஏற்று அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்: "உண்மைதான். நில புலம் வைத்திருப்போர், நிலச் சுவாந்தார் என்று தமிழில் சொல்லாடல் வருகின்றது. எனவே எனக்குக் கனடா புலம் அல்ல. புரிகிறது;; நன்றி"
இவர் இவ்விதம் ஆரம்பத்தில் கேட்பதற்குக் காரணம் புலம் என்றால் அது நிலத்துக்கு எதிர் என்று கருதியதால்தான். பலர் அவ்வாறே கருதுவதை நான் அவதானித்திருக்கின்றேன். பலர் கட்டுரைகளில் கூட அவ்வாறே கருதிக் கையாண்டுள்ளதையும் அவதானித்திருக்கின்றேன்.
எழுத்தாளர் க.அருள் சுப்பிரமணியத்தின் 'அக்கரைகள் பச்சையில்லை'
எழுத்தாளர் க.அருள் சுப்பிரமணியம் அவரது 'அவர்களுக்கு வயது வந்து விட்டது' நாவல் மூலம் நன்கறியப்பட்டவர். மானுட அனுபவங்களைச் சுவையாக , அனுபவபூர்வமாக விபரிப்பதில் வல்லவர். உதாரணத்துக்கு ஒருவர் குடிக்கும் அனுபவத்தை விபரிக்க வேண்டுமானால், அவ்வனுபவத்தை அனுபவ பூர்வமாக, உயிர்த்துடிப்புடன் விபரிப்பார். அதை வாசிக்கையில் அவ்வனுபவம் நமக்கும் வந்து விடும்.
இந்நாவல் பல அக்காலகட்டத்தகவல்களையும் தருகின்றது. உதாரணத்துக்கு ஒன்று - திருகோணமலைத் துறைமுகத்திலுள்ள மாதவன் நாயரின் தேநீர்க் கடை பற்றி வருகின்றது. கதை கற்பனைக் கதையானாலும் அக்காலத்தில் கேரளத்து நாயர்களும் அங்கு தேநீர்க் கடை போன்ற வர்த்தகச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதனால்தான் மாதவன் நாயர் என்னும் பாத்திரமும் நாவலில் வருகின்றது என்றே நான் கருதுகின்றேன். இது தவறென்றால் அறிந்தவர்கள் அறியத் தரவும்.
இளைஞர்களே! சிந்திக்கச் சில சிந்தனைகள்!
இங்குள்ள காணொளியை முழுமையாகப் பார்க்கவும். இந்த இளைஞர் கள்ள வழியில் கனடா செல்ல முற்பட்டு அழைந்த இன்னல்களை, இழந்த சொத்துகளைப் பற்றி இதில் விபரிக்கின்றார். இவ்வகையில் இது பயனுள்ள காணொளி. காணொளிக்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=q4Y5Z-JdscU
ஆனால் முடிவில் இவர் கூறுகின்றார் வெளிநாடு போவதானால் சட்டபூர்வமான வழிகளில் செல்லுங்கள் என்று. அது சரியானது. ஆனால் இவ்வளவு இன்னல்களை அடைந்த பின்னும் இவருக்கு வெளிநாடு செல்லும் ஆசை நீங்கவில்லை என்பதையும் அது புலப்படுத்துகிறது.
போர்ச்சூழல் நிலவிய காலத்தில் ஒருவரின் இருப்பே கேள்விக்குரியதாக மாறிய சூழலில் மக்கள் அகதிகளாக வெளியேறினார்கள். கிடைத்த வழிகளில் வெளியேறினார்கள். அச்சூழலின் விளைவு அது.
Thursday, April 10, 2025
ஸ்டார் வெளியிட்ட Brand New Planet சிறுவர் பத்திரிகை!
என் மூத்த மகள் தமயந்தி எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சமய்ம் டொராண்டோவிலிருந்து வெளியாகும் டொராண்டோ ஸ்டார் பத்திரிகை Brand New Planet என்னுன் சிறுவர்களுக்கான பத்திரிகையை வாரந்தோறும் வெளியிட்டு வந்தது. அதில் அவர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அதற்கான ஊதியத்தையும் பத்திரிகை நிறுவனம் அனுப்பி வைத்துக்கொண்டிருந்தது, ஒரு தடவை அவரை வைத்துக் Cover Story செய்ய வேண்டுமென்று ஸ்டார் பத்திரிகை விரும்பியது. அதற்காக ஒரு புகைப்படக்காரரையும் அனுப்பி வைத்தது.
Monday, March 31, 2025
தன் கருத்துகளைச் சுதந்திரமாகக் கூறும் உரிமை சவுக்கு சங்கருக்குண்டு!
நான் சவுக்கு சங்கரின் அபிமானி அல்லன். அவ்வப்போது அவரது சவுக்கு மீடியாக் காணொளிகளைப் பார்ப்பவன். ஆனால் சனநாயக நாடான இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் தன் கருத்துகளைச் சுயமாக எடுத்துரைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. அவரது கருத்துகளை, அவை எவ்வளவு எதிரானவையாக இருந்தாலும் அவற்றைக் கூறும் உரிமை அவருக்குண்டு. கருத்தைக் கருத்தால்தான் எதிர்க்க வேண்டும். வன்முறையால் அல்ல. எம் போராட்ட வரலாற்றில் கருத்துகளை வன்முறை கொண்டு அடக்கினோம். அதன் விளைவுகளை நாம் அறிவோம்.
சவுக்கு சங்கர் தன் நிறுவனத்தின் செயற்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அவரது வீட்டின் மீது அவரது கருத்துகள் திரிக்கப்பட்டு, துப்புரவுத் தொழிலாளர்கள் சிலரை அவருக்கெதிராகத் திசை திருப்பி அவர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுக்கு சங்கர் குறிப்பிட்டிருக்கின்றார். சட்டம் தன் கடமையினைச் செய்தால் இதன் உண்மை நிலை வெளிப்படும். உண்மையில் அவரது வீட்டைத் தாக்கியவர்கள் துப்புரவுத் தொழிலாளர்களா அல்லது அப்போர்வையில் வந்த அடியாட்களா என்பதைப் பாரபட்சமற்ற விசாரணைகள்தாம் வெளிப்படுத்தும். நிரூபிக்கும். இச்சந்தேகம் அவருக்கும் இருப்பதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்த அவருடனான நேர்காணற் காணொளியொன்றில் பார்த்தேன்.
சவுக்கு சங்கர் தன் குரலைச் சுதந்திரமாக ஒலிப்பதற்குரிய உரிமை நிலைநாட்டப்பட வேணடும். மீண்டும் அவர் தனக்குப் பிடித்த ஊடகத்துறையில் சுதந்திரமாக ஈடுபடும் நிலை ஏற்படுமென்று எதிர்பார்ப்போம்.
மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தமிழக் கலை, இலக்கிய & அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் என்ன நிலையினை எடுக்கப்போகின்றார்கள் என்பதை அறிய ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.
Tuesday, March 25, 2025
நடிகர் மனோஜ் மறைந்தார்!
முகநூல் எதிர்பாராத செய்திகளைத் தாங்கி வர ஒரு போதும் தவறுவதில்லை. அவ்விதம் இன்று முகநூல் தாங்கி வந்த செய்திதான் நடிகர் மனோஜின் மறைவுச் செய்தி. நான் இவரது தீவிர இரசிகன் அல்லன். உண்மையில் இவரது திரைப்படங்களைக்கூட இதுவரையில் பார்த்ததாக நினைவில்லை. ஆனால் நான் இவர் நடித்த திரைப்படப்பாடல்களின் காணொளிகள் பலவற்றை அதிகமாகப் பார்த்திருக்கின்றேன். இரசித்துக்கொண்டிருப்பவன். குறிப்பாக இவரது 'வருசமெல்லாம் வசந்தம்' திரைப்படப்பாடல்கள் மிகவும் பிடித்தவை. குறிப்பாக உன்னிமேனன் குரலில் ஒலிக்கும் 'எங்கே அந்த வெண்ணிலா' பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். இப்பாடல்களில நடித்திருக்கும் மனோஜின் இயல்பான தோற்றம், நடிப்பு குறிப்பாக மனத்தைக் கவரும் அந்தப் புன்சிரிப்பு இவற்றினை நான் இரசிப்பவன்.
கதாநாயகனாக இவரால் ஏனைய திரைப்பட வாரிசுகளைப்போல் சுடர் விட முடியாமற் போயிருந்தாலும் , நடிகர் ரகுவரன் போல் தனித்துவம் மிக்க, குணச்சித்திர நடிகராக நிலைத்து நிற்கக் கூடிய ஒருவர் இவர் என்று நினைப்பதுண்டு.
நடிப்பு தவிரத் திரைப்பட இயக்கத்திலும் இவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்னும் சாதிப்பதற்கு இவருக்குக் காலம் இருந்த நிலையில் ,இந்த வயதில் இவர் மறைந்திருப்பது துயரமானது. இருப்பின் நிலையற்ற தன்மையினை மீண்டுமொரு தடவை எமக்கு உணர்த்தி நிற்பது. ஆழ்ந்த இரங்கல்.
இவரது நினைவாக, இவர் நடிப்பில் என்னைக் கவர்ந்த சில பாடல்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
எங்கே அந்த வெண்ணிலா - https://www.youtube.com/watch?v=knkNX-_Zp5w
முதன் முதலாய் உன்னைப் பார்க்கிறேன் - https://www.youtube.com/watch?v=Cph4grc2l_U
சொல்லாதே சோலைக்கிளி - https://www.youtube.com/watch?v=rDzFFHdEoEA
எந்த நெஞ்சில் - https://www.youtube.com/watch?v=kg4uCisk_2Q
ஈச்சி எலுமிச்சி - https://www.youtube.com/watch?v=Iklj9CFFmEw
Monday, March 24, 2025
க்ரியா ராமகிருஷ்ணனும் , ரோஜா முத்தையா நூலகத்துக்கான அவரது பங்களிப்பும், அது பற்றிய பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் உரையும்! - வ.,ந.கிரிதரன் -
அமரர் க்ரியா ராமகிருஷ்ணனின் தமிழ்ப் பதிப்பகத்துறைக்கான பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. க்ரியா என்றால் தரம் என்னும்சொல் நினைவுக்கு வரும். தேர்தெடுத்த தரமான தமிழ் நூல்களை, ஏனைய மொழிகளில் வெளியான தமிழ் மொழிபெயர்ப்புகளைக் க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. நூல் வெளியீட்டுடன் , க்ரியா பதிப்பகத்தின் அகராதித்துறைக்கான பங்களிப்பும் முக்கியத்துவம் மிக்கது. நூல்வெளியீடு, அகராதித் துறைப் பங்களிப்பு இவற்றுடன் இன்னுமொரு முக்கிய பங்களிப்புக்காகவும் க்ரியா ராமகிருஷ்ணன் நினைவு கூரப்படுகின்றார். நினைவு கூரப்பட வேண்டும். அது ரோஜா முத்தையா நூலகத்துகான அவரது பங்களிப்பு.
த.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ் எழுதிய 'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் அல் - புனைவுக்கான (2024) விருது!
'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' என்னும் நூலை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது அவருடன் இறுதிவரை பணி புரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான த.பி...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...